“வாயில்லாதோர், கதியில்லாதோர், ஆதரவில்லாதோர் கிடைத்துவிட்டால் ஆழ்மனதில் பதுங்கிக் கிடக்கும் எத்தனை குரூரங்கள் வெளிப்படுகின்றன! அதிலும் அவர்கள் பெண் குழந்தைகளாகவும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்துவிட்டால் வக்கிரங்கள் எடுக்கும் அவதாரங்களுக்கு எல்லையோ, எண்ணிக்கையோ இல்லை. பலியானவர்களுக்கு அன்றி, குற்றவாளிகளுக்குச் சாதகமான சாதி – வர்க்க – சட்ட – அரச – அதிகாரச் சூழல் குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு ஆயிரம் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது”.1

sexual assaultதலித்துகளின் மீது நிகழ்த்தப்படும் கொடிய வன்முறைகளில் ஒன்றுதான் பாலியல் வன்முறையும். காலங்காலமாக நிகழ்த்தப்படும் இவ்வன்முறை பதிவு செய்யப்படாமலும், பொதுவெளியின் கவனம் பெறாமலும் மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வந்துள்ளது. கால ஓட்டத்தில் சில பாலியல் வன்முறைகள் உலகிற்கு வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்பட்டவைகளைவிட பதிவு செய்யப்படாமல் விடப்பட்டவைகளே அதிகம் எனலாம். அதிலும் கிராமங்கள் என்றால் சொல்லவே வேண்டாம், சாதிப் பஞ்சாயத்துகளை மீறி எதுவும் வெளியே வராது. ஆதிக்க சாதிகளின் அதிகாரத்தாலும், சூழ்ச்சியாலும் இவையெல்லாம் வெளியே வராமல் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு கிடைக்காததாலும் இவ்வகையான பாலியல் வன்முறைகளை வெளியே சொல்லமுடியாத நிலையில் தலித்துகள் உள்ளனர். தலித் பெண்களின் உடல் மீது நிகழ்த்தப்படும் இவ்வன்முறை குரூரத்தின் உச்ச வெளிப்பாடு; அவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் சமூகத்தில் தலைகுனியச் செய்கின்ற யுக்தி.

பாலியல் வன்முறை நாட்டின் அனைத்துப் பகுதிகளில் நடைபெற்றாலும் “பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் தலித், பழங்குடியினர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்”.2 “தினமும் குறைந்தது மூன்று தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்”.3 நாடு முழுவதும் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. “நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறைகளில் தலித் பெண்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்கள்தான் மிகவும் நிர்க்கதியாக விடப்பட்டிருக்கிறார்கள்”.4

நாட்டில் கிராமப்புறங்களில் தலித் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அதிகம். “கிராமப்புறங்களில் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்களில் 90 சதவீதம் பேர் தலித் மற்றும் ஆதிவாசிகள்தான்”.5 தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவின்படி பார்க்கும் பொழுது தலித்துகளின் மீதான பாலியல் வன்முறை வருடம் தோறும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஆதாரம்: தேசிய குற்ற ஆவண காப்பகம்

கடந்த ஆண்டு மே 27 உத்திரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள் இருவர் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரு குற்றவாளிகள் காவல்துறையைச் சார்ந்தவர்கள். தமிழகத்தில் ஜூன் 11 பொள்ளாச்சி விடுதியில் தங்கி, பள்ளியில் பயின்று வந்த இரு தலித் சிறுமிகள் மிரட்டி கடத்திச்சென்று வன்புண்ர்ச்சி செய்யப்பட்டனர். அதேபோல் ஜூன் 23 கரூர் கிருஷ்ணராயபுரம் பச்சம்பட்டியில் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் தலித் இளம்பெண் கடத்திச் சென்று வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இவ்வாறு தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அன்றாட நிகழ்வாகிவிட்டது.

காவல்துறையின் அலட்சியப் போக்கும் குற்றவாளிகளுக்குத் துணை போவதும், குற்றத்தில் அவர்களே ஈடுபடுவதும் தொடர்கதையான ஒன்றாக உள்ளது. குற்றத்தைப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவது, பதிவு செய்தாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையும் சேர்த்துப் பதியாமல் வெறும் பாலியல் வன்முறையாக மட்டும் பதிவது, கட்டப்பஞ்சாய்த்து செய்து வழக்குப் பதியாமல் விடுவது, பதிந்தாலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்காமல் விடுவது போன்ற குற்றவாளிகளுக்கு சாதகமான செயல்படுகளால் இம்மாதிரியான தலித்துகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

தலித் மக்களின் குடியுரிமை மற்றும் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வன்கொடுமைச்சட்டங்கள் பல இருந்தும் அவை செயலற்றவையாகவே உள்ளன. இந்த நிலையில் அதனை நீக்கவேண்டி ஆதிக்க சக்திகள் கூப்பாடு போடுகின்றன.

தலித் ஆண்கள் மீதும், பெண்கள் மீதும் தொடர்ந்து இந்த சாதிய சமூகம் வன்முறையை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றது. தலித் பெண்கள் மீது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாலியல் வன்முறை ஆயுதத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கின்றது. சட்டமும் அதை நடைமுறைப்படுத்துகின்ற அரசும் இது போன்ற தலித்துகள் மீதான பாலியல் வன்முறையை ஒடுக்காமல் வேடிக்கை பார்ப்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

துணை நூல்கள்

1. வசந்தி தேவி.வே, மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள்-6: கதியற்ற சிறுமிகளும் கிடைக்காத நீதியும், காலச்சுவடு, ஜூன் – 2014, பக்.27.
2. மேலது பக்கம்.
3. முத்துக்கிருஷ்ணன்.அ, பலாத்கார தேசம், உயிர்மை, பிப்ரவரி – 2013. பக்.7.
4. யமுனா ராஜேந்திரன், வன்பாலுறவும் பெண்நிலைவாதமும், உயிர்மை, பிப்ரவரி – 2013, பக்.17.
5. மாலதி மைத்ரி, தூக்குக்கயிறும் பெண்கள் பாதுகாப்பும், குமுதம் தீராநதி, மார்ச் – 2013, பக்.10.

- சி.வெங்கடேஸ்வரன், ஆய்வாளர், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி

Pin It