கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இங்கிலாந்தில் தேவாலயங்கள் வௌவால்களுக்கு அடைக்கலம் தரும் இடங்களாக மாறியுள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. வௌவால் காலனிகளால் ஏற்படும் சேதங்களை சரி செய்ய இங்கிலாந்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற தேவாலயங்களுக்கு ஐந்து மில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நுழைவாயில்
வடக்கு நார்ஃபெ (Norfolk) பகுதியில் உள்ள தோர்னம் (Thornham) உட்பட பெரும்பாலான தேவாலயங்களில் திருப்பலி நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் சாயும் வசதியுடைய நீண்ட பெஞ்சுகளை இப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பிபிஸ்ட்ரல் (pipistrelle) வகை வௌவால்கள் தங்கள் வீடாக்கிக் கொண்டுள்ளன. தேவாலயங்களில் சுவர்கள் சேரும் பகுதியில் இருக்கும் மூலை முடுக்குகள், சிறிய விரிசல்கள் இந்த சிறகுள்ள பாலூட்டிகளுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளன.
பிபிஸ்ட்ரெலஸ் பிபிஸ்ட்ரெலஸ் (Pipistrellus pipistrellus) என்ற அறிவியல் பெயருடைய இவற்றின் உடல் பெருவிரல் அளவே உள்ளது. நாள்தோறும் வெதுவெதுப்பான மாலையில் இருள் படரும்போது இவை உத்திரங்களில் இருந்து வெளிவருகின்றன. “இந்த உயிரினங்கள் தேவாலயங்களை விரும்புகின்றன” என்று ஒரு தேவாலயத்தின் வார்டன் ஜானெட் நீடம் (Janet Needham) கூறுகிறார்.“தேவாலயம் வௌவால்களுக்கு பாதுகாப்பான இடமாக உள்ளது. அங்கு இவை முக்கிய உணவான பூச்சிகளை உணவாகப் பெறுகின்றன. எதிரிகளின் பயமின்றி இங்கு வாழ்கின்றன. மழையால் பாதிப்பு இல்லை. தேவாலயங்கள் இருள் நிறைந்தது. இதனால் இவை இங்கு விருப்பத்துடன் வாழ்கின்றன” என்று கிழக்கு ஆங்கிலியா (East Anglia) பகுதிக்கான தேவாலயங்களில் வாழும் வௌவால்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அலுவலர் டயானா ஸ்பென்சர் (Diana Spencer) கூறுகிறார்.
பாலிதீன் உறைகள்
தோர்னம் (Thornham) உட்பட இங்கிலாந்தில் உள்ள எல்லா செயிண்ட் தேவாலயங்களில் நீண்ட பெஞ்சுகளில் விழும் வௌவால்களின் கழிவுகள் பாலிதீன் உறைகளைப் பயன்படுத்தி சேகரித்து அகற்றப்படுகிறது. பழம் பெருமை மிக்க சில தேவாலயங்களில் இவற்றின் கழிவு மற்றும் சிறுநீரால் ஏற்பட்ட குழப்பம் தேவாலயங்களை மூடும் அச்சுறுத்தலை உருவாக்கியது.
கழிவுகள் பெருகின. தேவாலயங்களில் இருந்த இங்கிலாந்து நாட்டின் மறு உருவாக்கம் பற்றிய எட்டாவது ரோமன் காலத்தைச் சேர்ந்த பழமை மிகுந்த ஆவணங்கள் சேதமாகத் தொடங்கின. இந்நிலையில் தேவாலயங்களில் வௌவால்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் (Bats in the Churches scheme) தோற்றுவிக்கப்பட்ட ஐந்து மில்லியன் பவுண்ட் நிதியுதவியிலிருந்து நிதி வழங்கப்பட்டது.
இத்திட்டம் 2019ல் தொடங்கப்பட்டது. நார்ஃபெல்க் பேனின்ஹம் (Banningham) பகுதியில் செயிண்ட் பாடல்ஃப்ஸ் (St Botolph) உள்ளிட்ட தேவாலயங்களில் வௌவால்களால் ஏற்பட்ட குழப்பம் அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட மனித விலங்கு மோதலால் உண்டான சேதத்தை சரிசெய்ய இத்திட்டம் உதவியது. “மக்கள் தேவாலயங்களில் வாழும் இந்த சிறிய உயிரினங்களை வெறுக்கவில்லை. அவற்றால் உருவாகும் குழப்பத்தையே விரும்பவில்லை” என்று ஸ்பென்சர் கூறுகிறார். கோடைகாலம் உச்சத்தில் இருக்கும்போதே இவை இனப்பெருக்கம் செய்கின்றன. அப்போது தேவாலயத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சேவைகளை நடத்துவது கடினமாக இருந்தது.
ஆனால் இப்போது வௌவால் பெட்டிகள், உயரத்தில் வெதுவெதுப்பாக சூடு தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உட்புறக் கூரைகள் போன்றவற்றால் இந்த இறகுள்ள பாலூட்டிகள் தேவாலயத்தின் முதன்மைப் பகுதிக்கு வருவது குறைக்கப்பட்டுள்ளது. வௌவால் பாதுகாப்பு நிதியைப் பயன்படுத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் சுத்தப்படுத்தப்பட்டன.
வௌவால் பாதுகாப்பு அறக்கட்டளை, இங்கிலாந்தின் தேவாலயங்கள் அமைப்பு (The Church of England), இயற்கை இங்கிலாந்து (Natural England), வரலாற்று இங்கிலாது (Historic England) மற்றும் தேவாலய பாதுகாப்பு அறக்கட்டளை (The Churches Conservation Trust) ஆகிய ஐந்து அமைப்புகள் ஒன்றுசேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் இரண்டு தேவாலயங்கள் மூடாமல் பாதுகாக்கப்பட்டன.
ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பழமையான மேற்கூரைகள் இது வரை இத்திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன. தேவாலயங்களில் மகத்தான அரியவகை நீண்ட சாம்பல் நிற காதுகளைக் கொண்ட வௌவால் இனம் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றது. ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே வாழ்வதாகக் கருதப்படும் இவை இப்போது சம்மர்செட் (Somerset) தேவாலயத்தில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விதானங்கள் மற்றும் பாதுகாப்பு உறைகள் சேதப்படாமல் இருக்க வெற்றிட சுத்திகரிப்பு கருவிகள், தூரிகைகள் போன்றவை இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 743 தேவாலயங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் இங்கிலாந்தில் இருக்கும் 18 இன வௌவால்களில் 12 இனங்கள் இந்த இடங்களில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணிக்கை குறைந்ததால் இவை சட்டப்படி பாதுகாக்கப்படுகின்றன. இதனால் இப்போது தேவாலயங்கள் தேசிய அளவில் வௌவால்களின் எண்ணிக்கை, வாழிடம் பற்றிய முக்கிய விவரங்களை தரும் இடங்களாக மாறியுள்ளன.
