அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
விஞ்ஞானிகள் பழ ஈக்களில் ஆண் உயிரினங்கள் இல்லாமலேயே, கன்னி இனப்பெருக்க முறையில் (Parthenogenesis) புதிய உயிரினங்களை உருவாக்கிக் காட்டியுள்ளனர். மரபணு முறையில் கையாளப்பட்ட பெண் ஈக்கள், ஆண் துணையின்றித் தங்கள் வாரிசுகளை உருவாக்கியுள்ளன. ஆண் துணையில்லாமல் குழந்தை பிறப்புப் பற்றிய இந்த ஆய்வு பைபிள் கதை போலத் தோன்றினாலும், ஆண் உயிரினங்கள் இல்லாத சூழ்நிலையில், கன்னிப் பெண் பழ ஈக்கள் தூண்டப்பட்டுப் புதிய வாரிசுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விஞ்ஞானிகள், ஒரு குறிப்பிட்ட பழ ஈ இனத்தில் ஆண் ஈக்களின் இனப்பெருக்கச் செல்களின் (Sperm cells) துணையில்லாமல் பெண் ஈக்கள் மட்டுமே முட்டையைக் கருவுறச் செய்து குஞ்சுகளை உருவாக்கும் மரபணுவைக் கண்டுபிடித்தனர். வழக்கமாக ஆண்-பெண் பாலினப் பெருக்க முறையில் இனப்பெருக்கம் செய்யும் மற்றொரு ஈ இனத்தில், இந்த மரபணுவைச் செலுத்திப் புதிய தலைமுறையைக் கன்னி முறையில் உருவாக்கினர்.
பின்னர், அந்த மரபணுவை மீண்டும் மாற்றியமைத்து, முன்பு போலவே பாலினப் பெருக்க முறையிலேயே அந்த உயிரினத்தில் இனப்பெருக்கம் நடைபெறவும் செய்துள்ளனர்.
"கன்னி ஈ உருவாக்கிய கரு வளர்ந்து, உரிய பருவம் அடைந்து, மீண்டும் வெற்றிகரமாக இனப்பெருக்கத்தைத் தொடர்ந்தது பரவசமூட்டும் ஒரு கண்டுபிடிப்பு" என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளரும், இந்த ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆசிரியருமான டாக்டர் அலெக்சிஸ் ஸ்பெர்லிங் (Dr. Alexis Sperling) கூறுகிறார்.
'கரண்ட் பயாலஜி' (Current Biology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையில், கடந்த ஆறு ஆண்டுகளாக 2,20,00,000 (இரண்டு கோடியே இருபது லட்சம்) ஈக்களில் நடத்தப்பட்ட ஆய்வின் விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. 'டிரோசோபிலா மெர்கடோரம்' (Drosophila mercatorum) என்ற ஈ இனத்தின் கன்னி முறை இனப்பெருக்கத் திறன் (Parthenogenesis) பற்றி முதலில் ஆராயப்பட்டது.
இதன் மரபணு வரிசைப்படுத்தப்பட்டு, அதில் கன்னி இனப்பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கும் மரபணு அடையாளம் காணப்பட்டது. இதற்கு இணையான மரபணுவை, 'டிரோசோபிலா மெலனோகாஸ்டர்' (Drosophila melanogaster) என்ற மற்றொரு பழ ஈ இனத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்து அதனைச் செயல்பட வைத்தனர்.
கன்னி முறை இனப்பெருக்கத்திற்குப் பதிலாக, இவற்றில் பாலினப் பெருக்கம் நடக்கும்போது, மரபணு முறையில் மாற்றப்பட்ட பெண் ஈக்கள் ஆண் ஈக்களுடன் இணை சேர 40 நாட்கள் வரை காத்திருக்கின்றன. கன்னி முறை மூலம் பிறந்து, மரபணு முறையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய தலைமுறை பெண் ஈக்கள், பிற்காலத்தில் ஆண்களுடன் இணை சேர்ந்தோ அல்லது மீண்டும் கன்னி முறையிலோ புதிய வாரிசுகளை உருவாக்கின.
துணையில்லாமல் தவிக்கும் பெண் உயிரினங்கள்
இணை சேரப் போதுமான ஆண் உயிரினங்கள் இல்லாமல் தவிக்கும் பெண் உயிரினங்கள், தங்கள் இனத்தை நிலைநிறுத்திக் கொள்ள இந்த முறை பெரிதும் பயன்படும். ஆனால், இம்முறையில் பிறக்கும் உயிரினங்களுக்குச் சூழல் அழுத்தங்களைச் சமாளித்து வாழும் திறன் குறைவாகவே இருக்கும். பூச்சிக் கட்டுப்பாட்டிற்காகத் தொடர்ந்து இதே முறையில் அவை இனப்பெருக்கம் செய்யப்பட்டால், நாளடைவில் அவற்றின் இயற்கையான பாலினப் பெருக்க முறை மறைந்து, அந்த இனமே அழிந்துபோகும் ஆபத்தும் உள்ளது.
மேலும், இம்முறையில் பெண் உயிரினங்கள் பெண் உயிரினங்களையே உருவாக்கும் என்பதால், வேளாண்மையில் இது மிகப்பெரிய பிரச்னையாக மாறும். இதனால் பெண் பூச்சிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகப் பெருகும். பழ ஈக்களில் கன்னி முறை பிறப்பை ஏற்படுத்தப் புதிய வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்றாலும், இதே முறையைப் பாலூட்டிகளில் (Mammals) பயன்படுத்த முடியாது.
