அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
வேட்டையாடி பிழைத்துவந்த வாழ்க்கையை விட்டு வேளாண்மை செய்து பிழைக்கும் நிலைக்கு மனிதன் வாராதிருந்தால் நாடு, நகரம், அறிவியல் தொழில் நுட்பம் என்று எதுவுமே ஏற்பட்டிருக்காது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதன் வேட்டைக்காரனாகத் தானிருந்தான். அவனது பற்களின் பலத்தையும், பெரிய தாடையின் அளவையும் இன்றைய மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நவீன மனிதனின் பற்கள் வெறும் அவலுக்கு சமம். தாடை கூட சிறியதாகி உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.
பல்துலக்காமல் இருந்தும், பல்சொத்தையில்லாமலேயே வேட்டை மனிதன் வாழ்ந்தான். இன்று பல்லுக்கென்று மனிதன் எத்தனை நேரத்தையும் பொருளையும் செலவு செய்கிறான்! இந்த மாற்றத்திற்குக் காரணம் வேகவைத்த அரிசி, கோதுமை உணவை சாப்பிடுவதுதான். அதிக கார்போஹைட்ரேட் மிகுந்த உணவின் மூலம் நாம்பெற்ற தீமைகள் இவை. வேலைக்காக மனிதன் பெருங்கூட்டமாக நகரத்தில் வாழ ஆரம்பித்ததும்தான் சிப்பிலிஸ், காசநோய், தொழுநோய் போன்ற நோய்களும் தோன்ற ஆரம்பித்தன. நாகரிகத்தில் முன்னேறிச் சென்றால், ஆரோக்கியம் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது.
கலைக்கதிர், ஜூலை 2008
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: புவி அறிவியல்
ரஷ்யாவில் கோலா தீபகற்பப் பகுதியில் ஆராய்ச்சிக்காக உலகிலேயே மிக ஆழமாக துளையிடப்பட்டுள்ளது. 1970ல் ஆரம்பித்த இந்த துளையிடும் பணி 1995ல் முடிந்தது. துளையின் ஆழம் 12,262 மீட்டர். இதன்மூலம் பூமியின் ஆழத்தில் நிகழும் தட்டுப் பிளவுகள், பூமியின் மையப்பகுதியில் உள்ள வேதியியல் பொருட்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்த ஆழத்தில் 270 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் துளையின் ஆழத்தை மேலும் 10,000 அடிகள் நீட்டிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் ஓக்லஹோமா என்ற இடத்தில் இரண்டாவது பெரிய துளை (31,500 அடிகள்) உள்ளது. பூமியின் மையப்பகுதியில் உருகிய இரும்பு உள்ளது. இதன் வெப்பம் 6,000 செல்சியஸ். இது சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பத்துக்கு இணையானது.
- விவரங்கள்
- புழல் தி.பாலகுமார்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
விக்கிரமன்: சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் தாவரவியல் நிபுணர். தாவரங்கள் பற்றிப் பல கேள்விகள் கேட்டார். சில புதிர்கள் போட்டார். பலூன்களுக்கும் தாவரத்துக்கும் என்ன தொடர்பு என்று வினவினார். விடை கூறாமல் சென்றார்.
வீரப்பிரதாபன்: தொடர்பு உள்ளது. அது இரப்பர் எனும் பாலி. இருபதுக்கு மேற்பட்ட தாவர இனங்களில் இருந்து இரப்பர் எனும் வேதிப் பொருளைப் பால் வடிவத்தில் எடுத்தாலும் அவற்றில் மிகச் சிலவே வணிகப் பயன் உள்ளவை. அந்த வேதிப்பாலை வேறு சில வேதிமங்களின் துணையோடு, சில எந்திரங்களின் உதவியோடு பலூன்கள், பொம்மைகள், மிதியடிகள் உள்ளிட்ட இரப்பர் பொருட்களைத் தொழிலகங்களில் தயாரிக்கின்றனர். ஆக பலூனும்…
விக்கிரமன்: ஒரு தாவரப்பொருள் தானா?
வீரப்பிரதாபன்: செருப்பு, டயர் எனும் கார் சக்கரம், குக்கர் கேஸ்கட் வளையம் என்று இரப்பர் கொண்டு தயாரிக்கப்படும் எல்லாம் தாவரப் பொருட்களே. அதை லாடெக்ஸ் திரவம் என்று விஞ்ஞானம் கூறுகிறது. கால்நடைகள் அந்த இரப்பர் மரத்துக்கு அருகில் செல்வதில்லை.
விக்கிரமன்: கால்நடைகளுக்குப் பிடிக்காத தாவரம் வேறு எதுவும்?
