கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நாட்டின் பெயரைக் கொண்டுள்ள கானமயில் (Great Indian Bustard) என்ற இந்தப் அரிய வகைப் பறவை இந்தியாவில் இப்போது வெறும் 150 மட்டுமே உள்ளன. 1994ல் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) இன அழிவை சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலில் இவை சேர்க்கப்பட்டன. மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முன்பு இவை வாழ்ந்து வந்தன. இன்று இரண்டு மாநிலங்களில் மட்டுமே இவை அதிகம் காணப்படுகின்றன என்று கருதப்படுகிறது.
இவற்றின் எண்ணிக்கை குறைய பல காரணங்கள் உள்ளன. மின்சாரக் கம்பிகளில் மோதி ஏற்படும் மரணங்களே அதிகம் நடந்துள்ளன. வேட்டைக்காரர்களை அடையாளம் காண இவற்றிற்கு பக்கவாட்டில் மட்டுமே அதிக பார்வைத் திறன் உள்ளது. இதனால் வேட்டை விலங்குகளையும், முன்னால் இருக்கும் மின்சாரக் கம்பிகளையும் இவை துல்லியமாகக் காண முடிவதில்லை.
இதுதவிர மற்ற தடைகள் மீது மோதி ஏற்படும் மரணங்களும் நிகழ்கின்றன. இந்திய வன உயிரி அறக்கட்டளை (Wildlife Trust of India WTI) 2017- 2020 காலத்தில் தார் பிரதேசத்தில் இவ்வாறு நடந்த 6 மரணங்களைப் பற்றி செய்தி வெளியிட்டது.புலிகள் பாதுகாப்பு திட்டம் போல ஒன்று
இவற்றின் பாதுகாப்பிற்காக உச்ச நீதிமன்றத்தின் தலையீடுகள் பல முறை ஏற்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மின்கம்பிகள் மீது மோதுவதால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க பூமிக்கடியில் கம்பிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. புலிகள் பாதுகாப்பிற்காக புலி பாதுகாப்புத் திட்டம் (Project tiger) நடைமுறைப்படுத்தப் பட்டது போல இவற்றைப் பாதுகாக்கவும் ஒரு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்தது. இதன் பலனாக 2012ல் கானமயில் பாதுகாப்புத் திட்டம் (Project Bustard) என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது.
இப்போது இவை 1972 வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி இவற்றின் வாழிடங்களை தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களாக அறிவிக்கும் திட்டம் உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் வனத்துறை மற்றும் இந்திய வன உயிரி அறக்கட்டளையின் உதவியுடன் இவற்றிற்காக சிறப்பு இனப்பெருக்க மையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் மாநிலப் பறவை
இது ராஜஸ்தானின் மாநிலப் பறவை. உலகில் இப்போது உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள 200 பறவைகளில் 96 சதவிகிதமும் இம்மாநிலத்திலேயே வாழ்கின்றன. நாட்டில் உள்ள 150 கானமயில்களில் 126 பறவைகளின் வாழிடம் இந்த மாநிலமே. 1960களில் 1260 பறவைகள் இருந்தன. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு இடையில் இந்த எண்ணிக்கையில் 75% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்பு இந்தியாவில் 11 மாநிலங்களில் இவை வாழ்ந்து வந்தன.
என்றாலும் இன்று இவை ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்படுகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இவை சிறிய எண்ணிக்கையில் காணப்படுகின்றன. பறவைகள் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும் பறப்பதில் இவை நிபுணர்கள் இல்லை. 15 கிலோ வரை வளரும் இயல்புடையவை. உடல் எடை கூடுதலாக உள்ள, அதிகம் பறக்க இயலாத பறவைகளில் முதலிடத்தில் உள்ளன.
ஆணும் பெண்ணும்
பொதுவாக இவற்றின் நீளம் நான்கு அடி. பெண்களை விட ஆண் பறவைகளே அதிக எடையுடையவை. இறக்கைகளின் நிறத்தை வைத்து ஆண், பெண் பறவைகள் அடையாளம் காணப்படுகின்றன. பெண் பறவைகளில் கறுப்பு நிற க்ரீடம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. பிராந்திய மொழியில் இவை கோடாவன் என்று அழைக்கப்படுகின்றன.
1972ல் வேட்டையாடப்படுவது தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை இவை பெரும் எண்ணிக்கையில் வேட்டையாடியே அழிக்கப்பட்டன. 1980ல் இவற்றின் எண்ணிக்கை 1000. 150 என்ற மோசமான நிலைக்கு இப்போது இவற்றின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மின்சாரக் கம்பிகள் இடித்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 18 பறவைகள் உயிரிழப்பதாக இந்திய வன உயிரி அறக்கட்டளை கூறுகிறது.
