சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது. பெரியாரை சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் புதியதாக அரசியல் செய்ய‌ப் புறப்பட்டிருக்கும் இந்த கொள்கைச் சீமான்கள் திராவிட இயக்கத்தையும்- பெரியாரையும் கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.

திராவிடம் என்ற ஓர் இனம் எங்கிருந்தோ குதித்தது போலவும் அவர்கள் தமிழர்களை நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வருவதாகவும் புதுக் கரடி விட்டிருக்கின்றனர்! தமிழையும் தமிழினத்தையும் திராவிட இனம் திட்டமிட்டு அழித்து விட்டதாகக் கூறுகின்றனர். இந்தியாவில் எந்த இனத்திலும், இல்லாத அளவில் மொழியுணர்ச்சியும், தனி ஈழம் - தனித் தமிழ்நாடு கோரிக்கைகளும் மேலோங்கி இருக்கும் தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தமிழர் உணர்ச்சியை மழுங்கடித்து விட்டதாகக் கூறுவது உண்மையா? பெரியார் மொழியிலேயே அவர்களுக்கு விடை காண்போம்.

"தமிழக அறிவையும், தன்மானத்தையும் மீட்டெடுப்பதாக முழங்கிக் கொண்டு தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலிலிருந்து தலைமுழுகி விடுவதே அறிவுடைமை என்று திராவிட இயக்கத்தினர் பகுத்தறிவு பரப்புரையும் தன்மான பரப்புரையும் செய்தனர்" என்கிறது நாம் தமிழர் ஆவணம்.

தமிழை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று குடிஅரசு ஏட்டில் 4-9-1938லேயே கட்டுரை தீட்டப்பட்டிருக்கிறது.

"ஏ! சட்டசபைத் தமிழா! நீ சர்வ முட்டாள் அல்ல! தாய்நாட்டுக்குத் துரோகம் செய்யும் தறுதலையும் அல்ல! தாய் மொழியைக் கட்டாயமாக்கக் கூடாது என்று கருதித் திரியும் சண்டாளனுமல்ல!

நீ தமிழன். உன் தந்தை தமிழன். உன் தாய் தமிழ் மகள். உற்றார் தமிழர்; உறவினர் தமிழர். உனது முறுக்கேறிய நரம்புகளில் ஓடுவது வீரத் தமிழர் குருதி.

கட்டாய இந்தியால் உன் தமிழ் நாலாவகையிலும் நசுக்கப்படுகிறது. மொழிப் பாடங்களை மட்டும் தமிழில் கற்றால் தமிழ் விருத்தியாகிவிடும் என்று கருதி மயங்காதே! உன் தாயை உன் தமிழை இம்சிக்காமல் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று தீர்மானிப்பாயாக! இல்லையானால், தமிழைக் கட்டாயமாக்க வேண்டும் என்று முயலாமல் இருந்தாயானால், உன் நாட்டு மொழிக்கு துரோகியாவாய். உன் நாட்டின் கலைக்கு விரோதியாவாய்!

நீ மானமுள்ள தமிழனானால், உன் பெற்றோரின் தமிழ் இரத்தம் உன் உடலில் நரம்பில் தோய்ந்திருக்குமானால் இன்றே, ஏன் இப்பொழுதே எங்கள் நாட்டில் எங்கள் தாய் மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக. உங்கள் தமிழை கட்டாயாமாக்க முயற்சி செய்யாமல் இருப்பது உங்கள் தகுதிக்கு அடுக்குமா? நீங்கள் தன் உணர்ச்சி இல்லாத விலங்குகளா? தாய் மொழியில் அபிமானம் இல்லாத தசைப்பிண்டங்களா?.

தேசத்தின் பெயரையோ, சமூகத்தின் பெயரையோ சொல்லிச் சிறை சென்றவர் எல்லா நாட்டிலும் உண்டு. நீ விரும்பும் இந்தி பேசும் நாட்டிலும் உண்டு. தான் பேசும் மொழி குறித்து சிறை புகுந்த தீரம் தமிழனுக்கு உண்டு. தன் மொழிக்காக சிறை புகுந்தான்! புகுகிறான்! புகுவான்! தடியடி பட்டான்! படுகிறான்! படுவான்! சகல துன்பங்களையும் அனுபவிப்பான்! பேசும் தமிழைத் தாய் மொழியாக உடைய நீ, தாய் மொழியை கட்டாயமாக்கக் கூடாது என முயலும் துரோகியாகப் போகிறாயா?

