கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- அ.மு.அம்சா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நாம் நலமுடன் வாழ இயற்கையான பல்லுயிர் வாழ்விடங்கள் தேவை.பல்வேறு வகையான தாவரங்கள், இயற்கையாக பூச்சிகள், பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்ற எண்ணற்ற உயிரினங்கள் வாழும் காடுகள் அழிக்கப்பட்டால் சுற்றுப்புறச் சூழல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பது கண்கூடு. நீலகிரி மாவட்டம் வளமான வாழ்விடங்களையும், தாவரங்களையும் இழந்து,அதன் பொலிவும், உயிர் சூழலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் இதன் எதிர் விளைவு இன்னும் கடுமையாக இருக்கும் என உயிரியல் மற்றும் சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்நிலைக்கு முக்கிய காரணங்கள் மக்களின் வாணிபப் போக்கும், மூட நம்பிக்கைகளும், மக்கள் தொகை பெருக்கமும் தான். பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் பெருமளவில் காடுகளும் தாவரங்களும் அழிக்கப்பட்டு, இயற்கைக்கு புறம்பான தேயிலையை அதிகளவில் விளைவித்ததால் ஏற்பட்ட, ஏற்பட போகும் விளைவுகளை சிறிதும் எண்ணிப் பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் (பொருளாதாரத்தில்) உயர்த்தியது என்ற காரணத்திற்காக இன்றைய காலம் வரைக்கும், இந்த பச்சைப் பாலைவனத்தை பாதுகாப்பு இயக்கம் கொண்டு காப்பாற்ற நினைப்பதும், அதற்காக வெவ்வேறு வகைகளில் விளக்கம் கொடுப்பதும் இயற்கை வாதிகளுக்கு பெரிய கவலையையும், வேதனையையும் உண்டாக்கியுள்ளது.
கோத்தகிரிக்கு அருகில் உள்ள அரவேணு 'அக்கால்' ஆறு, குஞ்சப்பனையில் உள்ள கோழிக்கரை ஆறு, இவற்றில் எல்லாம் இன்று நீர் ஓட்டம் குறைந்து கழிவு நீர் கலந்து, அகலம் குறைந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது. அக்கால் ஆறு தொடக்கம் முதல் கடைசி வரையில் இருபுறமும் தேயிலைத் தோட்டமும், சாக்கடையும் தான் இருக்கின்றன. முன்பு அங்கு யானைகள், மான்கள், கரடிகள், நடமாட்டம் இருந்தது. இன்றைக்கு அந்த ஆற்றில் இருந்து சுமார் 10 கி.மீ.சுற்றளவிற்கு விலங்குகள் நடமாட்டம் அறவே இல்லாமல் போனது. ஒரு காலத்தில் அருமையான நாவல் மரங்கள், விக்கி மரங்கள்,ஆரஞ்சு, பேரி, பலா போன்ற பழ மரங்கள் , சுற்றிலும் காட்டு மரங்கள் அடர்ந்து இருந்த அளக்கரைப் பகுதி, இன்றைக்கு சுருங்கி எங்கு பார்த்தாலும் தேயிலை செடிகளுடன் ஆறு முற்றிலும் அழிந்து விட்ட நிலையை நாம் காண்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கம்பீரமாக இருந்த காத்தரின் அருவி, இன்று வற்றி சுருங்கி தேயிலை தோட்டங்களும் பெரிய, சிறிய விடுதிகளும், மலை மரங்கள் அழிக்கப்பட்டு அதன் சிறப்பையே இழந்து வாடிக் கொண்டிருக்கிறது.
நீலகிரி மலையின் பெரும்பாலான பகுதிகளில் இதே நிலை தொடர்கிறது. அதைப் பற்றி ஆழமான விஷயம் கொண்டோர் கூட அரசியல் அடிப்படையில் இன அடிப்படையில் இயங்குவதும், அடிப்படையான காரணத்தை விட்டு விட்டு, அமெரிக்கா கூறும் நவீன காரணங்களை, தொடர்பு சாதனங்கள் மூலம் அறிந்து கொண்டு, இங்குள்ள சூழலைப் பொருத்திப் பார்க்காமல், சுற்றுச் சூழல் என்ற பெயரில் இயக்கம் நடத்தியும், பேசியும், எழுதியும், வருவதைக் கண்டு சிந்தனையாளர்கள் திகைத்துப் போய் அமைதியாக வேதனைபடுகிறார்கள். எனவே காடுகள், காப்பாற்றப்பட ஒருங்கிணைப்பு குலைந்து போனது. இப்படிபட்ட நிலையில் நீலகிரியில் அதிகமாக மனிதத் தொல்லைகளுக்கு உள்ளாகும் காட்டு விலங்குகளில் யானையே முதலிடம் வகிக்கிறது என்று 'ஆசிய யானைகள் பாதுக்காப்பு அமைப்பு' தரும் செய்தி நம்மை மேலும் அதிர்சியடைய வைக்கிறது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக இந்நிலை இருப்பினும் குறிப்பாக கூடலூர்,முதுமலை பகுதியில் யானை வழித்தடங்கள், விவசாயத்திற்காகவும், கால்நடை மேய்ச்சலுக்காகவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. கீழ்கோத்தகிரி, கூட்டாடா, குஞ்சப்பனைப் பகுதிகளில் அதிக தேயிலை சாகுபடிக்காக யானைக் காடுகள் மிக மோசமாக அழிக்கப்பட்டன. மேலும் யானைகள் தேயிலை மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாகக் கூறி கொடூரமாக விரட்டப்படுகின்றன அல்லது மின் வேலி மூலம் தாக்கபடுகின்றன என்று மாயர் யானை வழித்தடப் பாதுகாப்புத் திட்டம் கூறுகிறது. ஆசியா யானைகளில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட யானைகள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தென்னிந்தியாவில் மட்டும் 13,000 முதல் 14,000 வரை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் யானையின் வாழிடங்களாக 11 இடங்கள் அடையாளமிடப்பட்டுள்ளது. அதில் நீலகிரி உயரின மண்டலம் முக்கிய பகுதியாகும். நீலகிரி உயரின மண்டலத்தில் யானைகளின் நிலை எதிர்காலத்தில் மிக மோசமாகி விடும் என்று நம்பப்படுகிறது.