உடல் எடை 15 கிலோ என்பதால் மின்சாரக் கம்பிகள் குறுக்கிடும்போது உடனடியாக இவற்றால் தங்கள் வழியை மாற்றிக் கொள்ள இயல்வதில்லை. இது இவற்றின் இறப்பு விகிதம் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம். முன்னால் உள்ளதைப் பார்க்கும் திறனும் இவற்றிற்குக் குறைவு என்பதால் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகள் அதிகரிக்கின்றன. இந்திய அரசின் 2009 மீட்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது.
கூட்டில் அடைத்து வைத்து இனப்பெருக்கம்
ராஜஸ்தானில் ஜைசல்மீரில் கூட்டில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்யும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. இங்கு இதற்காக வனப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 குஞ்சுகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. வரும் மூன்று ஆண்டுகளில் இவை இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை அடையும். அப்போது இவை காடுகளில் கொண்டு சென்று சுதந்திரமாக விடப்படும். மறுவாழ்வு வசதிகள் செய்யப்படும்.
என்றாலும் இதனுடன் தொடர்புடைய 50% செயல்பாடுகள் மட்டுமே உரிய முறையில் நடந்தன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவை அணைத்துண்ணிகள் (omnivores). கிடைப்பதை உண்ணும் இயல்புடையவை. சிறிய பிராணிகள், ஊர்வன, புழுக்கள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு.
இவற்றின் இனப்பெருக்கம் மழைக்காலத்தில் நடக்கிறது. வித்துகள், நிலக்கடலை போன்றவை குளிர் மற்றும் வறட்சி அதிகமுள்ள காலங்களில் இவற்றின் முக்கிய உணவு. வயது வந்த பறவைகளுக்கு பருந்துகள், எகிப்திய வல்லூறுகள் போன்றவை முக்கிய எதிரிகள். சாம்பல் நிற செந்நாய்கள் இவற்றை வேட்டையாடுவது உண்டு. பசுக்கள் மேயும்போது இவற்றின் முட்டைகள் மிதிபடுவதால் அவை அழிந்து போவதும் உண்டு.
ஆண்டுதோறும் புதிய கூடுகள்
மார்ச் முதல் செப்டம்பர் வரை இனப்பெருக்க காலம். இனப்பெருக்கத்தைப் பற்றிய விவரங்கள் ஆராயப்பட்டுள்ளன என்றாலும் இவை கூடு கட்டுவது மற்றும் இவற்றின் இணை சேரும் சுபாவம் பற்றி இன்னும் அதிகம் ஆராயப்படவில்லை. ஒருமுறை இனப்பெருக்கத்திற்காக கட்டிய கூடுகளை இவை மறுபடியும் பயன்படுத்துவது இல்லை. ஆண்டுதோறும் புதிய கூடுகளைக் கட்டுகின்றன.
முந்தைய ஆண்டுகளில் மற்ற கானமயில்கள் கட்டிய கூடுகளை இவை சில சமயங்களில் பயன்படுத்துவதுண்டு. மண்ணில் சிறிய குழிகளைத் தோண்டி கூடு கட்டுகின்றன. ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்றிற்கு மேற்பட்ட பறவைகளுடன் இணை சேர்கின்றன. ஆண் பறவைகள் மற்ற பெண் பறவைகளுடன் அதிகமாக இணை சேர்கின்றன. பெண் பறவைகள் ஒரு பிரசவத்தில் ஒரு முட்டையை இடுகிறது. ஒரு மாத காலம் அடை காக்கும் பருவம்.
ஆண் பறவைகள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் இனப்பெருக்க வயதை அடைகின்றன. பெண் பறவைகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இனப்பெருக்க பருவத்தை அடைகின்றன. இவற்றின் சராசரி ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள். இறக்கைகளின் அளவு 210 முதல் 215 செண்டிமீட்டர்.
