கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஒருவருடைய கையெழுத்தில் இருந்து என்னவெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்? ஒரு நபரின் குணாதிசயங்கள், ஆளுமை இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் தன்மை கையெழுத்திற்கு இருப்பதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய கையெழுத்தின் உள்ளடக்கம் உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதைக்கூட இப்போது கண்டறிய முடியும்.
தற்போது நடைமுறையில் உள்ள உண்மை கண்டறியும் சோதனைகள் வாய்மொழியாக நடத்தப்பட்டு ஆழ்மனம் ஆராயப்படுகிறது. இந்த சோதனைகளின்போது சம்பந்தப்பட்ட நபரின் மீது மனித உரிமை மீறல்கள் திணிக்கப்படுவதாக புகார்கள் எழ வாய்ப்புண்டு. இந்த சிக்கலுக்கு தீர்வுகாண உதவும் ஆய்வு ஒன்று அண்மைக் காலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு நபரின் கையெழுத்தில் இருந்து அவர் உண்மையைக் கூறுகிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்க இயலும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் முயற்சிக்கு இந்த ஆய்வு துணை செய்வதாக உள்ளது.
ஹைஃபா பல்கலைக்கழக அறிஞர்கள் கில் லூரியாவும், சாரா ரோஸன்ப்லம் என்பவரும் இணைந்து இந்த ஆய்வில் வெற்றி பெற்றுள்ளதாக Applied Cognitive Psychology இதழ் தெரிவிக்கிறது. எழுதுபவரின் கையெழுத்தின் புறப்பண்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள அட்டவணையின் துணை கொண்டு கணினியால் ஆராயப்படுகிறது. பேப்பரின் மீது பேனா இருந்த நேரம், பேப்பருக்கு வெளியில் பேனா இருந்த நேரம், ஒவ்வொரு எழுத்தின் உயர அகலம், எழுதும்போது கொடுக்கப்பட்ட அழுத்தம் இவற்றையெல்லாம்கூட இந்த அட்டவணையின் உதவியால் கணினி கண்டுபிடித்து விடுகிறது. பொய்யான செய்திகளை எழுதும் நபர் தயங்கித் தயங்கி எழுதுவது இயல்புதானே!
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
செல்லுலோஸ், ஸ்டார்ச் ஆகியவை தாவரங்களின் பகுதிப்பொருட்கள் ஆகும். செல்லுலோஸில் இருந்து HMF (5-hydroxymethylfurfural) எனப்படும் மூலப்பொருளை தயாரிக்க இயலும் என்றும், HMF ஐ அடிப்படையாகக் கொண்டு பிளாஸ்டிக்குகளையும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத எரிபொருளையும் உற்பத்திசெய்ய இயலும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்திருக்கிறது. வடமேற்கு பசிபிக் தேசீய ஆய்வுக்கூடத்தின் (Department of Energy's Pacific Northwest National Laboratory) ஆற்றல் துறையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. HMF மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் விலை குறைவாகவும் தடையின்றி கிடைக்கக்கூடியதாகவும் இருக்குமாம்.
இதே துறையில் இதற்கு முன்னாலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் செல்லுலோஸில் இருந்து முதலில் எளிய சர்க்கரை பெறப்பட்டது. பின்னர் எளிய சர்க்கரையில் இருந்து குரோமியம் குளோரைடு போன்ற உலோக குளோரைடுகளையும், அயானிக் திரவம் என்ற கரைப்பானையும் பயன்படுத்தி தூய்மையான HMF ஐ தயாரித்தனர். தற்போதைய புதிய கண்டுபிடிப்பில் செல்லுலோஸை சர்க்கரையாக மாற்றாமல் நேரடியாக HMF பெருமளவில் உருவாக்கப்பட்டுள்ளது. தேவையான மூலப்பொருளாகிய செல்லுலோஸ் மரம், தானியங்கள், புற்கள் இவற்றிலெல்லாம் அபரிமிதமாக காணக்கிடைக்கிறது.
