அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
வேட்டையாடி பிழைத்துவந்த வாழ்க்கையை விட்டு வேளாண்மை செய்து பிழைக்கும் நிலைக்கு மனிதன் வாராதிருந்தால் நாடு, நகரம், அறிவியல் தொழில் நுட்பம் என்று எதுவுமே ஏற்பட்டிருக்காது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதன் வேட்டைக்காரனாகத் தானிருந்தான். அவனது பற்களின் பலத்தையும், பெரிய தாடையின் அளவையும் இன்றைய மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நவீன மனிதனின் பற்கள் வெறும் அவலுக்கு சமம். தாடை கூட சிறியதாகி உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.
பல்துலக்காமல் இருந்தும், பல்சொத்தையில்லாமலேயே வேட்டை மனிதன் வாழ்ந்தான். இன்று பல்லுக்கென்று மனிதன் எத்தனை நேரத்தையும் பொருளையும் செலவு செய்கிறான்! இந்த மாற்றத்திற்குக் காரணம் வேகவைத்த அரிசி, கோதுமை உணவை சாப்பிடுவதுதான். அதிக கார்போஹைட்ரேட் மிகுந்த உணவின் மூலம் நாம்பெற்ற தீமைகள் இவை. வேலைக்காக மனிதன் பெருங்கூட்டமாக நகரத்தில் வாழ ஆரம்பித்ததும்தான் சிப்பிலிஸ், காசநோய், தொழுநோய் போன்ற நோய்களும் தோன்ற ஆரம்பித்தன. நாகரிகத்தில் முன்னேறிச் சென்றால், ஆரோக்கியம் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது.
கலைக்கதிர், ஜூலை 2008
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: புவி அறிவியல்
ரஷ்யாவில் கோலா தீபகற்பப் பகுதியில் ஆராய்ச்சிக்காக உலகிலேயே மிக ஆழமாக துளையிடப்பட்டுள்ளது. 1970ல் ஆரம்பித்த இந்த துளையிடும் பணி 1995ல் முடிந்தது. துளையின் ஆழம் 12,262 மீட்டர். இதன்மூலம் பூமியின் ஆழத்தில் நிகழும் தட்டுப் பிளவுகள், பூமியின் மையப்பகுதியில் உள்ள வேதியியல் பொருட்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்த ஆழத்தில் 270 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் துளையின் ஆழத்தை மேலும் 10,000 அடிகள் நீட்டிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் ஓக்லஹோமா என்ற இடத்தில் இரண்டாவது பெரிய துளை (31,500 அடிகள்) உள்ளது. பூமியின் மையப்பகுதியில் உருகிய இரும்பு உள்ளது. இதன் வெப்பம் 6,000 செல்சியஸ். இது சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பத்துக்கு இணையானது.
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
புவிக் கோளின் சூழல் மண்டலங்களுக்கு சத்தமில்லாமல் சேவை செய்துவரும் நிலத்தடி பூஞ்சைகள் அரசியல்வாதிகளால் உடனே காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளன. பூமிக்கடியில் வாழும் பூஞ்சை வலையமைப்புகளை பாதுகாக்கும் சங்கத்தை (Society for the Protection of Underground Networks (Spun)) சேர்ந்த விஞ்ஞானிகள் வேர்ப் பூஞ்சைகளின் சூழல் மண்டலங்களின் உயிர்ப் பன்முகத்தன்மை வரைபடத்தை முதல்முறையாக உயர் தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ளனர்.
இருட்டில் வாழ்ந்தாலும்…
இது பற்றிய ஆய்வுக் கட்டுரை நேச்சர் (Nature) என்ற இதழில் வெளிவந்துள்ளது. வேர்ப் பூஞ்சைகள் (Mycorrhizal fungi) செழுமையாக உள்ள 90% பகுதிகளும் பாதுகாக்கப்படாத இடங்களிலேயே வாழ்கின்றன. இச்சூழல் மண்டலங்களின் இழப்பு கார்பன் ஓட்டம், பயிர் உற்பத்தி மற்றும் அதி தீவிர காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் சூழல் மண்டலங்களின் திறனைக் குறைக்கும்.
“வேர்ப் பூஞ்சைகள் இருட்டில் வாழ்ந்தாலும் நிலப் பகுதியில் நீடித்த வாழ்விற்கு அசாதாரணமான சேவைகளை செய்துவருகின்றன. அவை சத்துக்களின் சுழற்சி மற்றும் கார்பன் சேமிப்புக்கு உதவுகின்றன. தாவரங்களின் ஆரோக்கியத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றன. மண்ணின் மிக முக்கிய சூழல் மண்டலப் பொறியியலாளர்களாக உள்ளன. இவை இல்லாவிட்டால் காடுகளின் மீள் உருவாக்கம் மெதுவாக நடைபெறும். பயிர்கள் விளையாது.
