கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
காலநிலை மாற்றம், கரியமில புகையை வெளியேற்றுவதை கட்டுப்படுத்துதல் போன்ற உரையாடல்கள் மாநாடுகள் உலகளவில் நடக்கத் தொடங்கிய நாளிலிருந்து மாபெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் மின்சார, பிற ஆற்றல் நுகர்வு தேவைகளை (Energy Consumption) கரியமில புகை வெளியேற்றாத (CO2 emissions) வழியில் தேட தொடங்கிவிட்டார்கள். 24/7 நேரமும் இணைய சேவைகள் மற்றும் சேவை பயன்பாடுகள் நடக்க அவர்களுக்கு (Sustainable energy) ஒரு நிலையான ஆற்றல் தேவைப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப தகவல் (Data Center) நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஆற்றல் முழுவதும் ஏதோ ஒரு வகையில் கரியமில புகையை வெளியேற்றுவதாவே உள்ளது. உதாரணமாக பல மின் நிலையங்கள் நிலக்கரி, இயற்கை எரிவாயு, புதைபடிவ எரிபொருள் மூலமாக பெறக்கூடியதாக இயங்குகிறது. சொல்லப்போனால் இன்றளவும் அப்படி தான் இருக்கிறது. ஆனால், இதிலிருந்து அவர்கள் முழுவதும் மாற நினைக்கிறார்கள். தங்கள் நிறுவனங்களின் எதிர்கால திட்டங்களை கரியமில புகை வெளியேற்றாமல் நூறு விழுக்காடு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழியில் (Renewable Energy) தேவைகளை நிறைவேற்ற உறுதிமொழி ஏற்கிறார்கள். புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் என்பது ஆண்டு முழுவதும் நிலையான ஆற்றல் தொடர்ச்சியாக கிடைக்காது. உதாரணமாக நீர் மின்நிலையங்கள், காற்றாலை மின்சாரம், சூரியஒளி ஆற்றல் மின்சாரம், இவைகள் பருவநிலைக்கு ஏற்றாற்போல் மாறுபடும். இதில் அணுமின் ஆற்றல் மட்டுமே கரியமில புகையை வெளியேற்றாமல் ஆண்டு முழுவதும் ஒரு நிலையான மின்சாரத்தை வழங்கும். எனவே தான் ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற COP அமைப்பும், முன்னேறிய நாடுகளும், பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அணுஉலை மின்சாரத்தை "Clean Energy" என்று போற்றுகின்றனர்.
ஏற்கனவே மின்சார பசியுடன் இயங்கிக் கொண்டிருக்கும் தகவல் சேமிப்பு நிலையங்களுடன் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இணைந்து வருவதால் இதன் மின்சார தேவை இருமடங்கு உயர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் மின்சாரத் தேவையை நிறைவேற்ற அவர்களுக்கு அணுமின் ஆற்றல் தான் காலத்தின் இன்றியமையாதது என்று வெவ்வேறு புதிய அணுமின் ஆற்றலை பெற முனைப்புடன் இயங்குகிறார்கள்.
அமெரிக்காவில் நிகழ்ந்த அணுஉலை இடர்;
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள Middletown என்ற புறநகர் பகுதியில் ஓடிய 'Susquehanna River' ஆற்றின் நடுவில் அமைந்திருந்தது Three Mile Island (TMC - Nuclear Plant) அணுமின்நிலையம். இதனை Exelon Energy என்ற தனியார் நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தது. 1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் நாள் அதிகாலையில் அணுஉலை அலகு 2ல் ஏற்பட்டது அந்த விபத்து.
அணுஉலையில் அணுக்களை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் reactor core -ஐ குளிரூட்ட எடுத்துச் செல்லும் குளிர்விப்பானின் மின்மோட்டார் திறப்பான் (Pump Valve) திடீரென இயங்காமல் போனதால் குளிரூட்டும் கிடங்கில் குளிரூட்டி (Coolant) முற்றிலும் தீர்ந்து விட்டது. முறையே இதனால் தொடர்ச்சியாக குளிரூட்டும் தொடர் சங்கிலி நிகழ்வுகள் முடங்கியது. அணுஉலை எங்கும் பதற்றமான சூழ்நிலை உருவானது.
பேரிடர் கால ஒலிப்பெருக்கி ஒலிக்க தொடங்கின, சிகப்பு விளக்குகள் எரியத் தொடங்கியது. அணுஉலையில் வேலை செய்தவர்கள் பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். உடனடியாக அலகு 2ல் மின்சார உற்பத்தி நின்றுவிட்டது, அதாவது "Plant's turbine generator and core reactor itself automatically shutdown " பிற செயல்பாடுகளும் முற்றிலும் இயங்குவதை நிறுத்தப்பட்டது.
அணுஉலையை இயக்கிய தனியார் நிறுவனம் அது ஒரு சிறிய விபத்து சுற்றுச்சூழலுக்கு விளைவுகள் ஏற்படுத்தும் கதிரியக்கம் வெளியேறவில்லை என்றது. ஆனால், மறுநாள் மார்ச் 29 மத்திய வேளையில் துணைநிலை ஆளுநர் Bill Scranton அணுஉலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறி இருக்கிறது, அணுஉலையை இயக்கிய நிறுவனம் கூறுவதில் உண்மை இல்லை என்றார். கதிரியக்கம் சுற்றுச்சூழலில் கலந்து இருப்பதாக தெரிவித்தார். அணுஉலை அருகில் அமர்ந்திருந்த ஊரில் இருந்து மக்கள் வெளியேறினார்கள். மக்களுக்கு எந்த பாதிப்பும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்தை அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அணுஉலை விபத்து என்று வர்ணிக்கிறார்கள்.
அது ஒரு சிறிய மனித தவறு என்று பின்னாளில் விசாரணை ஆய்வுகள் தெரிவித்தன. இந்த விபத்து தொடங்கிய நாளிலிருந்து அடுத்த 37 ஆண்டுகளுக்கு புதிய அணுஉலை அமெரிக்காவில் தொடங்கப்படவில்லை.