இதன் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் இந்த உயிரினங்களைப் பற்றி மிக அதிக அளவில் அறிய முடிந்தது என்று ஸ்பென்சர் கூறுகிறார். மத்திய நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தேவாலயங்கள் அதிகம் உள்ள நார்ஃபெல்க்யில் குறிப்பாக தோர்னம் என்ற இடத்தில் சூழலியலாளர், வௌவால் தன்னார்வலர் மற்றும் தேவாலயங்களில் வௌவால்களின் நடவடிக்கைகளை ஆராயும் ஃபில் பார்க்கர் (Phil Parker) வௌவால்களின் எண்ணிக்கையை அறிய வௌவால் பெட்டிகளில் கேமராக்களைப் பொருத்தி ஆராய்ந்தார்.
பல நாட்கள் இவர் தேவாலயங்களில் இரவு முழுவதும் தங்கி ஆய்வுகளை நடத்துவதுண்டு. இங்கு உள்ள தேவாலயங்களில் சப்ரானோ பிபிஸ்ட்ரெல் (soprano pipistrel), long-eareds, பொது பிபிஸ்ட்ரெல் (common pipistrelles) மற்றும் செரட்டின்கள் (serotines) என்னும் நான்கு வகை வௌவால்கள் காணப்படுகின்றன. வளர்ச்சியடைந்தவை மேற்கூரைக்கு அருகில் உயரமாகப் பறக்கும்போது இளம் வௌவால்கள் பெஞ்சுகளின் மீது தாழ்வாகப் பறக்கும்.
புரிந்து கொண்டால் இந்த அற்புத உயிரினங்கள் நம் அருகில் வந்து அமர்ந்து நம்மைப் பார்க்கும். அருகாமையில் இவற்றைப் பார்ப்பதே இயற்கை நமக்கு அளிக்கும் மிகப் பெரிய மரியாதை. ஒரு காலத்தில் பாழடைந்த இடங்களில் மட்டுமே வாழ்ந்து வந்த இவை இன்று வாழிட அழிவு, வெப்ப உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் மனித நடமாட்டம் அதிகமுடைய ஆலயங்கள் போன்ற இடங்களில் குடியேறி வாழத் தொடங்கி விட்டன.
சூழல் சமநிலையில் முக்கியப்பங்கு வகிக்கும் இவற்றை பாதுகாக்க இங்கிலாந்து தேவாலயங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகள் உயிரினப் பாதுகாப்பில் உலகிற்கு ஒரு முன் மாதிரி.
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சிரிக்க வைத்தும் சந்தோஷப்படுத்தியும் காண்பவர்களின் மனம் கவர்பவை கொலையாளித் திமிங்கலங்கள். இவை ஓர்க்கா (Orca) என்றும் அழைக்கப்படுகின்றன. 21ம் நூற்றாண்டு முதலே காட்சிப் பொருட்களாகவும், மற்ற அவசியங்களுக்காகவும் மனிதன் இவற்றை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினான்.
1970களில் உலகெங்கும் பெரும் எண்ணிக்கையில் இவை வேட்டையாடப்பட்டன. பிடிக்கப்பட்டவற்றில் பல திமிங்கலங்கள் காட்சிப்பொருளாக செயற்கை நீர்நிலைகளில் விடப்பட்டன. இவை அதிபுத்திசாலிகள் என்பதால் இவற்றை பயிற்சி கொடுத்து காட்சிப்படுத்துவது எளிது.
கிஸ்காவில் இருந்து ஆரம்பம்
கிஸ்கா என்ற புகழ்பெற்ற கொலையாளித் திமிங்கலம் விடுவிக்கப்படுவதற்கு முன்பே மரணமடைந்தது. லலீடா ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய திமிங்கலங்களில் ஒன்று. அக்டோபர் 1979ல் அட்லாண்டிக் கடற்பகுதியில் ஐஸ்லாந்திற்கு அருகில் கிஸ்கா (Kiska) என்ற பெண் திமிங்கலம் அதன் மூன்றாவது வயதில் பிடிக்கப்பட்டது. உலகில் தனிமையில் வாடிய முதல் திமிங்கலம் என்று வர்ணிக்கப்படும் இது, கனடா நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் இருக்கும் மெரைன் லேண்ட் (Marine land) என்ற கடல்வாழ் உயிரினங்களின் காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் அங்கு இது தனிமையில் வாழ்ந்தது. அப்போது அடைக்கப்பட்ட கண்ணாடிக் கூண்டில் இடித்து தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இதன் படங்கள் உலகம் முழுவதும் உள்ள சூழல் ஆர்வலர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இது மார்ச் 9, 2023ல் பாக்டீரியா தொற்றினால் மரணமடைந்தது.லலீடா (Lolita) என்ற பெண் திமிங்கலம் உலகில் ஐம்பதாண்டுகளுக்கும் மேல் பிடிக்கப்பட்டநிலையில் வாழும் திமிங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இது 1970ல் பசுபிக் கடலில் ப்யூகிட் சவுண்ட் (Puget Sound) என்ற இடத்திற்கு அருகில் பிடிக்கப்பட்டது. 57 வயதான இதை விடுதலை செய்வது பற்றிய செய்திகள் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது 52 ஆண்டுகள் ப்ளோரிடா கடல் காட்சிக்கூடத்தில் காட்சிப் பொருளாக வாழ்கிறது. இதன் ஆரோக்கியம் பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்ததால் இதை விடுதலை செய்ய காட்சிக்கூட நிர்வாகிகள் முடிவு செய்தனர். பயிற்சி கொடுத்து பராமரிக்கப்படும் உலகின் மிக வயதான கொலையாளித் திமிங்கலம் இதுவே. விடுவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு இதன் உடல் நலத்தைக் கண்காணிக்க வாஷிங்டனுக்கும் கனடாவிற்கும் இடையில் இருக்கும் ஒரு கடல் சரணாலயத்தில் தங்க வைக்க திட்டமிடப்பட்டது. 1966ல் பிறந்த லலீடா ஆண்டுக்கணக்கில் காட்சிக் கூடத்தில் ஊழியர்கள் கொடுக்கும் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தது. இதனால் சரணாலயத்தில் வைத்து திமிங்கல நிபுணர்களால் இதற்கு இரை பிடிக்கக் கற்றுத் தரப்பட்டது. புதிய சூழ்நிலையில் தன்னை இது தகவமைத்துக் கொள்ளும்வரை இதன் நடவடிக்கைகளை நிபுணர்கள் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
லலீடாவின் தாய் என்று கருதப்படும் ஓஷன் சன் (Ocean sun) என்ற 90 வயதிற்கும் மேலான திமிங்கலம் தன் கூட்டத்துடன் இப்போதும் கடலில் சுதந்திரமாக வாழ்கிறது என்று நம்பப்படுகிறது. விடுதலை செய்யப்பட்ட லலிடா தாயைச் சந்திக்கும் முன்பே உடல் நலக் குறைவினால் மரணமடைந்தது.
