அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
அரும்பொருள் காட்சியகத்திற்குள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு நுழைந்ததும் அழகிய இளவயது ஜப்பான் பெண் வந்து "நான் உதவட்டுமா? நான் இந்த மியூசியத்தின் வழிகாட்டி" என்றாள்.
அவளைக் கவனிக்கும்போது பேசுகிறாள். கவனிக்காமல் இருந்தாலும், முகத்தை திரும்பிக் கொண்டாலும் பேச்சை நிறுத்திவிடுகிறாள். குறும்புத்தனமாக யாராவது அவளைத் தொட்டுவிட்டால் முகம் சுளிக்கிறாள்.
இவள் பெயர் ஈவ்-1 (Eve-1). கொரியா ரோபாடாலஜிஸ்டுகள் தயாரித்துள்ள பெண் ரோபாட். மனித தலைமுடி, சருமம், நேர்த்தியான உடை... சட்டென்று யாருக்கும் அது எந்திரம் என்பது தெரியாது. முகத்தில் 15 வகையான பாவங்களை இவள் வெளிப்படுத்துகிறாள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இவளை வீட்டுக்கு வாங்கிச்செல்லலாம்.
கலைக்கதிர், ஜூலை 2008
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
தெற்காசிய நகரங்களில் காற்றுமாசு, நூறாயிரக்கணக்கானோரின் முன்கூட்டிய மரணங்களுக்கு (Pre-mature deaths) காரணமாகிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. நாளுக்குநாள் அதிகரிக்கும் காற்றுமாசு, கடந்த 14 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துவரும் வெப்பமண்டல நாடுகளின் நகரங்களில் 1,80,000 பேர் அகால மரணமடையக் காரணமாக இருந்தது என்று பெர்மிங்ஹாம் மற்றும் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் காற்றுமாசினால் 2.4 மில்லியன் மனிதர்கள் முற்றிலும் தவிர்க்கக்கூடிய அகால மரணங்களுக்கு இரையாகின்றனர். மாசுப்பொருட்கள் திட, திரவத் துளிகள் அல்லது வாயு நிலையில் காணப்படுகின்றன. இதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் உடனடியாகத் தெற்காசியாவில், குறிப்பாக இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
ஆண்டுதோறும் இந்தியாவில் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, சூரத், புனே மற்றும் அகமதாபாத் நகரங்களில் காற்றுமாசினால் நூறாயிரக்கணக்கானோர் முன்கூட்டியே இறக்கின்றனர். தரவுகளில் இருக்கும் பழுதுகளை அகற்றி, உலகளவில் 46 பெருநகரங்களில் ஆய்வுக்குழுவினர் மாசின் தரத்தை ஆராய்ந்தனர். ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் நாசா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய முகமையின் செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளிலிருந்து 2005 முதல் 2018 வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
கனக்ரி (Conakry), தாரெஸ் சலாம், இபாடன் (Ibadan), கடுனா (Kaduna), கம்பாலா, கானோ (Kano), கார்டூம் (Khartoum), கிகாலி (Kigali), கின்ஷாசா (Kinshasa), லாகோஸ், லிலாங்வே (Lilongwe), லுவாண்டா (Luanda), லுபும்பாஷி (Lubumbashi), லுசாக்கா, மொம்பாசா (Mombasa), என்ஜமினா (Ndjamena), நைரோபி, நியாமி (Niamey), வாகாதூகு (Ouagadougou) ஆகிய ஆப்பிரிக்க நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சூரத், புனே ஆகிய இந்திய நகரங்களுடன், வங்கதேசத்தில் சிட்டகாங், டாக்கா மற்றும் பாகிஸ்தானில் கராச்சி நகரங்களில் காற்றுமாசு மனிதர்களின் உயிர் பறிக்கும் அளவிற்குப் பீதியூட்டும் வகையில் உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஹனோய், ஹோ சி மின் நகரம், ஜகார்த்தா, மணிலா, நாம் பென் மற்றும் யாங்கூன் (Yangon); மத்திய கிழக்கில் ரியாத், சனா நகரங்கள் மாசினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
'சயன்ஸ் அட்வான்சஸ்' (Science Advances) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை, காற்றின் தரம் குறைவதால் இந்நகரங்களில் வாழ்பவர்கள் அதிக நச்சுக்காற்றிற்கு ஆளாகி அகால மரணம் அடைகின்றனர் என்று கூறுகிறது. இந்த இறப்புகள் கிராமப்புறங்களை விட நகரங்களிலேயே அதிகம் சம்பவிக்கின்றன. ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் அதிக அளவில் ஆபத்தான நேரடி மாசிற்கு ஆளாகின்றனர்.