நீலகிரியின் நிலைத்த மேம்பாடு, தேயிலைத் தோட்டங்களை அழித்து விட்டு, பழ மரங்களையும், காய்கறிகளையும் பயிரிட்டு, காடுகளைப் பாதுகாக்க உதவுவதிலே அடங்கியுள்ளது. காடுகள் நீர் வளப் பாதுகாப்பிற்கும், செழிப்பான உயிர் சூழலுக்கும் உதவும் என்பது அறிஞர்கள் முடிவு. மாற்றிக் கொள்வது கடினமல்ல, மனது வைத்து இயற்கையைக் காப்போம், நீலகிரிக்கு ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம்.
(காட்டுயிர் இதழில் எழுதிய கட்டுரை)
- விவரங்கள்
- சு.பாரதிதாசன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காட்டுக் கோழியைத் துரத்தி வந்த
பூனை திகைக்க
வழித்தடம் மறிபட்டு
யானை ஒதுங்க
வலசை கிளம்பிய
கதிர்க்குருவி தடுமாற
காட்டின் நெஞ்சைக் கீறிக்கீறி
எழுகிறது ஒரு தார்ச்சாலை...
- அவை நாயகன்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலக்காடு ரயில் மார்க்கத்தில் யானைக் கூட்டம் ஒன்று அடிபட்டு தலை வேறு, முண்டம் வேறு, கால் வேறு எனக் கிடந்ததையும், கர்ப்பிணி யானையின் வயிற்றுக்குள் இருந்த குட்டியும் தூக்கி வீசப்பட்டு ரணமாய்க் கிடந்ததையும் நாளிதழ் செய்தியாகவும் டிவி செய்தியாகவும் பார்த்திருப்போம்.
இதுபோல சிறுத்தைப்புலி ஒன்று முதுமலை சாலையில் அடிபட்டு செத்துக் கிடந்ததும் நம் கவனத்துக்கு வந்திருக்கும். இவை எல்லாம் பெருங்கடலில் சிறு துளிதான்.
நெடுஞ்சாலையில் அடிபடும் மனிதர்களையே கண்டுகொள்ள முடியாத வகையில் சமூகச்சூழல் வாட்டிக் கொண்டிருக்கும்போது நகர நெடுஞ்சாலையில் நாயோ, பூனையோ அடிபட்டால் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்? அதிலும் காட்டைப் பிளந்து செல்லும் சாலையில் அடிபடும் காட்டுயிர்களின் நிலையைப் பற்றி கேட்க வேண்டுமா என்ன? ஒவ்வொரு நாளும் கணக்கற்ற காட்டுயிர்கள் நம் கவனத்துக்கு வராமலேயே கணப்பொழுதும் செத்து மடிந்து கொண்டே இருக்கின்றன. கள்ள வேட்டைக்கு பலியாகும் காட்டுயிர்களைவிட வாகனங்களில் மோதி பலியாகும் காட்டுயிர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆனால் அந்தக் கணக்கு நம்மை எட்டுவதில்லை.
சாலைகள் நவீனமயமாகிவிட்டதால் மனிதர்கள் ஒட்டிச் செல்லும் வாகனங்கள் சாதாரணமாக 80 கி.மீ. வேகத்தில் கண்ணை கட்டிக்கொண்டு பறந்து செல்லுகின்றன. பெரும்பாலும் தரையோடு ஒட்டிச் செல்லும் காட்டுயிர்கள் ஓட்டுநர்களின் கண்களுக்கு சில நேரம் தெரிவதில்லை. ஆனால் அவற்றைப் பார்த்தபின்பும், இதுங்களுக்கெல்லாம் வண்டியை நிறுத்த வேண்டுமா என்ன? என்ற அலட்சியமும் அகங்காரமும்தான் வாகன ஓட்டிகளிடம் தலைதூக்குகின்றன. இதனால் அரிய வகை இரவாடி உயிர்களான மரநாய், முள்ளம்பன்றி, காட்டுப்பூனை, தேவாங்கு, மான், கரடி உள்ளிட்டவையும் சிறு ஊர்வன உயிர்களான அரணை, ஓணான், பாம்பு, தவளை போன்றவையும் சக்கரங்களில் நசுங்கி செத்துப் போகின்றன.
செத்து மடியும் காட்டுயிர்கள் மட்டுமின்றி, அடிபட்டு ஊனமாகும் உயிர்கள் பலப்பல. அவற்றின் நிலை இன்னும் மோசம். புண்ணில் சீழ் பிடித்தும் (காட்டில் மருத்துவர் கிடையாது), இரை தேடமுடியாமல் பசியால் வாடிவதங்கி குற்றுயிரும் குலைஉயிருமாய் கிடந்து சாகின்றன. சில வேளைகளில் குட்டியைக் காப்பாற்ற முயற்சித்து தாய் அடிபட்டு விடும். இதனால் பச்சிளம் குட்டிகள் ஊணுண்ணிகளுக்கு எளிதாக இரையாகி விடுகின்றன அல்லது தன் சூழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாண்டு போகின்றன. சில வேளைகளில் குட்டி அடிபட்டு, தாய் தப்பி விடக்கூடும். அந்தத் தாய் பரிதவிப்புடன் அந்த இடத்தையே முகர்ந்து பார்த்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வரும் அவலத்தை என்னவென்று சொல்வது. யானைகளிடம் இந்தச் செய்கையை பார்க்கலாம்.
இந்த ஜென்மங்களை எல்லாம் யார் சாலைக்கு வரச் சொன்னது? என்று நாம் கேட்கலாம். அது நமக்குத் தான் சாலை, நெடுஞ்சாலை, அதிவேக சாலை. அவற்றுக்கோ தங்கள் வாழிடத்தை இரண்டாகப் பிளந்து கூறுபோடும், துண்டு துண்டாக்கி வீசும் மிகப் பெரிய தலைவலிதான் சாலைகள்.