ஜானி டெப் (Johnny Depp), லின்சி லோஹன் (Lindsay Lohan), ஹாரிசன் ஃபோர்டு (Harrison Ford), எல்ட்டன் ஜான் (Elton John), ஜூலியா லெவி (Julia-Levy) போன்ற பல பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் இத்திமிங்கலத்தின் விடுதலைக்காக எர்த் லேண்ட் என்ற அமைப்புடன் இணைந்து போராடினர். ஆனால் சுயநலம் மிக்க சிலரின் மனிதத் தன்மையற்ற செயல்களால் இது போல கைதியாக்கப்படும் பல திமிங்கலங்களும் மனிதச் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பே உயிரை விடுகின்றன.
கொலையாளித் திமிங்கலங்கள் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இவை டால்பின் இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள். சிறிய கூட்டங்களாக வாழ்கின்றன. ஆண் திமிங்கலங்களின் உடல் எடை 9,800 கிலோ வரை இருக்கும். பெண் திமிங்கலங்களின் உடல் எடை ஆணை விடக் குறைவாக இருக்கும். கண்ணாடியைப் பார்த்து தங்களை அடையாளம் கண்டுபிடிக்கும் அபூர்வ ஆற்றல் உடைய ஒரு சில உயிரினங்களில் இவையும் ஒன்று.
கண்ணாடிக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு காட்சிப்பொருட்களாக வாழும் இவற்றின் விடுதலைக்காக சூழல் போராளிகள் நீண்ட காலம் போராடி வருகின்றனர். நூறாண்டுகளுக்கு முன்பு 1860களில் கூண்டில் அடைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவது தொடங்கியது. இந்த வகையில் இரண்டு பெலூகா (beluga) திமிங்கலங்களே முதலில் லாஃப்ரடோர் கடற்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு நியூயார்க் காட்சிக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இவற்றை சர்க்கஸ் கம்பெனி முதலாளி டி டி பேர்னம் வாங்கினார். 1870களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏராளமான பெலுகா திமிங்கலங்கள், டால்பின்கள் போன்றவை சர்க்கஸ் காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் சில மட்டுமே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தன.
ஜூலை 1865ல் நியூயார்க்கிற்கு வந்த இரண்டு பெலுகா திமிங்கலங்கள் காட்சிக்கு நடுவில் இறந்தன. 1930களில் பயிற்றுவிக்கப்பட்ட டால்பின்கள் காட்சிப்பொருட்களாக புகழ் பெறத் தொடங்கின. அப்போது முதல் பாட்டில் மூக்கு (bottle nose) திமிங்கலங்கள் காட்சிப் பொருட்களாயின. கூண்டுகளில் அடைக்கப்படும் இவை சில சமயங்களில் தாக்குதல் குணத்தையும் வெளிப்படுத்துவது உண்டு.
கடல்நீர் மாசு, வேட்டைக்காரர்கள் போன்றவற்றில் இருந்து காட்சிக்கூடங்களில் செயற்கை நீர்நிலைகளில் இவை பாதுகாப்புடன் வாழ முடியும் என்றாலும், இது இவற்றிற்கு மனிதன் வழங்கும் தூக்குத் தண்டணையாகவே கருதப்படுகிறது. இன்று கோடிக்கணக்கில் பணம் ஈட்டித் தரும் ஒரு தொழிலாகவே இது போன்ற செயற்கை நீர்நிலைகளில் கடல்வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவது நடக்கிறது.
எதிர்ப்புக் குரல்கள்
1970களின் பாதியுடன் கூண்டுகளில் அடைத்து இந்த உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவதை எதிர்த்து கடும் விமரிசனங்கள் எழுந்தன. தொடர்ந்து 1972ல் கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. வாஷிங்டன் கொலையாளித் திமிங்கலங்களைப் பிடிப்பதை தடை செய்த முதல் மாகாணமாக மாறியது. 1976ல் இது நடைமுறைக்கு வந்தது.
ஆனால் உலகளவில் இவற்றை சிறைப்படுத்தி செயற்கை நீர்நிலைகளில் காட்சிப்படுத்துவது இன்றும் பல நாடுகளில் தொடர்கிறது. 1940களில் கடல்வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவது பிரபலமாக இருந்தது. இந்த உயிரினங்களின் வாழிடச் சூழலை செயற்கையாக உருவாக்குவது சுலபமானதில்லை என்று விமரிசகர்கள் கூறுகின்றனர். பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தும்போது இவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய ஓர் ஆய்வு சில உண்மைகளைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.
டால்பின் மற்றும் திமிங்கலங்கள் ஒவ்வொரு நாளும் 40 முதல் 100 மைல் வரை பயணம் செய்பவை. செயற்கையாக உருவாக்கப்படும் நீர்நிலைகளில் இதில் ஒரு சதவிகிதம் கூட பயணிக்கும் வசதி இவற்றிற்கு இருப்பதில்லை. மன இறுக்கம், அழுத்தம் போன்ற உளவியல்ரீதியான பிரச்சனைகளை இவை எதிர்கொள்கின்றன.
பாட்டில் மூக்கு டால்பின்கள் செயற்கை நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்படும்போது உயிரிழக்க 6% அதிக வாய்ப்பு உள்ளது. பயிற்றுவிக்கப்பட்ட கொலையாளித் திமிங்கலங்கள் உலகெங்கும் பெருமளவில் உயிரிழக்கின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 2015ல் 39 காட்சிக்கூடங்கள் இருந்தன. இவை 2019ல் 76 ஆக அதிகரித்துள்ளன.
இதுவரை உள்ள புள்ளிவிவரங்கள்படி உலகம் எங்கும் 174 காட்சிப்பொருட்களாக இருந்த கொலையாளித் திமிங்கலங்கள் மரணமடைந்துள்ளன. அமெரிக்காவில் இருக்கும் கடல் உலகம் (Sea World) காட்சிக்கூடத்தில் மட்டும் பயிற்சி பெற்ற 18 கொலையாளித் திமிங்கலங்கள் சிறைபட்டு வாழ்கின்றன.
கொலையாளித் திமிங்கலங்கள் என்று அழைக்கப்பட்டாலும் இவை இதுவரை மனிதர்களைத் தாக்கியதாக செய்திகள் இல்லை. பிரம்மாண்டமான கிரேட் வொயிட் சுறாக்களை (Great white shark) உணவாக உட்கொள்ளும் ஒரே ஒரு உயிரின வகை இவை. இவை நீலத் திமிங்கலங்களை தாக்குவதுண்டு. 14 கொலையாளித் திமிங்கலங்கள் கூட்டமாக சேர்ந்து நீலத் திமிங்கலத்தைத் தாக்கிய செய்திகள் உண்டு.
