கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
மனிதனின் இரத்தக்குழாய்களுக்குள் நீந்திச்செல்லும் நுண்ணிய ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பலகலைக்கழக நுண் பெளதிகம் மற்றும் நானோ பெளதிக ஆய்வுக்கூடத்தில் இந்த ரோபோக்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுவருகிறது.
இரத்தக்குழாய் அடைப்புகளின்காரணமாக செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இந்த ரோபோக்கள் உதவிகரமாக இருக்குமாம். இரத்தக்குழாய்களுக்குள் ஊசிமூலம் இந்த ரோபோக்களை செலுத்தி செயல்படவைக்க இயலும்.ஒரு மில்லிமீட்டரில் கால்பங்கு பெரியதான இந்த ரோபோக்களை piezoelectricity ஐ பயன்படுத்தி இயங்கச்செய்ய முடியும் என்கிறார்கள் நுண் எந்திரவியல் மற்றும் நுண் பொறியியல் அறிஞர்கள். சிலவகையான படிகங்கள், பீங்கான்கள் இவற்றின் மீது அழுத்தம் கொடுக்கும்போது மின்னோட்டம் தூண்டப்படுகிறது என்பதுதான் piezoelectricity தத்துவம். இந்த தத்துவத்தை பயன்படுத்தியே நம்முடைய வீட்டில் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும் கேஸ் லைட்டர்களை இயக்குகிறோம்.
அறுவை சிகிச்சைகளில் சாதாரணமாக catheters எனப்படும் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை உண்டாக்கும் காயங்களும் தழும்புகளும் பெரிய அளவில் இருக்கும். மேலும் நுண்ணிய பகுதிகளை இந்த catheter குழாய்கள் சென்றடைய முடிவதில்லை. இனிமேல் இதுபோன்ற நுணுக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு இந்த நுண்ணிய ரோபோக்கள் பயன்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
செயற்கையான முன்னங்கால் பொருத்தப்பட்ட ஒரு எகிப்திய மம்மி கெய்ரோ மியூசியத்தில் தற்போது உள்ளது. விஞ்ஞானிகள் இந்த மம்மியை ஆராய்ந்து வருகிறார்கள். தோலினாலும் மரத்தினாலும் செய்யப்பட்ட வலது முன்னங்காலை இந்த மம்மிக்கு உரியவர் வெறும் அழகுக்காக மட்டும் பொருத்திக்கொண்டிருக்கவில்லை. ஒரு எகிப்தியனுக்குரிய பெருமையோடு நிமிர்ந்து நடக்கவும் அந்த செயற்கை உறுப்பை பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் இன்றைய அறிவியல் செய்தி. கெய்ரோ மம்மியின் செயற்கைக்காலில் உள்ள தேய்மானத்தில் இருந்து நாம் இதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த செயற்கை முன்காலை மேலும் ஆராய்ந்து வருகிறார்கள்.
இதைப்போன்றதொரு செயற்கைக்கால் பிரிட்டிஷ் மியூசியத்தில் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1881ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த செயற்கை முன்காலுக்கு அதனை சேகரித்தவரின் பெயரை இணைத்து Greville Chester Great Toe என்று பெயரிட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள இந்த செயற்கை முன்கால் பேப்பர்கூழ், துணி, கோந்து மற்றும் களிமண் இவற்றால் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள செயற்கை முன்காலிலும் தேய்மானத்தின் அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த செயற்கைக்கால் மடங்கும் தன்மை இல்லாமல் இருப்பதால் இதனைப்பயன்படுத்தியவர் வெறும் அழகுக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கவேண்டும் என்று தெரிகிறது. இறந்தவர்களின் உடலை மம்மியாக பதப்படுத்தும்போது மதச்சடங்குகளின் நோக்கில் எந்தவொரு ஊனமும் மறைக்கப்படவேண்டும். ஊனத்தைமறைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயற்கைக்கால் பொருத்தப்படவில்லை என்பதும் அழகிற்காக மட்டுமே பொருத்தப்பட்டது என்பதும் நமக்கு வெளிச்சமாகிறது.
இந்த இரண்டு செயற்கைக்கால்களின் காலமும் கி..மு.1000 க்கும் 600 க்கும் இடைப்பட்டு இருக்கவேண்டும்.