சமவெளியைப் போல நேராக இல்லாமல், மலைகளில் சுருள் சுருளாக சாலைகள் சுற்றிச்சுற்றி செல்வதைப் பார்த்திருப்போம். அதன் அழகைப் பற்றியும் வியந்திருப்போம். ஆனால் உண்மை நிலை என்ன? இந்தச் சாலைகள் காட்டின் பெரும்பகுதியை ஆக்ரமிப்பதோடு, காட்டுயிர்களின் வாழிடத்தையும் துண்டு துண்டாக்கி விடுகின்றன. சோலை மந்தி, கருமந்தி, அணில் போன்ற காட்டுயிர்கள் தரையில் இறங்காமல், மரத்துக்கு மரம் தாவியே வாழும் தன்மை கொண்டவை. காட்டின் குறுக்கே போடப்படும் இந்த அகலமான சாலைகளால், அவை மரத்துக்கு மரம் தாவ முடியாமல் கீழே இறங்க நேரிடுகிறது. அப்போது ஊனுண்ணிகளுக்கு எளிதாக இரையாகின்றன அல்லது வேட்டைக்காரரிடமோ, வாகனங்களில் அடிபட்டோ சாவைத் தழுவுகின்றன.
“வாழிடம் துண்டாடப்படுவதால் கருமந்தி போன்றவை ஒரு பகுதியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் ஒரே கூட்டத்துக்குள்ளேயே இனப்பெருக்கம் நடப்பதால், அவற்றின் மரபணு வளம் பாதிக்கப்படுகிறது” என்கிறார் காட்டுயிர் பாதுகாப்புக் கழகத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன். தெளிவான பார்வை வேண்டி சாலையின் இரு மருங்கிலும் அடிக்கடி காட்டுப்பகுதிகளைச் சிதைத்து விடுகிறோம். இதனால் இயற்கையான, மண்ணின் மரபு சார்ந்த இயல்தாவரங்கள் துளிர்க்க விடாமல் தடுக்கப்படுவதால், அந்த இடங்களில் அந்நிய களைச்செடிகள் நாளடைவில் ஆக்ரமிக்கின்றன. பின்பு பல்கிப் பெருகி பல்லுயிர் பன்மயத்துக்கு பாதகம் செய்கின்றன.
காட்டுயிர்கள் இரை தேடியும், இரையுண்ணிகளிடம் இருந்து தப்பவும், இணை தேடியும், தண்ணீர் தேடியும், குளிர், வெயில், மழையில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் இடம்பெயர்கின்றன. அப்படிச் செல்லும்போது சுருள்சுருளான சாலைகளை அடிக்கடி எதிர்கொண்டு காட்டுயிர் சாலையைக் கடக்க நேரிடுகிறது. பொதுவாக ஊர்வன வகைகள் குளிர் ரத்தப் பிராணிகள். எனவே அவை, வெப்பத்திற்காக சாலைகளில் வந்து சிறிது நேரம் படுத்திருக்கும். இதனால் அதிகம் அடிபட வேண்டியிருக்கிறது.
மனிதத் தொந்தரவு கருதியே பெரும்பாலான விலங்குகள் தங்கள் நடமாட்டத்தை இரவுப் பொழுதுக்கு தகவமைத்துக் கொண்டுவிட்டன. ஆனாலும் இரவு நேரங்களில்கூட நாம் அவற்றை நிம்மதியாக விடுவதில்லை. காட்டுக்குள்ளே அதிக ஒலியுடன் பாட்டு கேட்டுக் கொண்டும், கை தட்டிக்கொண்டும் செல்வதும், தாறுமாறாக ஓடும் வாகனங்களில் இருந்து வரும் இரைச்சலும் புகையும் காட்டுயிர்களை எரிச்சல் படுத்துகின்றன. அத்துடன் வாகனங்கள் உமிழும் வெளிச்சமும் அவற்றின் கண்களை கூசச்செய்து நிலைகுலையச் செய்கிறது (இரவு நேரங்களில் வாகன ஒளி பாய்ச்சப்பட்டதால் திக்கு தெரியாமல் திண்டாடும் விலங்குகளின் நிலையை நகர்ப்புறங்களிலேயே தெளிவாகப் பார்க்கலாம்). இப்படி திக்கு முக்காடி எங்கு போவது எனத் தெரியாமல் எங்காவது முட்டி மோதி சாவைத் தழுவுகின்றன. “இத்தருணத்தைப் பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவோரும் உண்டு” என்கிறார் இயற்கை ஆர்வலர் மக்மோகன்.
‘‘சிறுபாம்புகள் இனப்பெருக்கத்துக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது வழுவழுப்பான தார்ச் சாலையில் ஊர்ந்து செல்லமுடியாமல் சிரமப்படுகின்றன. அப்படியே ஊர்ந்து எதிர்ப்புறம் சென்றாலும், அங்கு விபத்து தடுப்புக்காக எழுப்பப்பட்டுள்ள உயரமான சுவர்களில் ஏறமுடியாமல் திரும்பி வந்து மீண்டும் முயற்சித்தபடியே இருக்கும் தருணத்தில் அவை சாவைத் தழுவுகின்றன. இதனால் அதன் இனப்பெருக்க சுழற்சி பாதிக்கப்படுவதுடன், அந்த பாம்பு இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன” எனக் கவலையுடன் குறிப்பிடுகிறார் சாலையில் அடிபடும் உயிரினங்கள் குறித்து மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆய்வு செய்து வரும் கழுதைப்புலி ஆய்வாளர் ஆறுமுகம்.