வீரப்பிரதாபன்: கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்றவப்பயிர்களைச் செய்யத் தொடங்கி வெகுகாலம் கழித்துத்தான் 'ரை' என்ற தானியத்தைப் பயிர் செய்தனர். ஐரோப்பாவின் வடபகுதியில் அதிகமாகப் பயிராகிறது ரை. அது தானியம் மற்றும் வைக்கோலுக்காக மட்டும் பயிரிடப்படுகிறது. மண்ணரிப்பைத் தடுக்கவும் தொழுவுரமாகப் பயன்படுத்தவும் தற்போது இந்த ரை பயிரிடப்படுகிறது. இந்த ரை செடி பல நிறங்களில் காணப்படுகிறது. ரை தானியமும் சிவப்பு, கறுப்பு, பழுப்பு நிறங்களில் உள்ளது. ரை தானியத்திலிருந்து பெரும்பாலும் ஐரோப்பாவில் ரொட்டி செய்கின்றனர். ஆனால் ரை தானியத்தை எடுத்த பிறகு அதன் புல்லை உலர வைத்துவிடுவர். அது நார்ப்பற்றுடன் முரடாக இருப்பதால் அந்தப் புல்லைக் கால்நடைகள் விரும்பித் தின்பதில்லை; அருகில் செல்லாது. அந்த ரை புல் காகிதக்கூழ் அரைத்துக் காகிதம் செய்ய உதவுகிறது. புல்லைப் பதப்படுத்தி கூடை, தொப்பி, தட்டு, சிறுபாய் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அது நம்மூரிலும் பயிராகிறது.
விக்கிரமன்: என்ன, ஐரோப்பியப் புல் ரை நம்மூரிலா? கால்நடைகூட விரும்பாத ரை எதற்கு நம்மூரில்?
வீரப்பிரதாபன்: 'எர்காட்' என்ற பூஞ்சைப் பூசணம் மருந்தாகப் பயன்படுகிறது. அந்தப் பூசணத்தை வளர்த்தெடுக்கும் ஊடகமாகப் பயன்படுத்த ரை செடி நீலகிரியில் பயிரிடப்படுகிறது. மற்றபடி ரை பற்றி நம்மூர் மக்களுக்கு அதிகம் தெரியாது.
விக்கிரமன்: உண்மைதான். ரை என்றொரு தானியம் இருப்பதையே இப்போதுதான் அறிகிறேன். நமக்குப்பல தானியங்கள், செடிகள், மூலிகைகள் பற்றிய போதிய அடிப்படைத் தகவல்கள் கிடைக்கவில்லை. அறிவுக்கண், அறிவியல் ஒளி, அறிக அறிவியல், துளிர் என்று ஒரு சில அறிவியல் இதழ்கள் மூலம் ஓரளவு இவற்றைப் பற்றிய அறிவு வளர்ந்து கொண்டு வருகிறது. இதுபோல அதிகம் அறியப்படாத மூலிகை வேறு?
வீரப்பிரதாபன்: அலரிக் குடும்பத்தின், அதாவது அப்போசைனேசியீ குடும்பத்தின் சிறு செடி ராவோல்பியா சர்ப்பென்டினா. தமிழில் சர்ப்பகந்தி என்றும் நாககந்தி என்றும் கூறுவர். இந்தச் செடியின் கிளையை, இலையை முறித்தால் பால் போன்ற திரவம் வடியும். கணுக்களில் மூன்று இலைகள் வட்டவடிவத்தில் இருக்கும். மிகச்சிறிய பூக்களில் காம்பும் புற இதழ்களும் சிவப்பாக இருக்கும். அக இதழ்கள் வெண்மையாக இருக்கும். சர்ப்பகந்தி காய் சிவப்பு, கனி கருஞ்சிவப்பு. சர்ப்பகந்தி வேரை எடுத்துப் பக்குவம் செய்து தூளாக்கிக் கஷாயம் காய்ச்சி, காய்ச்சலுக்கும் வயிற்றுவலிக்கும் மருந்தாகத் தருவார்கள் ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள். இரத்தக்கொதிப்புக்கும் இந்தச் செடியிலிருந்து மருந்து தயாரிக்கின்றனர். அரிய, சிறந்த ஆயுர்வேத, சித்த மருத்துவ மூலிகை இந்தச் சர்ப்பகந்தி. சிலருக்கு மட்டுமே தெரியும்.
விக்கிரமன்: பெயர் சற்று பயமாக இருந்தாலும் பயன்கள் சிறப்பானவைதான். சில செடிகள் அதிகம் பயன்பட்டாலும் மக்கள் நாகரிக மோகத்தில், அன்னியப் பொருள் ஆசையில் அவற்றை மறந்து ஒதுக்கிவிடுகிறோம். பிரச்சினை வரும்போது, தீர்வு தேவைப்படும்போது மீண்டும் அவற்றை நாடி ஓடுகிறோம். டெங்கு வந்தால்தான் நிலவேம்பை நாடுகிறோம். கொரோனா பரவினால் கபசுரக் குடிநீரை அறிகிறோம்.