அலகு - 2 முற்றிலும் (Complete Shutdown) நிறுத்தி வைக்கப்பட்டாலும் சில ஆண்டுகள் கழித்து அலகு - 1 மீண்டும் இயங்கி மின்சார உற்பத்தி தொடங்கியது. அணுஉலையில் இருந்து மின்சாரம் பரிமாற்றம் நிகழ்ந்தது. தொழிற்சாலைகளும் வீடுகளுக்கும் மின் பரிமாற்றம் பெறப்பட்டது. எனினும் அலகு -1 ன் கடைசி நாள் 2019 -ஆம் ஆண்டு செப்டம்பர் 30 என்று அறிவித்தது Exelon Energy. இதற்கு வேறு காரணங்கள் சொன்னது நிறுவனம். அணுஉலையை தொடந்து இயக்குவதற்கு ஏராளமான நிதி தேவைப்படுவதாகவும் அதனால் மின்நிலையத்தில் இருந்து வருவாய் இல்லை என்று அறிவித்தது.
அதற்கு பிறகு இந்த அணுமின் நிலையத்தில் இருந்து எந்த மின்சாரமும் உற்பத்தி ஆகவில்லை.
மைக்ரோசாப்ட் மூலம் புதுப்பிக்கப்படும் அணுஉலை மின்சாரம்;
சரியாக ஐந்தாண்டுகள் கழித்து நிறுத்தி வைக்கப்பட்ட இதே அணுஉலையை மீண்டும் இயக்க போவதாக ஒரு புதிய செய்தியை செப்டம்பர் 20, 2024ல் அறிவித்தது Constellation Energy நிறுவனம். அதுவும் தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனமான மைக்ரோசாப்ட் உடன் கைகோர்த்து. மைக்ரோசாப்ட்டின் செயற்கை நுண்ணறிவு தேவைகளுக்கு அணுமின் மின்சாரத்தை பயன்படுத்தப்படும் என்றது மைக்ரோசாப்ட். அடுத்த 20 ஆண்டுகளுக்கு இதே அணுஉலையில் இருந்து 835MW மின்சாரத்தை மைக்ரோசாப்ட் பெறும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
மூன்று மைல் தீவு அணுஉலை (Three Mile Island Nuclear Plant) அமைந்திருக்கும் பகுதியில் இருந்து பல மைல்கள் தொலைவில் இருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தகவல் சேமிப்பு நிலையங்கள். அப்படி என்றால் எவ்வாறு இங்கிருந்து மின்சாரத்தை மைக்ரோசாப்ட் மட்டும் தனியாகப் பெறும் என்பது பலருக்கும் கேள்வியாக இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியதை கேட்டவுடன் எனக்கு எனக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது.
"கடலிலே மழை வீழந்தப் பின்
எந்தத் துளி மழைத் துளி
காதலில் அதுபோல நான்
கலந்திட்டேன் காதலி"
பாடல் வரிகள் கூறியது போல, அணு மின்சாரம் தனியாக செல்ல அதற்கொரு தனி மின் கம்பிகள் என்று கிடையாது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அமைந்திருக்கும் உயர் அழுத்த மின் கம்பிகள் வழியே தான் அணு மின்சாரமும் செல்ல வேண்டும். இதே மின்கம்பிகள் தான் புதைபடிவ எரிபொருளில் இருந்து எடுக்கப்பட்ட மின்சாரமும் செல்கிறது.
ஒருமுறை அணுமின்சாரத்தை உயர் அழுத்த மின் கம்பியில் கலந்து விட்டால் அது எந்த மின்சாரம் என்று யாராலும் பிரித்து பார்க்க முடியாது.
தற்போது புதுப்பிக்கப்படும் அணுஉலை எல்லா கட்ட ஆய்வுகள், தரச்சான்றுகள், கட்டுப்பாடுகள் சோதனை ஓட்டங்கள் முடிந்த பிறகு 2028ல் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இந்த செய்தியால் அணுஉலை கொதிநிலையை விட பங்குச் சந்தை கொதிநிலை பன்மடங்கு உயர்ந்தது. இவ்விரண்டு பங்குகளும் மேலே மேலே உயர்ந்து. இந்நிறுவனம் வேறு யாரும் அல்ல இதற்கு முன் அணு உலையை இயக்கிய Exelon Energy ல் இருந்து பிரிந்து வந்த தனித்துவமான நிறுவனம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் 2040- க்குள் தங்களின் அணைத்து அலுவலகங்களும் மற்றும் தகவல் சேமிப்பு (Data Center and office buildings) நிலையங்களும் கரியமில புகை வெளியேற்றாமல் (Carbon Neutral) இருக்கும் கட்டமைப்பை ஏற்படுத்தும் முனைப்புடன் இயங்குகிறார்கள்.
தற்போது அமெரிக்காவின் மின்தேவையில் 20% மட்டுமே அணுஉலை மின்சாரம் நிறைவேற்றுகிறது. மீதமுள்ள மின்சாரம் நீர்மின் நிலையங்கள் மற்றும் புதைபடிவ எரிபொருள் மூலமே கிடைக்கின்றது.
செயற்கை நுண்ணறிவின் மின்சாரத் தேவை;
2024 ஆம் ஆண்டை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்ப உலகத்திற்கு அது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆண்டு என்று கூறினால் அது மிகையாகாது. மாபெரும் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள், வன்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவின் ஆய்வுகள், வடிவமைப்பு, அதன் எதிர்காலம் குறித்து தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தார்கள். மற்றொரு புறம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
வணிக நிறுவனங்கள், ஹாலிவுட் உட்பட எப்படி எல்லாம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி திறனை மேம்படுத்தலாம் என்று களத்தில் இறங்கினார்கள்.
சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதியில் பெட்டி கடை வைத்திருக்கும் இடம் தொடங்கி ஒரு கோப்பை தேநீர் கையுடன் துண்டு பீடி அடிக்கும் ஆள் வரை AI பற்றி பேசினார்கள் என்றால் அது அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே பெருமை சேர்க்கும்.
மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், டெஸ்லா, மெட்டா, ஆரக்கிள், போன்ற பெரிய நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே செயற்கை நுண்ணறிவு பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள் என்று கூறலாம். இன்னும் ஒரு படி மேலே சென்று இப்படி கூறலாம் 2024 அமெரிக்க பங்குச்சந்தை முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவை மையம் கொண்டே எப்போதும் இல்லாத "All time High" எனும் புயலை உருவாக்கியது. AI செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லாடல் பல்வேறு பங்குகளை அதன் உச்சத்திற்கு எடுத்துச் சென்றது.
AI - ஐ இயக்கும் இயங்குதளம் அதன் இயந்திரம் கற்றல் வழிமுறைகள் (Machine Learning) கணித சமன்பாடுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கணினி நுண்செயலி சில்லுகள் (Computer Chips) சிக்கலான சமன்பாடுகளை உயரிய வேகத்தில் தீர்வு ஏற்படுத்தி உடனடியாக விடை பெற்று கொடுக்கும் வேலைகள், மிகப்பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models) AI சில்லுகளுக்கு உள்ளே நிகழ்ந்தது கொண்டிருக்கும். வழக்கமான கணிணியில் உள்ள CPU (Central processing Units) AI வழங்கும் (Algorithm) படிமுறைக்கு உகந்ததாக இல்லை.
ஒரு AI Chip ஆனது பல்வேறு உட்பெட்டகங்களை கொண்டதாக வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும். அடிப்படையில் இது ஒரு குறைக்கடத்தி (Semiconductor) ஆகும். அதற்குள் எண்ணற்ற நுணிணிய அளவில் வடிவமைக்கப்பட்ட Transistor -கள் கீழே கண்டவளை உள்ளடக்கிய ஒரு கையடக்க பெட்டகம்.
An AI Chip includes - Graphics Processing Units (GPUs), Field Programmable Gate Arrays (FPGA), Application Specific Integrated Circuits ASIC, Neural Processing Units (NPU),
செயற்கை நுண்ணறிவு சில்லுகள் நான்கு விதத்தில் வழக்கமான கணினி சில்லுகள் உடன் வேறுபடுகிறது, முறையே வேகம், உயரிய திறன் வெளிபாடு, நெகிழ்வான தன்மை, ஆற்றல் வாய்ந்த முடிவுகளை எட்டுவது.
இதற்கு வழக்கத்தை விட மின்சாரத்தின் தேவை பன்மடங்கு அதிகமாக தேவைப்படுகிறது. அதோடு AI சில்லுகள் வெளியிடும் வெப்பத்தை தணிக்க குளிரூட்டியின் பயன்பாட்டிற்கு மின்சார தேவை உயர்வாக உள்ளது.
சிறிய அளவிலான நகரும் அணுமின் நிலையங்கள்; (Advanced Small Modular Reactors SMRs)
மைக்ரோசாப்ட் நிறுவனம் அணுமின் ஆற்றலை தங்களின் எதிர்கால செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தேவைகளுக்கு TMI அணுமின் நிலையத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆனவுடன் அடுத்தடுத்து மாதங்கள் கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் தங்களின் எதிர்கால மின்சார தேவை திட்டங்கள் பற்றி அறிவித்தார்கள்.
2030 ஆம் ஆண்டுக்குள் கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனங்களின் அனைத்து செயல்பாடுகளையும் Net Zero emission என்ற திட்ட வரைவதற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது. இதற்காக Kairos Power என்ற தனியார் அணுமின் உற்பத்தி நிறுவனத்துடன் அக்டோபர் 15, 2024ல் ஒப்பந்தம் செய்திருந்தது. Kairos Power நிறுவனம் செய்து முடிக்கும் SMRs சிறிய அளவிலான அணுமின் நிலையங்கள் மூலம் கூகுள் நிறுவனம் மட்டும் தனியே மின்சாரம் பெறுவது மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கும் வழங்குவது. இதன் அனைத்து திட்டங்களும் சோதனைகளும் சரியான முறையில் நிகழ்ந்தால் திட்டமிட்டபடி 2035ல் மின்சார உற்பத்தி தொடங்கி விடும்.
SMRs அணுமின் நிலையம் அமெரிக்கா உட்பட உலகில் வேறு எங்கும் தொடங்கப்படவே இல்லை. தற்போது கூட சோதனை முறையில் தான் இருக்கிறது.
பொதுவாகவே அணுமின் நிலையம் என்றாலே அது மிகப் பெரிய கட்டுமானப்பணிகள், குளிரூட்டும் கோபுரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பன்னாட்டு அணுவாற்றல் கழக வழிமுறைகள் என பல்வேறு கட்டங்களில் பல ஆண்டுகளாக நடைபெறும்.
இதிலிருந்து சிறிய அளவிலான SMRs நகரும் அணுமின் நிலையங்கள் மாறுபடுகின்றன. குறைந்த செலவில் மிகவும் சிறிய அளவிலான இடங்களில் மிகவும் பாதுகாப்பானதாக இவ்வகை அணுமின் நிலையம் செயல்படும். சில நூறு kW தொடங்கி பலநூறு kW மின்சாரம் பெறும் வகையில் கிடைக்கப்பெறும்.
இதில் TRISO என்றழைக்கப்படும் TRi-structural ISOtropic particle fuel ஆகும். ஒவ்வொரு துகளும் Uranium, Carbon, Oxygen மூலக்கூறுகள் கொண்டு மூன்றடுக்கு Carbon Layer களால் மூடப்பட்ட ஒரு சிறிய அளவிலான பப்பாளி பழ விதை போல் இருக்கும். அணுஉலையில் இவைகள் உயரிய வெப்பத்தை தாங்கும் வகையில் இருக்கிறது.
SMRs அணுஉலையில் வழக்கமான தண்ணீரை குளிரூட்டியாக பயன்படுத்தாமல் Molten Salt எனப்படும் உப்பு கரைசலை குளிரூட்டியாக பயன்படுத்த படுகிறது.
