கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- த.அருண்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
CBM எனப்படும் நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு திட்டத்தினால் நிறைய நாடுகள் பாதிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் மக்கள் போரட்டங்கள் இதை தடை செய்யக்கோரி முழுவீச்சுடன் நடந்து வருகின்றன. இந்தக் காலத்தின் இளைஞர்களுக்கு எல்லா வகையிலும் கனவு தேசமாக இருக்கும் அமெரிக்காவிலேயே பெருமளவு விதி மீறல்களும் மற்றும் பாதிப்புகளும் நடந்திருக்கின்றன. பணம் ஒன்றே குறியாக இருக்கும் இந்த எரிவாயு நிறுவனங்களுக்கு தேசம், மக்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. எல்லா தேசத்திலும் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த கட்டுரை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெறும் CBM மீத்தேன் எரிவாயு நிறுவனங்களால் அங்குள்ள மக்கள் அடைந்த துயரங்கள், தீமைகள், ஆபத்துக்கள் என்றே நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் அமெரிக்காவை உதாரணமாக கொள்ளும் நம் மக்கள் அங்கு நடக்கும் CBM என்னும் தீமை மிகும் திடத்தையும் பார்த்து இதன் தீமைகளை உணர வேண்டும்!
"Hydraulic Fracturing" அல்லது "Fracking" என்று அழைக்கப் படும் இந்த நவீன தொழில்நுட்பத்தை பற்றி விரிவாக அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். ஏனென்னில் இந்த முறையில் தான் தஞ்சையில் மீத்தேன் எரிவாயு எடுக்கப் பட இருகின்றது.
பூமியில் மிக ஆழத்தில் அழுத்தங்கள் மிக அதிகமாக இருக்கும். சில இடங்களில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட பாறைகளும் இருக்கும் (கிலோ மீட்டர் நீள, அகலம் கொண்ட பாறைகள்) சில இடங்களில் உள்ள மணல் பரப்பானது நீர் கூட புகமுடியாத தன்மை கொண்டதாக மிகுந்த இறுக்கத்தில் இருக்கும். இவை எல்லாமுமே மிக ஆழத்தில் என்று நினைவு கொள்ளுங்கள். (ஏறத்தாழ 8, 000 மீட்டர் முதல் 10, 000 மீட்டர் வரை) இப்படிப்பட்ட இடத்தில உருவாகும் இயற்கை எரிவாயு பாறைகளிலும், மணல் பரப்புகளிலும் ஊடுருவ இயலாமல் வெளிப்பட வழி இல்லாமல் அங்கேயே தங்கி விடுகின்றன. அத்தகைய இயற்கை எரிவாயுவின் சிறிய சிறிய அளவுகளை சேகரித்து முழுமையாக கொண்டுவர இந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்டறிந்ததே இந்த Hydraulic Fracturing என்று அழைக்கப் படும் "நீரியல் விரிசல்" முறை.
இதன் படி பூமியை 10, 000 மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலுமான ஆழத்தில் துளையிட்டு அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலும் எல்லா திசைகளிலும் பக்கவாட்டு துளை (bore) போடப்படும். பின்பு பூமிக்கு மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் தேர்வு செய்யப்பட்ட வேதி நுண் துகள்களை (Proppants) கலந்த நீர் மிகுந்த அழுத்தத்தில் செலுத்தப் படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டு துளைகளில் செல்லும் நீரானது அந்த துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே சிறைபட்ட, வழி இல்லாமல் உள்ளேயே அடைபட்டு கிடந்த மீத்தேன் எரிவாயுவின் சிறிய பகுதிகள் ஒன்றோடு ஒன்று கலந்து நீரில் ஒன்றாக கலந்து விடுகின்றன. அவ்வாறு கலந்த நீரை மீண்டும் உறிஞ்சி பூமியின் மேல்பரப்பிற்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்தகரிக்கப்பட்டு எஞ்சிய கழிவு நீர் "நீராவி மூலம் ஆவியாகப்படும் குட்டைகளுக்கு "(Evaporation pond's) எடுத்துசெல்லப்படும். பெரும்பான்மையான இடங்களில் அவை நீர் நிலைகளில் கலந்து விடப்படும். இதுவே (Hydraulic Fracking) என்று அழைக்கப்படும் செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி அதன் மூலமாக மீத்தேன் எரிவாயு சேகரிக்கும் முறை.
இதில் என்ன தீமை என்று நினைகிறீர்களா? பொறுங்கள் இதன் முறைகளை பகுதி பகுதியாக பார்க்கலாம். மிக பெரிய தீமைகளை 9 வகைகளாக பிரிக்கலாம். அவற்றைப் பற்றி சொல்லும் முன்...
ஒரு இடத்தைக் கண்டறிந்து அதன் சுற்றுப்புறங்களில் அருகருகே துளையிட்டு (well bore) எரிவாயு எடுப்பது பழைய முறை. நவீன தொழில் நுட்பத்தில் 10 கிலோ மீட்டர்களுக்கு ஒரே ஒரு மிகப்பெரிய துளையிட்டு அதன் அடிமட்டத்தில் இருந்து அதன் எல்லா கோணங்களிலும் பக்கவாட்டில் ஏராளமான துளைகளை வெவ்வேறு மட்டங்களில் ஏற்ப்படுத்தி அதன் மூலம் மீத்தேன் எரிவாயு எடுப்பது புதிய சர்சைகளுக்கு உள்ளாகும் முறை. இதுவே தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரப்போகும் ஆபத்து.
ஒரு கிணறு அமையும் இடத்தை சுத்தப்படுத்த 5 நாட்களும், அந்த இடத்தில துளையிட்டு கிணறு அமைக்க 50இல் இருந்து 100 நாட்களும். ஒரு முறை நீரியல் விரிசல் முறையை செயல் படுத்த 2இல் இருந்து 5 நாட்களும் ஆகும். இவ்வாறு அமைக்கும் எரிவாயு கிணற்றில் இருந்து 20 வருடங்களில் இருந்து 40 வருடங்கள் வரை மீத்தேன் எரிவாயு எடுக்கலாம்.
ஒரு கிணற்றுக்கு குறைந்தபட்சம் 400 டேங்கர் லாரிகள் நீர் எடுத்து வருவதற்கும் கழிவு நீரை எடுத்து செல்வதற்கும் தேவைப்படும்.
ஒரு முறை நீரியல் விரிசல் செயல்முறைக்கு 5,66,33,693 லிட்டர் நீர் தேவைப்படும். இந்த நீரில் மணல் மற்றும் வேதிப் பொருட்களை கலந்து (fracking fluid) நீரியல் விரிசலுக்கென்றே பிரத்தியேகமான கரைசல் திரவத்தை தயாரிப்பார்கள். குறைந்த பட்சம் 40,000 கேலன் அதாவது 1,51,416 லிட்டர் நீர் தேவைப்படும் அந்த வேதி பொருட்கள் கலந்த திரவத்தை ஒரு முறை தயாரிக்க.
இந்த பிரத்தியேக வேதிபொருட்கள் கலந்த திரவத்தை தயாரிக்க கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட வேதி பொருட்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. ஈயம் (LEAD), பாதரசம் (MERCURY), உரேனியம் (URANIUM), ரேடியம்(RADIUM), மெத்தனால் (METHANOL), ஹைடரோ குளோரிக் அமிலம் (HYDROCHLORIC ACID), பார்மால்டிஹைட் (FORMALDEHYDE) ஆகியவை குறிப்பிட தகுந்தவை. இன்றுவரை எந்தெந்த வேதியியல் தனிமங்கள் மற்றும் பொருட்கள் கலந்துள்ளன என்ற விவரங்களை எரிவாயு நிறுவனங்கள் தந்ததே இல்லை. இந்த திரவத்தில் கதிரியக்கத்தை தூண்டக் கூடிய ரேடியம் 226 என்ற தனிமம் கலக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் எரிவாயு கிணறுகளில் அருகில் ஓடிய நீரோடையில் இதன் தாக்கம் அறியப்பட்டது.
மேலும் இந்த நீர்ம வேதி கரைசலில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எளிதில் ஆவியாகக்கூடிய மற்றும் விரைவாக வேதி வினை புரியக்கூடிய வேதி பொருட்களான பென்சீன் (Benzene), டொலுயீன்(Toluene), எத்தில் பென்சீன் (Ethylbenzene), சைலீன்ஸ் (Xylenes). இதில் பென்சீன் என்பது புற்றுநோயை உருவாக்கும் முக்கியமான காரணி. இந்த வேதி கரைசல்கள் BTEX என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இந்த BTEX கலந்து மீத்தேன் எரிவாயு எடுப்பது என்பது தற்போது ஆஸ்திரலியாவில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நீரியல் விரிசல் செயல்படுத்தப்பட்ட கிணறுகளில் அதன் அருகில் உள்ள நீர் ஆதாரங்களின் மூலம் இந்த வேதி பொருள் கலந்த திரவம் உறிஞ்சப்பட்டு மக்கள் உபயோகப் படுத்தக்கூடிய நீர் நிலைகளில் கலந்தது. பின்பு எடுத்த ஆய்வுகள் மக்கள் எரிவாயு கிணறுகள் இல்லாத இடங்களில் பயன்படுத்தும் நீர் நிலைகளில் இருந்து 17 மடங்கு அதிகமான மீத்தேன் எரிவாயு கிணறுகளின் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தோல், சுவாசம் மற்றும் நரம்பியல் நோய்கள் அதிகமாக தாக்கியதற்கான 1000க்கும் அதிகமான ஆதாரங்கள் அங்கு திரட்டப்பட்டன. ரேடியம் 226 என்ற கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் தனிமத்தால் புற்றுநோயும் மக்களை தாக்கியது தெரியவந்தது.
நீரியல் விரிசல் செயல்படுத்திய பின்பு 30% விழுக்காடு வேதி திரவம் மட்டும்தான் அதிகப்படியாக மீண்டும் உரிஞ்சப் படுகின்றன. மீதி விழுக்காடு வேதி பொருட்கள் கலந்த திரவம் அதே கிணற்றிலேயே தேக்கிவைக்கப் படுகின்றன. உயிர்வேதி நொதித்தல் மற்றும் உயிர் வேதியியல் முறையில் அவற்றின் தாக்கத்தை குறைக்க முடியாது. இது மிகப் பெரிய அச்சுறுத்தல்.
அமெரிக்காவின் வடக்கு பென்சில்வேனியாவில் இருக்கும் மீத்தேன் எரிவாயு கிணறுகளின் அருகில் உள்ள வீடுகளின் நீர் எடுக்கும் போர்களில் அனுமதிக்கப்பட அளவான 7 mg மில்லி கிராமில் இருந்து 28 mg மில்லி கிராம் என்ற அளவையும் தாண்டி 64 mg மில்லி கிராம் அளவு மீத்தேன் கலந்து வந்தது தெரிய வந்தது.
# நீரின் தேவை - 2010இல் அமெரிக்காவின் சுற்றுசூழல் பாதுகாப்பு துறை எடுத்த ஆய்வுகளின் படி 70லிருந்து 140 பில்லியன் கேலன் தண்ணீர் (1 கேலன் என்பது 3. 78 லிட்டர்) அமெரிக்காவின் 35,000திற்கும் மேற்ப்பட்ட எரிவாயு கிணறுகளின் நீரியல் விரிசலுக்கு உபயோகப் படுத்தப்பட்டிருகின்றது. இது 50,000 மக்கள் தொகை கொண்ட 40லிருந்து 80 நகரங்கள் வரை உபயோகிக்கும் மொத்த நீரின் அளவிற்கு ஒப்பானது. நிலக்கரி படுகையில் இருந்து மீத்தேன் எடுக்கும் ஒவ்வொரு எரிவாயு கிணறுகளுக்கும் 50,000 கேலன் அளவில் இருந்து 3,50,000 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்தியிருப்பது தெரிய வந்தது. இதுவே இங்கு தஞ்சையில் வரப்போகும் திட்டம். கடினப் பாறைகளில் இருந்து மீத்தேன் எடுக்கும் நீரியல் விரிசல் முறைகளுக்காக ஒவ்வொரு எரிவாயு கிணறுகளும் 2இல் இருந்து 10மில்லியன் கேலன் அளவில் தண்ணீரை உபயோகித்து இருக்கின்றன.
