அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பல கோயில் நுழைவாயில்களில் தும்பிக்கையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டியபடி அசைந்தாடும் யானையப் பார்த்திருப்போம். அவற்றின் நிலை பற்றி நாம் என்றேனும் சிந்தித்திருக்கிறோமா? அவர்களின் தலைவிதி என்று மாறும்? ஆண்டுதோறும் மனிதன் தீர்மானித்துக் கொண்டாடும் பல தினங்களில் யானைக்கும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர இவற்றின் மீது நாம் உண்மையான அக்கறை காட்டுகிறோமா?
யானைகளின் இடம் நாடு அல்ல; கோயில் வாசல் அல்ல; காடுதான். மனிதர்கள் போல அவைகளும் சமூக விலங்குகளே, கூட்டமாக வாழ்பவை. ஒன்றுக்கொன்று உதவி செய்து வாழ்க்கை நடத்துபவை. ஊரில் உற்றவர்கள், உடையவர்கள், பங்காளிகள், நண்பர்கள், குழந்தைகளுடன் வாழும் மனிதன் ஒரே ஒரு நாள் காட்டில் தன்னந்தனியாக வாழ வேண்டி வந்தால் அப்போது ஏற்படும் மனநிலையை அவனால் ஊகிக்க முடியும்.
காட்டில் கூட்டமாக வாழும் யானையை மனிதன் தன் வாழிடத்திற்கு அழைத்து வந்தபோது அதனால் அதற்கு தாங்க முடியாத தனிமையையும் மனப் போராட்டங்களையும் சந்திக்க வேண்டி நேரிட்டது. அவை தினமும் இருபது மணி நேரத்திற்கும் மேல் செலவழித்து காடு முழுவதும் அலைந்து திரிந்து பத்துக்கும் மேற்பட்ட மரங்களின் இலைகளை உண்டு வாழ்ந்தன. இவற்றின் முக்கிய உணவு இலைகள், பழங்கள், புற்கள், வேர்கள். காட்டில் வாழும் யானை இருபது மணி நேரம் எடுத்து உண்கின்றன.
ஆனால் இது போல நாட்டிற்கு வரும் யானைக்கு உணவு கொடுக்கப்படுவதில்லை. தென்னை ஓலை, பனை மட்டைகள் மட்டுமே அவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகிறது. உணவின் அளவைக் குறைப்பது, நீண்ட நேரம் ஆகாரம் கொடுக்காமல் இருப்பது அவற்றுக்கு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உரிய அளவில் நீர் கொடுக்க வேண்டும். ஒரு வளர்ந்த யானைக்கு தினமும் சுமார் 2050 லிட்டர் நீர் தேவை. குடிக்க கொடுக்கப்படும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.
யானைகள் கிலோமீட்டர் தூரம் நடக்கும் ஒரு உயிரினம். அதனால் அவற்றை ஒரு இடத்தில் கட்டி வைப்பது பல ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அவற்றை திருவிழாக் காலங்களில் நீண்ட நேரம் ஒரு இடத்தில் நிறுத்தி வைப்பதை விரும்புவதில்லை.
காட்டில் வாழ்பவை போல் இல்லாமல் நாட்டில் அவை மனிதனின் கட்டுப்பாட்டில் வாழ்கின்றன. காட்டு யானைகள் கிலோமீட்டர் தூரம் ஒவ்வொரு நாளும் நடந்து உணவைத் தேடி சாப்பிடுகின்றன. ஆனால் நாட்டில் உள்ளவை அளவு குறைந்த இடத்தில் வாழ வேண்டி நேரிடுகிறது. அவற்றுக்கு மனிதர்கள் கொடுக்கும் உணவு மட்டுமே கிடைக்கிறது. விழாக் கொண்டாட்டங்களில் யானைகளைப் பயன்படுத்தும்போது அவற்றுக்கு அது மிகக் கொடிய அனுபவத்தையே தருகிறது. பெரிய சத்தங்களை அவை சகித்துக் கொள்வதில்லை. வியர்வை சுரப்பிகள் குறைவாக உள்ளதால் அதிக வெப்பத்தை அவை தாங்குவதில்லை.
சாலையில்... சுட்டுப் பொசுக்கும் வெய்யிலில்... பயமுறுத்தும் தீப்பந்தங்களுக்கு அருகில்... பேரிரைச்சலை எழுப்பும் வாத்திய மேளங்களுக்கு நடுவில்... நிற்க வேண்டி ஏற்படும் யானைகளின் தலைவிதியை நாம் என்று உணரப் போகிறோம்? பழைய கணக்குகளின்படி யானைகள் இயல்பாக 60 - 62 வயதில் மரணமடைந்தன. ஆனால் இப்போது 33-34 வயதில் இறந்து விடுகின்றன.
பொருந்தாத உணவுகளை அவற்றுக்கு கொடுப்பதால் பல ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு அளிக்கப்படும் தவறான சிகிச்சையாலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனுடன் ஒற்றைப்படல், பயம், மன அழுத்தம் ஆகியவை சேர்ந்து பாதிப்பதால் அவை இளம் வயதிலேயே உயிரிழக்கும் அவல நிலை ஏற்படுகிறது. அவை கூட்டமாக நடக்க விரும்பும் வன உயிரினங்கள். அதனால் அவற்றை தனியாக நீண்ட நாட்கள் கட்டி வைத்திருப்பது விவேகமில்லாதது.