கன்னி முறைப் பிறப்பு பல்லி, தேனீக்கள் போன்ற சில வகை உயிரினங்களில் இயற்கையாகக் காணப்படுகிறது என்றாலும், பாலூட்டிகளின் இனப்பெருக்கத்திற்குத் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவழிக் கூட்டு மரபணுக்களும் தேவை. ஆனால், கன்னி முறை இனப்பெருக்கம் நடக்கும் எளிய உயிரினங்களில் தந்தை வழி மரபணுக்கள் இல்லாமலேயே இனப்பெருக்கம் சாத்தியமாகிறது.
பாலூட்டிகள் முற்றிலும் வேறுபட்ட உடலியல் செயல்பாட்டைக் கொண்டவை. பூச்சிகள் போன்ற எளிய உயிரினங்கள், ஆய்வுகளுக்காக நீண்ட காலமாக விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இவற்றின் மரபணு வரிசை விஞ்ஞானிகளால் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவே இந்த ஆய்வின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
"வாழ்க்கையின் அழகைப் புரிந்துகொள்ளவும், பல்வேறு உயிரினங்களில் காணப்படும் வெவ்வேறு இனப்பெருக்க முறைகளைப் பற்றி அறியவும் இந்த ஆய்வு உதவுகிறது. ஆனால், இம்முறை மனிதர்களில் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தப்பட முடியாதது" என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானி டாக்டர் ஹன்னா மாட் (Dr. Hannah Maude) கூறுகிறார்.
நம் உயிர்ப் பன்முகத்தன்மையே நம்மைப் பாதுகாக்கிறது. ஒவ்வொரு மனிதரிடமும் காணப்படும் இரண்டு டி.என்.ஏ (DNA) நகல்கள், தீங்கு விளைவிக்கும் டி.என்.ஏ மாறுபாடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
தாய் மற்றும் தந்தை வழி டி.என்.ஏ-க்களால் திறம்படச் செயல்படும் வகையில் அச்சிடப்பட்டு, பொதிந்து வைக்கப்பட்டுள்ள மரபணுப் பகுதிகளே நமது இனப்பெருக்கத்திற்கு அத்தியாவசியமானவை என்று டாக்டர் ஹன்னா விளக்குகிறார். விலங்குகளின் உலகில் நடைபெறும் இனப்பெருக்க நுட்பங்கள் குறித்து மேலும் பல புதிய தகவல்களை அறிய இந்த ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காட்டு மரங்கள் வெட்டப்படுவதால் வண்ணத்துப்பூச்சிகள் தங்களின் நிறங்களை இழக்கின்றன. பரவலாக, விரிவான வேறுபட்ட வாழிடங்களில் வாழ்வதால், உயிர்ப் பன்மயத் தன்மையின் (biodiversity) நிலையை அறிய வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய ஆய்வு உதவுகிறது. செழுமையான சூழலில் பரிணாம ரீதியாகத் தோன்றிய மில்லியன் கணக்கான நிறங்கள், அவை காடுகளில் வாழ்வதற்கு உதவுகின்றன. இப்போது அவை செழுமையற்ற நிலப்பரப்புகளில் வாழ்வதற்கு ஏற்ப, தங்கள் நிறங்களைச் சத்தமில்லாமல் மாற்றிக் கொள்கின்றன.
நிறங்கள் அற்பமானவை இல்லை
இதனால் உலகம் நிறமற்றதாகிறது. வண்ணத்துப்பூச்சிகளின் பளிச்சிடும், பிரகாசமான இறக்கைகள் ஒரு காலத்தில் அவை ஆரோக்கியமாக வாழ்வதை எடுத்துக்காட்டின. நிறங்கள் இணையைக்கவரவும், எதிரிகளிடம் இருந்து தப்பவும் அவற்றிற்கு உதவின. ஆனால், மனிதர்கள் வளமான மழைக்காடுகளை ஒற்றைப்பயிர் வளர்ப்பு முறைக்கு (monoculture) மாற்றியதால், மற்ற உயிரினங்களின் நிறம் வெளுத்துப் போகிறது.
“சிறகுகளில் உள்ள அவற்றின் வண்ணங்கள் அற்பமானவை அல்ல; அவை பல மில்லியன் ஆண்டு காலமாக வடிவமைக்கப்பட்டவை” என்று வாழிட இழப்பால் இயற்கை உலகம் நிறமிழப்பது பற்றிப் பிரேசிலில் நடக்கும் ஆய்வுத் திட்டத்தின் அங்கமும், ஆய்வாளரும் புகைப்படக் கலைஞருமான ராபர்ட்டோ கார்சியா-ரோவா (Roberto García-Roa) கூறுகிறார். இயற்கைக் காடுகளை விட ஒற்றைப்பயிர்கள் வளர்க்கப்படும் தோட்டங்களில் வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகள் மங்கலாக உள்ளன.