இப்பகுதிகளில் ஆண்டுதோறும் நச்சுக்களின் அளவு அதிகரிக்கிறது. 14% நைட்ரஜன் டை ஆக்சைடு, 8% பி.எம் 2.5 (PM 2.5 - Particulate matter) நுண்துகள்கள், 12% அமோனியா, 11% அதிவிரைவு வினைபுரியும் தன்மையுடைய ஆவியாகும் வேதிப்பொருட்கள் போன்றவை இப்பகுதிகளில் ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கின்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிகரிக்கும் மாசிற்கு, பெருகும் தொழிற்சாலைகள் வெளிவிடும் ரசாயனப் பொருட்கள், பெருகி வரும் போக்குவரத்து, கரி மற்றும் விறகு எரித்தல் மற்றும் கழிவுகளை எரித்தல் ஆகியவை காரணமாகின்றன.
முன்பு வேளாண் கழிவுகளை எரித்தல், காடு அழிப்பு போன்றவை காற்றுமாசிற்கு முக்கியக் காரணமாக இருந்தன என்றாலும், இப்போது வெப்பமண்டல நாடுகளின் நகரங்களில் பெருகிவரும் போக்குவரத்து அகால மரணங்களுக்கு முக்கியக் காரணமாக மாறியுள்ளது என்று கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானியும், பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு விஞ்ஞானியும், ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான கார்ன் வோரா (Karn Vohra) கூறுகிறார்.
தெற்காசிய நகரங்களில் காற்று மாசிற்கான முக்கியக் காரணம் போக்குவரத்தால் உருவாகும் நச்சுப்புகை மற்றும் அதில் கலந்துள்ள பொருட்களே. உலகின் மற்ற பல நகரங்களில் பத்தாண்டுகளில் அதிகரிக்கும் காற்றுமாசு, இப்பகுதிகளில் ஆண்டுதோறும் நிகழ்கிறது. இந்நகரங்களில் ஆய்வுக்காலத்தில் மக்கள் தொகை 1.5 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆய்வு செய்யப்பட்ட 46 நகரங்களில், 40 நகரங்களில் நைட்ரஜன் டை ஆக்சைடும், 33 நகரங்களில் பி.எம் 2.5 நுண்துகள்களும் அதிகரித்துள்ளன. தெற்காசிய நகரங்களில், குறிப்பாக டாக்காவில் 24,000 பேர், இந்திய நகரங்களில் 1,00,000 பேர் காற்றுமாசினால் முன்கூட்டியே உயிரிழக்கின்றனர்.
ஆப்பிரிக்க நகரங்களில் மேம்படுத்தப்பட்ட சுகாதாரப் பணிகள் காற்றுமாசினால் நிகழும் மரணங்களைக் குறைக்க உதவியுள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாகக் கருதப்பட்டிருந்தது போல இல்லாமல், விரைவான தொழிற்துறை வளர்ச்சியால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை உணர்ந்ததால் இப்பகுதியில் இன்று காற்றுமாசிற்கு அது காரணமாக அமையவில்லை என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியரும், கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானியுமான இலாய்ஸ் மேரைஸ் (Eloise Marais) கூறுகிறார்.