கூகுள் நிறுவனத்தை போலவே அமேசான் நிறுவனமும் தங்களுக்கான தனியே சிறிய அளவிலான நகரும் அணுமின் நிலையம் அமைக்க Energy Northwest நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
தற்போது செயல்பாட்டில் உள்ள அணு உலைகளின் கட்டுப்பாடுகள் எல்லாம் Analog வடிவில் பெறப்படுகிறது. அதோடு இவைகள் எல்லாம் பழைய வடிவமைப்புகள் கொண்டவை. AI தொழில்நுட்பத்திற்கு எந்தளவுக்கு அணுமின் ஆற்றல் தேவைப்படுகிறதோ அதே அளவுக்கு அணுமின் நிலையங்களுக்கு AI தொழில்நுட்பம் தேவைப்படுகிறது என்றால் அது சரியாக இருக்கும்.
Source: US department of energy, and https://kairospower.com/technology/
News Courtesy: https://www.npr.org/2024/12/09/nx-s1-5171063/artificial-intelligence-wants-to-go-nuclear-will-it-work
- பாண்டி
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
நுகர்வோரை அவர்களின் இயல்பான வாழ்வில் இருந்து திசை திருப்புகின்றன என்று நவீன ஆண்டிராய்டு மொபைல் போன்கள் மீது அடிக்கடி குற்றம் சொல்லப்படுகிறது. ஆனால் இத்தொழில்நுட்பம் நம்மை இயற்கை உலகுடன் இணைக்கும் வலிமையான கருவியாக உள்ளது. செயலிகள் உயிரினங்களை அடையாளம் காண, தாவரங்களை ஆவணப்படுத்த, பறவை அழைப்புகளைக் கண்டுபிடிக்க, காட்டில் சிங்கம், புலி, யானைகளின் நடமாட்டத்தைத் தெரிந்து வனக்காட்சிகளை அறிய, ஆராய உதவுகின்றன.
விரல் நுனியில் நம் மொபைல் போன் இருக்கும்போது உலகின் எந்த மூலையில் இருக்கும் ஆழ்கடல் உயிரினத்தை, அமேசான் காட்டில் பறந்து திரியும் ஒரு அபூர்வ பறவையின் குரலைக் கேட்க, ஆஸ்திரேலியாவில் ஏதோ ஒரு தீவில் இருக்கும் ஒரு தனிமரத்தை அறிய நமக்கு உதவுகிறது. இப்போது ஒரு மொபைல் போனின் உதவியுடன் இதெல்லாம் சாத்தியமே. மர்மமான உயிரினத்தை அறிவது முதல் மெல்லிய குரலில் பாடும் ஒரு பறவையின் பாடலை ரசிக்கலாம்.
நாம் காணும் மதிப்புமிக்க தகவல்கள், உலகில் வாழும் உயிரினங்கள் பற்றி நாம் வழங்கும் விவரங்கள் அறிவியல் ஆய்வுகளுக்கு, சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பெரிதும் உதவும். பொதுவாக போன்கள் அவற்றை பயன்படுத்துவோரின் இயல் சூழலைப் பாதிக்கிறது என்று கருதப்படுகிறது. ஆனால் இத்தொழில்நுட்பம் ஒருவரை இயற்கையுடன் இணைக்கவும் உதவுகிறது. இதோ சில எடுத்துக்காட்டுகள்.சீக் (Seek)
தங்களைச் சுற்றியுள்ள பல்வேறு வகை தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகளைத் தெரிந்து கொள்ள விரும்பும் குழந்தைகளுக்கு இந்த செயலி ஒரு வரப்பிரசாதம். போனின் மூலம் போட்டோ எடுக்கலாம். செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உயிரினங்களை அடையாளம் காண, வகைப்படுத்த உதவுகிறது, சில முக்கிய தகவல்களையும் தருகிறது. நாம் வாழும் பகுதியைப் பொறுத்து இந்த செயலி எந்தெந்த உயிரினங்களைப் பார்க்க முடியும் என்று ஆலோசனை வழங்குகிறது. இத்தகவல்கள் ஆண்டு முழுவதும் நமக்குக் கிடைக்கும்.
இதன் மூலம் மண்ணில் வாழும் மக்கிகள் (decomposers), நகர வாழ் உயிரினங்கள், குளத்தில் வாழும் உயிரினங்கள், மகரந்த சேர்க்கை செய்யும் உயிரினங்களை அறியலாம். வளர்ந்த குழந்தைகளுக்கு, வளர்ந்தவர்களுக்கு ஐ நேச்சுரலிஸ்ட் (iNaturalist) என்ற செயலி உதவுகிறது. உள்ளூர் பகுதி இயற்கையை அறிய இது துணைசெய்கிறது.
சிர்ப்போமேடிக் செயலி (ChirpOMatic)
அதிகாலைப் பறவைகளின் கோரஸ் பாடல்களைக் கேட்கும்போது அவை பற்றி அறிய நமக்கு ஆர்வம் ஏற்படும். அல்லது இரண்டு பறவைகளின் குரல்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை, வேற்றுமையையும் நாம் இச்செயலியின் உதவியால் அறிய முடியும். இதைப் பயன்படுத்தி பாடல்களைக் கேட்டால் எல்லா விவரங்களும் நமக்குக் கிடைக்கும். ஐ போன்களில் இந்த செயலியைப் பயன்படுத்தி பறவைகளைப் பற்றிய தகவல்களை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது.
காதுக்கு அருகில் போனை வைத்து போனில் வரும் ஓர் அழைப்பைப் போல செயலியைக் கேட்டால் அந்த சத்தம் பறவைகளை, அவற்றின் கூட்டில் உள்ள குஞ்சுகளைப் பாதிக்காது. இந்த ஒலிகளை மீண்டும் கேட்கும்போது ஏதேனும் குழப்பம் இருந்தால் அவை தீர்ந்துவிடும். விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட இந்த செயலி மிக எளிமையானது. இதில் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஆஸ்திரேலிய பறவை அழைப்புகள் உள்ளன.