கானமயில் பாதுகாப்புத் திட்டம்
இணை சேரும் காலத்தைத் தவிர மற்ற சமயங்களில் இவை வலசை செல்லும் இயல்புடையவை. எண்ணிக்கையில் பெரும் குறைவு ஏற்பட்டதால் 2011ல் இவை அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினமாக அறிவிக்கப்பட்டன. வாழிட அழிவு இவை சந்திக்கும் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனை. 2012ல் இந்திய அரசு இவற்றின் பாதுகாப்பிற்காக கானமயில் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. என்றாலும் இத்திட்டத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை. இனி வரும் காலத்திலேனும் இந்த உயிரினங்கள் அழிவின் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்படுமா?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடல்வாழ் பாலூட்டி விலங்குகளான சீல்களில் (Seal) சில, உண்ணும் உணவில் கலந்திருக்கும் நஞ்சை சமாளித்து உயிர் வாழும் திறன் பெற்றுள்ளன. இந்தத் திறன் பற்றிய ஆய்வு மனிதர்களுக்கான மருத்துவத்தில் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஹ்ஃவான் ஃபெர்னாண்டஸ் மிருது உரோமம் உள்ள சீல்கள் (Juan Fernandez fur seal) மிக ஆபத்தான காட்மியம் உள்ளிட்ட உலோகத்தை உணவுடன் சேர்த்து உண்கின்றன என்றாலும் அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
மனிதனின் செயல்களால் பூமியில் இருந்தே அழிந்து விட்டன என்று கருதப்பட்ட இந்த உயிரினம் இப்போது சூழலில் கலந்திருக்கும் மிக மோசமான உலோக நச்சுகளை சமாளித்து வாழ்கின்றன. ஆர்த்தோஸ்பேலஸ் பிலிப்பியை (Arctocephalus Philippii) என்ற விலங்கியல் பெயர் கொண்ட இவை உலகின் மிகத் தனிமைப்பட்ட இடங்களில் வாழ்பவை.
இவை காட்மியம், பாதரசம் போன்ற நச்சு உலோக மாசுகளை உண்டு ஆபத்தில்லாமல் உயிர் வாழ்கின்றன. பிலிப்பியை என்ற இந்த இனம் உலகின் இரண்டாவது மிகச்சிறிய மிருது உரோம சீல் வகையைச் சேர்ந்த இனம். இவை சிலி நாட்டின் கரையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹ்வான் ஃபெர்னாண்டஸ் வளைகுடா மற்றும் அதற்கு அருகில் இருக்கும் ஒரு சில பசுபிக் கடல் தீவுகளில் மட்டுமே வாழ்கின்றன.இங்கு இவற்றின் வாழிடத்தை அலெக்சாண்டர் செல்கர்க் (Alexander Selkirk) என்ற கடற்பயணி 1704-1709 ஆண்டுகளுக்கு இடையில் கடலில் மூழ்கி ஆராய்ந்து அறிந்தார். இந்நிகழ்வு டானியல் டிஃபோ (Daniel Defoe) என்பவரால் ராபின்சன் க்ரூஸோ (Robinson Cruso) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. இதனால் இந்த வளைகுடாப் பகுதியின் முக்கியத்தீவு ராபின்சன் க்ரூஸோ என்று பெயரிடப்பட்டது.
ஆனால் அதன் பிறகு இந்த விலங்குகள் மிகத் தீவிரமாக அவற்றின் உரோமம் மற்றும் இறைச்சிக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டன. இப்பகுதியில் இருந்த நான்கு மில்லியன் உயிரினங்கள் கொல்லப்பட்டன. இதனால் 19ம் நூற்றாண்டில் இவை இப்பகுதியில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயின. 1960களில் இவற்றின் சிறிய காலனி இத்தீவுப்பகுதியின் ஒரு குகைக்குள் மீண்டும் கண்டுபிடிக்கப்படும்வரை இவற்றின் இனம் அழிந்து விட்டது என்றே கருதப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட உயிரினம்
இதன் பின்னர் இவை பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக அறிவிக்கப்பட்டன. மீண்டும் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. மிக சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இப்போது இத்தீவின் பாறைகள் நிறைந்த கடற்கரைப் பகுதியில் இவற்றின் எண்ணிக்கை 80,000.
வளர்ச்சியடைந்த சீல்கள் கடலில் வாழ்கின்றன. நவம்பர் டிசம்பர் மாதங்களில் குட்டிகள் மிருதுவான கறுப்பு நிற உரோமத்துடன் பிறக்கின்றன. பிறகு இந்த நிறம் சில ஆண்டுகளில் மங்கி பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த உயிரினங்கள் பற்றி விஞ்ஞானிகள் சமீப காலத்தில் ஆராயத் தொடங்கும் முன்புவரை இவை பற்றி மிகக் குறைவான விவரங்களே அறியப்பட்டன. இத்தகைய ஆய்வுகளின்போதே நஞ்சு உண்டாலும் பாதிக்கப்படாத இவற்றின் அதிசயிக்க வைக்கும் ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றின் மலம் ஆராயப்பட்டபோது அதில் மிக அதிக அளவு காட்மியம், பாதரசம் மற்றும் பிற நச்சு உலோக மாசுக்கள் இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வியப்பை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு. காட்மியம், பாலூட்டிகளுக்கு நச்சுத் தன்மையை தரக் கூடியது. ஆனால் இந்த சீல்கள் இந்த நஞ்சை எவ்வாறு செரிக்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக உள்ளது.