வளமையான ஒரு மழைக்காடு, தகவல் தொடர்பு கொள்ள, இரை பிடிக்க, இனப்பெருக்கம் செய்யக் கண்கவரும் சிவப்பு, ஆழ்ந்த பசுமை அல்லது வெளிறிய பழுப்பு நிறங்களுடன் உள்ள வண்ணத்துப்பூச்சிகளுக்கு உயிர்ப் பன்மயத் தன்மையுடைய வாழிடத்தை அளிக்கிறது. ஆனால் மனிதர்கள் காடுகளை அழித்து யூகலிப்டஸ் போன்ற பயிர்களை வளர்ப்பதால் உயிரினங்களின் தேவைகள் மாற்றமடைகின்றன. ஒற்றைப்பயிர் வளர்ப்புத் தோட்டத்தின் சூழல் பின்புலம் செயலற்றதாக மாறுகிறது.
“ஒரு மழைக்காட்டிற்குள் செல்லும்போது நீங்கள் உயிரோட்டத்துடன் இருப்பதை உணர்வீர்கள். ஒவ்வொன்றும் வனமயமாக இருக்கும்; எதைப் பார்க்கப்போகிறோம் என்பது தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு யூகலிப்டஸ் காட்டிற்குச் சென்றால் அது விரக்தியளிப்பதாக இருக்கும். இயற்கையான ஒரு சூழல் மண்டலத்தில் நிகழ்வது எதுவும் அங்கு நடைபெறாது. அங்கே விலங்குகள் கிடையாது; ஒலிகள் இல்லாமல் அது மௌனமாக இருக்கும். வளர்ச்சியடைந்த ஒரு காடு ஈரப்பதத்துடன் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் ஒரு தோட்டம் வெப்பமாக, வறட்சியுடன், ஒளி வெள்ளத்துடன் காணப்படும்” என்று ராபர்ட்டோ கூறுகிறார். நிறமிழத்தல் பற்றிய விரிவான ஆய்வின் ஆரம்பகட்ட முடிவுகள் இவை. இந்த ஆய்வு, இயற்கை இழப்பு இயற்கை உலகின் நிறங்களை எவ்வாறு மாற்றமடையச் செய்கிறது என்பதை ஆராய்கிறது. வண்ணத்துப்பூச்சிகளே பூமியில் அதிக வண்ணங்களுடன் வாழும் உயிரினங்கள் என்பதால், சூழலைப் பற்றி அறிய அவற்றை ஆராய்வது மிகச் சிறந்தது.
நிறம் என்பது அழகு மட்டுமல்ல
இவை வாழிடப் பரப்புகளில் பல வண்ணங்களைக் காட்டுகின்றன; சூழல் மாற்றங்களுக்கு விரைவாக எதிர்வினை புரிகின்றன. அதனால் இவற்றைக் கண்காணிப்பது சுலபமானது. நிறம் என்பது வெறும் அழகுணர்ச்சி தருவது மட்டுமல்ல; விரிவான சூழல் மண்டலத்தில் முக்கியப் பரிணாம செயல்பாடுகளையும் அவை பெற்றுள்ளன. ஒருகாலத்தில் சூழல் மண்டலங்களுக்கு ஆதரவாக இருந்த வண்ணங்கள், மனிதர்கள் ஏற்படுத்திய மாசுகளால் இப்போது நிசப்தமாகிவிட்டன. பவளப்பாறைகள் நிறமிழக்கின்றன; கடல்கள் பச்சையாகின்றன. மக்கள் அடர்த்தியாக வாழும், மாசுபட்ட இடங்களில் வானவில் கண்ணுக்குப் புலப்படாமல் போகிறது.
ஆய்வுக்குழுவினர் வண்ணத்துப்பூச்சிகளை வலைகளில் பிடித்து, கவனமாக ஆய்வகத்திற்குச் சுவாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பூச்சியியல் உறைகளில் (entomological envelopes) பாதுகாப்பாக எடுத்துச் செல்கின்றனர். “யூகலிப்டஸ் தோட்டங்களில் வண்ணத்துப்பூச்சிகள் பழுப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இயற்கையின் தட்டு, இயற்கைத் தேர்வின் (natural selection) அழுத்தங்களால் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, இருபதாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சியால் பாதிக்கப்பட்ட 'பிஸ்டன் பெட்டுலேரியா' (Biston betularia) என்ற அறிவியல் பெயருடைய நடுத்தர அளவுள்ள மிளகு அந்துப்பூச்சி (peppered moth) ஆகும். இதன் இறக்கைகளில் மிளகு தூவியது போன்ற கருப்புப் புள்ளிகள் காணப்படுகின்றன. இந்த உயிரினம் மரப்பட்டைகளில் உள்ள லைகன்களுடன் (lichen) இணைந்து மறைந்து வாழ்கிறது. விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமியின் ஒளி மங்கலாகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மனிதக் குறுக்கீடுகள் வருங்காலத்தில் தொடர்ந்தால் பேரழிவு ஏற்படும்; இது கவலைக்குரியது” என்று ரியோ கிராண்ட் டு சல் மத்திய பல்கலைக்கழக (Federal University of Rio Grande do Sul) ஆய்வாளர் ரிகார்டோ ஸ்பானியோல் (Ricardo Spaniol) கூறுகிறார்.