நிலப் பரப்பிற்கு மேல் இருக்கும் உயிர்ப் பன்முகத் தன்மை 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தாவரங்கள் எதுவும் இல்லை என்ற தகவலைக் கூறுகிறது. ஆனால் இந்த வேர்ப் பூஞ்சைகளின் வலையமைப்புகளால் மட்டுமே தாவரங்கள் புவிக் கோளை காலனித்துவப்படுத்தின. மனித வாழ்விற்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தன. ஆரோக்கியமான பூஞ்சைகளின் வலையமைப்புகள் இருந்தால் மகத்தான வேளாண் உற்பத்தியையும் பெரிய, அழகழகான மலர்களையும் நாம் பெறலாம். தாவரங்களை நோய்க் கிருமிகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என்று ஸ்பன் அமைப்பின் செயல் அலுவல் இயக்குனர் டாக்டர் டோபி கியர்ஸ் (Dr Toby Kiers) கூறுகிறார்.
தாவர வேர்களில் காணப்படும் இந்தப் பூஞ்சைகள் பூமியின் காலநிலை மற்றும் சூழல் மண்டலங்களை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
இந்த நிலத்தடி வலையமைப்புகள் தாவரங்களுக்கு அவசியமான சத்துக்களை தருகின்றன. ஆண்டுதோறும் 13 பில்லியன் டன்களுக்கும் கூடுதலான கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி மண்ணிற்கு அளிக்கின்றன. இது உலகளவில் புதைபடிவ எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் சுமார் மூன்றில் ஒரு பங்கு உமிழ்விற்கு சமமானது.
ஸ்பன் அமைப்பு வேர்ப் பூஞ்சைகள் பாதுகாப்பு திட்டத்தை உலகளவிலான பூஞ்சை (GlobalFungi), பூஞ்சை அறக்கட்டளை (Fungi Foundation) மற்றும் உலக மண் நுண் உயிர்ம கூட்டமைப்பு (the Global Soil Mycobiome consortium) உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து மிகக் குறைவாக ஆராயப்பட்டுள்ள வேர்ப் பூஞ்சை வலையமைப்புகளின் வரைபடத்தை உருவாக்கும் பணிகளை 2021-ல் தொடங்கியது.
வேர்ப் பூஞ்சைகளின் வரைபடம்
இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 130 நாடுகளின் மாதிரிகளைக் கொண்ட 2.8 பில்லியனுக்கும் மேற்பட்ட பூஞ்சைகளின் வரிசைகள் அடங்கிய தரவுத்தளம் உருவாக்கப்பட்டது. ஒன்றுக்கு இரண்டு (1km2 scale) என்ற விகிதத்தில் அமைந்த அளவுகோலைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் பூமியின் வேர்ப் பூஞ்சைகளின் உயிர்ப் பன்முகத் தன்மையை கணித்துக் கூறுகின்றனர்.
இவற்றின் உயிர்ப் பன்முகத் தன்மை செழுமையாக உள்ள 9.5% இடங்கள் மட்டுமே தற்போது நடைமுறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு மட்டுமே இவை வாழ்கின்றன என்பது இந்த வரைபடத்தின் மூலம் விஞ்ஞானிகளுக்குத் தெரியவந்தது. இவற்றின் பாதுகாப்பில் உள்ள மிகப் பெரிய இடைவெளியை இது எடுத்துக்காட்டுகிறது. கானாவின் கடலோரப் பகுதிகள் உலகளவில் பூஞ்சைகளுக்கான செழுமை மிகுந்த இடமாகக் கருதப்படுகிறது.
ஆனால் இங்கு கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பு ஆண்டிற்கு 2 மீட்டர் என்ற அளவில் நிகழ்வதால் இந்த முக்கிய உயிர்ப் பன்முகத் தன்மையுள்ள இடம் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். “அறிவியல்பூர்வ செயலியின் பயன்பாட்டுடன் கூடிய பரந்த உலகளவிலான முதல் வரைபட முன்முயற்சியை (global mapping initiative) இந்த ஆய்வு குறிக்கிறது. இது வெறும் அறிவியல் கருவிகளுக்கும் அப்பாற்பட்டது. வருங்கால சூழல் பாதுகாப்பிற்கு இது உதவும்.