சாலையில் பயணம் செய்வோர் தூக்கி எறியும் உணவுகளாலும் காட்டுயிர்கள் அடிபட நேரிடுகிறது. பயணிகள் உண்ணும் உணவு மீதியை சாலையில் விட்டெறிவதால், அவற்றைத் தின்பதற்கு குரங்குகள் சாலையை நாடுகின்றன. அவற்றுக்கு நாம் உணவு அளிக்கிறோம் என்ற வீண் பெருமிதம் கொள்ளும் அதேநேரம், நாம் செய்வது அவற்றுக்கு தீங்கே ஏற்படுத்துகிறது. “நாம் அளிக்கும் உணவுக்காக அவற்றை கையேந்தி பிச்சை எடுக்க வைப்பதோடு, அந்த உணவை சாப்பிட்டால் ஒவ்வாமை, வயிற்று உபாதைகளாலும் அவை அவதியுறுகின்றன. கூடவே விபத்தும் நேரிடுகிறது” என்கிறார் காட்டுயிர் ஆர்வலர் கோவை சதாசிவம். இதில் ஊட்டி, கொடைக்கானல, வால்பாறை, ஏற்காடு போன்ற மலைப்பகுதியில் கோடை விழா என்ற பெயரில் நாம் நடத்தும் கூத்துக்களால் அவற்றின் வாழிடங்கள் துண்டாடப்பட்டு விடுகின்றன. தொடர்ந்து சாரைசாரையாகச் செல்லும் வாகனங்களால், அவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. யானைகள் வழக்கமாக ஒவ்வொரு அசைவின் மூலமும் தனது கூட்டத்தாருடன் தொடர்பை ஏற்படுத்தியபடியே செல்லும் பண்பு கொண்டவை. காட்டைப் பிளக்கும் தார்ச்சாலைகளால் அவற்றின் தொடர்புச் சங்கிலி அறுத்தெறியப்படுகிறது. இதனால் வழிதப்பி மனிதக் குடியிருப்புக்குள் புகுந்து, மனிதனுக்கும் விலங்குகளுக்குமான பிணக்கும் அதிகமாகிறது.
புதிதாக போடப்பட்ட தேசிய நான்கு வழிப் பாதையால் ஒரு யானைக்கூட்டம் திசை மாறி சித்தூர் பகுதியில் தங்கிவிட்டதையும், அவற்றின் பாரம்பரிய வழித்தடத்துக்கு திரும்ப முடியாமல் மனிதக் குடியிருப்புக்குள் புகுந்து விட்டதையும் நாம் இணைத்து புரிந்துகொள்ள வேண்டும். ஊருக்குள் புகுந்துவிடும் யானைகளை, ஊடகங்களும் மக்களும் வில்லன்களாகச் சித்தரிக்கின்றனர், பெரும் கூப்பாடு போடுகின்றனர். ஏன் அவை ஊருக்குள் புக நேரிடுகிறது என்ற காரணத்தை நாம் எந்தக் காலத்திலும் யோசிப்பதில்லை. அவை காலங்காலமாக பயன்படுத்தி வந்த வழித்தடங்களை அழித்து சாலைகளாகவும், தோட்டங்களாகவும், வயல்களாகவும், வீடுகளாகவும் மாற்றிவிட்டோம். இப்போது, அவை ஊருக்குள் புகுந்து ‘அட்டகாசம்’ செய்வதாக குற்றஞ்சாட்டுகிறோம். நல்ல கூத்து.
மைசூரைச் சேர்ந்த இயற்கையாளர் ராஜ்குமார், சாலையில் அடிபடும் உயிரினங்கள் பற்றி பந்திபூர் காட்டுப் பகுதியில் களஆய்வு மேற்கொண்டபோது அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. ‘‘வெறும் 14 கி.மீ. காட்டுப் பகுதியில் கரடி, பன்றி, மான், காட்டு எருது போன்ற மூன்று பெரிய உயிரினங்களில் மாதத்துக்கு ஒன்று அடிபடுகின்றன. அடிபடும் ஊர்வனவற்றின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதது. இதற்காக காட்டுயிர்கள் அதிகம் வாழும் இடங்களை குறிப்பெடுத்து எச்சரிக்கைப் பலகை, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு, வேகத் தடுப்பரண்கள் போன்றவற்றை ஏற்படுத்தினோம். இது ஓரளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது. இறுதியில் நீதிமன்றத்தை அணுகி பந்திபூர் முதுமலை சாலையில் இரவு வாகனப் பயணத்தை தடை செய்ததால் காட்டுயிர்கள் ஒரளவு மூச்சு விடவாவது வழி பிறந்துள்ளது” என்கிறார் அவர். இந்த சாலையை இரவுகளில் மூடுவதற்கு ஊட்டி பகுதியில் உள்ள தமிழக வியாபாரிகள்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சி ஒன்றும் எதிர்ப்பு தெரிவித்தது. காடுகளுக்கு நடுவே ஓட்டுநர்கள், பயணிகள் இளைப்பாறுவதற்கென நிறுத்தப்படும் இடங்களில் முளைக்கும் திடீர் கடைகளாலும் காட்டுயிர்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகிறது.சாலைகளுக்கு அருகிலிருந்துதான் பெரும்பாலும் காட்டுத் தீ பரவுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..
தற்போது சாலைகள் ‘நவீனமாக’ இருப்பதால் காட்டுக்குள்ளே பெரும்பாலான வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாகவே பறந்து செல்கிறார்கள். யாரும் வேகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதில்லை. இதைத் தடுக்க உடனடி அபராதம் விதிப்பதுதான் ஒரே வழி. அது மட்டுமில்லாமல் காட்டுப் பகுதியில் புதிதாக எந்த சாலைத் திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது. இருக்கும் சாலைகளை செப்பனிடக்கூடாது. அப்போதுதான் சக்கரங்களின் பிடியிலிருந்து காட்டுயிர்கள் தப்பமுடியும். மேலும் ஊர்வன வகைகள், ஊனுண்ணிகள் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்வதற்குத் தோதாக ஆங்காங்கே இடைவெளி விட்டு தடுப்பு சுவர் கட்ட வேண்டும். அதேபோல் நீர்நிலைகளை ஊடறுத்துபோகும் சாலைகளில் தண்ணீர் இருபுறமும் ஏதுவாக செல்லும் வகையில் குழாய் பதிப்பதை கட்டாயமாக்க வேண்டும். கர்நாடக இயற்கையாளர்களின் பெருமுயற்சியாலும் ராஜ்குமார் போன்ற தன்னார்வலர்களாலும் முதுமலை, பந்திபூர் காட்டுப் பகுதியில் இரவு நேர வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதே போன்ற முன்னெடுப்புகளை தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும். சரணாலயங்கள் மட்டுமின்றி அனைத்து காட்டுப் பகுதிகளிலும், இரவு நேர வாகன போக்குவரத்தை முற்றாக தடை செய்தால்தான எஞ்சி இருக்கும் காட்டுயிர்களாவது தப்பிப் பிழைக்கும்.
உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. மற்ற உயிர்கள் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்க நமக்கு அதிகாரம் கிடையாது. அதையும் மீறி காட்டுயிர்களை இப்படி கொடூரமாகக் கொல்வது, நமக்கு கூடுதலாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆறாவது அறிவைப் பற்றி கேள்வியை எழுப்புகிறது.