இதுவரை யூகலிப்டஸ் தோட்டங்களில் 21 வண்ணத்துப்பூச்சி இனங்களும், மற்ற இடங்களில் 31 வண்ணத்துப்பூச்சி இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரியோ டி ஜெனிரோவிற்கு வடக்கில் உள்ள பிரேசில் எஸ்பிரிட்டோ சான்டோ (Espírito Santo) மாநிலத்தில் உள்ள காடுகள் மற்றும் தோட்டங்களில் இந்த ஆய்வு நடந்தது. “யூகலிப்டஸ் தோட்டங்களில் வாழும் வண்ணத்துப்பூச்சி சமூகங்களில் பெரும்பாலானவை பழுப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இந்தத் தோட்டங்களில் ஒருவித வெறுமை நிலவுகிறது” என்று கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானியும், ஆய்வின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவருமான மேடர் இக்லேசியஸ்-கராஸ்கோ (Maider Iglesias-Carrasco) கூறுகிறார்.
காணாமல் போகும் வண்ணத்துப்பூச்சிகள்
விஞ்ஞானிகள் அமேசான் மழைக்காடுகளில் வண்ணத்துப்பூச்சிகள் நிறம் மாறுவதை 2019இல் முதன்முதலாகக் கண்டுபிடித்தனர். ஸ்பானியோல் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர், வாழும் சூழலுக்கேற்ப வண்ணத்துப்பூச்சிகள் மாறுவதையும், அவற்றின் நிறங்கள் உடனடியாக மாறியதையும் கண்டறிந்தனர்.
“உள்ளூர் தாவரங்களின் இழப்பு, இரைபிடி உயிரினங்களின் அதிகரிப்பு போன்றவற்றால் வன அழிவிற்குப் பிறகு அதிக நிறமுள்ள வண்ணத்துப்பூச்சிகள் காடுகளில் இருந்து முதலில் காணாமல் போயின. இதனால் நிறமிழத்தல் தூண்டப்படுகிறது” என்று ஸ்பானியோல் கூறுகிறார். சூரிய ஒளி குறைவாக உள்ள இடங்களில் இறக்கைகளில் புலப்படும் நிறங்கள், கட்புல நிறமாலை வடிகட்டி (visible-spectrum filter) மற்றும் புற ஊதா-நிறமாலை வடிகட்டி (ultraviolet-spectrum filter) கருவிகளைக் கொண்டு புரிந்துகொள்ளப்படுகின்றன.
உயிர்ப் பன்மயத் தன்மையில் ஏற்படும் வாழிட இழப்பின் பாதிப்பை இந்த ஆய்வு கூறுகிறது. காடுகள் தங்களின் நிறங்களை இழப்பது அச்சம் தருவது. சூழல் மாற்றங்களுக்கு உயிரினங்கள் எதிர்வினை புரிகின்றன. நிறங்களின் பன்மயத்தன்மை குறையும்போது சூழல் செயல்முறைகளின் சிதைவு உணரப்படுகிறது. வண்ணத்துப்பூச்சிகள் விரிவான உயிர்ப் பன்மயத் தன்மையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஏற்படும் மாற்றம் சிக்கலான சூழல் இழப்பைப் பிரதிபலிக்கிறது. இது மற்ற உயிரினங்களையும் பெரிதும் பாதிக்கிறது.
பிரேசிலில் உள்ள சாண்டா லூசியா உயிரியல் சரணாலயம் (Santa Lúcia biological reserve) போன்ற பலதரப்பட்ட நுண் வாழிடங்களால் சூழப்பட்ட இடங்கள், வண்ணத்துப்பூச்சிகள் பல்வேறு சந்ததிகளை உருவாக்க உதவுகின்றன. அமேசான் மழைக்காடுகள் முதல் கலிபோர்னியா, ஸ்பெயின் வரை உள்ள பகுதிகளில் ஒற்றைப்பயிர் வளர்ப்பு முறை அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக மரக்கூழ், மரம் மற்றும் கழிப்பறை காகிதம் (toilet paper) போன்றவற்றை உற்பத்தி செய்ய உதவும் யூகலிப்டஸ் மரங்கள், 22 மில்லியன் ஹெக்டேர் (54 மில்லியன் ஏக்கர்) பரப்பளவில் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டுள்ளன. இவ்வகைத் தோட்டங்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரி பாதிப்பை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. “காபி மற்றும் வாழைத் தோட்டங்கள் எப்பொழுதும் பசுமையாகக் காட்சி தருபவை. இதனால் மக்கள் பசுமையை இயற்கையுடன் தொடர்புபடுத்திக் காண்கின்றனர். ஆனால் அவை இயற்கையானவை அல்ல” என்று ராபர்ட்டோ கூறுகிறார்.
மீட்பிற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன
“உள்ளூர் வாழிடங்களைப் பாதுகாக்க, மேலும் காடுகள் அழிவதைத் தடுக்க எதுவும் செய்யப்படவில்லையென்றால், ஒரு சிலவற்றைத் தவிர சூழலின் சிறப்புமிக்க உயிரினங்களான பல வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் காணாமல் போய்விடும். நிறங்கள் இல்லாமல் போவது இயற்கையின் அழகிற்கு மட்டும் ஏற்படும் இழப்பில்லை. மாறாக, சூழலில் வண்ணங்களைச் சமிஞ்ஞைகளாகப் (signals) பயன்படுத்தித் தகவல் தொடர்பு கொள்ளும் வண்ணத்துப்பூச்சிகள் போன்ற உயிரினங்களின் இழப்பையும் இது குறிக்கிறது. இந்தப்பாதிப்பு தவிர்க்க முடியாதது” என்று ஸ்பானியோல் கூறுகிறார்.