போவாயானால் ஏ! துரோகி உன் சட்டசபை வாழ்விற்கு சாவு மணி அடிக்கப்பட்டதென்று எண்ணிக்கொள்”

என்று பெரியாரின் குடிஅரசில் கட்டுரை வெளிவந்துள்ளது. ஆனால் இவர்களோ, தமிழை வாழ்வியலிலிருந்து தலைமுழுகி விடுவதே அறிவுடைமை என்று திராவிட இயக்கத்தினர் பகுத்தறிவு பரப்புரை செய்ததாகக் கூறுகின்றனர்.

தமிழரை, தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ் திராவிடநாடு முழக்கத்தை திராவிட இயக்கம் முன்னெடுத்ததாக நாம் தமிழர் கட்சி ஆவணம் கூறுகிறது.

"எனக்கு ஏன் திராவிட நாடு வேண்டாம்?" என்று தந்தை பெரியார் அவர்கள் தனது 84-ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள்.

“1938-ம் ஆண்டு நான், ராஜாஜி ஆட்சி கொடுமையைக் கண்டு சென்னை ராஜதானி என்று பெயர் கொண்டிருந்த திராவிடநாடு தனி நாடாக ஆக வேண்டும் என்று கேட்டு திட்டம்போட்டு கிளர்ச்சி செய்து வந்தேன். அன்று பார்ப்பனர் தவிர்த்து யாரும் அதை எதிர்க்கவில்லை. அப்போது திராவிட நாடு என்பது ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய நாடுகளில் இருந்து ஒரு சிறு பாகமே தமிழ்நாட்டுடன் சேர்ந்து திராவிட நாடாக இருந்தது. தமிழ்நாட்டு மக்கள்தொகை இரண்டு கோடியே எண்பத்தைந்து இலட்சம் மற்ற மூன்றும் சேர்ந்து இரண்டு கோடியே எழுபத்தைந்து இலட்சம் தான். ஆகவே தமிழ்நாட்டு மக்கள்தொகை மேற்கண்ட மூன்று நாடுகளை விட அதிகமாக இருந்தது. அரசியல், சமுதாய, பொருளாதார நிலையில் இந்த நாடுகள் தமிழ்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதோடு நம் கை வலுத்ததாகவும் இருந்தது.

ஆனால் இன்று தமிழ்நாடு மக்கள்தொகை மூன்று கோடிக்கு கீழ்ப்பட்டதாகவும் அவை மூன்றும் சேர்ந்து சற்றேறக்குறைய எட்டுக்கோடி மக்களாகவும் இருக்கிறார்கள். நாம் அதில் பகுதிக்குக் கூட அருகதையற்றவர்களாக இருக்கிறோம். உலகில் பிரிவினைக்காரன் எவனும் பிரிந்த பின் விருப்பப்படி ஆட்சி அமைக்க, பதவி பெற வசதியாக, யாருக்கும் மைனாரிட்டியாக இல்லாமல் சுய பலத்தோடு இருக்க எண்ணுவானா? மைனாரிட்டியாக இருக்க எண்ணுவானா? எனவே தான் திராவிட நாடு வேண்டாம் என்று சொல்லுகிறோம்.

சட்ட சபையில் நாம் 206 பேர்; அவர்கள் 429 பேர் கூடுதலாக 635 பேர் இருக்கிறார்கள். பார்லிமென்ட்டில் நாம் 41 பேர்; அவர்கள் 46 பேர் அதிகப்படியாக 87 பேர் இருக்கிறார்கள். திராவிட நாடு பிரிந்தால் நமது குறைகளை, பங்குகளை யாரிடம் கேட்பது? எதற்கு பிரிவினை கேட்கிறோம்? இன்று நாம் மைனாரிட்டியாக இருந்து மற்றவர்கள் மெஜாரட்டி ஆட்சிப்படி நடக்க வேண்டியிருக்கிறது. பிரிந்தால் நமக்கு நாமே எஜமான். வேறு யாரும் கூடாது. நாம் யாருக்கும் அடிமையல்ல என்கிற நிலை பெறவே பிரிவினை கேட்கிறோம். பிரிவினையால் பலன் அனுபவிக்க வேண்டுமானால் திராவிட நாடு கேட்பது புத்திசாலித்தனமா? தமிழ்நாடு கேட்பது புத்திசாலித்தனமா? என்பதைப் பற்றி இப்போது யோசித்துப்பாருங்கள்” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார் பெரியார்.