மாறிவரும் உலகச் சூழ்நிலையில் காற்றுமாசிற்கான காரணங்களும் மாறுவதையே இது எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆய்வுகள் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக முனைவர் திட்ட உதவித்தொகை நிதியுதவியுடன் நடத்தப்பட்டன. ஆய்வு முடிவுகள் வெப்பமண்டல நகரங்களில் காற்றுமாசைக் குறைக்க நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியாளர்களுக்கு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அதிதீவிர வெப்ப உயர்வால் உலகில் மூன்றில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். உலகின் பல பகுதிகளிலும் நிலவும் வெப்பநிலை உயர்வு, இளமையான மற்றும் ஆரோக்கியமானவர்களுக்கும் இயல்பான உடலியல் வேலைகளைச் செய்வதைக் கடினமாக்குகிறது. காலநிலை மாற்றம், மக்கள் தங்கள் வாழ்வின் நேரத்தைப் பாதுகாப்பாகச் செலவிட முடியாதபடி சுருக்கி விட்டது என்று புதிய ஆய்வு கூறுகிறது.
உலக மக்களில் மூன்றில் ஒருவர்
உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இன்று உடற்செயல்பாடுகளைத் தீவிரமாகக் கட்டுப்படுத்தும் பகுதிகளில் வாழ்கின்றனர். புதைபடிவ எரிபொருட்கள் தொடர்ந்து எரிக்கப்படுவதால், பல இளமையான மற்றும் ஆரோக்கியமானவர்களுக்கும் கூட வெப்பம் உச்சத்தில் இருக்கும் கோடை காலப் பகல் நேரத்தில் வீட்டு வேலை செய்வது, மாடிப்படியை ஏறுவது போன்ற அடிப்படைச் செயல்களைச் செய்ய முடியாமல் போகிறது.
குறைவாக வியர்வை வெளியேறும் திறன் இருப்பதால், உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் வயது முதிர்ந்தவர்களிடம் இந்தக் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளன. உடலியல் ரீதியாக வெப்பத்தைச் சமாளிப்பது குறித்த ஆய்வுகளுடன், உலகளாவிய மற்றும் பிராந்திய ரீதியிலான மக்கள்தொகை, வெப்பநிலை மற்றும் மனித வளர்ச்சி தொடர்புடைய எழுபது ஆண்டு காலத் தரவுகளும் ஒப்பிடப்பட்டு ஆராயப்பட்டன. சராசரியாக 65 வயதிற்கும் அதிகமானவர்கள் இப்போது பாதுகாப்பான வெளிப்புறச் செயல்பாடுகளில் ஆண்டிற்கு 900 மணி நேர வெப்ப உயர்வை அனுபவிக்கின்றனர். இது 1950-களில் இருந்த 600 மணி நேரத்துடன் ஒப்பிடப்படும்போது, ஒரு மாதத்திற்கும் அதிகமான பகல் பொழுதிற்குச் சமமாகும்.
