கீற்றில் தேட...
இயற்கை & காட்டுயிர்கள்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பூக்கள்தோறும் பாடி நடந்து, பூமி முழுவதைம் வர்ண ஜாலமாக்கும் வண்ணத்துப் பூச்சிகளை விரும்பாதவர்களாக இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். கவிஞர்களும், இலக்கியவாதிகளும் பாடிப் பாடி, இந்த வண்ண அழகுகளை நம் தோழர்களாக மாற்றியுள்ளனர். பல வண்ணங்களிலும், அளவுகளிலும் வாழும் இவை பூச்சிகள் என்று சொல்லப்படுகின்றன. என்றாலும் இறக்கைகளில் காணப்படும் பலவித வண்ணங்கள், அவை அமைக்கப்பட்டுள்ள விதம் போன்றவை என்றுமே நம்மைக் கவர்வன.
இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பே பூமியில் வண்ணத்துப் பூச்சிகள் தோன்றியதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் ப்ளோரிசன் ஏரிக்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட லிம்பாலிடே வண்ணத்துப் பூச்சியின் படிவம் “fossil” 4 கோடி வருடங்களுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. 1973ல் பிரான்சில் கண்டெடுத்த புதைபடிவப் பொருள்களின் ஆராய்ச்சிகள் இதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. இவை, ஆர்த்ரோபோடா என்ற வகையைச் சேர்ந்தவை. உயிரினங்களின் வகைப்பாட்டில், அதிக உயிரினங்கள் அடங்கிய பிரிவு இது. ஆர்த்ரோபோடா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் பல பகுதிகள் இணைந்து உருவான காலுள்ள உயிரினங்கள். இவை அடங்கியுள்ள பூச்சிகள் (insectae ) பிரிவில்தான் பிராணிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை பூச்சிகள் (insects). 29 பிரிவுகளில் 627 குடும்பங்கள் இதில் உள்ளன. இதில் லெப்பிடோட் டிரா குடும்பத்தில் வண்ணத்துப் பூச்சிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.
1735ல் கார்ல் லினயஸ் இப்பெயரை வழங்கினார். வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்வில் நான்கு நிலைகள் உள்ளன. முட்டை, லார்வா, பியூப்பா, வண்ணத்துப் பூச்சி. இணை சேர்ந்ததற்குப் பிறகு, பெண் வண்ணத்துப் பூச்சிகள் முட்டை இடுவதுடன் வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி ஆரம்பிக்கிறது. நான்காவது நிலையில் வண்ணத்துப் பூச்சி வெளியே வருகிறது. வண்ணத்துப் பூச்சிகளில் ஆண், பெண் வேறுபாட்டை அறிந்து கொள்வது கடினம். பியூப்பாவில் இருந்து வெளிவந்தவுடன் இணை சேரும் வண்ணத்துப் பூச்சிகளும் உள்ளன.முட்டையில் இருந்து வெளியே வரும் லார்வாக்கள் சாப்பாட்டுப் பிரியர்கள். இவற்றின் முதல் உணவு முட்டையின் ஓடு. பின், தொடர்ச்சியாக இலைகளைத் தின்னத் தொடங்குகிறது. வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் இவை தோலை உரித்துவிடும். அதனால் எது ஆண், எது பெண் என்று கண்டுபிடிப்பது கடினம். சிலந்திகள், குளவிகள், பிராணிகள், ஓணான்கள் போன்றவை இவற்றின் லார்வாக்களை உண்ணும் முக்கிய எதிரிகள். இவைகள் உணவு உண்ணும் வேட்கையுடன் லார்வாக்களின் அருகில் வரும். சில லார்வாக்கள் சிக்கிக் கொள்ளும். வேறு சில தந்திரமாகத் தப்பித்துக் கொள்வதும் உண்டு. சில லார்வாக்கள், சிறிய பாம்பு போல தங்களின் சுபாவத்தை மாற்றிக் கொள்ளும்போது, வேறு சில பறவைகளின் எச்சத்தைப் போல நடிக்கும். துர் நாற்றம் வீசி எதிரிகளை அருகில் நெருங்க விடாமல் செய்யும் லார்வாக்களும் உண்டு. ஆனால், இவை தோற்றுப் போவது மனிதரிடம்தான். விளைந்ததை எல்லாம் ஒட்டுமொத்தமாகக் கூட்டம் கூட்டமாகத் தின்னும் புழுக்களைத் துரத்த மனிதன் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கிறான். வண்ணத்துப் பூச்சிகளாக மாறி, மகரந்தச் சேர்க்கை செய்து இவை நம்மை வாழ வைக்கின்றன. இவற்றின் அழிவு நமக்கே ஆபத்தை விளைவிக்கிறது.