இந்த வகையில் பெரியாரைப்பற்றி விமர்சிக்க இந்த காளான்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? நாம் தமிழர் கட்சி தனது கொள்கை ஆவணத்தில் கலைச்சொல் விளக்கம் என்ற பெயரில் "பார்ப்பான் என்றால் ஆய்வாளன், இளைஞன்" என்றும் "ஆரியர் என்றால் சீரியன், உயர்ந்தவன்” என்றும், "பிராமணன் என்றால் பேரமணன்” என்றும் கூறி பார்ப்பனர்களை மகிழ்விக்கத் துடிக்கிறது. ஆரியர் வருகை - மனுநெறியர் போன்ற மரியாதைக்குரிய சொல்லாடல்களையே பார்ப்பனர்களைக் குறிக்கும் இடத்திலெல்லாம் கையாண்டிருக்கும் இந்தக் கூட்டம் பார்ப்பனர்களின் கைக்கூலிகளே என்பது தமிழர்களுக்கு விளங்காமல் போகாது.

நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் தங்கள் வழிகாட்டியாகவும், தமிழ் அறிஞர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அறிஞர்கள் பெரியாரைப் பற்றி கூறிய கருத்துக்கள் இதோ:

மறைமலைஅடிகள்: சாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனை எதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவறிர் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை.

பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டை தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந் தவிர்வராயினர்.

தேவநேயப் பாவாணர்: எல்லா துறைகளிலும், பிராமணீயத்தை வெளிப்படையாகவும் உண்மையாகவும் எதிர்த்து, தமிழரைத் தன்மானமும், பகுத்தறிவும் உள்ள மக்களாக வாழவைத்த செயல் ஏனைய எவரும் செயற்கறிய செயலாதலின் பெரியார் உண்மையில் பெரியாரே!

சோமசுந்தர பாரதியார்: பெரியார் ராமசாமி அவர்கள் திராவிடருக்குப் பொதுவாயும், தமிழருக்கு சிறப்பாயும் உரிமையும், பெருமையும் உண்டுபண்ண உழைக்கும் பெருந்தலைவர். தற்காலத் தமிழகத்தில் தலைநின்று ஒல்லும்வகையில், ஓயாது உழைத்து, தமிழர் வாழ்வுயர் வளம் சிறக்க, உரிமைப்போர்த் தலையணியில், பொருது வரும் ஒப்புயர்வற்ற தலைவர். தம் வாழ்வனைத்தும் தமிழர் உரிமை பேணும் அறப்போருக்கு உதவி, நல்லோர் மதிக்கும் அல்லோர் அழுக்காறும் நாளும் பெருக்கும் இயல்புடையவர்.

கா.அப்பாதுரை: தமிழர் உண்மையிலேயே தமிழராய் தனித்தமிழராய் உலகில் பிறருடன் ஒப்புரிமைக்கொள்ள துணிவர்! தன்னாட்சி புரிவர்! அறிவாட்சியில் அன்புக் கலையாட்சியில் முனைவர்! என்பதற்கு பெரியார் வாழ்க்கையின் வெற்றி ஓர் அறிய வழிக்காட்டியும் நற்குறியுமாகும்.

கி.ஆ.பெ.விசுவநாதன்: இந்நாட்டில் தோன்றி மறைந்தும் தோன்றி இருப்பதும், இனி தோன்றுவதுமாகிய எத்தகைய இயக்கமும் செய்திராத செய்யமுடியாத சீர்திருத்தச் செயல்களை இந்நாட்டில் சுயமரியாதை இயக்கம் செய்து காட்டிவிட்டது. எவராலும் நினைக்கவே முடியாத இவ்வியக்கத்தை தோற்றுவித்து நடத்தி வெற்றி அடைந்த பெரியார் அவர்கட்கு நாடும் இம்மாகாணமும், இத்தேசமும் மட்டுமல்ல உலகமே ஒன்று சேர்ந்து நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.

