கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற பெரிய சரணாலயங்களில் மட்டுமின்றி கொல்லுக்குடிப்பட்டி, கரிக்கிளி உள்ளிட்ட கிராம மக்களும் பறவைகளை ஆழ்ந்து நேசிக்கின்றனர். இயற்கையும், பறவைகளும் நமக்கு உதவுவதை நன்கு உணர்ந்துள்ள இம்மக்கள், பறவைகளுக்கு இணக்கமாகச் செயல்படுவதைப் பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது. சகஜீவனை புரிந்து கொண்ட உணர்வு மேலோங்குகிறது.
இயற்கையை சுரண்டாமல் பாதுகாப்பது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது போன்ற பாரம்பரிய பழக்கங்கள் நம்மிடம் ஓங்கி இருந்ததையே மேற்கண்ட கிராமங்கள் உணர்த்துகின்றன. நீர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய பண்டைத் தமிழர்கள் அங்குள்ள பல்லுயிரியத்தை காப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.
நவீன வசதிகள் வளர்ந்துவிட்டபோதும், இந்த மக்களின் மனது பெருமளவு மாறவில்லை என்பதையே இந்த நேசம் உணர்த்துகிறது.
மேற்கண்ட சரணாலயங்கள் அமைந்துள்ள கிராம மக்களின் உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளால்தான் சரணாலயங்களும், அங்கு வரும் பறவைகளும் பாதுகாப்பாக உள்ளன. உள்ளூர் மக்கள் மனம் மாறிவிட்டால், இயற்கை பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இந்தப் பாரம்பரியத்தை வேடந்தாங்கல், மேற்கு வங்கத்தில் உள்ள ஜாக்யநகரில் பார்க்க முடிகிறது. உள்ளூர் மக்களே பறவைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவது மட்டுமின்றி, பறவைகள் அவர்களோடு இணக்கமாக வாழ்வதை கூந்தங்குளம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் பார்க்க முடிகிறது.
“மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும். பறவைகள் இன்றி மனிதர்கள் வாழ முடியாது.” --- சாலிம் அலி.
தமிழக பறவை சரணாலயங்கள் - முக்கிய விபரங்கள்
சரணாலயம் |
மாவட்டம் |
பரப்பு ஹெக்டேர் |
ஆண்டு |
1. வேடந்தாங்கல் |
காஞ்சிபுரம் |
30 |
1836 |
2. வேட்டங்குடி |
சிவகங்கை |
38 |
1977 |
3. கரிக்கிளி |
காஞ்சிபுரம் |
61 |
1989 |
4. பழவேற்காடு |
திருவள்ளூர் |
46,102 |
1980 |
5. கஞ்சிரங்குளம் |
ராமநாதபுரம் |
104 |
1989 |
6. சித்ரங்குடி |
ராமநாதபுரம் |
48 |
1989 |
7. உதயமார்த்தாண்டம் |
திருவாரூர் |
45 |
1991 |
8. வடுவூர் |
தஞ்சாவூர் |
128 |
1991 |
9. கரைவெட்டி |
பெரம்பலூர் |
280 |
1997 |
10. வெள்ளோடு |
ஈரோடு |
77 |
1997 |
11. மேல்செல்வனூர் கீழ்செல்வனூர் |
ராமநாதபுரம் |
593 |
1998 |
12. கூந்தங்குளம் |
திருநெல்வேலி |
129 |
1994 |
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சிட்டுக்குருவிகள்
எங்கள் வீட்டுக்கு வருவதை
நிறுத்திவிட்டன
- ஆதி வள்ளியப்பன்
(மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் நாள்)
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை பறவை நோக்கும் பந்தயத்தில் (Bird Race) பங்கேற்றபோது, சென்னையில் வாழும் பறவை வகைகளை கணக்கெடுக்கும் வேலையில் நானும் சில நண்பர்களும் ஈடுபட்டிருந்தோம். ஒரே நாளில் காலையில் இருந்து மாலை ஆறு மணிக்குள் எத்தனை வகை பறவைகளை குறிப்பிட்ட எல்லை பரப்புக்குள் பதிவு செய்கிறோம் என்பதே அந்தப் போட்டி. கிட்டத்தட்ட 49 பறவைகளைப் பார்த்துவிட்டோம். “கவலைப்படாதீர்கள் இன்னும் ஒரு பறவைதானே, போட்டியின் இறுதி நிகழ்ச்சிக்குச் செல்லும் முன் சிட்டுக்குருவியை பார்த்துவிட்டால் 50 ஆகிவிடும்” என்று நம்பிக்கையுடன் கூறினார், எங்களை வழிநடத்திச் சென்ற ரயில்வே துறையில் பணிபுரிந்து வரும் பறவை ஆர்வலர் ஜெயசங்கர். காக்கை போன்ற சாதாரண பறவைகளை காலையில் புறப்பட்ட உடனே பார்த்துவிட்டோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கும் இடமெல்லாம் படபடவென்று இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை அன்றைக்கு தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
அதிர்ஷ்டவசமாக நான் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த மந்தைவெளி ராஜா தெருவுக்கு அருகேயிருந்த ராஜா கிராமணி தோட்டம் என்ற சிறிய சந்தில் அப்போது 10 - 12 சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. அந்த சிறிய சந்துப் பகுதி சாதாரண, எளிய மக்கள் வாழும் பகுதி. இப்படியாக சென்னையில் சில பகுதிகளில் இன்னமும் சிட்டுக்குருவிகள் எஞ்சி இருக்கின்றன.