என்றாலும், கடந்த முப்பது ஆண்டுகளாக மேய்ச்சலுக்காக அழிக்கப்பட்ட அமேசான் பகுதிகளை மீட்கும் முயற்சிகளை ஆய்வுக்குழுவினர் மேற்கொண்டபோது, அங்குப் பல நிறங்களுடைய வண்ணத்துப்பூச்சிகள் மீண்டும் வர ஆரம்பித்தன. மீட்பிற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சாண்டா லூசியா உயிரியல் சரணாலயத்தில் உதிர்ந்த ஒரு இலையின் தோற்றம், ஒரு வண்ணத்துப்பூச்சியின் உடைந்துபோன இறகை நினைவுபடுத்துவதாக இருந்தது. ஒருவேளை காணாமல் போய்க்கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு அமேசான் மழைக்காடு அமைதியாக அஞ்சலி செலுத்துகிறதோ!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
புவிக் கோளின் சூழல் மண்டலங்களுக்கு சத்தமில்லாமல் சேவை செய்துவரும் நிலத்தடி பூஞ்சைகள் அரசியல்வாதிகளால் உடனே காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளன. பூமிக்கடியில் வாழும் பூஞ்சை வலையமைப்புகளை பாதுகாக்கும் சங்கத்தை (Society for the Protection of Underground Networks (Spun)) சேர்ந்த விஞ்ஞானிகள் வேர்ப் பூஞ்சைகளின் சூழல் மண்டலங்களின் உயிர்ப் பன்முகத்தன்மை வரைபடத்தை முதல்முறையாக உயர் தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ளனர்.
இருட்டில் வாழ்ந்தாலும்…
இது பற்றிய ஆய்வுக் கட்டுரை நேச்சர் (Nature) என்ற இதழில் வெளிவந்துள்ளது. வேர்ப் பூஞ்சைகள் (Mycorrhizal fungi) செழுமையாக உள்ள 90% பகுதிகளும் பாதுகாக்கப்படாத இடங்களிலேயே வாழ்கின்றன. இச்சூழல் மண்டலங்களின் இழப்பு கார்பன் ஓட்டம், பயிர் உற்பத்தி மற்றும் அதி தீவிர காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் சூழல் மண்டலங்களின் திறனைக் குறைக்கும்.
“வேர்ப் பூஞ்சைகள் இருட்டில் வாழ்ந்தாலும் நிலப் பகுதியில் நீடித்த வாழ்விற்கு அசாதாரணமான சேவைகளை செய்துவருகின்றன. அவை சத்துக்களின் சுழற்சி மற்றும் கார்பன் சேமிப்புக்கு உதவுகின்றன. தாவரங்களின் ஆரோக்கியத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றன. மண்ணின் மிக முக்கிய சூழல் மண்டலப் பொறியியலாளர்களாக உள்ளன. இவை இல்லாவிட்டால் காடுகளின் மீள் உருவாக்கம் மெதுவாக நடைபெறும். பயிர்கள் விளையாது.
நிலப் பரப்பிற்கு மேல் இருக்கும் உயிர்ப் பன்முகத் தன்மை 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தாவரங்கள் எதுவும் இல்லை என்ற தகவலைக் கூறுகிறது. ஆனால் இந்த வேர்ப் பூஞ்சைகளின் வலையமைப்புகளால் மட்டுமே தாவரங்கள் புவிக் கோளை காலனித்துவப்படுத்தின. மனித வாழ்விற்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தன. ஆரோக்கியமான பூஞ்சைகளின் வலையமைப்புகள் இருந்தால் மகத்தான வேளாண் உற்பத்தியையும் பெரிய, அழகழகான மலர்களையும் நாம் பெறலாம். தாவரங்களை நோய்க் கிருமிகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என்று ஸ்பன் அமைப்பின் செயல் அலுவல் இயக்குனர் டாக்டர் டோபி கியர்ஸ் (Dr Toby Kiers) கூறுகிறார்.
தாவர வேர்களில் காணப்படும் இந்தப் பூஞ்சைகள் பூமியின் காலநிலை மற்றும் சூழல் மண்டலங்களை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
இந்த நிலத்தடி வலையமைப்புகள் தாவரங்களுக்கு அவசியமான சத்துக்களை தருகின்றன. ஆண்டுதோறும் 13 பில்லியன் டன்களுக்கும் கூடுதலான கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி மண்ணிற்கு அளிக்கின்றன. இது உலகளவில் புதைபடிவ எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் சுமார் மூன்றில் ஒரு பங்கு உமிழ்விற்கு சமமானது.
ஸ்பன் அமைப்பு வேர்ப் பூஞ்சைகள் பாதுகாப்பு திட்டத்தை உலகளவிலான பூஞ்சை (GlobalFungi), பூஞ்சை அறக்கட்டளை (Fungi Foundation) மற்றும் உலக மண் நுண் உயிர்ம கூட்டமைப்பு (the Global Soil Mycobiome consortium) உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து மிகக் குறைவாக ஆராயப்பட்டுள்ள வேர்ப் பூஞ்சை வலையமைப்புகளின் வரைபடத்தை உருவாக்கும் பணிகளை 2021-ல் தொடங்கியது.