தங்கள் உடலின் செரிமான உறுப்புகள் வழியாக இவற்றை சீல்கள் செல்ல அனுமதித்தாலும் அதனால் இந்த உயிரினங்கள் எந்த பாதிப்பும் அடையாமல் உயிர் வாழ்கின்றன என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சூழல் பாதுகாப்பு ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கான்ஸ்டண்ச டோரோ-வால்டிவிசோ (Constanza Toro-Valdivieso) கூறுகிறார்.
இந்த உயிரினங்கள் இந்த நஞ்சுகளை எங்கிருந்து பெறுகின்றன என்பதும் ஆய்வாளர்களை வியப்படையச் செய்தது. இத்தீவில் உள்ள மண் மற்றும் சுற்றியுள்ள நீரில் இருக்கும் காட்மியத்தின் அளவு மிகக்குறைவு. இது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது உணவின் மூலமே சீல்கள் இந்த நஞ்சுகளைப் பெறுகின்றன என்று கண்டறியப்பட்டது.
பெருவட்ட கடல் நீர்ச்சுழற்சி
அண்டார்க்டிக் மிருது உரோம சீல் போன்ற சில சீல் இனங்கள் அவை வாழும் பகுதியைச் சுற்றி இருக்கும் நீரில் உள்ள மிதவை உயிரினங்களையே (krill) உண்கின்றன. ஆனால் இந்த சீல்கள் ஏராளமான ஸ்குவிட் (Squid) மற்றும் இதர மீன்களை உட்கொள்கின்றன. பெண் சீல்கள் 500 கிலோமீட்டர் வரை கடலில் பயணம் செய்து தங்கள் இரையை வேட்டையாடுகின்றன. இதற்காக இவை தெற்கு பசுபிக் பெருவட்ட கடல் நீரோட்ட சுழற்சியை (Gyre) கடந்து செல்கின்றன.
பெருவட்ட கடல் நீரோட்டச் சுழற்சி என்பது அதிவிரைவாகச் சுழலும் கடல் நீரோட்டம். இச்சுழற்சியில் சகலவிதமான கழிவுகளும் சிக்கிக் கொள்கின்றன. இங்கிருந்தே சீல்கள் காட்மியம் போன்ற நஞ்சுகளை உணவின் மூலம் பெறுகின்றன என்று கருதப்படுகிறது. அதிவேகமாகச் சுழலும் கடல் நீரோட்டத்தில் மனிதன் உருவாக்கும் காட்மியம், பாலிமரால் ஆன பொருட்கள் அடித்து வரப்படுகின்றன. இவற்றை ஸ்குவிட் மற்றும் மீன்கள் உணவுடன் உண்கின்றன. இவற்றிடம் இருந்து சீல்களின் உணவில் இந்த நஞ்சுகள் சேர்கின்றன என்று நம்பப்படுகிறது.
பல ஆண்டுகளாக இந்த வகை உயிரினங்கள் பற்றி ஆராய்ந்து வரும் வால்டிவிசோ அடங்கிய விஞ்ஞானிகள் குழுவின் இந்த ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் Royal Society open science என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற பாலூட்டிகளுக்கு நஞ்சாக இருக்கும் காட்மியம் போன்றவற்றை இந்த உயிரினங்கள் எவ்வாறு செரிமானமடையச் செய்து அதிக பாதிப்பு இல்லாமல் வாழ்கின்றன என்பது பற்றி தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இவற்றின் மலம் தவிர இயற்கையாக உயிரிழந்த இவற்றின் எலும்புகளிலும் நச்சு மாசுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் எலும்புகளில் காணப்படும் அதிகப்படியான சிலிகான் காட்மியம் போன்ற நஞ்சுகளை சமாளிக்க இவற்றிற்கு உதவலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது நம் மருத்துவத் துறையில் முக்கியப் பயன்களைத் தரக் கூடியது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மனிதன் அறியாத பல அதிசயங்கள்
நஞ்சை சமாளிக்கும் இதன் பண்பு இதன் உடலில் இருக்கும் மரபணுக்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அல்லது முற்றிலும் மனிதன் அறியாத வேறு காரணத்தால் இவ்வாறு நிகழலாம். இது பற்றி வரும் ஆண்டுகளில் தீவிரமாக ஆராயப்படும் என்று வால்டிவிசோ கூறுகிறார். மனித குலம் அதிகம் அறியாத இந்த உயிரினங்கள் இதுவரை நாம் அறியாத பல அதிசயிக்க வைக்கும் அறிவியல் உண்மைகளை நமக்கு வெளிப்படுத்தலாம்.