சிட்டுக்குருவிகள் குறித்த எனது ஞாபகங்கள் மனதின் ஓரத்தில் எப்போதும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க நகரத்திலேயே வாழ்ந்த எனக்கு, சிட்டுக்குருவி மனதுக்கு மிகவும் நெருக்கமான பறவை என்று சொல்லலாம். சிட்டுக்குருவிகள் குறித்த எனது நினைவுகள் மிகவும் சிறிய வயதிலேயே தொடங்கிவிட்டன. திருச்சி தில்லைநகர் ராம் நகர் காலனியில் நான் வளர்ந்த 80களின் தொடக்கத்தில், எங்கள் வீட்டு கம்பி ஜன்னல் வழியாக தினசரி உள்ளே பறந்து வந்து, எங்களது வீட்டுப் பரணில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், இதர பொருள்களுக்கு இடையே வைக்கோலால் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்தது ஒரு சிட்டுக்குருவி குடும்பம். அதே வீட்டின் மற்றொரு பிரிவில் இருந்த மின்பெட்டி இடைவெளியில் பல சிட்டுக்குருவிகள் கூடமைத்து, குஞ்சு பொரித்து சந்தோஷமாக வாழ்ந்துள்ளன. அந்த நேரத்தில் என் தம்பி பிறந்திருந்தான் என்பதால், அந்த சிட்டுக்குருவிகள் என் ஞாபக அடுக்குகளில் ஆழமாக பதிந்துவிட்டன.
1980களின் இறுதியில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் நாங்கள் குடியேறியிருந்தோம். அந்த வீட்டில் காற்று வருவதற்காக அறையின் மேற்பகுதியில் விடப்பட்டிருந்த வென்டிலேட்டர் செவ்வக ஓட்டை வழியாக உள்ளே வந்த ஒரு சிட்டுக்குருவி ஜோடி, உள்அறையின் மேற்பகுதியில் அதேபோல இருந்த மற்றொரு செவ்வக வடிவ ஓட்டை பகுதியில் வைக்கோல் வைத்து கூடு கட்டியது. உள் வெண்டிலேட்டரில் அவை கூடு கட்டியதற்குக் காரணம், எதிரிகளிடம் இருந்து கிடைத்த பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அந்தக் குருவிகளுக்கு தைரியம் சற்று அதிகமாத்தான் இருந்திருக்க வேண்டும். அவையும் பிறக்கப் போகும் அவற்றின் குஞ்சுகளும் ஒரு சில செ.மீ. நகர்ந்தாலும் கீழே விழுந்துவிடக் கூடிய நிலைமையிலும், தைரியமாக கூடு கட்டி வாழ்ந்தன. ஏனென்றால் அவ்வளவு குறைவான இடம்தான் அங்கே இருந்தது. வென்டிலேட்டர் துளை வழியாக தினசரி அவை உள்ளே வந்து, கூட்டுக்குப் போவதற்கு இடையில் எங்கள் வீட்டு மின்விசிறி இருந்தது. எங்கள் குடும்பத்தில் குருவிகள் வரும் நேரத்தில் மின்விசிறியை போடாமலிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். எதிர்பாராத ஒரு நாளில் மாலை, இரவுக்கு இடைப்பட்ட நேரத்தில் மின்விசிறி வேகமாகச் சுழன்று கொண்டிருந்தபோது உள்ளே பறந்து வந்த தாய்க் குருவி, மின்விசிறியின் வேகத்தை கணிக்காமல் அடிபட்டு சிதறிவிட்டது. எங்களுக்கு அது மிகப் பெரிய வருத்தத்தைத் தந்தது என்பதை சொல்ல வேண்டியதில்லை. எங்கள் வீட்டுக்குள் கூடமைத்த கடைசி சிட்டுக்குருவி அதுதான். அதற்குப் பிறகு சிட்டுக் குருவிகள் எங்கள் வீட்டுக்குள் வரவில்லை.
சிட்டுக்குருவி (House sparrow, Passer domesticus)
சிட்டுக்குருவி 15 செ.மீ நீளம் கொண்டது. ஊர்க்குருவி என்றும் இதை அழைப்பது உண்டு. முன்பு நகர்ப்புறங்களில் பரவலாகக் காணப்பட்டது. ஆணின் தலை, பிடரி, முதுகு, வால்மேல் போர்வை இறகுககள் பழுப்புத் தோய்ந்த கருஞ்சாம்பல் நிறம். மேல் முதுகும் இறக்கைகளும் கரும்பழுப்புக் கோடுகள் கொண்ட செம்பழுப்பு நிறம். பெண், சாம்பல் தோய்ந்த உடலின் மேற்பகுதியில் மஞ்சள் தோய்ந்த பழுப்புக் கோடுகளைக் கொண்டது.
இனப்பெருக்கக் பருவத்தில் ஜோடியாகத் திரியும். இது பின்னர் குழுவாக ட்சிஇ, இட்சி, ட்சிஇ எனக் குரல்கொடுத்தபடி பெருங்கூட்டமாக பறக்கும். தானியங்கள், புழு பூச்சிகள், முளைகள், மலர் அரும்புகள், தேன், இளந்துளிர், வீட்டு புறக்கடை கழிவுகள் உள்ளிட்டவற்றை உண்ணும். நீலகிரியில் இப்போது பரவலாகக் காணப்படும் இது, அண்மைக் காலம் வரை 1000 மீ. உயரத்துக்கு மேல் மலைப்பகுதிகளில் காணப்பட்டதில்லை. அதற்குக் கீழ் பகுதிகளில்தான் வசித்து வந்தது.
உணவுப் பழக்கத்தை போலவே கூடுகட்டுவதிலும் வரையறை ஏதுமின்றி வீட்டுக் கூரை, சுவரில் உள்ள பொந்து, கிணற்றின் இடுக்குகள் (பல முறை நேரில் பார்த்திருக்கிறேன்) என வசதியுள்ள இடங்களில் புல், வைக்கோல், குப்பைக் கூளம், பஞ்சு கொண்டு 3, 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவி அடுத்தடுத்து இனப்பெருக்கம் செய்யும், இடைவெளி ஏதுமில்லை.
