தன்னை காணத் தமிழ்நினைந் ததனால்
மாந்த வடிவை ஏந்திய உருவம்!
நரிகளுக் கிடையே புலியாய் உலவிய
மறத்தமிழ் மானம் சூடிய மறுபெயர்!
சொற்களுக் கிடையே சுரங்கம் அமைத்துக்
களைப்பிலா உழைப்பில் திளைத்த மூளை!
குழப்பிய விழிகள் உயர்ந்து விரிய
தெளிவைப் பாய்ச்சித் திகழ்ந்த நெற்றி !
தாழ்வுசெய் எதிர்ப்பைத் தகர்த்து நசுக்கிச்
சூழ்ந்த பகையிருள் துளைத்த சுடர் விழி!
உலக மொழிகள் வலம்வரும் நெஞ்சை
நிதம்புதுக் காற்றால் புதுக்கிய மூக்கு!
புதைந்த வாழ்வின் விதை, கனி காட்டி
மொழிகளின் அறிவைப் பிழிந்த நாக்கு!
நீட்டிய வறுமைச் சூட்டுத் தணல்முன்
பொன்னாய் நின்று புடம்போட்ட நெஞ்சம் !
அழிவை நினைப்போர்க்(கு) அழிவுசெய் நெருப்பை
எழுத்தாய் மாற்றி இறக்கிய விரல்கள் !
இருந்தோர் எழவும் எழுந்தோர் இணையவும்
தோள்தட்டி நடக்கவும் தூண்டிய கால்கள்!
ஓய்வையும் மகிழ்வையும் உழைப்பினால் தேடி
வாழ்வைத் தமிழுக்கு வழங்கிய நல்லுடல் !
தாங்கும் நம்தமிழ் தாங்கி நடந்தது
தேவ நேயப் பாவாணர் உருவே !
- செந்தலை ந.கவுதமன்
இன்று (7.2.2017) "திராவிட மொழி நூல் ஞாயிறு" - மொழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணரின் 116ஆம் பிறந்தநாள்!