** ** **
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நாகாலாந்தில் வோர்க்கா (Wokha) மாவட்டத்தில் உள்ள பாங்டி (Pangti) கிராமம். நாகரீக வசதிகள் எவையும் நுழையாத ஆதிவாசிகளின் நாடு. அங்கே ஆண்டுதோறும் அரங்கேறும் ஆகாய அதிசயத்தின் கதைதான் இது. இலட்சக்கணக்கான அமுர் வல்லூறு (Amur falcon) பறவைகள் கூட்டம் கூட்டமாக இங்கே பறந்து வருகின்றன. அவற்றை ஆதிவாசிகள் சுவையான பறவை இறைச்சிக்காக போட்டி போட்டுக் கொண்டு வேட்டையாடி ஒரு பறவையை பத்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்றனர்.
வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தொலைதூர மாவட்டங்களில் இருந்து இறைச்சி வாங்க ஏராளமானோர் வந்தனர். ஆண்டுக்கணக்கில் நடந்து வந்த பறவை வேட்டை, விற்பனை பற்றி மிகத் தாமதமாகவே வெளியுலகம் அறிந்து கொண்டது. இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுசேர்ந்து வேட்டையை எதிர்த்து 2012ல் குரல் எழுப்பினர். மெல்ல மெல்ல இது பலன் தரத் தொடங்கியது. உலகம் அறிந்திராத ஒரு கிராமம் மெல்ல மெல்ல பறவைகள் பாதுகாப்பின் சொர்க்கபூமியாக மாறியது. புதிய வரலாறு எழுதப்பட்டது.
இது உலகம் முழுவதும் பரவியது. பறவை வேட்டை தடை செய்யப்பட்டது. நாகர்கள் சினந்து எழுந்தனர். அம்பையும் வில்லையும் ஏந்தி போராடத் தயாராயினர். கிராமம் போராட்டக்களமானது. ஆனால் வனத்துறையினரும், மாநில அரசும் நிலைமையை உணர்ந்து செயல்பட்டனர். பல சூழல் அமைப்பினரும், மாணவர்களும், இளைஞர்களும் களத்தில் குதித்தனர். ஆதிவாசிகளை வனப் பாதுகாப்பிற்காக செயல்பட உற்சாகப்படுத்தினர். சிறிதுசிறிதாக அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தைக் கண்டறிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன.ஆதிவாசிகளின் கோபம் அடங்கியது. இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுசேர்ந்து ஓர் இயக்கமாக செயல்படத் தொடங்கியதுடன் மக்கள் மனம் மாறினர்.
பாங்டியில் மலைப்பகுதிகளில் எங்கும் காணப்படும் அமுர் வல்லூறு என்ற இந்த சின்னஞ்சிறிய பறவையை இன்று இங்கு வாழும் கிராம மக்கள் எவரும் வேட்டையாடுவது இல்லை. கிராம மக்களின் நலவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த பல தன்னார்வ நிறுவனங்கள் உதவின.
கிராமம் பறவைகள் பாதுகாப்பில் உலகப் புகழ் பெறத் தொடங்கியது. இது கிராம மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தியாவிற்கு உள்ளேயிருந்தும் வெளியில் இருந்தும் பல தன்னார்வ நிறுவனங்கள் வரத் தொடங்கியதுடன் கிராமத்தின் முகச்சாயல் மெல்ல மாறியது. கிராம கவுன்சிலர் ஆர் ஷிரி அவர்களின் ஆலோசனையின்படி கிராம மக்கள் செயல்பட்டனர். கிராம மக்களின் நலவாழ்விற்கு முன்னுரிமை தரப்பட்டது. பறவை பாதுகாப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அமுர் வல்லூறு என்னும் அதிசயம்
பறவை ஆர்வலர்களுக்கு என்றும் ஒரு அதிசயமாக இருக்கும் அமுர் வல்லூறுகள் அக்டோபர் மாதத்தில் மங்கோலியா, சைபீரியாவில் இருந்து லட்சக்கணக்கில் நாகாலாந்திற்கு வருகின்றன. ஒன்றரை மாதம் வரை அவை இந்த கிராமத்தில் தங்குகின்றன. பத்து இனங்களைச் சேர்ந்த சிறிய மற்றும் பெரிய பிராணிகளே இவற்றின் முக்கிய உணவு. இடைவேளைக்குப் பிறகு இவை மகாராஷ்டிரா வழியாக இந்தியப் பெருங்கடலைக் கடந்து தென்னாப்பிரிக்காவை நோக்கி பறக்கின்றன.
