‘இந்தியா டுடே’யில்
தமிழச்சி மார்புகள்
கண்ணீரால் போர்த்தினேன்.

- அறிவுமதி, கடைசி மழைத்துளி.

நவநாகரீக போதையில் இயல்பு வாழ்விலிருந்து விலகி தள்ளாடிக் கொண்டிருக்கும் ‘மேட்டுகுடி’ பெண்களில் சிலரைத் தேர்வு செய்து, அவர்களை தனிமையில் அழைத்து சென்று ‘கருத்துக்கணிப்பு’ என்ற பெயரில் இதழியல் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி, இவர்கள் எதிர்பார்க்கிற நோக்கமுடைய நடவடிக்கைகளை உடைய பெண்களின் கருத்துக்களையும் சேர்த்து அதை, அனைத்து தமிழ்ப் பெண்களுக்கான பொது கருத்தாக்கி முகப்புக்கதை விட்டிருக்கிறது. பேரா.அ.மார்க்ஸ் அவர்களால் மலம் துடைக்கப்பட்ட ‘இந்தியா டுடே’ என்னும் இதழ்.

இன்றைய சமூகத்தில் பெரும்பகுதி மக்களுக்கு நேரத்திற்கு வயிற்றுப்பசியைத் தீர்த்துக் கொள்ளவே வசதி வாய்ப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இக்கொடுமைகளைப் பற்றிய எந்த ஆய்வையோ, தீர்வையோ முன்வைக்க முடியாத இந்த வழு வழு மஞ்சள் பத்திரிக்கையை பார்க்கிற போது தந்தை பெரியார், “இந்நாட்டில் பத்திரிக்கை உலகம் ஒரு கேடுகெட்ட உலகமாக இருக்கிறது, அவனவன் சாதிக்காக, பணம் சம்பாதிப்பதற்காக பத்திரிக்கை நடத்தும் நிலையாக இருக்கிறது.’’ என்று ‘விடுதலை’ தொடங்கும் போது சொன்னதும், “மற்ற நாட்டிலே பத்திரிக்கைகள் என்றால் மக்களை உயர்த்துவதற்குரிய ஒரு சாதனமாக இருக்கிறது; ஆனால் நம் நாட்டிலோ- மக்களை முன்னுக்கு வரவிடாமல் தடுக்கும் சாதனமாகப் பார்ப்பனர்கள் பத்திரிக்கைகளைப் பயன்படுத்துகிறார்கள்,’’ என்று பெரும்பான்மை பத்திரிக்கைகள் பற்றி சொன்னதும் நம் நினைவுக்கு வருகின்றன. தினசரி வாழ்வில் பெண் சமூகம் எதிர்கொள்ளும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, அரசதிகார வர்க்கம் நிகழ்த்தும் வன்முறை பற்றி தீர்க்கமான கருத்துகளைச் சொல்லும் துணிவோ, நேர்மையோ இந்தியா டுடேவுக்கு இல்லாமல் போனதில் வியப்பேதும் இல்லை. காரணம் நோக்கம் விழிப்புணர்வல்ல; வியாபாரம். பார்க்க - இந்தியா டுடே ஆசிரியரிடமிருந்து பகுதியில் (அக்டோபர் 6-12,2005) ‘அந்த இதழ் முழுமையாக விற்றுத் தீர்ந்தது’ எனும் வரி.

Kushbooவயிற்றுப் பசியில் வாடிக்கொண்டிருக்கும் சமூகத்தில் ‘உடல்பசி’ பற்றியான ஆய்வும், அதுவும் இளம்பெண்களின் செக்ஸ் சிந்தனை பற்றிய கண்டுபிடிப்பும் எந்த அளவிற்கு இன்றைய தேவையாக இருக்கிறதென்பது என்னைப் போன்ற சிற்றறிவாளனக்கு பிடிபடாத பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு சமூக புரட்சிக்காக களம் இறங்கியுள்ள சிந்தனையாளர்களே விளக்கமளிக்க வேண்டும். செக்ஸ¤ம், இளம்பெண்களும் என்பது பற்றி இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடத்தப்பட்ட ‘இந்தியா டுடே’யின் ‘நியாயமான’ ஆய்வு முறையைப் பற்றிய கருத்துகளைப் பேசுகிற களமோ, நேரமோ இதுவல்ல என்பதால் நேரடியாக பிரச்சனையையும், பிரச்சினையாளர்களைப் பற்றியும் பார்ப்போம்.

பிரபலமான ஊடகம் நடத்திய நாடகத்தில் பெண்ணிய விடுதலைக்கான வாழ்நாள் சேவையாற்றிவரும் குஷ்பு எப்படி வந்தார், அவரின் புரட்சி பொங்கும் கருத்துக்கு செக்ஸ் அறிவற்ற தமிழ்ப்பெண்கள் ஏன் எதிராக இருக்கிறார்கள்?

பல திரைப்படங்களில் இயக்குநர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தயாரிப்பாளர்களின் காசுக்காக தாராளமாக கலைப் பணியாற்றிய குஷ்பு செய்த சேவையை மெச்சி தமிழகத்தின் மாத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் 1993 ஆண்டில் கோயில் கட்டினார்கள். தமிழக ரசிக மனசுக்குள் நீங்காத இடத்தைப் பிடித்துவிட குஷ்பு செய்த ‘கொள்கைப்பூர்வமான’ செயல்கள் நாடே அறியும். தொடர்ந்து படவாய்ப்புகளைப் பெறவும், வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும் திரையுலகில் குஷ்பு கொடுத்த ‘உணர்ச்சிகுரல்கள்’ ஊரறிந்த ரகசியம். இப்படி இப்படியாக தன்னை தமிழகத்தின் தவிர்க்கமுடியாத ‘சக்தி’யாக கட்டமைத்துக் கொண்டதாகக் கருதிக் கொண்டு மிதப்பில் மிதந்து வந்தார்.