பெங்குவின்கள், சீல்கள், மற்ற திமிங்கலங்களை உணவாக இவை உட்கொள்கின்றன. சமூக விலங்குகளான இவை கூட்டமாகச் சேர்ந்தே எதிரியைத் தாக்குகின்றன. இவை பெரிய திமிங்கலங்களை வேட்டையாடுவதால் கொலையாளித் திமிங்கலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை டால்பின் குடும்பத்தில் பிரம்மாண்ட உடல் அமைப்பு உடையவை. உடலின் நிறம் கறுப்பும் வெள்ளையும் கலந்து காணப்படும். கருவுற்று 17 மாதங்களுக்குப் பிறகே இவை பிரசவிக்கின்றன. ஒரு பிரசவத்தில் ஒரு குட்டியை ஈணுகின்றன.
இரண்டு ஆண்டுகள் வரை குட்டிகள் தாய் தந்தை பராமரிப்பில் வாழ்கின்றன. கடலில் 100 முதல் 500 அடி ஆழம் வரை நீந்தும் திறன் பெற்றவை. ஆனால் கூண்டில் அடைக்கப்பட்ட இவற்றிற்கு இத்தகைய சுதந்திரம் இல்லை. இவற்றின் நீளம் 23 முதல் 32 அடி வரை இருக்கும். சராசரி ஆயுட்காலம் 50 முதல் 80 ஆண்டுகள்.
பல திரைப்படங்களில் இவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன. 2013ல் வெளிவந்த ப்ளாக் ஃபிஷ் (Black fish) என்ற திரைப்படம் ஆர்லாண்டோ கடல் உலகம் (Sea World) காட்சிக்கூடத்தில் இரண்டு பயிற்சியாளர்களைக் கொன்ற 36 வயதில் மரணம் அடைந்த உலகின் மிகப் புகழ்பெற்ற திமிங்கலம் என்று வர்ணிக்கப்படும் டிலிகம் (Tilikum) என்ற கொலையாளித் திமிங்கலத்தின் கதையைச் சொல்கிறது. 1993ல் வெளிவந்த ஃப்ரீ வில்லி (Free villy) என்ற திரைப்படம் கேக்கோ (Keiko) என்ற திமிங்கலத்தின் கதையைச் சொல்கிறது. ஒன்பது வயது சிறுவன் ஒருவன் கொலையாளித் திமிங்கலத்தின் மீது காட்டும் பாசத்தால் அதை தப்பிக்க வைப்பது பற்றிய கதை இது. 1993ல் இந்தத் திரைப்படம் வெளிவந்தது.
கிரேட் வொயிட் சுறாக்களை கதாநாயகர்களாக கொண்டு ஸ்டீபன்ஸ் ஸ்பில்பெர்க் போன்றோர் எடுத்த மூன்று திரைப்படங்களின் தொடரான 'ஜாஸ்'. உலகம் எங்கும் பிரபலமாக திரையிடப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள். இவை சமூக விலங்குகள் என்பதால் கூட்டத்தை விட்டுப் பிரிந்தால் தனிமையை அனுபவிக்க நேரிடுகிறது.
சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) வகைப்பாட்டின்படி இவை அதிக ஆபத்தை எதிர்கொள்ளாத உயிரினங்களின் (Least concerned LC) பட்டியலில் உள்ளன. ஆண் திமிங்கலங்கள் 10 மீட்டர் வரை நீளம் உடையவை. பெண் திமிங்கலங்களின் நீளம் 8.5 மீட்டர். கிரீன்லாந்து போன்ற நாடுகளில் இவை இப்போதும் வேட்டையாடப்படுகின்றன.
அச்சுறுத்தல்கள்
உலகம் முழுவதும் இப்போது 50,000 கொலையாளித் திமிங்கலங்கள் உள்ளன என்று கருதப்படுகிறது. மீன் பிடி வலைகளில் சிக்கிக் கொள்வது, உணவுப் பற்றாக்குறை, கடல் மாசு, மிதமிஞ்சிய கப்பல் போக்குவரத்து போன்றவை இவை இன்று சந்திக்கும் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனைகளில் சில.
இயற்கை சமநிலையை காக்க உதவும் இந்த அதிசய உயிரினங்கள் அழிந்தால் கடல் சூழலில் பெரும் பாதிப்புகள் ஏற்படும். நாளை அது மனித நலத்திற்கே ஆபத்தாக முடியும் என்று அஞ்சப்படுகிறது.
மேற்கோள்கள்
&
https://killerwhales.fandom.com/wiki/Kiska
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நெருங்கிச் செல்லச் செல்ல இயற்கை நம்மை அற்புதப்படுத்தும். இயற்கையின் படைப்பில் வாழும் ஏராளமான உயிரினங்களில் தவளைகளும் ஒன்று. பூமியில் அழிவை சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலில் ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினங்களே முன்னணியில் உள்ளன. 41% ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினங்கள் இன அழிவின் விளிம்பில் வாழ்கின்றன. கேரளாவின் பல பகுதிகளில் 190 ஊர்வன வகை விலங்குகள் வாழ்கின்றன. மழைக்காலம் வந்துவிட்டால் தொடர்ச்சியாக இடைவெளி விடாமல் பாட்டு பாடும் தவளைகள் இதில் ஒன்று.
இவற்றில் மிக மோசமான இன அழிவை மலபார் தவளையினம் (Anaimalai Flying Frog/ False Malabar Gliding Frog) எதிர்கொள்கின்றன. இந்த சின்னஞ்சிறிய உயிரினங்களைக் காக்க கேரளா இடுக்கி மூணாறில் வாழும் ஹேட்லி ரஞ்சித் (Hadlee Renjith) என்பவர் ஒரு குளத்தையே உருவாக்கியிருக்கிறார். இப்போது இதில் இந்தத் தவளையைத் தவிர பூமியில் இருந்தே அழியும் ஆபத்தில் இருந்த 6 தவளையினங்கள் வாழ்கின்றன. இவற்றின் இரை தேடல், இணை சேர்தல், இனப்பெருக்கம் இங்கு நடக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் தவளையினங்கள் அதிகம் வாழும் செழுமையான பகுதி.
ஐம்பதிற்கும் மேற்பட்ட புதிய தவளையினங்கள் மூணாறில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல இனங்களும் பூமியில் இங்கு மட்டுமே காணப்படுபவை. 2000ம் ஆண்டில்தான் ரஞ்சித் இயற்கையை அறிந்தார். ஊரில் வேலையில்லாமல் இருந்தபோது சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிய ஒரு நிறுவனம் அவரை அழைத்தது. வெறுமனே போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சென்றார். இயற்கையை, மூணாறைப் பற்றி அப்போது அவருக்கு எதுவும் தெரியாது.வருகை தந்தவர்களில் பெரும்பாலோனோரும் வெளிநாட்டவரே. ஆரம்பத்தில் தகவல்களை கூகுளில் இருந்து எடுத்தே ரஞ்சித் இடங்கள் பற்றிய விவரங்களைக் கூறி வந்தார்.