இன்னும் நமது விளக்கங்களுக்காக கணக்கிட்டால் ஆண்டிற்கு 18 TMC தண்ணீரை அவர்கள் செலவழித்து இருக்கிறார்கள். ஒரு கிணறு ஒரு முறை நீரியல் விரிசல்களுக்கு 5,66,33,693 லிட்டர் தண்ணீர் செலவழித்து இருக்கிறார்கள். இது 1 TMCயில். 19% என்பதே இதன் அபாயத்தை தெரிவிக்கும். தஞ்சையில் தான் காவிரி இருக்கின்றதே அவர்களுக்கு வேறு என்ன கவலை! விவசாயத்தை தொலைத்துக்கட்டி விட்டால் நீர் எடுப்பது அரசுக்கு இன்னும் சுலபம். கூடங்குளத்திற்கு நீர் எடுக்கும் ஆதாரமாக பேச்சிப்பாறை அணையை காட்டியது போல் காவிரியை இந்த திட்டத்திற்கு உபயோகிப்பார்கள்.
400 தண்ணீர் டேங்கர் லாரிகள் சுத்தமான மற்றும் கழிவு நீரினை சுமந்து கொண்டு வந்தும் சென்ற வண்ணமும் இருந்தால் அந்த சாலை என்ன ஆகும்? நன்னீர் நிலைகளை அசுத்தமாக்குவதும் அதில் வாழும் உயிரினங்கள் இறக்க நேரிடுவதும் நிகழும்.
CBM நிலக்கரி படுகைகளில் இருந்து மீத்தேன் வாயு எடுக்கும் முறையின் விளைவுகள் மற்றும் அதன் மிக பெரிய தீமைகளை 9 வகைகளாக பிரிக்கலாம். அவை
# மணல் மற்றும் வேதி பொருட்கள் தேவை: வழக்கமான முறையில் எடுக்கப்படும் எரிவாயு கிணறுகளுக்கும் நீரியல் விரிசல் முறையின் மூலம் எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு கிணறுகளுக்கும் மணல் மற்றும் அதனை ஒத்த சிறுபொருட்கள் வேதி திரவத்தில் கலக்க தேவை படுகிறது. இதை (Proppants) சிறுதிண்மங்கள் என்று பொருள் கொள்ளலாம். இந்த சிறுதின்மங்களாக சிலிக்கா கலந்த மணல்துகள்கள், பசையால் மேற்பூச்சு பூசப்பெற்ற மணல், செராமிக் துகள்கள், மேலும் பசையால் பூசப்பெற்ற செராமிக் துகள்களும் பயன் படுத்தப்படுகின்றன.
வழக்கமான முறையில் எடுக்கப்பெறும் எரிவாயு கிணறுகளுக்கு 35, 000 பவுண்டு எடையுள்ள அதாவது 13,607 கிலோ (13. 5 டன்) அளவுள்ள மணல் தேவைபடுகிறது. நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் கிணறுகளுக்கு குறைந்த பட்சம் 75,000 பவுண்டுகள் (34,019 கிலோ/ 34 டன்) அதிக பட்சம் 3,20,000 பவுண்டு (144 டன்) எடையுள்ள மணல் தேவைப்படுகிறது. இருக்கவே இருக்கிறது காவேரி, கொள்ளிடம், சுரண்ட முடியாதா என்ன ? தஞ்சையை சுற்றியுள்ள மணல் அள்ளி பணம் சம்பாதிக்கும் அதிபர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தால் முடிந்தது. அவர்கள் எதிர்பவர்களை அடக்கிகொள்வார்கள். ! சிலிக்கா கலந்த மணல் துகள்களால் நோய் ஏற்பட்டால் இருக்கவே இருக்கின்றது ராஜா மிராசுதார் அரசு பொது மருத்துவமனை.
# நஞ்சான வேதிப்பொருட்களின் பயன்பாடு : மேலும் அதிக அளவில் நீரின் பயன்பாடு மற்றும் அதில் கலந்துள்ள வேதி பொருட்களின் ஆபத்து என்ற குரல்கள் அதிக அளவு எழுந்தபோது இந்த எரிவாயு நிறுவனங்கள் கொடுத்த விளக்கம் என்பது 0. 5% விழுக்காடு என்பதில் இருந்து 2. 0% விழுக்காடு என்ற அளவில் தான் இந்த தீமை தரக்கூடிய வேதி பொருட்களை நீரியல் விரிசலுக்கு பயன்படும் திரவத்தில் கரைக்கப் படுவதாக விளக்கம் அளித்தன. ஆனால் இந்த விவரங்கள் கூட ஒப்பீட்டு அளவில் மிக அதிகமே. எப்படி என்றால் ஒரு முறை இந்த நீரியல் விரிசல் செய்யப்பட 40,00,000 (நாற்பது லட்சம் கேலன்) தண்ணீர் தேவைப்படும் நமது லிட்டர் அளவுகோலில் பார்த்தோமானால் 1,51,41,640 (ஒரு கோடியே ஐம்பதிஒரு லட்சத்து நாற்பத்திஓராயிரத்து அறநூற்று நாற்பது) லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இவ்வளவு மிகப் பெரிய அளவிலான திரவ கரைசலில் 80இல் இருந்து 330 டன் வேதிப் பொருட்கள் கலந்தால் அந்த நீர் எப்படி இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க இயலும். அவர்கள் நேரிலேயே நிகழ்த்தி காட்டுவதை நம்மால் வேடிக்கைதான் பார்க்க இயலும்.
சிறுதின்மங்கள், அமிலங்கள், விரிசல்களில் ஏற்ப்படும் தடைகளை உடைக்க கூடிய வேதி பொருட்கள், நுண் உயிரிகளை கொல்லக் கூடிய வேதி பொருட்கள், pH அளவை சமன்படுத்தக் கூடிய பொருட்கள், களிமண் மற்றும் சகதிகளை கிணறுகளில் உள்ளேயே பிரித்து வைக்கக் கூடிய வேதிபொருட்கள், எரிவாயு குழாய்களில் ஏற்படும் துருவை தவிர்க்க உபயோகிக்கும் வேதி பொருட்கள், சிறு தின்மங்களை விரிசல்களில் அனுப்பக் கூடிய பொருட்கள், தேவையான அளவு அழுத்தத்தை உபயோகித்து நிறைய விரிசல்களை ஏற்ப்படுத்த உதவும் வேதி பொருட்கள், பசைகள், இந்த வேதி பொருட்களுக்கு உள்ளேயே நடக்கக் கூடிய வேதி விளைவுகளை தடுக்கக் கூடிய பொருட்கள், கரைப்பான்கள், மற்றும் திரவத்தின் மேற்பரப்பில் ஏற்ப்படும் அழுத்தம் மற்றும் இழுவை அளவை கட்டுப் படுத்தும் பொருட்கள் என்று இந்த வேதி பொருட்களை வைத்தே தனியொரு கட்டுரை எழுதலாம். இவ்வளவு உபயோகங்களுக்கு பல்வேறு விதமான வேதி பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன.
இந்த 600 வகையான வேதி பொருட்களில் மிகப் பெரும்பான்மையானவை மனித இனத்திற்கும், மற்ற உயிரிகளுக்கும் தீங்கு ஏற்படுத்துபவை. சில வேதிப் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜன் (Carcinogen) எனப்படும் வகையை சேர்ந்தவை மேலும் இரண்டு வேதி பொருட்கள் வேதி வினை புரிந்தால் அவை மூலம் வெளிவரும் வேதி பொருளானது மிகுந்த தீமையை உண்டுபண்ண கூடியதாக இருக்கும். சில வேதி பொருட்கள் மிக மிக சிறிய அளவில் நீர்நிலைகளில் கலந்தால் கூட நீர்நிலைகளின் இயல்பையே மாற்றி விஷமாகி விடும்.
எடுத்துக்காட்டாக சுற்றுசூழலுக்கான குழுக்கள் எடுத்த ஆய்வு முடிவுகளின் படி இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து வெளிவரும் மண்ணெண்ணெய் (Kerosene) கெரோசின் மற்றும் அதன் துணை வேதி பொருட்கள், நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப் படும் பென்சீன் (Benzene) என்ற வேதி பொருளுடன் கலந்தால் அது புற்றுநோயை உண்டாக்கும் வீரியமான மற்றொரு வேதி பொருள் ஆகின்றது. இந்த கலவை 0.005 % என்ற அளவில் 10,00,000 (பத்து லட்சம் லிட்டர்) லிட்டர் நீரில் கலந்தாலே புற்றுநோய் வரும் என்றால் அதன் தன்மையை உணரலாம்.
இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்திய நீரை நீராவியாக மாற்றி வெளியேற்றுவதற்கும் கழிவு நீரை சேகரிப்பதற்கும் ஆங்காங்கே குட்டைகள் அமைப்பார்கள் இந்த குட்டையில் இருந்து வெளியேறும் நீராவியின் மூலம் அமில மழை பொழிவதற்கான சாத்தியங்கள் உண்டு. பெரும் மழை பொழிந்து இந்த குட்டைகள் உடைப்பு எடுத்தாலோ அல்லது மழை நீரில் கழிவு நீர் கலந்து சென்று நிலத்தில் உரிஞ்சப் பட்டாலோ நிலமும் நீரும் மீண்டும் சரி செய்ய இயலாதவாறு மாற்றமடையும்.
#உயிரினங்களின் உடல்நல பாதிப்புகள் : இந்த நீர்ம வேதிப் பொருட்களின் மனித தாக்கம் என்பது அவற்றை சரியாக கையாளாமல் அவை நிலத்தில் சிந்தியோ அல்லது கசிவின் மூலமாக நன்னீர் நிலைகளில் கலப்பதன் மூலமும், அங்கு பணிபுரியம் தொழிலாளர்களின் சருமத்தில் நேரடியாக தாக்கப்படுவதன் மூலமாகவும், நீராவிமூலம் கழிவுகளை வெளியேற்றும் குட்டைகளில் இருந்து வெளிவரும் வாயுக்களை சுவாசிப்பதன் மூலமாகவும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன.
2010ம் ஆண்டு தியோ கர்ல்போர்ன் (Theo Colborn) என்ற ஆராச்சியாளரும் மற்றும் அவரது 3 ஆராய்ச்சி குழுவினர்களும் சேர்ந்து "இயற்கை எரிவாயுவின் எடுக்கும் வழிமுறைகள் : பொது நலத்தின் பார்வையில் இருந்து " (Natural Gas Operations from a Public Health Perspective) என்ற தலைப்பின் கீழ் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார்கள். அவர்களின் ஆய்வின்படி 353 வேதிப் பொருட்கள் அங்கு இயற்கை எரிவாயு எடுக்கும் நீரியல் விரிசல் முறைகளில் பயன் படுத்தப் பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் 12 விதமான உடல்நலக் குறைபாடுகள் வரும் என்று பட்டியலிடப்பட்டிருந்தது.
தோல், கண், தொடு உணர்வு அழிதல், சுவாசக் கோளாறு, செரிமான மண்டலங்களின் நோய் தாக்கம், ஈரல், மூளை மற்றும் நரம்பு கோளாறுகள், இதய தமனிகள் மற்றும் இரத்தத்தில் நோய் தாக்குதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சிறுநீரக கோளாறு, புற்றுநோய், மரபணு மாற்ற கோளாறுகள், நாளமில்லா சுரப்பிகளில் நோயின் தாக்கம், மற்றும் சூழ்நிலை கேடுகளை தகுந்த ஆதாரங்களுடன் பட்டியலிட்டது அந்த ஆய்வு கட்டுரை. கீழே உள்ள படம் நோயின் தாக்கம் வருவதற்க்கான சாத்தியப்பாடுகளை காண்பிக்கின்றது
# நீர்நிலைகள் மற்றும் நிலம் மாசுபடுதல் : நீரியல் விரிசலுக்கு பயன்படும் இந்த வேதி பொருட்கள் அவற்றிக்கான போக்குவரத்திலோ, நீரியல் விரிசல்களின் செயல்முறைகளின் போதோ, அல்லது வேதி கழிவுகளை சேமிக்கும் போதோ நீரிலோ அல்லது நிலத்திலோ கலப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. அத்தகைய ஆபத்து நேரிட்ட நிகழ்ச்சிகள் சில. .
#2009, செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தில் கபாட் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் (Cabot Oil and Gas) இரண்டு தடவை நீரியல் விரிசலுக்கு பயன்படுத்த படும் நீர்ம பசை போன்ற LGC-35 என்ற வேதி பொருளை கசிய விட்டது. ஹெயிட்மென் எரிவாயு கிணறு (Heitsman gas well)என்று அமைக்கபட்ட இடத்தில் இந்த நிகழ்வு நடந்தது. இந்த இரண்டு நிகழ்விலும் 8, 000 கேலன் (30283 லிட்டர்) என்ற அளவில் இது நிகழ்ந்தது, இந்த கசிவுகள் நேரடியாக ஸ்டீவன்ஸ் நீரோடையில் கலந்ததால் அந்த நீரோடையில் வசித்த மீன்கள் அனைத்தும் இறந்து விட்டன. இந்த இரண்டு கசிவிற்கு பின்னரும் மூன்றாவது தடவையாக ஒரு கசிவு நடந்தது அங்கேயே, அனால் அது நீரோடையில் கலக்காமல் தடுக்கப் பட்டது.