(பூவுலகு ஜூலை 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- விடுதலை
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பாக்டீரியாக்கள் பேசிக்கொள்ள ஒரு மொழி உண்டு என்று சொன்னால், எத்தனை பேர் நம்புவார்கள்? ஆனால், உண்மையில் அவைகளுக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது. இம்மொழியைக் கொண்டு பேசி கலந்தாலோசித்துவிட்டுத்தான் பல முக்கிய முடிவுகளை (உ.தா. நோய் உண்டாக்குவது) எடுக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. பாக்டீரியாக்களின் அந்த சங்கேத மொழியை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து அதில் சில வார்த்தைகளை மனிதர்களாகிய நாம் கற்றுக்கொண்டுள்ளோம். நம்பமுடியவில்லையா? ஆம், பாக்டீரியாக்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள, சில வேதிப்பொருட்களை தயாரித்து அதன் சுற்றுப்புறத்துக்கு அனுப்புகிறது. அப்படி அனுப்பப்பட்ட வேதிப்பொருட்களை உணர்வதன் மூலம் யார் தம் சுற்றத்தார் என்பதை தெரிந்துகொள்கிறது. நுண்ணுயிரிகளின் இந்த திறனை ஆராய்ச்சியாளர்கள், 'குவாரம் சென்சிங்' (Quorum sensing) என்று சொல்கிறார்கள்.
ஒரு ஒரு-செல்உயிரிக்கு இந்த திறன் எதற்கு என்ற கேள்வி எழுகிறது, இல்லையா? ஆனால், இக்குணங்கள் பரினாம வளர்ச்சியில் தத்தம் இனத்தின் வளர்ச்சிக்காகவும், அனுகூலமற்ற புறச்சூழல்களிலிருந்து காப்பதற்காகவும், தீங்குவிளைவிக்கக்கூடிய மற்ற உயிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் அவற்றை எதிர்ப்பதற்காகவும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவையாகக் கருதப்படுகிறது.
'விப்ரியோ பிசுசரி' (vibrio fischeri) என்ற ஒரு கடல் வாழ் பாக்டீரியாவில் இந்த குவாரம் சென்சிங்கை முதன்முதலில் கண்டுபிடித்தவர் 'போணி பேசுலர்' (Bonnie Bassler). இந்த பாக்டீரியாக்கள், பகலில் மணலுக்கு அடியிலும், இரவில் கடல் மேல்பரப்பிலும் வந்து இரைதேடும் ஒரு வகை மெல்லுடலிகள் வகையைச் சார்ந்த 'ஸ்குவிட்' (Squid) என்ற உயிரினத்தின் உடலுக்குள் இருந்து கொண்டு, இரவில் ஒளிரக்கூடிய திறன் கொண்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த பாக்டீரியாக்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அடைந்தவுடந்தான் ஒளிர்வதற்கான புரதத்தை சுரக்கின்றன. அதற்குமுன் இதை செய்வதில்லை. தங்களின் எண்ணிக்கையை குவாரம் சென்சிங்கின் மூலமாகத்தான் அறிந்துகொள்கின்றன என்று பேசுலர் கண்டறிந்தார்.
பாக்டீரியாக்களின் இந்த வேதிச்சொற்களை 'ஆட்டோ இன்டியூசர்கள்' (Autoinducer) அல்லது சுருக்கமாக AI என்று சொல்கிறார்கள். ஆனால் பாக்டீரியாக்கள் என்ற தொகுதியை (Phylum) எடுத்துக்கொண்டால், பல நூறு பேரினங்களும் (Genus) அவை ஒவ்வொன்றிலும், பல்லாயிரம் இனங்களும் (species) இருக்கிறன. உதாரணமாக, விப்ரியோ என்ற பேரினத்தில் விப்ரியோ பிச்சரி (vibrio fischeri) என்ற இனம் இருப்பது போல, காலரா நோயை உண்டாக்கும் விபிர்யோ காலரே (vibrio cholerae) என்ற இனமும் உண்டு. இதுபோல் பற்பல ஆயிரம் வகைகள் உண்டு. இவற்றிலிருந்து தத்தம் இனத்தை அடையாளம் கண்டு/கேட்டு முடிவெடுப்பது என்பது, பல வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து வாழும் இயற்கை சூழலில் கொஞ்சம் சிரமமான காரியம்தான். ஆனால், அதற்கும் ஒரு வழி கண்டறிந்துள்ளன இந்த புத்திசாலி உயிரினங்கள். பாக்டீரியா எனும் 'தொகுதி'யை தனியாகவும், விப்ரியோ (vibrio) என்ற 'பேரின'த்தை தனியாகவும், பிச்சரி (fischeri) என்ற 'இன'த்தை தனியாகவும் பிரித்து தெரிந்துகொள்ள, மூன்று வகை வேதி-வார்த்தைகளை இவை உபயோகிக்கின்றன. அதாவது, தன்னுடைய ஒரே இனத்தை தெரிந்துகொள்ள AI-1(நான்)-ஐயும், தம் பேரினத்தை தெரிந்துகொள்ள CAI-1(நாம்)-ஐயும் மற்றும் மற்ற வகை பாக்டீரியாக்களை தெரிந்துகொள்ள AI-2(நீ)-ஐயும் சுரக்கின்றன. இதன் மூலம் தத்தம் இனத்தை மட்டுமல்லாமல் தன்னை சுற்றி வேறு யார் யார் இருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்கின்றன.
மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களும், இந்த தொழிற்நுட்பத்தைத்தான் பயன்படுத்துகின்றன. மனித உடலில் நுழைந்த உடன், சிறிய எண்ணிக்கைகளில் இருக்கும்போது, இவை எந்த தீங்கும் செய்யாமல், இனப்பெருக்கம் மட்டுமே செய்துகொண்டிருக்கும். மனித செல்லை தாக்குவதற்கு தேவையான அளவு நச்சு-புரதங்களைச் சுரக்க, போதிய அளவு தங்களின் சகாக்களின் எண்ணிக்கை பெருகிய பிறகு, எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்தில் நோய் விளைவிப்பதற்கான புரதங்களைச் சுரந்து (மனிதனுக்கு) நோய் விளைவிக்கின்றன. இந்த ஒரு செல் உயிர்களிடம் இந்த அளவுக்கு ஒழுங்குகள் இருப்பது ஒரு புறம் அதிர்ச்சியாயும் இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு செல்லை மட்டும் கொண்ட இந்த உயிரிகளே இத்தனை அறிவுடன் செயல்படும்போது, பல கோடி செல்களைக்கொண்ட மனிதர்களை சொல்லவா வேண்டும்?