அப்போதும் அவருக்கு அதிக காலம் அந்த வேலையில் இருப்போம் என்ற நம்பிக்கை இல்லை. இதற்கு இடையில் ஏராளமான ஆய்வாளர்கள் மூணாறுக்கு வருகை புரிந்தனர். இவர்களில் பலர் சொல்லி ரஞ்சித் தவளைகளைப் பற்றி புரிந்து கொண்டார். பறவைகள், பாலூட்டிகள் பற்றித் தெரியும் என்றாலும் தவளைகள் பற்றி எதுவும் தெரியாது. வழிகாட்டிகளில் இருந்தும் விவரங்களைச் சேகரித்தார். சிறிய உயிரினங்களைப் பற்றிய அறிவும் தவளைகள் பற்றிய ஆர்வமும் இதனால் ஏற்பட்டது.
தவளையினங்களும் மூணாறும்
மூணாறில் மிக மோசமான இன அழிவை சந்திக்கும் 15 தவளையினங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. பாம்புகள், புழுக்களும் இங்கு அதிகமாக வாழ்கின்றன. இங்கு ஏலத்தோட்டத்திற்கு நடுவில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படாத 60 ஏக்கர் பரப்பில் விண்ட்மயர் எஸ்டேட்டுக்குள் தவளைகளுக்கான இரண்டு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு தவளைகளின் எண்ணிக்கை அதிகம்.
வழிகாட்டியாக பணி புரியும்போது ரஞ்சித் முதல்முறையாக மலபார் தவளையைப் பார்த்தார். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த குளத்தில் நீர்வரத்து குறைந்தபோது அங்கு வாழ்ந்த தவளைகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இதன் பிறகு தவளைகளுக்காக தனியாக ஒரு குளம் உருவாக்க ரஞ்சித் திட்டமிட்டார். முதல் குளத்திற்கு தவளைகள் வரத் தொடங்கின. இதைத் தொடர்ந்து அடுத்த குளத்தையும் இவர் வெட்டினார். தார்ப்பாலின் விரிப்பைப் பயன்படுத்தியே இந்த இரு குளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
பறக்கும் தவளை
பறக்கும் திறன் உடையவை என்பதால் இவை பறக்கும் தவளைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பச்சை நிறத்தில் இருக்கும் இதன் உடலின் மேற்பகுதியில் சிறிய கறுப்புநிறக் கோடுகள் காணப்படுகின்றன. மற்ற இனத் தவளைகளுடன் ஒப்பிடும்போது இவை அளவில் பெரியவை. இவற்றில் பெண் தவளைகள் 7 முதல் 8 செண்டிமீட்டர் நீளமுடையவை. இவை இணைசேரும் இயல்பு சுவாரசியம் நிறைந்தது. நீண்டது. மாலை ஆறு மணிக்குப் பிறகு பெரும்பாலான ஆண் தவளைகளும் பெண் தவளைகளை கவர்வதற்காகப் பாடத் தொடங்கி விடும்.
பெண் தவளைகள் இலைகளிலேயே பெரும்பாலும் முட்டையிடுகின்றன. முட்டையிட வசதியாக பெரிய இலைகள் கிடைக்கவில்லை என்றால் சிறிய இலைகளை பரப்பி வைத்து பெரிதாக்கி அதன் மீது முட்டையிடுகின்றன. பெண் தவளை ஒரு திரவத்தை சுரந்து அதன் மீது தன் காலை வைத்து பரப்பியபிறகு அதில் முட்டையிடுகிறது.
முட்டைக்குப் பாதுகாப்பு
சுமார் இரண்டு மணிநேரம் பெண் தவளையின் உடலைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆண் தவளை பிறகு பிடியை விட்டுவிட்டு நகர்ந்து செல்கிறது. பெண் தவளை இலையில் முட்டையிட்டு வேறு இலைகளை எடுத்து அதை மறைத்து வைக்கிறது. மெல்ல இதை மூடி ஒரு புனல் போலாக்குகிறது. ஆறேழு மணிநேரம் இந்த இரண்டு இலைகளும் நன்றாக ஒட்டியிருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு பெண் தவளை அந்த இடத்தை விட்டு செல்கிறது.
தலைப்பிரட்டையாக இருக்கும்போது இதன் தலை ஒரு கடுகின் அளவே உள்ளது. இதனுடன் வெள்ளை நிறத்தில் ஒரு வால்பகுதியும் உருவாகிறது. இது இலைக்கூட்டில் இருந்து விடுபட்டு மெதுவாக நீரில் விழுகிறது. ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து குளத்தில் இருக்கும் இவை வெளியில் வருகின்றன. முதலில் பின்னங்கால்களும் பிறகு முன்னங்கால்களும் உண்டாகின்றன. ஒரு மாதத்தில் இவை தவளையாக மாறுகின்றன.
பச்சைப்புலி
புதிதாகப் பிறந்த தவளைக் குஞ்சின் வெளிப்பகுதியில் இலையின் வெளிப்புறத்தில் காணப்படுவது போல சிறிய கறுப்பு கோடுகள் இருக்கும். வயதிற்கு வரும்போது இந்த கோடுகள் நுணுக்கமாகப் பார்த்தால் மட்டுமே தென்படும். இவை மங்கலானதாக இருக்கும். இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பச்சை நிறத்தில் கறுப்புக் கோடுகள் உள்ளதால் இது பச்சைப்புலி (green tiger) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்திய வன உயிரிகள் அறக்கட்டளையின் (WTI) தவளைகளுக்கான முதல் திட்டம் இது. இதுவே ரஞ்சித்தின் முதல் திட்டமும். பறவைகள், பாலூட்டிகளைப் பாதுகாக்க இந்த அறக்கட்டளை ஏற்கனவே பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. பறக்கும் மலபார் தவளை போன்ற அழிந்துவரும் தவளையினங்களைக் காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி ரஞ்சித் அறக்கட்டளையின் உதவியை நாடினார். திட்டம் வெற்றி பெறுமா என்று அறக்கட்டளையினர் கேள்வி எழுப்பினர்.
கடைசியில் நிதியுதவி கிடைத்தது. ஒரு வார கால உழைப்பின் முடிவில் குளம் வெட்டப்பட்டது. அருகில் இருக்கும் அருவியில் இருந்து நீர் எடுத்து வரப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தவளை குளத்திற்கு வந்தது. பிறகு குளத்தைச் சுற்றி வண்ணத்துப்பூச்சிகள், புழுக்கள், சிலந்திகள் போன்றவை வரத் தொடங்கின. குளம் வெட்டப்பட்டு ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் கழித்து மலபார் தவளையினமும் குளத்திற்கு வந்து சேர்ந்தது. இப்போது குளத்தைச் சுற்றி வேறு பல இனங்களைச் சேர்ந்த தவளைகள் இங்கு வாழ்கின்றன.