இலக்குவனார்: பெரியார் தலைமையில் நமது நாடு, திராவிட நல்திருநாடு விடுதலை பெற்று உலக அரங்கில் உயர் பெருமை அடைவது உறுதி.

புலவர் குழந்தை: பெரியார் பிறவாதிருப்பாரேல் தமிழர், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழாட்சி, தமிழினம், தமிழ்நாகரிகம் எனும் உணர்ச்சியெல்லாம் தமிழ்மக்களுக்கு தோன்றியிரா. தமிழ் வாழ்க என முழக்கமிடும் நெஞ்சத் துணிவு கூட ஒரு காலும் உண்டாகியிருக்காது. பெரியார் பிறந்ததால் தமிழருக்கு உண்டான நன்மைகள் அளவிறந்தன. அவற்றையெல்லாம் கூறப்புகின் அது தனி நூலாகிவிடும். 1920 தமி்ழ்நாடு இருந்த நிலையும் இன்றுள்ள (1948) நிலையும் ஒத்திட்டுப் பார்த்தால் பெரியார் பிறந்ததினால் தமிழ்நாடு அடைந்த பயன் முழுதும் விளங்கும்.

இவ்வளவு நன்மைகள் செய்த பெரியாருக்கு தமிழர்கள் செய்யும் கைம்மாறு என்ன? தமிழர் உரிமை காக்க புதிதாக புறப்பட்டிருக்கும் சீமான்களே! உங்கள் வழிகாட்டிகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்!!

- கி.தளபதிராஜ்

Comments

14 comments

14
பெரியார் குயில்
தளபதி ராஜ் அற்புதமான பதிவு! வாழ்த்துக்கள்!!
சீமான் அவர்களுக்கு நன்னன் எழுதிய பெரியார் சிந்தனைகள் -மொழி என்ற தலைப்பில் உள்ள நுாலை அனுப்பியிருந்தேன். அது 1978 வாக்கில் வெளியானது என நினைக்கிறேன். அதே போல் யாழ் பேரா.கா.சிவத்தம்பி எழுதிய திராவிட அரசியல் குறித்த மார்க்சிய காண்ணோட்டம் நுாலையும் அனுப்பியிருந்தேன். இது அவருடைய பார்வையை விவரிபடுத்தும் என்ற உண்மையான எண்ணத்தோடு என்னால் அனுப்பப்பட்டது. ஆனால், அந்தோ பரிதாபம்! பெரியாரை விமர்சித்து, கடும் விமர்சனத்துக்குள் ஆளாகி இருக்கிறார்! (நடிகர்)மணிவண்ணன் அய்யா நாம் தமிழர் கொள்கை ஆவணத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி உள்ளதாக கேள்வி! நடக்கட்டும்! சீமான்., ஸ்ரீமான் ஆகாமல் இருந்தால் சரி! நல்ல தலைவராக வரவேண்டியவர் இப்படி பழிச்சொல்லுக்கு ஆளாகி இருப்பது குறித்து தமிழகமே வருந்துகிறது! அவரை நம்பி வந்துள்ள இளைஞர்கள் குழப்ப நிலையில் தென்படுகின்றனர்.

பிஜேபி-யே பெரியாரை விட்டால் வேறுவழியில்லை போல் இருக்ிறது என்ற நிலையில் இருக்கும்போது, சீமானுக்கு இது தேவையா...!?