சூழல் மண்டல பாதுகாப்பிற்கும் செயல்பாட்டிற்கும் இந்தப் பூஞ்சைகளின் கூட்டு வாழ்க்கை ஏற்படுத்தும் தாக்கத்தை தொடர்ந்து புறக்கணிப்பது பூமியைக் காப்பதில் கை தவறவிட்ட மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். பூஞ்சைகள் மனிதனால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களுக்கு எதிர்மறையாக வினை புரிகின்றன.
இவற்றின் இழப்பை சரிசெய்யாவிட்டால் காலநிலை மாற்றத்தை சமாளிக்க உதவும் உன்னதமான இயற்கைத் தீர்வுகளை நம்மால் உருவாக்க முடியாது” என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் டாக்டர் மைக்கேல் வாண் ந்யுலன்ட் (Dr Michael Van Nuland) கூறுகிறார்.
“நிலப் பகுதியின் தவறான பயன்பாடு இவ்வகைப் பூஞ்சைகள் வளமிழப்பதற்கு ஒரு முக்கியக் காரணம். இவற்றின் பாதுகாப்பில் முன்னுரிமை கொடுக்கப்படாமல் இருப்பது விரக்தியை ஏற்படுத்துகிறது.
வேர்ப் பூஞ்சைகளின் நிலத்தடி அட்லஸ்
இவை விவசாய உற்பத்திக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் அவசியமானவை” என்று கியர்ஸ் கூறுகிறார். “இப்பூஞ்சை சூழல் மண்டலங்கள் பெருவாரியாக சட்டத்திலும் கொள்கைகளிலும் புலப்படுவதில்லை. இதனால் காலநிலை மாற்றம், பூமியின் எல்லா நிலத்தடி சூழல் மண்டலங்களிலும் உயிர்ப் பன்முகத் தன்மையின் இழப்பு ஏற்படுகிறது.
இதை சட்டம் மற்றும் கொள்கை ரீதியாக சமாளித்து வலுப்படுத்த இந்த தரவு மிக முக்கியமானது” என்று நியூயார்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் சட்டத் துறைப் பேராசிரியரும் மனித வாழ்விற்கும் மேலான திட்டத்தின் (the More-Than-Human Life (Moth) programme) இயக்குனருமான சேசார் ரோட்ரிக்ஸ் காரா-விடோ (César Rodríguez-Garavito) கூறுகிறார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய செழுமையிழந்த இடங்களை பாதுகாப்பு குழுக்கள், ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பவர்கள் அடையாளம் காண உதவும் விவரங்களை ஸ்பன் அமைப்பின் நிலத்தடி அட்லஸ் இடைநிலைக் கருவிகள் மூலம் பெறலாம். ஸ்பன் பன்னாட்டு அமைப்பின் 79 நாடுகளைச் சேர்ந்த நாநூற்றிற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 96 நிலத்தடி ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து இந்தப் பணிகளில் ஈடுபட்டனர்.
பூமியில் சென்றடைய மிகக் கடினமான, தனித்து விடப்பட்ட மங்கோலியா, பூட்டான், பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் போன்ற இடங்களில் உள்ள நிலத்தடி சூழல் மண்டலங்களின் மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய ஒத்துழைப்பாளர்களையும் வேர்ப் பூஞ்சைகளின் வரைபடத்தை விரிவாக்க நிதியுதவி அளிக்கும் கொடையாளர்களையும் ஸ்பன் அமைப்பு தேடிவருகிறது. இப்போது உருவாக்கப்பட்டுள்ள வரைபடம் பூமியின் பரப்பில் 0.001% பகுதியை மட்டுமே கொண்டதாக உள்ளது.
“இந்த வரைபடத்தின் விரிவாக்கம் இப்பூஞ்சைகளின் செயல்முறைகளை சிறந்த முறையில் பயன்படுத்த உதவும். இருக்கும் பூஞ்சைகளை அழியாமல் வைத்திருந்து பாதுகாத்தால் உலகின் சில மிகப் பெரிய சவால்களைத் தீர்க்க, உயிர்ப் பன்முகத் தன்மை குறைவை சரிசெய்ய, காலநிலை மாற்றத்தை சமாளிக்க மற்றும் குறையும் உணவு உற்பத்தியை அதிகரிக்க அது உதவும். இது நேரடி பயன்களை மக்களுக்கு தரும்” என்று உலக வன நிதியத்தின் (World Wide Fund for Nature) தலைமை விஞ்ஞானி ரெபெக்கா ஷா (Dr Rebecca Shaw) கூறுகிறார்.