காணாமல் போகும் இயற்கையும் உயிரினங்களும்
இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறக்கட்டளையினர் இப்பகுதியில் வாழும் தவளைகளைக் கண்காணித்து அறிய மூன்று ஆய்வாளர்களை அனுப்பியுள்ளது. வாழிட இழப்பே பெரும்பாலான தவளையினங்களின் அழிவிற்குக் காரணம். காடுகள் பல துண்டுகளாக மாறிவிட்டன. தேங்கிக் கிடக்கும் நீர் இல்லை. அப்படியே இருந்தாலும் அது அசுத்தமான நீரே. இதனால் தவளைகளின் அடைக்கல பூமியாக ஒரு காலத்தில் இருந்த இடங்கள் இப்போது இல்லாமல் போய்விட்டன.
மூணாறில் முன்பு பல புல்வெளிப்பிரதேசங்கள் இருந்தன. ஆனால் இப்போது அவற்றில் பல அழிக்கப்பட்டு அந்த இடங்களில் பல தேயிலைத் தோட்டங்கள் செயல்படுகின்றன. இதனால் இங்கு வாழ்ந்து வந்த பல தவளையினங்கள் காணாமல் போயின. இது தவிர இப்பகுதியில் சிறியதும் பெரியதுமான பல சோலைவனங்கள் இருந்தன. இந்த வனங்கள் அழிக்கப்பட்டு பல யூகலிப்டஸ் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதுவும் இந்த உயிரினங்களின் வாழிட இழப்பிற்குக் காரணம்.
காலநிலை மாற்றம், வாழிட இழப்பு போன்றவற்றால் இதுபோன்ற சின்னஞ்சிறிய உயிரினங்கள் பூமியில் இருந்தே ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகின்றன. இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் இவை சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றன. இவை காட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வதும் இத்தகைய விபத்துகளால் குறைகிறது. இதனால் இவற்றின் நடமாட்டம் குறைக்கப்படுகிறது.
புறக்கணிக்கப்படும் சிறிய உயிரினங்கள்
சாலையின் குறுக்கே யானை இருந்தால் வாகன ஓட்டிகள் கவனிக்கின்றனர். ஆனால் தவளை, பாம்புகளை எவரும் கவனிப்பதில்லை. இலட்சியம் செய்வதுமில்லை. இரவு பயணம் செய்யும்போது சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்த தவளைகளை ஏராளமாகக் காணலாம். இப்பிரச்சனைகள் சிறிது கவனம் வைத்து செயல்பட்டால் தீர்க்கப்படும்.
பூச்சிக்கொல்லிகள் மற்றொரு பிரச்சனை. இந்த உயிரினங்கள் அவற்றின் தோல் வழியாகவே சுவாசிக்கின்றன. இதனால் நீர் அவற்றிற்கு அவசியம் தேவைப்படும் ஒன்று. மழைக்காலங்களில் இவை சுறுசுறுப்பாக செயல்படக் காரணமும் இதுவே. ஆனால் தேயிலைத் தோட்டங்கள், மற்ற இடங்களில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவது அதிகமாக இருந்தால் அவற்றை சுவாசிப்பதன் மூலம் தவளைகள் கொல்லப்படுகின்றன.
இந்த நச்சுப்பொருட்களின் பயன்பாடு ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கிறது. மாதத்திற்கு மாதம் புதிது புதிதான நச்சுப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது இந்த உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கிறது. பகல் நேரத்தில் இவை அதிகம் வெளியில் காணப்படுவதில்லை. செடிகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. நச்சுப் பூச்சிக்கொல்லிகள் இந்த உயிரினங்களின் உடலில் நேரடியாகச் சென்று பாதிக்கின்றன. உடன் மழை பெய்தால் இவை அதிகம் பாதிக்கப்படுவதில்லை. இல்லையெனில் இவை உயிரிழக்க நேரிடுகிறது.
சிறிய உயிரினங்களும் பாதுகாக்கப்படவேண்டும். இன்று புலிகளுக்கு பாதுகாப்பு திட்டம் இருக்கிறது. புலிகள் இப்போது மூவாயிரத்திற்கும் கூடுதலாக உள்ளன. ஆனால் கேரளாவில் புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் ஒரு தவளையினம் இப்போதும் வெறும் 300 மட்டுமே இருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது.
வருமானத்தில் ஒரு பகுதி
புலிகள் போல உள்ள பெரிய உயிரினங்களைப் பாதுகாப்பது போல தவளைகள் போன்ற சிறிய உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுலா மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் பல செயல்கள் இயற்கையை அழிக்கிறது என்று கூறும் ரஞ்சி தன் வருமானத்தில் ஒரு பகுதியை இயற்கையைப் பாதுகாப்பதற்காக ஒதுக்கி வைக்கிறார்.
நாம் அலட்சியமாகக் கருதும் தவளைகளைப் பாதுகாக்க பாடுபடும் இந்த மனிதர் தன் செயலால் சூழல் பாதுகாப்பில் உயர்ந்து நிற்கிறார். சூழலையும் உயிரினங்களையும் பாதுகாக்கப் போராடும் இவர் போன்ற போராளிகள் இருக்கும்வரை இயற்கைக்கு அழிவில்லை என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் ஏற்படுகிறது.
** ** **
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
“எல்லா உயிரினங்களும் மறைந்து போய்விட்டால் ஆத்மார்த்தமான சூன்யத்தில் சிக்கி மனிதன் மரணமடைவான். உயிரினங்களுக்கு சம்பவிப்பது எல்லாவற்றையும் மனிதனும் அனுபவிப்பான். எல்லாம் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பவை. பூமிக்கு வருவது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் வரும்” - ஒரு அமெரிக்கப் பழங்குடியினப் பழமொழி.
அருணாசலப் பிரதேசம் இயற்கை ஆர்வலர்களின் விருப்பமான இடம். இன்று காடுடன் சேர்ந்து வாழும் சில ஆதிவாசிப் பிரிவினரின் நம்பிக்கைகளுக்கும், பறவை விலங்குகளின் விற்பனையை நடத்தி வரும் கடத்தல்காரர்களுக்கும், உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்கப் போராடும் ஆர்வலர்களுக்கும் இடையில் அருணாசலப் பிரதேசம் போராடிக் கொண்டிருக்கிறது.