வேர்ப் பூஞ்சைகளின் வரைபடம்
இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 130 நாடுகளின் மாதிரிகளைக் கொண்ட 2.8 பில்லியனுக்கும் மேற்பட்ட பூஞ்சைகளின் வரிசைகள் அடங்கிய தரவுத்தளம் உருவாக்கப்பட்டது. ஒன்றுக்கு இரண்டு (1km2 scale) என்ற விகிதத்தில் அமைந்த அளவுகோலைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் பூமியின் வேர்ப் பூஞ்சைகளின் உயிர்ப் பன்முகத் தன்மையை கணித்துக் கூறுகின்றனர்.
இவற்றின் உயிர்ப் பன்முகத் தன்மை செழுமையாக உள்ள 9.5% இடங்கள் மட்டுமே தற்போது நடைமுறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு மட்டுமே இவை வாழ்கின்றன என்பது இந்த வரைபடத்தின் மூலம் விஞ்ஞானிகளுக்குத் தெரியவந்தது. இவற்றின் பாதுகாப்பில் உள்ள மிகப் பெரிய இடைவெளியை இது எடுத்துக்காட்டுகிறது. கானாவின் கடலோரப் பகுதிகள் உலகளவில் பூஞ்சைகளுக்கான செழுமை மிகுந்த இடமாகக் கருதப்படுகிறது.
ஆனால் இங்கு கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பு ஆண்டிற்கு 2 மீட்டர் என்ற அளவில் நிகழ்வதால் இந்த முக்கிய உயிர்ப் பன்முகத் தன்மையுள்ள இடம் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். “அறிவியல்பூர்வ செயலியின் பயன்பாட்டுடன் கூடிய பரந்த உலகளவிலான முதல் வரைபட முன்முயற்சியை (global mapping initiative) இந்த ஆய்வு குறிக்கிறது. இது வெறும் அறிவியல் கருவிகளுக்கும் அப்பாற்பட்டது. வருங்கால சூழல் பாதுகாப்பிற்கு இது உதவும்.
சூழல் மண்டல பாதுகாப்பிற்கும் செயல்பாட்டிற்கும் இந்தப் பூஞ்சைகளின் கூட்டு வாழ்க்கை ஏற்படுத்தும் தாக்கத்தை தொடர்ந்து புறக்கணிப்பது பூமியைக் காப்பதில் கை தவறவிட்ட மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். பூஞ்சைகள் மனிதனால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களுக்கு எதிர்மறையாக வினை புரிகின்றன.
இவற்றின் இழப்பை சரிசெய்யாவிட்டால் காலநிலை மாற்றத்தை சமாளிக்க உதவும் உன்னதமான இயற்கைத் தீர்வுகளை நம்மால் உருவாக்க முடியாது” என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் டாக்டர் மைக்கேல் வாண் ந்யுலன்ட் (Dr Michael Van Nuland) கூறுகிறார்.
“நிலப் பகுதியின் தவறான பயன்பாடு இவ்வகைப் பூஞ்சைகள் வளமிழப்பதற்கு ஒரு முக்கியக் காரணம். இவற்றின் பாதுகாப்பில் முன்னுரிமை கொடுக்கப்படாமல் இருப்பது விரக்தியை ஏற்படுத்துகிறது.
வேர்ப் பூஞ்சைகளின் நிலத்தடி அட்லஸ்
இவை விவசாய உற்பத்திக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் அவசியமானவை” என்று கியர்ஸ் கூறுகிறார். “இப்பூஞ்சை சூழல் மண்டலங்கள் பெருவாரியாக சட்டத்திலும் கொள்கைகளிலும் புலப்படுவதில்லை. இதனால் காலநிலை மாற்றம், பூமியின் எல்லா நிலத்தடி சூழல் மண்டலங்களிலும் உயிர்ப் பன்முகத் தன்மையின் இழப்பு ஏற்படுகிறது.
இதை சட்டம் மற்றும் கொள்கை ரீதியாக சமாளித்து வலுப்படுத்த இந்த தரவு மிக முக்கியமானது” என்று நியூயார்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் சட்டத் துறைப் பேராசிரியரும் மனித வாழ்விற்கும் மேலான திட்டத்தின் (the More-Than-Human Life (Moth) programme) இயக்குனருமான சேசார் ரோட்ரிக்ஸ் காரா-விடோ (César Rodríguez-Garavito) கூறுகிறார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய செழுமையிழந்த இடங்களை பாதுகாப்பு குழுக்கள், ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பவர்கள் அடையாளம் காண உதவும் விவரங்களை ஸ்பன் அமைப்பின் நிலத்தடி அட்லஸ் இடைநிலைக் கருவிகள் மூலம் பெறலாம். ஸ்பன் பன்னாட்டு அமைப்பின் 79 நாடுகளைச் சேர்ந்த நாநூற்றிற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 96 நிலத்தடி ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து இந்தப் பணிகளில் ஈடுபட்டனர்.
பூமியில் சென்றடைய மிகக் கடினமான, தனித்து விடப்பட்ட மங்கோலியா, பூட்டான், பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் போன்ற இடங்களில் உள்ள நிலத்தடி சூழல் மண்டலங்களின் மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய ஒத்துழைப்பாளர்களையும் வேர்ப் பூஞ்சைகளின் வரைபடத்தை விரிவாக்க நிதியுதவி அளிக்கும் கொடையாளர்களையும் ஸ்பன் அமைப்பு தேடிவருகிறது. இப்போது உருவாக்கப்பட்டுள்ள வரைபடம் பூமியின் பரப்பில் 0.001% பகுதியை மட்டுமே கொண்டதாக உள்ளது.