டிசம்பர் 2009 இல் Cowden என்ற வாஷிங்டன் மாகணத்தில் உள்ள இடத்தில எரிவாயு எடுக்கும் (Atlas Resources) அட்லஸ் ரீசோர்சஸ் என்ற கம்பெனியின் 17வது எரிவாயு கிணற்றின் கழிவு மற்றும் வேதிபொருட்கள் கலந்த நீர் அதன் நீராவி குட்டைகளில் இருந்து வெளியேறி Dunkle எனப்படும் சிற்றோடையில் கலந்தது. இது அந்த நகரத்தின் முக்கியமான நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இதை பற்றிய எந்த ஒரு தகவலும் அந்த எரிவாயு நிறுவனம் அரசுக்கு தெரிவிக்கவில்லை. மிகப் பெரிய அளவில் நீரில் கலந்த வேதி நீரை பின்பு கண்டறிந்த பென்சில்வேனியா சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பு அந்த நிறுவனத்திற்கு $97, 350 டாலர்கள் அபராதம் விதித்தது.
மே 2010ம் ஆண்டில் ரேன்ஞ் ரீசோர்சஸ் என்ற மற்றொரு நிறுவனம் அதன் கழிவு நீர் செல்லும் குழாய்களில் ஏற்ப்பட்ட உடைப்பு காரணமாக 250 பேரல் அளவில் கழிவு நீரை Brush என்ற சிற்றோடையில் கலந்தது. இது பின்னால் பென்சில்வேனியா சுற்றுசூழல் அமைப்பினால் கண்டு பிடிக்கப்பட்டு $141,175 டாலர்கள் அபராதத்தை செலுத்தியது.
அக்டோபர் 2005இல் அமெரிக்காவின் கொலராடோ மாகணத்தில் Kerr-McGee என்ற இடத்தில அமைந்துள்ள எரிவாயு கிணற்றின் மேல்பகுதி உடைந்து கிட்டத்தட்ட 168 இல் இருந்து 230 கேலன் அளவில் இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப் பட்ட நீர்மம் வானில் மிகுந்த அழுத்தத்தில் பீய்ச்சி அடித்து வெளியேறியது. இதில் எரிவாயு கிணறும் அதன் அருகில் உள்ள நிலப் பகுதிகளும் மிகுந்த சேதம் அடைந்தன. கிட்டத்தட்ட 1/2 இன்ச் அளவில் நிலத்திற்கு மேலே இந்த எரிவாயு கழிவு படிந்து காணப்பட்டது.
#நிலத்தடி நீர் பாதிப்பு : 2004ம் ஆண்டு அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் ஒரு இறுதி ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அது இந்த நிலக்கரி படுகையில் எடுக்கப்படும் எரிவாயுவின் ஆபத்து முறையான நீரியல் விரிசல் முறையினால் நிலத்தடி நீரில் ஏற்ப்பட்ட தாக்கத்தையும், பாதிப்புகளை பற்றியும் விரிவாக அலசியது. இது அமெரிக்காவின் 11 நிலக்கரி எரிவாயு படுகைகளில் 10 நிலக்கரி படுகைகள் மக்களின் நீர் ஆதாரங்களின் அருகில் அல்லது அதற்க்கு உள்ளேயே அமைந்து இருப்பதை காட்டியது. மேலும் சில இடங்களில் எரிவாயு கிணறுகளின் கழிவுகள் நன்னீர் நிலைகளில் கலந்து இருப்பதும் தெரியவந்தது. இந்த கழிவுகள் நிலத்தடி நீரிலும், நீர் நிலைகளிலும் கலப்பது உயிரினங்களுக்கு மிகுந்த தீமையை ஏற்ப்படுத்தும் என்று சுட்டிக் காட்டியது. இந்த ஆய்வுகளின் முடிவின் படி வேதி பொருட்களின் அடர்த்தி மற்றும் செறிவு என்பது அனுமதிகப்பட்ட அளவை காட்டிலும் 4ல் இருந்து 13,000 அளவு வரை மிகுந்திருந்தது கண்டறியப் பட்டது.
இதன் பாதிப்புகள் என்பது குறுகிய காலத்திற்கு மட்டும் அல்லாமல் இந்த பாதிப்புகள் நீண்டகாலம் வரை தொடர்ந்து அச்சுறுத்தல்களாக இருக்கும் என்றும் இதில் 20இல் இருந்து 85% சதவிகிதம் வேதி பொருள்கள் அதன் தன்மையிலேயே மாறாமல் இருக்கும் என்றும் இவை நீர் நிலைகளில் கலக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
# வளிமண்டலம் மாசடைதல் : எங்கெங்கு இந்த எரிவாயு கிணறுகள் அமைக்கப்பட்டு, செயல் படும்போதும் அதன் பின்பும் அந்த இடத்தில வளி மண்டலத்தில் மிகுந்த மாசு கலந்திருப்பது தெரிய வந்தது. பெர்னட் என்ற இடத்தில் அமைந்துள்ள எரிவாயு கிணறுகளின் அருகில் எடுக்கப்பட்ட சோதனையில் மிகுந்த ஆபத்தை உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் பென்சீன் (Benzene) வாயு டெக்சாஸ் மாகாணம் முழுவதும் பரவியிருந்தது கண்டறியப்பட்டது. வளி மண்டலத்தில் தூசுகளின் மூலமாக வேதிப் பொருட்கள் இதன் செயல் முறைகளான நிலத்தடி நீரில் இருந்து மீத்தேன் எரிவாயு பிரித்தெடுக்கும் போதும், அழுத்தம் கொடுக்கும் பொழுதும், குழாய்களில் இருந்தது கசிவின் மூலமாகவும் கலக்கிறது.
நீரியல் விரிசல் செயல் முறைகள் முடித்தபின் இந்த கழிவுநீர் நிலத்திற்கு மேலே உரிஞ்சப்படுகிறது. பின்பு மீத்தேன் பிரித்தெடுத்த பின் கழிவுகளை சேகரிக்கும் குட்டைகளுக்கு மீதி இருக்கும் கழிவு நீர் அனுபப்படுகிறது. இந்த நிலையில் கழிவு நீர் குட்டைகளில் தேங்கும் நீரில் இருந்து அபாயகரமான அளவுகளில் வாயுமண்டலத்தில் கழிவுகள் நீராவியாக கலக்கின்றன.
இதைப் பற்றிய மேல் ஆய்வுகளின் படி சராசரியாக 10 மீத்தேன் எரிவாயு கிணறுகள் 32. 5 டன் எடையுள்ள மெத்தனால் (Methanol) வேதி பொருள் வளி மண்டலத்தில் கலக்கிறது. இந்த மெத்தனால் கலந்த காற்றை சுவாசிக்கும் மனிதன் தலைவலி, சுவாசக் கோளாறு என்று ஆரம்பித்து இறுதியில் பார்வைக் குறைபாட்டில் சென்று முடியும். இந்த ஆய்வுகளில் 70வது விதமான உடனடி வேதி வினைகளை உண்டுபண்ணும் வேதி பொருட்களும் 27விதமான மற்ற வேதி பொருட்களும் வளி மண்டலத்தில் கலப்பது உறுதி படுத்தப்பட்டது.
நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப் படும் வேதி பொருட்களில் 37% சதவிகிதம் உடனடி வேதிவினைகளுக்கு உட்படக்கூடிய இயல்பு கொண்டவை இவை நீரியல் விரிசல் செயல் முறையின்போதே ஆவியாகி வளிமண்டலத்தில் கலக்கிறது. இவை வளிமண்டலத்தில் கலந்து அருகில் இருக்கும் நீர்நிலைகளில் கலப்பதன் மூலம் நீர்நிலைகளும் மாசடைகின்றன.
இந்த வளி மண்டலத்தில் ஆவியாகி கலக்கும் வேதி பொருட்களில் 81% சதவிகிதம் உயிரினங்களுக்கு மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இயல்பினை கொண்டவை. 71% சதவிகிதம் இருதயம் மற்றும் இரத்தம் சம்மந்தமான நோய்களை ஏற்படுத்தும் இயல்பினை கொண்டவை. 66% சதவிகிதம் சிறுநீரகம் மற்றும் அதை சார்ந்த வியாதிகளுக்கு காரணமாகின்றன. இத்தகைய வேதி பொருட்கள் சுவாசிப்பதன் மூலமாகவோ, தோள்களின் மூலமாகவோ, நீரின்மூலம் உடலுக்கும் செல்வதன் மூலமாகவோ பல்வேறு வியாதிகள் ஒரே நேரத்தில் தாக்கும் அபாயத்தையும் உண்டு பண்ணுகின்றன.
2005ம் ஆண்டு கொலராடோ மாகாணத்தில் வசிப்பவர்கள் வெளியே வர இயலாதவாறு கொடிய நாற்றமுடைய காற்று எங்கும் பரவியது, சுற்றுசூழல் மற்றும் காவல்துறையின் விசாரணையில் அருகே அமைந்த நான்கு எரிவாயு கிணறுகளில் அப்போதுதான் நீரியல் விரிசல் முறை நடந்தது தெரியவந்தது அதன்மூலமே கழிவுகள் சேமிக்கும் குட்டைகளில் இருந்து துர்நாற்றம் பரவியது கண்டறியப் பட்டது. பென்சில்வேனியா மாகாணத்தில் கெரொசின் அல்லது பெட்ரோல் போன்ற துர்நாற்றம் ஊரெங்கும் பரவியது மட்டும் அல்லாமல் வெள்ளை நிறத்தில் தூள் போன்ற வேதிபொருட்கள் ஊரெங்கும் படிந்தது. நீண்ட நாட்கள் முயற்சித்த பின்பே அவற்றை அப்புறப் படுத்த முடிந்தது. இதுவும் எரிவாயு கிணறுகளின் பின்விளைவே.
2010, மார்ச் இல் வாஷிங்டன் பகுதியில் பென்சில்வேனியாவில் அரசு வசம் இருந்த கழிவுநீர் சேகரிக்கும் குட்டைகளில் தீபிடித்து அதனால் எழுந்த அடர்ந்த, கரும் புகை நீண்ட தொலைவுக்கு பரவியது. மேலும் கடும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பே அங்கு வெடி சத்தம் கேட்டதாகவும் மக்கள் புகார் அளித்தனர் அதன் பின் அந்த கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்தனர்.
# கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தல் : எங்கெங்கு இந்த நிலக்கரி படுகைகளில் இருந்து மீத்தேன் எடுக்கும் எரிவாயு எடுக்கும் கிணறுகள் உண்டோ அங்கு எல்லாம் நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப்பட்ட வேதிபொருட்கள் கொண்ட நீரானது மீண்டும் நிலத்திற்கு 25-100% சதவிகிதம் உறிஞ்சப்படுகின்றது. இந்த மில்லியன் கேலன் பெருமளவிலான நீர் மீண்டும் பயன்படுதுவதற்க்காகவோ அல்லது வேதிபொருட்களை நீக்கும் சுத்தகரிப்பிற்கோ அல்லது கிணறுகளில் இருந்து அப்புறப்படுதுவதற்க்காகவோ இருக்கும்.