ஜாதி அரசியலுக்கும், தமிழ்தேசிய அரசியலுக்கும் உள்ள ஆழ்ந்த வேறுபாட்டை புதிய நோக்கில் சிந்திக்க சீமான் முன் வரவேண்டும்!
tamizhruvi kovai
அயயா இந்த பதிவு என்னை போன்ற பெரியாரிய சிந்த்னையுள்ள மனிதர்களூ மிகவும் பயனுளளா நலல கட்டுரை ' வாழ்துகக்ள் ' அண்ண்ன் சிமான் போன்ற நல்ல தமிழ் உண்ர்வாள்ர்கள் இப்படி ஒரு ஆவண்தை வெளீயிட்டுப்பது வேத்னை அளீக்கிற்து வாழ்க தமிழ்ர் ஒற்றூமை
feroz khan
சிவசேனா மற்றும் பி.ஜே.பி.போன்ற ஹிந்துத்துவ இயக்கங்களுடன் நெருக்கம் பாராட்டுபவர் சீமான். சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை பெரிதும் மதிப்பவர் சீமான். அதனால் உள்ளூர ஹிந்துத்துவ சிந்தனை கொண்டவர் சீமான் என்றெல்லாம் சில முக்கிய எழுத்தாளர்களும்,பத்திரிகையாளர்களும் என்னிடத்தில் கருத்து சொன்னபோது நான் மறுத்தேன்.மறுத்ததோடு மட்டுமல்லாமல் அண்ணன் சீமானிடம் ஒரு முறை பத்திரிக்கைக்காக பேட்டி கண்டபோது,பேட்டி முடிந்த பின் ஆப் தி ரெக்கார்டாக அவர் மீதான விமர்சனம் குறித்து நேரடியாக கேட்டேன்.சற்றே கோபத்தை வெளிப்படுத்திய அண்ணன் சீமான்,தம்பி என்னை ஹிந்துத்துவாவின் கைக்கூலி என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட போது குரல் கொடுத்தவன் என்றெல்லாம் என்னிடம் விளக்கம் அளித்தார் அண்ணன் சீமான். ஆனால் அண்ணன் சீமான் வெளியிட்டிருக்கும் ஆவணம் அவர் மீதான விமர்சனத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
.பெரியார் சொல்வார்.பாம்பையும்,பார்ப்பானையும் ஒரு சேரக் கண்டால் பாம்பை விட்டு விட்டு பார்ப்பானை அடி என்று!
தமிழர்கள் ஒரு அளவுகோலை தெரிந்து கொள்ளவேண்டும்.பெரியாரை எதிர்ப்பவர்கள்,தமிழின அடையாளத்தில் இருந்தாலும் அவர் தமிழின விரோதியே..
இதுவே நற்றமிழனை அடையாளம் காட்டும் அளவுகோல்
தமிழ் மணி
இதுதான் தமிழ்நாடு! இவந்தான் தமிழன்!

இதுதான் தமிழ்நாடு; இவந்தான் தமிழன்!
என்றென்றைக்கும் இவன் மாறான்!
எறும்பு முன்னேறி யானையை வீழ்த்தும்;
ஏணி வைத்து ஏற்றினாலும் இவன் ஏறான்!
வெதுவெதுப்பாக வெற்றுரை பேசுவான்; வினை காணான்!
வீணரைப் புகழ்வான்;கால்களில் வீழ்வான்;
வெறுங்கை வீசுவான்;பழிக்கு வெட்கப்படான்!

எண்ணிக் கொள்ளுங்கள்;இவந்தான் தமிழன்!
எவர் உணர்ந்தாலும் இவன் உணரான்!
எத்தனை நூறாயிரம் ஆண்டுகள்
ஆயினும் விரற்கடை அளவு இவன் வளரான்!
பண்ணிக்கொள்ளுங்கள்,மனதினில் உறுதி!
பல்லிளிப்புக்கும் வழி நிற்பான்!
பாசம் பிடித்து மொழுக்கெனத் தேய்ந்த ஒரு
பழங்காசுக்கும் தன்னை விற்பான்!

எண்ணிக் கொள்ளுங்கள்;இவந்தான் தமிழன்!
எந்த நாட்டிலும் இவன் கிடப்பான்!
எச்சில் உணவுக்கும் கழி கந்தலுக்கும்
எவன் பின்னாலும் இவன் நடப்பான்!
புழுதியில் கிடப்பான்,இழிவை நினையான்!
பொய்மைக்கும் போலிக்கும் விலை தருவான்!
புதுமைகள் பூக்கும்; புரட்சிகள் மலரும்;
புது வாழ்வு அமைத்துக் கொள்ள இவன் விரும்பான்!
இவந்தான் தமிழன்!
தமிழனைப் பற்றி இவ்வளவு சரியாக
சொன்ன இவர் யார்? தெரிந்து கொள்ளுங்கள் .