வண்ணத்துப் பூச்சியின் வாழ்வில், ஒவ்வொரு நிலையும் அதிசயமானது. இலைகளிலும், பூக்களிலும், செடிகளின் தண்டுகளிலும் இவைகள் முட்டை இடுகின்றன. சில பல முட்டைகள் முதல் நூற்றுக்கணக்கான முட்டைகளை இடுகின்ற வண்ணத்துப் பூச்சிகள் வரை உண்டு. பியூப்பாவில் இருந்து வெளிவந்தவுடன், இவை முட்டை இடுவதற்கான செடிகளைக் கண்டுபிடிக்கின்றன. மற்ற உயிரினங்கள் முட்டை இடாத துளிர் இலைகள்தான் இவற்றுக்குப் பிடிக்கும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவ்வாறு செய்வதால், பியூப்பாவிற்குத் தேவையான உணவு கிடைக்கும். துளிர் இலை முதிர்ச்சியடைய, உதிர்ந்து போக பல நாட்கள் ஆகும். ஆள் அரவம் இல்லாத இடமாக இருப்பதால் எதிரிகளின் நடமாட்டத்தைத் தவிர்க்கலாம். மற்றொரு அதிசயம் வண்ணத்துப் பூச்சிகள் எறும்புப் புற்றுகளிலும் முட்டையிடும். இது ஒன்றுக்கொன்று உதவும் செயல். முட்டையை எறும்புகள் பாதுகாத்துப் பராமரிக்கும். பியூப்பா விரிந்து வரும்போது பியூப்பாவின் வெளியில் இருக்கும் இனிப்புத் திரவம் எறும்புகளுக்கு உணவாகும்.
வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பத்தில் மிகவும் பெரியது அட்லஸ் மவுத் என்ற வண்ணத்துப் பூச்சி. இந்தியக் காடுகளில் மிக அரிதாகக் காணப்படும் இவற்றின் இறக்கை அளவு 30 செ.மீ. குவின் அலெக்சான்டர்ஸ் பேர்டு விங் (Queen Alexandras Birdwing ) உலகில் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி. இதன் இறக்கையின் அளவு சுமார் 250 மி.மீ. இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி சர்தர்ன் பேர்டுவிங் (Southern Birdwing). இதன் இறக்கை அளவு 140 முதல் 200 மி.மீ வரை. பாப்பிலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த ப்ளூ மார்மோன், ரெட் ஹெலன் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய வண்ணத்துப் பூச்சிகள்.
வண்ணத்துப் பூச்சிகளைப் போலவே பட்டாம்பூச்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை இரவில் மட்டுமே வெளியே வருகின்றன. என்றாலும் அபூர்வமாக பகலிலும் இவை வெளியே வருவதுண்டு. வண்ணத்துப் பூச்சிகளைக் காட்டிலும் அற்புதங்கள் நிறைந்தது இவற்றின் உலகம். நம் வீட்டிலும் வண்ணமயமான இந்த அதிசய உயிரினங்கள் விஜயம் செய்ய வேண்டும் என்றால் நம் வீட்டையே ஒரு வண்ணத்துப் பூச்சிகளின் நந்தவனமாக நம்மால் மாற்ற முடியும். அவற்றிற்கு அவசியமான செடிகளை நம் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்க்க வேண்டும். புல்லினத்தைச் சேர்ந்த செடிகள், எலுமிச்சை, கொய்யா, நெல்லி, ஏலம், மல்பெரி, அகத்தி போன்றவை வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் செடிகள். ஈரத்தன்மை உள்ள சூழல், நல்ல சுற்றுப்புறம் ஆகியவை இருந்தால், நம் வீட்டுத் தோட்டம் வண்ணத்துப் பூச்சிகளின் சொர்க்கமாக மாறும்.
வலசை செல்லும் பறவைகளைப் போல வலசை போகும் வண்ணத்துப் பூச்சிகளும் உண்டு. 3000 கிலோமீட்டருக்கும் கூடுதலாக, இவர்களின் ஆகாயப் பயணம் அமைகிறது. மொனார்க் பிரிவைச் சேர்ந்த வண்ணத்துப் பூச்சிகள் இதில் திறமையானவை. வேனில்காலத்தில் வடஅமெரிக்காவில் காணப்படும் இவை, குளிர்காலத்தில் தென்னமெரிக்காவை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கின்றன. கலிபோர்னியா, மெக்சிகோ, க்யூபா ஆகிய இடங்களில் அடைக்கலம் தேடும் இவற்றைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இந்த இடங்களுக்கு வருகை தருகிறார்கள். வயிறு நிரம்ப தேன் சாப்பிட்டால் சராசரி 1000 கி.மீ வரை இவற்றால் பறந்து செல்ல முடியும். ஓய்விற்குப்பின் மறுபடியும் பயணம் தொடரும். அமெரிக்காவில் மொனார்க்குகள் போல ஐரோப்பாவில் பெயின்ட்டெட் லேடி பிரபலமானவை. குளிர்காலம் ஆகும்போது வட ஆப்பிரிக்காவிற்கு கூட்டத்துடன் இவை பறந்து செல்லும். பறந்து சென்று அடையும் இடங்களில் முட்டையிடும். வேறொரு பருவ காலத்தில் இவற்றின் புதிய தலைமுறை, மற்றொரு வலசைப் பயணத்தை மேற்கொள்வதும் உண்டு. ஒரே நிறத்தில், இலட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பறக்கும் காட்சி, அற்புதமான ஒன்று. ஒன்றரை நூற்றாண்டிற்கு முன்பு ஒரு சூடான் பயணி தன் வண்ணத்துப் பூச்சி அனுபவங்களைப் பின்வருமாறு வர்ணித்துள்ளார்.
“நான் சூடான் வழியாக ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன். கடுமையான வெப்பத்தால் என்னையும் அறியாமல் லேசாகக் கண் அயர்ந்தேன். கண் திறந்து பார்த்தபோது எட்டிப் பிடிக்கும் தூரத்தில் எனக்கு முன்னால் ஏதோ ஒரு இனம் புரியாத காட்சி என் கண் முன்னால் விரிவதை உணர்ந்தேன். வேகமாக ஒட்டகத்தில் இருந்து இறங்கிப் பார்த்தபோது பியூப்பாவில் இருந்து வெளியே வந்த இலட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பறந்து விண்ணை நோக்கி உயர்ந்து செல்வதை நான் கண்டேன். வெறும் அரை மணிநேரத்திற்குள் அவை எல்லாம் கண் பார்வையில் இருந்து மறைந்து போயின”.
தென்னிந்தியாவில், பொதுவாக 5 வகை வண்ணத்துப் பூச்சிகள் காணப்படுகின்றன. குறிப்பாக இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள கேரளாவில் அதிகமாகக் காணப்படுகின்றன. வீடு, வயல்வெளிகள், வனப்பிரதேசங்கள், நிழல் பிரதேசங்கள், நகரங்களின் எல்லைப் பகுதிகள் போன்றவை இவற்றின் சூழல் மண்டலங்கள். பின் இறக்கைகளில் சிறு வால்களைக் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளும் உண்டு. இந்தியாவில், மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி இனமான கருட வண்ணத்துப் பூச்சி இனம் இன்ரு அழியும் அபாயத்தில் உள்ளது. பல வண்ணத்துப் பூச்சிகள் அடங்கிய ஒரு குடும்பம் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பம். மஞ்சள், வெள்ளை நிறங்களில் இவை காணப்படுகின்றன. உலகில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பங்களும் உள்ளன. இத்தகையவை தென்னிந்தியாவில் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. முன்கால்கள் மிகவும் சிறியதாக அமைந்த, தூரிகையின் நார்கள் போன்ற உரோமங்களால் மூடப்பட்டவை உரோமக்காலுள்ள வண்ணத்துப் பூச்சிகள். வாசனையை நுகர்வதற்கும், தேனுள்ள செடிகளை அறிந்து கொள்வதற்கும் இவற்றின் கால்கள் உதவுகின்றன. தவிட்டு நிறம், கறுப்பு நிறம், ஆரஞ்சு தவிட்டு நிறம் கலந்த வண்ணத்துப் பூச்சிகள் துள்ளிச் செல்லும் இயல்புடையவை. அளவில் சிறியவையான இவை, சுறுசுறுப்புடன் துள்ளித் துள்ளிச் செல்லும்.