2009 இல் பென்சில்வேனியாவில் தினந்தோறும் 3,40,68,690 லிட்டர் வேதிப் பொருட்கள் கலந்த கழிவு நீரை உற்பத்தி செய்தது. இது மேலும் அதிகரித்து 19இல் இருந்து 20 மில்லியன் கேலன் கழிவு நீர் தினந்தோறும் 2011ம் ஆண்டில் இந்த எரிவாயு கிணறுகளால் வெளியேற்றப்பட்டது. இந்த பெருமளவில் வெளியான கழிவுநீர் அவற்றை வெளியேற்றுவதில் மாபெரும் சோதனையாக எரிவாயு நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. புவியியல் ஆய்வுகளில் இந்த கழிவுநீரில் கலக்கப்பட்ட வேதி பொருட்கள் மட்டுமல்லாமல் நிலத்திற்கு அடியில் உள்ள பல்வேறு தனிமங்களும் நீரில் கலந்து வெளியேறியது கண்டுபிடிக்கப் பட்டது. இத்தகைய கழிவு நீரில் பல்வேறு வேதிப்பொருட்கள் மட்டுமல்லாது பல்வேறு வகையான தனிமங்களும், பல்வேறு குணமுடைய உப்புக்களும், தாதுக்களும், கதிரியக்கத்தை உண்டுபண்ணும் தனிமங்களும், மற்ற ஆவியாகக்கூடிய பொருட்களும் வெளியேறுவதால் இதன் சுத்தகரிப்பு மற்றும் மறுசுழற்சி என்பது மிகுந்த சிக்கல்களும், அதிக செலவு வைப்பதாகவும் மாறுகின்றது. அங்கேயே அப்படி என்றால் இங்கு அவை காவேரியிலும் மற்ற நீரோட்டங்களிலும் வெளியேற்றப்படப் போவதில்லை என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. என்னெனில் கண்முன்னே திருப்பூர் சாயப் பட்டறைகளும், ஓரத்துப்பாளையம் அணையும் கண்முன்னே வந்து போகின்றன.
2009இல் நியூயார்க் நகரத்தில் இருந்து வெளிவரும் Propublica என்ற பத்திரிகையில் நியூயார்க் நகர சுகாதார துறைக்கு இந்த கழிவுகளில் இருந்து கதிரியக்கம் உள்ள பொருட்கள் வெளிவருவதை சுட்டிக்காட்டி கட்டுரை ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பி இருந்தது. இதன் பின்பே நியூயார்க் சுகாதார துறை மிகுந்த கவனத்துடன் இந்த கழிவுநீர் மக்களின் சுகாதாரத்தை கணக்கில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கையாளப்படவேண்டும் என்ற குறிப்பை அனைத்து எரிவாயு நிறுவனக்களுக்கும் அனுப்பியதோடு அரசிற்கும் அறிவுறுத்தியது. இதன்படி ஒவ்வொரு முறையும் கழிவுநீர் வெளியேறும் போதும் தகுந்த கதிரியக்கத்தை அறியக்கூடிய சோதனைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அனைத்து எரிவாயு கிணறுகளிலும் இதை கண்டறிய தகுந்த கருவிகளோடு கூடிய சோதனைகூடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் மேலும் தகுந்த இடைவெளியில் இந்த எரிவாயு கிணறுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கதிரியகத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று உடல்நல பரிசோதனையும் நடத்தப்பெறுவது அவசியம் என்று ஆணை பிறப்பித்தது.
இந்த கதிரியக்கம் கலந்த நீரினை மீண்டும் பூமிக்குள் செலுத்த சில வல்லுனர்கள் யோசனை கூறினார்கள். இதன்படி கழிவு நீரினை பூமிக்குள் செலுத்துவதற்கு என்றே தனியாக பூமியில் துளையிட்டு அந்த போர்வெல் துளையின் மூலம் கழிவுநீரை பூமிக்குள் செலுத்தி அகற்றலாம். இத்தகைய போர்வெல் (துளையிடும்) முறையை UIC (Underground Injection Control)வகை 2 என்று அழைக்கிறார்கள். இந்த முறையில் என்ன பிரச்சனையை எதிர் கொண்டார்கள் என்றால் முதலில் நியூயார்க் மாகாணத்தில் இந்தவகை துளையிட்ட கிணறுகள் என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனியாக என்று அமைக்கமுடியாது அப்படி அமைத்தாலும் இந்த வகை போர்வெல் (துளையிடும் முறையில்) அமைப்பில் உருவாகும் கிணறுகள் மிக அதிகமாக இருக்கும். இவை மேலும் மேலும் சிக்கல்களை உண்டு பண்ணும். இவ்வாறு அமைக்கபட்டு சில இடங்களில் செயல்படும் கிணறுகளை மேற்ப்பார்வையிடும் தொழில்நுட்பவல்லுநர்களுக்கே இத்தகைய கதிரியக்கம் கலந்த கழிவுகளை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை. அவர்களுக்கு யுக்கா மலைத்தொடரில் ஏற்ப்பட்ட தோல்வியில் முடிந்த அணுஉலை கழிவுகளை பூமிக்குள் புதைக்கும் செயல்பாடு நினைவிற்கு வந்திருக்கும்.
பென்சில்வேனியாவில் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும் பெருமளவிலான மில்லியன் கேலன் அளவிலான வேதிப் பொருட்கள் கலந்த கழிவுநீரை எவ்வாறு வெளியேற்றுவது என்று மிகப் பெரிய பிரச்னையை இப்போதும் எதிர்கொண்டிருகிறார்கள். அங்கு இருக்கக் கூடிய நீரை சுத்தகரிக்கும் நிலையங்கள் குறிப்பிட சிலவகை வேதி பொருட்களை மட்டுமே நீரில் இருந்து பிரித்தெடுக்கும் வசதிகளை கொண்டது. அனைத்தையும் சுத்தகரித்து நன்னீரை குடிநீராக்கும் வசதிகள் என்பது சாத்தியப்படவில்லை.
2008 ம் ஆண்டு பெரும் மழைப்பொழிவு நேரத்தின் போது இத்தகைய கழிவுகளை அங்கு ஓடும் பீவர் ஆறு (Beaver River) மற்றும் மனோங்கஹெலா (Monongahela River) ஆறு மற்றும் அதன் கிளை நீர்பிடிப்புகளில் அங்குள்ள கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் கலந்தது. இந்த செயலால் பெரும் அளவிலான கழிவு நீர்மம் இந்த இரண்டு ஆறுகளிலும் கலக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு ஆறுகளாலும் தன்னில் கலக்கப்பட்ட நீரில் கரையும் கழிவுகளை முற்றிலுமாக கரைக்கப்பட முடியவில்லை. அதுவும் பெரும் அளவிலான இந்த கழிவுகளை அந்த ஆறுகள் தன்னுள் கரைக்கும் சாத்தியத்தையும் கணக்கில் எடுக்காமல் இந்த செயல் நடைபெற்றது. விளைவு நீரில் கரையக்கூடிய கழிவுகள் கரையவில்லை மேலும் சல்பேட் (Sulfate) மற்றும் குளோரைடு கள் (Chlorides) ஆகியவற்றின் அடர்த்தி மிகுந்தது.
மிகுந்த அளவிலான இந்த வேதி பொருட்களின் அடர்த்தி அந்த ஆறுகளில் வாழும் நீர்வாழ் உயிரினங்களையும், தாவரங்களையும் தாக்கி அழித்தது. பின்பு கார்னேஜ் மெலொன் பல்கலைகழகமும் (Carnegie Mellon University) மற்றும் பிட்ஸ்பெர்க் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை நிறுவனமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் இந்த எரிவாயு நிறுவனங்கள் ஆற்றில் கலந்த கழிவு நீரால் அங்கு ஓடும் அல்கேனி (Allegheny) மற்றும் பீவர்(Beaver) ஆற்றில் மிக அபாயகரமான அளவில் ப்ரோமைட் கலந்திருப்பது தெரியவந்தது. இந்த இரண்டு ஆறுகளின் தண்ணீரையும் எடுத்து மக்களுக்கு சுத்தகரித்து குடிநீர் வழங்கிக் கொண்டிருந்தது அரசு. இந்த சுத்தகரிப்பு நிலையங்களில் நீர் சுத்தகரிப்புக்கு பயன்படுத்தப்படும் (Disinfectants) வேதிகலவைகளுடன் இந்த ப்ரோமைட் கலந்த நீர் வேதிவினை புரிந்து ப்ரோமினேற்றம் என்ற வேதிவினையாக மாறி ப்ரோமினேற்றம் செய்த ட்ரைஹாலோமெத்தேன் (Brominated Trihalomethane) ஆக மாறுகிறது. இந்த ப்ரோமினேற்றம் என்ற ப்ரோமின் கலந்த ட்ரைஹலோமீத்தேன் என்பது பல்வேறு புற்றுநோய்களையும், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை உண்டாக்கும் ஆபத்து கொண்டது. இந்த நீரையே மக்களுக்கு அதன் வீரியம் தெரியாமல் விநியோகித்து வந்தன அந்த நீர் சுத்தகரிப்பு நிலையங்கள்.
ஆகஸ்ட் 2010 இல் பென்சில்வேனியா புதிய சட்டம் ஒன்று இயற்றியது. இதன்படி இத்தகைய எரிவாயு கிணறுகளில் இருந்து சுத்தகரிப்புக்காக பெறப்படும் கழிவுநீரில், நீரில் மொத்தமாக கரையக்கூடிய கழிவுகளின் அளவு லிட்டருக்கு 500 மில்லிகிராம் அளவு இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் குளோரைடு ஆனது 250 மில்லிகிராம் அளவுக்கே இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தியது. இதை மீறிய பெரும் அளவிலான வேதி அடர்த்திகொண்ட கழிவு நீர் சுத்தகரிபுக்கே தகுதி இல்லாத ஆபத்து கொண்ட நீர்மங்கள் என்று அறிவித்தது. இதனால் 2010 இல் 27 ஆக இருந்த நீர் சுத்தகரிப்பு நிறுவனங்கள் 2011 இல் 15 ஆக குறைந்தது.
இன்றுவரை இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து வெளிவரும் வேதி பொருட்கள் கலந்த கழிவு நீர் சுத்தகரிக்க முடியாத ஒன்றாகவும், அரசுக்கு மிகுந்த சிக்கல்களை கொடுக்கும் விஷயமாகவும் அங்கு இருந்து வருகிறது.
# வெளிப்படையாக அறிவிக்காத வேதிப்பொருட்களின் பயன்பாடு : இந்த எரிவாயு கிணறுகளில் செய்யப்படும் நீரியல் விரிசல்களில் என்னென்ன வேதிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று நிலத்தின் உரிமையாளரால் அறியமுடியாது. அமெரிகாவில், இயற்கை வளங்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் தகவல்படி 1900 ஆண்டுகளின் இறுதியிலும், 2000 ஆண்டுகளில் ஆரம்பத்திலும் ஏராளமான சுற்றுசூழல் மற்றும் நில உரிமை பாதுகாப்பு அமைப்புகளும் இந்த நீரியல் விரிசல்களில் என்னென்ன வேதிப் பொருள்கள் உபயோகிக்கப்படுகின்றன? அவை எந்தெந்த அளவுகளில் கலக்கப்படுகின்றன? என்பது பற்றிய தகவல்களை பெற பல்வேறு விதமான முயற்சிகளை செய்தன. ஆனால் அந்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. ஏனென்னில் இந்த வேதிப் பொருள்களின் தகவல்கள் என்பது தங்களின் " தனிப்பட்ட மற்றும் பாதுகாக்கபட்ட உரிமை" என்று எரிபொருள் நிறுவனங்கள் தகவல்களை தர மறுத்தன.
2000 ஆம் ஆண்டுகளின் மத்தியகாலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கு பொறுப்பேற்கும் அமைப்பும் மனித உடலின் உட்சுரப்பிகளின் நோய்தாக்கங்களை கண்காணிக்கும் அமைப்பும் இணைந்து பல்வேறு விதமான பெறபெற்ற தகவல்களின் அடிப்படையிலும் மேலும் எரிவாயு கிணறுகளில் நீரியல் விரிசலுக்காக வாங்கப்பட்ட வேதிப் பொருட்களின் பட்டியல் அடிப்படையிலும் இங்கு இருக்கும் தகவல் அறியும் உரிமை போன்ற சட்டங்களின் மூலமாக நீரியல் விரிசலுக்கு பயன்படும் வேதி பொருட்களை கண்டறிய முயற்சித்தனர். அதே நேரத்தில் மனித உட்சுரபிகளின் நோய்தாக்கத்தை கண்டறியும் அமைப்பும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக செயல்படும் குழுவும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் மிக கொடிய விஷத்தன்மை கொண்ட வேதிப் பொருட்கள் இந்த எரிவாயு குழாய்களில் நடத்தபெறும் நீரியல் விரிசல்களில் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. அமெரிக்காவின் மொண்டனா, நியூ மெக்ஸிகோ, வயோமிங் மற்றும் கொலராடோ மாகணங்களில் செயல்படும் எரிவாயு கிணறுகளில் இந்த கொடிய விசத்தன்மை வாய்ந்த வேதிப் பொருள்கள் நீரியல் விரிசலுக்காக பயன்படுத்தப் படுவது கண்டறியப்பட்டது. இதை பற்றி தனியாகவே எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறுகளில் உட்செலுத்தப்படும் வேதிப் பொருள்கள் என்ற தலைப்பின் கீழ் ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.