மங்கோலியா, சைபீரியாவில் இருந்து நாகாலாந்து வழியாக தென்னாப்பிரிக்காவை சென்றடையும்போது இவை 30,000 கிலோமீட்டர் தொலைவிற்குப் பறந்திருக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்காவில் இருந்து நாகாலாந்து வழியாக இவை புறப்பட்ட இடத்தைச் சென்றடைகின்றன. அதிக தூரம் பறக்கும் வலசைப் பறவைகளில் இதுவும் ஒன்று. பருந்து இனத்தைச் சேர்ந்தது என்றாலும் பார்ப்பதற்கு ஒரு புறாவின் அளவே உள்ள இவற்றின் கால்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இவை வலசை செல்லும் காலத்தில் எங்கும் இடை நிற்காமல் தொடர்ந்து பறக்கும் ஆற்றல் பெற்றவை.
உயிர் பறிக்கும் வலைகள்
பறவை பறக்கும் வழியெங்கும் பெரிய வலைகளைக் கட்டியே கிராம மக்கள் இதை வேட்டையாடினர். மரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட லேசான வெள்ளை நிறத்தில் உள்ள நீளமான வலைகளை பறக்கும்போது பறவைகளால் பார்க்க முடியாது. வலையில் அகப்படும் அவற்றை கிராமவாசிகள் பிடித்து கால்களைக் கட்டி ஒரு தாங்கியில் தொங்கவிடுவர்.
ஒரு நாளில் ஆதிவாசித் தலைவர் பரிந்துரை செய்யும் ஒரு சிலர் வலை கட்ட அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்த நாட்கள் மற்றவர்களின் முறை. இவ்வாறு ஒன்றரை மாதத்திற்குள் கிராமவாசிகள் அனைவருக்கும் பறவையைப் பிடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நாகாலாந்து வன உயிரி உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை இயக்குனர் பானோ ஹராலு வேட்டைக்கு எதிராகப் போராடியவர்களில் முக்கியமானவர். தூர்தர்ஷனின் செய்தியாளராக பணி புரிந்துள்ள இவர் நாகாலாந்து ஆங்கிலச் செய்தித்தாள்களில் செயல்பட்டு வந்தார்.
இயற்கை நாகாஸ் (Natural Nagas) என்ற அமைப்பின் தலைவர் ஸ்டீவ், கிராம கவுன்சில் தலைவர் ஆர் ஷிரி, வனத்துறையின் தலைமை பாதுகாவலர் லோகேஸ்வர ராவ் ஆகியோர் விழிப்புணர்வு இயக்கத்திற்கு தலைமை வகித்தனர். கிராம மக்களை உற்சாகப்படுத்த ஸ்காட்லாந்து வங்கி (Bank of Scotland) விருதுகளை வழங்கியது. 2017ல் பானோ ஹராலு நாரீ சக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதே ஆண்டு சிறந்த அறிவியல் திரைப்படத்திற்கான விருது சினோ இகோஷு (Sino Yhoshu) இயக்கிய பாங்டி கதை (The Pangti story) என்ற திரைப்படத்திற்குக் கிடைத்தது. வேட்டைக்காரர்களாக இருந்த நாகர்களின் கிராமம் எவ்வாறு பறவைகளின் காவல் பூமியாக மாறியது என்பதே திரைப்படத்தின் மையக்கதை.
பாங்டி இன்று உலகப் பறவை சுற்றுலா வரைபடத்தில்
இப்போது அக்டோபரில் உலகில் பல பகுதிகளில் இருந்தும் பறவை ஆர்வலர்கள் இங்கு வருகின்றனர். இது சூழல் சுற்றுலா வளர வழிவகுத்தது. இது கிராம மக்களின் வருமான மார்க்கமாக மாறியது. அமெரிக்க பறவையியலாளர் ச்காட் வீடன்சால் (Scott Wiedensaul) எழுதியுள்ள இறக்கைகளின் உலகம் (A World of the wing) என்ற புகழ்பெற்ற நூலில் பாங்டி கிராமவாசிகள் பறவைகள் பாதுகாப்பிற்காக நடத்திய ஆத்மார்த்தமான முயற்சிகளும், பானோ ஹராலுவின் தளராத போராட்டங்களும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மனமுவந்து மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் உலகில் எந்த நரகமும் அழகு பூமியாக மாறும் என்பதற்கு ஒருகாலத்தில் வேட்டை கிராமமாக இருந்து இன்று பறவைகளின் கிராமமாக மாறியுள்ள பாங்டி கிராமம் ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
யானை, நீர் நாய், திமிங்கலங்களுக்கு இடையில் என்ன ஒற்றுமை இருக்கிறது? தாங்கள் வாழும் சூழல் மண்டலத்தில் இவை அனைத்தும் கார்பன் சேமிப்பை அதிகரிக்க உதவுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. யானைகள் விதைகளைப் பரப்புகின்றன. குறைவான உயரத்தில் வளரும் தாவரங்களைக் காலில் போட்டு மிதிக்கின்றன. உயரமான மரங்கள் வளர உதவுகின்றன.
