ஆடுவம் என்பேன் பாடுவம் என்பேன்
நாடுவம் நந்தமிழ் நலமிக என்பேன்
விண்ணொளிர்ந் துலவும் வெண்மதிப் பொலிவெனத்
தேனினும் இனிதுநம் தீந்தமிழ் என்பேன்
ஆழ்ந்திட ஆழ்ந்திடப் பாழ்துயர் குறைத்தே
வாழ்வினில் பற்றை வழங்கிடும் என்பேன்
நுவல்தொறும் நுவல்தொறும் உவப்பே கூட்டித்
துவள்மனச் சுமைதனைச் சுவடிலா தோட்டிப்
பண்மொழிச் சுவையால் பன்மலை அடுக்கினும்
விண்ணுறக் கிளர்ந்து வண்ணங் கிளத்தே
முகிலுதிர் மழையால் முகிழ்க்கும் உயிர்ப்பென
நிகரிலாத் தமிழெனை நெகிழ்விக்கிறதே!!

- அர. செல்வமணி

Pin It