யானை ஒரு வன உயிரினம் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் பல மோதல்களையும் தவிர்க்கலாம். படுத்திருக்கும் நிலையில் யானையின் இதயத்துடிப்பு அதிகமாக உள்ளது. அதனால் அவை அதிக நேரம் நிற்பதை விரும்புகின்றன. ஆரோக்கியமான ஒரு யானை இரண்டு மணி நேரம் சுகமாகத் தூங்கும் இயல்புடையது. நீண்ட தூரம் செல்லும் யானைகள் நின்று கொண்டும் தூங்குவதுண்டு. படுத்து எழுந்து நிற்க கஷ்டப்பட்டால் அது யானையின் மோசமான ஆரோக்கியத்தைக் குறிக்கிறது.
மனிதனால் கேட்க முடியாத அகச்சிவப்பு அலைகளைப் பயன்படுத்தி அவை தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. யானைகளால் மிதமிஞ்சிய சத்தம், சகிக்க முடியாத பிரகாசத்தைத் தாங்க முடிவதில்லை.
பொதுவாக யானைகளுக்கு பார்வைத் திறன் குறைவு. அருகில் இருப்பதை மட்டும் ஒரு கண்ணால் இவை காண்கின்றன. என்றாலும் சரியான தொலைவை அவற்றால் மதிப்பிட முடிவதில்லை. இதனால் யானைக்கு அருகில் இருப்பவரால் எளிதில் தப்பிக்க முடியும். இரவில் குறைந்த வெளிச்சத்தில் அவற்றின் பார்வைத் திறன் மேலும் குறைகிறது. இதைப் புரிந்துகொண்டு அதற்கு அவசியமான வெளிச்சத்தை மட்டுமே கொடுத்து அதைக் கட்டுப்படுத்தினால் அவற்றின் சங்கடம் குறையும்.
யானைக்கு நல்ல மோப்ப சக்தி உள்ளது. அதனால் வாசனையை நுகர்ந்து அருகில் இருப்பவரை அடையாளம் காணமுடியும். இதற்காக தும்பிக்கையையும் நாக்கின் சிறப்புப் பகுதியையும் அவை பயன்படுத்துகின்றன. யானைகளின் உடல் வெப்பநிலை மனிதர்களை விட இரண்டு மடங்கு குறைவு. வியர்வை சுரப்பிகளும் குறைவு. காதை ஆட்டுவது, சிறுநீர், மலம் கழிப்பது, சேற்றையும் மண்ணையும் உடலில் வாரி எடுத்து பூசிக் கொள்வதன் மூலம் அவை உடல் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்கின்றன.
இதனால் நாட்டு யானைகளுக்கு குளியல் இன்றியமையாதது. கட்டி வைக்கும்போது, நடத்திச் செல்லும்போது நிழல் உள்ள வழிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். கால்களில் உள்ள தனிச்சிறப்பு எலும்புகளால் அவற்றால் ஓடமுடியாது; தாவ முடியாது.
மேல் உதடும் மூக்கும் சேர்ந்த நீளமான தும்பிக்கையில் 40,000 திசுக்கள் உள்ளன. இதனால் தொலைவில் இருக்கும் பொருட்களை எடுக்க இவற்றால் முடியும். இவை நீரில் நீந்த நன்கு பயிற்சி பெற்றவை.
வயதுக்கு வந்த ஆண் யானைகளுக்கு இணையை கண்டுபிடிக்கும் காலம் வரும்போது அவற்றுக்கு மதம் பிடிக்கிறது. ஆண் உடலில் இருந்து வரும் ஒரு மணத்தை வைத்தே யானைகள் இணையைக் கண்டுபிடிக்கின்றன. வாசனையால் கவரப்பட்ட பெண் யானை ஆண் யானைக்கு அருகில் செல்லும். அப்படிப்பட்ட சமயங்களில் காடுகளில் ஆண் யானைகள் தனியாக நடக்கும். கூட்டத்தில் உள்ள மற்றவை ஒற்றைப்பட்ட யானையிடம் இருந்து விலகி வாழ்கின்றன.
இயற்கை வழங்கும் இணையுடன் சேர்ந்து வாழ வேண்டிய காலம் முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வாழும் நாட்டு ஆண் யானைகள் அந்த நேரத்தில் அதிக கோபமடைகின்றன. குறிப்பாக யானைப் பாகன்கள் மீதே அதிகமாக கோபம் ஏற்படுகிறது. அதனால் ஆண் யானையிடம் இருந்து விலகியிருப்பதே நல்லது. மனிதர்களுக்கு ஏற்படும் விரக துக்கத்தை நன்கு அறிந்து வர்ணிக்கும் மனிதர்கள் யானைகளுக்கு ஏற்படும் துக்கத்தைப் பற்றி பேசுவதில்லை. ஒவ்வொரு நாட்டு யானைக்கும் ஆயிரம் கண்ணீர்க் கதைகள் சொல்வதற்கு இருக்கிறது!
பசி எடுத்தால் உணவிற்காக வன்முறையில் ஈடுபடும் யானைகளின் விலங்கு நீதி, இரசிப்பதற்காக மட்டுமே கொடுமைப்படுத்தும் மனிதன் செய்யும் அநீதி, துரோகத்தைவிடவா பெரியது?! இயற்கை படைத்த எந்த ஒரு உயிரினமும் வெறும் காட்சிப் பொருள் மட்டும் இல்லை. பெருமிதத்தின்... கௌரவத்தின் அடையாளமும் இல்லை! ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதற்கென்று ஒரு விலை மதிப்பு உள்ளது.