விலங்குகளின் இருப்பிடம் அறிய உதவும் செயலி (Animal Tracker)
நிகழ்நேரத்தில் வன விலங்குகளின் நடமாட்டத்தை அறிய இது பயன்படுகிறது. இதன் உதவியுடன் இங்கிலாந்தில் உள்ள கடற்கரை விலங்குகள் முதல் நமீபிய காடுகளில் வலசை செல்லும் சிங்கங்கள் வரை தெரிந்து கொள்ளலாம். காணும் ஒவ்வொரு காட்சியும் ஆய்வு தரவு ஆய்வு வங்கியில் (movie bank research data base) சேகரிக்கப்பட்டிருக்கும். இதில் இருவழி தொடர்புக்கு உதவும் இலவச இணைய வழி வரைபட கருவி ஒன்று உள்ளது. இச்செயலி ஜெர்மனி மேக்ஸ் ப்ளாங்க் ஆய்வுக்கழக (Max Planck Institute) விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்லது.
சூழலியலாளர்கள், வன அலுவலர்கள், மக்கள் அறிவியலாளர்களுக்கு (People scientists) இத்தகவல்கள் பயன்படுகின்றன.
இ ஃபேர்ட் (eBird)
பறவை உற்றுநோக்கலில் தீவிர ஆர்வமுடையவர்களுக்கு உதவும் செயலி இது. இது 27 மொழிகளில் கிடைக்கிறது. நம் சுற்றுப்புறங்கள், காடுகளில் காணப்படும் பறவைகள் பற்றிய விவரங்களை ஆண்டுதோறும் புதுப்பித்து இதன் மூலம் நாம் அறியலாம். பன்னாட்டு மற்றும் உள்ளூர் இனப் பறவைகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். சுற்றுப்புறத்தில் இருக்கும் பன்மயத்தன்மை செழுமை மிகுந்த இடங்களை இதன் மூலம் நாம் இடம் விட்டு இடம் செல்லும்போதும் பெறலாம். அரிய பறவை தென்பட்டால் அது பற்றிய உடனடியான நிகழ்நேர அறிவிப்புகளை இந்த செயலி வழங்குகிறது.
லீஃப் ஸ்னாஃப் (LeafSnap)
வழக்கத்திற்கு மாறாக இருக்கும் தாவரங்களை அறிய இச்செயலி பயன்படுகிறது. ஒரு சமயத்தில் ஒரே ஒரு தாவரத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தி பயன் பெறலாம். இலை, பூ, பழம் அல்லது தண்டை க்ளிக் செய்தால் இந்த செயலி தாவரத்தை வகைப்படுத்தி தகவல் தரும்.
பார்க்கும் தாவரத்திற்கு அருகில் இருக்கும் இதே போன்ற மற்ற தாவரங்களைப் பற்றியும் தகவல் தரும். ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் ஒப்பிட்டுப் பார்த்து நாம் காணும் தாவரம் எது என்று முடிவு செய்யலாம். ஆரோக்கியமாக தாவரத்தை வளர்ப்பது பற்றிய சிறிய குறிப்புகளை இச்செயலி தருகிறது. செடிக்குத் தண்ணீர் ஊற்ற, உரம் போட இது நமக்கு நினைவூட்டுகிறது.
கடற்புற்களை அடையாளம் காண (Seagrass Spotter)
கடலில் நீந்திக் கொண்டிருக்கும்போது, வெய்யில் காயும்போது நம் காலுக்கு கீழ் இருக்கும் புல்வெளிப் பகுதியில் வளர்ந்திருக்கும் கடற்புற்களை அடையாளம் காண இந்த செயலி பயன்படுகிறது. கடல் நீரில் வாழும் பூக்கும் தாவரங்கள் இவை மட்டுமே. கடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நீருக்கடியில் வாழும் இத்தாவரங்களைப் பாதுகாப்பது முக்கியம்.
உலகில் எந்த இடத்தில் இருக்கும் கடற்புற்கள் நிறைந்த படுகையையும் இச்செயலியைப் பயன்படுத்தி அறியலாம். இந்த செயலி கடற்புற்கள் பாதுகாப்பு திட்டம் (Sea Grass) அமைப்பால் தொடஞ்கப்பட்டது. காணும் கடற்புற்களின் வகை, விவரங்களை இச்செயலியின் உதவியுடன் நாம் அறியலாம். கடல் மாசு, கடற்கழிவுகள் போன்றவற்றால் இத்தாவரங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன.
கடல் சார் விஞ்ஞானிகளால் இவற்றைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்க விநியோகத்தை மேம்படுத்த நம்மால் வழங்கப்படும் புதிய தகவல்கள் உதவும். ஒரு காலத்தில் கடற்புற்கள் அதிகம் காணப்பட்ட பகுதிகளில் இன்று அவை அருகி வருகின்றன. ஆய்வாளர்களுக்கு இது பற்றி நாம் அளிக்கும் விவரங்கள் இவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த பேருதவியாக அமையும்.
வானத்தைக் காண (SkyView Lite)
இரவு வானத்தைப் பார்க்க வீட்டு சாளரத்தின் கதவுகளைத் திறந்து இதைப் பயன்படுத்தலாம். போனில் உள்ள கேமராவை வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிக் காட்டினால் அந்த இடத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், விண்மீன் திரள்களை இச்செயலி காட்டும். நாம் இருக்கும் இடத்திற்கு மேல் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையம் (ISS) எப்போது வரும், தொலைதூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் கோள்கள் எவை என்பதை அறியலாம்.
இந்த செயலியை எப்போதும் இரவில் பயன்படுத்தும் வகையில் (nightmode) வைக்க வேண்டும். இச்செயலி wifi வசதி இல்லாமலேயே செயல்படுகிறது. அதனால் வான் உற்றுநோக்கல் முகாம்களில் பங்கேற்பவர்கள், மிகத் தொலைவில் உள்ள வான் பொருட்களை ஆராய்பவர்களுக்கு இந்தச் செயலி பெரிதும் பயன்படுகிறது.
உலக வனங்களை அறிய (WWF Forests)
உலக வனநிதிய அறக்கட்டளையால் (WorldWide Fund for Nature WWF) இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் முதல் தரமான வன அனுபவங்களைப் பெறலாம். கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போல் காட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இது இயங்குகிறது.
நாம் இருக்கும் அறையில் இருந்தபடியே குறியீடுகளை க்ளிக் செய்தால் வன விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் செயல்கள் பற்றிய தகவல்களுடன் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் காடுகள் பற்றிய விவரங்களைப் பெறலாம். வனப்பயணத்தின்போது மரவாழ் குரங்குகளையும் புலிகள் போன்றவற்றின் நடமாட்டத்தையும் கண்டு ரசிக்கலாம்.