கடல் நீர் நாய்கள் கடல் முள் எலிகளை (Sea urchins) உண்கின்றன. இதனால் கடற்பாசிகள் (kelp) செழித்து வளர்கின்றன. திமிங்கலங்கள் ஆழ்கடலில் உணவை உண்டு சுவாசிக்கவும், ஓய்வெடுக்கவும் அவை கடல் மேற்பரப்பிற்கு வரும்போது சத்துகளை வெளிவிடுகின்றன. மிதவை உயிரினங்கள் (phytoplanktons) அதிக அளவில் உருவாக இது தூண்டுதலாக அமைகிறது.
இந்த உயிரினங்கள் மட்டும் அல்ல, பல உயிரினங்கள் அவை வாழும் சூழலில் அதிக அளவில் கார்பனைச் சேகரிக்க உதவுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இது உதவுகிறது. ஆப்ரிக்கா டன்ஜானியாவில் மாரா (Mara) மற்றும் அருஷா (Arusha) பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள செரங்கெட்டி (Serengeti) சூழல் மண்டலத்தில் வாழ்ந்த காட்டெருமைகளின் (wildebeest) எண்ணிக்கை நோய்த்தொற்றால் குறைந்தது.காட்டுத்தீ
புற்கள் கட்டுப்பாடில்லாமல் பெருகி முளைத்தன. அடிக்கடி காட்டுதீ சம்பவங்கள் அதிகமாக இது காரணமானது. திறம்பட்ட நோய் மேலாண்மை மூலம் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. காட்டுத்தீ சம்பவங்கள் குறைந்தன. ஏற்பட்ட தீ விபத்துகளையும் சுலபமாக கையாள முடிந்தது. கார்பன் உமிழும் இடமாக இருந்த இப்பகுதி இதனால் கார்பனை சேகரிக்கும் இடமாக மாறியது.
இந்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. விலங்குகள் உணவு உண்ணுதல், இடம் பெயர்தல், மிதித்தல், குழி தோண்டுதல், மலம் கழித்தல் மற்றும் வாழிடங்களை அமைத்தல் போன்றவற்றினால் அவை வாழும் சூழல் மண்டலங்கள் திறம்பட கார்பனை சேகரிக்கும் இடங்களாக மாறுகின்றன. 0.3% கார்பனை மட்டுமே உலகின் மொத்த உயிர்ப்பொருளில் (biomass) வனவிலங்குகள் கொண்டுள்ளன என்றாலும் குறிப்பிட்ட சூழல் மண்டலத்தில் இவற்றால் சேகரிக்கப்படும் கார்பனின் அளவு 15% முதல் 200% வரை உள்ளது.
இயற்கையின் வழியில்
காலநிலை மாற்றத்தின் கெடுதிகளை சமாளிக்க இயற்கை வழிகளே உதவும் என்று சமீபகாலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வைக் குறைப்பது மட்டும் போதாது. வளிமண்டலத்தில் இருந்து கார்பனை அகற்ற இயற்கையின் அளவில்லாத இந்த ஆற்றலையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று லண்டன் விலங்கியல் சங்கத்தின் (Zoological Society of London ZSL) தலைமை செயல் அலுவலர் மாத்யூ குட் (Matthew Gould) கூறுகிறார்.
இந்த ஆய்வுக்கட்டுரை சூழல் சீர்கேடுகளை இயற்கை வழியில் தீர்வு காண்பதை வலியுறுத்துகிறது. மனிதனால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத இயற்கை தீர்வை நோக்கி செயல்படுகிறது. கார்பனைக் கைப்பற்றுவதற்கு உதவும் செயல்முறைகளை (Carbon Capture Systems CCS), புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்றாலும், இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் நிரூபிக்கப்பட்ட பலன் தரும் முறைகளை புறக்கணிக்கக் கூடாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கு இயற்கையை மதித்து நடக்க நாம் முதலில் கற்க வேண்டும். கார்பன் சேமிப்பிற்கு உதவாத ஒற்றைப்பயிர் முறையைக் கைவிட வேண்டும். வனவிலங்குகளின் வாழிடங்களைத் துண்டாடுவதை நிறுத்த வேண்டும். கார்பன் சேமிப்பிற்கான தீர்வு இயற்கையில் தாவரங்களிடம் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாசிகள், சதுப்புநிலக் காடுகள், கடற்புற்களை மீட்க வேண்டும்.