நான்கு நிருபர்கள் தன்னை தேடிவந்து கருத்து கேட்டுவிட்டாலும், மூன்று இதழ்களின் அட்டையில் வண்ணப்படத்துடன் செய்தி வெளியாகிவிட்டாலும், இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முகம் காட்டி விட்டாலும், தாந்தான் இன்றைய தமிழகத்தின் முதல்நிலை நபர் என கருதிக்கொண்டு திரையுலக பிரபலங்கள் செய்கிற ‘லூட்டி’ அறிவாளி உலகத்தால் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்து வந்த நிலையில், அதே அடிப்படையில் ஊடகங்கள் அடிக்கடி பிரபலப்படுத்தி விட்ட குஷ்புவும் சமீபகாலமாக செயல்பட்டு வந்தார். 

கலைச்சேவை என்கிற பெயரில் துபாய், லண்டன், சிங்கப்பூர் என அழைத்துச் சென்று ‘காட்சி சேவை’ செய்த நடிகர் சங்க நிர்வாகிகளை நோக்கி சுண்டு விரல் நீட்டவும் தெம்பற்ற குஷ்பு, தனது திரைப்பட தயாரிப்புப் பணியில் இடையூறாக செயல்பட்ட நடிகையைப் பற்றி தங்கர்பச்சான் சொன்னதாக வெளியான கருத்தைக் கண்டு, ‘தெளிவு’ற்று கொதித்தெழுந்தார். (தங்கரின் செயல்களின் மீது நமக்கும் பல விமர்சனங்கள் உண்டு, கருத்தியல் தளத்தில் தெளிவற்ற போக்கு, கருத்துப் பகிர்வில் நிதானமற்ற நிலை, பெண்ணிய மற்றும் முற்போக்கு சிந்தனைகளில் தீவிரமற்ற போக்கு என நமக்கும் தங்கரோடு மாறுபடும் புள்ளிகள் நிறைய உண்டு. இந்த பிரச்சினையைப் பொறுத்தவரை தங்கரால் பலமுறை மன்னிப்புக் கோரப்பட்டப் பிறகும், சம்பந்தபட்ட நடிகையும் தீவிரம் காட்டாத நிலையில் பிரச்சினையை பெரிதுபடுத்தியதில் உள்ள அரசியலை கவனிக்க வேண்டியது நம் கடமையாக இருக்கிறது) இந்த மாபெரும் ‘குற்றத்திற்கு’ நேரில் வந்து மன்னிப்பு கேட்கும்வரை படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பளிப்பதில்லை என தினசரி கூலி பெறும் திரை ஊழியர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் புரட்சிகரமான முடிவை நடிகர் சங்கம் எடுக்கக் காரணமாக இருந்தவர், நடிகர் சங்கம் வந்து மன்னிப்பு கேட்ட பின்னும் (மன்னிப்பு கேட்க வந்த சூழலில் இவரும் இவரின் சகாக்களும், இன்னபிற அல்லக்கைகளும் நடந்து கொண்ட ‘நாகரீக’ செயல்கள் வேறு) ‘நாங்கள் மன்னிக்க மாட்டோம்’ என நீதி நியாயம் மிக்க தனது கருத்தை ஊடகங்களில் பதிவு செய்தார்.

பெண் விடுதலைக்கான குஷ்புவின் இந்த போராட்ட வாழ்வே ‘இந்தியா டுடே’ இதழின் பார்வையில் இளம்பெண்களின் நாகரீக வாழ்வு பற்றிய, எதிர்கால போக்குபற்றிய ‘தெளிவான’, ‘தொலைநோக்கு பார்வையுடனான’ கருத்தைச் சொல்லுகிற தகுதிமிக்கவராக தெரியவைத்திருக்கிறது. துணிவும் சமூகப்பார்வையும் மிக்க சமூக விஞ்ஞானியான குஷ்புவின் கருத்தைத் தாங்கி வருவதே ‘இந்தியா டுடே’யின் கொள்கைக்கும், சமூகசேவைக்கும் சிறப்பு சேர்ப்பதாக இருக்கும் எனக் கருதி குஷ்புவின் கருத்தோடு ‘செக்ஸ் & இளம் பெண்கள் ஒரு பிரத்யோக சர்வே’ (செப்.28, 2005) என்னும் முகப்புக்கதையை வெளியிட்டது.

இந்தியா டுடே இதழின் ‘முகப்புக்கதை’க்குப் பின் ‘தமிழ்முரசு’ மாலை நாளிதழின் கருத்தும், அதை தொடர்ந்து ‘தினத்தந்தி’ செய்தியாளரின் வினாவுக்கு குஷ்பு அளித்த விடையும் தமிழக சமூகநல பார்வையாளர்களிடையே மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இக்கருத்துக்கு முதன்மையாக அரசியல் கட்சிகளான பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் தங்களது எதிர்ப்பினை தமிழ்ச் சமூகத்தின் முன் பதிவு செய்தன. தொடர்ந்து பல பகுதிகளில் இயங்கும் சமூக அமைப்புகள் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தன. ‘நமது சொந்த விருப்பத்தைப் பொறுத்தவரை, நாம் ஒருநாள் கூட போரிட விரும்பவில்லை, ஆனால் சூழ்நிலைகள் நம்மை போரிடும்படி கட்டாயப்படுத்தினால், நம்மால் இறுதிவரை போரிட முடியும்’ என்று மாவோ சொன்னதைப் போல இந்த எதிர்ப்பு போராட்டம் மக்கள் மயப்பட்டு தொடரத் தொடங்கிவிட்டது.

