அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கேரளாவில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு (Silent Valley) என்ற பகுதி மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளின் கருவறை என்று குறிப்பிடலாம். பாலக்காடு பகுதியில் நீலகிரிக் குன்றுகளின் தென்மேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள பகுதி ஆகும் இது. கடல்மட்டத்தில் இருந்து 3000 முதல் 4000 அடி வரை உயரத்தில் உள்ள ஒரு பிரதேசம் ஆகும் இது. சமீபத்தில் இந்தப் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளே யுனெஸ்கோ நிறுவனத்தால் “பாரம்பரியமான பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக” (World Heritage bio hotspot site) அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிப் பள்ளத்தாக்கு என்று இதற்குப் பெயர் வரக் காரணம் இங்கு சில் வண்டுகள் இல்லை என்பதால்தான்.. ஆனால், இப்போது இங்கும் சில் வண்டுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எண்ணற்ற பல்வேறுவிதமான உயிரினங்களின் வாழிடம் ஆகும் இது. மனிதரால்கூட நுழைய முடியாத கொடுங்காட்டுப் பகுதி ஆகும் இது. பாரதப்புழை என்ற நதியின் துணை ஆறான குந்திப்புழை என்ற ஆறு ஏறக்குறைய 25 கி.மீ தூரம் அமைதிப் பள்ளத்தாக்கின் வழியாக மனிதரால் தீண்டப்படாமல் பரிசுத்தத்துடன் ஓடுகிறது.
அரியவகை மீன் இனங்கள், அரியவகை நீர்வாழ் உயிரினங்கள், விலைமதிப்பிட முடியாத மருத்துவக் குணம் நிறைந்த மரங்கள், செடிகள், கொடிகள் போன்றவை இங்கு ஏராளமாகக் காணப்படுகின்றன. 50 லட்சம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய பிரதேசம் ஆகும் இது என்று கருதப்படுகிறது. இங்குள்ள காடுகளில் 89.54 சதுர கி.மீ கன்னி வனங்கள் ஆகும். இதில் 70 சதுர கி.மீ பகுதியும் மழைக்காடுகள் ஆகும்.
கொளுத்தும் வெயிலிலும் மழை பொழியும் அபூர்வமான ஒரு இடம் இது. 2000க்கும் அதிகமான தாவர வகைகள் இதுவரை இங்கிருந்து கண்டறியப்பட்டுள்ளன. 200 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் சில பறவைகள் இங்கு மட்டுமே காணப்படுபவை (endemic) ஆகும். 25 இனங்களைச் சேர்ந்த தவளைகள் இந்தப் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 4 இனங்கள் இங்கு மட்டுமே உள்ளவை ஆகும். 225 இன வண்டுகள், 100க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகள், 55 இனப் பாம்புகள் இங்கு வாழ்கின்றன. 315 இன உயிரினங்கள் இங்கு உள்ளன. இவற்றில் 34 இனங்கள் பாலூட்டிகள் ஆகும்.
புலி, வரையாடு, கருங்குரங்கு, சிங்கவால் குரங்கு, மலை அணில், பலவிதமான பாம்புகள் போன்ற அரியவகை பல உயிரினங்கள் வாழும் சொர்க்கபூமி ஆகும் அமைதிப் பள்ளத்தாக்கு. அமெரிக்க விலங்கியலாளரான ஸ்டீபன் க்ரீன் 1971 - 1972 காலகட்டத்தில் இங்கு வாழும் சிங்கவால் குரங்குகளைப் பற்றி ஆய்வு செய்தார். இந்தப் பள்ளத்தாக்கு உட்பட்ட அபூர்வமான சில மேற்குத்தொடர்ச்சி மலைப்பிரதேசங்களில் மட்டுமே இந்த வகைக் குரங்கு வாழ்ந்து வருகிறது.
இன அழிவை எதிர்நோக்குகின்ற இந்தக் குரங்கினம் மற்ற குரங்குகளிடம் இருந்து வித்தியாசமானது. கருப்பு நிறமும், முகத்தைச் சுற்றிலும் சிங்கத்திற்கு உள்ளதைப் போல சடைமுடியும் இதன் சிறப்பு அம்சங்கள் ஆகும். குறுகிய வாலின் முனையில் உரோமங்கள் அடர்த்தியாகக் காணப்படுகின்றன. மனித வாசமே இல்லாத அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற பசுமை மாறாக் காடுகளில் மட்டுமே இந்த இனத்தைச் சேர்ந்த குரங்குகள் வாழ்கின்றன. ஒரு மரத்தில் இருந்து இறங்கித்தான் இவை இன்னொரு மரத்தின் மீது ஏறுகின்றன. கருங்குரங்குகள் போல ஒரு மரத்தில் இருந்து குதித்துத் தாவி மற்றொரு மரத்திற்குச் செல்லும் பழக்கம் இவற்றிடம் இல்லை. பூக்களையும், இலைகளையும், பழங்களையும் மட்டும்தான் இவை உணவாக உட்கொள்கின்றன. கூட்டமாகவும், தனியாகவும் காணப்படுகின்றன. அமைதிப் பள்ளத்தாக்கின் பாதுகாப்பிற்காக நடந்த போராட்டத்தின் ஒரு அடையாளச் சின்னமாக சிங்கவால்குரங்கு இருந்தது.
அமெரிக்காவில் பாம்புகள் பற்றி ஆராய்வதில் நிபுணரான ரோமுலஸ் விட்டேக்கர் இந்தக் காடுகளில் வாழும் பாம்புகள் பற்றி ஆய்வை மேற்கொண்டார். இந்தக் காடுகளின் பல்லுயிர்த்தன்மைச் சிறப்புகளை வலியுறுத்தி அவர் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் சஞ்சிகையில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார்.
அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசம் இப்போதும் முழுமையாக அறியப்படாத ஒரு பொக்கிஷமாகவே திகழ்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கு என்கிற மாபெரும் கடலில் இருந்து சில சிப்பிகளை மட்டுமே பொறுக்கி எடுக்க மனிதர்களால் முடிந்துள்ளது என்று அவர் கருதினார். இதை ஒரு பசுமைமாறாக் காடாக மட்டும் கருத முடியாது என்றும், புராதனமாக இயற்கை அன்னை கொலுவிருக்கும் ஒரு கர்ப்பக்கிருகமாகக் கருத வேண்டும் என்றும் சலீம் அலி விரும்பினார். மனித நன்மைக்காக இந்தப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று சலீம் அலி கருதினார். 1930களில் திருவிதாங்கூரிலும், கொச்சியிலும் ஆய்வுகளை நடத்திய சலீம் அலிக்கு கேரளாவில் உள்ள வனங்களைப் பற்றிய நல்ல புலமை இருந்தது.
அமைதிப் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக உருவெடுத்தபோது கண்களை மூடிக்கொண்டு அதற்கு ஆதரவாகக் குரல் உயர்த்தினார் சலீம் அலி. அமைதிப் பள்ளத்தாக்கு வழியாக ஓடும் குந்திப்புழை ஆற்றின் குறுக்கே அணை கட்டி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் 1921ஆம் ஆண்டு முதலே இருந்தது. 1970களில் இந்த எண்ணத்திற்கு வலு சேர்ந்தது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் 7 சதுர கி.மீ அளவிற்கு காடுகள் நீரில் மூழ்கிப் போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டது. மாநில மின்வாரியம் மத்திய அரசின் மின்வாரியத்திடம் இருந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனுமதியையும் பெற்று விட்டது.
1973ஆம் ஆண்டில் இந்த அனுமதி பெறப்பட்டது. நிதிக் கமிஷனும் பச்சைக் கொடி காட்டிவிட்டது. ரூ.24.88 கோடி அணைகட்டு கட்டுவதற்காக ஆகும் செலவு என்று திட்டமிடப்பட்டிருந்தது. 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டம் ஆகும் இது. மாநில அரசிடம் தேவையான தொகை இல்லாததால் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது காலதாமதமாகிக் கொண்டிருந்தது.
1976ஆம் ஆண்டில் தேசிய சுற்றுச்சூழல் திட்டமிடல் கமிட்டியின் (National Committee on Environmental Planning) உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு ஜாபர் ஃபதேஹல்லியின் தலைமையில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சூழல் பிரச்சினைகளைப் பற்றி ஆராய வந்தது. ஜாபர் ஃபதேஹல்லி சலீம் அலியின் குடும்ப உறவினரும் ஆவார். இந்தக் கமிட்டி அமைதிப் பள்ளத்தாக்கில் ஆய்வுகள் செய்தபிறகு நீர்மின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று சிபாரிசு செய்தது. அமைதிப் பள்ளத்தாக்கில் உள்ள வனங்கள் பல்லுயிர்த்தன்மையின் முக்கிய மையம் ஆகும் என்றும் அந்தக் கமிட்டி வலியுறுத்தியது.
அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தை ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவினர் பரிந்துரை செய்தனர். இந்நிலையில் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சிகளும் வீறு கொண்டு எழுந்தன. கேரள சட்டசபை அரசியல் வேறுபாடு இல்லாமல் ஒருமனதாக அமைதிப் பள்ளத்தாக்கு நீர்மின் திட்டத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியது. சர்வகட்சிக் குழு டெல்லிக்குச் சென்று அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயை நேரில் சந்தித்து நீர்மின் திட்டத்தைக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதற்கான உத்தரவாதத்தையும் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டு திரும்பியது. இடது, வலது கட்சிகள் திட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிணைந்து கைகோர்த்தன. ஒரு சக்தியாலும் திட்டம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது.
அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் போராட்டத்தில் குதித்தவர்கள் எல்லோரும் அரசியல் சார்பற்ற எழுத்தாளர்களும், விஞ்ஞானிகளும்தான். பிரபலமான ஊடகங்களின் ஆதரவு ஆரம்பத்தில் இல்லை. மலபார் பிரதேசத்திற்கு மின்சாரம் கொண்டு செல்வதற்கான ஒரு அரிய வாய்ப்பாகவே அமைதிப் பள்ளத்தாக்கு நீர்மின் திட்டத்தைப் பலரும் நினைத்தனர். ஆனால், அப்போது மற்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்றுக்கொண்டிருந்த கேரள மின்வாரியம், மலபாரில் மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கு வேறு வழிகளில் முயல தடை எதுவும் அப்போது இல்லாமல்தான் இருந்தது. இந்த நிலையில் திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரச்சாரங்கள் சூடுபிடித்தன.
திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களில் பலரும்கூட திட்டம் ஒருபோதும் கைவிடப்படும் என்பதற்கான ஒரு அறிகுறியையும் காணவில்லை.
இந்தச் சூழ்நிலையில்தான் உலகப்புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரான சலீம் அலியின் வலிமை வாய்ந்த குறுக்கீடு அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றுவதற்காக ஏற்பட்டது. திட்டத்திற்கு எதிராக அவரின் குரல் ஓங்கி ஒலித்தது. எவ்வாறேனும் எந்த விலை கொடுத்தாவது அமைதிப் பள்ளத்தாக்கு என்ற அந்த இயற்கையின் ஆலயம் ஒரு பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று திடமாக நினைத்தார் சலீம் அலி. நீலகிரி உயிர்க்கோளப் பிரதேசத்திற்கு (Nilgiri Biosphere Reserve) உட்பட்ட அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது வேறு எவரைக் காட்டிலும் சலீம் அலிக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அங்கே ஒரு நீர்மின்நிலையத்தை எழுப்பி அழகு நிறைந்த அந்தப் பள்ளத்தாக்கை மூழ்கச்செய்து கொல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு முடியிழையில் அந்தப் பள்ளத்தாக்குக் காப்பாற்றப்பட்டதற்காக நாம் அனைவருமே சலீம் அலிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
அதற்காகத் தானே அமைதிப் பள்ளத்தாக்குப் பாதுகாப்புப் போராட்டங்களின் தலைவர் ஆனார் சலீம் அலி. அவருடைய தலைமையில் நடந்த போராட்டங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட ஆரம்பித்தன. சர்வகட்சிச் சங்கம் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தம் செலுத்திக் கொண்டிருந்தது. “அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றுவதற்கான தோற்கப்போகின்ற போராட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் கூறினார். அவர் கூறியது போலவே யாரும் அந்தத் திட்டம் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
ஆனால், எல்லோரையும் ஆச்சரியத்தில் மூழ்கச்செய்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நீர்மின் திட்டத்தைக் கைவிடத் தீர்மானித்தார். இந்திய நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்பும், இதற்குப் பின்பும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது கிடையாது.
இந்திரா காந்தியிடம் அதிகமான செல்வாக்கு பெற்றிருந்த சலீம் அலியே இதற்குக் காரணம். சலீம் அலியின் வற்புறுத்தலால்தான் திட்டத்தை இந்திரா காந்தி கைவிட்டார். சூழலியலாளர்களுக்கும், வளர்ச்சி வேண்டும் என்று வாதிப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு மோதலாக அமைதிப் பள்ளத்தாக்குப் பிரச்சினை மாறிவிட்டது. சர்வதேச அளவில் கூட இது ஒரு சூடான விவாதத்தைக் கிளப்பிவிட்டது.
எல்லா ஏற்பாடுகளும் முன்னேறிக் கொண்டிருந்த அன்றைய அந்தச் சூழலில் திட்டத்தைக் கைவிடுவது என்பது இந்திரா காந்திக்கு அரசியல்ரீதியாக நன்மையைக் காட்டிலும் தீமையையே ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. குறிப்பாக அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி இருந்த சூழ்நிலையில், இந்திய மக்கள் இந்திரா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் தண்டனை கொடுத்து மூலையில் முடங்கச்செய்த அனுபவத்தின் பின்னணியில் அப்படி ஒரு தீர்மானத்தை இந்திரா காந்தி துணிச்சலுடனேயே எடுத்தார்.
ஜவஹர்லால் நேருவிடம் இருந்ததைப் போல இந்திரா காந்தியிடமும் சலீம் அலி அதிக செல்வாக்குடன் விளங்கினார். சலீம் அலி எழுதிய புத்தகத்தையே சிறிய வயதில் இந்திரா காந்திக்கு பிறந்தநாள் பரிசாக அவரின் தந்தை நேரு முன்பு வழங்கி இருந்தார் என்றால் அந்த இரு பிரதமர்களுடன் சலீம் அலிக்கு இருந்த நெருக்கத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இரண்டு பிரதமர்களுக்குமே சலீம் அலியின் மீது ஒரு தனிப்பட்ட பாசம் இருந்தது. நாட்டின் பொதுவான நன்மைக்காக மட்டுமே சலீம் அலி எதையும் சொல்லுவார், செய்வார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவர் மீது அவர்கள் இருவருக்குமே இருந்தது.
அதனால் சலீம் அலியின் தேவையான ‘அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை இந்திரா காந்தியால் நிராகரிக்க முடியவில்லை. தற்காலிகமாக ஏற்படும் அரசியல் மேன்மையைக் காட்டிலும் நீடித்த நிலையான நாட்டின் நன்மையே முக்கியம் என்ற எண்ணத்துடன்தான் சலீம் அலி செயல்படுகிறார் என்று இந்திரா காந்தி முழுமையாக நம்பினார்.
ஆனால், தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து தன் நண்பரான இந்திரா காந்தியைச் சங்கடத்தில் ஆழ்த்த சலீம் அலி விரும்பவில்லை. திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற சலீம் அலியின் கோரிக்கையை நிராகரிக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் இந்திரா காந்தி தவித்துப் போவாரோ என்று சலீம் அலி கவலைப்பட்டார். ஆனால், தான் இவ்வாறு செய்யவில்லை என்றால் பழம்பெருமை வாய்ந்த ஒரு உயிர்க்கோளம் ஒட்டுமொத்தமாக தண்ணீருக்குள் மூழ்கிப் போய்விடும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.
சவால் நிறைந்த அந்தச் சூழ்நிலையில் சலீம் அலியின் மீது அழுத்தம் செலுத்தக்கூடிய ஒரு சக்தியாகச் செயல்பட்டது அவருக்குப் மிகவும் பிரியமான அவருடைய மாணவி தில் நவாஸ் என்பவரே ஆவார். அவர் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
சலீம் அலியின் தலைமையின் கீழ் ஒரு அமைதிப் பள்ளத்தாக்குப் பாதுகாப்புச் சங்கத்தை ஏற்படுத்தி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இயற்கையைப் பாதுகாப்பதில் ஒரு பிரச்சாரத் தூதுவராகச் செயல்பட்டது தில் நவாஸ்தான். அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்ற வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டி சலீம் அலி இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும் என்ற உறுதியான ஒரு சூழ்நிலையில் இன்னும் ஒரு கடிதத்தையும் பிரதமருக்கு எழுத வேண்டும் என்று தில் நவாஸ் சலீம் அலியிடம் கோரினார்.
அப்போது சலீம் அலி, “திட்டத்தை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுவதற்கான நேரமும் காலமும் கடந்து போய்விட்டது.. இன்று உள்ள சூழ்நிலையில் அவ்வாறு செய்வது அசாத்தியமானது ஆகும்.. பாறங்கல்லில் தலையை மோதிக்கொள்ளும் இந்த முயற்சியில் இருந்து பின்வாங்கிவிடக் கூடாதா?” என்றார்.
ஆனால், தில் நவாஸ் விட்டுக்கொடுப்பதாக இல்லை. “நாம் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று சொல்வது அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதிகள் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியதற்குப் பிறகா?” என்று வேதனையுடன் அவர் கேட்டார்.
சலீம் அலி ஒரு நிமிட நேரம் சிந்தித்தார். “இந்திரா காந்தி சங்கடப்பட்டாலும் பரவாயில்லை.. திட்டத்தைக் கைவிட்டே ஆக வேண்டும் என்று உறுதியுடன் கூறுவோம்..”, என்று பதில் சொன்னார் சலீம் அலி. சொல்லிவிட்டு அவர் ஒரு பெருமூச்சு விட்டார். அது ஒரு சுபசகுணமாக தில் நவாஸிற்குத் தோன்றியது. அதன்பின் திட்டத்தைக் கைவிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி எழுதப்பட்டிருந்த கடிதத்தில் சலீம் அலி கையெழுத்திட்டார்.