யானை ஊருக்குள் புகுந்து நாசம் ஏற்படுத்தும்போது அதை மயக்க வெடி வைத்து காட்டிற்கு விரட்ட...போலீஸும் ராணுவமும் ஊடகங்களும் ஒன்று சேர்ந்து நடத்தும் சம்பவங்கள் அரங்கேறும்போது அந்த உயிரினத்தின் மனநிலை பற்றி யார் சிந்திப்பது? காட்டில் தன் போக்கில் சுதந்திரமாக வாழும் யானைகளை ஊருக்கு கொண்டு வந்து சொல்லமுடியாத கொடுமைகளுக்கு உட்படுத்தி பக்குவப்படுத்தி அடிமைப்படுத்தும்போது அதை எதிர்க்கவும் போராடவும் மனிதனுக்கு எதிராக ஒரு வெடி வைக்கவும் முடியாமல் பரிதாபமான நிலையில் அவை வாழ்கின்றன!
இனிமேலும் இந்த அற்புத உயிரினங்களை சுரண்டாமல் இருப்போம்... வாழ்வோம், வாழவிடுவோம்.
மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/wild-life/world-elephant-day-1.980806
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகில் தாவர வளம் மிக்க, ஆனால் இன்னும் விஞ்ஞானிகள் கண்டறியாத செழுமை மிகுந்த 33 இருண்ட பகுதிகளை (dark hotspots) விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். செழுமை மிக்க இருண்ட இடங்கள் என்பவை புவியியல், வகைப்பாட்டியல் ரீதியாக விவரங்கள் அதிகம் அறியப்படாத பகுதிகள். இங்கு உள்ள ஆயிரக்கணக்கான தாவரங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்படுவதற்காக காத்திருக்கின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது.
போர்னியோவில் (Borneo) தரைக்கு கீழ் வளர்ந்து பூக்கும் பனை மரம் முதல் தன் வாழ்நாள் முழுவதும் மற்ற தாவரங்களில் வாழும் மலகசி அலங்காரத் தாவரம் வரை ஆய்வாளர்கள் ஆண்டுதோறும் டஜன் கணக்கிலான புதிய இனங்களைக் கண்டுபிடிக்கின்றனர். என்றாலும் இன்னமும் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை அழியும் ஆபத்திலும் உள்ளன.
இத்தகையவற்றை இனம் காண ஆய்வாளர்கள் உலகின் எப்பகுதிகளில் தங்கள் ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று இலண்டன் க்யூ (Kew) ராயல் தாவரவியல் பூங்கா விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் கூறியுள்ளனர். மடகாஸ்கர் முதல் பொலிவியா வரை தாவர உயிர்ப் பன்மயத் தன்மை மிகுந்த பகுதிகளை வலுவான தேடலுடன் ஆய்வாளர்கள் கண்டறிய உதவும் வகையில் க்யூ பூங்கா ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தினர்.
இது பற்றிய ஆய்வுக்கட்டுரை New Phytologist என்ற இதழில் வெளிவந்துள்ளது. க்யூ விஞ்ஞானிகள் 2023ல் நடத்திய ஆய்வு முடிவுகளின் பகுப்பாய்வுகளில் இருந்து இந்த விவரங்கள் பெறப்பட்டன. இன்னும் விவரிக்கப்படாத மொத்த தாவர இனங்களில் மூன்றில் ஒரு பகுதி தாவரங்கள் விரைவில் அழியும் ஆபத்தில் உள்ளன என்று முந்தைய ஆய்வு கூறியது.
வருங்கால மருந்துப் பொருட்கள், எரிபொருட்கள் மற்றும் பிற புதிய கண்டுபிடிப்புகளுக்கான இரகசியங்களை இந்த தாவரங்கள் பெற்றுள்ளன என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட சூழல் பாதுகாப்பிற்கு உதவுதல், புதிய தாவரங்களைக் கண்டுபிடிக்கும் வேகத்தை அதிகப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டே இந்த ஆய்வுகள் நடந்தன. இப்போதுள்ள வேகத்தில் ஆய்வுகள் தொடர்ந்தால் இதுவரை கண்டறியப்படாத பல புதிய தாவரங்களும் அறிவியலால் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே அழிந்துவிடும். பூமியில் மனிதன் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகக் கருதப்படும் பழமையான, தலைகீழாக வளர்வது போல தோற்றமளிக்கும் மடகாஸ்கர் பயபாஃப் (Baobab trees), கொலம்பியா மலைப்பகுதிகளில் புற்கள், பாறைகள் மிகுந்த இடங்களில் வளரும் எஷ்ஃபிலீசியா பாக்லயானா (Espeletia barclayana) இனத்தைச் சேர்ந்த, முட்கள் அதிகம் உள்ள அரிய வகை பூக்கும் தாவரம், தண்டில் மணி போன்ற அமைப்பில் பிங்க் கலந்த சிவப்பு நிற பூக்கள் கொத்தாக பூக்கும் சியடண்ட்ர இனத்தைச் (Cyrtandra genus) சேர்ந்த இதுவரை 112 இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நியூ கினியாவின் அபூர்வ தாவரம் போன்றவை ஒரு சில எடுத்துக்காட்டுகள்.
தாவர வளம் மிகுந்த இருண்ட இடங்கள்
இப்போது நடைமுறையில் இருக்கும் ஐநாவின் பத்தாண்டிற்கான இலக்கின்படி புவிக்கோளின் 30% பகுதிகளை பாதுகாக்க வேண்டும். ஆனால் இதில் எப்பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய சரியான தகவல் இல்லாமல் அரிய தாவரங்களை நம்மால் காப்பாற்ற முடியாது. உயிரியல் பன்முகத் தன்மையை முன்பு உயிரியலாளர்கள் சரிவர ஆவணப்படுத்தவில்லை என்று முந்தைய ஆய்வுகளில் இருந்து தெரிகிறது.