பாக்டீரியாக்கள் பேசும் அதே வார்த்தைகளைப்போல அமைப்பைக்கொண்ட வேறு வேதிப்பொருள்களை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து, இந்த பாக்டீரியா இருக்கும் இடத்தில் சேர்த்து சோதித்துப் பார்த்தனர். இதனால், குழப்பமடைந்த பாக்டீரியாக்கள் தங்கள் சகாக்கள் எல்லாம் இல்லை என்று நினைத்து நோய் உண்டாக்காமலே இருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர். வருங்காலத்தில் மருந்து எதிர்ப்புசக்திகொண்ட நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதால் (தொடர்புடைய பதிவு), இந்த தொழிற்நுட்பம் பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோயிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்படும் என்று நம்பப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கிற அறிஞர்களுக்கும், இன்னும் அறிவியலின் உச்சங்களை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள், அவர்களின் மாணவர்கள் என்று அனைவருக்கும் நம் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்வோம்!
பி.கு.: அட இது பரவாயில்லை, பாக்டீரியாக்கள் எழுந்து நின்று நடந்து செல்வதைக்கூட நம்ப படமா எடுத்து வெச்சுருக்கோம் தெரியுமா (இணைப்பு)??
- விவரங்கள்
- ஏ.சண்முகானந்தம்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐந்து வகை திணைகளை உருவாக்கி அதற்குரிய தாவரங்கள், தொழில்கள் என அந்த மண்ணுக்குரிய வேலைகளை செய்து வந்தனர். நாகரிகத்திலும், விவசாயத்திலும் உலகத்திற்கே முன்னோடியாக விளங்கினார்கள்.
சங்க இலக்கியங்களில், காட்டுயிர்கள் பற்றிய பல பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாவரங்கள், காட்டுயிர்கள் பற்றிய புரிதலுடனும், ஒத்திகையுடனும் இருந்துள்ளார்கள் என்பது புலனாகிறது.
Elephant என்று யானையே இல்லாத நாட்டின் ஒரு மொழியில் இன்று படிக்கும் நாம்தான், அக்காலத்தில் மா, கரி, ஆச்சல், இபப், இம்மபு என 50 பெயர்களில் யானைகளை அழைத்திருக்கிறோம்.
நாராய்.. நாராய்.... செங்கால் நாராய்.. எனத் தொடங்கும் நாரை பற்றிய பாடலில், பறவையின் உடலமைப்பு, பழக்க வழக்கங்கள் எனக் கூர்மையாகப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல எண்ணற்ற உதாரணங்களை சங்க இலக்கியத்தில் சுட்டிக் காட்ட முடியும். காட்டுயிர்கள் மேல் புரிதலுடன் இணக்கமான உறவைப் பேணி வந்த தமிழர்களுக்கு இன்று என்ன நேர்ந்தது?காக்கை, குருவி தவிர்த்து மற்ற பறவைகளைப் பற்றியோ, விலங்குகள் பற்றியோ தெரியாமல் விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பது எதனால்?ஒரு நாட்டிற்கு 33 சதம் காடு வளம் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்திலோ 17 சதத்திற்கு குறைவாகவே உள்ளது. அது போலவே நீர்ப்பற்றாக்குறை மிகுந்த மாநிலமாகவும் உள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழகத்திற்கு உரிமையுள்ள நீராதாரங்கள் இருந்தும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கும் நிலையில் தமிழகம் உள்ளது.
தமிழகம் முழுக்க எண்ணிலடங்கா கோயில்களும், புதுப்புது சாமியார்களும் நிரம்பியுள்ள சூழலில், காட்டுயிர்கள் மேல் உள்ள மூட நம்பிக்கையை ஆய்வு செய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.
சாக்குருவி, ஆந்தையின் அலறல், ஆந்தையை கண்டால் அபசகுணம், அதிசயப் பறவை என பற்பல சொல்லாடல்களால் எதிர்மறையாய் அழைக்கப் பெறும் ஆந்தைகள் தான், வேளாண்மைக்கு தீங்கு செய்யும் எலிகளை உட்கொண்டு விவசாயிகளுக்கு நண்பனாக திகழ்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் சாதாரணமாகக் காணும் ஆந்தைகள் கூகை என்ற வெண்ணாந்தை, புள்ளி ஆந்தை, கொம்பன் ஆந்தை என்ற மூன்று வகையாகும்.
அதிசயப் பறவை ஆஸ்திரேலிய பறவை என அடிக்கடி செய்தித்தாள்களில் இடம் பெறும் கூகை என்ற வெண்ணாந்தை உட்பட ஆந்தைகள் யாவும் இடம் பெயர்பவை அல்ல என்பதை பத்திரிகை காட்சி ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இரவாடிகளான ஆந்தைகள் யாவும் ஓர் இரவில் சராசரியாக 8 எலிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை புரிகிறது. ஓணான் சிறு பாம்புகள், பல்லிகள் போன்றவற்றையும் பிடித்துண்ணுகின்றன.
தனக்கென ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து வாழும் இயல்பு கொண்ட ஆந்தைகள் மரப் பொந்துகள், பாழடைந்த கட்டடங்கள், பாறை இடுக்குகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து நான்கு வரையிலான முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
அடுத்ததாக நகரத்தின் துப்புரவாளனாக விளங்கும் காக்கைகள் ஒற்றுமைக்கு உதாரணமாக பற்பல சொல்லாடல்கள் மூலம் கூறப்படுகின்றன. இவையாவும் உண்மையா? அறிவியல் என்ன சொல்கிறது பார்ப்போம்.