நம்மால் வீட்டு விலங்காக ஊருக்குள் அழைத்து வரப்படாத உயிரினங்களில் ஒன்று சிட்டுக்குருவி. வாழ உகந்த சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் பல உயிரினங்கள் காட்டிலிருந்து ஊருக்குள் இடம்பெயரும். “குருவிக் கூட்டை கலைப்பது பாவம்” என்று கருதி அவற்றை தொந்தரவு செய்யாமல் இருந்த பண்பு நம் சமூகத்தில் இருந்தது. குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே அறிமுகமாகும் சிட்டுக்குருவிகள் நம்முடைய சினிமா பாடல்கள், குழந்தை பாடல்கள், கவிதைகள், கதைகள் என பல்வேறு வகைகளில் பதிவு பெற்றுள்ளன. இப்படி நம்மோடு ஒன்றறக் கலந்து வாழ்ந்து வந்த சிட்டுக்குருவி இனம், மனிதர்களின் நாகரிக வளர்ச்சி, அறிவியல் - தொழில்நுட்பம் காரணமாக அழிவை நோக்கி சென்று வருகிறது. சிட்டுக்குருவிகளின் அழிவு என்பது, உண்மையிலேயே பயங்கரமான நிலைக்குச் செல்லாதபோதும், அந்த அழிவு சிறியதாக இருக்கும்பட்சத்திலும்கூட, அது சுற்றுச்சூழல் சீரழிவின் மிக முக்கியமான சுட்டிக்காட்டி என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இப்படிப்பட்ட எச்சரிக்கை சமிக்ஞைகளை புறக்கணிப்பது நமது சூழல் மேலும் சீரழியவும், நமது ஆரோக்கியம் மேலும் மோசமடையவுமே வழிவகுக்கும்.
சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணமாகக் கருதப்படும் பல்வேறு காரணங்களை நோக்கும்போது இது நமக்குத் தெளிவாகப் புரியும். சிட்டுக்குருவிகளின் அழிவுக்கான மிக முக்கிய காரணமாக செல்ஃபோன் அலைகள் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இதை நிரூபிப்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம், ஆய்வு இல்லை. பிரிட்டனில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்ஃபோன் அலைகள்தான் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள் ஏதுமற்ற நிலையில், அதே காரணம் அப்படியே இங்கே பொருந்தும் என்று கூற முடியாது. ஆனால், குருவிகளின் அழிவுக்குக் கூறப்படும் மற்ற காரணங்கள் முக்கியமானவை. தீப்பெட்டிகளை அடுக்கியது போன்ற வெளிக்காற்று உள்ளே புக முடியாத ஏ.சி. பொருத்தப்பட்ட வீடுகள், கட்டடங்கள் கண்ணாடி, அலுமினியம் பதிக்கப்பட்டு முற்றிலுமாக மூடப்படுகின்றன. இதனால் குருவிகள் கூடு கட்ட முடியாமல் போகிறது.
மேலும் செடிகள், பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி தெளிப்பதால் பூச்சிகள், சிறு புழுக்கள் இறந்துவிடுகின்றன. சிறு புழுக்கள்தான், முதல் 15 நாளைக்கு குஞ்சுகளின் முக்கிய உணவு. அது இல்லாவிட்டால், குஞ்சுகள் வளர்வது தடைபடும். மேலும் பயிர்களின் மீது பூச்சிக் கொல்லிகள் தெளிப்பதால் தானியங்கள் நஞ்சாகிவிடுகின்றன. இதுவும் சிட்டுக்குருவிகளை பாதிக்கிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையில் உள்ள "மீதைல் நைட்ரேட்" என்ற மாசுப் புகை சிட்டுக்குருவிகளின் உணவான பூச்சிகளைக் கொல்கிறது என்றொரு தகவலும் உண்டு.
முன்னைப் போல இல்லாமல் தானியங்கள் சாக்கு மூட்டைகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன. இதனால் தானியங்கள் எங்குமே சிதற வாய்ப்பில்லை. முன்பெல்லாம் லாரியில் நெல், தானியங்கள் ஏற்றப்பட்டு அவை செல்லும் வழியெல்லாம் சிறிதளவு தானியம் சிதறிக் கொண்டே போகும். இவற்றை பறவைகள் கொத்திக் கொண்டிருக்கும். திருச்சி காந்தி மார்கெட் போன்ற பகுதிகளில் தானியங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகளை அதிகமாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு இந்த நடைமுறைகள் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டதால், சிட்டுக்குருவிகளுக்கு உணவு கிடைப்பது தடைபட்டு விட்டது. இப்படியாக நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை உணர முடிகிறது. ஆனால் இதை நிரூபிப்பதற்குத் தேவையான அறிவியல் ஆதாரங்கள், ஆராய்ச்சிகள் தற்போது இல்லை. இதை விரிவாக நடத்த வேண்டி உள்ளது. அதேநேரம் கிராமப் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் குறையவில்லை என்பதை மூத்த பறவை ஆர்வலர் க.ரத்னமும், வாழ உகந்த இடங்களில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறையவில்லை என்பதை பறவை ஆராய்ச்சியாளர் எஸ்.கோபி சுந்தர் போன்றோரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
முந்தைய தலைமுறையினர் சிட்டுக்குருவிகளையோ, அவை கூடுகட்டுவதையோ தொந்தரவாக நினைக்காமல் இருந்தனர். அவர்களது வாழ்க்கை நடைமுறைகளும் அவற்றுக்கு உதவும் வகையிலேயே இருந்தன. வீட்டில் உலை வைக்க இருந்த கொஞ்சம் அரிசியையும் சிட்டுக்குருவிகளுக்கு போட்டதற்காக செல்லம்மாவிடம் பாரதியார் திட்டு வாங்கியிருக்கிறார். தனக்குப் பிரியமான சிட்டுக்குருவிகளை, தனது பாடல்களிலும் பாரதியார் பல முறை குறிப்பிட்டுள்ளார். மஞ்சள்தொண்டை சிட்டுக்குருவியை ஆசையாக விளையாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின், அந்தக் குருவியின் நிறம் வித்தியாசமாக இருந்தது சாலிம் அலியின் மனதில் கேள்வியை எழுப்பியது. அந்தக் கேள்வியைப் பின்தொடர்ந்து சென்ற சாலிம் அலி, உலகின் மிக முக்கியமான பறவையியலாளர் ஆனார். இப்படி மேதைகளின் வாழ்க்கையிலும் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்காற்றியுள்ளன.