“அமைதிப் பள்ளத்தாக்கு காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியம் பற்றி காங்கிரஸ்காரர்களிடம் சொல்லி அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்” என்று சலீம் அலி எழுதிய கடிதத்தில் இந்திரா காந்தியிடம் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். கேரளாவில் உள்ள காங்கிரஸ்காரர்கள் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று இந்திரா காந்தியின் மீது வலுவான அழுத்தம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். இதை சலீம் அலியும் புரிந்துகொண்டிருந்தார்.
கடிதம் கிடைத்தவுடன் இந்திரா காந்தி சலீம் அலியை டெல்லிக்கு வருமாறு அழைத்தார். திட்டத்தைக் கைவிடுவது பற்றிப் பேசுவதற்கு அரசியல் காரணங்களால் இந்திரா காந்தியால் முடியவில்லை. அந்த அளவிற்கு வேலைகள் முன்னேறிவிட்டிருந்தன. “பார்க்கலாம்” என்று சலீம் அலிக்கு பிரதமர் வாக்குறுதி கொடுத்தார்.
கேரளாவில் “கேரளாவின் பறவைமனிதன்” என்று போற்றப்படும் இந்துசூடன் அவர்களின் தலைமையில் கேரள இயற்கை வரலாற்றுச் சங்கத்தினரும் (Kerala Natural History Society – KNHS), கவிஞர் சுகதகுமாரி அவர்களின் கீழ் செயல்பட்டு வந்த “இயற்கைப் பாதுகாப்புச் சமிதி”, பேராசிரியர் K.M. பிரசாத் அவர்களின் கீழ் செயல்பட்டு வந்த “கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்” போன்ற அமைப்புகளும் திட்டத்திற்கு எதிராகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன.
இயற்கை ஆர்வலர்களைப் பலரும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். அமைதிப் பள்ளத்தாக்கு வனங்களில் உள்ள சிங்கவால்குரங்குகளுக்காக வளர்ச்சியைத் தடுப்பவர்களே போராட்டம் செய்கிறார்கள் என்று கடுமையான குற்றச்சாட்டு போராட்டக்காரர்கள் மீது சுமத்தப்பட்டது. திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் என்றும், நாட்டை வெளிநாட்டுச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுக்கும் துரோகிகள் என்றும், உளவாளிகள் என்றும் எல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
அந்தச் சமயத்தில் திட்டத்திற்கு ஆதரவாகவே பெரும்பாலான ஊடகங்களும் நிலைப்பாடு எடுத்திருந்தன. சில தேசியப் பத்திரிகைகளும், அரிதாக சில பிராந்தியப் பத்திரிகைகளும் இயற்கை ஆர்வலர்களின் அச்சங்களுக்கு ஆதரவு தெரிவித்தன. என்றாலும் விஷயங்கள் மொத்தத்தில் திட்டத்திற்கு ஆதரவாகவே சென்றுகொண்டிருந்தன.
ஒரு நிலையில் கேரள அரசாங்கம் சலீம் அலியை அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்திற்கு வரவழைத்து அங்கு பாதுகாக்கப்படுவதற்கு உரியதாக எதுவுமே இல்லை என்று நிரூபிக்க முயன்றது. ஆனால், அமைதிப் பள்ளத்தாக்கிற்கு வருகை புரிந்த சலீம் அலி அதைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி மேலும் வலியுறுத்திப் பேசினார். “இந்தக் கன்னி வனங்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் போய்த் தூக்கு போட்டுக்கொண்டு சாகலாம்” என்று அவர் தன்னுடன் இருந்த இயற்கை ஆர்வலர்களிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
சலீம் அலியின் வருகையால் எதிர்மறையான விளைவே ஏற்பட்டது என்று புரிந்துகொண்ட கேரள மின்வாரியமும், கேரள அரசும் முன்பை விடவும் கூடுதலான வைராக்கியத்துடன் அதன் பின் செயல்பட ஆரம்பித்தன. அமைதிப் பள்ளத்தாக்கு வருகை தொடர்பாக 1979 அக்டோபர் 21ஆம் தேதி திருவனந்தபுரம் V.J.T. ஹாலில் அழைக்கப்பட்டிருந்த கூட்டத்தில் சலீம் அலி பங்கேற்பதாக இருந்தது. ஆனால், மின்வாரியம் திருவனந்தபுரம் முன்சீப் நீதிமன்றத்தை அணுகி சலீம் அலி அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடை விதிக்கும் விதத்தில் ஆணை பெற்றது.
இது இயற்கை ஆர்வலர்களின் சினத்தைத் தூண்டும் விதமாக மாறியது. சலீம் அலி போன்ற உலகப் புகழ் பெற்ற ஒரு பறவையியல் அறிஞரை கூட்டத்தில் பங்கேற்க விடுவதில்லை என்று அன்றைய மின்வாரியமும், கேரள அரசாங்கமும் முடிவு செய்தது திட்டம் தொடர்பான சந்தேகங்களைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தியது.
பேராசிரியர் M.S. சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர் M.G.K. மேனன் ஆகியோரின் தலைமையில் அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அந்தப் பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்தன.. என்றாலும் திட்டத்தைக் கைவிடுவது பற்றிய தீர்மானம் பிரதமரிடமிருந்தே வரவேண்டி இருந்தது.
அமைதிப் பள்ளத்தாக்கு குறித்த எல்லாவிதமான பிரச்சினைகளையும் பரிசீலனை செய்து திட்டத்தைக் கைவிடுவதுதான் நாட்டிற்கு நல்லது என்பதைப் புரிந்துகொண்டு பிரதமர் இந்திரா காந்தி 1983 நவம்பரில் “அமைதிப் பள்ளத்தாக்குத் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று மாநில அரசிற்கு ஆலோசனை வழங்கினார். பிரதமரின் மனதை அறிந்த அன்றைய கேரள முதல்வர் K. கருணாகரன் தீர்மானத்தை அனுசரித்து நடந்துகொண்டார்.
இத்துடன் இந்தியச் சூழல் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரு அணைகட்டு இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முதன்முதலாகக் கைவிடப்பட்டது.
1984 அக்டோபர் 31ஆம் நாள் இந்திரா காந்தி அவருடைய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1984 நவம்பர் 23ஆம் நாள் அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தைத் தேசியப் பூங்காவாக அறிவித்து ஆணை வெளியிடப்பட்டது. 1985 செப்டம்பர் 7ஆம் நாள் அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தை ஒரு தேசியப் பூங்காவாக அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே ஒரு மகத்தான நன்மை செய்த மாமனிதராக சலீம் அலி இதன் மூலம் என்றும் போற்றப்படுவார்.. நினைவுகூரப்படுவார்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- புழல் தி.பாலகுமார்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
விக்ரமன்: நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.
வீரப்பிரதாபன்: யாருடைய குடும்பத்தைக் குறித்துப் புகழ்கிறாய்? பாடுகிறாய்?
விக்ரமன்: எங்கள் குடும்பம்தான். தோட்டத்தில் கீழாநெல்லிச் செடி வளர்க்கிறோம். இலைகளை அரைத்துத் தேய்த்துத் தலைமுழுகி வருகிறோம். கண்பார்வை தெளிவாகிறது. தலைமுடி நன்கு வளர்கிறது. அதனால் நல்லதொரு குடும்பமாக இருக்கிறோம்.
வீரப்பிரதாபன்: நன்று சொன்னீர். உங்கள் குடும்பம் மட்டுமல்ல, அந்தச் கீழாநெல்லிச் செடியின் குடும்பமும்தான். வயல்கள், வேலியோரங்களில் களையாக வளரும் கீழாநெல்லி நல்ல மூலிகையாகும். வயிற்று மாந்தம், சீதபேதி, காமாலை, கண்நோய்களுக்கு நன்மருந்து. இலையை அரைத்துச் சிரங்கு மற்றும் காயத்திற்குத் தடவுவதுண்டு. கீழாநெல்லித் தைலம் தேய்த்துத் தலைமுழுகி வந்தால் சூடு தணிந்து கண் எரிச்சல் நீங்கும் என்பது அனுபவ நாட்டு வைத்தியம். தலைமுடி வளரும் என்பதும்தான். ஆமணக்குக் குடும்பம் யூபோர்பியேசியின் (Euphorbiaceae) ஒரு கிளைக் குடும்பம் நெல்லி இனம். அந்த இனத்தின் சிறுசெடியான கீழாநெல்லியைக் கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி எனவும் அழைப்பர். இதன் பூக்கள் பில்லாந்தஸ் என்ற வகை, அதாவது இலைப் பூக்கள்; சிறிய பசுமஞ்சள் நிறப் பூக்கள். களைச்செடி என்று ஒதுக்காமல் அறிவுக்கண் கொண்டு ஆய்ந்து மருந்தாகப் பயன்படுத்தினர். இதே குடும்பத்தின் 'மல்லோட்டஸ் பிலிப்பினென்சிஸ்' (Mallotus philippensis) என்ற சிறிய மரத்தைக் குங்கும மரம் என்பர். இதன் காயின் மேற்புறம் பிரகாசமான ஆரஞ்சு நிறத் துகள்கள் குங்குமம் போலக் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. இம்மரத்தைக் கமீலா, சிந்தூரி, கபிலி என்பர். நிழலுக்காக, மழைக்காக வளர்ப்பர். காய்களைச் சமைத்துச் சாப்பிடுவதாகப் பதிவுகள் ஏதுமில்லை.