“இந்த வரைபடத்தின் விரிவாக்கம் இப்பூஞ்சைகளின் செயல்முறைகளை சிறந்த முறையில் பயன்படுத்த உதவும். இருக்கும் பூஞ்சைகளை அழியாமல் வைத்திருந்து பாதுகாத்தால் உலகின் சில மிகப் பெரிய சவால்களைத் தீர்க்க, உயிர்ப் பன்முகத் தன்மை குறைவை சரிசெய்ய, காலநிலை மாற்றத்தை சமாளிக்க மற்றும் குறையும் உணவு உற்பத்தியை அதிகரிக்க அது உதவும். இது நேரடி பயன்களை மக்களுக்கு தரும்” என்று உலக வன நிதியத்தின் (World Wide Fund for Nature) தலைமை விஞ்ஞானி ரெபெக்கா ஷா (Dr Rebecca Shaw) கூறுகிறார்.
இனி நாம் பூமியில் கால் பதித்து நடக்கும்போது கண்ணுக்குப் புலப்படும் தாவரங்கள், விலங்குகள் போல மண்ணிற்கு அடியிலும் வேர்களில் வாழும் பூஞ்சைகளைப் பற்றி சிறிது சிந்திப்போம்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும் ஒலிபரப்பாளருமான டேவிட் அட்டன்பரோ (David Attenborough) அவர்களின் நூறாவது பிறந்த நாளான மே 8, 2026 அன்று புதியதொரு ஒட்டுண்ணி வகை குளவி குடும்பத்திற்கும், புதிய குளவி இனத்திற்கும் (Tiny parasitic wasp) அவரது பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டது. லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தின் (Natural History Museum) சேகரிப்பில் இருந்து இந்த உயிரினத்தின் மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது.
அட்டன்பரோவின் பெயரில்…
இயற்கை மற்றும் சூழல் பாதுகாப்பிற்காக தன் வாழ்வை அர்ப்பணித்துவரும் அட்டன்பரோவின் பெயர் ஏற்கனவே பல்லிகள், வௌவால்கள், தவளைகள், அந்துப் பூச்சிகள், தட்டைப் புழுக்கள், நத்தைகள், சிலந்திகளின் புதிய இனங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிரான, புரிந்து கொள்ளக் கடினமான ஊசிவால் குளவி வகையைச் சேர்ந்த உயிரினத்தின் நீளம் வெறும் 3.5 மில்லிமீட்டர் மட்டுமே. இதன் பெயரில் உள்ள டவ் (tau) என்ற சொல்லின் பொருள் அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் அடையாளத்தைக் குறிக்கிறது.
இந்த மாதிரி சிலியில் உள்ள வால்டிவியா மாகாணத்தில் (Valdivia province) இருந்து 1983ல் சேகரிக்கப்பட்டது. ஆனால் லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் வகைப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த உயிரினங்களின் சேகரிப்பு இருந்த மேசை டிராயரில் ஆகஸ்ட்டிஜென் டெ கெட்டெலேர் (Augustijn De Ketelaere) என்ற தன்னார்வலரால் இதன் வியப்பூட்டும் குணங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்டது. அதுவரை இது பற்றி எவருக்கும் தெரியாமல் இருந்தது.
புதிதாக விவரிக்கப்பட்ட இந்தப் பூச்சியைப் பற்றிய ஆய்வை இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தின் பூச்சிகள் பிரிவின் முதன்மை மேற்பார்வையாளர் டாக்டர் கவின் பிராடு (Dr Gavin Broad) தலைமையேற்று நடத்தினார். இதன் உடலமைப்பு அதன் மிக நெருக்கமான உறவினரான பூச்சி இனத்தில் இருந்து தனித்துவமாக வேறுபட்டு காணப்பட்டது. அதனால் முன்பு வகைப்படுத்தப்பட்ட வேறெந்த குடும்பத்திலும் இதைத் தர்க்கரீதியாக சேர்க்க முடியவில்லை.
“சிறு வயதில் வகைப்பாட்டியல் பற்றி நான் டேவிட் அட்டன்பரோவின் பூமியில் வாழ்க்கை (Life on Earth) என்ற தொடரில் இருந்தே அறிந்தேன். எதிர்காலத்தில் நான் ஒரு வகைப்பாட்டியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற உள்ளுணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. வியக்கத்தக்க வகையில் என் இலட்சியம் வெற்றி கண்டது. நான் ஒரு வகைப்பாட்டியல் ஆய்வாளராக ஆனேன். இதற்காக அட்டன்பரோவிற்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று பிராடு கூறுகிறார்.