பசுமை எழில் கொஞ்சும் மாநிலம்
இம்மாநிலத்தின் நிலப்பரப்பில் 80% வனப்பகுதியே. பசுமை மாறாக் காடுகள், உயரமான மண் மேடுகள், நதிகள், பள்ளத்தாக்குகள் இவற்றுடன் இமயமலைச் சிகரங்கள் நிறைந்து காணப்படும் இங்கு உயிர்ப் பன்மயத் தன்மையின் செழிப்புமிக்க அடையாளங்களாக ஐநூற்றிற்கும் மேற்பட்ட பறவை இனங்கள், ஆயிரக்கணக்கான அபூர்வ தாவரங்கள் வாழ்கின்றன. அனைவரையும் இங்கு ஈர்ப்பது பறவைச் சுற்றுலா.மேற்கு காமெங் (Western Kameng) மாவட்டத்தில் உள்ள கழுகு முட்டை சரணாலயம், பாசிகட் (Pasighat) மாவட்டத்தில் உள்ள டேயிங் எரிங் (Daying Ering) நினைவு வனவிலங்குகள் சரணாலயம், நம்தப்பா (Namdapha) தேசிய பூங்கா உட்பட எட்டு வன உயிரி சரணாலயங்கள், ஒரு அலங்கார மலர்ப் பூங்கா, இரண்டு தேசியப் பூங்காக்கள் உள்ளன.
வேட்டைத் திருவிழா
இங்கு வாழும் ஒரு சில ஆதிவாசி இனங்கள் வேட்டைத் திருவிழாக்கள் நடத்துகின்றன. வேட்டைத் திருவிழாவில் கொல்லப்பட்ட விலங்குகள், பறவைகள் வரிசை வரிசையாகத் தொங்க விடப்படுகின்றன. பறக்கும் அணில், கலீச் பெசண்ட், சிவப்பு செம்போத்து (Red pheasant), மான், கீரி போன்றவை இன அழிவை சந்திக்கும் அபூர்வ உயிரினங்கள். இம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆதிவாசி இனமான ஆதி (Adi) இன மக்களுக்கு நவம்பரில் டோரங், மார்ச்சில் உனைங் ஆரான், ஜனவரியில் டிஷாங் ஆகியவை முக்கியத் திருவிழாக்கள். இவற்றுடன் திருமண விழாக்களும் முன்காலம் முதலே இவர்களால் வேட்டையாடலுடன் கொண்டாடப்படுகின்றன.
முன்பு மூங்கில் பொறிகளைப் பயன்படுத்தி உயிரினங்கள் பிடிக்கப்பட்டன. பிறகு ஏர் கன் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மக்கள் வேட்டையாடினர். இதனால் நிமிட நேரத்திற்குள் ஏராளமான உயிரினங்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டன. இதனுடன் சேர்ந்து வன உயிரினங்களின் இறைச்சிக்கான சந்தையும் வளர்ந்தது. இவர்களின் வேட்டையாடும் திறனைச் சுரண்ட வன உயிரினங்களைக் கடத்துபவர்களும் வரத் தொடங்கினர்.
வேட்டையாடுதலில் இருந்த பாரம்பரிய நம்பிக்கையின் கட்டுப்பாடுகளை சில ஆதிவாசிகள் பணத்திற்காக காற்றில் பறக்கவிட்டனர். இவர்கள் எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் உலா வந்தனர். குழந்தைகள்கூட குறைந்த காசுக்காக கண்ணில் தென்பட்ட பறவைகளை சுட்டு வீழ்த்தினர்.
மௌனமான கிராமங்கள்
பறவைகள் இல்லாத கிராமங்கள் நிசப்தமாயின. உயிரினங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. அவை வம்சமிழந்து அழிவை நோக்கிச் சென்றன. 2002-2005ல் 53 இனப் பறவைகள் மிதமிஞ்சிய வேட்டைக்கு இரையாகின என்று மேற்கு அருணாசலப் பிரதேசத்தில் வாழும் மூன்று ஆதிவாசி சமூகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறின.
வெப்ப மண்டலச் சூழலியல் (Journal of Tropical ecology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின்படி வேட்டையாடப்படுபவற்றில் ஐந்து இனங்களைச் சேர்ந்த பறவைகள் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலிலும், ஐந்து இனங்கள் வருங்கால ஆபத்தில் உள்ள உயிரினங்களின் பட்டியலிலும், ஓர் உயிரினம் அழிவின் விளிம்பில் உள்ளவற்றின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளவை.
புதிய முயற்சி
வனமும் வனப்பொருட்களும் ஆதிவாசிகளின் உரிமை. காட்டை தங்கள் சொந்த வீடாகக் கருதும் ஆதிவாசிகளை அங்கிருந்து விரட்டாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தி காட்டின் காவலர்களாக மாற்ற சூழலியலாளர்கள் முயன்றனர். ஆதிவாசி இனத் தலைவர்களின் ஆய் பானே கபாங் குழுவுடன் வேட்டைக்கு எதிரான பேச்சுகள் நடந்தன.
2015ல் இதன் ஒரு பகுதியாக ஆதிவாசி இனத் தலைவர்கள் மாநில வனத்துறையினரால் அஸ்ஸாம் காசிரெங்கா சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆதிவாசித் தலைவர்கள் பழமையான சம்பிரதாயங்களைக் கைவிட முடிவு செய்தனர். கிராமங்களின் உயிர்ப் பன்மயத் தன்மையைக் காப்பாற்ற உறுதி எடுத்தனர்.
இருவாயன் கூடுகளை தத்து எடுக்க வாருங்கள்
இருவாயன் அல்லது இருவாய்ச்சி பறவை (hornbill) உள்ள ஒரு காடு முழுமையுடையது என்று சொல்லப்படுவதுண்டு. பழங்களைத் தின்று விதைகளை வெகுதூரம் வரை பரவச் செய்வதால் இவை காட்டின் விவசாயிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் 1972 வன உயிரிப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள இப்பறவை அருணாசலப் பிரதேசத்தின் மாநிலப் பறவை.
2018ல் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள உயிரினங்களின் பட்டியலில் இவை இடம் பெற்றுள்ளன. இப்பறவைகளின் அழிவிற்கு இம்மாநிலத்தின் முதன்மை ஆதிவாசி நைஷி (Nissi) இனத்தவரின் வேட்டையாடலே காரணம். இவர்களின் தலைப்பாகையில் இப்பறவையின் அழகான பெரிய மஞ்சள் நிற அலகு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. பறவையின் இறைச்சி, இறகுகளை இவர்கள் பயன்படுத்தினர்.
பறவைக்கூடு
வேட்டைக்காரர்களையே பாதுகாவலர்களாக மாற்ற சூழலியலாளர்கள் முயன்றனர். இதன் பலனாக 2011ல் இருவாயன் பறவைக்கூடு தத்து எடுக்கும் திட்டம் (Hornbill Nest Adoptation Programme HNAP) தொடங்கப்பட்டது. இதற்காக நைஷி ஆதிவாசித் தலைவர்களின் கோரா-ஆபே சங்கம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (Nature Conservation Foundation) பாடுபட்டது.