இன்றைய தலைமுறையோ சிட்டுக்குருவிகள் என்றொரு உயிரினம் தங்களிடையே வாழ்ந்தது என்பது பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் இருக்கின்றனர். சென்னை புத்தகக் கண்காட்சியில் பூவுலகின் நண்பர்கள் அரங்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், கைவிடப்பட்ட தூக்கணாங்குருவிக் கூடுகளை எடுத்து வந்து மாட்டியிருந்தோம். அதைப் பார்த்த பெரும்பாலான குழந்தைகள், அது என்னவென்று விசாரித்தனர். குழந்தைகளுக்கு இயல்பாகவே புதிய விஷயங்களை, உயிரினங்களை, அவற்றின் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ள ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த ஆர்வத்தை வளர்க்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் தவறிவிடுகிறார்கள்.
யானை, புலி போன்ற பெரிய உயிரினங்களின் அழிவு மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தாவிட்டாலும்கூட, சமூகத்தின் மத்தியில் சிறிய அதிர்வுகளையாவது ஏற்படுத்துகிறது. ஆனால் சிட்டுக்குருவிகள் போன்ற நமது சுற்றுச்சூழலின் நலனை சுட்டிக்காட்டுகிற சிறுபறவைகளின் அழிவு நமது சமூகத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை.
எப்படியோ, சிட்டுக்குருவிகளின் அழிவு அதல பாதாளத்துக்குச் செல்லவில்லை என்பது நிஜம். ஆனால் தமிழகத்தில், இந்தியாவில் ஏற்கெனவே தொடங்கிவிட்ட சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, அந்த இனத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல; நமது சூழல் வாழத் தகுதியற்றதாக மாறி வருவதன் முக்கியமான அறிகுறி. இதை கவனிக்கத் தவறுவதும், புறக்கணிப்பதும், நாளை நமது ஆரோக்கியத்தை, உடல்நலத்தை, வாழ் சூழலை, பூவுலகை முற்றிலும் சீரழிப்பதாக மாறிவிடக் கூடும். இன்றைக்கு சிட்டுக்குருவி, நாளை மனிதன்; இதுவே சிட்டுக்குருவி இனத்தின் அழிவு நமக்கு மறைமுகமாக உணர்த்தும் செய்தி. சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பு, விழிப்புணர்வுக்காக உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
சிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்?
உள்ளூர் தாவரங்களை அதிகம் வளர்க்க வேண்டும். அதுதான் இயற்கையான சூழல் சமநிலையை பாதுகாக்கிறது. பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். இவை நுண்ணுயிரிகள், நன்மை செய்யும் பூச்சிகள், புழுக்களை அழிக்கின்றன. சிட்டுக்குருவிகளை இது பாதிக்கிறது.
எளிதில் வளரக் கூடிய வெளிநாட்டுத் தாவரங்கள் பசுமை பாலைவனங்களையே உருவாக்குகின்றன. இவை உள்நாட்டு உயிரினங்களுக்கு உணவையோ, மற்ற சூழல் கைமாறுகளையோ செய்வதில்லை. எனவே, பராமரிக்க எளிதாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அவற்றை வளர்ப்பது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.
சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளுக்கு உணவு அளிக்கலாம். தானியங்களை மட்டுமே அளிக்க வேண்டும். உப்பும் எண்ணெயும் மிகுந்த, மக்கிய, மீதமான உணவுப் பொருள்களை கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். கம்பு, அரிசி, கோதுமை போன்றவற்றை தரலாம். வெயில் காலங்களில் தண்ணீர் வைக்கலாம்.
கட்டடங்களில் பறவைகள் கூடு கட்ட வசதியாக இடம் விட்டு கட்டலாம். ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் சிட்டுக்குருவி நுழையும் அளவுக்கு ஓட்டையிட்டு, எதிரிகள் அணுகாத உயரத்தில் வைத்துவிட்டால், அதுவே அவற்றின் வீடாகிவிடும்.
சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு - நீங்களும் பங்கேற்கலாம்
சிட்டுக்குருவிகளை முறைப்படி பாதுகாக்கும் நோக்கத்தோடு, இந்த சிட்டுக்குருவிகள் தினத்தில் நாடு முழுவதும் அவற்றை கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. இதில் நீங்களும் பங்கேற்கலாம். தொடர்புக்கு: www.citizensparrow.in இந்த முன்முயற்சியை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமும், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகமும் இணைந்து முன்னெடுத்துள்ளன. எளிமையான சில கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் சிட்டுக்குருவிகளை அழிவில் இருந்து காப்பாற்ற நீங்களும் பங்களிக்க முடியும்.
