திருவள்ளுவர் காலம் தொட்டே தமிழ் இனநலக் காப்புச் சிந்தனைகள் தொடங்கிவிட்டன.
சித்தர்கள் காலம் தொடங்கி ஆரியப் பார்ப்பனிய அதிகார வெறி எதிர்ப்பு வலுப்படத் தொடங்கியிருக்கிறது.
வள்ளலார் தொடங்கி இயக்கமாய்ச் செயல்படுவதற்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன.
பெரியார், மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் இணைந்து முழங்கிய தமிழ்நாடு தமிழருக்கே! - என்ற முழக்கம் காலத்தால் படிப்படியாய் வலுப்படவும் அரசியலால் கூர்மைப்படவும் செய்திருக்கிறது.
எண்ணற்ற தலைவர்கள் அறிஞர்கள் தமிழ்நாடு உரிமை மீட்பு அரசியலைக் கூர்மைப்படுத்தியிருக்கின்றனர்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், ஐயா ஆனைமுத்து உள்ளிட்டோர் தமிழ்த்தேசிய உரிமை அரசியலை வலுப்படுத்தி வளர்த்தெடுத்து வந்திருக்கின்றனர்.
தமிழ் இந்து, பிராமணக் கடப்பாரை - போன்றவற்றைத் துணைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தாடல்கள் தமிழ்த்தேச உரிமை மீட்பு அரசியலைச் சிதைத்துச் சீரழிப்பவை.
தமிழ்நாட்டு இளைஞர்கள் எச்சரிக்கையாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலம் இது.
தேர்தல் அரசியல் வழிச் செயல்பாடுகளைக் கடந்து, தமிழ் மொழி, இன, நாட்டு உரிமை மீட்பு முயற்சிகளை வலுப்படுத்திச் செய்ய வேண்டியது காலத்தின் தேவைக்குரியது.
இந்திய ஆரியப் பார்ப்பனியத்தின் ஆர். எஸ். எஸ்., இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட சங் பரிவாரின் ஆக்டோபஸ் செயல்பாடுகளையும், பன்னாட்டு முதலாளி அதிகாரப் போக்குகளையும் எதிர்த்துத் தமிழ்த்தேச உரிமைக் கருத்துகளை மொழி, பண்பாடு, வரலாறு, வாழ்வியல், அரசியல், பொருளியல் என எல்லா முனைகளில் இருந்தும் வலுப்படுத்திச் செயல்படுத்துவதற்கு உரிய திட்டங்கள் தேவை.
தனித்தனியாகப் பிளவுபட்டுத் தங்களின் கட்சி, இயக்கம் என்கிற அமைப்புகளை நீக்கி முன்னணியாய் ஒன்றிணைவதற்கான தேவையும் காலமும் தமிழ்நாட்டிற்குத் தேவைப்படுகிறது.
தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய நெறிகளை ஏற்ற தோழர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழி இல்லை.
காலத்தின், தமிழ்நாட்டின் தேவையை அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.
- தமிழக மக்கள் முன்னணி