அதிக எரிவாயு, எண்ணெய் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் உமிழப்படும் பசுமைக்குடில் வாயுக்கள், செல்வந்த நாடுகளின் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் வெளிவிடப்படுகின்றன. காலநிலை அவசரநிலை ஏற்பட ஏழை நாடுகளின் மக்கள் குறைவாகவே காரணமாக இருக்கின்றனர்; என்றாலும் அவர்களே இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பிரதேசங்களில், ஆண்டின் கால் பகுதி முதல் மூன்றில் ஒரு பகுதி வரையிலான கால அளவில் முதியோரின் வெளிப்புறச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. தென்மேற்கு ஆசியாவில் பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், ஓமன் போன்ற பகுதிகளில் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலாண்மை செய்து செலவிடும் ஆற்றல்
தெற்காசியாவில் பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா மற்றும் மோரிட்டேனியா, மாலி, செனகல், புர்கினா பாசோ (Burkina Faso), ஜிபூட்டி (Djibouti), நைஜர் போன்ற சில மேற்காப்பிரிக்க நாடுகளில் மக்கள் மிகத் தீவிரமான சவால்களைச் சந்திக்கின்றனர். இதில் நிலவியல், வருமானம் மற்றும் வேலையின் இயல்பைப் பொறுத்து நாடுகளுக்குள் இருக்கும் பகுதிகளுக்கிடையே பெரிய அளவில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இந்தியாவில் இந்த வேறுபாடுகள் கங்கைச் சமவெளிப் பகுதிகள் மற்றும் கிழக்குத் தாழ் நிலப் பகுதிகளில் அதிகமாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் இமயமலையின் அடிவாரப் பகுதிகளில் குறைவாகவும் உள்ளன. தென் அமெரிக்காவில் ஆண்டீஸ் தொடரின் உயரமான இடங்களில் உள்ள மக்களை விட, அமேசான் படுகைப் பகுதி மக்கள் வெப்பத்தால் பலவீனமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளைகுடா நாடுகளில் செல்வந்தர்கள் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தி வெப்பநிலை உயர்வைச் சமாளிக்கின்றனர். ஆனால் இடம்பெயர்ந்து வந்த ஏழைத் தொழிலாளர்கள், கட்டுமான இடங்கள் மற்றும் வெளிப்புற வேலை பார்க்கும் இடங்களில் ஆபத்தான அளவில் சூரியக் கதிர்வீச்சுக்கு ஆளாகின்றனர்.
இந்த ஆய்வு 'நேச்சர் கன்சர்வென்சி' (Nature Conservancy) என்ற அமைப்பின் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டது. இது குறித்த ஆய்வுக் கட்டுரை 'என்விரான்மென்டல் ரிசர்ச் ஹெல்த்' (Environmental Research Health) என்ற இதழில் வெளிவந்துள்ளது. முந்தைய ஆய்வுகள் போலன்றி, இந்த ஆய்வு உலகளாவிய வெப்பத்தால் ஏற்படும் ஆபத்துகளுக்கேற்பத் தகவமைத்துக் கொள்வதற்குரிய மக்களின் சமூக மற்றும் உடலியல் திறனை விரிவாக ஆராய்ந்துள்ளது.
வெவ்வேறு வெப்பநிலைகளில் வாழும் திறனை விஞ்ஞானிகள் 'மேலாண்மை செய்து செலவிடும் ஆற்றல்' (METs) என்ற அலகில் மதிப்பிட்டனர். இது, சராசரியாக ஒருவர் ஓய்வாக இருக்கும்போது செலவிடும் ஆற்றலுக்குச் சமமானது. 65 வயதிற்கும் குறைவாக உள்ளவர்கள், 3.3 என்ற அளவிலான ஆற்றலைச் செலவழித்து தரையைப் பெருக்குதல், நடுத்தர வேகத்தில் நடத்தல் போன்ற செயல்களை வெப்ப அழுத்தம் இன்றி ஒரு குறிப்பிட்ட நேரம் வரை செய்ய முடியும். தங்கள் உடல் வெப்பநிலையை அவர்களால் நிதானமாக ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும் என்பதே இதன் பொருள்.
வாழத் தகுதியற்ற இடங்கள்
இதற்கு மாறாக, வாழ இயலாத நிலைக்குரிய கட்டுப்பாடுகள் சூடான இடங்களில் உள்ளன. மனிதச் செயல்பாடுகள் 1.5 METs அளவில் இருக்கும்போது, படுத்துக்கொண்டிருத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல் போன்ற எந்தச் செயலும் செய்யாத நிலையையே இது குறிக்கிறது.
வேறுபட்ட வயதுக் குழுக்களில் இந்நிலையால் ஏற்படும் பலவீனத்தைப் பரிசோதிக்க, விஞ்ஞானிகள் வெவ்வேறு கால அளவுகளில் வெப்பமான அறைகளில் தனிநபர்களின் வியர்வை வெளியேறும் அளவு மற்றும் தோலின் ஈரத்தன்மையை ஆராய்ந்தனர். 1950-1979 மற்றும் 1994-2024 ஆகிய காலக்கட்டங்களில் நிலவிய வாழக்கூடிய திறன் பற்றிய தரவுகளுடன் ஒப்பிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
உயரும் வெப்பநிலையால் வாழ்வதற்குரிய நிலை மேலும் மோசமாகி வரும் உலகின் பகுதிகள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கள் தொடர்ந்து விரிவடையும் உலகின் வாழத் தகுதியற்ற இடங்களில் பெரும் சவால்களுடன் வாழ்கின்றனர். இது 2024-ல் தீவிரமாக இருந்தது.