வெர்பினேசியே (Verbenaceae) என்ற அரிய குடும்பத்தின் 'ஃபைலா நோடிஃப்ளோரா' (Phyla nodiflora) எனும் பொடுதலை என்ற மூலிகைச் செடியின் எண்ணெயையும் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை இருக்காது. சிவப்பும் வெள்ளையும் கலந்த அழகான பூக்கள். இதில் லிப்பிஃப்ளூரின், ரூடின் போன்ற வேதிமங்கள் உள்ளன. பொடுதலை இலைகளை நெய்யில் வதக்கித் துவையலாகச் செய்து உண்டனர். மலச்சிக்கலுக்கு மருந்துணவு இது. இலைச்சாறு கொசுப்புழுக்களை அழிக்கும் என்று அறிந்தனர். காய்களும் மருந்தாகப் பயன்பட்டன என்றார் ஒரு கிராமத்துப் பெரியவர். ஆனால் அப்படியே அக்காய்களைச் சாப்பிடக் கூடாது என்பார்.
விக்ரமன்: எந்தக் காய்களைச் சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்று எப்படி அறிவது? ஏதும் குறிப்புகள் உள்ளதா?
வீரப்பிரதாபன்: எந்தக் காய்களைச் சாப்பிட வேண்டும், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்ற அனுபவ அறிவு நம் மக்களிடையே நிறைய உள்ளது. மரபுவழி அனுபவ அறிவியல் அறிவு. எது மருந்து, எது உணவு, எது விஷம் என்று பாகுபடுத்தி அறியும் அறிவுக்கண் இயல்பாகவே உண்டு. பயனுள்ளதை அதிகம் பயன்படுத்துவர். அதிகம் பயனாகும் வேறொரு சிறந்த குடும்பம் பூசணிக் குடும்பம். குக்கர்பிட்டேசியே (Cucurbitaceae) எனும் பூசணிக் குடும்பத்தின் பல உறுப்பினர்கள் பிரபலம்.
- குக்கர்பிட்டா மஸ்க்கேட்டா (Cucurbita moschata) எனும் அறிவியல் பெயர் கொண்ட பூசணி,
- குக்குமிஸ் மேலோ (Cucumis melo) எனும் முலாம்பழம்,
- குக்குமிஸ் சட்டைவஸ் (Cucumis sativus) எனும் வெள்ளரி,
- சிட்ருலஸ் வல்காரிஸ் (Citrullus vulgaris) எனும் தர்பூசணி எனும் கும்மட்டிப்பழம்,
- குக்கர்பிட்டா சிற்றினமான பறங்கிக்காய்,
- ட்ரிக்கோசாந்திஸ் பேரினத்தின் ஆங்குவினா (Trichosanthes anguina) எனும் புடலங்காய்,
- லுஃபா (Luffa) எனும் பீர்க்கங்காய்,
- லாகினேரியா (Lagenaria) எனும் சுரைக்காய்,
- பெனிங்காசா (Benincasa) எனும் சாம்பல் பூசணி,
- மோமார்டிக்கா (Momordica) எனும் பாகற்காய்,
- காக்சீனியா (Coccinia) எனும் கோவைக்காய்,
- குக்குமிஸ் பியூபெசென்ஸ் (Cucumis pubescens) எனும் சுக்கங்காய்,
- செக்கியம் எடூலி (Sechium edule) எனும் சௌசௌ அல்லது சீமைக் கத்தரி
என்று சமையலுக்கு உதவும் பல கொடிக்காய்கள் இக்குடும்பத்தில் உள்ளன. பெரிய குடும்பம்.
விக்ரமன்: ஆஹா! ஆஹா! அருமையான காய்கனிகள். எனக்குப் பிடித்தவை.
வீரப்பிரதாபன்: ஆம். சுவையும் சத்தும் கொண்ட காய் மற்றும் பழச்செடிகளும் உள்ள நல்ல அரிய குடும்பம். 'மீலோத்ரியா' எனும் முசுமுசுக்கைக் கொடியின் வேரும் இலையும் காயும் கூட மருந்தாகின்றன. ஐவிரலிப் பழச்செடி, சவரிக் கொடி, பேய்ப்புடல், ஆகாசகருடன், காட்டுத்தும்மட்டிச் செடிகளும் இக்குடும்பப் பிள்ளைகள். பூசணிக் குடும்பச் செடியின் தண்டுகள் சாறுள்ளவை; நீளமான காம்புள்ள இலைகள். பற்றுக்கொம்பில் ஏறுகொடியாகப் பற்றுக்கம்பிகள் சிறப்பு. தடித்த தோல் கொண்ட, பல நாள் கெடாத கனிகளும் இக்குடும்பத்தின் சிறப்பு.
விக்ரமன்: அதிலும் அந்த பீர்க்கங்காயின் தோலைச் சீவிவிட்டுச் சதைப்பற்றைப் புளி, மிளகாய் சேர்த்துத் துவையல் அரைத்துச் சாப்பிட்டால் சுவையோ சுவை!
வீரப்பிரதாபன்: பீர்க்கங்காய் நெற்றை வீணாக்க மாட்டார்கள் நம் புத்திசாலி முன்னோர்கள். அந்த நெற்றைக் காயவைத்து அதிலிருந்து பீர்க்கநார் எடுப்பர். அந்த நாரைக் கடற்பஞ்சு போலத் தேய்த்துக் கழுவப் பயன்படுத்துவர். நன்கு முற்றிய சுரைக்குடுக்கையைச் சுரண்டிப் பக்குவப்படுத்திச் சுரைக்குடுக்கை செய்து, நீர் மிதப்பானாகவும் பொருட்களை வைக்கும் கலயமாகவும் பயன்படுத்தினர். உருண்டை வடிவ சுரைப்பிருடையை வீணை, தம்புரா போன்ற இசைக்கருவிகளுக்கு அனுநாத உறுப்பாகப் பயன்படுத்தினர். சுரைக்குடுக்கை இயற்கையான லைஃப் போட் (Lifeboat) எனப்படும் வாழ்க்கைப்படகு.
விக்ரமன்: சுரைக்குடுக்கை நீச்சல் உபகரணம் என்று அறிவேன். ஆனால், அது தம்புரா இசைக்கருவியானது என்பதை அறியும்போது வியப்பாக உள்ளது.
வீரப்பிரதாபன்: 'கார்தமஸ் டிங்டோரியஸ்' (Carthamus tinctorius) எனும் சாஃபிளவர் (Safflower) செடியைக் குசும்பாச் செடி என்பர். ஒரு காலத்தில் இச்செடியில் இருந்து உணவுக்குப் பயன்படும் விதமான எண்ணெய் பிரித்தெடுத்தனர். சற்றுத் தரம் குறைவானது எனினும் அதிகம் பயன்பட்டது. மற்றவை பரவிய பின் அது மறக்கப்பட்டது. பலருக்கு அந்தச் செடியைப் பற்றித் தெரியாது. கம்போசிட்டே (Compositae) குடும்பப் பிள்ளை குசும்பாச் செடி. இதன் காயின் நிறம் வெளுப்பு; உள்பருப்பு மஞ்சள் நிறம். விதைகளில் முப்பது சதவீதம் எண்ணெய் உண்டு. அந்த விதைகளைச் செக்கிலிட்டு ஆட்டி எடுத்த எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தியதோடு, மெழுகுத்துணி தயாரிக்கவும் கண்ணாடித்துண்டுகளை ஒட்டவைக்கவும் பயன்படுத்தினர். விதையை வறுத்துச் சிற்றுண்டியாகத் தின்றதாகவும் தகவல் உண்டு. அவற்றைக் கிராமங்களில் கோழித் தீவனமாகக் கொடுத்தனர். அதன் பிண்ணாக்கும் நல்ல கால்நடை உணவாக இருந்தது. சிற்றுண்டி, தீவனம் எனப் பல பயன்பாடுகள்!
விக்ரமன்: குசும்பா எண்ணெயா? இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே?
வீரப்பிரதாபன்: தற்போது பயன்பாட்டில் இல்லை, அதனால் தெரியவில்லை. குதிரைமசால் கீரை எனும் அல்ஃபால்ஃபா (Alfalfa) அல்லது 'மெடிக்காகோ சட்டைவா' (Medicago sativa) எனும் செடியைப் பற்றியும் அதிகம் அறியவில்லை. இந்த லெகுமினேசி (Leguminosae) குடும்பச் செடியின் வேர்கள் பத்தடிக்கு மேல் இறங்கி ஆழமாகப் போய் அங்குள்ள நீரை உறிஞ்சும். இச்செடியின் இலைகள், தண்டுகள் எல்லாம் குதிரை, மாடுகளுக்குத் தீவனம். இதே குடும்பத்தின் 'எக்கினோக்ளோவா கலோனா' (Echinochloa colona) எனும் குதிரைவாலி சிறுதானியங்களில் கடைசி இடம் பெற்றாலும், பண்ணைத் தினை என அழைக்கப்பட்டுச் சத்தான உணவாகிறது. இதன் கதிர்கள் பார்ப்பதற்கு குதிரைவால் போன்று இருப்பதால் அப்படி அழைத்தனர். காரீய நிறத்தில் இருக்கும் உமியை நீக்கி அரிசி போல் சமைத்துச் சாப்பிடலாம். செடி அதிக உயரம் வளராவிட்டாலும் புகழில் உயர்ந்த இடம் பெற்றது. எதையும் குப்பையில் போட்டு வீணாக்குவதில்லை; எல்லாம் பயன்மயம்.