செக்ஸ் பற்றி சொன்னதாக வெளியான கருத்துக்கு எதிராக தமிழ்ப் பெண்கள் அணித்திரண்டு இருப்பதன் மூலம் ‘பிரபல போதை’யில் மிதப்பவர்கள் எதையும் சொல்லிவிடலாம், தமிழக மக்கள் கண்டுக் கொள்ள மாட்டார்கள் என்கிற மாயை உடைந்து விட்டது. இனி ‘புகழ் போதையில் நெப்போலிய வீரத்தோடு’ உளறுகிற அவலம் அரங்கேறாது திரையுலக மோகம் தமிழரிடையே குறைந்து மாய பிம்பம் உடைந்து வருகிறது என்கிற நம் நம்பிக்கைக்கு உறுதி சேர்க்கும் வகையில், குஷ்புவுக்கு கோயில் கட்டியவர்களே, ‘குஷ்பு தமிழ்நாட்டு கலாச்சாரத்தைப் பற்றி தெரியாதிருந்திருக்கிறார்... தமிழ்மக்களின் சார்பாக முதல் கண்டணத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என குஷ்புவுக்கு எதிராக தங்களது கருத்தை பதிவு செய்துவரும் சூழலில், சிந்தனையாளர்கள் என்கிற போர்வையில் சிலர் குஷ்புவின் கருத்தின் முழுபரினாமத்தையும் முன்வைத்து விவாதித்து விடையளிக்கிற துணிவற்று அவரின் இந்தியாடுடே கருத்தை மட்டும் ‘செதுக்கி சீர் செய்து’ பெண் விடுதலைக்கான கலகக்குரலாகப் புனிதப்படுத்தி கும்பாபிஷேகம் நடத்தி வருகிறார்கள்.

இதையும் ‘இந்தியா டுடே’ இதழே முகப்புக்கதையாக்கி, ‘திருமணத்திற்கு முன்பு செக்ஸ் கொள்ளாத எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று காட்டுங்கள் பார்க்கலாம்?’ என்ற குஷ்புவின் ‘தினத்தந்தி’ கேள்வியை கூர்தீட்டி மீண்டும் தமிழ்ச் சமூகத்தின் மீது வீசியிருக்கிறது. தான் கட்டமைக்க முனைந்த கருத்தியலுக்கு எதிராக நிற்கிறார்கள் என்பதால் ‘கலாச்சார காவலர்களாக’ மருத்துவர் ச.ராமதாசு, தொல்.திருமாவலவன் உள்ளிட்டவர்கள் அடாவடி செய்கிறார்கள் என கண்டித்திருக்கிறது இந்தியா டுடே, “கருத்தியல் காவலர் குழு’’வின் ஆதரவோடு.

தான் ஊடகங்களில் பதிவு செய்த கருத்துகளைப் பற்றிய தெளிவை முழுமையாக குஷ்புவே பெறாத நிலையில், குஷ்புவை நவீன பெண்ணுரிமைக் கருத்தாளராக கட்டியெழுப்ப முனைகிற சில ‘அறிவுஜீவி’களை பார்க்கிற போது சிரிக்கக்கூட முடியவில்லை, இவர்களின் புத்தி சராசரி ரசிக மனோபாவத்திற்கும் கீழாக போய்விட்டதென்று. இப்படியான ரசிகமனோபாவம் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையும் இழிவு செய்வதாகவும், மக்களை வழிகெடுப்பதாகவும் இருப்பதால் அவற்றைக் கண்டிக்கவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. 

‘கற்பு’ என்கிற சொல்லாடலின் மீதும், அதை சார்ந்து தமிழ்ச்சமூகம் முன்வைக்கிற கட்டுபாடுகள், பண்பாட்டுக்கூறுகள் பெண்களுக்கானதாக மட்டுமாக இருப்பதைப் பற்றியும் நமக்கு கடுமையான கண்டனமும், கற்பு என்று ஒன்றிருந்தால் அதை ஆண், பெண் இருபாலருக்கும் பொது என வைக்கவேண்டும் என்ற கருத்தும் உண்டு.

ஆனால் குஷ்பு சொன்னதாக வெளியான செய்திகளிலும், அதற்கு ஆதரவாக அறிவுஜீவிகள் வெளியிடும் கருத்திலும் ஆணாதிக்கச் சிந்தனையை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் தவறு செய்கிற ஆண்களை கண்டித்து அவனை ஒழுங்கு செய்வது அல்லது அவனின் போக்குகளை சமூகத்திற்கு அடையாளம் காட்டி தண்டனை பெறச் செய்வது என்ற நிலையிலிருந்து வெளியேறி, ஆண் தவறு செய்தால் அதைப்போல இரு மடங்கு தவறை பெண் செய்வது இப்படியான செயல்தான் பெண்ணடிமை தனத்தை ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் என்கிற நிலையை முன்னிருத்தவதாகவே உள்ளது. இந்த நிலைப்பாட்டுக்கு பெரியார்- ‘ஆண்கள் இரண்டு ஆசைநாயகிகளை வைத்தால் நீங்களும் நான்கு ஆசை நாயகன்களை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஆண்வர்க்கத்தை ஒழுங்கமைப்பதற்கான போராட்ட உத்தியாக சொன்ன கருத்தை பெண்களுக்கான பொது விதியாக நிறுவ முற்படுகிற சிந்தனையாள கணவான்களின் பாசிச எதிர்ப்பு நிலை எந்த ‘புள்ளி’யில் போய் நிற்கிறது என்பதை யோசிக்க வேண்டி இருக்கிறது.

சாதாரண தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய அன்றாட சிக்கல்களைப் பற்றிய தெளிவான பார்வையோ, தீர்வுக்கான கருத்தோ இல்லாத குஷ்புவின் பாலியல் பற்றியான சிந்தனையை ஒரு சமூகவியலாளரின் கருத்தாகக் கருதச் செய்த அற்புத சக்தி எது என்பதை பெண்ணியவாதிகள் விளக்கினாலே வெளிச்சம்.

