nit srinagar

ஐதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றைத் தொடர்ந்து தன்னுடைய புனித தேசபக்தியைக் காட்டுவதற்காக காவி வானரங்கள் அடுத்து ஸ்ரீநகர் என்.ஐ.டி யைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றன. வழக்கமாக இடதுசாரி சிந்தனை உள்ள மாணவர்கள் மீது தன்னுடைய வன்முறையைக் கட்டவிழ்த்து விட ஏதாவது சாக்குபோக்குக் கிடைக்காத என நாயைப் போல அலையும் இந்தக் காவிக்கூட்டம் ரோகித் வெமுலாவை கொல்வதற்கு யாகூப்மேமனையும், கண்ணையா குமாரை அச்சுறுத்துவதற்கு அப்சல் குருவையும் பயன்படுத்தியது. மத்தியில் மோடியையும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ‘படிக்காத மேதை’ ஸ்மிருதி இரானியையும் பக்கபலமாக வைத்துக் கொண்டு தான் நினைத்தை எல்லாம் சாதித்துக்கொண்டு இருக்கின்றது.

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மை மாணவர் சமூகத்தின் முன் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டுபோன இந்தக் காக்கிடவுசர் பேர்வழிகள், பார்ப்பனியத்திற்கு எப்போதுமே வெட்க மானமே கிடையாது என்பதை நிரூபிப்பது போல மீண்டும் தன்னுடைய சாகாவை ஸ்ரீநகர் என்.ஐ.டி யில் நடத்தியுள்ளது. இந்த முறை அதற்குக் கிடைத்திருக்கும் காரணம் வழக்கம் போல இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றார்கள் என்பதுதான்.

நடந்து முடிந்த 20 ஒவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்றது. இதைக் கல்லூரியில் உள்ள சில நல்ல மாணவர்கள் வெடிவைத்துக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். நம்மைப் போன்ற மானமுள்ள மனிதர்களுக்கு இது ஒரு சாதராண நிகழ்ச்சி. ஆனால் இந்தியாவில் வேதகாலம் தொட்டு மோடிகாலம் வரை தேசபக்தியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் மானங்கெட்ட பார்ப்பன கும்பலுக்கு அது ஒரு பயங்கரவாத நிகழ்ச்சி. அவர்களைப் பொருத்தவரை இந்தியா தோற்றது என்றால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் தோற்றதாக அர்த்தம். அதற்காக ஒவ்வொரு மானமுள்ள இந்துவும் துக்கம் கடைபிடிக்க வேண்டும். பாரத மாதவை கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர்விட்டு கதற வேண்டும். அப்படி கதறாத ஒவ்வொரு இந்தியனும் தேசதுரோகி. உடனே அவனை பாகிஸ்தானுக்கோ இல்லை ஆப்கானிஸ்தானுக்கோ நாடு கடத்திவிட வேண்டும். இதுதான் அவர்களின் உலகம் போற்றும் தேசபக்தி.

இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டது. அதை அந்த மாணவர்கள் கொண்டாடினார்கள் என்றால் கூட சரி காக்கிடவுசர்களின் கோபத்தில் ஒரு அர்த்தம் இருக்கின்றது என்று சொல்லலாம். ஆனால் இந்தியா தோற்றது மேற்கிந்தியத் தீவுகளிடம். இதற்குக் கூட அவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடக் கூடாது என்றால் வேறு எந்த நாட்டிடம் இந்தியா தோற்றால் பட்டாசு வெடித்துக் கொண்டாடலாம்? ஒரு வேளை அவாளின் முன்னோர்கள் வாழ்ந்த துர்கிஸ்தான்( கிரிக்கெட் டீம் உள்ளதா என தெரியவில்லை) போன்ற ஆரியர்கள் வாழும் நாட்டிடம் தோற்றால் கொண்டாடலாமோ என்னவோ தெரியவில்லை.

ஒவ்வொரு நாடாக மோடி பறந்து பறந்து போய் இந்தியாவின் இயற்கை வளங்களைப் பன்னாட்டு முதலாளிகளுக்குக் கூட்டிக்கொடுக்கும் போது பொத்துக் கொண்டுவராத தேசபக்தி, காக்கி டவுசர்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் தினம் தினம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் போது பிரீற்றுக்கொண்டு வராத தேசபக்தி, நாளுக்கு நாள் தொழிற்துறை உற்பத்தியை அதல பதாளத்திற்கு மோடி அழைத்துச் செல்லும் போது தோன்றாத தேசபக்தி, 9000 கோடி மக்கள் பணத்தைக் கடன்வாங்கி தின்றுவிட்டு நாட்டைவிட்டே ஓடிப்போன மல்லையாவின் மயிரைக்கூட புடுங்க துப்பில்லாத தேசபக்தி, பாவம் அந்த மாணவர்கள் வெடித்த நாலு பட்டாசுகளிலா சேதம் அடைந்துவிடப் போகின்றது!?