2006ம் ஆண்டில் இந்த நீரியல் விரிசலில் பயன்படுத்தப்படும் வேதிபொருட்களை அறிவிக்க வேண்டும் என்பதை முதன்மையான தேவையாக குறிப்பிட்டு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதன் விளைவாக எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கு பொறுப்பேற்கும் அமைப்பு ஐந்து குடிமக்கள் சங்கங்களின் சார்பாக ஒரு கடிதத்தை கொலராடோ எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பாட்டு அமைப்பிற்கும் மற்றும் கொலராடோ நல்வாழ்வு மற்றும் சுற்றுசூழல் துறைக்கும் அனுப்பியது. அதில் இந்த அமைப்புகள் நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தபடும் வேதிபொருட்கள், அந்த வேதிபொருட்களை கையாளும், கண்காணிக்கும் விதிகள், நீரியல் விரிசலுக்கு பின் வெளியேற்றப்படும் கழிவுகளின் விவரம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை மாகாண அரசின் துறைகளிடம் கோரியிருந்தது. அதே சமயத்தில் அனைத்து அமெரிக்க மாகாணங்களிலும் அரசு மன்றங்களில் இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப்படும் வேதிபொருட்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றும் கூட வயோமிங், ஆர்கன்சாஸ், பென்சில்வேனியா, மெக்ஸ்சிகோ மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அளவு விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், போராடுகிறார்கள் ஆனால் பெரும்பான்மையான மாகாணங்களில் தொழிற்சாலைகளின் ரகசிய பாதுகாப்பு சட்டங்கள் அங்கு உள்ள எரிவாயு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன.
# நீரியல் விரிசலுக்கான சிறந்த வழிமுறைகள் : பல்வேறு விதமான ஆய்வுகளுக்கு பின் சிறந்த வழிமுறைகள் என்று சிலவற்றை மக்கள் சங்கங்கள் பரிந்துரை செய்தன. ஆனால் அவற்றை எந்த ஒரு எரிவாயு நிறுவனங்களும் பின்பற்றவில்லை. மக்கள் பரிந்துரைத்த சில விதிமுறைகள்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, நீரியல் விரிசல்கள் எங்கு எந்த எரிவாயு கிணறுகளில் நடந்தாலும் அங்கு நீரியல் விரிசலுக்காக மணல் மற்றும் நீர் கலந்த கலவையே உபயோகிக்கபடவேண்டும் என்றும் அல்லது நீர். மணல் கலந்த கலவையுடன் விஷதன்மை அற்ற வேதிபொருட்கள் பயன்படுதல்லாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு சிறந்த உதாரணமாக இதே விதிமுறைகளை பின்பற்றி நீரியல் விரிசல் முறையை செயல்படுத்தும் ஆழ்கடலில் செயல்படும் எரிவாயு மற்றும் எண்ணெய கிணறுகள் சொல்லப்பட்டன. விஷமற்ற பசைகள் போன்ற பொருட்களையும் மணல், நீர் ஆகியவற்றை கலந்து ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் நிறுவனங்கள் நீரியல் விரிசலுக்கான திரவத்தை தயார் செய்கிறார்கள். இந்த திரவம் கடலின் உயிரினங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அனைத்து நீரியல் விரிசலுக்கான வேதிபொருள் கலந்த திரவத்துடன் டீசல் கலக்கப்படுகிறது. இது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும் ஏனெனில் டீசலில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜன் (Carcinogen) என்ற காரணிகளின் பட்டியலில் முதன்மையாக உள்ள பென்சீன் (Benzene) இருகின்றது மேலும் மிகுந்த ஆபத்தான வேதிபொருட்களான நாப்தலீன் (Naphthalene), டொலுயீன்(Toluene), எத்தில்பென்சீன்(Ethylbenzene), மற்றும் சைலீன் (Xylene) ஆகிவை இருக்கின்றன. இதை பற்றிய மேல் விவாதங்களுக்கு பின்பு ஹாலிபர்டன் என்ற எரிவாயு எடுக்கும் நிறுவனம் ஒரு விளக்கம் கொடுத்தது அதில் டீசல் என்பது நீரியல் விரிசல் செயல் முறைகளில் விரிசல்களை உண்டாகும் வலிமை கொண்டதல்ல எனவும் டீசல் இந்த நீரியல் விரிசல்களில் ஒரு கடத்தியாகத்தான் செயல் படுகிறது என்றது. அதற்க்கு இந்த நீரியல் விரிசல்களில் டீசலுக்கு பதிலாக விஷதன்மையற்ற மற்ற கடத்திகளை பயன்படுத்துவது என்பது மிகுந்த மிக எளிது என்றும் நீரை கூட கடத்தியாக பயன்படுத்த முடியும் என்று தொழிநுட்ப வல்லுனர்கள் பதிலளித்தார்கள். சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனமும் இந்த மாற்று வழிமுறைகள் அதாவது நீரை சார்ந்த கடத்திகளை நீரியல் விரிசல் முறைகளில் உபயோகிப்பது சுற்றுசூழலுக்கு நல்லது என்று சொல்லியது.
எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளில் இருந்து பெறப்படும் கழிவு நீரானது நீராவி குட்டைகளில் சேமிக்கப்படுகின்றன. இந்த குட்டைகளின் பக்கவாட்டிலும் அதாவது அதன் கரைகளும் அடிபக்கத்திலும் சிமெண்டினால் ஆன அடித்தளங்கள் அமைக்கப்பெற வேண்டும். மேலும் தார்பாலின் கொண்டும் அடித்தளதிலும், பக்கவாட்டிலும் நிலத்தை மூடிவைத்து கழிவுநீர் எக்காரணத்தை கொண்டும் நிலத்தில் இறங்காதவாறு காத்திட வேண்டும் என்றும் அந்த அறிக்கை அறிவுறுத்தியது.
மேலே கூறியுள்ள விவரங்களில் மிகுதியான ஆபத்தை ஏற்படுத்தும் வேதிபொருட்கள் இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப்படுவது பற்றி அறிந்தோம். இந்த வேதிப் பொருட்கள் நீரியல் விரிசல் செயல்முறை முடிந்தவுடன் மீண்டும் மறுசுழற்சிக்காக, கழிவுநீர் அப்புறப்படுத்தப்படுவதற்காக உரிஞ்சப்படுகின்றன அவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீரில் உள்ள ஆபத்தான வேதிபொருட்களை பயன்பாடு முடிந்த கிணறுகளில் மீண்டும் செலுத்தி அங்கு சேமிக்கலாம். கழிவுநீரில் வெளிவரும் கரிமப்பொருட்களை மீண்டும் பயன்பாடு முடிந்த கிணறுகளின் உள்ளே செலுத்தப்படவேண்டும். ஏனென்னில் அவை நிலத்தின் மீது சேமிக்கப்பட்டால் அவை நிலத்திலும், நீரிலும் கலப்பதற்கு வாய்புகள் அதிகம். மிகுந்த ஆபத்து ஏற்படுத்தும் கழிவுகளை பிரித்து தனியே இரும்பு தொட்டிகளில் சேமிக்கலாம். என்றும் அந்த அறிக்கை கூறியது.
ஆனால் இவை எவற்றிலும் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. சட்ட திட்டங்கள் மிகுந்த அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால் இங்கு இந்த வழிமுறைகள் ஒன்று கூட நிறைவேறாது என்று கணிக்கலாம்.
மத்திய அரசின் ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன் இணையத்தில் தேடியபோது கிடைத்தது. அதில் தெளிவாகவே சொல்லியிருக்கிறது தஞ்சை டெல்டாவில் நடைமுறைபடுத்த உத்தேசித்திருப்பது இந்த "நீரியல் விரிசல்" முறையை பயன்படுத்தி எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு கிணறுகளை தான். தஞ்சை மக்கள் மாநில அரசு தடை விதித்துவிட்டது என்று அசட்டையாக இருக்கவே முடியாது. என்னெனில் இதில் ஈடுபடப்போவது அரசுகளையே மாற்றும் வல்லமை கொண்ட எண்ணெய் நிறுவனங்கள். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தெரியவரும் மாநில அரசின் உண்மை முகம். கூடங்குளத்தில் ஏற்கனவே நாம் கண்டதுதான்.
வரும் முன் தடுக்க தவறினால், வரும்போதும், வந்தபின்னும் நம்மால் தடுக்கமுடியும் என்று உறுதியில்லை. என்னெனில் ஏற்க்கனவே சாதியில் பிளவுண்ட வரலாறு தஞ்சைக்கு... இனி எரிவாயுவினால் நிலம் பிளவுறும் எதிர்காலமும் வருமோ!
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
விளக்கமும் வேண்டுமா?
- த.அருண்குமார், May17 இயக்கம். (
- விவரங்கள்
- த.அருண்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
காவிரிக்கும், தஞ்சை தரணிக்கும் உள்ள உறவில் தான் தமிழகம் உணவு உண்கின்றது. இவ்வாறு தமிழக மக்களின் விவசாயத்திற்கு இன்றியமையாத இடமாக இருக்கும் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளை அதன் இயல்பை மாற்றக்கூடிய ஆபத்தாக இந்த மீத்தேன் எரிவாயு திட்டம் வரப்போகிறது.
கொஞ்சம் விளக்கமாக. . . . .
"இயற்கை எரிவாயு" என்பது நாம் எல்லோரும் அறிந்தவரை இயற்கையில் கிடைக்கும் வாயு நிலையில் உள்ள எரிபொருள. இந்த இயற்கை எரிவாயு தீப்பிடிக்கும் இயல்புள்ள நீர்கரிம வாயுக்களின் கலவை ( Combustible mixture of hydrocarbon gases). இந்த வாயுக்களின் கலவையில் மீத்தேன் வாயு என்பதே முதன்மையாக இருக்கின்றது மேலும் அதிகமான வெவ்வேறு நிலைகளில் மற்ற நீர்கரிம வாயுக்களும் மற்ற வாயுக்களும் கலந்து காணப்படும்.
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இதில் இரண்டு வகை இருக்கின்றன. பெட்ரோலிய படுகைகளில் பெட்ரோல் எரிபொருள் எடுக்கும் பொது இயல்பாகவே வருவது ஒரு வகை. இது வழக்கமான வாயு (Conventional Gas)அல்லது இயல்பான வாயு என்று அழைக்கலாம். மற்றொரு வகை வழக்கத்திற்கு மாறான முறையில் எடுக்கப்படும் எரி வாயு (Unconventional Gas) என்று அழைக்கலாம். இந்த வகை "வழக்கத்திற்கு மாறான" எரிவாயு கடினமான பாறைகளிலும், நிலத்திற்கு அடியில் மிகுந்த இறுக்கம் கொண்ட மணல் படுகைகளிலும் மற்றும் நிலக்கரி படுகைகளிலும் எடுக்கப்படுகிறது.
வழக்கமான எரிவாயு முற்றிலும் வாயுவாகவோ அல்லது சிறிது நீர்ம நிலையிலோ கிடைக்கும். முதலாவதில் முற்றிலுமான மீத்தேன் மட்டுமே கிடைக்கும். நீர்ம நிலையில் சேகரிக்கப்படும் எரிவாயுவில் மீத்தேன், ப்யூடேன், ப்ரொப்பேன் ஆகியவை கலந்து இருக்கும். இந்த எரிவாயு பெட்ரோலிய கிணறுகளில் கச்சா எண்ணை எடுக்கும் போது அதிலேயே கச்சா எண்ணையுடன் கலந்து வரும்.
இந்த வழக்கத்திற்கு மாறான எரிவாயு எடுக்கும் முறைகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன. அவை
*Tight Gas எனப்படும் இறுக்கம் அதிகம் உள்ள இடங்களில் எடுக்கப்படும் எரிவாயு.
*Shale Gas எனப்படும் பூமிக்கு அடியில் உள்ள மிக கடினமான பாறையில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு.
*Coalbed Methane எனப்படும் பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு.
இதில் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வரப்போகும் ஆபத்து என்பது Coalbed Methane என்று அழைக்கப்படும் CBM. நிலக்கரி படிமங்களில் உள்ள எரிவாயு CBM என்று அழைக்கப்படும். உயிரிகளின் இறந்த எச்சம் நிலக்கரியாக இயற்கையாக மாறும் நிலக்கரி மாற்றத்தில் நிலைகளில் இந்த இயற்கை எரிவாயு உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் எரிவாயு பாறைகள் மற்றும் நீரால் சூழப்பட்டு அவை நிலக்கரி படிமங்களிலும், பாறைகளில் உள்ளாகவும் வெளியேற வழி இல்லாமல் அங்கேயே தங்கிவிடுகின்றன. இவ்வாறு தங்கிவிடும் எரிவாயு பகுதிகளை பாறைகளில், நிலக்கரி படிமங்களில் செயற்கையாக விரிசல்களை ஏற்படுத்தி ஒன்றாக சேர்த்து வாயுக்களை மொத்தமாக எடுக்கும் முறையே எரிவாயு எடுக்கும் முறை.