வீரப்பிரதாபன்: நாவல் பழமும் இலவங்கம் என்கிற கிராம்பும் அந்த ரகம்தான். மிர்ட்டேசியீ என்ற நாவல் குடும்பமும் நல்லதொரு குடும்பம். அக்குடும்பத்தின் செடிகள்தாம் கொய்யா, நாவல் செடிகள். யூகலிப்டஸ் மரமும் பிரபலம்தான். இவற்றின் இலைகளில் ஒரு சிறப்பு உள்ளது; அது விளிம்பக நரம்பு எனும் சிறப்பு அமைப்பு.
விக்கிரமன்: கொய்யா இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகும். யூகலிப்டஸ் இலைகள் சளிக்கு நிவாரணம்.
வீரப்பிரதாபன்: ஆம், அறிவுக்கண் திறந்துள்ளது உனக்கு. நாவல் குடும்பத்தின் பல மரங்களில் இருந்து மரவேலைக்கு வெட்டுமரம் கிடைக்கிறது. சிடியம் குவா எனும் கொய்யாப்பழத்தை விடக் காய் சிறப்பானது. சைசிகியம் சிற்றினமான நாவல் பழம் தற்போது நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் புகழ்பெற்றது. கருநாவல், குறுநாவல் என்று எல்லாரும் விரும்பும் ஊதாப்பழம். ஆரோமாடிகா எனும் கிராம்பு நுரையீரலுக்குப் பலம் தரும். இக்குடும்பத்தின் ஆர்போரியா மரமும் அழகானது. பாரிங்டோனியா எனும் வெண்கடம்பு மரம் ஆற்றோரம் நீரில் மிதக்கும்படி வளரும்; கரையை வலுப்படுத்தும். சிவப்பு நிறத்தில் சரம்சரமாகப் பூக்கள் தொங்கும்.
விக்கிரமன்: நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று இத்தாவரக் குடும்பத்துக்கும் பாடலாம் அல்லவா? வேறு நமக்கேற்ற நல்ல தாவரக் குடும்பம் பற்றி…
வீரப்பிரதாபன்: கிச்சிலிக் குடும்பம் ரூட்டேசியீ நமக்கேற்ற எளிய நல்ல குடும்பம். அக்குடும்பப் பிள்ளைகள் எலுமிச்சை, வில்வம், விளா மரங்கள் மணமுள்ளவை. இலை குறுமுட்கள் போல வளரும். பல மருந்தாகப் பயன்படுகின்றன. அவற்றில் நாம் அதிகம் அறிந்திராத சதாப்புச் செடியின் அறிவியல் பெயர் ரூட்டா சிராவிபெபிலென்ஸ். இச்செடியின் இலைகள் சாம்பல் பூத்த நிறத்தில் காரமான மணத்துடன் இருக்கும். அதில் ஒருவித எண்ணெய் உள்ளது. அதன் பல்வேறு ரகங்கள்தாம் கிச்சிலி, நாரத்தை, கடாரங்காய் ஆகிய சிட்ரஸ் இனப் பழச்செடிகள். புகழ்பெற்றவை. கறிவேப்பிலையும் இந்த குடும்பம்தான். வில்வம், விளா, கறிவேப்பிலை ஆகியன மூலிகைகள்; மருந்தாகும் உணவுகள். குளோரேக்சைலான் என்ற ஒரு உறுப்பினர் மட்டும் நல்ல வெட்டுமரமாக மரவேலைகளுக்கு உதவுகிறது.
விக்கிரமன்: என்னைப் போன்ற இன்றைய தலைமுறையினருக்கு வில்வம், விளா பற்றி எல்லாம் தெரியாது. எலுமிச்சை பற்றித் தெரியும். காபி, டீ போல எலுமிச்சை சாறு புகழ்பெற்றது. விளம்பரம் செய்யப்பட்டால்தான் எதுவும் புகழ்பெறுகிறது.
வீரப்பிரதாபன்: காப்பிக் குடும்பம் என்று கூறப்படும் வெட்சிக் குடும்பம் ரூபியேசியீ மிகப்பெரியது, பயனுள்ளது. அதில் காலியம் என்ற பேரினத்தின் சில தாவரங்கள் ஆர்க்டிக் குளிர் பிரதேசத்திலும் வளர்கின்றன. பல செடிகள் வணிக முக்கியத்துவம் உள்ளவை. கொய்னா எனும் மருந்து பெறப்படும் சின்கோனா, இப்பிகாக்குவானா மருந்து பெறப்படும் யூரகோகா, உற்சாகபானம் வடிக்கப்படும் காப்பிக்கொட்டைச் செடி அனைத்தும் இந்தக் குடும்பம்தாம். தற்போது பரவலாகப் புகழ் பெறும் நோனி அல்லது நுணா எனும் மொரிண்டா செடி, பன்னீர் பூச்செடி, காரைமுள் செடி, ஆற்று வஞ்சிச்செடி, கடம்பு மரம், குரா மரம், சரித்திரப் புகழ் வாய்ந்த வெட்சி ஆகியனவும் பிரபலமானவை. இக்சோரா எனும் காக்சினியா, சுளுந்து எனும் செடி, மஞ்சிட்டி, நத்தைச்சூரி எனும் விசித்திரச் செடிகளும் இக்குடும்பத்தினர்தாம்.