விக்ரமன்: ஆமாம். குதிரைவாலி பிஸ்கட் மிகப்பிரபலம், சுவையாக இருந்தது. அறிவியல் அறிவும் தெளிவும் மிக்கவர்கள் எதையும் வீணாக்க மாட்டார்கள். ஆனால், குப்பையில் வளரும் செடிகளையும் கோபுர உயரத்துக்குப் பயன்படுத்திப் புகழ் தருகின்றனர். குப்பை என்றதும் குப்பைமேனி என்ற பெயர் நினைவில் எழுகிறது. அது என்ன செடி? ஏதும் களைச்செடியா?
வீரப்பிரதாபன்: நாட்டு மருத்துவம் எனும் மூலிகை வைத்தியத்தில் பயன்படும் சிறந்த மூலிகைச் செடி குப்பைமேனி. பொடுதலையைப் போலவே இதுவும் களைச்செடி என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அலட்சியம் செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் சில பாட்டிகள் தம் வீட்டுச் சிறு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருப்பின், ஒரு இலையை அரைத்து உருண்டையாக்கிச் சிறு குழந்தையின் மலவாயிலில் இளக்கியாக இட்டு வைப்பர். நீண்ட நாள் நோய்ப்படுக்கையில் இருப்பவருக்கு ஏற்படும் படுக்கைப் புண்ணுக்கு உலர்ந்த இலைகளைப் பொடி செய்து பூசி நிவாரணம் காண்பர். எலுமிச்சைச் சாற்றில் இலைகளை அரைத்துப் படர்தாமரை போன்ற தோல் பிரச்சினைகளுக்குப் பற்று போட்டுக் குணம் காண்பர். சொறி, சிரங்குக்கும் இலைகளை உப்பு, சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் போடுவதுண்டு. இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கஷாயமாகச் செய்து பேதி நிற்பதற்குத் தருவர். பச்சை இலைச்சாறு குமட்டல் உண்டாக்கி வாந்தி ஏற்படுத்தும். இலைச்சாற்றை வேப்பெண்ணெய் சிறிதளவு கலந்து சிறு குழந்தைகளின் நாக்கில் தடவிக் குடலைச் சுத்தமாக்குவர்; கோழையும் வெளியேறும். காதில் அழுக்கு சேர்ந்து காது வலித்தால் கஷாயம் கொடுப்பர். தலைவலி மற்றும் மூக்கில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு இலைச்சாற்றைப் பஞ்சில் நனைத்து மூக்குத் துளையில் திரி போல வைப்பர்; நிவாரணம் தரும். காசநோய்க்கும் நிவாரணம் தந்ததாகப் பெரியவர்கள் கூறுவதுண்டு. அனுபவவாக்கு சத்தியவாக்கு.
விக்ரமன்: குப்பைமேனி எந்த அரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை?
வீரப்பிரதாபன்: ஆமணக்குக் குடும்பம். குப்பைமேனியின் அறிவியல் பெயர் 'அகாலிபா இன்டிகா' (Acalypha indica). தோட்டங்களில், சாலையோரம் மற்றும் வேலியோரங்களில் சாதாரணமாக வளரும் களைச்செடியான இந்தக் குப்பைமேனியில் அக்கலிபின் எனும் ஆல்கலாய்டும் டிரைஅசிடோன் எனும் அமீனும் உள்ளதை விஞ்ஞானம் அறிந்து வணிகப்படுத்திய பின் நாம் அதை மறந்துவிட்டோம். இன்று பலருக்கு இப்படி ஒரு செடி இருப்பதே தெரிவதில்லை. இதே இனத்தின் சின்னிச்செடியைத் தோட்டத்தில் அழகுக்காக வளர்க்கின்றனர். பல நிறங்களில் பெரிய இலைகளும் கதிர்களும் அழகானவை; ஆனால் பயன் அதிகமில்லை.
விக்ரமன்: குப்பைமேனி அழகாக இருக்காது, பயன்கள் அதிகம், அரிய மூலிகை; நவீன மனிதர் மறந்தனர், பலர் அறியவில்லை. சின்னி அழகு, அதிக பயன்களில்லை, ஆனால் பிரபலம். என்ன உலகம் இது?
வீரப்பிரதாபன்: நாம் தானே உலகம். நமக்கு வானமே எல்லை, உலகம் சிறக்கும். கொய்யா அறிவாய், சிறிய கொய்யா எனும் குரா அறிவாயா?
விக்ரமன்: என்ன, குராவா? சிறிய கொய்யாவா? ஒன்றும் புரியவில்லையே?
வீரப்பிரதாபன்: குப்பைமேனி மட்டுமல்ல, குராவையும் அதிகம் பேருக்குத் தெரியாது. வெட்சிக் குடும்பம் (Rubiaceae) ரூபியேசியின் 'கொமிலியா ஏஷியாடிகா' (Chomelia asiatica) எனும் குரவ மரத்தைக் குரா மரம் என்பர். சிறிய மரம்; பட்டை வழவழப்பானது, செம்பழுப்பு நிறம். இதன் கிளைகளில் ரெசின் பால் வடிந்து படிந்திருக்கும். வெண்மை நிறப் பூக்கள் நறுமணம் கமழும். சங்க காலம் முதல் பல இலக்கியங்களில் பாடப்பெற்ற குராவின் கனிகள் சிறிய கொய்யா போன்று இருப்பினும் உண்பதில்லை; மரத்தையும் மரவேலைக்குப் பயன்படுத்துவதில்லை. அதிகம் அறியப்படாத மற்றொரு மரம். இலக்கியத்தில் புலவர்கள் குரா மரத்தின் அரும்புகள் பாம்பின் பற்கள் போலவும், மலர்கள் சிறு பதுமைகள் போலவும் தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், நொச்சிக் குடும்பம் எனும் வெர்பெனேசியே (Verbenaceae) குடும்பத்தில் 'மீலைனா ஆர்போரியா' (Gmelina arborea) எனும் பெயருள்ள உமித்தேக்கு அல்லது பெருங்குமிழ் செடியில்… செடி என்பதை விட மரம் எனலாம்; நடுத்தர உயரம். மரப்பட்டை வழவழப்பாக வெண்சாம்பல் நிறமாக இருக்கும்; வளையாது, சுருங்காது. மரப்பலகை, மரச்சாமான் செய்ய உதவும். இன்னொரு வகை குமிழ்க் கொடி எனும் நிலக்குமிழ் மரத்தில் முட்கள் இருக்கும். இதில் மிக அழகான மஞ்சள் நிறப் பூக்கள் தொங்கும். இந்த மரத்தின் பலகை உதவாது; விறகாகவும் வேலையாக அடைக்கவும் உதவும். அழகான மரம்.
விக்ரமன்: அழகானது ஆபத்தானது என்பார்களே?
வீரப்பிரதாபன்: அழகாய் இருப்பதெல்லாம் ஆபத்து என்று அப்படிப் பொதுவாகக் குற்றம் சாட்ட முடியாது. எனினும் சில அழகான செடிகள் ஆபத்தானவை. அவற்றைப் பற்றி அறிந்து தவிர்ப்பது நல்லது. 'ஐகார்னியா' எனும் குளவாழை அல்லது பிசாசுத்தாமரை குளம், ஆறு என அனைத்து நன்னீர்ப் பகுதிகளிலும் வளர்ந்து, விரைந்து காடு போலப் பெருகி, நீர்ப்பரப்பை மூடிப் பெருந்தொல்லை தரும். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். குளமும் ஆறும் இவற்றின் வளர்ச்சியால் தூர்ந்துபோகும்; படகுப் போக்குவரத்தைச் சிக்கலாக்கும். இலைகள் அதில் விழுந்து அழுகி, நீரைக் குடிக்கத் தகுதியில்லாத அழுக்கு நீராக்கிவிடும். மீன்களும் குறைந்து, அழிந்து இல்லாமல் போகும். அழகான பூக்கள்! இவற்றில் கொசுக்கள் மிகுதியாகச் சேர்ந்து விரைவில் பெருகிச் சூழலைக் கெடுக்கும்; நோய்கள் பரப்பும். உண்மையில் இது பிரேசில் நாட்டுச் செடி. அழகான பூவையும் பசுமையான பளபளப்பான இலைகளையும் கண்டு ஏமாந்து, தோட்டங்களில் பொய்கைகளில் வளர்க்கலாம் என ஆராயாமல், விளைவுகளை உணராமல் யாரோ கொண்டு வந்து வளர்த்துவிட்டனர். இன்று பல நாடுகளிலும் நம் இந்தியாவிலும் மண்டிக்கிடக்கிறது. நீரில் மிதக்கும், சேற்றில் வேரூன்றும், பெருங்கூட்டமாக வளரும்; நன்னீரில்தான் வளரும். பான்டிடீரியேசியே (Pontederiaceae) குடும்பத்தின் இந்த ஆகாயத்தாமரையின் அறிவியல் பெயர் 'ஐகார்னியா கிராசிப்பஸ்' (Eichhornia crassipes). நீர்நிலைகளில் இவற்றை வளரவிடாமல் தடுத்து, நீர் ஆதாரங்களைக் காக்க வேண்டியது நமது கடமை. பல கிராமங்களில் அறிவு சிறந்த அறிஞர்கள் அக்கடமையைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர் என்பது ஆறுதலான தகவல். குறிஞ்சி மலர் போன்றவர்கள் அவர்கள்.