புதிய கண்டுபிடிப்பில் குரோமியம் குளோரைடு-தாமிர குளோரைடு கரைசல் அயானிக் திரவத்துடன் இணைந்து 120 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் செல்லுலோஸை HMF ஆக மாற்றமடையச்செய்கிறது. இந்த புதிய முறையில் 90 சதவீத HMF உருவாக்கப்பட்டது. அத்துடன் உலோக குளோரைடுகளையும் அயானிக் திரவத்தையும் அவற்றின் வீரியம் குறையாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்த இயலும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மறுசுழற்சிமுறையால் HMF ன் விலை பெருமளவில் குறையும் என்பதுடன் குறைந்த செலவில் அதிகமான பிளாஸ்டிக் தயாரிக்கவும், படிம எரிபொருளுக்கு மாற்றுப்பொருளாக எரி எண்ணை தயாரிக்கவும் இயலும்.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/05/090519134837.htm
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
பார்வையற்றவர்கள் இல்லாத உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அகக்கண்களால் குருடாகிப் போய்க்கொண்டிருக்கிறவர்களின் எண்ணிக்கைதான் நாளுக்கு நாள் உயரத்தில் போய்க்கொண்டிருக்கிறது. புறக்கண்களால் காணமுடியாதவர்களின் வாழ்வில் புரட்சிகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பார்வையற்றோர் இப்போது கார் ஓட்ட முடியும். ஆம்..... இது உண்மைதான். வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல்துறை மாணவர்கள் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார்கள். தூரத்தை அளவிட லேசர் ஒளிக்கற்றைகள், குரல் மூலம் வெளியிடும் கட்டளைகளை ஏற்கும் ஏற்பிகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் இந்த வாகனத்தின் உதவியால் பார்வையற்றோரால் வாகனங்களை ஓட்ட முடியும்; வேகமெடுக்க முடியும்; எல்லாவற்றிற்கும் மேலாக நிறுத்தவேண்டிய இடத்தில் நிறுத்தவும் முடியும்.
லேசர் ஒளிக்கற்றைகள் அகண்ட அலைவரிசைக் கற்றைகளின் துணைகொண்டு சுற்றுப்புறத்தை துருவி ஆராய்கின்றன. இவை வெளியிடும் கட்டளைகள் மூலம் பாதுகாப்பான பயணம் பார்வையற்ற ஓட்டுநருக்கு உறுதிசெய்யப்படுகிறது. ஓட்டுநர் அணிந்திருக்கும் சிறப்பு மேலுடையில் அதிர்வுகளை ஏற்படுத்தி வேக எச்சரிக்கை செய்யப்படுகிறது. ‘கிளிக்’ ஓசைகள் மூலம் எண்ணிக்கைகள் வெளியிடப்படுகின்றன. வேகம், திசைகள் இவையாவும் கருவிகளின் குரலோசைமூலம் வெளியிடப்படுகின்றன. அழுத்தப்பட்ட காற்றின் துணைகொண்டு வாகனத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள தடைகள் பற்றிய அறிவிப்பு பெறப்படுகிறது. காரில் பொருத்தப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டர் தொகுப்பு லேசர் கற்றைமூலம் தூரத்தை அளவிடும் வேலையைச் செய்கிறது. முடிவுகளை குரல்ஒலி வாயிலாகவும், அதிர்வுகளகவும் வெளியிடுகிறது. இந்த ‘ஒலி’யும் ‘அதிர்வு’களுமே ஓட்டுநருக்கு ‘கண்’களாக செயல்படுகின்றன.
சோதனை ஓட்டத்தின்போது ஓட்டுநரின் இருக்கையில் ஒரு பார்வையற்றவரும் அவருக்குத் துணையாக மாணவர் குழுவும் அமர்ந்திருந்தனர். மாணவர்குழுவின் கட்டளைகளைவிட கருவிகள்மூலம் வெளியிடப்பட்ட கட்டளைகள்தான் மிகவும் துல்லியமாக இருந்தன. மனிதர்களின் கணக்கீடு சிலசமயங்களில் தெளிவாக இருப்பதில்லை. உதாரணமாக ‘இடது பக்கம் திரும்பு’ என்றால் கொஞ்சமாகத் திரும்பவேண்டுமா? அல்லது அதிகமாகத் திரும்பவேண்டுமா? என்பதில் குழப்பம். ஆனால் கருவிகள் மூலம் வெளியிடப்பட்ட கட்டளைகள் மிகத்துல்லியமாகவும், குழப்பத்திற்கு இடமின்றியும் இருந்தன.