சூழல் நலம்பெற, வண்ணத்துப் பூச்சிகள் நலமுடன் வாழ்வது அவசியம். வண்ணத்துப் பூச்சிகளுக்கான கிராமங்களை உருவாக்கி, அவற்றிற்குரிய சூழல் மண்டலங்களை அமைத்து, வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்பவர்கள், இயற்கையின் இந்த அற்புதப் படைப்புகள் பூமியிலிருந்து அழிந்து விடாமல் பாதுகாக்க முயற்சி செய்து வருகிறார்கள். மும்பையில் உள்ள பாம்பே இயற்கை வரலாறு அறக்கட்டளை (BNHS), கோழிக்கோடு இயற்கை வரலாற்றுச் சங்கம், திருவிதாங்கூர் இயற்கை வரலாற்றுச் சங்கம், போன்ற பல அமைப்புகள் வண்ணத்துப் பூச்சிகள் உலா வர உதவி செய்கின்றன. வண்ணத்துப் பூச்சிகளைத் தேடிய நம் பயணங்கள் நிச்சயம் இதற்கு உதவும். பூக்களே இறக்கை முளைத்து செடிகளிலிருந்து உயர எழும்பிப் பறப்பதைப்போலப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைக் குழந்தைகளுக்குக் காட்டிக் கொடுத்து, இவை பற்றிய ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் உருவாக்குவோம். இனி வாழ்வில் ஒவ்வொரு நாளும், இவற்றின் எழில்மிகு தோற்றத்துடன் நம் பொழுதுகள் விடியட்டும். எல்லாமுமாக விரிந்து பரந்திருக்கும் இயற்கை அன்னையின் நேசப்பிணைப்பில் சுற்றித் திரியும் வண்ணத்துப் பூச்சிகளுடன், வாருங்கள் நாமும் ஒவ்வொரு நாளும் பயணிப்போம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடல் கடந்து புகழ்பெற்ற ஜார்ஜ்
இந்த கேரளத்துப் புலியின் கதை நமக்குத் தெரியாவிட்டாலும் பிரான்சில் இவன் குழந்தைகளிடம் மிகப் பிரபலமானவன். பிரெஞ்சு எழுத்தாளரும், நடனக் கலைஞருமான லெயர் ல் மிஷேல் என்ற பெண்மணிதான் தன் சிறுகதைகள் மூலம் ஜார்ஜ் என்ற புலியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கடந்த 2021 டிசம்பரில் ஜார்ஜ் மரணத்திற்குக் கீழ்படிந்தான் என்றாலும் கதைகளின் வழியாக அவன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
மிஷேலிற்குக் கிடைத்த ஜார்ஜின் தோழமை
இயற்கைக்கும் விலங்குகளுக்கும் இடையில் இருக்கும் உறவைப் பற்றி ஆராய்வதற்காக ஒரு சில ஆண்டுகளுக்கு முன் மிஷேல் பிரெஞ்சு கலாச்சார மையமான அலியோன்சிஸ் பிரான்சிஸின் விருந்தாளியாக கேரளாவிற்கு வந்தார். ஆய்வுகளின் ஒரு பகுதியாக அவர் மிருகக்காட்சி சாலையில் டாக்டர் ஜேக்கப் அலெக்சாண்டரைச் சந்தித்தார்.