விக்கிரமன்: இக்சோரா பூ பார்ப்பதற்கு ரோஜாப்பூ போல அழகாக இருக்கும். ஆனால் மணம் இருக்காது அல்லவா?
வீரப்பிரதாபன்: ரோஜா குடும்பம் ரோசேசியீ குடும்பம் எனப்படும். உலகம் முழுதும் பரவியுள்ளது. அதில் ரூபஸ் இனம்தான் நாவல் இனம். ராஸ்பெரி, பிளாக்பெரி, டியூபெரி ஆகிய பழங்கள் தரும் மேற்கத்திய இனம். ஃப்ரகேரியா இனத்தில் ஸ்ட்ராபெரி பழம் உள்ளது. ரோசா இனத்தின் ஒரு சிற்றினம்தான் ரோஜாப்பூச்செடி. பல வகைகள் உள்ளன. சிலவற்றில் பூக்காம்புகளில் முட்கள் இருக்கும். மேலும் பல புகழ்பெற்ற அயல்நாட்டுத் தாவரங்கள்: ஆப்பிள் - பைரஸ் மாலஸ்; பைரஸ் கம்யூனிஸ் எனும் பேரிக்காய்; ப்ரூனஸ் ஆர்மீனியாக்கா எனும் அக்ரூட் பருப்பு; ப்ரூனஸ் டொமஸ்டிகா எனும் ப்ளம் அல்லது ஆல்பகடா பழம்; ப்ரூனஸ் அமிக்டாலஸ் எனும் வாதுமை அல்லது பாதாம் பருப்பு; பெர்சிக்கா எனும் பீச் பழம் ஆகியன இந்தக் குடும்பம்தான்.
விக்கிரமன்: எல்லாம் விலையுயர்ந்த, அரிதான, எளிதில் கிடைக்காத பொருட்களாக உள்ளதே! காஸ்ட்லி குடும்பம் போலிருக்கிறது. நாம் சில தாவரங்களை மறந்துவிட்டோம்; சிலவற்றை ஒதுக்கிவிட்டோம். நாம் மறந்து கவனிக்கவில்லை என்பதால் அவற்றுக்கு ஏதும் பிரச்சினை, பாதகம் இல்லைதானே?
வீரப்பிரதாபன்: அப்படிக் கூற முடியாது. நமக்கும் பிற பறவைகள், விலங்குகளுக்கும் அவை இல்லை எனில் பிரச்சினை. நாம் ஒதுக்குவதால் சில தாவரங்களுக்கும் பிரச்சினைதான். தாவரங்களுக்குப் பூச்சிகள், விலங்குகளும் நாமும் அவசியம் தேவைதான். வெங்காயக் குடும்பம் லில்லியேசியின் யுக்கா இனச்செடிகள் விசித்திரமானவை. அவற்றின் தண்டு நார்ப்பொருள் நிரம்பி குட்டையாக இருக்கும். உச்சியில் இரண்டு இரண்டாகக் கிளைகள் வளரும். இலைகள் குச்சம் போன்று அடர்ந்து விறைப்பாக வாள் போலக் கூர்நுனியில் முடியும். பூக்கள் பெரிய வெண்ணிற மணிவடிவத்தில் கவிழ்ந்து தொங்கும். அழகான இந்தப் பூக்கொத்துகளை யுக்காவிட்டில் எனும் ஒருவகை விட்டில் பூச்சிகள் நாடிவந்து மகரந்தச் சேர்க்கை செய்யும். ஒவ்வொரு யுக்கா சிற்றினத்துக்கும் ஒவ்வொரு தனி விட்டில் இனப் பூச்சி வரும். இரவில் மலரும் இந்த யுக்கா பூ பலமான நல்ல மணம் வீசும். இந்த மணத்தைக் கொண்டு அந்தப் பூச்சிகள் வரும். அவற்றுக்கு அந்தப் பூவின் மகரந்தம்தான் உணவு. அந்தப் பூவுக்கு அந்த விட்டில் பூச்சி இல்லாமல் இனப்பெருக்கம் செய்ய இயலாது.
விக்கிரமன்: அதாவது பூவுக்குப் பூச்சி வேண்டும்; பூச்சிக்குப் பூ வேண்டும். அந்த யுக்கா பூவின் பயன் என்ன?