சிந்தனை சிங்கங்களின் பார்வையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களின் எழுச்சி என்பதும், சமூக ஒழுக்கத்திற்கான கருத்தென்பதும் பாசிச வடிவமாகத் தெரிகிறது. தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் திட்டம் மற்றும் கோரிக்கை குறித்து விரிவாக அறிந்திருந்தாலும், அவ்வியக்கம் முன்னெடுக்கும் சில போராட்டங்களை மட்டும் குறிவைத்துக் கேலி செய்து தனது சாதித்திமிரை பறை சாற்றிக்கொண்ட பார்ப்பன ஏடுகளைப் போல, குஷ்புவுக்கு எதிரான கருத்துகளை திரித்து வரித்து பெண்ணியக்கித்திற்கு எதிரானவர்களாக முத்திரை குத்துகிற பெண்ணியவாதிகளின் நோக்கமும், திட்டமும் என்னவென்பது புரியவில்லை.

Thangarbachanகுஷ்பு கருத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்கிறோம் என்ற பெயரில் ஒழுங்கற்ற சமூகத்தை கட்டமைக்க முற்படுகிறதோடு மட்டுமல்லாமல், போலியான பெண்ணுரிமை செயலான ஆபாச வாழ்வை பெண்களுக்கு போதிக்கிற நவீன சிந்தனையாளர்களின் போக்கு கண்டிக்கத்தக்கதாகவும், வியப்பளிப்பதாகவும் உள்ளது. 

‘உடைக் கட்டுப்பாட்டுக்கு ஆதரவு தரும் பெரும்பான்மை மனோபாவமே கண்டிக்கத்தக்கது’ என கருத்து சொல்கிற ரவிக்குமார் தன்னைச் சார்ந்த பெண்களுக்கு எந்த அளவு கருத்தியல் அறிவை, பாலியல் சுதந்தரத்தை கற்றுத்தந்திருக்கிறார் என்பதை சமூகத்திற்கு அறியத் தரவேண்டும். தனக்கெதிரான கருத்துடையவர்களுக்கு மிகுந்த சகிப்புத்தன்மையோடு ‘மொட்டைக்கடுதாசி’ எழுதும் உரிமையை தந்தவர் என்பதையும் மறந்துவிட முடியாது.

“கற்பு என்பதையே எதிர்த்தவர்கள், இன்று நேர் எதிர்நிலை எடுக்கிறார்கள்’’ என கொதித்தெழும் கனிமொழிக்கு இப்பிரச்சனையில் எதிராளிகளின் முழுமையான கருத்துகளைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பை பெற்றிருக்க முடியாது தான். ஆடைக் கட்டுபாடுகளுக்கு எதிரான கருத்துகளை ஆணித்தரமாக பதிவு செய்யும் போது (ஆனந்த விகடன்) அடக்கமாக சுடிதார் அணிந்து இன்னும் துப்பட்டாவை இழுத்துப்போர்த்தி காட்சியளிக்கிற கனிமொழியின் ஆலோசனைகள் அந்நியருக்குதான் என்பது புரிகிறது. “புரட்சிக்கவிஞரின் கவிதைகள் எதுவும் என்னை கவர்ந்ததில்லை என்றதோடு, யார் ஆரியர்? இல்லாத விசயத்திற்கு ஏன் போராட வேண்டும்?! (நந்தன் - 2002) என முழுபூசணிக்காயை சேற்றில் மறைத்தவர்தானே கவிஞர் கனிமொழி.

குஷ்புவின் - ‘இந்தியா டுடே’ கருத்துக்கான எதிர்ப்பாக மட்டுமே இப்போராட்டத்தை திசை திருப்ப முயலும் சிந்தனையாள, நுண்ணறிவு பேர்வழிகள் நாளிதழில் குஷ்பு வெளியிட்ட தமிழ்ப் பெண்களின் ஒழுக்கம் குறித்தான வினாவை முழுமையாக புறக்கணிப்பது என்ன வகை சனநாயகம், இப்படி ஒரு கருத்தை இருட்டடிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல் ‘தமிழ் பெண்களைக் குறித்து குறிப்பிட்டு எந்த கருத்தையும் சொல்லாத குஷ்பு’ என குஷ்புவைப் புனிதப்படுத்துகிற அயோக்கியத்தனத்தை கருத்துலகில் அரங்கேற்றுவது சிந்தனையாளர்களின் நியாமற்ற நிலைப்பாட்டினையே நமக்கு புலப்படுத்துகிறது.

‘இந்த போராட்டம் தேவையற்றது. மேலும் குஷ்புவை மும்பைக்கு ஓடச் சொல்வது சனநாயக விரோதக் கொள்கை’ என புதுக்கருத்தியல் பாதுகாவலராகியிருக்கும் சனநாயக மாதர் சங்கத் தலைவி உ.வாசுகி, திரைப்படங்களில் மெட்டுக்களுக்கு வார்த்தைகளில் வக்கிரம் கலந்து எழுதிய கவிஞர்கள் மீது பாய்ந்து குதறியது ஏன்? ஆபாச சுவரொட்டிகளுக்கு எதிராக ஆர்ப்பரித்தவர் நடிகை முன்மொழியும் ஆபாச வாழ்வை மட்டும் வழி மொழியலாமா?.இவருடைய சனநாயக பார்வை எந்த எல்லைக்குள் சுருங்குகிறதென்பதை ஆராயவேண்டியிருக்கிறது.

அன்பு, பாசம், நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் நியாயம், ஒழுக்கம் இவற்றால் கட்டமைக்கபடுவதே குடும்பம், அப்படியான கட்டமைப்பை இருபாலருக்கும் போதித்து வாழ்விப்பதால் மட்டுமே சமூகம் சீர்பெறும் என்பதை அறிவாளிகள் அறியாமலே போய்விட்டது ஏன்?