விக்ரமன்: குறிஞ்சி மலர்! அது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீலகிரியில் பூக்கும் அபூர்வ மலர் அல்லவா?
வீரப்பிரதாபன்: அறியவேண்டிய அரிய குடும்ப வாரிசுதான். அகாந்தேசியே (Acanthaceae) என்ற குறிஞ்சிக் குடும்பத்தின் 'ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ்' (Strobilanthes kunthiana) எனும் குறிஞ்சி மலர். ஏழிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய வகைகள் உள்ளன. இரண்டடி உயரச் செடி; தண்டு செந்நிறம். இருநூறு இனங்கள் வரை உள்ளன. பெரும்பாலும் பெரிய ஊதா நிறப் பூக்கள்; சில வெண்நிறக் குறிஞ்சி மலர்களும் உண்டு. அரிதாகச் சில மஞ்சள் மலர்களும் காணப்படும். பெரும்பாலும் ஊதாப் பூ கண்சிமிட்டும். தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வளர்பவை. நீலகிரியின் நீலமலர் குறிஞ்சி உலகப் பிரசித்தி பெற்றது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நீலமலையெல்லாம் குறிஞ்சி மலர்களே நீலநிறத்தில் பரவியிருக்கும். இடைப்பட்ட நாட்களில் ஒரு பூவைக் கூடக் காண முடியாது. சென்ற 2024 ஆம் ஆண்டில் நீலகிரியில் பூத்தது; பலர் கண்டு மகிழ்ந்தனர். 'மோனோகார்பிக்' (Monocarpic) என்ற வகையைச் சேர்ந்த தாவரமான குறிஞ்சி வளரும் உயரத்தை அடிப்படையாகக் கொண்டு குறிஞ்சி வகைகளுக்குப் பெயரிட்டனர். ஒரே குடும்பம்தான், எனினும் பெயர்கள் வேறு.
- இரண்டடி வளர்பவை கொடிக்குறிஞ்சி,
- ஆறடி கணுக்குறிஞ்சி,
- எட்டடி வெள்ளைக் குறிஞ்சி,
- பன்னிரண்டடி சோலைக்குறிஞ்சி,
- பதினைந்து அடி கருங்குறிஞ்சி.
மலைவாழ் பழங்குடி மக்கள் குறிஞ்சித்தழையைக் கால்நடை, குதிரைகளுக்குத் தீவனமாகத் தருவர். பூத்துக் காய்ந்ததும் செடிகளை விறகாகப் பயன்படுத்தினர். குறிஞ்சி மலரைத் தேடிப் பறவைகள், தேனீக்கள் கூட்டம் அலைமோதும்; காரணம் தேன். குறிஞ்சித்தேன் மிகவும் சுவையானது, மருத்துவக் குணம் கொண்டது. பொருளாதார மருந்துப் பயன்கள் என்று குறிப்பிடும்படி எதுவும் இல்லை எனினும், மனதுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மகிழ்ச்சியூட்டும் உயிர்ப்பன்மய நண்பர் குறிஞ்சி மலைமலர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் அதிகம் அறியப்படாதது, அழகானது, அரியது, அபூர்வமானது — அறிஞர், சான்றோர் போல.
விக்ரமன்: குறிஞ்சி மலர் மிக அபூர்வமானது. மனிதர்களிலும் இதுபோல அபூர்வமான குறிஞ்சி மலர்கள் உள்ளனர். இதை அறிஞர் நா. பார்த்தசாரதி 'குறிஞ்சி மலர்' என்று நூலாக எழுதினார்.
வீரப்பிரதாபன்: 'சைகஸ் செர்சினாலிஸ்' (Cycas circinalis) தாவரத்திலிருந்து சாகோ (Sago) என்ற பொருள் பெறப்படுகிறது. அது ஒரு ஸ்டார்ச் பொருள். போடோகார்ப்பஸ் (Podocarpus) செடி பிளைவுட் ஒட்டுப்பலகைகள் தயாரிக்க உதவுகிறது. 'பைனிட்டிஸ் சக்ஸினிபெரா'விலிருந்து (Pinites succinifer) ஆம்பர் பெறப்படும். 'ஏபிஸ்' (Abies), 'பைனஸ்' (Pinus) ஆகியன காகிதம் தயாரிக்க உதவுகின்றன. இவை கூம்புகனி எனும் கோனிஃபர் (Conifer) குடும்பச் செடிகள். இவை ஜிம்னோஸ்பெர்ம்கள் (Gymnosperms) எனப்படுகின்றன. உலகில் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் நிறைய பயன்கள் தருகின்றன.
விக்ரமன்: எனக்குச் சில தாவரங்களின் அறிவியல் பெயர்களைக் கூறுக. வாழை, தாமரை, காபி... இவற்றின் பயன்களைப் பற்றியும் சுருக்கமாக...
வீரப்பிரதாபன்: வாழைமரத்துக்கு 'மியூசா பாரடைசிகா' (Musa paradisiaca); பயன்கள் நீ அறியாததல்ல. பாக்குக்கு 'அரிகா கேடச்சு' (Areca catechu); உணவு செரிமானம் தரும். பாக்கு மரம் பனை குடும்பத்தைச் சேர்ந்தது, உணவுக்கலயம். தாமரைக்கு 'நிலம்பியம் ஸ்பீசியோசம்' (Nelumbium speciosum); தேசிய மலர், மூலிகை. கல்யாண முருங்கைக்கு 'எரித்ரைனா இன்டிகா' (Erythrina indica); மூலிகை. 'காஃபியா அராபிக்கா' (Coffea arabica) என்பது காபி; காஃபின் என்ற ஆல்கலாய்டு அதிலிருந்து பெறப்பட்டுப் பயன்படுகிறது. 'சிக்கோரியம் இன்டிபஸ்' (Cichorium intybus) தாவரத்திலிருந்து கிடைக்கும் வாசனைப்பொருள் சிக்கரி; காபிக்கு மணம் சேர்க்கும், உற்சாக பானம், உலக பானம்!
பாமேசியே (Palmaceae) எனும் பனைக் குடும்பத்தின் 'பொராசஸ் ஃபிளாபெல்லிஃபர்' (Borassus flabellifer) எனும் பனைமரத்தின் பயன்கள் சொல்லில் அடங்காதவை. பூலோக கற்பகத்தரு பனை நம் மாநில மரம். பாக்கும் பனையும் ஒரே குடும்பம்தான். இன்னும் நிறைய தாவரங்கள் உள்ளன. அவற்றின் அறிவியல் பெயர்கள், பயன்கள், கட்டுப்பாடுகள் அறிந்து முறைப்படி பயன்படுத்தி வாழ்வில் சிறக்கலாம்.
- புழல் தி. பாலகுமார்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காலநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவின் கரையோரம் மனிதர்களைக் கொல்லக்கூடிய ஆயிரக்கணக்கான புளூ பாட்டில்கள் (Blue Bottles) கரையொதுங்குகின்றன. எண்ணற்ற இந்த உயிரினங்கள் இறந்த நிலையில் கடற்கரையோரங்களில் ஒதுங்குகின்றன. இதைத் தொடர்ந்து கடலில் இறங்குபவர்கள் இவற்றின் அருகில் செல்ல வேண்டாம், இவற்றைத் தொட வேண்டாம் என்று அதிகாரிகள் முன்னெச்சரிக்கை செய்துள்ளனர்.
தொட்டால் ஆபத்து
நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியாவின் சில பகுதிகள், தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியாவின் கிழக்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் இவை ஏராளமாகக் கரையொதுங்கியுள்ளன. கடலில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம் காரணமாக இவை இவ்வாறு கரையொதுங்குகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈரப்பதம் இருக்கும் சுற்றுப்புறத்தில் இவற்றின் நஞ்சு நிரம்பிய டெண்டாக்கிள் (tentacles) எனப்படும் வளர்நீட்சிகள் மாதக்கணக்கில் நிலைநிற்கும்.
இவை கண்ணுக்குத் தெரியாத சளி போன்ற ஒரு திரவத்தை அருகில் வரும் எந்த ஒரு பொருளின் மீதும் பாய்ச்சுவதால் மரணம்கூட சம்பவிக்கிறது. இந்த உயிரினங்கள் குறித்து மேலும் தீவிரமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜெல்லி மீன் ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் லிசாஆங் கேஷ்வன் கூறுகிறார். கடலில் நிகழும் காலநிலை மாற்றம் இந்த உயிரினங்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் அடையக் காரணமாக அமைகிறது.