வீரப்பிரதாபன்: யுக்கா இலைகளில் இருந்து நார் எடுத்துக்கயிறு திரிப்பர். மெக்சிகோவில் யுக்காகனியைச் சமைத்து உண்பர். பல நாடுகளில் யுக்கா செடியை அழகுக்காக வீடுகளில் வைத்து வளர்ப்பர். இயற்கையின் விசித்திரச் சமநிலை இந்த யுக்காவில் மட்டுமன்றி உலகம் முழுதும் எல்லா தாவர, விலங்கின இனங்களிலும் உள்ளது. யானைவாய் எச்சில் பட்டால்தான் சில மரங்கள் தழைக்கும். மாடு கடித்தால்தான் சில புல் வகைகள் வளரும். அந்த நண்பர்கள் இல்லை என்றால் தாவரங்களுக்குப் பிரச்சினை; நமக்கும்தான்.
விக்கிரமன்: யுக்கா… விசித்திரமான பெயர். உயர்ந்த வாழ்வியல் உண்மை. இதுபோல வேறு ஏதும் விசித்திரக் குடும்பம்…
வீரப்பிரதாபன்: நாட்டு வாதுமை டெர்மினேலியா கட்டப்பா எனும் அமிந்தி மரமும் விசித்திரம்தான்…
விக்கிரமன்: என்ன… கட்டப்பா என்றா கூறினாய்?
வீரப்பிரதாபன்: ஆம், கட்டப்பாதான் அது. நீ நினைப்பது போல பாகுபலி கட்டப்பா அல்ல அது; அமிந்தி மரத்தின் அறிவியல் பெயர். தான்றி எனும் பெலெரிக்க செடி, கடுக்காய் எனும் செபுலா, மருது எனும் அர்ஜுனா, வெள்ளை நாகம், வெட்காலி அல்லது நமை, உலுவைக்கொடி, கொத்துக் கொத்தான அழகிய பூக்கள் உள்ள ரங்கூன் மல்லிக்கொடி எனப் பல விசித்திரப் பெயருடன் பயனுள்ள தாவரங்கள் காம்பிரிட்டேசி குடும்பத்தில் உள்ளன. விசித்திரக் குடும்பம் இது.
விக்கிரமன்: குடும்பப் பெயரே விநோதம். இதில் கடுக்காய் பற்றி அறிவேன். மிகச்சிறந்த தேவ மூலிகை, சர்வரோக நிவாரணி. "காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய்" என்று பாடல் உண்டு. ரங்கூன் மல்லி பற்றியும் கேள்விப்பட்டேன். ஆனால் மற்றவை புதுமை. பல விசித்திரங்கள் தாவரக் குடும்பங்களில் உள்ளனவோ?
வீரப்பிரதாபன்: தோற்ற அழகுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படும் வான்டரிங் ஜூவ் - 'அலையும் யூதன்' என்ற விசித்திரமான செடி பற்றிக் கூறுகிறேன். அதன் இலையின் பின்புறம் ஊதா கலந்த சிவப்பு நிறம்; மேற்புறம் பச்சை மற்றும் வெளிர் பசுமைப் பட்டைகள். இது தரைமேல் படர்ந்து வளரும் செடி. காம்மிலைனேசீ குடும்பம். இதன் பல இனங்கள் வயல்வரப்பு, புல்வெளிகளில் களைகளாக வளரும். ஆக்சிலாரிஸ் எனும் நாயினிப்பூண்டு, நீர்ப்புல், கானாங்கோழை, கானாங்கீரை, கானாவாழை என்று பல பெயர்கள் உள்ள காம்மிலைனா பெங்கலன்சிஸ் எல்லாம் இந்தக் குடும்பத்தின் வயல்களைகள்.
விக்கிரமன்: களைகளா? அவற்றால் என்ன பயன்?
வீரப்பிரதாபன்: இந்தக் களைகள் இயற்கை அடியுரமாகும்; கால்நடை உணவாகும். மற்றொரு புகழ்பெற்ற தோட்டச்செடி கார்னேஷன் மற்றும் காம்பியன் போன்ற சில செடிகள் கார்யோபில்லேசீ குடும்பம். இதில் அகன்ற பூக்கள், குழாய்ப்பூக்கள் என்று இருவகை. பலநிறப் பூக்கள் உள்ளவை. இரவிலும் மலரும், மணம் வீசும் அழகிய பூக்கள். ஆனால் பூக்களைப் பறிக்காதீர்கள்; அவை உயிர்கள்.
விக்கிரமன்: பூக்கள் பறிப்பதற்கல்ல; கண்டு மகிழவே. கேட்கும்போது அவற்றைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால் இவற்றில் எதுவும் உணவுக்குப் பயன்படுவதாக இல்லையே! அழகுக்கு மட்டும் அவசியமா?