இதற்கு மேல் புதிதாக நான் என்ன சொல்ல?
வண்டாரியான்
"ஏ! சட்டசபைத் தமிழா! நீ சர்வ முட்டாள் அல்ல! தாய்நாட்டுக்குத் துரோகம் செய்யும் தறுதலையும் அல்ல! தாய் மொழியைக் கட்டாயமாக்கக் கூடாது என்று கருதித் திரியும் சண்டாளனுமல்ல!

நீ தமிழன். உன் தந்தை தமிழன். உன் தாய் தமிழ் மகள். உற்றார் தமிழர்; உறவினர் தமிழர். உனது முறுக்கேறிய நரம்புகளில் ஓடுவது வீரத் தமிழர் குருதி.

மேற்கண்டவைகள்:- குடியரசு பெரியார்

ஆனால்,தமிழா நீ "திராவிடன்",உன் இனம் "திராவிட இனம்",.உன் மொழி "திராவிட மொழி",.உன் நாடு "திராவிட நாடு".,உன் "உறவுகள் திராவிடர்கள்".,தமிழா உன்னை முன்னேற்ற "திராவிட முன்னேற்றக் கழகங்கள்"........ சந்தேகப்படாதீர்கள் பெரியார் தமிழனுக்கான போராளிதான் {நம்புங்கள்}

வீட்டில் தமிழ் பேசாதீர்கள். வீதியில் தமிழ் பேசாதீர்கள்,வீட்டு வேலைக்காரியிடம் கூட தமிழ் பேசாதீர்கள் ,,ஏன் சொல்கிறேன் என்றால் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி ,தமிழுக்கும் அறிவியலுக்கும் ரெம்பத் தூரம் எனவே ஆங்கிலத்தையே பேசு ஆங்கிலத்திலேயே உன் நடைமுறைகளை மாற்றிக்ககொள்.... பெரியார் _தமிழும் தமிழரும். {நாங்களும் உதாரணம் சொல்லுவோம்}

விளைவு: தமிழ் நாட்டிலும் ,தமிழன் நாக்கிலும் தமிழை கேட்பது அறிதாகிக்கொண்டிருக்கிறது!