எரிவாயு, எண்ணெய் மற்றும் நிலக்கரியை எரிப்பது போன்ற உலக வெப்பமயமாதலின் முதன்மை மூலங்களை விரைவாகக் குறைக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. கொள்கை வகுப்பாளர்கள், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு வளங்களை அளிப்பதன் மூலம் உதவ வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
“இதற்குத் தீர்வு காணப்படாவிட்டால், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் ஆண்டின் மிக வெப்பமான காலத்தில் அன்றாட வாழ்வியல் செயல்களை இனி பாதுகாப்பாக வெளியில் சென்று மேற்கொள்ள முடியாது. வெப்ப உயர்விற்கு மிகக் குறைவாகக் காரணமானவர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் வாழ்கின்றனர். ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை கூடும்போதும் அதனால் உண்டாகும் பாதிப்புகளும் அதிகமாகின்றன."
ஒவ்வொரு டிகிரி வெப்பம் உயரும்போதும்…
தொழிற்புரட்சிக்குப் பின் 1.5 டிகிரி அளவு வெப்பம் உயர்ந்தால் உலகம் எவ்வாறு இருக்கும் என்ற கசப்பான உண்மையை 2024 நமக்கு எடுத்துக் காட்டியது. 2 டிகிரி அல்லது அதற்கும் அதிகமாக வெப்பம் உயராமல் இருக்க வேண்டுமென்றால் நாம் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெப்ப எச்சரிக்கை முன்னறிவிப்புகள் மற்றும் குளிர்ச்சிக்கான வசதியுடன் கூடிய உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும், முதியவர்கள் மற்றும் வெளிப்புற வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். என்றாலும், இதற்காகச் செய்யப்படும் முதலீடுகள் உலக வெப்பமயமாதலைக் குறைப்பதற்கான மாற்றாக இருக்க முடியாது” என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் லூக் பார்சன்ஸ் (Luke Parsons) கூறுகிறார். நாட்கள் செல்லச் செல்ல சூடு அதிகரித்து வரும் இன்றுள்ள சூழலில், உயரும் வெப்பநிலையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு நாம் முன்னோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு சிறிய நகர்வும் பெரிய பயனைத் தரும் என்பதை உணர்வோம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மேற்கு இந்தியப் பெருங்கடலில் பவளப்பாறைகள் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் அழிந்துபோய்விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புவி வெப்ப உயர்வு, மிதமிஞ்சிய மீன் பிடித்தல் இதற்குக் காரணம் என்று நீடித்த இயற்கை (Journal Nature Sustainability) இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. செஷல்ஸ் முதல் தென்னாப்பிரிக்கா வரை உள்ள பவளப்பாறைகள் செயலற்று அழியும் (functionally extinct) நிலையில் உள்ளன.
செஷல்ஸ், மொசாம்பிக் நாட்டின் டிலகோவா (Delagoa) மற்றும் தென்னாப்பிரிக்கா வரை உள்ள கடற்பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இது உயிர்ப் பன்மயத் தன்மைக்குப் பேரிழப்பு. ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மேற்கு இந்தியப் பெருங்கடற்பகுதியில் இருக்கும் 10 நாடுகளின் பவளப்பாறைத் திட்டுகள் ஆராயப்பட்டன.