இந்த செயலிகள் பலவும் இலவசமாகவும் சில சிறியதொரு தொகை செலுத்தியும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பகுதியில் இது போன்ற பல செயலிகள் உள்ளன. 'தாவரத்தை படம் வரைந்து அடையாளம் காட்டு' (Picture this plant identifier), தாவரங்களை அடையாளம் காண உதவும் ப்ளாண்ட் ஸ்னாப் (Plant snap) போன்றவை சில எடுத்துக்காட்டுகள். இவற்றை அறிந்து இயற்கையைப் பாதுகாத்து அதனுடன் இணைந்து வாழ்வோம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
நன்னீர் ஈல் (Eel) மீன்கள் அளவிற்கு அதிகமாகப் பிடிக்கப்படுவதால் அழிந்து வரும் நிலையில் செல் திசு வளர்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதல்முறையாக செயற்கை மீன் இறைச்சி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மீன்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வரும் நிலையில் இவற்றின் விலை அதிகரிக்கிறது. இனி இந்த கவலைகள் ஈல் மீனை வழக்கமாக உண்பவர்களுக்கு இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வகத்தில் மீன் இறைச்சி
இஸ்ரேலின் ஃபோர்சீ உணவுகள் (Forsea Foods) என்ற நிறுவனத்தால் இந்த ஈல் இறைச்சி நன்னீர் ஈல் மீனில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஜப்பானின் சமையற்கலை வல்லுநர் ஒருவருடன் ஒன்றிணைந்து அரிசியுடன் சேர்த்து சமைக்கும்போது பலவகை நறுமணப் பொருட்களுடன் வெவ்வேறு பருவ காலங்களில் வினிகர் அல்லது வைன் மற்றும் எண்ணெயுடன் கலந்து உருவாக்கும் marinated grilled eel over rice என்ற உணவு வகையையும், பச்சை மீனுடன் கடற்செடியை கலந்து உருவாக்கும் அரிசி உணவையும் தயாரித்துள்ளது.
இவை ஜப்பானிய மொழியில் முறையே அனாகி கபயாக்கி (unagi kabayaki) மற்றும் அனாகி நிஜீரி (unagi nigiri) அல்லது சூஷி (Sushi) என்று அழைக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த நிறுவனம் தன் செயல்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. திசு வளர்ப்பு இறைச்சியின் உற்பத்திக்கு ஜப்பான் அரசு ஊக்கமளிக்கிறது. ஜப்பானில் உணவகங்களில் இந்த மீன் ஒரு கிலோ 250 டாலர் என்ற விலைக்கு விற்கப்படுகிறது. இதே விலைக்கு ஆய்வக இறைச்சியை விற்க இந்நிறுவனம் முயல்கிறது.
(Marinated grilled eel over rice - Photograph: Anatoly Michaello)
ஒழுங்கற்ற மீன் பிடித்தல் மற்றும் மாசுபடுதலால் உலகம் முழுவதும் இந்த இனம் பரவலாக அழிந்து வருவது இதை வழக்கமாக உண்பவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இவை சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் இப்போது இது பல மில்லியன் டாலர் தொழிலாக மாறிவிட்டது.
“2000ம் ஆண்டு முதல் ஜப்பானில் இந்த மீனின் நுகர்வு 80% குறைந்து விட்டது. ஆனால் இப்போது ஆய்வகத்தில் தயாரிக்கப்படுவதால் நுகர்வோர் உண்பதற்காக இவற்றை அழிக்கிறோம் என்ற குற்ற உணர்வு இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். அதிக விலைக்கு விற்கப்படும் மீன் என்பதால் இதை விநியோகம் செய்ய இன்று எவரும் இல்லை.
இது தனித்துவமான யுமாமி நறுமணம் (umami flavor) , புற அமைப்பு, உண்ணத் தூண்டும் சுவை, தொடுவதன் மூலம் தீர்மானிக்கக்கூடிய தரத்துடன் உள்ளது. யுமாமி நறுமணம் என்பது குளுட்டாமேட் (Glutamate) என்ற வேதிப்பொருள் நாவில் படும்போடு உருவாகும் சுவை. யுமாமி ஜப்பானிய சொல். இச்சுவை ஒரு புதிய சுவையாக அறிவியல் உலகில் ஏற்கப்பட்டுள்ளது. இந்த பொருளை நாவில் உள்ள சுவை மொட்டுகள் உணர்வதால் உருவாகிறது.
இதை 1908ல் கிக்குனே இக்கேடா என்பவர் கடற்களைச்செடி ஒன்றில் இருந்து கண்டுபிடித்தார். இது சீன மொழியில் சியன்வே அல்லது புதுச்சுவை என்றும், ஆங்கிலத்தில் நற்சுவை என்றும் அழைக்கப்படுகிறது. இதை நாவில் உள்ள தனித்தேர்வு சுவை மொட்டுகள் உணர்கின்றன. உவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படை சுவைகள் போல இதுவும் ஒரு சுவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உண்மையான மீனை உண்ணும்போது ஏற்படும் இந்த சுவையை ஆய்வக முறையில் தயாரிக்கப்படும் மீனிலும் உருவாக்க இப்போது உள்ள முன் மாதிரியில் பல மேம்பாட்டு பணிகள் செய்யப்படும்” என்று ஃபோர்சீ நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலர் ரோ நெர் (Roee Nir) கூறுகிறார்.
"இந்த மீன் மிகச்சுவையானது. ஜப்பானில் மிக பிரபலமானது. ஆனால் உணவிற்காக வேட்டையாடி இதை அழிப்பதை விட பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்று அதிகமாக உள்ளது” என்று டோக்கியோ செடோ (Saido) என்ற சைவ உணவகத்தின் உரிமையாளரும் சமையற்கலை நிபுணருமான கட்ஸூமி குஸுமோட்டோ (Katsumi Kusumoto) கூறுகிறார்.