ஒரு சோதனை ஓட்டத்தின் முடிவில் பார்வையற்ற ஆய்வாளர்களில் ஒருவர் “எங்களுக்கு நிலவுக்கு பயணம் செய்ததுபோல் இருந்தது” என்று கூறினார். பார்வையற்றோர் பிறர் உதவியின்றி வாழ வழி பிறந்திருப்பதாக தேசிய பார்வையற்றோர் கழகம் சோதனை ஓட்ட முடிவில் கருத்து தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின்போது ‘இருவழி கட்டளை ஏற்பு’ தொழில்நுட்பத்தின் புதிய கூறுகள் புலப்பட்டன. அவையனைத்தும் பார்வையற்றோர் வாழ்வில் இன்னும் பல மாற்றங்களை நிச்சயமாக ஏற்படுத்தும். இந்தக் கண்டுபிடிப்பு பல பொறியியல் சிக்கல்களை தீர்த்துவைத்துள்ளது. இவற்றால் பார்வையற்றோருக்கு இன்னும் பல வசதிகள் கிடைக்கப்போகின்றன.
பார்வையற்றோர் ஓட்டுவதற்கான ஒரு வாகனத்தை உருவாக்குவதைக் காட்டிலும் கடினமான பணி வேறொன்று இருக்கிறது. அரசும் அரசின் சட்டவிதிகளும் புதிய வாகனத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதுதான் மிகக்கடினம். இப்போது மூட்டைபூச்சி வடிவத்தில் இருக்கும் இந்த வாகனம் இன்னும் சீரமைக்கப்படவிருக்கிறது. மின்சாரத்தின் உதவியால் ஓடக்கூடிய வாகனமாக இதை மாற்றுவது என்று 2009-10 ஆம் ஆண்டிற்கான மாணவர்குழு தீர்மானித்துள்ளது. முழுவதும் மின்சாரத்தால் இயங்கும்போது வாகனத்தின் அதிர்வுகள் குறைவாக இருக்கும்; கம்ப்யூட்டருக்கு அளிக்கப்படும் மின்னோட்டம் சீராக இருக்கும்; லேசர் ஒளிஉணர் கருவிகள் இன்னும் துல்லியமாக இயங்கும்.
தகவல்: மு.குருமூர்த்தி
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/07/090715160813.htm
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
டங்கன் பில்சன் கையில் வைத்திருப்பது பாலித்தீன் காகிதமல்ல; அது ஒலிபெருக்கி. வார்விக் பல்கலைக்கழக இஞ்சினியராகிய டங்கன் உருவாக்கியிருக்கும் இந்த ஒலிபெருக்கியின் தடிமன் வெறும் கால் மில்லிமீட்டர் மட்டுமே. இதை எங்கு வேண்டுமானாலும் ஒட்டிவிடலாம். கூரையில், கார் கதவில் மறைவாக அல்லது சுவரில் காலண்டர் மாதிரியும் தொங்கவிட்டுக்கொள்ளலாம்.
பெரிய பீப்பாய் மாதிரி இருக்கும் ஒலிபெருக்கிகளெல்லாம் இதன் துல்லியத்துடன் தோற்றுப்போகும் என்கிறார். பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் தகவல் அறிவிப்புகளைச் செய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றுதான் இவர் இதைக் கண்டுபிடித்தார். ஆனால் இதன் எளிமை, கவர்ச்சி மற்றும் துல்லியம் வேறு உபயோகங்களுக்கும் ஆகும் என்று தோன்றுகிறது.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- மூளை வளருகிறது - நாம் தான் அதை தடை செய்கிறோம்
- நேனோ ரேடியோ - தூசி தட்டினால் பாட்டு நின்று விடும்
- மூளை சொல்படி நகரும் சக்கர நாற்காலி
- கெமிஸ்ட்டுகளின் பொறாமை
- பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம்...
- கைடு வேலை பார்க்கும் ரோபோ
- வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
- ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல்