lady 345அதிரசங்களில் இல்லா
சுவையூறிய உன் மொழி நடையில்
காந்தத்தை மிஞ்சிய
வசீகரத்தின் ஈர்ப்பால்
உன்னை வந்தடைந்திருக்க வேண்டும்
என் மனப் பட்டாம்பூச்சி

காதல் பூமேயும் தேனீயாய்
கண்களை சிபார்சு செய்யும் வனத்தில்
உள்ளச் சிறகசைய மிதக்கிறேன்

தவிர்க்க முடியா இனிமைகளில்
லயித்தல் சுகமாகும் கணம்
வாசமிகு ஜவ்வாதுகளில்
ஒன்றி விடுவது இயல்பாகிறது.

கற்பனைக் கொடி துளிர்க்க
நெற்றிக் கிளையில் குங்குமப் பூ
கூடை நிறைக்கிறது
கொத்து மல்லி வாசம்
அல்வாவின் ருசியில் எச்சில் புரள
நாவெங்கும் மாதுளை முத்துக்கள்

சிலிர்ப்பு மிகு இந்நொடி
கனவுகளின் தீர்ப்பை
திருத்தி எழுதுவது விதி என்றால்
ஆயுளுக்கும் போதுமானதாய்
காலமே எனக்கொரு
கைக்குட்டை செய்தனுப்பு

இடம் பெயர்ந்து
பரீட்சையமற்ற பாதைதான்
பயணமென்றால்
நான் தொலைகிறேன் வழிவிடு

சூழ்நிலை சுவரில்
ஆணியாய் என்னை அறை
அவனில் என்னையோ
என்னில் அவனையோ
மாட்டி விடுவதற்கான கட்டத்தை
நெருங்கிவிட்டதா இறுதிச்சுற்று
அப்படியாயின்
அவனது முற்றத்தில் என் கோலத்தை
கண்ணீரில் கரைத்து
எப்படி வரைவது என்ற இடத்தில்தான்
முதல் புள்ளியை வைக்க வேண்டும்.

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It