இதனால் விஞ்ஞானிகள் மீண்டும் மீண்டும் முன்பு சென்ற இடங்களுக்கே சென்று ஆய்வுகளை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான இனங்கள் உள்ள சில பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகின்றன” என்று க்யூ பூங்காவின் அறிவியல் பிரிவு இயக்குனரும் ஆய்வுக் கட்டுரையின் மூத்த ஆசிரியருமான பேராசிரியர் அலெக்சாண்டர் ஆண்டனெல்லி (Prof Alexandre Antonelli) கூறுகிறார்.
இந்த இருண்ட பகுதிகளில் பெரும்பாலானவை ஆசியாவிலேயே உள்ளன. இதில் அவசரமாக ஆராயப்பட வேண்டிய பகுதிகள் என்று சுமத்ரா தீவு, கிழக்கு இமயமலைப் பகுதி, அஸ்ஸாம் இந்தியா, வியட்நாம், ஆப்பிரிக்காவில் மடகாஸ்கர், தென்னாப்பிரிக்காவில் கேப் மாகாணம், தென்னமெரிக்காவில் கொலம்பியா, பெரு மற்றும் தென் மேற்கு பிரேசில் உள்ளிட்ட 22 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
“பூமியின் எப்பகுதிகளில் தாவர வளம் அதிகமாக உள்ளது என்று தெரியாமல் நம்மால் அவற்றைக் காப்பாற்ற முடியாது. வளம் மிக்க இந்த இருண்ட இடங்கள் உள்ள நாடுகளில் தாவர இனங்களை அதிகாரப்பூர்வமாக கண்டறிய உதவும் வசதிகள் குறைவாகவே உள்ளன” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் இலண்டன் க்வீன் மேரி பல்கலைக்கழக தாவரவியலாளரும் க்யூ பூங்காவின் கௌரவ ஆய்வாளருமான டாக்டர் சாம்யெல் பயனான் (Dr Samuel Pironon) கூறுகிறார்.
இந்த ஆய்வு வருங்காலத்தில் புதிய இனங்களை அடையாளம் காண உலகம் முழுவதும் உள்ள ஆய்வு அமைப்புகளையும் உள்ளூர் மக்களையும் ஒருங்கிணைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அரிய தாவரங்களை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்ல பன்னாட்டு அளவில் தடை உள்ளது. இந்த இனங்களுக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதனால் பொது மக்கள் இவற்றை அகற்றவோ சேகரிக்கவோ கூடாது.
என்றாலும் பொது மக்கள் இத்தாவரங்களை புகைப்படம் எடுத்து ஐநேச்சுரலிஸ்ட் (iNaturalist) போன்ற மக்கள் அறிவியல் இணைய தளங்களில் பதிவிடலாம். இது பொது மக்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை அதிகப்படுத்தும். இத்தளங்களைச் சார்ந்தும் ஆய்வாளர்கள் செயல்படுகின்றனர். உலகில் உள்ள மற்றவர்கள் அறிய ஆர்வம் உடைய தகவல் இது என்று நம்பும் பொது மக்கள் இத்தாவரங்களின் புகைப்படங்களை இது போன்ற இணைய தளங்களில் பதிவிடுகின்றனர்.
விஞ்ஞானிகள் இத்தகவல்களை புதிய இனங்களை அடையாளம் காண உதவும் முக்கிய விவரமாக கருதுகின்றனர். வருங்கால உயிர்ப் பன்முகத் தன்மை உச்சி மாநாடுகளிலும் இந்த ஆய்வின் முடிவுகள் இன்றியமையாத கொள்கைகளை வகுக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மஞ்சளும் தவிட்டு நிறமும் கலந்த ஒரு ஈயின் படமும், அதற்குக் கீழே “லுக் அட் திஸ்” (Look at This) என்று எழுதப்பட்டிருந்தது, அந்த போஸ்ட்டரில்! இது சிட்னி ஆஸ்திரேலியன் அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு அறையின் வாசலில் சிறிது காலம் முன்பு வரை இருந்தது.
அது டேவிட் கே மக்கால் பைன் (David K. McAlpine) என்ற பூச்சியியல் நிபுணரின் ஆய்வு அறை. அவர் உலகப் புகழ்பெற்ற டிப்ட்டராலஜிஸ்ட் (Dipterologist) விஞ்ஞானி. இரண்டு இறக்கைகள் மட்டுமே உள்ள பூச்சிகளே டிப்ட்டர (Diptera). மற்ற பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள் உண்டு. இந்தப் பிரிவில் பலதரப்பட்ட ஈக்கள், கொசுக்கள் என ஒன்றரை இலட்சம் உயிரினங்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் இதில் உள்ளன.
மக்கால் பைன், கெல்ப் ஈக்கள் (Kelp flies) பிரிவில் ஆய்வு செய்தார். கெல்ப் என்பவை ஒரு வகை கடற்பாசிகள். கடலோரப் பகுதிகளில் குவியும் இவற்றில் இந்த ஈக்கள் முட்டையிடுகின்றன. புழுக்கள் வளர்கின்றன. கடற்பாசிகள், கடற்புற்கள், மற்ற கழிவுகள் குவியும் பகுதி ராக் மண்டலம் (Wrack Zone) என்று அழைக்கப்படுகிறது. இது இவற்றின் வாழிடம்.