வீரப்பிரதாபன்: அப்படி எதையும் அலட்சியப்படுத்த முடியாது. தாவரங்களில் எதுவும் வீணல்ல. அழகு மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் ஒருசேரத் தருபவை பல உள்ளன. நாம் சுவைத்து மகிழும் புரதச் சத்துணவு காராமணியும், கல்வாழைச் செடியும் விரைவில் அதிகத் தழையுடன் வளர்வதால் கால்நடை உணவாக, தழையுரமாகப் பயிரிடப்படுகிறது. உணவுக்காக மட்டும் பயிரிடுவது குறைவு. வெப்பநாடுகளில் வளரும் இரண்டடி உயரக்கொடி புதர்போல் வளரும். இக்குடும்பச் செடிகள் மண்ணை நைட்ரஜன் நிலைநிறுத்தி வளமாக்கும். பலவகை உண்டு. சிலவற்றின் காய்கள் இரண்டடி நீளம்கூட வளரும். கல்வாழை, பூவாழை, கொட்டைவாழை என்று கூறினாலும் கானா இன்டிகா எனும் கானேசீ குடும்பச்செடி வாழையல்ல. இஞ்சி, மஞ்சள் போன்ற அமைப்பும் தோற்றமும் இருந்தாலும் இஞ்சிக் குடும்பமல்ல. பெரிய பலநிறப் பூக்களும் அழகான இலைகளும் உள்ளதால் தோட்டங்களில் அழகுக்காக வளர்ப்பர். இதன் மட்டத்தண்டுக் கிழங்கில் ஸ்டார்ச் மாவுச்சத்து உள்ளது. கானா எடுலிஸ் என்ற செடியின் கிழங்கை உண்பதுண்டு. கரிய உருண்டையான பளபள விதைகளை மணிகள் போலக் கோர்த்து ஜபமாலை, கழுத்துச்சரம் செய்வர். ஒரு அழகிய ஊதாநிறச் சாயப்பொருள் எடுப்பர். இப்போது நீ கூறிய அந்த களைச்செடி காராமணி அதிகளவில் சத்துணவாக விருப்பத்துடன் உண்ணப்படுகிறது.
விக்கிரமன்: உண்மை. உதவாதென்று நினைத்த லேடக்ஸ் திரவம் பந்து, பலூன் செய்ய உதவும் இரப்பரானது அல்லவா? கிரிக்கெட் மட்டை வில்லோ மரப்பொருள்; கேரம்போர்டும் ஒரு மரப்பொருள். இதுபோல் வேறு ஏதும் விளையாட்டுப் பொருளாகத் தாவரங்கள் உள்ளனவா?
வீரப்பிரதாபன்: கிங்கோ பைலோபா எனும் கன்னிக் கூந்தல் மரம் அழகில் சிறப்பானது, விஞ்ஞானச் சிறப்புள்ளது. புத்த மதத்தவரால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஜிம்னோஸ்பெர்ம் பிரிவைச் சேர்ந்த இதன் விதையைச் சீனர், ஜப்பானியர் உண்பதுண்டு. சதுரங்கப் பலகை, காய்கள் செய்ய கிங்கோ மரத்தைச் சீனர் பயன்படுத்துவர். மனிதன், பாலூட்டி, மரஞ்செடிகள் உண்டாகுமுன்பே உண்டாகி, பலகோடி ஆண்டுகளாக மாறாமல் இன்றுவரை நின்றுவரும் தாவரவியல் அதிசயம்.
விக்கிரமன்: கிங்கோ மரம் 'மன்னா உலகத்து மன்னும் உயிருக்கு' ஓர் அடையாளம் என்கிறாய். உதவாதென்று நினைப்பது விளையாட்டுப் பொருளாகிறது; களையும் புரதமாகிறது. உண்மையில் தாவரங்கள் அதிசயம்தான், புனிதம்தான். நல்ல குடும்பங்கள் தழைக்கட்டும்.
- புழல் தி.பாலகுமார்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஆழ்கடலில் சர்வசாதாரணமாகக் காணப்படும் சுறா குடும்பத்தைச் சேர்ந்த, பல்வேறு சிறப்புப் பண்புகள் உள்ள அபூர்வ உயிரினங்களான திமிங்கலச் சுறாக்கள் (Whale sharks) வாழ்கின்றன. இவை அபூர்வமாகவே கரைக்கு வரும் இயல்புடையவை. கடந்த ஐம்பதாண்டுகளில் 20 முறை மட்டுமே இவை கரையொதுங்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால் அதற்கு எதிர்மாறாகச் சமீபநாட்களில் கேரளா, தமிழ்நாடு கடற்கரையோரப் பகுதிகளில் இவை அதிக அளவில் கரையொதுங்குவது சர்வசாதாரணமாகி வருகிறது.