சமீபகாலமாக சனநாயக போராளியாக உயிர்பெற்றிருக்கும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் “மக்களின் கடுமையான பிரச்சனைகள் எதற்கும் முகம் கொடுக்கத் திராணியற்ற நிலையில் ஊடகங்களுக்குத் தீனி போட்டு தம்மை நிலை நிறுத்திக்கொள்ள பாலியியல் சார்ந்த பிரச்சனைகளை இந்தக் கட்சிகள் முன்னெடுக்கின்றன’’ என திருவாய் திறந்திருக்கிறார். சமூகப் பிரச்சனைகள் எதையும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் விவாதிக்கிற தெம்பற்ற சூட்சமம் கற்ற கவிஞரான இவர், பாலியல் குறித்த பிரச்சனையை தமிழ்ச்சூழலில் தொடங்கி வைத்த ‘இந்தியா டுடே’ , குஷ்பு பற்றி எந்த கருத்தையையும் சொல்லாமல் இருப்பதிலிருந்தே, இவருக்குள் ஒளிந்திருந்த கருத்தியல் பாசிசம் வெளிப்பட்டு விட்டது என்பதை உணரலாம்.

“சாதரண மனிதருடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொன்னூறு அவனவனுடைய லட்சியத்தையும் தேவையையும் பொறுத்ததாகும்’’ என்றார் பெரியார். குழு மனப்பான்மையோடு தனக்கு பிடிக்காதவர்கள் எதிர்க்கிறார்கள் அல்லது எதிரான கருத்தை முன் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்கள் எதிர்க்கிற கருத்தின் ஆழ அகலங்களை செறிவுபடுத்தி ஆதரித்து களப்பணியாற்றக்கூடிய அறிவாளி சமூகம் பெரியாரின் இந்தக் கூற்றை கவனித்ததாகத் தெரியவில்லை.

மனித உரிமை ஆர்வலராக அறியப்பட்ட வழக்கறிஞர் ரஜினி ‘ஆண்களை, தலைவராகக் கொண்ட கட்சிகள் தங்களது சொந்த ஆதாயத்திற்காக குஷ்பு என்ற பெண்ணிற்கு எதிராக பெண்களையே தூண்டி விடுகிறார்கள்’ என்று போராட்டக் களத்தில் இறங்கியுள்ள தமிழ்ப்பெண்களை அரசியல் ஆண்களின் கைப்பாவையாக, தலையாட்டி பொம்மைகளாக பொருள்படுத்தி இழிவு செய்கிறார். அதோடு ‘குஷ்புவின் கருத்தைத் திரித்துச் சொன்ன அரசியல் தலைவர்கள் மீது வழக்கு போடுவதற்காக ஒத்த கருத்துடைய பெண் வழக்கறிஞர்களை அணி திரட்டுகிறேன்’ என்று தனது மனித உரிமை உணர்வு எந்த எஜமான விசுவாசத்திற்குள் பதுங்குகிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். ‘சமதர்மம் என்றால் மனிதனின் நடத்தைக்கும், எண்ணத்திற்கும், நற்றொண்டிற்கும்தான் மதிப்பு இருக்க வேண்டுமேயொழிய, அந்தஸ்திற்கும், பதவிக்கும் மதிப்பு இருக்கக்கூடாது’ என்ற பெரியாரின் சிந்தனை வாதத்திற்குக்கூட வழக்கறிஞருக்கு தெரியவில்லை.

சிந்தனையாளர்களாகவும், பெண்ணுரிமைவாதிகளாகவும், மனித உரிமை ஆர்வலர்களாகவும் தன்னை சமூகத்தில் காட்டிக் கொண்டவர்கள் இந்த பட்டங்களையெல்லாம் தக்க வைத்துக்கொள்வதற்கான உச்சக்கட்டப் பணியாக இப்போதைக்கு குஷ்புவை ஆதரிப்பதை கையில் எடுத்திருக்கிறார்கள், அதுவும் வழு வழு மஞ்சள் பத்திரிக்கையான ‘இந்தியா டுடே’வை களமாக பயன்படுத்திக் கொள்வது நகைச்சுவையான சமூக விழிப்புணர்வு பணி.

தமிழ்த் தேசியத்தையும், தமிழ்த் தேசியம் பேசுவோரையும் சிறுமைப்படுத்தி - தமிழ்ச் சூழலில் வளர்ந்து வரும் தமிழ்த் தேசியச் சிந்தனையை சிதைக்கிற முயற்சியாக தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சாதியவாதிகள் என அவதூறுக் கருத்துகளை தமிழ்த் தேசியர்கள் மீது வீசிய இந்த சிந்தனையாளர்கள், அவர்களை பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள், ஆணாதிக்க சிந்தனையாளர்கள் என்கிற அதிரடி முத்திரையோடு பாசிச சிந்தனையாளர்களாக அடையாளப்படுத்த முற்படுகிறார்கள். அவற்றிற்கு பார்ப்பனீய மற்றும் பார்ப்பனீயத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொண்ட இதழ்களும் ஆசியும், ஆதரவும் வழங்கி வருகின்றன. குறிப்பாக குஷ்புவின் பெண்ணிய புரட்சிகர சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்க முற்படுபவர்கள் “பெரியாரை’’ துணைக்கழைத்துக்கொண்டு திரிகிறார்கள். தமிழ்ச்சூழலில் எந்த பிரச்சனையையும் பெரியாரை வைத்தே விவாதிக்கிற நிலை வளர்ந்திருப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இருப்பினும் அவரவர் சிந்தனைக்கேற்ப - பெரியாரின் கருத்தை நீட்டி, சுருக்கி, வெட்டி ஒட்டி பயன்படுத்துகிற போக்கு மிகவும் ஆபத்தானதாகவும், உள் நோக்கம் கொண்டதாகவும் உள்ளதென்பதை உணரவேண்டும்.