தமிழர் நாமெல்லாம் நாம் தமிழர் என்ற உணர்வற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நம் கண் முன்னே, 565 மீனவர்கள் கொன்றழிக்கப்பட்டு ,1 1/2 தமிழர்கள் கொன்றழிக்கப்பட்ட பிறகும் ஒன்றிணைய மறுக்கும் இன உணர்வை மறந்த தமிழர்களை நீ தமிழன் என்று உணர்த்த "நாம் தமிழர்" என்று கட்சி நத்த வேண்டிய அவலம் யாரால் வந்தது?
seemon
மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான், பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக் கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான், இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார். அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!
(from http://www.vinavu.com/2009/12/16/pseudo-secular-casteist-seeman/)
சம்பூகன்
மிக நல்ல பதிலடி.பெரியார் ஒரு திறந்த புத்தகம்.அவரை முழுமையாக அறியாத அரைவேக்காடுகள் இப்படித்தான் எழுதும்,பேசும்.என்ன செய்ய ?தமிழன் என்றோர் இனமுண்டு;தனியே அதற்கோர் குணமுண்டு.சீமானுக்கு இனி பார்ப்பன இதழ்களின் ஆதரவும் விளம்பரமும் பெருவாரியாகக் கிடைக்கும்.கலிகி,குமுதம் ரிப்போர்ட்டர்,ஆனந்த விகடன்,தமிழக அரசியல் உள்ளிட்ட இதழ்களில் பேட்டிகள் வந்துவிட்டன.தினமலர்,தினமணி,துக்ளக்க்கில் பேட்டிகள் செய்திகள் இன்னும் சில நாட்களிலேயே வரலாம்.பெரியார் மறைவதற்கு சில காலம் முன் ஒன்று சொன்னார்.`விபீஷ்ணத்தமிழா...நீ மட்டும் என்னைக் காட்டிக் கொடுக்காமல் இரு.பார்ப்பானை சித்திரத்தில் கூட இல்லாமல் செய்துவிடுகிறேன்’என்றார்.பார்ப்பானுக்குக் காட்டிக் கொடுக்கும் சீமான்கள் இருக்கிறார்களே...அவதூறுகளையே தூள் தூளாக்கி வந்தவர் தலைவர் தந்தை பெரியார்.இந்தப் புதிய ம.பொ.சி.களை புறந்தள்ளுவோம்.
ilangomanivannan
தோழர் தளபதி ராஜ் அவர்களின் சிறந்த வாதங்களை கொண்டு படைக்க்பட்டுள்ள கட்டுரை.தொடரட்டடும் பதிலடி.
இலக்கிய வாசகன்
வாழ்த்துக்கள் தளபதி ராஜ் இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்! பார்பன்களிடம் இருந்து ''விடுதலை'' பெற்றுத் தந்த பெரியார் பற்றி மிகவும் சரியான எடுத்துக் காட்டுக்களோடு விளக்கியுள்ளீர்கள்! ஆனால் அவர் முன்வைத்த திராவிடம் என்கிற விடத்தால் வந்து சூழ்ந்துள்ள கேடு பற்றி ஒரு வரி ௯ட எழுதலியே ஏன்? பார்ப்பானை எதிர்க்கிறோம் என்றும் தமிழன் என்றால் பார்ப்பான் தமிழ் பேசுகிறான் அவனும்வந்துவிடுவான் என்று திராவிடன் என்று ஒரு கருத்தியலை முன்வைத்த பெரியார் தமிழ்த்தேசியத்தை தனியே நிலைநிறுத்துவதற்காக திராவிடத் தமிழர் என்றோ தமிழ்த்திராவிடர் என்றோ தமிழ்த் தேசியத்தை வலுவானதாக முன்னிறுத்தியிருந்தால் உண்மையில் இராமேஸ்வரத்தில் 500 க்கும் மேல் மீனவனும் இறந்திருக்க மாட்டான் ஈழத்தில் இலட்சக்கணக்கான மக்கள் இறந்தும் இருக்க மாட்டார்கள்! ஆனால் திராவிடத் தமிழர்கள் என்றோ தமிழ்த்திராவிடர் என்றோ ஒரு கருத்தியலை கொணர்ந்திருந்தால் தானும் வெளியேறவேண்டி வருமே என்கிற சுயநலமா? இல்லை பின்வருபவர்கள் தேவைகேற்ப புதிய கருத்தியலை உருவாக்குவார்கள் என்கிற எண்ணமா? என்பதை விளக்க வேண்டும்! அத்தோடு முன்னையது சரி என்றால் திராவிடக்கட்சிகளை விமர்சிக்கக் ௯டாது பின்னையது சரி என்றால் பெரியாரை விமர்சிக்கக் ௯டாது! ஆனால் இரண்டில் எதை விமர்சித்தாலும் பெரியாரை மெதுவாகத் தூக்கிக் கொழுவிவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது அயோக்கிய அரசியல்! நேர்மையாக விடயங்களை அணுகுங்கள் என்பதே நான் உங்கள் பலரிடம் கேட்டுக்கொள்வது! -நன்றி!
anbu
thiravida inathin yeluchi thee periyaaraal thoodappattathu avarodae attheeyum alinthu vittathuthaan kavalayae!! Periyaar variyil bathil sollum neengal indru periyaar irunthirunthaal avar peyarai solli aatchikku vantha kalaingar than kudumba nalanukkaai eezhathai adaguvathathai, avarai neripaduthaathu aatharikkum thi.ka. Thalaivara ke.veeramaniyai pool Periyaar irunthirupaara?? Thamizhan aazhvaanae aanal thiravida naadu adimai paduvanaeyanaal thani thamizh naadu yendraar.. Indru thiravidar yenapadum malaiyali-yum kannadanum thamizhanukku thanni thara marukkindraan.. Avan thiravidan naamum thiravidan yendraal nam inam eezhathil kollappadum poothu yean yevanum kural kodukkavillai?? Malayali indru yean sri lanka udan kootu seraveandum.. Uthavikki illatha ubathirathirkku mattum payanpadum thiravida bantham yetharkku?? Thiravida inathin thaai Thamizh yendra unmaiyai muthal yerpaana?? Avanavanukku than mozhi perithu!! Eezha poorai mudivirkku koduvara thiravida katchigal munedutha valigal yenna?? Thiravidar kalagam yenna seithathu?? Thiravidar munetra kalagam yenna seithathu??(poorattathai malungaditthathu) anna thiravidar kalagam yenna seithathu(kulirkaainthathu aariya penn) thamizharkku thamizhukku yetharkkum payanattra intha thiravidam yetharkku?? Periyarai avamathithathai andri avaril oru pizhaiyum illai!! Indru periyar irunthirunthaal thiravida katchigalaiyum thiravidathayum yethirthiruppaar!!
angu
நன்று தொடர்க
kattabommu
"தமிழை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று குடிஅரசு ஏட்டில் 4௯௧938லேயே கட்டுரை தீட்டப்பட்டிருக்கிறது."