பொதுவாக விலங்குகள், பறவைகள் கூட்டமாக கூடுவது தனியே இருக்கும் போது உள்ள ஆபத்தின் அளவை குறைக்கத்தான். அதாவது சுயதைரியம் பெறத்தான் கரைவதும், கத்துவதும் என்கிறார் உயிரியல் அறிஞர் டபிள்யூ டி. ஹேமில்டன். அவரது இந்தக் கோட்பாடு சுயநலக் கூட்டம் அல்லது மந்தை என்று உலகின் அனைத்து உயிரியலாளர்களிடமும் பழக்கத்தில் உள்ளது.
காக்கைகள் தங்கள் நேரடி உறவினர்களிடம் மட்டுமே உணவை பகிர்ந்து கொண்டு, மற்றவற்றை விலக்கி விடும் என்று அவரது மற்றொரு கோட்பாடான மin ளநடநஉவiடிn என்ற விதிப்படி கூறுகிறார். இம்முறை எறும்பு, தேனீ, கரையான் போன்ற உயிரினங்களிடமும் பழக்கத்தில் உள்ளது.
காட்டுயிர்களில் பேருயிரான யானைகள் பற்றிய கீழ்க்கண்ட சொல்லாடல் நீண்ட காலமாக நிலவி வருகிறது.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. யானையின் செவிலில் புகுந்த எறும்பு. காடுகளின் வளமைக்கு குறியீடாக விளங்கும் யானைகள் அதன் உணவுத் தேவையான 300 கிலோ, பசுந் தாவரங்களுக்காக ஓரிடத்தில் தங்காமல் தனக்கென வழித்தடத்தை ஏற்படுத்தி காடுகள் முழுமைக்கும் சுற்றியலைந்து பலதரப்பட்ட தாவரங்களின் விதைகளை வீரிய மிக்க விதைகளாக பரப்பி வருவதுடன் பல பறவை இனங்களுக்கும், விலங்குகளுக்கும் மறைமுக உதவி புரிகிறது.
அந்த வகையில் முதல் சொல்லாடலின், முதல் வாக்கியத்தின் அர்த்தமாக மேற்குறிப்பிட்டவற்றை கொள்ளலாம். யானைகள் இறந்தபின் அவற்றின் தந்தங்கள் கலைப் பொருட்கள் செய்யப் பயன்படுவதால் இரண்டாவது வரி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளில் தந்தங்களுக்காகவே பெரும்பாலான யானைகள் கொல்லப்பட்டு இன்று சில ஆயிரங்களாக குறைக்கப்பட்டுள்ளது இந்தியாவில்.
இரண்டாவது சொல்லாடல் வளர்ப்பு யானைகள் குறித்து சொல்லப்படும் வார்த்தை. காடுகளின் செழுமைக்கும் சுற்றுச் சூழலுக்கும் முக்கிய பங்களிக்கும் பேருயிர்களை யானைகளை சிறு கூடாரங்களில் அடைத்து பட்டையும், நாமமும் போடுவதில் என்ன சுகம் கண்டதோ மனித சமூகம்! சாலைகளில் பிச்சை எடுப்பதற்கும், பக்தியின் சின்னமாக வணங்குவதற்காகவும் யானைகள் படும் வேதனைகள் சொல்லி மாளாது.
இன்றைய பள்ளி மாணவர்கள், பெரியவர்களிடம் காட்டின் ராஜா யார்? என்று கேட்டால் சட்டென சிங்கம் என்று ஒருமித்த பதில் வரும்.
உண்மையாகவே காட்டின் இராஜாவாக சிங்கம் இருக்குமா? இல்லை என்பதுதான் அறிவியலாளர்களின் பதில். பெண் சிங்கங்கள் வேட்டையாடியதை பகிர்ந்து உண்ணும் இயல்பு கொண்ட ஆண் சிங்கங்கள் காட்டின் ஓர் அங்கமே. அதனதன் இயல்பிலேயே அனைத்து காட்டுயிர்களும் ஒழுங்குற வாழ்கின்றன.
தனித்தே சுற்றியலைந்து வேட்டையாடி உண்ணும் புலிகளைக் காட்டின் இராஜாவாகக் கூறலாம். அதனுடைய மஞ்சள் நிற உடம்பில் கருப்பு பட்டைகளும், கம்பீரமான உடலமைப்பும் ஆண்டொன்றுக்கு 50 முதல் 60 வரையிலான இரை விலங்குகளை உண்ணும் புலிகள் உணவு சங்கிலியின் உச்சத்தில் உள்ளன. புலிகளின் அழிவு காடுகளின் அழிவுக்கு காரணமாகும் எனலாம்.
ஒரு காட்டில் புலிகளின் எண்ணிக்கை குறைந்தால் இரை விலங்குகளான மான், காட்டு மாடுகள் எண்ணிக்கை அதிகரித்து மேய்ச்சல் பரப்பு குறைந்து காடுகளின் வளம் சீர்குலையும். புலிகளை சார்ந்து வாழும் கொரி விலங்குகளும், பறவைகளும் அழியும்.
அடுத்ததாக ஏமாற்றும் ஒருவரை குள்ளநரித்தனம் பண்ணுகிறான் என்று மனித சமுதாயத்தின் பொது புத்தியை நரிகளின் மேல் சொல்வது நமது அறியாமையை காட்டுகிறது.
புலி, சிங்கம், சிறுத்தை போன்ற இரை கொல்லி விலங்குகள் உண்ட உணவுகள் மிச்சத்தை உண்டதுடன், தானே வேட்டையாடி உண்ணும் இயல்பு கொண்ட குள்ள நரிகள். மனிதரை கண்டால் ஒதுங்கிச் செல்லும் குணமுடையது. இந்திய அளவில் அழியும் காட்டுயிர்களின் பட்டியலில் நரிகள் உள்ளன.
இந்தியாவில் 214 வகைகளாக காணப்படும் பாம்புகளில், 4 வகை பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தன. ஆனால், நமது சமூகத்தில் பாம்புகள் என்றால், அச்சத்தின் குறியீடாகவும், பற்பல சொல்லாடல்களும், மூட நம்பிக்கைகளும் ஆழமாக பதிந்துள்ளன. இதன் காரணமாகவே ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பாம்புகள் அடித்துக் கொள்ளப்படுகின்றன.