உயிரற்ற புளூ பாட்டில்கள் கடித்தால் கூட ஆபத்து என்பதால் இறந்த புளூ பாட்டில்களைக் கூடத் தொட வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வினோத உயிரினங்களுக்கு இறந்த பிறகும் கூடத் தொட்டால் தோலைக் குத்தக்கூடிய ஆற்றல் உண்டு! ஜெல்லி மீன் என்று இவை பொதுவாக அழைக்கப்பட்டாலும் இந்த உயிரினங்களை விஞ்ஞானிகள் அக்குடும்பத்தில் உட்படுத்தவில்லை. போர்ச்சுகீஸ் மேன் ஆஃப் வார் (Portuguese man of war) என்ற செல்லப் பெயரும் இவற்றிற்கு உண்டு.
பாய்மரக் கப்பல் போல் ஒரு தோற்றம்
முன்காலத்தில் இதே பெயரில் உண்டாகியிருந்த போர்க்கப்பலில் இருந்துதான் இவற்றிற்கும் இப்பெயர் ஏற்பட்டது. அதன் பாயை விரித்துவிட்டால் அவை இந்த உயிரினங்களின் வடிவம் போலத் தோற்றமளிக்கும். இதில் அட்லாண்டிக் போர்ச்சுகீஸ் மேன் ஆஃப் வார் (பைசேலியா பைசாலிஸ்-Physalia physalis) மற்றும் இந்தோ பசுபிக் போர்ச்சுகீஸ் மேன் ஆஃப் வார் (பைசாலியா யுட்ரிகுலஸ்-Physalia utriculus) என்ற இரண்டு இனங்கள் உள்ளன.
முதல் வகை உயிரினங்கள் அட்லாண்டிக் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வாழ்கின்றன. ஆனால் இந்தோ பசுபிக் புளூ பாட்டில்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் மட்டும் வாழ்பவை. இந்தோ பசுபிக் உயிரினங்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படுபவை போலக் குத்திக் கொல்லும் வகையில் பயங்கரமானவை அல்ல. கடிபட்டால் முதலுதவி சிகிச்சை மூலம் உயிர் பிழைக்கலாம்.
ஆனால் கடிபட்டவருக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது இதயம் தொடர்பான நோய்கள் இருந்தால் அவருக்கு உடனடியாகச் சிகிச்சை தரப்படவில்லை என்றால் மரணம் சம்பவிக்கக்கூடும். புள்ளிவிவரங்களின்படி இந்தோ பசுபிக் போர்ச்சுகீஸ் மேன் ஆஃப் வார் வகையைச் சேர்ந்த உயிரினங்கள் கடித்ததால் உலகளவில் மரணம் அடைந்தவர்கள் மிகக் குறைவு.
கூட்டுக் குடும்பமாக வாழும் உயிரினங்கள்
புளூ பாட்டில்கள் ஒற்றை உயிரினமில்லை. தண்ணீரின் மேல் மிதக்க உதவும் காற்று நிறைந்த பலூன் போல உள்ள ஒரு அறையும், அதற்குக் கீழ் தொங்கிக்கொண்டிருக்கும் நூல் போலுள்ள டெண்டாக்கிள்களும் சேர்ந்ததே இவற்றின் உடலமைப்பு. இதனால் இவை ஒவ்வொன்றும் ஒரு ஒற்றை உயிரினமில்லை. இவை டெண்டாக்கிள் போன்ற வடிவமுடைய பாலிப்ஸ் என்று அழைக்கப்படும் ஏராளமான உயிரினங்கள்.
இவை அனைத்தும் பலூனிற்குக் கீழ் ஒன்றுசேர்ந்து ஒரு காலனியாக உயிர் வாழ்கின்றன. இதனால் இவற்றை விஞ்ஞானிகள் ஜெல்லி மீன்கள் என்று அழைப்பதில்லை. ஜெல்லி மீன் என்பது ஒரு ஒற்றை உயிரினம். பல உயிரினங்கள் ஒன்றுசேர்ந்து வாழ்க்கை நடத்தினாலும் இவை ஒரு அலகாகவே இணைந்து இரை தேடுகின்றன. உடற்செல்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருப்பதால் இவை ஒன்றுசேர்ந்தே இரை தேடுகின்றன.
இவை சொந்தமாக நகரும் திறனற்றவை. இதனால் உட்கடலில் வாழும் இயல்புடைய இவை வலுவான காற்று, கடல் சீற்றம் போன்றவை ஏற்படும்போது பலூன் அமைப்புகளின் உதவியுடன் கடல்நீரில் மிதந்து கரையொதுங்குகின்றன. பருவமழைக் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக நடக்கிறது. இதனால் இந்நேரங்களில் இவை அதிக அளவில் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன.
அட்லாண்டிக்கில் காணப்படுபவற்றில் உள்ள காற்றறையின் அளவு 12 அங்குலம். இந்தோ பசுபிக்கில் வாழ்பவற்றின் காற்றறையின் அளவு 6 அங்குலம் மட்டுமே. இரண்டு வகை புளூ பாட்டில்களும் கூட்டமாகவே கடலில் பயணிக்கின்றன. இவற்றின் பலூன் போன்ற அமைப்பில் பாலிப்புகள் என்று அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன.
காஸ்ட்ரோ சூயிடுகள், கோனோ சூயிடுகள், டேக்டிலோ சூயிடுகள் ஆகிய பாலிப் வகைகள் பலூனிற்குக் கீழே காணப்படுகின்றன. நீரில் இரைகளைக் கண்டுபிடித்து அவற்றைத்தாக்கும் வேலையை டேக்டிலோ சூயிடுகள் செய்கின்றன. இவற்றின் முனையில் நஞ்சு நிறைந்த நீண்ட பகுதி உள்ளது. இப்பகுதி நிடோசைட்ஸ் (Cnidocytes) எனப்படுகிறது. இது இரையைக் குத்திக் கொல்ல உதவுகிறது.
பிறகு இப்பகுதி இரையைக் காஸ்ட்ரோ சூயிடு பகுதிக்குக் கொண்டு சேர்க்கிறது. இப்பகுதியே இந்த உயிரினங்களின் செரிமானத்திற்கு உதவும் பகுதிகள். முட்டையிட, விந்தணுக்களை வெளித்தள்ள கோனோ சூயிடுகள் உதவுகின்றன. காற்று, கடற்சீற்றத்தால் பெரும் கூட்டத்திலிருந்து தனித்து விடப்படும் புளூ பாட்டில்களே கரையொதுங்குகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
யுட்ரிகுலஸ்கள் ஆஸ்திரேலியக் கடற்கரையில் நேரிடும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்று. இங்கு இவற்றின் நஞ்சு நிறைந்த டெண்டாக்கிள்கள் ஒரு சில சென்டிமீட்டர் முதல் மீட்டர்கள் வரை நீளத்தில் காணப்படுகின்றன. அட்லாண்டிக் போல அந்த அளவு ஆபத்தானவை இல்லை என்றாலும் இவை கடித்தால் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக வலி இருக்கும். இவற்றின் நஞ்சு கைகால்களில் உள்ள நிணநீர் (லிம்ப்) சுரப்பிகளையே பாதிக்கிறது.
கடிபட்ட இடத்தில் உடனே தாங்கக்கூடிய அளவில் சூடான நீரைக் கொண்டு காயத்தைக் கழுவ வேண்டும். வினிகர் கொண்டு தொடர்ச்சியாகக் கடிபட்ட இடத்தைத் துடைக்க வேண்டும். வினிகரைத் தெளிக்கவும் செய்யலாம். ஐஸ்கட்டிகளைக் கடிபட்ட இடத்தில் வைத்தால் வலி குறைய அது உதவியாக இருக்கும். நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
ஆஸ்திரேலியக் கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இந்த உயிரினங்கள் தாக்கினால் அதற்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மனிதன் ஏற்படுத்தும் காலநிலை மாற்றச் சீரழிவுகள் இவ்வாறு எத்தனை விதங்களில் விசுவரூபம் எடுத்து வந்து அவனையே திருப்பித் தாக்குகின்றன!
(Image courtesy: Australian Geographic)
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளின் உச்சமாக ரஷ்யாவில் செயல்பட்டுவந்த திமிங்கலச் சிறைச்சாலையை உடைத்தெறிய ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து விலங்குநல ஆர்வலர்களின் அறைகூவலை அடுத்து இந்த உத்தரவு வெளிவந்துள்ளது. பல ஆண்டுகள் நீண்ட சிறை வாழ்க்கையிலிருந்து நூற்றிற்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இனி சுதந்திரத்தின் ஆழ்கடலில் துள்ளிக் குதித்து நீந்தி விளையாடி மகிழட்டும்!
