சதைப் பிண்டம் 

பாதி அறுக்கப்பட்டு 

ஓடி அழுது 

விறைத்துப் போன 

சிறுமி 

தகரத்தட்டில் 

பாதியாய்க் கிடக்கும் 

உடல்கள் 

இரத்த வாசனையை 

அள்ளித் தெளித்த 

தெருக்கள் 

வயிறு முட்ட குமட்டல்கள் 

தலை விரித்துச் 

சாப்பிட்டும் 

பசி அடங்காத நிலமகள் 

எதையோ தேடி 

ஏமாந்த 

மக்கிய கைகள் 

மன்னர் ஆட்சி முதல்  

மக்கள் ஆட்சி வரை 

விடியாத பகலும்  

கடக்க முடியாத இரவும் 

இயற்கை அழுது 

இறந்து போனது 

மனித உடல்கள் 

அடுக்கப்பட்ட  

சீனப்பெருஞ்சுவராய் 

புத்தனின் 

புனித பூமி 

கன்னம்

 

ஒழுங்கற்ற ஒழுங்குகள் 

கற்கனைகளும் 

நிகழ்கால பிரக்ஞைகளும் 

பிறர் பரிகசித்து 

பரிசுத்தம் பெற்ற 

புண்ணிய ஆத்மாக்களில் 

எனதுயிரும் ஒன்றே 

தீர்ந்து போகாத வாழ்தடங்களில் 

நீர்த்துப் போன நினைவுகள் 

குழிகளில் புள்ளியாய் 

பதிவுபெற்ற மகிழ்வுகள் 

வெள்ளைத் தாளில்  

நிரப்பப்பட்ட  

கறுப்பு எழுத்துக்கள் 

எனது உறவுகளாய் 

நீண்ட சண்டையும் 

நிம்மதியான முத்தங்களும் 

அவைகளே 

எனக்குத் தந்த 

யாரும் தொடாத என் 

கன்னங்களுக்கு 

- மரகதமணி

Pin It