இந்த ஈக்கள் அடங்கியுள்ள சீலோப்பிடி (Coelopidae) என்ற சிறிய குடும்பத்தில் 13 பேரினங்களும் 40 இனங்களும் உள்ளன. இவை ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற மித வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. 1981ல் வெளிவந்த ஆய்வு முடிவுகளின் ஊடாக, மக்கால் பைன் ஆஸ்திரேலியாவில் இருந்து ஐந்து புதிய பேரினங்களை கண்டுபிடித்தார். இவற்றில் ஒன்றுதான் திஸ் (This).
இந்த புதிய பேரினத்தில் திஸ் கானஸ் (This canus) என்ற ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது.
இவை ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வாழ்கின்றன. எண்ணிக்கை அதிகரிக்கும்போது நாட்டின் உள் பிரதேசங்களுக்கும் பயணம் செய்கின்றன. எடுத்துக்காட்டு கடற்கரை இல்லாத கேன்பரா நகரம்.
திஸ் கானஸ் உடல் அளவில் மிகச் சிறியவை. ஆண் ஈக்களின் இறக்கைகள் சற்று பெரியது. பெரும்பாலான ஆண் ஈக்கள் பெண் ஈக்களை விட அளவில் பெரியவை. இவற்றின் சராசரி அளவு 2 முதல் 3 மில்லிமீட்டர் மட்டுமே.
உடலமைப்பும் பண்புகளும்
வெளிறிய சாம்பல் நிறமுள்ள தலை, ஆரஞ்சு தவிட்டு நிறம் கலந்த சவ்வாலான சிறிய கழுத்து பகுதி, உணர்வு நீட்சிகள், கறுத்த உரோமங்களால் பொதிந்த இளம் சாம்பல் நிறமுள்ள தோராக்ஸ் என்ற பகுதி, மஞ்சள் நிர நரம்புகள் உள்ள இறக்கைகள் போன்றவை இவற்றின் உடலமைப்பில் காணப்படும் சிறப்பு அம்சங்கள். இது போலவே இணை சேர்வதிலும் திஸ் கானஸ், மற்ற கெல்ப் வகை ஈக்களில் இருந்து வேறுபடுகின்றன.
பெரும்பாலான கெல்ப் வகை ஈக்களிலும் பெண் ஈக்கள் இணைசேரும் ஆரம்ப விநாடிகளில் ஆண் ஈக்களை அடித்து விரட்ட முயல்கின்றன. ஆண் ஈக்கள் பெரிய அளவு உள்ள பெண் ஈக்களுடன் இணை சேர அதிகம் விரும்புகின்றன. ஆனால் திஸ் கானஸ் இத்தகைய பண்புகளை வெளிப்படுத்துவதில்லை. உடளலவில் சிறிதாக இருந்தாலும் ஆஸ்திரேலியன் கெல்ப் ஈக்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகம்.
இவற்றின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகும்போது இவை கடற்கரைக்கு செல்பவர்களுக்கு பெரிய தொல்லையாக மாறுவதுண்டு. ஆனால் இவை கடிப்பதோ, நோய்களை பரப்புவதோ இல்லை. இவை சில முக்கிய சூழல் சேவைகளை செய்கின்றன. கடலோரப்பகுதியில் குவியும் கடற்பாசிகளை உணவாக உண்பதன் மூலம் இவை அவற்றை சிதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கடலோரத்தில் வாழும் பறவைகள், மற்ற உயிரினங்களுக்கு இவற்றின் புழுக்கள், இளம் உயிரிகள் ஒரு முக்கிய உணவாகப் பயன்படுகின்றன.
மக்கால் பைன் நகைச்சுவை உணர்வு உடையவர் என்றாலும், இந்த ஈ இனத்திற்கு வெறும் தமாஷுக்காக அவர் இந்தப் பெயரைக் கொடுக்கவில்லை. இந்த ஈ-இன் பெயரில் இருக்கும் திஸ் என்ற சொல் ஆங்கிலத்தில் வரும் வெறும் திஸ் என்ற சொல்லைக் குறிக்கவில்லை. மாறாக புராதன கிரேக்க மொழியில் உள்ள திஸ் என்ற சொல்லே இந்த திஸ்! இதன் பொருள் கடற்கரை (Sea shore). கடலோரத்தில் வாழும் இந்த உயிரினத்திற்கு இந்தப் பெயர் மிகப் பொருத்தமானதுதானே?
வாழ்க்கைமுறை
பாக்டீரியாக்கள் நிறைந்த அழுகிய கடற்பாசிகளே இவை முட்டையிடும் இடங்கள். ஏப்ரல், ஜூநாகஸ்ட், டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மற்ற மாதங்களிலும் இவை காணப்படுகின்றன. என்றாலும் அந்த சமயங்களில் இவற்றிக்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசிகள் அழுகும்போது பலவித வாயுக்களை வெளிவிடுகின்றன. அந்த வாயுக்களால் இந்த ஈக்கள் கவரப்படுகின்றன.
கழிவுகளில் கூட்டமாக இடப்படும் முட்டைகள் விரிந்து வெளிவரும் புழுக்கள் அழுகிய கடற்பாசிகளையும் அதில் உள்ள பாக்டீரியாக்களையும் உண்டு வளர்கின்றன. இளம் உயிரியாக மாறுவதற்கு முன் கடற்பாசி குவியல்களில் இருந்து வெளிவரும் புழுக்கள் மணற்பரப்பிற்கு வருகின்றன. பின் இவை இளம் உயிரிகளாக மாறுகின்றன. முழு வளர்ச்சி அடைய ஆறு முதல் ஒன்பது வாரங்கள் எடுத்துக் கொள்கின்றன.