தான் இடும் முட்டைகளை மற்றொரு விலங்கின் உடலில் இடுகின்றன என்பது தவிர இந்த புதிய குளவியின் வாழிடம் அல்லது அதன் வாழ்க்கைச் சுழற்சி பற்றி இன்னும் எதுவும் தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் வாழும் “இதன் தூரத்து உறவினரான ஒரு உயிரினம் சிலந்தியின் முட்டைகளைத் தாக்குகிறது. இது போன்ற குழுவில் உள்ள இனங்கள் இவ்வாறு செய்வது இயல்பானதே என்று கருதப்படுகிறது. ஆனால் இதுவும் தீவிர ஆய்வுகளுக்குப் பிறகே உறுதி செய்யப்பட முடியும்” என்று பிராடு கூறுகிறார்.
இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினம்
“வேறு சில அதிசயிக்கத்தக்க, பிரமிப்பூட்டும் மகத்தான உயிரினங்கள் வாழும் சிலியில் இந்தப் பூச்சியினம் இன்னமும் வாழ்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் இந்த சின்னஞ்சிறிய உயிரினத்தை அங்கு கண்டுபிடிப்பது வைக்கோல் போரில் ஒளிந்திருக்கும் ஊசியைத் தேடுவது போல. புதிரான இந்த குளவிகள் பெரும்பாலானவையும் இன்னமும் விவரிக்கப்படாத உயிரினங்களாகவே உள்ளன.
பிரிட்டனில் கூட நாம் புதிய இனங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் விவரிக்கிறோம். அட்டன்பரோ இந்த உயிரினத்திற்கு தன் பெயர் வைக்கப்பட்டது, குறிப்பாக வகைப்பாட்டியல்ரீதியாக ஒரு இனத்தின் துணைக் குடும்பத்திற்கே தன் பெயர் வைக்கப்பட்டது பற்றி மகிழ்வார் என்று நான் நம்புகிறேன்.
என்றாலும் 1961ல் இந்தோனேஷியா பாப்புவாவில் (Papua) இருந்து சேகரிக்கப்பட்ட எட்சினா (echidna) என்ற பல்லில்லாத, குழி தோண்டி மண்ணிற்கடியில் வாழும் முள் எலி போன்ற ஒரே ஒரு உயிருள்ள விலங்கிற்கு தன் பெயரிடப்பட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி இப்போது அவருக்கு தோன்றியிருக்காது என்று கருதுகிறோம். அழியும் ஆபத்தில் இருக்கும் இந்த உயிரினத்திற்கு 1998ல் சாக்லாஸஸ் அட்டன்பரோயி (Zaglossus attenboroughi) என்று பெயர் வைக்கப்பட்டது. 2023 வரை இந்த நீண்ட அலகுள்ள உயிரினம் புலப்படவில்லை.
அப்போது உயிருடன் இருந்த இந்த விலங்கின் காணொளி முதல்முறையாக பதிவு செய்யப்பட்டது. அட்டன்பரோவிற்கு மிகப் பிடித்தமான கட்டிடங்களில் ஒன்றாக லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம் விளங்குகிறது. இந்த புதிய உயிரினக் குடும்பத்தின் கண்டுபிடிப்பு வரலாற்று சேகரிப்புகளில் இது போன்ற தனித்துவமான உயிரினங்கள் இன்னும் கண்டறியப்படாமல் ஒளிந்திருக்கின்றனவா என்று மேலும் ஆராய மற்ற விஞ்ஞானிகள், வகைப்பாட்டியல் ஆய்வாளர்களுக்கு உதவும்.
புதிதாகக் கண்டறியப்படவிருக்கும் உயிரினங்கள் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து கூறவும் புதிய பெயர்களை வைக்கவும் உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகளுக்கு சேகரிப்புகளை மறு பார்வையிட இது உலகளவில் உள்ளுணர்வூட்டும்.
புதிதாகக் கண்டறியப்படும் இத்தகையவை மிகச் சிறிய உயிரினமாக இருந்தாலும் இவற்றின் கண்டுபிடிப்புகள் ஒன்றுபட்ட நம் புரிதலுக்கும் அதன் மூலம் இயற்கை உலகின் எதிர்காலத்திற்கும் பெரும் பங்காற்றும்” என்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் அறிவியல் தகவல் தொடர்பு மேலாளர் ஜெனிஃபர் புல்லர் (Jennifer Pullar) கூறுகிறார்.
இது பற்றிய கட்டுரை இயற்கை வரலாறு (Journal of Natural History) என்ற இதழில் வெளிவந்துள்ளது. இயற்கை பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்து வாழும் இந்த மகத்தான மனிதரின் பெயர் இந்தப் புதிய குளவிக்கு வைக்கப்பட்டது மிகப் பொருத்தமான அங்கீகாரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- இயற்கையுடன் உறவு அதிகமுள்ள நாடுகளின் பட்டியல்
- சூழலிற்கு நட்புடைய பூச்சிக்கொல்லி
- புல் தின்னும் புலிகள்!
- நம்மைப் போலவே இவர்களும்… அழியாமல் காப்போம்!
- மியாவ்… மியாவ்… பூனைகள் பாவப்பட்ட உயிரினங்கள் இல்லை
- வன உயிரினங்களின் தியேட்டர்
- மெல்ல வளரும் மரங்கள்
- நிறம் மாறும் பூச்சிகளின் இறக்கைகள்
- என்று மாறும் இவற்றின் தலைவிதி?
- கண்டுபிடிக்கப்படும் முன்பே காணாமல் போய்விடுமா?
- வாட் ஈஸ் திஸ்!? திஸ் ஒரு ஈ!
- இரத்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய உயிரினம்
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.