முதல் செய்தி
இங்கு குழந்தை நிலையில் உள்ள திமிங்கலங்களும் வயது முதிர்ந்தவையும் வாழ்கின்றன. 2018 நவம்பரில் இந்தச் சிறைச்சாலையைப் பற்றிய படங்களுடன், செய்திகள் முதல்முறையாக வெளியுலகிற்குத் தெரியவந்தன. ரஷ்யாவில் உள்ள சைபீரியப் பிரதேசத்தில் இருக்கும் இச்சிறைச்சாலைகள் குறித்த செய்திகளைப் பிராந்திய தன்னார்வத் தொண்டு நிறுவன ஆர்வலர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து முதல்முதலாக உலகிற்கு அறிவித்தனர்.
செய்திகள் வெளிவந்தவுடன் விசாரணைகள் தொடங்கின. என்றாலும் சிறையின் செயல்பாடுகள் நீண்ட இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தன. திமிங்கலங்கள் கடலரசன் என்று போற்றப்படும் கடல்வாழ் பாலூட்டிகள்; மிகப் பெரியவை. மிக அதிகமாக இன அழிவை எதிர்கொள்ளும் கடல்வாழ் விலங்குகளும் இவையே. ஆய்வுகளுக்காக ஆண்டிற்கு 13 திமிங்கலங்களை மட்டுமே கடலிலிருந்து பிடிக்க உலக நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வான்வழி ஆய்வுகள்
இந்நிலையில் ரஷ்யாவில் பசிபிக் பெருங்கடலுடன் சேர்ந்துள்ள பகுதியில் நூற்றிற்கும் அதிகமான திமிங்கலங்கள் சிறை வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. ட்ரோன் விமானத்தின் உதவியுடன் பசுமை அமைதி இயக்கம் (Greenpeace), பிரிட்டன் டால்பின் மற்றும் திமிங்கலப் பாதுகாப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் (Dolphin & Whale Conservation) இணைந்து இந்த உயிரினங்களைக் கண்டுபிடித்தது.
சைபீரியா டைம்ஸ் என்ற இதழ் இது பற்றிய அதிர்ச்சி தரும் செய்திகளை 2018-19-இல் முதல்முதலில் வெளியிட்டது. ஆசியாவில் நஹோட்கா என்ற பகுதிக்கு அருகில் இச்சிறைச்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பல கூண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்களை வான்வழி உற்றுநோக்கலின்போது காணமுடிந்தது. ஆய்வு செய்யப்பட்ட நேரத்தில் நீருக்குள் இருக்க வாய்ப்புள்ளதால் சிறையில் வாடும் இவற்றின் துல்லியமான எண்ணிக்கையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எதற்காக இந்தச் சிறை?
முற்றிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்தச் சிறைகள் செயல்படுகின்றன என்று ரஷ்ய க்ரீன் பீஸ் அமைப்பு கூறுகிறது. கிடைத்த புள்ளிவிவரங்களின்படி 90 பெலுகா திமிங்கலங்கள், 11 ஓர்க்கா திமிங்கலங்கள் இந்தச் கடல் சிறையில் இருந்தன. சீனாவில் இருக்கும் கடல்சார் உல்லாசப் பூங்காவிற்காகவே இவை சிறை பிடிக்கப்படுகின்றன என்று 'நொவாயா கெசட்டா' என்ற பிராந்திய செய்தித்தாள் நடத்திய தொடர் ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.
ரஷ்யாவிலிருந்து ஆரம்பத்தில் மிகக் குறைந்த விலைக்கே இந்த உயிரினங்களைச் சீனாவில் செயல்படும் பூங்காக்கள் வாங்கின. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சீனாவில் இவற்றைக் காட்சிப்பொருளாக்கும் பூங்காக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆய்வுகளுக்காக மட்டுமே இவற்றைப் பிடிக்கலாம் என்று சர்வதேசச் சட்டம் கூறுகிறது.
காற்றில் பறக்கவிடப்படும் சட்டங்கள்
குட்டிகளையும் கருவுற்றிருக்கும் திமிங்கலங்களையும் பிடிக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. கூட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட இவற்றைப் பிடித்துவைத்து நடத்தப்படும் ஆய்வுகளுக்கும் சர்வதேசச் சட்டத்தில் தடை உள்ளது. இவ்வாறு ஏராளமான சட்டமீறல்களை இந்தத் திமிங்கலச் சிறைகளை நடத்துபவர்கள் செய்கின்றனர்.
இதெல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தும் இந்தச் சிறைகளை இழுத்துமூடித் திமிங்கலங்களை ஏன் ரஷ்ய அதிகாரிகள் விடுதலை செய்யவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. இந்தச் சிறைகளில் ஓர்க்கா அல்லது கொலையாளித் திமிங்கலங்கள் மற்றும் பெலுகா திமிங்கலங்களே அடைக்கப்பட்டுள்ளன.
சீனாவிற்கு ஒரு திமிங்கலம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கூடுதலாக விற்கப்படுகிறது. இவற்றை வாடகைக்குக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல சமயங்களில் ரஷ்யாவிலிருந்து இவை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வாடகைக்கு விலங்குகளைக் கொடுப்பதை அனுமதிக்கும் ரஷ்யச் சட்டத்தில் இருக்கும் சலுகைகளைச் சிறை நடத்தும் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன. 2013-2016 ஆண்டுகளுக்கு இடையில் 13 ஓர்க்கா திமிங்கலங்கள் இவ்வாறு சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஆபத்தாகும் அழகு
ஓர்க்கா மற்றும் பெலுகா திமிங்கலங்கள் பார்க்க அழகாக இருக்கும் என்பதால் சீனா இவற்றைக் காட்சிப்படுத்தத் தேர்ந்தெடுக்கிறது. சைபீரியப் பகுதியில் நான்கு நிறுவனங்கள் சிறைச்சாலைகளை நடத்துகின்றன. இவற்றிற்கு எதிராகச் சர்வதேச மற்றும் பிரதேச அளவில் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நீதிமன்றங்களிலும், தொடர்புடைய அரசுத்துறைகளிலும் எண்ணற்ற புகார்களைக் கொடுத்துள்ளன.
நிராகரிக்கப்படும் நீதி
மூன்று நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டே தாங்கள் திமிங்கலங்களைப் பிடித்து வைத்துள்ளதாகக் கூறுகின்றன. சட்டப்பூர்வமாகவே திமிங்கலங்கள் தங்களுக்குக் கிடைத்தன என்று அவை வாதிடுகின்றன. ஆனால் திமிங்கலங்களை விற்கவோ, வாங்கவோ, பிடித்துவைக்கவோ அனுமதியில்லை என்று சட்டம் கூறும்போது இவர்களுக்கு எவ்வாறு சட்டப்பூர்வமாகத் திமிங்கலங்கள் கிடைக்கும் என்று தொண்டு நிறுவனங்கள் கேள்வி எழுப்புகின்றன.
பிரபல சூழல் செயல்பாட்டாளரும் கடல் ஆய்வாளருமான ஜீன் மைக்கேல் கூஸ்டோ, ரஷ்ய அதிபரின் கவனத்திற்குத் திமிங்கலச் சிறைச்சாலை பற்றிய செய்தியைக் கொண்டுசென்றார். சிறைபிடிக்கப்பட்டிருக்கும் இந்த உயிரினங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு இடங்களிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளே இவற்றைக்க கூட்டமாகப் பிடித்துக் கூண்டில் அடைக்கக் காரணம்.
விடுதலை! விடுதலை!! திமிங்கலங்களின் விடுதலை!
பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பல்வேறு விடாமுயற்சிகளின் விளைவாக இப்போது ரஷ்ய அதிகாரிகள் இந்தச் சிறைகளை இழுத்து மூட உத்தரவிட்டுள்ளனர். முதலில் வயது முதிர்ந்த திமிங்கலங்கள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குட்டித் திமிங்கலங்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுப் பின்னர் அவை கடலில் விடப்படும் என்று நம்பப்படுகிறது.
ஆய்வுகள் என்ற பெயரில் உலகின் பல பகுதிகளிலும் எண்ணற்ற விலங்குகள் ஒவ்வொரு நாளும் மனிதனால் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றன. இதற்குத் தீர்வாக இந்தத் திமிங்கலச் சிறைகளின் அழிவு அமையட்டும்! பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வாழட்டும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- ஆண்கள் இல்லையா...? கவலையில்லை!
- நிறங்களை இழக்கும் இயற்கையின் உலகம்
- பூமிக்கடியில் வாழும் வேர்ப்பூஞ்சைகள்
- இந்த குரலுக்கு வயது நூறு!
- இயற்கையுடன் உறவு அதிகமுள்ள நாடுகளின் பட்டியல்
- சூழலிற்கு நட்புடைய பூச்சிக்கொல்லி
- புல் தின்னும் புலிகள்!
- நம்மைப் போலவே இவர்களும்… அழியாமல் காப்போம்!
- மியாவ்… மியாவ்… பூனைகள் பாவப்பட்ட உயிரினங்கள் இல்லை
- வன உயிரினங்களின் தியேட்டர்
- மெல்ல வளரும் மரங்கள்
- நிறம் மாறும் பூச்சிகளின் இறக்கைகள்
- என்று மாறும் இவற்றின் தலைவிதி?
- கண்டுபிடிக்கப்படும் முன்பே காணாமல் போய்விடுமா?
- வாட் ஈஸ் திஸ்!? திஸ் ஒரு ஈ!
- இரத்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய உயிரினம்
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.