மான்செஸ்டர் விஞ்ஞானிகள் இப்போது வலது முன்னங்கால்களை இழந்தவர்களை தேடிப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எதற்கென்று கேட்கிறீர்களா? கெய்ரோ மம்மி அணிந்திருக்கும் செயற்கைக்காலின் நகலைக்கொண்டு அதன் செயல்பாடுகள் எப்படி இருந்திருக்கும் என்று ஊகித்தறியத்தான்!
இந்த இரண்டு முன்னங்கால்களில் ஏதோ ஒன்று மட்டும் அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டிருக்கவேண்டும். எது எப்படியாயினும் இந்தக்கண்டுபிடிப்பு தற்கால மனிதர்களுக்கு சுவையானதுதானே!
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
சில குழந்தைகள் பிறக்கும்போதே இதயவால்வுகளில் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். அறுவை சிகிச்சைகளினால் இந்த வால்வுகளை சீரமைக்க முடியாதபோது, உறுப்புதானங்கள், செயற்கை வால்வுகள் என்ற மாற்றுவழிகளை தேடிப்போக வேண்டியுள்ளது. ஆனால் பொருத்தமான மாற்று வால்வுகள் கிடைப்பதில்தான் சிரமம் இருக்கிறது. பிராணிகளின் திசுக்களில் இருந்துகூட மாற்று வால்வுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாற்று வால்வுகள் குழந்தைகளின் வளர்ச்சியோடு இணைந்து செயல்படுவது இல்லை. இதனால் குழந்தை தன்னுடைய ஆயுட்காலத்தில் பல அறுவை சிகிச்சைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
மேலும் பிராணிகளில் இருந்து பெறப்படும் இதய வால்வுகளில் விறைப்புத்தன்மை காணப்படுகிறதாம். இதனால் குழந்தைக்கு அடிக்கடி இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும் சிகிச்சையும் அளிக்க வேண்டியுள்ளதாம். அமெரிக்க வல்லுநர்கள் இந்த பிரச்சினைக்கு ஒரு மாற்றுவழியாக தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்பட்ட இரத்தம் பயன்படுகிறது என்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியில் இருந்து இரத்தம் சேகரிக்கப்படுகிறது. இதிலிருந்து ஸ்டெம் செல்களைப்பிரித்தெடுத்து இதய வால்வுகள் உருவாக்கப்படுகின்றன. தேவைப்படும்போது இந்த வால்வை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொப்புள் கொடியின் இரத்தத்தில் இருந்து CD133+ cells என்னும் ஸ்டெம் செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு உறைநிலையில் பாதுகாக்கப்பட்டன. 12 வாரங்கள் கழித்து, இந்த செல்கள் சிதையக்கூடிய ஒரு தளத்தில் பதியமிடப்பட்டன. இந்த பதியன்கள் ஆய்வுக்கூடத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு எலெக்ட்ரான் நுண்ணோக்கியால் ஆராயப்பட்டன. தளத்தின் நுண்துளைகளில்கூட் செல்வளர்ச்சி காணப்பட்டது. திசுக்களின் கட்டமைப்புக்கு தேவையான extracellular matrix இவற்றில் காணப்பட்டது. மனிதர்களின் இதயவால்வு திசுக்களோடு, இவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்ட திசுக்கள் பெரும்பாலும் ஒத்துப்போயின. மேலும் desmin, laminin, alpha-actin ஆகிய புரதங்களும், CD31, VWF and VE-cadherin என்னும் இரத்தக் குழாய்த்திசு படலங்களும் வளர்த்தெடுக்கப்பட்ட செல்களில் காணப்பட்டன.