இந்த ஈக்களின் வண்ணப்படங்கள் பொது இடங்களில் காணப்படுவதில்லை. கறுப்பு வெள்ளையில் உள்ள ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மக்கால் பைனின் அறை வாசலில் காணப்பட்ட இந்த ஈயின் படத்தை அவருடைய சக ஆய்வாளர் டானியல் பிக்கல் (Daniel Bickel) வெளியுலகிற்கு வழங்கினார்.
1977ல் தெற்கு ஆஸ்திரேலியா ரோஃப் மாவட்டம் (Robe district) லாங் கல்லி (Long Gully) என்ற இடத்தில் மக்கால் பைன் சக ஆய்வாளர் ஷீனருடன் இணைந்து இந்த ஈயின் படத்தை எடுத்தார். இந்த ஆய்வுகளுக்கு பிறகு 1991ல் தெற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த ஈக்களைப் பற்றிய விரிவான ஆய்வுகள் நடந்தன.
பெயரில் மட்டும் வினோதமானதில்லை இந்த ஈ! இதன் வாழ்க்கை கதையும் பல விசித்திரங்கள் நிறைந்ததே. இவை பற்றி அதிகம் ஆராயப்பட வேண்டும். இயற்கையின் படைப்பில் உள்ள அதிசயங்களில் இன்னமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன என்பதை இந்த சின்னஞ்சிறிய ஈ நமக்கு உணர்த்துகிறது.
மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/creature-chronicles-on-this-canus-1.9532270
&
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இனி எவரையும் கண்ணில் இரத்தம் இல்லாதவர் என்று அழைக்காதீர்கள்! அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த உயிரினங்களுக்கு கண்ணில் இரத்தம் உண்டு என்பது மட்டுமல்ல வேண்டுமென்றால் அவை இரத்தத்தை கண்ணின் வழியே பீய்ச்சியடிக்கவும் செய்யும்! ப்ரைனொசோமா (Phrynosoma) என்ற இனத்தைச் சேர்ந்த இவை கொம்புள்ள பல்லிகள் (Horned lizards) என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் தலையில் ஏராளமான கொம்புகள் உள்ளன.
இவற்றைத் தவிர உடல் முழுவதும் முட்களும் உள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால் தேரைகளுடன் (toads) ஒப்பிடக்கூடிய உடலமைப்பு உள்ளவை. அதனால் இவற்றுக்கு ப்ரைனொசோமா என்ற அறிவியல் பெயர் ஏற்பட்டது. தேரை போன்ற உடலமைப்பு உள்ளவை என்பதே ப்ரைனொசோமா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள். இவற்றின் வால் மிகச் சிறியது. மெக்சிகோ, அமெரிக்கா, கனடாவில் இவற்றின் இனத்தைச் சேர்ந்த 21 வகை உயிரினங்கள் இது வரை கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றின் நீளம் 6-20 செண்டி மீட்டர். எல்லா இனங்களும் வறண்ட அல்லது பாலைவனப் பகுதிகளில் வாழ்கின்றன. சில இனங்கள் முட்டையிடுகின்றன. வேறு சில குட்டி போடுகின்றன. எறும்புகளே இவற்றின் முக்கிய உணவு. சில வகை பச்சோந்திகள் போல இவை சுற்றுப்புறத்தில் உள்ள நிறத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவை. இவற்றில் எட்டு இனங்கள் கண்ணின் வழியே இரத்தத்தைப் பீய்ச்சியடிக்கின்றன.
இரத்தக் கண்ணீர் வடிக்கும் இந்த உயிரினத்தைப் (sacred-toad) பற்றி மெக்சிகோதான் உலகிற்கு முதல் முதலில் தெரிவித்தது. அது நம் கதாநாயகனான கொம்புள்ள பல்லிதான். ஆனால் கேட்டவர் எவரும் இந்தக் கதையை நம்பவில்லை. 1892ல் வாஷிங்டன் தேசிய அருங்காட்சியகத்தில் ஓ பி ஹே (OP. Hay) இந்த உயிரினம் பற்றி கூறியபோதுதான் இது உண்மை என்று உலகிற்குத் தெரிந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள். ஒரு கொம்புப் பல்லி தன் தோலை உரிப்பதற்கு (moulting) தயாராகிக் கொண்டிருந்தது. அது அசாதாரணமாக காய்ந்து போயிருந்ததால் அது தன் தோலை உரிக்க கஷ்டப்படுவதாக அவருக்குத் தோன்றியது. அதன் உடலை லேசாக ஈரப்படுத்தினால் உதவியாக இருக்கும் என்று கருதி அவர் அதைப் பிடித்து தண்ணீரில் போட்டார். “முதலில் அதிர்ச்சியுற்றது பல்லியாக இருக்கலாம். ஆனால் அடுத்த அதிர்ச்சி எனக்குதான்” என்று அப்போது கண்ட காட்சியைப் பற்றி அவர் விவரித்துள்ளார். நீரூற்றப்பட்ட பாத்திரத்தில் எங்கேயிருந்து என்று கண்டுபிடிக்க முடியாத அளவு இரத்தம் போன்ற ஒரு திரவத்தின் துளிகள் தோன்ற ஆரம்பித்தன. மொத்தம் 90 துளிகள் உண்டாயின. நுண்ணோக்கியின் மூலம் பரிசோதித்தபோது அது இரத்தம்தான் என்பது உறுதியானது.
“அடுத்த நாள் அதைப் பிடித்து பெருவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் சுண்டுவிரலால் அதன் தலையை வருடும்போது ஒரு துளி இரத்தம் தெறித்தது. அதன் கண்ணில் இருந்துதான் அந்த இரத்தம் வந்தது” என்று ஓ பி ஹே தன் ஆய்வைப் பற்றி எழுதியுள்ளார். பல ஆய்வாளர்களும் பிறகு அவர் கூறியதை உறுதி செய்தனர்.
இரத்தக் கண்ணீருக்குப் பின்னால் இருக்கும் இரகசியம்
ஓ பி ஹே தவிர 1892ல் அண்டர்வுட் (Underwood) என்ற அறிவியல் அறிஞரும் 1907ல் டிட்மார்ஸ் (Ditmars) என்ற அறிஞரும் இது பற்றி விரிவாக ஆராய்ந்தனர். இரத்தத்தை பீய்ச்சியடிப்பதற்கு சற்று முன்புள்ள சூழ்நிலை, அதன் அளவு, பீய்ச்சியடிக்கப்படும் வேகம், பீய்ச்சியடிக்கப்படும் வழி, தொடர்ச்சியாக இரத்தத்தை அவற்றை எத்தனை முறை பீய்ச்சியடிக்கச் செய்யலாம் போன்ற அம்சங்களில் மூன்று விஞ்ஞானிகளுக்கும் ஒத்த கருத்து நிலவியது.
பொதுவான இத்தகைய உற்றுநோக்கல்கள் தவிர ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஓ பி ஹே ஆராய்ந்தபோது பல்லி அதன் தோலை உரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அண்டர்வுட் ஆராய்ந்தபோது இரத்தத்தை வெளியேற்றிய பிறகு பல்லி களைப்புடன் சோர்வுற்று ஏழு நிமிடங்கள் அளவுக்கு செத்தது போல ஆடாமல் அசையாமல் கிடந்தது. டிட்மார்ஸின் உற்றுநோக்கல் வேறொன்றாக இருந்தது.
இரத்தம் பீய்ச்சியடிக்கும்போது பல்லி அதன் தலையை லேசாகத் தூக்கி கழுத்தை வில் போல ஆக்கி கண்களை வெளியில் தள்ளியது. ஒரு வித்தியாசமான சத்தத்தை ஏற்படுத்தியது. இந்த உயிரினங்கள் எவ்வாறு இரத்தத்தை கண்ணின் வழியாகப் பீய்ச்சியடிக்கின்றன என்பது பற்றி மூன்று விஞ்ஞானிகளுக்கும் தெளிவாகத் தெரியவில்லை. பல்லியின் தலையின் இரண்டு பக்கங்களிலும் இரத்தம் நிறைந்த ஓ அறை இருக்கலாம். இதன் சுவரின் ஒரு பகுதி கண்ணிமையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கலாம்.
அறையைச் சுற்றி தசைகள் காணப்படலாம். இவை சுருங்கும்போது இமையின் மெல்லிய சுவரில் விரிசல் ஏற்பட்டு இரத்தம் தூரத்தில் தெறித்து விழலாம். விரிசலடைந்த சுவர் வெகுவிரைவிலேயே பழைய நிலைக்கு திரும்பக்கூடும். உயிருடன் உள்ள பல்லியின் மேல் பகுதியில் உள்ள இமையை லேசாகத் தூக்கிப் பார்த்தால் அதன் அடிப்பகுதியில் இரத்தம் நிறைந்த மெல்லிய சுவருடன் ஒரு குழல் உள்ளது போல தோன்றுகிறது. இதனால் இந்த அறை தலையின் உட்பாகத்தில் ஆழத்தில் பரவி அமைந்திருக்கலாம்.
பல்லியின் பாதுகாப்பு தந்திரம்
1907ல் புரூனர் (Bruner) என்ற விஞ்ஞானி இது பற்றி ஆராய்ந்து ஹே கூறியது சரி என்று உறுதிப்படுத்தினார். ஹே சுட்டிக்காட்டிய கண் அறைகளையும் ((circumocular sinuses) தசைத்திசுக்களையும் அவர் கண்டுபிடித்தார். அறைகள், அவற்றிற்கு அருகில் உள்ள இரத்தக் குழாய்களையும் (eins) அமுக்கி அழுத்தத்தை அதிகரிப்பது இந்த தசைகளே என்று அவர் கண்டறிந்தார்.
அழுத்தம் அதிகரிப்பதற்கேற்ப கண்கள் வெளியில் தள்ளப்படுகின்றன. இதன் பிறகே சுவர் உடைந்து இரத்தம் வெளியில் பீய்ச்சியடிக்கப்படுகிறது. 1942ல் பேர்லசன் (Burleson) புரூனரின் இந்த கருத்தை எதிர்த்தார். அறைகளில் இருந்து சுவர் உடையாமல்தான் இரத்தத்துளிகள் இமைகளுக்குச் செல்கின்றன என்று அவர் கூறினார். பயம், பல தரப்பட்ட பாதிப்புகளை சமாளிக்கவே இவ்வுயிரினங்கள் இவ்வாறு செய்கின்றன என்று ஆரம்ப கால ஆய்வாளர்கள் கருதினர்.