நிலக்கரியானது அதிக நுண் துளைகள் கொண்ட இயல்பினையும் நீர் ஊடுருவும் தன்மையும் கொண்டதாக இருப்பது. நிலத்தில் இருந்து எடுக்கும்போது நீரை உறிஞ்சி ஈரமான தன்மைகொண்டிருக்கும். இந்த நிலக்கரி படிமங்களில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுக்கும்போது நீரை முற்றிலுமாக வெளியேற்றினால்தான் அங்கிருந்து இயற்கை எரிவாயுவை சேகரிக்க முடியும்.
இங்கு தான் விசயமே இருகின்றது. . ஆபத்தும் இருகின்றது. . . .
நீரை முற்றிலுமாக வெளியேற்றுவது என்பது நிலத்தடி நீரை. மேலும் மேலும் அதிக ஆழத்தில் துளையிட்டு அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரானது எதற்கும் உபயோகப்படாது. ஏனனெனில் அதிக ஆழத்தில் வெவ்வேறு வகையான குணங்கள் கொண்ட தனிமங்கள் நீரில் கலந்து மேலே வரும். நிலக்கரியின் நுண் கரி துகள்களும் கலந்து வரும். இந்த நீரை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியாது.
தஞ்சாவூரில் வரும் CBM திட்டம் நிறைவேற வேண்டுமானால் நிலத்தடி நீரை முற்றிலுமாக அங்கிருந்து அப்புறப்படுத்த பட வேண்டும். இப்பொழுது இதன் ஆபத்தின் பரிமாணம் விளங்கும்.
மேலும் நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் அதை எடுக்கும் முறையில் நீர்தான் அதிக அளவு பயன்படுத்தப்படும். நீரை பயன்படுத்தி எரிவாயு எடுத்து நீரை முற்றிலுமாக அழித்து சுற்றுசூழலை மாசுபடுத்தும் இந்த CBM முறை.
இது எடுக்கப்படும் முறைகளில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் (Hydraulic fracturing) நீரியல் விரிசல் ஏற்படுத்தும் ஆபத்து பற்றி அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன். மிகுந்த தீமையை ஏற்படுத்தும் இந்த நீரியல் விரிசல் முறையை பற்றி நம் மக்களுக்கு எந்த அரசும் தெரிவிக்கப்போவதில்லை. நிறைய நாடுகள் இந்த முறையை தடை செய்துள்ளன. அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய நாட்டின் மக்கள் தொகை அதிகமான இடங்களில் இந்த முறையை தடை செய்துள்ளது அது போலவே ஆஸ்திரலியா சில இடங்களில் தடை செய்துள்ளது. இதை முற்றிலும் தடை செய்ய அங்கும் மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. மிக அதிகமான எண்ணிக்கையில் சிறிய நாடுகள் இதை முற்றிலுமாக தடை செய்தது கவனிக்க வேண்டிய விசயமாகும். இப்படிப்பட்ட ஆபத்தை நம் மண்ணுக்கு கொண்டுவர இந்திய் அரசு துடிக்கிறது.
இங்கு இந்த நீரியல் விரிசல் (Hydraulic fracturing) முறையில் ஏற்படும் தீமைகள் சிலவற்றை பார்ப்போம்.
# கழிவு கலந்து வெளிவரும் நீர்: மீத்தேன் நிலக்கரி படுகையில் இருந்து எடுக்க வேண்டுமானால் தொடர்ந்து நிலத்தடி நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த நீர் மிகுந்த மாசடைந்து வேதிப்பொருட்களான பென்சீன், டொலுவீன், ஈதைல்-பென்சீன் மற்றும் கடின தனிமங்களான ஆர்சனிக், காட்மியம், ஈயம் மற்றும் பாதரசம் கலந்து வரும். உலகின் இந்தமுறையை மேற்கொண்டு மீத்தேன் எடுத்த மிகுதியான இடங்களில் கதிரியக்க தனிமங்களும் நீரில் கலந்து வெளிவந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
# நீரை அப்புறப்படுத்தல் : தினந்தோறும் பல மில்லியன் லிட்டர் அளவில் ஒவ்வொரு எரிவாயு கிணற்றில் இருந்து மாசடைந்த நீர் வெளியேற்றப்படும். இந்த நீர் பாசனத்திற்கோ மக்களின் உபயோகத்திற்கோ சற்றும் உகந்தல்ல. எனவே இந்த நீரை ஒரு ஏரி போன்ற இடத்தில தேக்கி சூரிய ஒளியில் ஆவியாக மாற்ற முயன்றார்கள். இருந்தாலும் மிகுதியான நீர் மேலும் மேலும் சேரும் பட்சத்தில் அதை அருகில் உள்ள ஆற்றில் விடுவார்கள். காவரி முற்றிலும் கழிவு கலந்து கருப்பாக ஓடும் அவலத்தையும் பார்கப்போகிறோமா? ஸ்கட்லாந்து நாட்டில் அரித் (Arith) என்ற இடத்தில அமைந்துள்ள எரிவாயு கிணற்றில் இருந்து வெளிவரும் நீரை அங்கு ஓடும் Forth என்ற நதியின் முகத்துவாரத்தில் தனியாக ஒரு குழாய் வைத்து கலக்கிறார்கள். அங்கும் மக்கள் போராடுகிறார்கள்.
# நிலத்தடி நீர் குறைதல் : தொடர்ச்சியாக வெளியேற்றப்படும் நீரினால் நிலக்கரி படுகையில் உள்ள நீரானது முற்றிலுமாக வெளியேற்றப்படும். இதனால் நிலத்தடி நீர் இன்னும் கீழே சென்று நிலக்கரி படிமங்களில் கலக்க நேரிடும். இதனால் விவசாயிகள் மற்றும் மக்களின் தேவைக்காக போடப்படும் போர்வெல் மீத்தேன் வாயு கலந்த நீரை வெளியேற்றும் ஆபத்தும் உண்டு. ஆஸ்ட்ரேலியாவில் இத்தகைய ஆபத்து நிகழ்ந்தது.
# காற்று மாசடைதல் மற்றும் தீப்பிடிக்கும் ஆபத்துகள்: மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் நாற்றம் அடிக்கும் பல்வேறு வாயுக்கள் மீத்தேன் எரிவாயு கிணற்றில் இருந்து வெளியேறும். மேலும் பரவி கிடக்கும் அதன் குழாய்களில் இருந்து பல்வேறுவிதமான தூசிகளும் வெளியேறி காற்றை மாசுபடுத்தும். தீப்பிடிக்கும் இயல்புள்ள இத்தகைய இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டதற்கான உதாரணங்கள் உள்ளன. கரும்புகை வெளியேறும் இத்தகைய எரிவாயு குழாய்களின் நெருப்பை அணைப்பது மிக எளிதல்ல.
# மீத்தேன் வாயு நீர்நிலைகளில் கலக்கும் ஆபத்து : எரிவாயு கிணறுகளில் எரிவாயுவை எடுக்க நிலத்தில் மிக ஆழத்தில் (கிட்டதட்ட 10,000 மீட்டர்) செயற்கையான நீரியல் விரிசல்கள் ஏற்படுத்தப்படும். அதிலிருந்து மிக அதிக அழுத்தத்தில் வெளியேறும் மீத்தேன் வாயுவானது எரிவாயு குழாய்களில் ஏதாவது சிறிய விரிசல் இருந்தாலும் அதன் மூலமாக வெளியேறும் ஆபத்து உள்ளது. நீர்மட்டத்தை கடக்கும் இடத்தில குழாய்களில் ஏற்படும் விரிசல் மீத்தேன் வாயுவை நீராதரங்களுக்கு கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது. ஆஸ்திரிரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள காண்டமைன் ஆற்றில் இப்படி நிகழ்ந்து உள்ளது. மேலும் சில வீட்டில் உள்ள குடிநீர் குழாய்களில் இப்படி மீத்தேன் கலந்தும் வந்துள்ளது.
# கசிவுள்ள எரிவாயு குழாய்கள் : ஆய்வின்படி சராசரியாக 6% குழாய்கள் உடனடியாக கசிவுகளை உண்டாக்குகின்றன 50% எரிவாயு குழாய்கள் 15 வருடங்களுக்கு பிறகு கசிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த CBM எரிவாயு திட்டமானது நூற்றுக்கணக்கான எரிவாயு கிணறுகளை கொண்டதாகவே அமையும். இந்த எரிவாயு கிணறுகள் என்றுமே மறு உபயோகத்திற்காக சீர்செய்யப்படுவதில்லை. எரிவாயு கிணறுகளை தொடர்ந்து பராமரிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை. கிணறுகளில் பதிக்கப்பெறுவதாக சொல்லப்படும் ஸ்டீல் குழாய்களும் காலபோக்கில் அவை கிணறுகளிலேயே விழுந்து கசிவுகளை நிரந்தரம் ஆக்குகின்றன.
எரிவாயு கிணறு அமைந்துள்ள இடத்தினால் ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேடு : இந்த CBM எரிவாயு எடுக்கும் கிணற்றினை சுற்றிலும் கண்டிப்பாக சாலைவசதி தேவைப்படும். ஒரு நாளைக்கு கிட்டதட்ட 70 லாரிகள் ஒவ்வொரு கிணற்றிக்கும் செல்லும் தேவை உண்டு. கனரக வாகனங்கள்,மிகபெரிய லாரிகள் என்று கிணறு இயங்கும் குறைந்தபட்ச காலமான 20 ஆண்டுகாலம் வரையும் இவ்வாறு சென்றுவந்தால் அந்த இடத்தின் சாலைகள் எவ்வாறு இருக்கும் என்றும், நூற்றுகணக்கான எரிவாயு கிணறுகள் இவ்வாறு சாலைகள் மூலம் ஒன்றை ஒன்று இணைத்து கொண்டு இயங்கும். இவை பிரத்தியேகமான சாலைகள். வயல்களை அழித்து இந்த சாலைகள் போடப்பெற்றால் வயல்வெளிகள் அனைத்தும் பாழாய்ப் போகும். மேலும் அதிக வெளிச்சத்தை உமிழும் விள்க்குகள், மிகுந்த சப்தத்தை எழுப்பும் கருவிகள் என்று ஒலி,ஒளி,வளி,நிலம் அனைத்தும் நாசமாகப் போகும்.
குழாய்கள் பதிப்பது: இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து பெறப்படும் எரிவாயு குழாய்கள் மூலம் வேறு ஒரு இடத்தில சேகரிக்கப்படும். இவ்வாறு செல்லும் குழாய்களில் ஏற்படும் கசிவு மிகப்பெரும் விபத்தினை ஏற்ப்படுத்தும் சாத்தியம் உள்ளது. மக்கள் வசிக்கும் இடங்களில் இந்த குழாய்கள் சென்றால் மக்கள் அருகில் செல்லாதவாறு குறிப்பட்ட அளவு இடம் எரிவாயு நிறுவனத்தாரால் ஆக்கிரமிக்கப்படும். இங்கு நீங்கள் GAIL திட்டத்தால் தருமபுரி, திருப்பூர் பகுதிகளில் விவசாயிகளின் வயல்களை ஆக்கிரமித்து பதித்த குழாய்களை நினைவில் வைக்கவும்.
சுத்திகரிப்பு நிலையங்களினால் ஏற்படும் சீர்கேடு : இந்த நூற்றுக்கணக்கான எரிவாயு கிணறுகள் அனைத்தும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு ஒரு முதன்மையான சுத்தகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லப்படும். அவ்வாறு அமைந்துள்ள சுத்தகரிப்பு நிலையங்கள், மீத்தேன் தவிர கிடைத்துள்ள தேவையில்லாத வாயுக்களை வெளியேற்றுவர். எளிதில் தீப்பிடிக்கும் இந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதை தடுக்கும் விதமாக நெருப்பில் பற்ற வைத்தே அவற்றை நீக்க முடியும். நீங்கள் எரிவாயு கிணறுகளில் அருகில் பார்ப்பதாக இருக்கும் நீண்ட நெருப்பு ஜுவாலைகள் வெளியேறும் குழாய் இந்த வகையை சேர்ந்ததே. இதன் மூலம் வளிமண்டலத்தில் மிகுந்த தீமையை ஏற்ப்படுத்தும் ஆர்சனிக் கழிவுகள் கலக்கும். சுவாசிக்கும் அனைத்து உயிர்களும் பாதிக்கப்படும்.