வெற்றிகரமான திசையில் இந்த ஆய்வு போய்க் கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ரத்த திசுக்கள் மட்டுமல்லாது எலும்பு மஜ்ஜை, பனிக்குட நீர் இவற்றின் திசுக்களில் இருந்தும் இதய வால்வுகளை உருவாக்க முடியுமா என்று ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. திசுமாற்ற தொழில் நுட்பத்தின் மூலம் நோயாளின் வாழ்நாள் முழுவதும் சிக்கல் இல்லாமல் பயன்படக்கூடிய இதய வால்வுகளை உருவாக்குவது சாத்தியம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். டயாலிசிஸ் கருவியைப் போன்றது இது. மெல்லிய இழைகளின் துணைகொண்டு இரத்தத்தில் உள்ள வைரஸ்களை இந்த கருவி வடிகட்டிவிடுகிறது. இரத்தக்குழாயில் இருந்து குழாய்வழியாக இரத்தம் இந்தக் கருவிக்குள் செல்கிறது. சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. எண்ணற்ற நோய்கள் இந்தக் கருவியினால் குணப்படுத்தப்படுகின்றன.
நாளொன்றுக்கு 14,000 பேர் எச்.ஐ.வி. வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தக் கருவியினால் எய்ட்ஸ் நோயாளிகளின் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, நீடித்த ஆயுளுக்கு வழிபிறந்துள்ளது. சாண்டிகோவின் யேத்லான் மருத்துவமனை தலைவர் ஜிம் ஜோய்ஸ் கூறும்போது இந்த கருவி ஒரு டயாலிசிஸ் கருவியைப்போல் செயல்படுவதாக கூறியுள்ளார்.
உடலில் உள்ள அனைத்து இரத்தமும் இந்தக் கருவியில் உள்ள பெட்டகத்தின் வழியாக எட்டு நிமிடத்திற்கொருமுறை செலுத்தப்படுகிறது. இரத்தத்தில் உள்ள அனைத்து வைரஸ்களும் சிலமணி நேரங்களுக்குள் நீக்கப்படுகின்றன. எச் ஐ வி, ஹெபடிடிஸ்-சி, தட்டம்மை, ஃப்ளூ ஆகிய வைரஸ்கள் எளிதில் நீக்கப்பட்டுவிடுகின்றன. பெரிய அளவிலான இந்தக் கருவியை மருத்துவமனையிலும், சிறிய அளவிலான கருவியை அவசரகால ஊர்திகளிலும் பயன்படுத்த முடியுமாம். தீவிரவாதிகளினால் ஏவப்படும் வைரஸ்களில் இருந்து உயிர்காக்கவும் கூட இந்தக் கருவி பயன்படுகிறது.
சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் செயற்கை சிறுநீரகம் வழியாக செலுத்தப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. டயாலிசிஸ் என்பது உயிரை தக்கவைப்பதற்கான சிகிச்சை மட்டும்தான். நோயில் இருந்து விடுதலை அளிப்பதற்கான சிகிச்சையல்ல. வலிநிறைந்ததும் செலவு பிடிப்பதுமான டயாலிசிஸ் சிகிச்சை இப்போது நிறைய பேருக்குத் தேவைப்படுகிறது. இரத்தம் சுத்தப்படுத்தும் கருவியும் டயாலிசிஸ் கருவியைப் போன்றது தான்.
அதிக செலவு பிடிப்பது. இனிமேல் பணக்காரர்களுக்கு வைரஸ்களிடமிருந்து விடுதலை.
- மு.குருமூர்த்தி
- வேண்டும்போது வேண்டிய அளவு வாசனை..
- இறந்தவர் உடலை பாதுகாக்க
- வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு
- பாலத்தின் உறுதியை அறிவது எப்படி?
- மாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்
- அழுத்தமும் ஓட்டமும் தடையும்
- உயிர்
- உடலுக்கு எரிபொருள் எது?
- காற்றாடி விமானம்
- எச்சரிக்கை! செல்பேசி
- இன்பம் தரும் மின் அதிர்ச்சி
- புற்றுநோய் அறியும் எண்ணியல் (Digital) முறை
- மசாலா பூச்சிக்கொல்லிகள்
- சோப்பு வேண்டாம் தண்ணீரில் முக்கி எடுத்தால் போதும்!
- கூந்தல் வேர்களும் அதிசய மருந்துகளும்
- மூலக்கூறுகளை வருடும் மைக்ராஸ்கோப்
- தன்கையே தனக்கு எதிரி
- மரத்திலிருந்து பிளாஸ்டிக்
- பார்வையற்றவர்கள் ஓட்டுவதற்கு கார்
- வளையும் ஒலிபெருக்கி