தமிழக சிட்டுக்குருவிகள் பற்றி ஆவணப் பட இயக்குநர் கோவை சதாசிவம் அருமையானதொரு ஆவணப் படத்தை “சிட்டு” என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார். தொடர்புக்கு: 99650 75221. இந்த சிட்டுக்குருவிகள் தினத்துக்கு சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கம் பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்துகிறது. தொடர்புக்கு: 94440 49492,
(நன்றி: அறிவியல்பூர்வமான தகவல்களின் அவசியத்தை வலியுறுத்தி, உடனடியாக அவற்றை தந்த எழுத்தாளரும் காட்டுயிர் ஆராய்ச்சியாளருமான ப.செகநாதனுக்கு)
- ஆதி வள்ளியப்பன் (
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் அனைத்தும் வடக்கு ஆசியா, ஐரோப்பாவில் இருந்து வந்தவை என்று கூற முடியாவிட்டாலும் 20 அல்லது 25 சதவிகித பறவைகள் வேறு இடங்களில் இருந்து வருபவைதான். வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் உட்பட அனைத்துக்கும் தமிழ்ப் பெயர்களும் உள்ளூர் பெயர்களும் உண்டு. இந்தப் பெயர்கள் மூலம் நமது பாரம்பரியத்திலும், அந்த கிராம மக்களின் வாழ்விலும் இப்பறவைகள் கலந்துவிட்டதை உணர முடிகிறது.
வேடந்தாங்கலுக்கு வரும் பெரும்பாலான பெரும்பறவைகள், கோடை காலங்களில் நாட்டின் பிற பகுதிகளில் வாழ்கின்றன. வலசை காலத்தில் வேடந்தாங்கல் வரும் இவை இங்கு கூடமைத்து குஞ்சு பொரிக்கின்றன. கூடமைக்கும் இடமே பறவைகளின் தாயகம் என்பார் காட்டுயிர் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன். இந்த பறவைகளை உள்நாட்டு வலசைப் பறவைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொதுவான நம்பிக்கை மாறாக சிறு பறவைகளே பெரும்பாலும் தூர தேசங்களில் இருந்து இங்கு வருகின்றன. கிளுவை, ஊசிவால் போன்ற வாத்துகள், வாலாட்டிகள் (Wag Tails), உப்புக்கொத்திகள் (Plovers), உள்ளான்கள் (Sandpiper), ஆற்று ஆலாக்கள் (Terns) போன்றவை அவை. அளவில் சிறியவை என்பதால் கூர்மையான இரு கண்ணோக்கி கொண்டே இவற்றை தெளிவாகப் பார்க்க முடியும்.
இங்கு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரண்டு விஷயங்களில் முதலாவது, Black lbis எனப்படும் அரிவாள்மூக்கனின் உள்ளினமான அன்றில் பறவையை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. ஏரிக்கு எதிர்ப்புறம் தண்ணீர் பாய்ச்சப்பட்டிருந்த வயல்களில் வெள்ளை அரிவாள்மூக்கன்களுடன் கலந்து அவை இரை தேடிக் கொண்டிருந்தன. சங்க காலம் முதல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் பறவையை பார்க்க முடிந்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அருவாமூக்கன் எனப்படும் இந்த கொக்கு வகையில் தமிழகத்தில் மூன்று உள்ளினங்களைப் பார்க்க முடியும்.
அன்றில் பறவை தூரப்பார்வைக்கு கறுப்பு நிறத்தில் இருந்தாலும், உச்சந்தலை ரத்தச்சிவப்பாக, உடல் அடர்பழுப்பு நிறத்தில் இருப்பதை உற்றுநோக்கினால் அறியலாம். வேடந்தாங்கல், கரிக்கிளி சரணாலயங்களுக்கு நூற்றுக்கணக்கில் இவை வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆச்சரியம், கூடு கட்டுவதற்காக மஞ்சள் மூக்கு நாரைகளும், சில அரிவாள் மூக்கன்களும் தொடர்ச்சியாக ஒன்று மாற்றி ஒன்றாக பச்சையான சிறு மரக்கிளைகளை முறித்துச் சென்றதே.
இயற்கையின் கட்டளைக்கு ஏற்ப தங்கள் இனத்தை விருத்தி செய்ய இப்பறவைகள் கூடமைக்கின்றன. சாதாரணமாக கூடமைக்க பறவைகள் சிறு மரக்கிளைகள், சுள்ளிகளை அலகில் கொத்திப் பறப்பது வழக்கம். ஆனால் மஞ்சள் மூக்கு நாரைகள் பச்சை மரக்கிளைகளை, சிலநேரம் காய்ந்த மரக்கிளைகளை அலகால் முறித்துச் செல்கின்றன. இந்த செயல்பாட்டை கவனிப்பது சுவாரசியமாக இருந்தது.
சில பறவைகள் கிளையை முறிக்க முடியாமல் மாறிமாறி ஒவ்வொரு கிளையாக அலகை திருப்பி எது வசதியாக கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. இயற்கை உந்துதலின் காரணமாகவே இந்தச் செயல்பாடு நிகழ்கிறது.
வலசை காலம்
வேடந்தாங்கலில் வலசை பருவகாலம் தொடங்கும் நாள் நவம்பர் 15 என்று கருதப்படுகிறது. 2007ம் ஆண்டு அந்த நாளில் 10,000 முதல் 15,000 பறவைகள் வந்திருந்தன. வலசை வரும் பறவைகள் குளிர்காலத்தை கழிக்க ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட நாள். குறிப்பிட்ட இடத்துக்கு மீண்டும் மீண்டும் வரும் தன்மை கொண்டவை, தென்மேற்குப் பருவ மழையைப் போல.
வேடந்தாங்கலில் இதுவரை 115க்கும் மேற்பட்ட பறவை வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நீரைச் சார்ந்து வாழும் நீர்ப்பறவைகளே.
2006 ஜனவரியில் சென்றபோது 20 பறவை வகைகளை எங்களால் அடையாளம் காண முடிந்தது. முந்தைய ஆண்டு சரியான மழைப்பொழிவு இல்லாததால் ஐந்தாயிரத்துக்கும் குறைவான பறவைகளே வந்தனவாம். அந்த ஆண்டு பத்தாயிரக்கணக்கில் கூடியிருந்தன. 2007 டிசம்பரில் சென்றபோதும் அதே எண்ணிக்கையிலான பறவை வகைகளைக் கண்டோம். ஆனால் பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. காரணம் அது வலசை காலத்தின் தொடக்கம்.
2007ம் ஆண்டில்
2007ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் வேடந்தாங்கல் சென்றபோது அன்றில் பறவைகளை அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. நத்தை குத்தி நாரைகள், கூழைக்கடாகள், உண்ணி கொக்குகள். பெரிய கொக்குகள் அதிக எண்ணிக்கையில் கூடியிருந்தன. வலசை காலம் தொடங்கும் போது டிசம்பர் மாதத்தில் கூழைக்கடாக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. வேடந்தாங்கலில் வழக்கமாக பெரும் எண்ணிக்கையில் கூடும் மஞ்சள் மூக்கு நாரைகளின் வருகை நாங்கள் சென்றிருந்த 2ம் தேதிதான் அந்தப் பருவத்தில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பறவைகள்:
மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork), கூழைக்கடா (Grey Pelican), கரண்டிவாயன் (Spoonbill), அரிவாள்மூக்கன் (White lbis), பெரியகொக்கு (Large Egret), நத்தைக்குத்தி நாரை (Openbilled Stork), பாம்புத்தாரா (Indian Darter) உள்ளிட்டவை.
அரிவாள் மூக்கன் – னின் அலகு கீழ்ப்புறமாக கதிர் அரிவாளைப் போல முன்னால் வளைந்திருக்கும். சேற்றில் பூச்சிகள், நத்தைகள் உள்ளிட்டவற்றை அலகால் குத்தியெடுத்து உண்ணும். அரிவாள் மூக்கனின் அலகும், கால்களும் கறுப்பு நிறம், உடல் வெள்ளை நிறம் என எதிரெதிர் நிறங்களைப் பெற்றிருக்கும்.
கரண்டிவாயன் என்ற பெயரைக் கேட்டவுடனேயே, ஏதோ கிண்டல் செய்கிறார்கள் என்று தோன்றுகிறதா? கரண்டிவாயனின் அலகுகள் சமையல்காரர்கள் பயன்படுத்தும் அகப்பை கரண்டிகள் இரண்டை மேலும் கீழுமாக வைத்தது போலிருக்கும். தலைப்பிரட்டை, தவளை, நீர்ப் பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்து தலையை மேற்புறமாகத் தூக்கி இரையை விழுங்கும். இது பார்க்க புதிய அனுபவமாக இருக்கும். வளர்ந்த கரண்டிவாயன்களின் தலைப்பகுதிக்கு பின்புறம் குடுமி போன்ற சில இறகு முடிகள் இருக்கும். இந்த கொண்டை முடிகள் அதன் அழகைக் கூட்டும்.
உணவுப் பழக்கம் காரணமாகவே மேற்கண்ட இரு பறவைகளுக்கு அலகு இப்படி அமைந்துள்ளது.
பாம்புத்தாரா ஒரு நீர்ப்பறவை. பெரும்பாலான நேரம் நீரில் நீந்திக் கொண்டிருக்கும். உடல் அளவில் நீர்க்காகத்தை ஒத்திருந்தாலும் இதன் கழுத்து நீண்டிருக்கும். உடல் பளபளக்கும் கறுப்பு-பழுப்பு நிறம். நீண்ட கழுத்து பழுப்பு நிறம். தலை மட்டும் வெளித்தெரியும் வகையில் தண்ணீரில் உடலை மறைத்து நீந்தும். அப்பொழுது நீண்ட கழுத்து பாம்பு போல வெளியே நீண்டிருக்கும். இதனால் தான் அப்பெயர் பெற்றது. அம்புபோல் கழுத்தை சட்டென்று நீட்டி மீனைப் பிடிக்கும். மீனே இதன் முக்கிய உணவு.
இளஞ்சிவப்புத் தலையுடன் காணப்படும் மஞ்சள் மூக்கு நாரையின் இறகுகள் கரும்பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு கலந்து பளிச்சென்று இருக்கும். மரத்துக்கு மேலே பறந்து வந்து ஒரு கணம் நிதானித்துவிட்டு, பின்னர் இந்தப் பறவை அமரும் அழகே தனி.
நத்தை குத்தி நாரை, மஞ்சள்மூக்கு நாரை போலவே இருந்தாலும் தலை நிறமற்றும், அலகு இடைவெளியுடனும், இறகுகள் இளஞ்சிவப்பு வண்ணமின்றியும் உள்ளன.
கூழைக்கடாவுக்கு வழக்கமாக அடி அலகின் கீழே பை இருக்கும் என்றாலும். இங்குள்ள Spot billed or Grey Pelican என்ற கூழைக்கடா வகைக்கு பெரிய பை இருப்பதில்லை. இதன் அலகு அமைந்துள்ள விதம், அதன் முகத்தை சிரித்த முகம் போல தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
பளிச்சென்ற வெண்நிறத்தில் புசுபுசுவென இறக்கைகளுடன் காணப்படும் உண்ணிக் கொக்கு கூட்டமாக பறந்து செல்வது விமான சாகசக் காட்சிகளை நினைவுபடுத்தும்.
வீட்டுக் காக்கைகளைப் போல, நீர்க்காகங்கள் என்ற வகை உண்டு. கொண்டை நீர்க்காகம் (Indian Shag), சிறிய நீர்க்காகம் (little Cormorant) என இரு வகைகள் இங்கு அதிகமாக உள்ளன. சிறிய நீர்காகம் கூட்டமாக மீன்பிடிக்கும். நீர்க்காகங்களுக்கு எண்ணெய் சுரப்பி இல்லாததால் நீந்தும் போது இறக்கைகள் நனைந்துவிடும். கொண்டை நீர்க்காகங்கள் வெயிலில் இறக்கைகளை காய வைப்பதை தெளிவாகப் பார்க்கலாம்.
வேடந்தாங்கலின் கவர்ச்சிகரமான பறவைகள் மஞ்சள்மூக்கு நாரை, கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, கரண்டிவாயன் ஆகியவையே. பருவகாலம் உச்சமடையும்போது இந்த நான்கு பறவைகளையும் அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம். அரிவாள்மூக்கன் (வெள்ளை), அன்றில் பறவை, நீர்க்காகங்கள், பாம்புத்தாராக்கள் போன்றவற்றையும், ஊசிவால் வாத்து (Pintailed Duck), கிளுவை (Commen Teal), நாமக்கோழிகள் (Common Coot), தாழைக்கோழி (Moorhen), முக்குளிப்பான (Dab Chick) போன்ற சிறு நீந்தும் பறவைகளையும் பார்க்கலாம்.
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தமிழகத்தில் பன்னிரெண்டு இடங்கில் பறவை சரணாலயங்கள் உள்ளன. இவை அனைத்தும் நீர்நிலைகளில் அமைந்தவைதான். வலசை வரும் பறவைகள் பெரும்பாலும் நீர்நிலைகளிலேயே தங்குகின்றன. பொதுவாகவே அதிக பறவை வகைகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை நீர்நிலைகள். பல்வேறு பறவைகளுக்கு இரை தரும் அமுதசுரபியாய் அவை உள்ளன. ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே நீர்ப்பறவைகள் கூடு கட்டுகின்றன. கூட்டங்கூட்டமாக ஒரே இடத்தில் கூடுகட்டும் வழக்கம் நீர்ப்பறவைகளின் தனிப்பண்பு.
தாராளமாக இரை கிடைக்கும் இடங்கள், கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய பாதுகாப்பான மரங்கள் இருக்கும் நீர்நிலைகளில் அவை ஆயிரக்கணக்கில் கூடுகின்றன. அப்படிப்பட்ட சில நீர்நிலைகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டுள்ளன.
நீர்நிலைகளுக்கு உள் சூழலியல் – பல்லுயிரிய முக்கியத்துவத்தைப் பொருத்து ‘ராம்சர் மாநாடு’ அந்தஸ்து வழங்கப்படுகிறது. முக்கிய பாரம்பரியச் சின்னங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்படுவதைப் போல, நீர்நிலைகளுக்கு ராம்சர் அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த அந்தஸ்தைப் பெற்ற நீர்நிலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
சுற்றுச்சூழல் சீர்கேடு, வாழிடச் சூழலில் ஏற்படும் பாதகமான மாற்றங்கள் காரணமாக நீர்ப்பறவைகள் புதிய இடங்களை தேர்ந்தெடுப்பதும் நடக்கிறது. ஒரு சரணாலயத்திலே குறிப்பிட்ட சில பறவைகளின் வருகை அதிகரிப்பு காலப்போக்கில் மாறுகிறது.
வேடந்தாங்கல், கூந்தங்குளம், கரிக்கிளி, வடுவூர், திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள கிளியூர் ஏரி போன்று பறவைகள் கூடும் இடங்களுக்கு பறவை நோக்க சென்றுள்ளேன். காட்டுயிர்கள் மீது ஆர்வம் அதிகரித்தபோதும், காடுகளுக்குச் சென்று அவற்றின் வாழ்க்கையை நேரடியாக நோக்கும் வாய்ப்பு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தது. ஆனால் எல்லா காலமும் பறவைகள் நோக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து வந்தது. நகரத்தில் வாழ்ந்து கொண்டே இயற்கையோடு நெருக்கத்தை பராமரிப்பதற்கான சிறந்த வழிகளில் பறவை நோக்குதல் முக்கியமானது.
என் திருச்சி வீட்டுத் தோட்டத்திலேயே தினசரி 10 வகை பறவைகளை பார்க்க முடிந்தது. அதேநேரம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பறவை சரணாலயங்களுக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொண்டேன். ஒவ்வோர் ஆண்டும் வடகிழக்குப் பருவமழை வந்த பின் இந்தப் பழக்கம் தொடர்ந்தது.
பறவைகளை நோக்குவதற்குத் தேவையான இரு கண்ணோக்கியும் வாங்கியிருந்தேன். காட்டுயிர்கள், பறவைகளைப் படமெடுப்பதிலும் எனக்கு ஆர்வம் இருந்தது.
சென்ற இடமெல்லாம் பல பறவைகளுக்கு ஆளாளுக்கு ஒரு பெயர் கூறுவார்கள். ஏற்கெனவே காதில் விழுந்த பெயர்களை பார்க்கும் பறவைகளுக்கு சூட்டி விடுவார்கள். கொக்கையும் நாரையையும் ஒன்று என்பார்கள். இதழ்கள், செய்தித்தாள்களில் எழுதும் போதும், படம் வெளியிடும்போதும் பலர் ஆங்கிலப் பெயரை குறிப்பிடுகிறார்கள். அல்லது தவறான தமிழ்ப் பெயரைத் தருகிறார்கள். வழக்குப் பெயர் என்ன? சரியான தமிழ்ப் பெயர் எது என்று கவனம் செலுத்துவதில்லை.
சில பறவைகள் தூரத்தில் இருந்து பார்க்க ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும், மிக நுணுக்கமான வகையில் வேறுபட்டிருக்கும். முக்கிய அடையாளங்களைக் கொண்டு பறவைகள் பிரித்தறிந்தால் தான், அவற்றின் உணவு உள்ளிட்ட இதர பழக்கவழக்கங்களை சரியாக உணர முடியும். இதற்காகத்தான் பறவைகளின் சரியான பெயர்களை அறிய முயற்சிக்கப்படுகிறது.
பறவைகளைப் பற்றி உள்ளூர் மக்களிடம் விசாரிப்பது அவசியமே. அத்துடன் அவற்றை சரியாக அறிய பறவைகளின் முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும். அலகு, கால், உடல், சிறகுத்தொகுதி, உணவுப்பழக்கம், கூடு அமைந்துள்ள இடம் உள்ளிட்ட அம்சங்களை பறவை புத்தகங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காண வேண்டும்.
தொடக்க காலத்தில் பெரும்பாலான பறவைகளின் பெயர்கள் எனக்குத் தெரியாது. அவற்றின் பழக்கவழக்கங்களை பார்ப்பதில் கவனம் செலுத்துவேன். அப்பகுதிக்கு வரும் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கேட்க முயற்சிப்பேன். பிறகு புலவர் க.ரத்னத்தின் தமிழ்நாட்டுப் பறவைகள் குறித்த தமிழ்ப்புத்தகம், விஸ்வமோகன் பட் எழுதி நேஷனல் புக் டிரஸ்ட் (N.B.T.) வெளியிட்ட ‘ஜாய் ஆப் பேர்ட்வாட்சிங்’, தமிழ்நாடு சுற்றுலாத் துறை வெளியிட்ட வேடந்தாங்க-வாட்டர் பேர்ட் சேஞ்சுவரி, சாலிம் அலியின் ‘பறவை உலகம்’, கூந்தங்குளம் பற்றி உலகை இயற்கை நிதியம் (WWF) வெளியிட்ட சிறு வெளியீட்டைக் கொண்டு பறவைகளை அடையாளம் காண பழகிக் கொண்டேன்.
மஞ்சள் மூக்கு நாரை அல்லது சங்குவளை நாரை என்றழைக்கப்படும் பறவையை பலரும் செங்கால் நாரை என்பார்கள். இது தவறு. ஆங்கிலத்தில் White Stork என்றே இப்பறவை அழைக்கப்படுகிறது. தமிழில் செங்கால் நாரை. குளிர் காலத்தில் தமிழகத்துக்கு வலசை வரும் இப்பறவை அதிக எண்ணிக்கையில் கூடுவதில்லை. அதனால் இதைப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. பலருக்கும் நாரைகளைப் பற்றித் தெரிந்திருக்கிறதோ இல்லையோ, சத்திமுற்றப் புலவர் குறிப்பிடும் செங்கால் நாரை என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதன் வீச்சு விரிவானது என்றாலும், அறியாமையால் பல நேரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சள் மூக்கு நாரை உள்ளூர் வலசை பறவை. வேடந்தாங்கல், கூந்தங்குளம், பழவேற்காடு உள்ளிட்ட சரணாலயங்களில் இது பெருமளவு கூடுகிறது. இந்தப் பறவைகளை பெரும் எண்ணிக்கையில் பார்க்கலாம்.
ஒரு சூழல் செழிப்பாக, உயிர்வளத்துடன் வளங்குன்றா வளர்ச்சியை தரும் தன்மையுடன் இருக்கிறதா, மாசுபட்டிருக்கிறதா – சீர்கெட்டிருக்கிறதா என்பதை அறிய பறவைகள் சிறந்த அடையாளம்.
பறவைகளை நோக்குதல் மேட்டுக்குடியினரின் பொழுதுபோக்கு போலவே அடையாளப்படுத்தப்பட்டு விட்டது. காட்டுயிர் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களும் பறவைகளை நோக்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
பறவை நோக்குதல் வெறுமனே பொழுதுபோக்கு அல்ல. இது காட்டுயிர் அறிவியலின் ஒரு பிரிவு. பறவைகளின் உணவுப் பழக்கவழக்கம், செயல்பாடுகள், நடமாட்டங்களை கவனிப்பது பல்வேறு நுணுக்கமான விஷயங்களை உணர்த்தும். பறவை நோக்குதலின் பிரதான நோக்கம், அவற்றின் அழகைப் பார்த்து வியப்பதல்ல. பழக்கவழக்கத்தை ஊன்றி நோக்குவதும், அதன்மூலம் பல்லுயிரிய சுழற்சியில் அவற்றின் பங்கேற்பைப் புரிந்து கொள்வதுமே அடிப்படை நோக்கம். பறவையியல் என்பது ஓர் அறிவியல் துறை. அதன் நீட்சியே பறவை நோக்குதல்.
- நாராய் நாராய்...
- துருவப் பகுதியில் உயிரினங்கள்
- விலங்குகளும் வண்ணங்களும்
- உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!
- பாவோபாப் - ஓர் அதிசய மரம்
- மணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான்
- நிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே…
- காட்டுக்குள் நடை பயணம்
- நீலகிரியின் நிலை....
- காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்
- நான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி
- காட்டுயிர்களும் மூடநம்பிக்கைகளும்
- கானமயில்
- மயில்களை கொல்ல வேண்டாம்
- இலவங்கப் பட்டை - சில தகவல்கள்
- மாயமாகும் மயில்களின் உலகம்
- வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்
- இயற்கை கொடுத்த வரம்
- கடல் எனும் விந்தை
- வாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்