இனி நாம் பூமியில் கால் பதித்து நடக்கும்போது கண்ணுக்குப் புலப்படும் தாவரங்கள், விலங்குகள் போல மண்ணிற்கு அடியிலும் வேர்களில் வாழும் பூஞ்சைகளைப் பற்றி சிறிது சிந்திப்போம்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும் ஒலிபரப்பாளருமான டேவிட் அட்டன்பரோ (David Attenborough) அவர்களின் நூறாவது பிறந்த நாளான மே 8, 2026 அன்று புதியதொரு ஒட்டுண்ணி வகை குளவி குடும்பத்திற்கும், புதிய குளவி இனத்திற்கும் (Tiny parasitic wasp) அவரது பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டது. லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தின் (Natural History Museum) சேகரிப்பில் இருந்து இந்த உயிரினத்தின் மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது.
அட்டன்பரோவின் பெயரில்…
இயற்கை மற்றும் சூழல் பாதுகாப்பிற்காக தன் வாழ்வை அர்ப்பணித்துவரும் அட்டன்பரோவின் பெயர் ஏற்கனவே பல்லிகள், வௌவால்கள், தவளைகள், அந்துப் பூச்சிகள், தட்டைப் புழுக்கள், நத்தைகள், சிலந்திகளின் புதிய இனங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிரான, புரிந்து கொள்ளக் கடினமான ஊசிவால் குளவி வகையைச் சேர்ந்த உயிரினத்தின் நீளம் வெறும் 3.5 மில்லிமீட்டர் மட்டுமே. இதன் பெயரில் உள்ள டவ் (tau) என்ற சொல்லின் பொருள் அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் அடையாளத்தைக் குறிக்கிறது.
இந்த மாதிரி சிலியில் உள்ள வால்டிவியா மாகாணத்தில் (Valdivia province) இருந்து 1983ல் சேகரிக்கப்பட்டது. ஆனால் லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் வகைப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த உயிரினங்களின் சேகரிப்பு இருந்த மேசை டிராயரில் ஆகஸ்ட்டிஜென் டெ கெட்டெலேர் (Augustijn De Ketelaere) என்ற தன்னார்வலரால் இதன் வியப்பூட்டும் குணங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்டது. அதுவரை இது பற்றி எவருக்கும் தெரியாமல் இருந்தது.
புதிதாக விவரிக்கப்பட்ட இந்தப் பூச்சியைப் பற்றிய ஆய்வை இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தின் பூச்சிகள் பிரிவின் முதன்மை மேற்பார்வையாளர் டாக்டர் கவின் பிராடு (Dr Gavin Broad) தலைமையேற்று நடத்தினார். இதன் உடலமைப்பு அதன் மிக நெருக்கமான உறவினரான பூச்சி இனத்தில் இருந்து தனித்துவமாக வேறுபட்டு காணப்பட்டது. அதனால் முன்பு வகைப்படுத்தப்பட்ட வேறெந்த குடும்பத்திலும் இதைத் தர்க்கரீதியாக சேர்க்க முடியவில்லை.
“சிறு வயதில் வகைப்பாட்டியல் பற்றி நான் டேவிட் அட்டன்பரோவின் பூமியில் வாழ்க்கை (Life on Earth) என்ற தொடரில் இருந்தே அறிந்தேன். எதிர்காலத்தில் நான் ஒரு வகைப்பாட்டியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற உள்ளுணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. வியக்கத்தக்க வகையில் என் இலட்சியம் வெற்றி கண்டது. நான் ஒரு வகைப்பாட்டியல் ஆய்வாளராக ஆனேன். இதற்காக அட்டன்பரோவிற்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று பிராடு கூறுகிறார்.
தான் இடும் முட்டைகளை மற்றொரு விலங்கின் உடலில் இடுகின்றன என்பது தவிர இந்த புதிய குளவியின் வாழிடம் அல்லது அதன் வாழ்க்கைச் சுழற்சி பற்றி இன்னும் எதுவும் தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் வாழும் “இதன் தூரத்து உறவினரான ஒரு உயிரினம் சிலந்தியின் முட்டைகளைத் தாக்குகிறது. இது போன்ற குழுவில் உள்ள இனங்கள் இவ்வாறு செய்வது இயல்பானதே என்று கருதப்படுகிறது. ஆனால் இதுவும் தீவிர ஆய்வுகளுக்குப் பிறகே உறுதி செய்யப்பட முடியும்” என்று பிராடு கூறுகிறார்.
இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினம்
“வேறு சில அதிசயிக்கத்தக்க, பிரமிப்பூட்டும் மகத்தான உயிரினங்கள் வாழும் சிலியில் இந்தப் பூச்சியினம் இன்னமும் வாழ்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் இந்த சின்னஞ்சிறிய உயிரினத்தை அங்கு கண்டுபிடிப்பது வைக்கோல் போரில் ஒளிந்திருக்கும் ஊசியைத் தேடுவது போல. புதிரான இந்த குளவிகள் பெரும்பாலானவையும் இன்னமும் விவரிக்கப்படாத உயிரினங்களாகவே உள்ளன.
பிரிட்டனில் கூட நாம் புதிய இனங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் விவரிக்கிறோம். அட்டன்பரோ இந்த உயிரினத்திற்கு தன் பெயர் வைக்கப்பட்டது, குறிப்பாக வகைப்பாட்டியல்ரீதியாக ஒரு இனத்தின் துணைக் குடும்பத்திற்கே தன் பெயர் வைக்கப்பட்டது பற்றி மகிழ்வார் என்று நான் நம்புகிறேன்.
என்றாலும் 1961ல் இந்தோனேஷியா பாப்புவாவில் (Papua) இருந்து சேகரிக்கப்பட்ட எட்சினா (echidna) என்ற பல்லில்லாத, குழி தோண்டி மண்ணிற்கடியில் வாழும் முள் எலி போன்ற ஒரே ஒரு உயிருள்ள விலங்கிற்கு தன் பெயரிடப்பட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி இப்போது அவருக்கு தோன்றியிருக்காது என்று கருதுகிறோம். அழியும் ஆபத்தில் இருக்கும் இந்த உயிரினத்திற்கு 1998ல் சாக்லாஸஸ் அட்டன்பரோயி (Zaglossus attenboroughi) என்று பெயர் வைக்கப்பட்டது. 2023 வரை இந்த நீண்ட அலகுள்ள உயிரினம் புலப்படவில்லை.
அப்போது உயிருடன் இருந்த இந்த விலங்கின் காணொளி முதல்முறையாக பதிவு செய்யப்பட்டது. அட்டன்பரோவிற்கு மிகப் பிடித்தமான கட்டிடங்களில் ஒன்றாக லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம் விளங்குகிறது. இந்த புதிய உயிரினக் குடும்பத்தின் கண்டுபிடிப்பு வரலாற்று சேகரிப்புகளில் இது போன்ற தனித்துவமான உயிரினங்கள் இன்னும் கண்டறியப்படாமல் ஒளிந்திருக்கின்றனவா என்று மேலும் ஆராய மற்ற விஞ்ஞானிகள், வகைப்பாட்டியல் ஆய்வாளர்களுக்கு உதவும்.
புதிதாகக் கண்டறியப்படவிருக்கும் உயிரினங்கள் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து கூறவும் புதிய பெயர்களை வைக்கவும் உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகளுக்கு சேகரிப்புகளை மறு பார்வையிட இது உலகளவில் உள்ளுணர்வூட்டும்.
புதிதாகக் கண்டறியப்படும் இத்தகையவை மிகச் சிறிய உயிரினமாக இருந்தாலும் இவற்றின் கண்டுபிடிப்புகள் ஒன்றுபட்ட நம் புரிதலுக்கும் அதன் மூலம் இயற்கை உலகின் எதிர்காலத்திற்கும் பெரும் பங்காற்றும்” என்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் அறிவியல் தகவல் தொடர்பு மேலாளர் ஜெனிஃபர் புல்லர் (Jennifer Pullar) கூறுகிறார்.
இது பற்றிய கட்டுரை இயற்கை வரலாறு (Journal of Natural History) என்ற இதழில் வெளிவந்துள்ளது. இயற்கை பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்து வாழும் இந்த மகத்தான மனிதரின் பெயர் இந்தப் புதிய குளவிக்கு வைக்கப்பட்டது மிகப் பொருத்தமான அங்கீகாரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- இயற்கையுடன் உறவு அதிகமுள்ள நாடுகளின் பட்டியல்
- சூழலிற்கு நட்புடைய பூச்சிக்கொல்லி
- புல் தின்னும் புலிகள்!
- நம்மைப் போலவே இவர்களும்… அழியாமல் காப்போம்!
- மியாவ்… மியாவ்… பூனைகள் பாவப்பட்ட உயிரினங்கள் இல்லை
- வன உயிரினங்களின் தியேட்டர்
- மெல்ல வளரும் மரங்கள்
- நிறம் மாறும் பூச்சிகளின் இறக்கைகள்
- என்று மாறும் இவற்றின் தலைவிதி?
- கண்டுபிடிக்கப்படும் முன்பே காணாமல் போய்விடுமா?
- வாட் ஈஸ் திஸ்!? திஸ் ஒரு ஈ!
- இரத்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய உயிரினம்
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.