இங்கு உள்ள 11 துணை மண்டலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக சர்வதேச இயற்கை வள சங்கத்தின் ஆய்வு மாதிரிகள் (IUCN framework) பயன்படுத்தப்பட்டன. ஐ.யு.சி.என். அமைப்பின் இந்த ஆய்வுமுறை ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் தாவர, விலங்கின அழிவை அறிய உதவுகிறது. பவளப்பாறைத் திட்டுகளின் அழிவு தீவு நாடுகளின் கடல்களில் அதிகமாக நிகழ்கிறது.
உயரும் புவியின் வெப்பத்தால் ஏற்படும் கடல்நீர் மட்ட உயர்வு இவற்றைப் பாதிக்கிறது. புவி வெப்பம் உயர்வதால் கடல்நீர் வெப்பமும் அதிகரிக்கிறது. இந்த வெப்பம் பவளப்பாறைகளின் செல்களில் வாழும் ஆல்காக்களை வெளியேற்றுகிறது. இதனால் பல வண்ணங்களுடன் காணப்படும் திட்டுகள் நிறமிழந்து வெள்ளை நிறமாகின்றன.
இது ப்ளீச்சிங் எனப்படுகிறது. இதன் மூலம் உயிர்த்தன்மையுள்ள பவளப்பாறைகள் உயிரற்ற எலும்புக்கூடாகின்றன. தெற்கு மடகாஸ்கர், மஸ்கரின், தி கமோரோஸ் (Comoros), மாஸ்கரீன் தீவுகள் (Mascarene) ஆகிய இடங்களில் உள்ள பவளப்பாறைத் திட்டுகள் இதனால் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன.
வட செஷல்ஸ் மற்றும் கிழக்காப்பிரிக்கக் கடலோரப்பகுதியில் இருக்கும் பவளப்பாறைத் திட்டுகள் அழிவின் விளிம்பில் உள்ளன என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. பெரிய கடல்வாழ் உயிரினங்கள் மிதமிஞ்சிய மீன் பிடித் தொழிலால் அழிகின்றன. இது இத்தகைய உயிரினங்களின் வாழிட மண்டலங்களைப் பெரிதும் பாதிக்கிறது.
சமீபகாலங்களில் உலகளவில் பவளப்பாறைகள் அழிந்துவருவது தெரிந்ததே என்றாலும், ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியில் இவற்றின் அழிவு பற்றி ஆராயப்படுவது மிகக் குறைவே. ஒரு சிறிய குறிப்பிட்ட கடற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதியில் பவளப்பாறைகளின் அழிவு, அதன் தீவிரம் பற்றி துல்லியமாக அறிய முடிகிறது என்று ஆய்வுக்குழுவின் தலைவர் மற்றும் ஐ.யு.சி.என். பவளப்பாறைகளை ஆராயும் அமைப்பின் தலைவர் டேவிட் ஓப்யூரா (David Obura) கூறுகிறார்.
இன்றிலிருந்து அடுத்த ஐம்பதாண்டில் உயரும் புவியின் வெப்பநிலை பவளப்பாறைகளின் அழிவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வருங்காலத்தை நோக்கி நாம் 50 ஆண்டுகள் என்று வரையறை செய்தாலும், அதற்குள் புவி வெப்பம் 1.5 டிகிரி நிலையை அடையும் அபாயம் உள்ளது. புவி வெப்ப உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பொறுப்பு மனிதர்களாகிய நம் கையிலேயே இருக்கிறது.
வரும் பத்தாண்டுகளுக்குள்ளாகவே பூமி 1.5 டிகிரி செல்சியஸ் சூடாகலாம். அதனால் வரும் பத்தாண்டுகளில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது முக்கியம். ஒரு பவளப்பாறைத் திட்டின் அழிவு என்பது அப்பகுதி முழுவதும் மரணமடையும் நிலையைக் குறிக்கிறது.