பனிக்கண்டத்தில் வனவிலங்குகளின் கூட்டம்
ஆர்க்டிக் பகுதியில் அளவற்ற கார்பன் உறைபனிப் பாறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் விலங்குகளின் கூட்டம் பனி உருவாகாமல் இருக்க, மண் உறைநிலையில் இருக்க உதவுகின்றன. கலைமான், காட்டுக் குதிரைகள், அமெரிக்க துருவப் பகுதியில் வாழும் கஸ்தூரி மணம் உடைய எருது போன்ற விலங்குகள் (musk ox), காட்டெருமைகள் போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
இயற்கைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் சூழலைப் பாதுகாக்க அது உதவும். மேம்பட்ட சூழலில் வனவிலங்குகளின் எண்ணிக்கை விரைவாகப் பெருகும். உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் இதற்கான பணிகள் நடைபெற வேண்டும். இங்கிலாந்தில் செம்பருந்து (red kites), நேபாளம் மற்றும் இந்தியாவில் புலிகள் போன்ற வனவிலங்கு மீட்பின் வெற்றிக்கதைகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த ஆய்வுகள் லண்டன் விலங்கியல் சங்கத்தின் ஆதரவில் நடத்தப்பட்டன. விலங்குகள் இயற்கை வழியில் கார்பனை சேகரிக்க உதவும். மக்களுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் உறவைப் புதிப்பிக்க வேண்டும். இதன் மூலம் மனித வனவிலங்கு மோதலை தவிர்க்க முடியும். உள்ளூர் மக்களிடம் இயற்கையுடனான உறவு புதிப்பிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் பலவன் (Palawan) தீவில் மக்களே முன்வந்து எறும்புத்தின்னிகளுக்காக (pangolins) சரணாலயம் ஒண்றை அமைத்து நடத்தி வருகின்றனர்.
வனவிலங்குகள் வாழும் உலகில்
இந்த அணுகுமுறையே இங்கிலாந்து கடலோரப் பகுதியில் அழியும் நிலையில் இருந்த ஏஞ்சல் சுறாக்களை (Angel shark) பாதுகாக்க உதவும் திட்டங்களை செயல்படுத்த மக்களுக்கு உதவியது. வனவிலங்குகள் வாழும் உலகில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இயற்கை உதவும் என்பதற்கு டன்ஜானியா செரங்கெட்டி சூழல்மண்டலம் சிறந்த எடுத்துக்காட்டு.
மனித குலத்தின் எதிர்காலம் வனவிலங்குகளின் நலவாழ்வுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் தாவர விலங்குகளே நமக்கு உதவும் இயற்கையின் ஆயுதங்கள். நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால் இந்த உயிரினங்களை நாம் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- ஆழ்கடலில் ஓர் அதிசய உயிரினம்
- தாவரங்கள் பேசுகின்றன
- அழிவில் இருந்து மீண்டு வந்த வண்ணத்துப் பூச்சி
- திமிங்கல வேட்டை
- யானைகளுக்கு ஏன் புற்றுநோய் வருவதில்லை?
- யார் காப்பாற்ற வருவார் இந்த உயிரினங்களை?
- மீண்டும் பறக்குமா குவாமின் மீன்கொத்திப் பறவை?
- கடலின் மழைக் காடுகளைக் காப்பாற்றும் கலைச் சிற்பங்கள்
- கரடிகள்
- மண்ணிற்கடியில் ஒளிந்திருக்கும் விலையுயர்ந்த பூஞ்சை
- நுண் பிளாஸ்டிக் உண்ணும் நுண்ணுயிரிகள்
- ஆண் துணையில்லாமல் முட்டையிட்ட உலகின் முதல் கன்னி முதலை
- சிங்க வேட்டை
- தவளைகள் பலவிதம்
- பூமியின் வரைபடத்தில் இல்லாத இடங்கள் தேடி...
- ஆதிவாசி மக்களுக்காக விறகொடிக்கும் யானைகள்
- அழிவில் இருந்து மீண்டு வந்த அரேபியாவின் மான்
- மீன்களுக்கும் உணர்வுகள் உண்டு
- வேட்டையாடும் நாடுகள்
- சிவப்புப் பட்டியல்