தொழிற்சாலை சூழலாகும் கிராமங்கள்: அமைதியான கிராம சுற்றுசூழல் இந்த எரிவாயு கிணறுகளினால் முற்றிலும் இயந்திரமயமான தொழிற்சாலை போன்ற சூழலுக்கு தள்ளப்படும். இதனால் அந்த மண்ணை சார்ந்து வாழும் உயிரிகள் முற்றிலுமாக அழிந்துவிடும் அல்லது பாதிப்படையும். முற்றிலும் கிராமங்களே அதிகமாக இருக்கும் தஞ்சை மற்றும் அதன் சுற்றுபுறங்கள் இதனால் மிகுந்த பாதிப்பு அடையும்.
நிறுவனங்களின் லாபத்திற்காக பலியாகும் சமூகங்கள்: இங்கிலாந்து குடியரசின் உள்ளே இந்த CBM நிறுவனங்கள் உள்ளே நுழைந்த பின்பு அங்கு வாழும் மக்களின் சமூகங்களுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல்கள் பல்வேறு வடிவங்களில் வந்தன. இதனால் வேறு வழியில்லாமல் வேறு இடங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் குடிபெயர்ந்தார்கள். மற்றும் சில சமூகங்கள் எரிவாயு கிணறுகளின் அருகிலேயே மாசடைந்த சுற்றுசூழலில் வாழும் துர்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள். இந்த நிறுவனங்களின் முதலாளிகள் மட்டும் லாபத்தில் கொழிக்க மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள். இந்த நிலைதான் மற்ற நாடுகளுக்கு இதன் தீமைகளை எடுத்து சொல்லியது.
நிலத்தினுள் தீப்பிடிக்கும் அபாயம் : CBM எரிவாயு கிணறுகளில் தொடர்ந்து மீத்தேன் எரிவாயு எடுக்கவேண்டும் என்றால், அந்த கிணறுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் நிலத்தின் மீது கட்டப்படிருக்கும் வீடுகள், மற்றும் அனைத்து கட்டுமானங்களும் பாதிப்படையும். இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறும் வாயுக்கள் தீ பிடிக்கும் வாய்ப்புகள் அமையும்போது பூமியின் உள்ளே இருக்கும் நிலக்கரி படுகைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உண்டு. அப்படி தீப்பிடித்தால் அதை எளிதில் அணைக்க முடியாது இதற்க்கு உதாரணமாக இங்கேயே இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜஹாரியா என்ற இடத்தில நிலக்கரி படுகையில் தீப்பிடித்து அதை இன்று வரை அணைக்க முடியவில்லை. 1916ம் ஆண்டு தான் பூமிக்கு கீழ் நிலக்கரி படுகையில் தீப்பிடித்ததை கண்டறிந்தார்கள். கிட்டத்தட்ட 97 ஆண்டுகளாக அந்த தீ இன்றும் எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு வாழும் மக்கள் பல்வேறு நோய்களின் பாதிப்பினால் சிரமப் படுகிறார்கள்.
நிலக்கரி எடுக்கும் மாற்றுமுறைகள் : இவ்வாறு மீத்தேன் எரிவாயு எடுத்து முடித்தபின் பூமிக்கு கீழே இருக்கும் நிலக்கரிகளின் மீது அவர்களின் கவனம் திரும்பும். சில இடங்களில் திறந்த நிலக்கரி சுரங்கங்களும் மற்ற இடங்களில் மாற்று வழியில் நிலக்கரியை இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து எடுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலக்கரியானது உயிர்வேதி மாற்றத்தினால் கிடைக்கும் எரிபொருட்களிலேயே (Fossil Fuel)மிகுந்த மாசடைந்த எரிபொருள். இந்த நிலக்கரி எடுக்கும் முறைகளினால் நிலமும், சுற்றுச்சூழலும் மிகுந்த பாதிப்பு அடையும்.
பாதிப்புகளை சந்திக்கும் தற்போதைய தொழில்கள்: இந்த CBM எரிவாயு திட்டம் எங்கெங்கு எல்லாம் வருகிறதோ அங்கு இருக்கும் அனைத்து தொழில்களும் பாதிப்பு அடையும். விவசாயம், சுற்றுலா, சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் முற்றிலுமாக மூடும் நிலையை அடையும்.
திடீர், தற்காலிக வளர்ச்சிகளும் நீண்டகால பாதிப்புகளும்: முந்தைய தொழிற் துறைகள் அனைத்தும் இதனால் பாதிப்பு அடையும். இந்த திட்டத்தினால் நீண்டகாலமாக மக்களின் பொருளாதாரமாக, வாழ்வாதாரமாக இருந்த அனைத்து வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கபடும். தற்காலிக மற்றும் குறுகியகால வளர்ச்சி மற்றும் லாபத்திற்காக நீண்டகால பாரம்பரிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் தொழிற் துறைகள் மக்களால் கை கழுவப்படும்.
கன ரக வாகனங்களின் போக்குவரத்து: எரிவாயு குழாய்களை பதிக்க துளை போடும்போது வெளிவரும் மண் மற்றும் கல் கழிவுகள் பெருமளவில் மலை போல குவித்து வைக்கப்படும். இந்த மண் மற்றும் கல் குவியல்களை அங்கிருந்து அப்புறப் படுத்துதல் மிக அவசியம். ஒவ்வொரு எரிவாயு குழாய்களில் இருந்து தோண்டப் பெரும் மண் குவியல்களை அப்புறப் படுத்த பெருமளவில் கன ரக வாகனங்கள் பயன் படுத்தப்படும். இந்த வாகனங்கள் தொடர்ந்து வந்தும், போய் கொண்டும் இருப்பதால் சுற்றி இருக்கும் நிலம் பாதிக்கபடும். இது மட்டும் அல்லது துளை போடும் இயந்திரங்களை சுமந்துகொண்டு வரும் வாகனங்கள் எண்ணிலடங்காது.
சாலை பாதிப்பு மற்றும் நிலநடுக்க அபாயம்: எரிவாயு குழாய்களுக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டும், கழிவுகளை சுமந்து கொண்டு வெளியேறும் வாகனங்களால் சாலை முற்றிலும் சேதமடையும். மேலும் வழக்கமான முறையில் நிலக்கரி எடுக்கும் இடங்களிலும் மற்றும் CBM எடுக்கும் முறையில் பயன்படுத்தப் பெறும் நீரியல் விரிசல் முறையில் சில இடங்களில் நிலநடுக்கங்கள் வந்துள்ளது கவனிக்க படவேண்டிய அபாயம்.
வசிப்பிடத்தின் பாதிப்புகள் : எரிவாயு கிணறுகளில் அருகில் வசிக்கும் மக்கள் அவர்களின் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு முற்றிலுமாக குறைந்து விடும். அதை அவர்கள் மராமத்து பண்ணுவதோ மற்றும் அவற்றை விற்பனை செய்வதாலோ எந்த பயனும் ஏற்ப்படப் போவதில்லை. இந்த எரிவாயு கிணறுகள் அமையும் இடங்களில் எரிவாயு கிணறுக்கான உள் கட்டமைப்பு அதன் அமைப்பின் இயல்பால் ஏற்கனவே இருந்த தொழிற் சாலைகள் மிகுந்த நஷ்டங்களை எதிர்கொள்ளும். உதாரணமாக, இந்த எரிவாயு கிணறுகளை இணைக்கும் சாலைகள் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் வழி தஞ்சையை பொறுத்த வரை அதனை சுற்றியுள்ள வயல் வெளிகளில்தான் செல்லும். எனவே எப்படி பார்த்தாலும் தஞ்சை விவசாயம் என்பது இந்த CBM திட்டத்தினால் முற்றிலும் அழியப்போகும் என்பது உறுதி.
மாற்று எரிபொருள் திட்டத்திற்கான எதிரி இந்த CBM: மேலும் மேலும் இந்த மீத்தேன் திட்டத்தில் செய்யப்படும் முதலீடானது இப்போது மிகுந்த அறிவாற்றலுடன், செயல் திறனுடனும் செய்யப்படும் அனைத்து மாற்று எரிபொருள் உற்பத்தி திட்டங்களுக்கும் மாபெரும் எதிரியாக மாறப்போகிறது. சூரிய ஒளியின் மூலமாகமின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களும், காற்றலை திட்டங்களும் இதனால் நேரடியாக பாதிக்கப்படும். மறு சுழற்சியின் மூலம் பெறப்படும் மின்சார திட்டங்கள் இப்பொழுதுதான் மிகுந்த வளர்ச்சியின் நிலையில் உள்ளன. அவற்றை அழித்துவிடக்கூடிய வல்லமை கொண்டது CBM.
காலநிலை மாற்றம் : எந்த வகையில் பார்த்தாலும் இந்த CBM மீத்தேன் வாயு எடுக்கும் முறையானது மற்ற உயிர்வேதி பொருட்களின் கால மாற்றத்தினால் தோன்றக்கூடிய மற்ற எரிபொருட்களுக்கு (Fossil Fuel) மாற்று அல்ல. ஏனெனில் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை இந்த மீத்தேன் எரிவாயுவில் கலந்தால் மட்டுமே இந்த மீத்தேன் வாயுவை பயன்படுத்த முடியும். மேலும் மேலும் விரிவுபடுத்தப்படும் இந்த தொழில்நுட்பமானது கரியமில பொருட்களை உற்பத்தி செய்யும் முறையை விரிவாக்குவதால் பூமி வெப்பமயமாதலுக்கே வழி வகுக்கும். இந்த பருவநிலையில் ஏற்படும் வேதி மாற்றமானது பஞ்சத்திற்கும், பெரு வெள்ளத்திற்கும் மற்றும் பட்டினி சாவுகளுக்கும் காரணமாகின்றது. ஆய்வுகளின் படி ஆண்டிற்கு 45,000 மக்களின் இறப்பிற்கு இந்த மீத்தேன் எரிவாயு எடுக்கும் CBM காரணமாகின்றது.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
பொருள்: மன்னன் முறை தவறி ஆட்சி செய்வானாயின் அந்த நாட்டில் பருவ மழை தவறி, மேகம் மழை பெய்யாமல் போகும்.
- த.அருண்குமார், மே 17 இயக்கம் (
- விவரங்கள்
- ஜெ.பிரபாகர்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1.5.1994இல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதனால் 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.
பின்னர் 10.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அரசின் சார்பில் 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 1996 இல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பரதவர், நாடார் இடையே திட்டமிட்ட சாதி மோதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளர், தேவர் இடையே சாதி மோதல்கள் வீரியமானது. இதன் பிண்ணனியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற - தமிழ்மாந்தன் தலைமையிலான - அமல்ராஜ் என்ற இறையரசு, ராஜேஸ் என்ற கடலரசன், செ.ரெ.வெனி இளங்குமரன், சி.சற்குணம், ம.சான்சன், ம.அன்வர், முத்துராஜ், அ.அருள்ராஜ் ஆகியோரைக் கொண்ட அமைப்பு 20.7.1996 அன்று நடத்திய ஸ்டெர்லைட் மாநாட்டில் திரளான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொச்சியில் இருந்து லாரிகள் மூலம் தாமிரத் தாதுக்கள் கொண்டு வரப்பட்டதோடு, 19.10.1996 இல் எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் 20.10.1996 முதல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். 152 விசைப்படகுகள், 36 நாட்டுப் படகுகளில் ஒன்று திரண்ட மீனவர்கள் 24.10.1996 இல் அக்கப்பலை முற்றுகையிட்டு துறைமுகத்தை விட்டே வெளியேற்றினர்.
இதற்கிடையில் 1996 இறுதியில் தமிழக முதல்வரான கருணாநிதி அனுமதி கொடுத்ததால் 1997 முதல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் குறிப்பிட்ட அளவில் அமைக்கவில்லை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 7.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.
இதற்கிடையில் 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்து 2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர்.
நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998 இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். அதனடிப்படையில் நடந்த விவாதத்தின் முடிவாக 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் குழு உத்தரவிட்டது. அதன் பின்னர் நீதியரசர் அகர்வால் தலைமையிலான அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டு 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நாக்பூர் நீரி நிறுவனம், 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. 1999-ஆம் ஆண்டில் பல்டியடித்த நீரி நிறுவனம், 2003-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது. இதற்கு காரணம் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர். இது விதியை மீறிய செயல் ஆகும்.