இதே அடிப்படையில் விருந்தினர் பக்கத்தில் நிமிட சிந்தனையில் சமூகத்தை புரட்டிப்போடும் நெம்புகோல் கருத்துகளைப் பதிவு செய்யும் வாஸந்திக்கு பெரியார் சொன்ன மத அடிப்படைவாதம், சாதிய சிக்கல்கள் குறித்தான கருத்துகள் குறித்த எந்த சிந்தனையும் இல்லை. ஆனால் பெண்ணியம் குறித்து சில கருத்துகளை மட்டும் தனக்கு சாதகமானதாக பயன்படுத்திக் கொள்கிறார். பெரியாரைக் கொண்டே அவரின் சிந்தனைகளை அடியொட்டி இயங்குபவர்களை இடிக்கிற வேலை இது.

பெண்ணுரிமைப் போராளியாக குஷ்புவை கட்டியெழுப்புவதற்காக வாஸந்தி அவருக்கேயுரிய பாணியில் கருத்து திரிபுகளையும், நேர்மையற்ற விமர்சனத்தையும் இந்தியா டுடேயில் பதிவு செய்கிறார். ‘தேசியம் என்பதே ஒரு கற்பிதம் என்று விவாதிக்கப்படுகிற இந்தக் காலத்தில், தமிழ்த் தேசியம் என்பது மற்றொரு கற்பிதம். பயங்கர விளைவுகளைக் கொண்ட கற்பிதம்.’ என கருத்தளிக்கிற இவர், மொழி, இனம், பண்பாடு எந்த நியாயமான எல்லைகளாலும் கட்டப்படாத இந்திய தேசியத்திற்கு எதிராக எந்த கருத்தையும் அரச அதிகார மையத்தை நோக்கி ஏன் சொல்லவில்லை. ‘இந் நாட்டிற்குத் திராவிட தேசியம் தான் தேவையே ஒழிய, டெல்லித் தேசியமோ, அய்க்கிய மாகாணத் தேசியமோ, மற்ற வடநாட்டுத் தேசியமோ தேவையில்லை.’ என்று பெரியார் சொன்ன கருத்து வாஸந்திக்கு வசதியாக மறந்து போனது.

பெண்ணுரிமை என்பது ஆண்களின் மீது காழ்ப்புணர்வோடு கருத்துகளை வீசுவது என்பதையே தனது அளவுகோலாக கொண்டிருக்கும் வாஸ்ந்தி, “தமிழ்ச் சமூகத்தின் மானம், மரியாதை, கௌரவம் எல்லாமே பெண்ணின் யோனியில் பதுங்கியிருப்பதான அசைக்க முடியாத நமபிக்கை கொண்ட படை அது.’ என குஷ்புவின் ஒழுங்கீன கருத்தை கண்டிக்கிறவர்களை சாடுகிறார். ‘பெண் முன்னேற்றத்தில் இட ஒதுக்கீடு பெரிதாக எதுவும் மாற்றத்தை தந்துவிடாது.’ என கல்கியில் நம்புகிற இவர், எல்லோருக்குமானதாக வீரியம் பெற்றிருக்கும் யோனியில் பெண் விடுதலைக்கான அத்தனை அறிகுறிகளும் ஒளிந்திருப்பதாக நம்புகிறாரோ?. பெண் சமூக முன்னேற்றத்திற்கு எதிரான எத்தனையோ நடைமுறை சிக்கல்களையெல்லாம் விட்டுவிட்டு பாலுணர்வு சார்ந்த உரிமைக்காக போராடுவதையே பெண்ணுரிமைக்கான புனிதப்போராக முன்னெடுக்கிறார். இது போன்ற அடிப்படையும், சமூகநோக்குமற்ற முச்சந்தி சிந்தனைகளை தமிழச்சிகள் தொடப்பக்கட்டை அளவுக்கு கூட மதிக்க மாட்டார்கள் என்பது வாஸந்தியே அறிந்த அம்பலம்.

இவரின் அரைவேக்காட்டு அறிவுரைகளை தமிழச்சிகள் தலையில் கட்டுவதற்கும், குஷ்புவின் கருத்தை புனிதப்படுத்தி மகாகும்பாபிஷேகம் நடத்திடவும் சங்க இலக்கிய பாடல்களையும், பெரியாரின் சிந்தனைகளையும் துணைக்கழைக்கிறார். ‘திருமணம் என்பது சட்டபூர்வமான ஒரு விபச்சாரமே’ என்னும் பெரியாரின் கருத்தைச் சொல்லி பெரியாரின் ஆச்சர்யமான நவீனச் சிந்தனைக் கருத்துகள் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர்கள் அல்லது வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த தலைவர்களை இன்னமும் நெளியவைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

திருமணம் செய்துக்கொள்வது பற்றி பெரியார் சொல்லியுள்ள இன்னொரு கருத்தான ‘வீடு கட்டிக்கொள்வதும், திருமணம் செய்து கொள்வதும் மனித சமுதாயத்தின் உரிமையானதும், அவசியமானதும், தேவையானதுமான காரியமாகும். எந்த மனிதனுக்கும் தங்குவதற்கு ஒரு குடிசை- அதாவது வீடு தேவை. அது போல் தன் வாழ்க்கைக்கு ஒரு துணைதேவை. இவையிரண்டுமில்லாவிட்டால் நல் வாழ்வு ஆகாது’ என்பது வாஸந்தி வகையறாக்கள் திருமணம் குறித்து முன்வைக்கும் கருத்துகளுக்கு சரியான சாட்டையடியாக உள்ளதை அறிவாளிகள் அறிவார்கள், இதனை தமிழர்களும் தெளிவாக உணர்வார்கள்.