பாம்புக் கடிக்கு ஆளானோரில் 70 சதம் பேர்கள் பயத்தின் காரணமாகவும், உரிய சிகிச்சை இன்றியுமே உயிரிழக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.
வேளாண்மைக்கு உற்ற தோழனாக விளங்கும் பாம்புகள், எலிகள், ஓணான், பல்லி, மீன்கள் போன்றவற்றை உணவாகக் கொள்கிறது.
பாம்பு நடனம், பாம்பு பழிவாங்கும் பண்பு கொண்டது, பால், முட்டை குடிக்கும் போன்ற பற்பல மூட நம்பிக்கைகள் பாம்புகள் பற்றி உள்ளன. இவையாவும் அறவே ஒழிக்கப்பட வேண்டியவை. மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்காத உயிரினம் பாம்புகள். பாம்புகள் யாவும் அழியும் நிலையில் உள்ளது.
அடுத்ததாக பன்றிகளை பற்றிய சொல்லாடல் புகழ் பெற்றது. பன்றி மாதிரி சேற்றில் புரளாதே? இந்த வாக்கியத்தில் உள்ள பன்றி என்ற காட்டுயிர் சேற்றில் மட்டுமே வாழும் என்ற மன நிலையை மக்கள் மனதில் நிறுத்தி வைத்துள்ளனர். பன்றிதான் இருக்கும் இடத்தை தூய்மையாகவும், மலம் கழிக்க ஓரிடத்தை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தும் என்கிறது ஆய்வு. ஆறு, ஏரி, குளங்களை சேறுகளாகவும், குட்டைகளாகவும் வைத்திருப்பது மனிதர்களாகிய நாம்தான். நீர்நிலைகள் பறிபோவதில் அரசியல் பின்னணி இருக்க நமது தவறுகளுக்கு காட்டுயிர்கள் மேல் பழிசுமத்துவது நமது விழிப்புணர்வு அற்ற தன்மையே.
ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்ற சொல்லாடல் நீண்ட காலமாகவே பழக்கத்தில் உள்ளது. கடன்பட்ட மனிதரின் நிலங்கள் பறிமுதல் செய்வதில் தொடர்பு படுத்தி வரும் இந்த வாக்கியத்தில் நீர்நில வாழ்வியான ஆமை ஏன் வந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.
நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகளை பல வகை மீன்களோடு ஆமைகளும் செய்கின்றன. நன்னீர் ஆதாரத்திற்கு ஆமைகள் வாழ்வதும் ஓர் குறியீடு.
ஆமைகள் இறைச்சிக்காக அதிகளவில் கொல்லப்படுகின்றன. மேலை நாடுகளில் ஆமைகளை பாதுகாப்பது, வளர்ப்பது என்பது அறிவியல் பூர்வமாக அணுகும் போக்கு துவங்கி நீண்ட காலமாகி விட்டது.
அறிவியல்பூர்வமற்ற இவ்வாக்கியங்களை பயன்படுத்துவதை வரும் தலைமுறைக்கு பரவாமல் தடுத்திட வேண்டும்.
தமிழகத்தில் கோடை கால முடிவில் ஜூன், ஜூலை மாதங்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சுற்றுப்புற மக்கள் மழை வர பல்வேறு வடிவங்களில் வேண்டுவது பத்திரிகை செய்திகளாக வருகின்றன. உதாரணத்திற்கு பத்திரிகை அடித்து ஒரு லட்சம் ரூபாய் செலவில் 1000 கிராம மக்கள் முன்னிலையில் ஆலமரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கழுதைகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. மக்கள் திரண்டு வந்திருந்து தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். ஆற்றில் நடுப்பகுதியில் பள்ளம் தோண்டி இரவு நேரத்தில் பெண்கள் மட்டும் மழை வேண்டி பிரார்த்தித்தனர். என பலப்பல செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. மழை வராமல் இருக்க, மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுதல், காடுகள் அழிப்பு, நீர் நிலைகள் வீட்டுமனைகளாகவும், கழிவு நீர் குட்டைகளாகவும், மருத்துவக் கழிவுகளாகவும் மாறுவதற்கு அதிகார வர்க்கமும், பலமான அரசியல் பின்னணி இருக்கும் சூழலில், விழிப்புணர்வு படிப்பறிவற்ற மக்கள் கூட்டம் மீண்டும் மீண்டும் மூடநம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது கடும் பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.
அலங்கு நங்கில் என்ற தமிழ்ப் பெயர்களை மறந்து யவே நயவநச என்றும் னடிடbin என்றும் மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்கள் நமது மாணவர்கள்.
பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் பற்றிய பாடங்களை தாய்மொழிக் கல்வியில் கற்பிக்கும் போது மட்டுமே வருங்கால தலைமுறைக்கு நாம் அனுபவித்த இயற்கைச் சூழலை அதன் அழகு குறையாமல் கொடுக்க இயலும்.
மனிதனின் பொதுப் புத்தியில் பதிந்துள்ள கடவுள் பற்றிய மாயைகளையும் அச்சத்தையும் உடைத்தெறிந்தால் மட்டுமே, காட்டுயிர்கள் மேல் நெருக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பது மறுக்க இயலா உண்மையாகும்.
(இளைஞர் முழக்கம் ஆகஸ்ட் 2011 இதழில் வெளியானது)
- கானமயில்
- மயில்களை கொல்ல வேண்டாம்
- இலவங்கப் பட்டை - சில தகவல்கள்
- மாயமாகும் மயில்களின் உலகம்
- வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்
- இயற்கை கொடுத்த வரம்
- கடல் எனும் விந்தை
- வாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்
- பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?
- சிறுத்தை புலிகள் - சிக்கல் அவிழ்கிறது
- சிறுத்தையும் நாமும் - யாருக்கு யார் எதிரி?
- வாழ்வை இழக்கும் வெளவால்கள்
- காண்டாமிருகங்களின் தாயகங்கள்
- தேனீக்கள் வளர்ப்பில், தேன் உற்பத்தியில்... மர்மங்கள்
- முதலைக் கண்ணீர்
- கங்கை முதலைகள்
- இயற்கை வேளாண்மை - தேனீக்கள் வளர்ப்போம்
- புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..?
- வேங்கை வர்ணங்கள்
- நம்முடன் வாழும் யானைகள்