அழிவில் இருந்து உயிரினங்களைக் காக்க
இது போல அழியும் ஆபத்தில் இருக்கும், உணவகங்களில் மிக அதிக விலைக்கு விற்கப்படும் உயிரினங்களை ஆய்வக முறையில் உற்பத்தி செய்ய ஃபோர்சீ திட்டமிட்டுள்ளது. இந்த மீன்களின் வாழ்க்கைச் சுழற்சி சிக்கலானது. ஆறுகளில் இருந்து கடலிற்குச் செல்லும் இவற்றின் வலசை காலம் நீண்டது. இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி பல தனித்துவமான மாற்றங்களைக் கொண்டது. இதனால் மற்ற மீன்கள் போல இவற்றை பண்ணைகளில் செயற்கையாக பெரும் எண்ணிக்கையில் வளர்க்க முடியாது.
இந்த மீனிறைச்சி மருத்துவ ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்ட உடல் உறுப்பின் ஒரு சிறிய பதிப்பாகக் கருதப்படும் உறுப்புப் போலிகள் எனப்படும் மிகச்சிறிய திசுக்கற்றைகளை (Organoids) பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. ஈல் மீனின் கருவுற்ற முட்டைகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கற்றைகள் கரு குருத்தணு செல்களால் ஆனது. இவற்றை எந்த வகை திசுவாகவும் வளர்க்கலாம். வளரும்போது இவை தாமாகவே ஈல் மீனின் இறைச்சியாக மாறி விடுகின்றன.
கடைசியில் உண்டாகும் விளைபொருளில் சில தாவர அடிப்படை பொருட்களும் கொண்டது. திசு வளர்ப்பு தொழில்நுட்பத்தில் இறைச்சியை உற்பத்தி செய்யும் மற்ற முறைகளுக்கு செலவுமிக்க வேதிமுறை வளர்ச்சிப் பொருட்களும், செல்கள் வளர சாரக்கட்டு (Scaffolds) போன்ற கட்டமைப்புகளும் தேவைப்படுகின்றன. இத்தொழில்நுட்பம் மீன்கள், கடல் உணவுகளைத் தயாரிக்கப் பொருத்தமானது.
இந்த ஆய்வக மீனிறைச்சி தசை நார் இடை கொழுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாட்டிறைச்சியை (marbled beef) போல இல்லாமல் சீராக இருக்கும். மற்ற இறைச்சிகள் போல இல்லாமல் இந்த இறைச்சி பாக்டீரியா எதிர் பொருட்களையும், ஹார்மோன்களையும் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஃபோர்சீ நிறுவனம் மட்டுமே ஆய்வக இறைச்சியை உற்பத்தி செய்கிறது.
இந்நிறுவனம் இந்த ஆய்வுகளுக்காக 5.2 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. “இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூழலிற்கு நட்புடைய விதத்தில் விலங்குகளின் இறைச்சியை ஆய்வகத்தில் உருவாக்கலாம். கடல்சார் சூழலை அழியாமல் பாதுகாக்கலாம். மிதமிஞ்சிய மீன் பிடித்தலால் இது சிறந்த தீர்வு. மக்கள் விரும்பும் உள்ளூர் சுவையில் ஆரோக்கியமான உணவுகளைத் தயாரிக்கலாம்” என்று திங்க் டேங்க் நல்லுணவு அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு நிபுணர் செரன் கெல் (Seren Kell) கூறுகிறார்.
சூழலைப் பாதுகாக்க உதவும் ஆய்வக இறைச்சி
இந்த அமைப்பின் ஆதரவுடன் ஃபோர்சீ நிறுவனம் இந்த ஆய்வுகளை 2021 முதல் 2023 வரை நடத்தியது. அமெரிக்காவின் வைல்டு டைப் (Wildtype) என்ற நிறுவனம் சால்மன் (salmon), நீல டூனா (BlueNalu tuna) ஆகிய கடல்வாழ் மீன்களில் இருந்து இறைச்சியைத் தயாரிக்கிறது. இஸ்ரேலின் ஸ்டேக்ஹோல்டர் உணவுகள் (Steakholder Foods) நிறுவனம் திசுவளர்ப்பு குரூப்பர் (grouper) மீன்களை ஆய்வக முறையில் உற்பத்தி செய்கிறது.
சிங்கப்பூரில் உள்ள ஷியாக் மீட்ஸ் (Shiok Meats) நிறுவனம் இரால், (shrimp), லாஃப்ஸ்ட்டர் (lobster) மற்றும் நண்டுகலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. செல்4 உணவு (Cell4Food) என்ற மற்றொரு நிறுவனம் நீராளிகளை செயற்கை முறையில் வளர்க்கிறது. உலகில் முதல்முறையாக ஆரோக்கிய ரீதியில் ஆய்வக உணவுகளை உற்பத்தி செய்ய இஸ்ரேலில் உள்ள அலெஃப் பண்ணை (Aleph Farms) அனுமதி பெற்றுள்ளது.
திசு வளர்ப்பு முறையில் கோழிகளை உருவாக்க அமெரிக்காவின் குட் மீட் (Good Meat) மற்றும் Upside foods நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளன. சிங்கப்பூர் குட் மீட் நிறுவனமே 2020 முதல் பொதுமக்களுக்கு ஆய்வக கோழி இறைச்சியை தயாரித்து வழங்கி வரும் உலகின் முதல் நிறுவனமாக செயல்படுகிறது. கால்நடைகளைக் கொன்று தயாரிக்கப்படும் இறைச்சியால் ஏற்படும் சூழல் தாக்கத்தை விட குறைவான தாக்கமே ஆய்வக இறைச்சி தயாரிப்பில் உண்டாகிறது.
பூமியில் ஒவ்வொரு மனிதனும் ஏற்படுத்தும் சூழல் தாக்கத்தைக் குறைக்க வழக்கமான முறையில் தயாரிக்கப்படும் இறைச்சியையும் பால் பொருட்களையும் தவிர்ப்பதே மிகச் சிறந்த ஒரே வழி என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அண்டார்டிகாவில் விமானி இல்லாமல் பறக்கும் விமானங்கள் அறிவியல் ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ட்ரேசர் அல்ட்ரா ட்ரோன்கள் (Windracer Ultra UAV) என்று பெயரிடப்பட்டுள்ள விமானங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இவை கடல்சார் சூழல் மண்டலங்களையும் பனிப்பாறைகளையும் ஆராயும். இப்பரிசோதனைகளை நடத்த விஞ்ஞானிகள் அடங்கிய ஆய்வுக்குழு அண்டார்டிகாவில் இருக்கும் ராதர (Rothera) என்ற மிகப் பெரிய பிரிட்டிஷ் ஆய்வு நிலையத்திற்கு சென்றுள்ளது.