இவை உட்கடற்பகுதியில் வாழும், பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள். சாதாரண சுறாக்களுடன் ஒப்பிடும்போது இவை மெதுவாக இடம்பெயரும் இயல்புடையவை. சமீபத்தில் திருவனந்தபுரம் அருகில் தும்பா கடற்கரைப்பகுதியில் ஒதுங்கிய ஒரு திமிங்கலச் சுறாவின் எடை 10 டன்.
உணவுப்பற்றாக்குறை, காலநிலை மாற்றம், மிதமிஞ்சிய மீன்பிடித்தல் தொடங்கி இவை அவசரமாகக் கரையொதுங்க பல்வேறு காரணங்கள் உள்ளன.
பொதுவாக உட்கடலில் வாழும் இந்த உயிரினங்கள், சிறிய மீன்கள் இருக்கும் பகுதிகளைத் தங்கள் பாதையாகத் தேர்ந்தெடுக்கின்றன. கரைக்கு அருகில் இருக்கும் பிரதேசங்களுக்கு இவை வர உணவுப்பற்றாக்குறை ஒரு முக்கியக் காரணம் என்று கேரளா நீர்வாழ் மற்றும் மீன்வளத்துறையின் உயிரியல் பிரிவு (Aquatic Biology & Fisheries) துறைத் தலைவர் டாக்டர் ஏ. பிஜுகுமார் கூறுகிறார்.
ஆழ்கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைவதால் இவை மீன் வளம் அதிகமாக இருக்கும் பகுதிகளை நம்பி வாழ வேண்டியுள்ளது. இதனால் சிறிய மீன் கூட்டங்களைப் பின்தொடர்ந்து இவை கரைக்குச் சமீபத்தில் உள்ள பிரதேசங்களுக்கு வருகின்றன. சமீபத்தில் தும்பா கடற்பகுதிக்கு அருகில் ஒரு திமிங்கலச் சுறா கரையொதுங்க இதுவே காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இவை கப்பல்கள் அல்லது பெரிய விசைப்படகுகளின் சுழலி (Propeller) அல்லது வேறு பகுதிகள் மோதுவதால் ஏற்படும் காயங்களினாலும் கரையொதுங்குவது உண்டு. காயம்படும் திமிங்கலச் சுறாக்களுக்கு அதிக தூரம் நீந்த முடிவதில்லை. அப்போது அருகில் இருக்கும் பகுதிகளைத் தஞ்சமடைகின்றன.
நச்சுத்தன்மையுள்ள மிதவை உயிரினங்களை (Toxic planktons) உணவாக உட்கொள்ளும் சுறாக்களுக்குச் சில சமயங்களில் உடல்நலமின்மை உண்டாகிறது. இது அவற்றின் பயணப்பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இவை கரையொதுங்க இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
இவை நல்ல பார்வைத்திறன் உள்ள கடல்வாழ் உயிரினங்கள். இருட்டில் கூட முன்னால் இருக்கும் பொருட்களை இவற்றால் அடையாளம் காண முடியும். ஆனால் மற்ற கடல்வாழ் உயிரினங்களிடம் இருந்து வேறுபட்ட முறையில் அவற்றின் கண்கள் பக்கவாட்டில்/முன்னோக்கி அமைந்துள்ளன. இதனால் பார்வைப்புலத்தின் பரப்பு குறைகிறது. இது காயம்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
கடல் மாசுபடுதல் இந்த உயிரினங்களுக்கு மற்றொரு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. காலநிலை மாற்றம் சூழலையும் வனவிலங்குகளையும் பாதிப்பது போல இவற்றையும் பாதிக்கிறது. காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை உணர உதவும் எலக்ட்ரோரிசெப்டார் (Electroreceptor) அமைப்புகள் எல்லா சுறாக்களிலும் அமைந்துள்ளன. கடல்நீரில் கலந்திருக்கும் ரசாயனப் பொருட்களைக் கண்டுபிடிக்க இந்த உறுப்புகள் இவற்றிற்கு உதவுகின்றன.
என்றாலும் காலநிலையில் உருவாகும் மாறுதல்களை இவை எவ்வாறு கண்டறிகின்றன என்பது இன்னமும் ஆராயப்படாமல் உள்ளது என்று டாக்டர் பிஜுகுமார் கூறுகிறார். காலநிலை மாற்றத்தினால் கடல் சூடாகிறது. இது திமிங்கலச் சுறாக்கள் உணவாக உட்கொள்ளும் விலங்கு மிதவை உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இதனால் உணவு தேடி இவை கரைக்கு அருகில் இருக்கும் பகுதிகளுக்கு வருகின்றன.