திருமணம் செய்துக் கொள்ளும் போதும், ‘நாம் கட்டிக்கொள்ள போகும் ஆண், பெண் ஒழுக்கமானவர்களா என்று பார்த்தால் போதும்.’ என்றே அறிவுருத்துகிற பெரியார் அதன்படி திருமண வாழ்வை ஏற்று தன் வாழ்வில் பின்பற்றியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தி என்பது தனி சொத்து, ஒழுக்கம் என்பது பொது சொத்து. ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் என்பது மிக முக்கியமான ஒன்றாகவே அறிவுருத்துகிற பெரியாரின் பெயரால், குஷ்பு போன்ற அரைகுறை பெண்ணியவாதிகள் முன்வைக்கும் ஒழுங்கீனங்களை உயர்த்தி பிடிப்பதும், ஆதரிப்பதும் கேலிக்குரிய செயலாக உள்ளது.

‘உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும். திராவிடர் கழகத்தின் கொள்கை மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே.’ என பெரியார் தெளிவாக கூறியிருக்கிறார். பெண்ணடிமை தனத்தை ஒழிக்கிறேனென்று ஒழுங்கீனங்களைப் போதித்து மனிதத் தன்மையிலிருந்து சமூகத்தை விலகிச்செல்ல வைப்பதும், காட்டுமிராண்டித் தனத்தை உயர்த்தி பிடிப்பதும் புரட்சி என்கிறவர்களின் நோக்கம் என்ன.?

அறிஞர்கள், சிந்தனையாளர்கள், சமூகநல விரும்பிகள் மனித உரிமை காவலர்கள் என ஒரு அறிவுஜீவிப் பட்டாளத்தையே கூட்டி குஷ்புவின் ஆபாசக் கருத்துகளுக்கு கும்பாபிஷேகம் நடத்திய ‘இந்தியா டுடே’வின் ஈனச்செயல்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ஞாநி, மாலன் போன்றவர்கள் அவரவர்களின் இதழில் தனித்தனியே பூசையே நடத்தி குஷ்புவின் சிந்தனையை புனிதப்படுத்தி இருப்பது தமிழ்ச் சமூகதிருத்தத்தில் இவர்களுக்கு இருக்கின்ற அக்கறையும் எல்லையும் எது என்பதை நமக்குப் புலப்படுத்துகிறது.

“சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கி, தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளுதலேயாகும்’’ என்ற பெரியாரின் சிந்தனைக்கு சிறிதும் பொருந்தாத பாலுணர்வு சுதந்திரம் என்பதை பெண்விடுதலைக்கான சமூக மாற்றமாக முன் வைக்கின்ற மாற்றுச் சிந்தனையாளார்கள் ஆணாதிக்க பெரும்பான்மைவாதம், மதவாத அடிப்படையிலான கட்டமைப்பு, சமூக நடப்புமுறைகள் இவற்றால் பெண் சமூகத்திற்கு நிகழுகிற, நிகழவுள்ள அநீதிகளுக்கு எந்த வகையில் அது தீர்வாகுமென்பதை இன்று வரை தெளிவுபடுத்தவில்லை. அவர்களின் குடும்பத்தாருக்கு இதை அறிவுருத்தி நடைமுறைப்படுத்தியுள்ளார்களா என்பதையும் பதிவு செய்யவில்லை. 

திருமணத்திற்கு முன்பு உடலுறவு என்பது தமிழ் தொன்மம் சார்ந்த விஷயம் என்றும் பாலியல் கருத்துகள் தனிமனித உரிமை இவற்றில் யாரும் தலையிடக்கூடாதென்றும் திசைகளில் கருத்தெழுதுகிற மாலன், பாலியல் கருத்துகளை ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் மீது எந்த அடிப்படை உரிமையில் குஷ்புவும் இந்தியா டுடேவும் திணிக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தாமல் இவற்றை எதிர்ப்பவர்களை கலாச்சார நாட்டாமைகள் என சாடுகிறார். இப்போராட்ட உணர்வை ஊதிப் பெரிதுபடுத்தி காட்டிவரும் தமிழ் முரசு, சன் தொலைக்காட்சி குறித்து வாயைத்திறக்காத நேர்மையை என்னவென்று சொல்ல. காதல், காமம் பற்றிய பெரியாரின் சிந்தனைகளை விரிவாக மேற்கோள் காட்டி வாதிடுகிற மாலன் தன் வீட்டுப் பெண்களுக்கு எந்தவகை சிந்தனையை ஊட்டிவளர்ந்திருக்கிறார், பிள்ளையார் பற்றிய பெரியாரின் கருத்துகளையெல்லாம குப்பையில் போட்டுவிட்டு ஒரு குதூகலமான உணர்வோடு பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்து வருகிற விருந்தினர்களுக்கு பரிமாறுகிற பக்குவத்தைத் தானே தன் வீட்டில் வளர்த்தெடுத்திருக்கிறார். இப்படி தன் வீட்டுப் பெண்களெல்லாம் பூட்டி வைக்கப்பட்ட பொக்கிஷங்களாக பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்ற இவர், திருமணத்திற்கு முன்பான உறவு, பாலுறவுகளில் முழுசுதந்திரம் போன்ற கருத்தியலுக்கு வக்காலத்து வாங்குவது வேடிக்கையாக இருக்கின்றது. 