கார்பன் உமிழ்வைக் குறைக்கும் விமானங்கள்
ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துவதால் 90% கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க முடியும். இந்த விமானம் இரட்டை என்ஜின்களைக் கொண்டது. பத்து மீட்டர் அளவுள்ள இது நூறு கிலோகிராம் வரை சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் பெற்றது. விமானத்தை தரையில் இருந்து மேலெழுப்ப அல்லது இறக்க தானியங்கி விமானி வசதி (auto pilot facility) உள்ளது. இதனால் விமானி இல்லாமலேயே விமானத்தைப் பறக்க வைக்க அல்லது தரையிறக்க முடியும்.இதில் பொருத்தப்பட்டுள்ள உணரிகளைப் பயன்படுத்தி ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை தகவல்களைத் திரட்ட முடியும். விமானியுடன் உள்ள இரட்டை என்ஜின்கள் பொருத்தப்பட்ட விமானங்கள் அதிக செலவு பிடிக்கக் கூடியது. அவை அதிதீவிர காலநிலையில் அண்டார்டிகா போன்ற பனிப்பிரதேசத்தில் பல சவால்களை எதிர்கொள்கின்றன.
ஆளில்லாத விமானங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான பறத்தல் நேரமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை தென் துருவத்தில் உள்ள கண்டத்திட்டுகள், கடலும் வளிமண்டலமும் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பது பற்றி ஆராயும்.
இதற்காக இவற்றில் செயற்கை நுண்ணறிவுத் திரள் (Swarm) தொழில்நுட்ப வசதி உள்ளது. இதைப் பயன்படுத்தி பல்நோக்கு ஆளில்லா விமானங்கள் ஒருங்கிணைந்து தானியங்கி முறையில் செயல்படும். இதன் மூலம் பெரும்பரப்பில் ஆய்வுகளை நடத்த முடியும். இங்கிலாந்து துருவ ஆய்வுக்கழகத்தின் கீழ் செயல்படும் பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்பின் (BAS) இயற்கை சூழல் கவுன்சில் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு அறிவியல் ஆய்வுகள் அனைத்தையும் தானியங்கி முறையில் மாற்றுவதன் மூலம் 2040ல் கார்பன் உமிழ்வை சுழிநிலைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
தடைகளைத் தாண்டி பறக்கும் விமானம்
“தொழில்நுட்ப ரீதியிலான இத்தகைய முன்னேற்றங்கள் வரவேற்கத்தக்கது. அண்டார்டிகாவில் பனிப்பாறைகளில் நிகழும் மாற்றங்கள், இது உலக மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள துருவப்பகுதி அறிவியல் ஆய்வுகள் புதிய உயர் தொழில்நுட்ப தரவு சேகரிப்பு வசதிகளைப் பெற வேண்டும். இவ்வகையில் இது முதல் முயற்சி” என்று வளிமண்டலத் தரவுகளை ஆராயும் பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்பின் புவியியல் நிபுணர் டாக்டர் டாம் ஜோர்டன் (Dr Tom Jordan) கூறுகிறார்.
என்ஜின்களில் ஒன்று அல்லது உதிரி பாகங்கள் பழுதுபட்டால் குறைந்த எண்ணிக்கையில் மாற்று உதிரிப் பொருட்களை பயன்படுத்தி பழுது நீக்கம் செய்து தொடர்ந்து பறக்கும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிதியுதவி புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வருங்கால பறத்தலுக்கான சவால் (Innovate UK’s Future Flight 3 Challenge) என்ற அரசுத்துறை சாராத பொது அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு இத்திட்டம் உட்பட பிற பதினாறு ஆய்வுத் திட்டங்களுக்காக 73 மில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்கியுள்ளது. மனிதனின் குறுக்கீடுகளால் சூழல் மண்டலங்கள் பேரழிவை சந்தித்து வரும் நிலையில் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் ஆளில்லாத இந்த விமானங்கள் அண்டார்டிகாவின் மோசமாகி வரும் பனிப்பாறைகளையும் அங்கு வாழும் எண்ணற்ற உயிரினங்களையும் காக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- குளிரூட்டும் ஆடைகள்
- வானில் வலம் வரப் போகும் சூப்பர்சானிக் விமானம்
- மரணத்திற்குப் பிறகும் சூழல் பாதுகாப்பு
- சீன சிப் தொழிற்துறையின் வேகம்: அமெரிக்கா சமாளிக்குமா?
- காடுகளைக் காக்க லைடார் தொழில்நுட்பம்
- பீங்கான் தொழில்நுட்பம்
- ஆகாயத்தின் கண்களும் அறிவின் தேடலும்
- சமூக வலைத்தளங்களில் 2FA (Two - Factor Authentication) பாதுகாப்பா? வணிகமா?
- தேடல் இயந்திரத்தின் செயற்கை நுண்ணறிவு
- மெட்டாவெர்ஸ் - இணையத்தின் எதிர்கால வடிவம்
- உங்கள் வீட்டிலும் ஒரு சூரிய மின் நிலையம்
- மரபணு மாற்றம் (CRISPR-Cas9) தொழில்நுட்பம் - 2020 வேதியியல் நோபல் பரிசு
- போயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன?
- பிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி
- புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்
- ஏன் லினக்ஸ்-க்கு மாற வேண்டும்?
- Facial Recognition தொழில்நுட்பமும் அதன் சர்ச்சைகளும்
- ஆன்லைன் தேர்வுகளை கண்காணிக்கும் Proctoring எனும் செயற்கை நுண்ணறிவு
- 'ZoomBombing' எனும் இணையதள வெறித்தனம்
- தகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்