இவை வடிவத்தில் பெரியதாக இருப்பதால் மீன்பிடி வலைகளில் இருந்து நழுவித் தப்பிக்க முடிவதில்லை. கரைக்கு வந்து சேரும் சுறாவிற்குக் காயம் படவில்லை என்றால் கடலிற்கே இவற்றை மீண்டும் அனுப்ப முடியும். ஆனால் காயம் இருந்தால் அதை எதிர்த்துப் போராடி உயிர் பிழைப்பது என்பது கடினம். இவை கரை நோக்கி வர இதுவும் ஒரு காரணமாகிறது.
ஒரு காலத்தில் இவை குஜராத்தில் பெருமளவில் வேட்டையாடப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை வலையில் சிக்கியே உயிரிழக்கின்றன. இதனால் குஜராத்தில் கரையொதுங்கும் சுறாக்களைக் கடலிற்குத் திரும்ப அனுப்பிவைத்தால் மாநில வனத்துறை ₹25,000 சன்மானம் வழங்குகிறது.
இன அழிவைச் சந்திக்கும் இவற்றின் படங்களை மீனவர்களுக்குக் காட்டிக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இவை வலையில் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) வகுப்புகளை நடத்துகிறது. இத்தகைய வகுப்புகள் ஒரு அளவு வரை பலனளிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் இவை நூறாண்டு காலம் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. வலையில் சிக்கிய இவற்றைக்கரைக்கு இழுத்து வருவது சட்டவிரோதமானது. அதனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் இவற்றை மீண்டும் கடலில் விடுவதே வழக்கம். சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்களின் பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளன என்று விழிஞம் கடல்சார் மீன்வள ஆராய்ச்சி மைய (CMFRI) விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வலையில் சிக்கியவுடன் மீண்டும் கடலில் விட முடிந்தால் இவற்றைக் காப்பாற்ற முடியும். சில சமயங்களில் காயம்பட்டு கரைக்கு வரும் சுறாவுடன் சேர்ந்து மற்றவையும் கூட்டமாகக் கரைக்கு வருவதுண்டு. கேரளா, தமிழ்நாடு கரைப்பகுதியில் 20 திமிங்கலச் சுறா இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுறாக்களின் உலகில் இவை மிகப்பெரிய மீன்கள்.
12 மீட்டர் வரை நீளம் உள்ள இவை கடலில் 2,000 அடி ஆழத்தில் வாழ்கின்றன. சில பெரிய மீன்களை உணவாக உட்கொள்வது உண்டு என்றாலும், இவை பெரும்பாலும் சிறிய மீன்களையே உணவாகக் கொள்கின்றன. இவை வயதிற்கு வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. இணை சேருவதற்குரிய பக்குவத்தை மெதுவாகவே அடைகின்றன. குறைவான குட்டிகளையே ஈனுகின்றன.
இதனால் இவற்றின் எண்ணிக்கை உயர வாய்ப்பு குறைவு. இவற்றின் துடுப்புகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. முன்பு இந்தியாவில் இருந்து இது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் இவை அதிகமாக வேட்டையாடப்பட்டன. இப்போது இது தடை செய்யப்பட்டுள்ளது.
2010-இல் எண்ணிக்கை பெருமளவில் குறைந்ததால் இவை பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்குகளின் பட்டியலில் முதல் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. அழியும் கடற்சூழல் மண்டலத்தைக் காக்க உதவும் இந்த உயிரினங்கள் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றிய அற்புத மனிதர்
- அறியப்படாத அரிய குடும்பங்கள்
- நாட்டின் கரையோரம் நச்சுயிரிக் கூட்டங்கள்
- திமிங்கலச் சிறைச்சாலை
- ஆண்கள் இல்லையா...? கவலையில்லை!
- நிறங்களை இழக்கும் இயற்கையின் உலகம்
- பூமிக்கடியில் வாழும் வேர்ப்பூஞ்சைகள்
- இந்த குரலுக்கு வயது நூறு!
- இயற்கையுடன் உறவு அதிகமுள்ள நாடுகளின் பட்டியல்
- சூழலிற்கு நட்புடைய பூச்சிக்கொல்லி
- புல் தின்னும் புலிகள்!
- நம்மைப் போலவே இவர்களும்… அழியாமல் காப்போம்!
- மியாவ்… மியாவ்… பூனைகள் பாவப்பட்ட உயிரினங்கள் இல்லை
- வன உயிரினங்களின் தியேட்டர்
- மெல்ல வளரும் மரங்கள்
- நிறம் மாறும் பூச்சிகளின் இறக்கைகள்
- என்று மாறும் இவற்றின் தலைவிதி?
- கண்டுபிடிக்கப்படும் முன்பே காணாமல் போய்விடுமா?
- வாட் ஈஸ் திஸ்!? திஸ் ஒரு ஈ!
- இரத்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய உயிரினம்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.