‘’பாய்ஸ்’’ திரைப்படத்தில் ஆபாசம் மேலோங்கி இருப்பதாக சுஜாதாவிடமும் சங்கரிடமும் மல்லுக்கட்டிய ஞாநி, நாகரீகத்தின் உச்சகட்டத்தில் நின்று தனது ‘தீம்தரிகிட’ வில் குப்பைத் தொட்டி படத்தை வரைந்து அதில் சுஜாதா, சங்கரின் படங்களைப் பொறித்து இங்கே அனைவரும் எச்சில் துப்பலாம் என்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு விருத்தாச்சலம் போன்ற ஊர்களுக்குப் பறந்து சென்று ‘பாய்ஸ்’க்கு எதிரான கருத்துகளைப் பரப்பிய பத்திரிக்கையாளரான இவர் குஷ்பூவின் கருத்துகளை ரசிக மனோபாவத்தோடு அங்கீகரித்து ஒரு பக்த உணர்வோடு ஆதரித்து கருத்துகளை வெளியிடுவது தமிழ் சமூகத்தை முட்டாளாக்குகிற முயற்சியே அல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்?. எந்த ஒரு கருத்தியலுக்கும் எதிர்ப்போ ஆதரவோ எதுவாக இருந்தாலும் பிறவி அறிவுசீவிகளான நாங்களே எழுதிக் கிழிக்கவேண்டும் என்கிற அதிகப்பிரசங்கித்தனமே மருத்துவர் இராமதாசு, தொல்.திருமாவளவன் மற்றும் த.மு.மு.க தலைவர்கள் உள்ளிட்டோரை கிண்டலடிக்க வைக்கிறது. 

பறை, மாத்தம்மா குறும்படங்களின் மூலம் தமிழ்ச்சூழலில் அறிமுகமாகி தனது நேர்மையற்ற சமூகப் பார்வையை ‘யாரோ’வின் ஆதரவோடு நிலை நிறுத்திக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும், போராளி தொகுப்பு வெளியிடவும், உதவி இயக்குநராக பணியாற்றவும் மேற்கொள்ள வேண்டிய லாபிகள் எவ்வளவோ காத்திருக்க பரபரப்பாக இயங்குகிற லீனா மணிமேகலை, ‘தமிழ்நாட்டில் வேலை இல்லாத சிலர் கலாச்சார காவலர்களாக மாறிக்கிட்டிருக்கிறாங்க... பரபரப்புக்காக எதிர்ப்பவர்களை எல்லோரும் சேர்ந்து எதிர்க்கவேண்டும். குஷ்பு சொன்னதில் என்ன தப்பு இருக்கு?’ என புரட்சிகர கருத்துகளை பதிவுசெய்கிறார்.

இப்படி பெண்ணுரிமை பற்றி முழுமையான புரிதலற்றவர்கள் கருத்தியல் காவலர்களாக களம் இறங்கி குஷ்பாம்பிகைக்கு பாத பூசை நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்.. சுயவிளக்கமளிப்பதாக வணிக இதழ்களில் அழகழகான வண்ணப்படங்களுடன் காட்சியளிக்கும் அம்பாள் அப்படி சொல்லவில்லை இப்படி சொல்லவில்லை..என பதுங்கியதோடு.. என் பிறந்த நாளை கொண்டாட முடியவில்லை, என் மகள் பிறந்த நாளைக் கொண்டாட முடியவில்லை என புலம்பியிருப்பதின் மூலம் தனது பகட்டுவாழ்வை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்து கருத்தியல் காவலர்கள் முகத்தில் கரியைப் பூசி ஆசி வழங்கியிருக்கிறார்.

பாலியல் உணர்வு, அன்பு, பாசம் இவற்றை சம அளவில் ஒழுங்கமைத்து அவற்றின் அடியொற்றி வாழ்வதன் மூலமே மனித வாழ்க்கை இறுதிவரை சிறப்பானதாகவும் சோர்வற்றதாகவும் இருக்க முடியும் என்பதை உணர்ந்து தான் தோன்றித்தனமாக வாழ்ந்த மேலைநாட்டவர்கள் தனது வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்து கொண்டு, குடும்பச் சூழலை உறுதியானதாக்கிக்கொள்ளும் வகையில் இணை இணையாக சுற்றுலா சென்றுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பார்ப்பனர்கள் மதத்தின் பெயரால் தமிழச்சிகளின் மீது திணித்த தேவதாசி முறையை இன்று படிப்பாளிகள் மாற்றம் என்கிற பெயரில் தமிழச்சிகளுக்குப் போதிக்கின்றார்கள். 

அதையும் சூத்திர பட்டம் ஒழியும் வரை போராடுவேன் என்று வாழ்நாள் முழுவதும் கருத்துரைத்த பெரியாரின் பெயராலயே சூத்திர வாழ்க்கைக்கு அழைப்பு விடுக்கும் ‘அறிவுஜீவி’ அயோக்கியர்களை தமிழ்ச் சமூகம் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். அதற்காக அறிவாளர்கள் பணியாற்ற முன் வரவேண்டும்.

இதே சூழலில் கற்பு என்றும், பண்பாடு என்றும், ஒழுக்கமென்றும் பெண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளை போதித்து, கண்ணகி, நளாயினி புராண கழிவுகளை தமிழச்சிகள் மீது பூசி தமிழச்சிகளை இழிவு செய்யும் பிற்போக்காளர்களையும் இனங்கண்டு புறந்தள்ளவேண்டிய கடமையும் நமக்குள்ளது. 

‘நாம் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம். இன்னும் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம். மீண்டும் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம். எல்லாவிதமான சோதனைகள் இருந்த போதிலும் எதிர்காலம் நமதே.’ என்று சொன்ன லெனின் கருத்தை மனதில் கொண்டு ‘பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்’ என்ற பெரியாரின் நோக்கத்தோடு கருத்தியல் காவலர்களின் போலியான முற்போக்குச் சிந்தனைகளை அடையாளம் காட்டும் நம்மை ஊடகங்களின் மூலம் அவமானப்படுத்துவார்கள் என்றாலும் கூட ‘மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற கவலை எனக்கு சிறிதுமில்லை.’ என்கிற பெரியாரின் சிந்தனையையே நம்முடைய சிந்தனையாகக் கொள்ள வேண்டும். 

- இசாக்

Pin It