அது 1938 இல். ஆனால் 1965 இந்தி எதிர்ப்புப்போரை பெரியார் எவ்வாறு பார்த்தார்? 'காலித்தனம்' என்றுதானே சொன்னார்? 1970 இல் கலைஞர் அரசு கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வியை அமல்படுத்தியதை 'முட்டாள்தனம்' எனச் சொல்லவில்லையா? பெரியாரின் திக நடத்திவரும் பள்ளிகள் தமிழையா வளர்க்கின்றன? மெட்ரிகுலேசன்கள்தானே? பெரியாரின் பேரப்பிள்ளைகள் (அதாவது பெரியார் பிஞ்சுகள்) தமிழ்வழியிலா படிக்கின்றன? பெரியார் 1938க்குப் பின்னர் 35 ஆண்டுகள் வாழ்ந்தவர்தானே? 'வீட்டிலும் ஆங்கிலத்தில் பேசுங்கள்' 'ஆங்கிலேயர் போல உடுத்துங்கள்; உண்ணுங்கள்; கையால் சாப்பிடுவதை நிறுத்துங்கள்'..'ஆட்சி மொழி மட்டுமல்ல போதனா மொழியும் ஆங்கிலமே இருக்க வேண்டும்'..இதெல்லாம் எதற்கு என்று கேட்டால் 'ஆங்கிலத்தில் மூடநம்பிக்கை நூல் இல்லை..ஆங்கிலம் சமத்துவ பாசை (நீங்கள், நீ கிடையாது..யூ ஒன்றுதான் என்ற 'இமாலய' கண்டுபிடிப்பு..தமிழில் திட்டினால் கூட அம்மா,அக்காவை வையுறான்..ஆனால் ஆங்கிலத்தில் 'ஃபூல்','ஸ்டுபிட்' மட்டும்தான்..னு காமெடி பீசாக பேசினது...இதெல்லாம் பெரியார் செய்த சாதனைகள் இல்லையா? கட்டுரையாளர் இவற்றையும் கணக்கில் எடுத்துப் பேச வேண்டும்.
K.DHALAPATHIRAJ
காமராஜர் ஆட்சிக்கு (பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தாலும் அது காமராஜர் ஆட்சி என்றுதான் அப்போது கருதப்பட்டது)எதிராக பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபட்டன. "தோழர்களே பெட்ரோலும், தீப்பந்தமும் வைத்துகொள்ளுங்கள்! நாள் குறிக்கும்போது அக்கிரஹாரம் தீக்கிரையாகட்டும்!" என்று அறிக்கை விடுத்தார் பெரியார்!. தலைவிரித்தாடிய பார்ப்பனக்கூடாரம் சுருட்டி போர்த்தி சுருங்கியது!. அதுவரை கட்டுக்கடங்காது போய்கொண்டிருந்த கலவரம் அடுத்த ஓரிரு நாட்களிலேயே ஓய்ந்து போன ரகசியம் புரிந்தால், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் காம்ராஜர் ஆட்சியை அகற்றுவதற்காக பார்ப்பனர்களால் திசைதிருப்பப்பட்ட வரலாறு புரிந்துபோகும்!
sankar
kandi nayakkar dvd you tube la paarunga appuram mr seemaanai patti pesunga

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.