சூழலியலாளர் அபராஜிதா தத்தா 1995 முதல் இப்பறவையைக் குறித்து நடத்திய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டது. பறவையின் பாதுகாப்பை ஏற்றுக்கொண்ட ஆதிவாசிகளுக்கு அறக்கட்டளை பிரதிபலன் தரத் தொடங்கியது. 2020ல் பாதுகாக்கப்பட்ட 40 கூடுகளில் இருந்து 152 பறவைக் குஞ்சுகள் பிறந்தன!
யார் வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம்
இம்மாநிலத்தில் இப்பறவைகளின் கூடுகளை யார் வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம். இதற்குக் கட்டணம் மாதம் ரூ 6000. பாதுகாக்கப்படும் பறவையின் குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் அடங்கிய இரண்டு அறிக்கைகள் ஆண்டுதோறும் அனுப்பப்படும். இத்திட்டம் கூடுகளைப் பாதுகாக்கும் ஆதிவாசிக் குடும்பத்திற்கு சம்பளம் கொடுக்க அறக்கட்டளை கண்டுபிடித்த வழி.
புதிய தலைப்பாகை
காட்டுடன் நைஷி இனத்தவருக்கு இருந்த ஆத்மார்த்தமான உறவு புரிந்து கொள்ளப்பட்டது. தலைப்பாகையில் பறவையின் அலகிற்கு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டதால் இத்திட்டம் வெற்றி பெற்றது. இதில் இந்திய வன உயிரி அறக்கட்டளையினர் (Wildlife Trust of India WTI) பெரும்பங்கு வகித்தனர்.
பறவையின் அலகு போலவே தோற்றமளிக்கும், ஆனால் அதைவிட நீண்டநாள் உழைக்கக்கூடிய கண்ணாடி நாரிழையால் ஆன அலகுடன் கூடிய தலைப்பாகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த முறையில் அலகுகள் தயாரிக்கும் தொழில் ஆதிவாசிகளின் வருமான மார்க்கமாக மாற்றப்பட்டது.
மாநிலத்தின் பகே (Pakke) புலிகள் காப்பகத்திலும் அருகில் உள்ள காடுகளிலும் இன்று இப்பறவையின் கூடுகளை தாராளமாகக் காணலாம். இரவு நேரங்களில் இவற்றின் நூற்றுக்கணக்கான பறவைகளை இன்று சர்வசாதாரணமாகக் காண முடியும். கூடுகளைப் பார்க்க, அவற்றைப் படமெடுக்க ஏராளமானோர் இங்கு வருகின்றனர். சூழல் சுற்றுலாவின் மூலம் ஆதிவாசிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.
துப்பாக்கி ஒப்படைக்கும் திட்டம்
வேட்டையாடுவதைத் தடுக்க அரசு 2021ல் துப்பாக்கிகளை ஒப்படைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதுவரை 2400 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு சில வாரங்களுக்குள் கிராமங்களில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. வீடுகளுக்கு அருகிலும், காட்டிலும் பறவைகள் மீண்டும் வர ஆரம்பித்தன. மைனா, கிளி, குயில், புல் புல், குருவி, புறா, பருந்து போன்றவை கூட்டமாக வந்தன. காட்டில் பறவைகளின் சங்கீதம் கேட்க ஆரம்பித்தது.
வன உயிரினங்களைக் கொல்வது, பிடித்து வைப்பதற்கு எதிராக சட்டங்கள் உள்ளன. வேட்டை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, நஞ்சு வைத்து மீன்களைக் கொல்வது சட்டவிரோதம். ரூ 25,000 வரை இதற்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகை கிராம வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆதிவாசிகளிடையில் கல்வியறிவு பெற்ற சூழல் விழிப்புணர்வு உள்ள புதிய தலைமுறையினர் வேட்டைக்காரர்களைப் பிடிக்க, உட்காடுகளில் காவலிற்குச் செல்ல தாமே முன்வந்து தயாராகின்றனர்.
வன அழிவு
2002-2019ல் அருணாசலப்பிரதேசத்தில் 1,100 சதுர கி மீ பரப்பளவில் காடுகள் அழிக்கப்பட்டன என்று உலக வனக் கண்காணிப்பு அமைப்பு (Global Forest Watch) 2020 அறிக்கையில் கூறியுள்ளது. சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுதல், பழங்குடியினருக்கு இடையில் ஏற்படும் கலவரங்கள், விவசாயத்திற்காக காடுகளை அழித்தல், வனங்களை பணப்பயிர் தோட்டங்களாக மாற்ற அழித்தல் போன்றவை இதற்குக் காரணம்.
2021ல் கண்டுபிடிக்கப்பட்ட சாம்பல் நிற அலகு பாஃப்லர் (Greybilled babblar), 2022ல் கண்டுபிடிக்கப்பட்ட ரோஸ் பிஞ்ச் (three banded rose pinch , பகன் லியாச்சியா (Bugun Liochchiya) உள்ளிட்ட பல புதிய பறவையினங்கள் சமீபத்தில் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
அன்பு செலுத்தும் இயற்கையின் அம்சங்களான மரம், செடி, கொடி, பறவை, விலங்குகளை மனிதன் நேசிக்கத் தொடங்கினால் இயற்கையும் அவனை நேசிக்கும். உயிரினங்கள் இல்லாத உலகில் மனிதனும் உயிருடன் இருக்க முடியாது. ஏனென்றால் பூமிக்கு சம்பவிப்பது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் சம்பவிக்கும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- அழிவின் விளிம்பில் கானமயில்
- நஞ்சு உண்ணும் சீல்கள் மனிதருக்கு உதவுமா?
- அன்று வேட்டையாடும் கிராமம், இன்று காவல் கிராமம்
- இயற்கையின் ஆயுதங்கள்
- ஆழ்கடலில் ஓர் அதிசய உயிரினம்
- தாவரங்கள் பேசுகின்றன
- அழிவில் இருந்து மீண்டு வந்த வண்ணத்துப் பூச்சி
- திமிங்கல வேட்டை
- யானைகளுக்கு ஏன் புற்றுநோய் வருவதில்லை?
- யார் காப்பாற்ற வருவார் இந்த உயிரினங்களை?
- மீண்டும் பறக்குமா குவாமின் மீன்கொத்திப் பறவை?
- கடலின் மழைக் காடுகளைக் காப்பாற்றும் கலைச் சிற்பங்கள்
- கரடிகள்
- மண்ணிற்கடியில் ஒளிந்திருக்கும் விலையுயர்ந்த பூஞ்சை
- நுண் பிளாஸ்டிக் உண்ணும் நுண்ணுயிரிகள்
- ஆண் துணையில்லாமல் முட்டையிட்ட உலகின் முதல் கன்னி முதலை
- சிங்க வேட்டை
- தவளைகள் பலவிதம்
- பூமியின் வரைபடத்தில் இல்லாத இடங்கள் தேடி...
- ஆதிவாசி மக்களுக்காக விறகொடிக்கும் யானைகள்