இந்த மானங்கெட்ட பார்ப்பன தேசபக்தர்களுக்கு எப்போதுமே புரியமாட்டேன் என்கிறது. அந்த மாணவர்கள் கோசம் போடுவது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இல்லை என்பது. அவர்கள் இந்தியாவிற்கு எதிராக கோசம் போடுகின்றார்கள் என்பதுதான் உண்மை. லட்சக்கணக்கான இராணுவ துருப்புகளை காஷ்மீரில் வைத்துக் கொண்டு அந்த மக்களின் தேசிய இன போராட்டத்தைத் துப்பாக்கிமுனையில் ஒடுக்கிவரும் இந்திய அரசுக்கு எதிராகவே அந்த மாணவர்கள் கோசம் போடுகின்றார்கள். அவர்கள் இந்தியாவை தங்களைக் கொல்லவந்த அரக்கனாக பார்க்கின்றார்கள். தங்களுடைய சொந்த பந்தங்களை எல்லாம் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் ஆண்குறிகளுக்கும் பலிகொடுத்த அந்த மாணவர்கள் இந்தியா தோற்றால் மகிழ்ச்சியடையத்தான் செய்வார்கள். மகிழ்ச்சி அடைய வேண்டும், அது அவர்களுக்குள் ஆறாமல் உள்ள சினத்தின் வெளிப்பாடு.

ஐதாராபாத் பல்கலைக்கழகத்திலும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் நேரடியாக இடதுசாரி கருத்துடைய மாணவர்கள் மீது மோதுவதற்குத் திராணியற்ற இந்த மதவெறி பிடித்த கூட்டம் தற்போது ஸ்ரீநகர் என்.ஐ.டியில் கலவரம் செய்வதற்காக வெளியில் இருந்து மாணவர்கள் என்ற போர்வையில் காவி பொருக்கிகளைப் பல்கலைக்கழகத்தில் இறக்குமதி செய்து போராட வைத்துள்ளது. போராட்டத்தின் முக்கிய கோரிக்கையே கல்லூரியை ஜம்மு காஷ்மீரில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றவேண்டும் என்பதுதான். இதுதான் காவி பயங்கரவாதிகளின் உண்மையான முகம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு எப்படியாவது கல்லூரியை வேறு மாநிலத்திற்கு மாற்றிவிட வேண்டும். அங்கே படிக்கும் இஸ்லாமிய மாணவர்களின் கல்வியைச் சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம். அதற்காக இவர்கள் அரங்கேற்றியது தான் இந்த தேசபக்தி நாடகம். நீங்கள் எப்படி போராட்டம் நடத்திய மாணவர்கள் அனைவரும் சங்பரிவாரத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்கின்றீர்கள் என கேட்கலாம். போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் பாரத் மாதா கி ஜே என சொல்லி இருக்கின்றார்கள். இது போதாதா? போராட்டம் நடத்திய கும்பல் காவிக்கும்பல்தான் என நிரூபிக்க.

தொடர்ச்சியாக இந்துத்துவத்தை எதிர்த்துப் போராடும் மாணவர் சமூகத்தின் மீது ஒரு வன்மம் நிறைந்த போரை காவி பயங்கரவாதிகள் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். அதற்குத் துணையாக தன்னுடைய அத்தனை பரிவாரங்களையும் அவர்கள் களத்தில் இறக்கிவிட்டிருக்கின்றார்கள். அவர்களின் நோக்கம் நாட்டை மறுகாலனியாக்கும் அவர்களின் கொள்கைகளையும், பார்ப்பனிய சித்தாந்தத்தை மிகத்தீவிரமாக செயல்படுத்தும் அவர்களின் மதவெறியையும் அம்பலப்படுத்தும் மாணவர்களையும் அவர்களுக்குத் துணை நிற்பவர்களையும் தேசபக்தி என்ற போர்வையில் ஒழித்துக் கட்டுவதாகும். இதை மாணவர் சமூகம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பார்ப்பனியத்தின் வஞ்சக சூழ்ச்சிக்கு இரையாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே தீரத்துடன் இந்திய மேலாதிக்கத்தையும், அந்நிய ஏகாதிபத்தியத்தையும், பார்ப்பனியத்தையும் எதிர்க்கும் மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவரையும் நாம் முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும். அவர்களின் போராட்டத்தின் நியாயத்தை நாமும் உரத்துச் சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுடன் கைகோர்த்து நாமும் களத்தில் இறங்க வேண்டும்.

- செ.கார்கி

Comments

1 comment

1
Ms.Surya
Well said. After Modi victory, the student wing of RSS, ABVP became very aggressive - it clashes with politically aware Ambedkarite, Left-leaning and minority student groups. The life and death of Rohith Vemula illustrated this. The crack down on JNU illustrated this. It is a larger ideological battle for the control of public spaces.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.