21.9.2004 இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது உள்ள உற்பத்தி திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆதலால் இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக்கூடாது என்றும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்பப் பெறுமாறும் உச்ச நீதிமன்றத்தின் குழு அறிவுறுத்தியது. ஆனால், மறுநாளே 22.9.2004 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.
2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால், 2005 இல் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு இதனையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.
உச்சநீதிமன்றத்தின் முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆலோசனை கூறியது.
7.4.2005 இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, "உச்ச நீதிமன்ற குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.4.2005 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறி கட்டப் பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.
பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில் 24.7.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் ரூ.750 கோடி வரிஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது மீண்டும் துவங்கிய போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் அமைப்பு உள்ளிட்ட வழக்குரைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரதராஜன் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.
மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், பேரா.பாத்திமா பாபு முன்னிலையில் தாமிரபரணி பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 26.7.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், வழக்கை நடத்தாமல் வேதாந்தா குழுமம் இழுத்தடித்தது. 2012 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன. 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர இருக்கிறது.
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்தான், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள்,மரங்களின் இலைகளும், பூக்களும், நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.
அதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விபத்திற்கான பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 1997 மற்றும் 1998 இரு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மொத்தம் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் அபராதம் கட்டியுள்ளனர்.
1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.
அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல் மூடப்பட்டது. கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.
தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அதனால் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள்.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.
எனினும் மக்கள் மன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படும் போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.
- ஜெ.பிரபாகர் (
(நன்றி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, பூவுலகின் நண்பர்கள்)
- விவரங்கள்
- பி.தயாளன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலக வங்கி பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளும், உலகமயம், தனியார் மயம், தாராளமயம் ஆகிய மூன்று முழக்கங்களும் இந்தியாவைச் சுரண்டும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள வளரும் நாடுகளில் தங்கள் வணிகத்தையும், மூலதனத்தையும் செலவிட்டுப் பெருவாரியாக இலாபம் ஈட்ட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான சபை 1992 ஆம் ஆண்டு சுற்றுச் சூழலுக்காக உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து நடத்திய உச்சி மாநாடு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகத்தைச் சுற்றுச் சூழல் சீரழிவிலிருந்து பாதுகாக்க இதுவே கடைசி வாய்ப்பு என்று உலக நாடுகள் ஆவலுடன், எதிர்பார்ப்புகளுடன் கலந்து கொண்டன. அந்த புவி உச்சி மாநாட்டில் மூன்று முக்கியமான சிக்கல்கள் ஆய்வு செய்யப்பட்டன.
புவி வெப்ப உயர்வுக்கு மூல காரணமாக இருப்பது காற்றின் மாசுபாடு ஆகம். குறிப்பாகக் கார்பன்-டை-ஆக்சைடு காற்று மண்டலத்தில் அதிகமாவதற்குத் தொழிற்சாலைகளும், வாகனங்கள் வெளியிடும் புகையும் முக்கிய காரணம். பணக்கார நாடுகள் காற்றின் மாசுபாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே மேலை நாடுகள் அதிலும் அமெரிக்கா தனது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று புவி உச்சி மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அப்போதைய அமெரிக்கா ஜனாதிபதி பேசும்போது, அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் எரிபொருள்களைக் குறைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆணவமாக பதிலளித்தார்.
பல்லுயிர் பெருக்கம் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மிகப் பெரும் சொத்தாகும். உயிரினத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாணிபம் செய்யும் பல பன்னாட்டுக் கம்பெனிகளும், இந்தப் பகுதியில் உள்ள உயிரினங்கள், தாவர வகைகள் மீது தங்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளன.
உயிரித் தொழில் நுட்பத்துக்காக ஒரு நாட்டில் இருந்து உயிரின மாதிரியை இந்தக் கம்பெனிகள் பயன்படுத்தினால் அதன் வருமானம் அந்த நாட்டுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்கா உட்பட பல மேலை நாடுகள் இந்த முடிவுல் கையெழுத்து போட மறுத்துவிட்டன.
பசுமையான ஒரு உலகத்தைப் படைத்திட உலக நாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல் திட்டத்தை அஜெண்டா 21 எடுத்துரைக்கிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டன. ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் தங்கள் நாட்டின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க பணக்கார நாடுகள் நிதியுதவி செய்ய வேண்டுமென புவி உச்சி மாநாட்டில் விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் திட்டத்திற்கான நிதியுதவி, தொழில் நுட்ப உதவி போன்றவைகளை மேலை நாடுகள் இன்றுவரை செய்யவில்லை.
மேலும் புவி உச்சி மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சம் உலகின் இயற்கை வளங்களைப் பங்கிடுவதிலும், பயன்படுத்திக் கொள்வதிலும் சமத்துவ நிலை வேண்டும் என்பதாகும். உலகின் 80 விழுக்காடு இயற்கை வளங்களை மேலை நாடுகளே அனுபவித்து வருகின்றன. இயற்கை வளங்களை அனுபவிக்க அனைவருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். ஆனால் சம உரிமை மறுக்கப்படுகிறது. பொருளாதார வளாச்சி என்பதும், தொழில் வளர்ச்சி என்பதும், இயற்கைச் சூழலைப் பாதிக்காத வகையிலும், நிலைத்த நீடித்த வளர்ச்சிக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால் உலக மயமாக்கலைத் தீவிரப்படுத்த நிர்பந்திக்கும் வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை எதிர்மறையாகச் செயல்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
கார்பன் - டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ புளோரோ கார்பன்கள் ஆகிய வாயுக்கள் (இவை பசுமைக் குடில் வாயுக்கள் என்று அழைக்கப்படுவையாகும்) காற்று மண்டலத்தில் அதிகமாகும்போது காற்று மண்டலத்தின் வெப்பம் உயர்வடைகிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிப் பொருட்களை எரிப்பதானது மனிதர்களின் வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்டது. இதனால் காற்று மண்டலத்தின் சராசரி வெப்ப நிலை 2100 ஆம் ஆண்டில் 1.47 டிகிரி சென்டிகிரேட் உயரும். இந்த உயர்வால் பங்களாதேஷ், சீனா, எகிப்து போன்ற நாடுகளின் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகுந்தது நிலப் பரப்பை அழிக்கும். மாலி போன்ற பல சிறு தீவுகளும், கடல் நீருக்குள் மூழ்கிவிடும் அபாயமும் உண்டு காற்று மண்டலத்தில் வெப்பம் உயர்வதைத் தடுக்க வளர்ந்த மேலை நாடுகள் பசுமைக் குடில் வாயுக்கள் வெளிப்படுத்தும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
1997 இல் ஜப்பான் நகரான கியோடோவில் மேற்கொண்டு நடத்திய விவாதங்களிலும், பேச்சுவார்த்தைகளிலும் 2008-2012க்குள் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியிடுவதை மேலை நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கியோடோ உடன்படிக்கை இன்னும் அமலுக்கு வரவில்லை.
வளர்ச்சியடைவதற்கும், இயற்கை வளங்களை அனுபவிப்பதற்கும் எல்லா மனிதர்களுக்கும் உள்ள சமத்துவ உரிமையை அடிப்படையாகக் கொண்டு வளரும் நாடுகள் வலியுறுத்தி வரும் இந்த உடன்படிக்கை நடைமுறையில் கேள்விக் குறியாக உள்ளது.
உயிரினத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல பெரிய கம்பெணிகள் (மான்சான்டோ, கார்கில்) அமெரிக்காவில் உள்ளன. கீழை நாடுகள் தங்களின் உயிரின வகைகளைத் தங்கள் நாடுளில் பாதுகாத்து வந்தால், இதைப் பயன்படுத்தி வரும் தாவர வகைகள், உயிரியல் வகைகளின் மேல் அந்த நாடுகளுக்கு உள்ள உரிமையைக் கேள்விக் குறியாக்கி வருகின்றன.
ஓசோன் படலம் பாதிப்படைவது பற்றி உலகத்தில் பார்வை 1970-இல்தான் திரும்பியது. 1988 ஆம் ஆண்டில் 2600 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவுக்கு வாயு மண்டலத்தின் மேற்பரப்பில் ஓசோன் பரப்பு மெலிவடைந்துள்ளது. பில் ஒசோன் பரப்பு மெலிவடைந்துள்ளது கண்டறியப்பட்டது. இது பூமியின் வடக்குப் பகுதியிலேயேதான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில வகையான இரசாயனங்கள் காற்று மண்டலத்தில் பரவி மேற்பரப்பை அடையும்போது ஓசோன் வாயுவை கரைத்துவிடும். துன்மைக் கொண்டுள்ளது. குளோரோ, புளோரோ கார்பன்கள் (ஊகுஊ) என்று அழைக்கப்படும் இந்த வாயுக்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும், அதற்கான செயல் திட்டத்தையும் 1987 இல் கையொப்பமிட்ட மான்ட்ரீஸ் உடன்படிக்கை வலியுறுத்துகிறது. ஆனால் டுபான்ட் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் குளோரோ புளோரோ கார்பன்கள் என்ற வாயுக்களைத் தங்கள் உற்பத்தியில் பயன்படுத்தி வருகின்றன. இதனால் ஓசோன் படலத்தின் ஓட்டை அதிகரிக்கும்.
அபாயகரமான கழிவுகள்
மேலை நாடுகள் அபாயகரமான கழிவுகளை வளரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் விலைக்கு விற்றுவிடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த 1992 ஆம் ஆண்டில் பேசல் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது. இதில் 148 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இதன்படி அபாயகரமான கழிவுகளை ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதியை நியாயப்படுத்துவதாக உள்ளது எனச் சுற்றுச் சூழல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன்பேரில் அபாயகரமான சில கழிவுகளை ஏற்றுமதி செய்வதை அறவே தடுக்கக்கூடிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தத் திருத்தத்தை இதுவரை 26 நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன.
உலகமயமாக்கலின் மிக அபாயகரமான அம்சம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல்வேறு தொழிலகங்களை இந்தியா போன்ற ஏழை நாடுகளில் அமைப்பதாகும்.
கடந்த பத்தாண்டுகளில் உலகின் பல இடங்களில் போர் ஏற்பட்டுள்ளது. ஈராக் மீது அமெரிக்காவினர் நடத்தி வரும் போர், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆகியவற்றால் நீரும், நிலமும் மாசடைந்துள்ளன. இரசாயன மருந்துகளாலும், பெட்ரோலியப் பொருட்களாலும் மக்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உலகின் வல்லரசு நாடுகளால் நடத்தப்படும் போர்களினால் சுற்றுச் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உலகின் வல்லரசு நாடுகளால் நடத்தப்படும் போர்களினால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.
உலகம் முழுவதும் மக்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராகப் போராட வேண்டிய அரசுகள் உலக வங்கியிடமும், அமெரிக்காவிடமும் மண்டியிட்டுக் கிடக்கின்றன. சுற்றுச் சூழலில் அக்கரை கொண்ட விஞ்ஞானிகள், அறிஞர்கள், கட்சிகள், மக்கள் இயக்கங்கள் பங்கு மிக முக்கியமானது. மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரச்சாரம் செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்திப் போராட வேண்டியது சமூகக் கடமையாகும்.
- தாவரங்களின் எதிரி - பார்த்தீனியம்
- ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பெஸ்டாஸ்!
- ஞெகிழியினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள்!
- மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!
- வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!
- அணுமின்சக்தி அழித்த உயிர்களின் வரலாறு
- புவி வெப்பமயமாதலும், முதலாளித்துவ அரசியலும்
- புவி வெப்பமயமும் தேசங்களின் இறையாண்மையும்
- இயற்கை வளங்களின் சூறையாடலும் ஆந்திர மக்களின் போராட்டமும்
- சுற்றுச்சூழல் வழக்குகள்/ஆராய்ச்சிகள் - நிபுணர்களும் விஞ்ஞானிகளும் யார் பக்கம்?
- பூமியைக் காப்பாற்றுவோம்!
- கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
- பருவநிலை மாற்றம்
- உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்
- ஞெகிழிக் குப்பைகளால் அழியும் மலை வனம்
- புவிவெப்ப உயர்வில் நமது பங்கு
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள்
- மக்களைப் பாழ்படுத்தும் புதிய அனல் மின் நிலையங்களை நிறுத்துக
- வேதிக் கழிவுகளால் வெறுமையாகும் கடலூர்!
- காற்றினிலே வரும் மாசு!