இது அந்தக் கடலோர சூழல் மண்டலத்தின் முழு அழிவையும் குறிக்கிறது. அழிந்த பவளப்பாறைப் பகுதியில் ஒரு சில உயிரினங்கள் வாழலாம். ஆனால் அவற்றால் உயிருள்ள பவளப்பாறைகளை உருவாக்க முடியாது. ஒரு பவளப்பாறைப் பகுதியின் அழிவு என்பது அதில் வாழும் அனைத்து உயிரினங்களும் வழங்கும் இயற்கையின் விலைமதிக்க முடியாத சேவைகளின் அழிவே.
பவளப்பாறைகள் அழிந்தால் அக்கடலோரப் பகுதி கடல்நீர் மட்ட உயர்வினால் பாதுகாப்பிழந்த நிலையை அடையும். கடலோரப் பகுதியில் சுற்றுலா, குறைந்த வருமானம் உள்ள சமூகங்களின் வயிற்றுப்பிழைப்பு, மீன்வளம் போன்றவை கேள்விக்குறியாகும். கடலின் மழைக்காடுகள் என்று அழைக்கப்படும் இந்தப் பவளப்பாறைகளை நம்பியே கிழக்காப்பிரிக்காவின் சுற்றுலா வளர்ச்சி உள்ளது.
1950கள் முதல் உலகம் முழுவதும் உள்ள பவளப்பாறைகளின் போர்வை (coral reef cover) புவி வெப்ப உயர்வு, அளவுக்கு மீறிய மீன் பிடித்தல், மாசுபடுதல், வாழிட இழப்பு போன்றவற்றால் பாதியாகக் குறைந்துள்ளது. இதுபோன்ற முக்கிய உலக சூழல் மண்டலங்களின் அழிவு கடலில் வாழும் இளம் மீன்களின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது. இது புவியின் இயற்கை உலகிற்குப் பெரும் அச்சுறுத்தல்.
இப்பகுதியில் கால் லட்சம் மனிதர்களுக்கு தொழில் ஏற்படுத்தித் தரும் பவளப்பாறைகளின் ஆரோக்கியத்தையும், நீடித்த நிலையான வளர்ச்சியையும், மீன்வளச் செழுமையையும் உறுதிப்படுத்த உள்ளூர் அளவில் மீன்பிடித் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி திறம்பட்ட முறையில் மேலாண்மை செய்ய வேண்டும் என்று ஆய்வின் துணை ஆசிரியரும் கார்டியோ கிழக்காப்பிரிக்கா (Cordio East Africa) அமைப்பின் மூத்த விஞ்ஞானியுமான மிஸ்ஹல் கட்கா (Mishal Gudka) கூறுகிறார்.
பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதுடன் பவளப்பாறை வளங்களை ஆரோக்கியத்துடன் வாழ வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளூர் மக்களிடம் உருவாக வேண்டும். இந்த மதிப்பீடுகள் உயிர்ப் பன்மயத்தன்மைக்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையில் நிலவும் நெருக்கமான உறவை மீண்டும் நிரூபிக்கின்றன.
சமீபத்தில் க்ளாஸ்கோவில் முடிவடைந்த காப்26 உச்சிமாநாட்டிலும் சூழல் மண்டலங்கள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இதையே சீனாவில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் காப்15 கன்மிங் (Kunming) உலக உயிர்ப் பன்மயத்தன்மை மாநாடும் (CBD Conference on Biodiversity) வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காப்15 மாநாடு உயிர்ப் பன்மயத்தன்மை உள்ள சூழல் மண்டலங்களைக் காப்பதுடன் பூமியில் மிஞ்சியிருக்கும் பவளப்பாறைத் திட்டுகளைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- ஒளிச்சேர்க்கை செய்யாமல் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்
- இனி பேசிப் பயன் இல்லை
- "நம்மைக் கொல்ல நாமே காசு கொடுக்கிறோம்!!"
- மனிதனின் வயதை அதிகரிக்கும் அதி தீவிர வெப்பநிலை
- காற்று மாசை காட்டும் காலநிலைக் கோடுகள்
- கலவர பூமியில் இருந்து மீண்டு வந்த ஒரு காட்டின் கதை
- உயிரி பிளாஸ்டிக்குகளும் தீங்கானவையே
- வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.