விரல்களால் குத்தும்போது, பிடிக்கும்போது, தலையை வருடும்போது மட்டுமே இவை இரத்தத்தை வெளித்தள்ளுகின்றன. இந்த கருத்தில் பல வேறுபாடுகள் உள்ளன. எதிரிகளை அச்சுறுத்தவே இந்த செயல் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. எதிரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இரத்தத்தில் உள்ளனவா, அது துர்நாற்றம் அடிக்கிறதா அல்லது எதிரிகளை திசை திருப்ப மட்டும் அவை பயன்படுகின்றனவா?
இதில் ஆய்வாளர்களிடையில் இன்னும் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. ஓ பி ஹே இரத்தத்தை சுவைத்து ஆராய்ந்தபோது அது வித்தியாசமான, ஒருவித லேசான இனிப்பு சுவையுடன் இருந்ததை அறிந்தார். அது மஸ்க்கி சுவை (musky taste) என்று அறியப்படுகிறது. இரத்தத்தை சுவைத்ததால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கண்ணில் விழுந்தால் அது அரிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். ஆனால் எதிரிகளைப் பாதிக்கும் அம்சம் இரத்தத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
பீய்ச்சியடிப்பதற்கு முன்பு கண்களுக்கு அருகில் இருக்கும் சில சுரப்பிகள் உற்பத்தி செய்யும் வேறு சில திரவங்களும் இரத்தத்துடன் கலக்கப்படலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் இதில் உண்மை இல்லை என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது. எறும்புகளை உணவாக உண்பதால் இவற்றின் இரத்தம் மற்ற ஊர்வனவற்றில் இருந்து வேறுபட்டு உள்ளது என்று கருதப்படுகிறது.
நாய்களை அச்சுறுத்த
எதிரிகளிடம் இருந்து தப்பவே இரத்தத்தை வெளியேற்றுகின்றன என்றால் எல்லா விலங்குகளுக்கும் எதிராக அவை அவ்வாறு செய்ய வேண்டும். ஆனால் இதில் உண்மையில்லை என்று பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. 1992ல் மிடண்டோர்ஃப் (Middendorf) மற்றும் ஷெர்ப்ருக் (Sherbrooke) ஆகிய விஞ்ஞானிகள் மனிதர்களை விட இவை நாய்களை சந்திக்கும்போதே அதிக அளவு இரத்தத்தை வெளிவிடுகின்றன என்று கண்டறிந்தனர்.
நாய்களுக்கு எதிராக இரத்தக் கண்னீர் வடித்தபோது அவை பயந்து பின்வாங்கின. நாய் இனத்தைச் சேர்ந்த விலங்குகளுக்கு (Canids) எதிராக இவ்வுயிரினங்கள் இரத்தத்தைப் பீய்ச்சியடிக்கின்றன என்று பல ஆய்வுகள் கண்டறிந்தன. 2024ல் ஷெர்ப்ரூக் மற்றும் கிம்பால் (Kimball) ஆகியோர் நடத்திய ஆய்வில் இருந்து இவற்றின் இரத்தத்தில் போகானோமியமிர்மெக்ஸ் (Pogonomyrmex) என்ற வேதிப்பொருள் இருப்பது தெரிய வந்தது.
என்றாலும் எதிரிகளை நேரிடும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இவை இரத்தக் கண்ணீர் வடிப்பதில்லை. சில விலங்குகளை நேரிடும்போது மற்றும் சில சந்தர்ப்பங்களில் மட்டும் இவை வெவ்வேறான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனவா என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அழியும் ஆபத்தில்...
துரதிர்ஷ்டவசமாக விலங்குகளின் உலகில் இந்த அதிசய உயிரினங்கள் கடும் அச்சுறுத்தலை நேரிடுகின்றன. வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் கட்டுமானங்களால் இவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. தரிசு நிலங்கள் வேளாண் பகுதிகளாக மாற்றப்படுதல், பூச்சிக்கொல்லி பயன்பாடு, வளர்ப்பு நாய்கள் போன்றவை இவற்றைப் பாதிக்கிறது.
இது தவிர தென்னமெரிக்காவில் இருந்து வட அமெரிக்காவிற்கு வந்து குடியேறிய சோல்நாப்சிஸ் இன்விக்டர் (Solenopsis invicta) என்ற நெருப்பு எறும்புகளை இவை உணவாக உண்பதில்லை. ஆனால் இந்த எறும்புகளின் ஆக்ரமிப்பால் மற்ற எறும்புகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நெருப்பு எறும்புகளை கொல்லப் பயன்படும் பூச்சிக்கொல்லிகள் மற்ற எறும்புகளையும் அழிக்கின்றன.
இதனால் எறும்புகளை மட்டும் உண்டு வாழும் இவற்றிற்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் இவை உயிர் வாழத் தேவையான உணவு கிடைக்காமல் போகிறது. இந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படாவிட்டால் இந்த அதிசய உயிரினங்கள் அழிவதை நாம் காண வேண்டியிருக்கும் என்று விலங்கு நல விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
- அழியும் உரங்கோட்டான்களை யார் காப்பாற்றுவார்?
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்
- அழிந்த பறவைகள்
- பூச்சிகளின் அழிவால் மாறும் பூக்களின் மகரந்த சேர்க்கை
- காலத்திற்கேற்ப கோலம் மாறும் பறவைக் கூடுகள்
- பாதாளத் துயரம்
- மயான அமைதியில் இயற்கை
- இரயில்கள் ஏன் இவர்களின் வீடுகளை ஆக்ரமிக்கின்றன?
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.