எழுத்தின் தொடக்கம்
அப்போது முதல் மிஷேல் தன் அனுபவங்களை எழுதத் தொடங்கினார். அமைதியாக கூண்டிற்குள் வாழ்ந்து கொண்டிருந்த ஜார்ஜ் என்ற புலியுடன் நேசம் மிக்க தோழமை ஆரம்பித்தது. நாட்டிற்குத் திரும்பியவுடன் “The story of George” என்ற பெயரில் ப்ளாக் (blog) மற்றும் வானொலித் தொடராக இந்தப் புலியின் கதைகள் பிறந்தன. கருத்தும் கற்பனையும் கலந்த ஜார்ஜின் கதைகள் ஜன ரஞ்சகமாயின. மிருகக்காட்சி சாலையின் ஊழியர்கள் இதில் கதாபாத்திரங்களாயினர்.குழந்தைகள் மனதில் என்றும் வாழும் ஜார்ஜ்
இதுவரை ஜார்ஜின் கதை 38 அத்தியாயங்களாக வெளிவந்துள்ளது. சனிக்கிழமைகள்தோறும் பிரான்சில் பிராத்தனேயு டவுனில் நடக்கும் வாசிப்பு இரவுகளில் (reading nights) ஜார்ஜின் கதைகளைக் கேட்க பலர் ஒன்று திரண்டனர். மிஷேல் ஷூட் செய்திருந்த ஜார்ஜின் காணொளிகள் கதை சொல்லலை மேலும் அழகானதாக்கியது. ஜார்ஜுடன் தொடர்புடைய கதைகள், சம்பவங்கள் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து பிரார்த்தனேயு டவுன் ஒரு இணையப் பக்கத்தையும் (webpage)ஆரம்பித்துள்ளது.
ஓவியமாக மாறிய புலி
கதை கேட்க வருபவர்களில் குழந்தைகள் ஏராளமாக இருந்தனர். அவர்கள் வரைந்த ஜார்ஜின் 23 ஓவியங்களை ஜனவரி 2022ல் திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஓவியங்களைப் பார்த்தபோதுதான் ஜார்ஜிற்கு பிரான்சில் இவ்வளவு இரசிகர்கள் இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
முதலில் பீதியை ஏற்படுத்தியவன் பிறகு ஹீரோ
இதற்கிடையில் ஜார்ஜ் கடந்த டிசம்பர் 2021ல் மரணமடைந்தான். இது மிஷேலையும், இரசிகர்களையும் சோகக்கடலில் ஆழ்த்தியது. புலிகள் சாதாரணமாக 16 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும். ஆனால் ஜார்ஜ் இந்த பூமியை விட்டு மறைந்தது அவனுடைய 22வது வயதில். 2015ல் இவன் காட்டில் இருந்து நாட்டிற்குள் நுழைந்தான்.
முப்பதிற்கும் அதிகமான வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடினான். மலையோர கிராமங்களை ஏழு நாட்கள் நடுங்க வைத்தான். இறுதியில் பிடிக்கப்பட்டான்.
திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரும்போது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. மூக்கின் நுனியும் உடைந்திருந்தது. சிறந்த பராமரிப்பினால் உடல் நலம் தேறினான். அந்த ஆண்டு பிரபலமான பிரேமம் என்ற மலையாளத் திரைப்படத்தின் கதாநாயகனின் பெயரும் கிடைத்தது. விலங்குகளை கூண்டிற்குள் அடைத்து வைத்து காட்சிப்படுத்தும் முறைக்கு எதிராக இருந்த மிஷேல் ஜார்ஜைப் பார்த்த பிறகு, அவனுக்குக் கிடைத்த பாசம் மிக்க பராமரிப்பைக் கண்டபிறகு தன் மனதை மாற்றிக் கொண்டார்.
என்றும் வாழும் ஜார்ஜ்
இயற்கையின் படைப்பில் காக்கா குருவி முதல் அணைத்து உயிரினங்களும் அன்பிற்கு அடிமை என்பதையே ஜார்ஜின் கதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அன்பு காட்டினால் பூமரம் முதல் யானை புலி வரை எல்லா உயிரினங்களும் என்றும் நம் நினைவில் வாழும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பது போல, ஏழைகளின் மரம் என்ற பெருமைக்குரியது மூங்கில். புல் இனத்தைச் சேர்ந்த இந்தத் தாவரம் அண்டார்டிகா, ஐரோப்பா தவிர உலகம் எங்கும் காணப்படுகின்றது. பூமியில் 190 வகைகளில் 1600 இனங்கள் உள்ளன. இதில் 138 இனங்கள் இந்தியாவில் உள்ளன. அதிவேகமாக வளரும் இவை எடை குறைவு, உறுதித்தன்மை, மினுமினுப்பு போன்ற பண்புகளால் கட்டுமான செயல்களுக்கு உகந்தவையாக உள்ளன.
கூட்டமாக வளர்தல், வலுவான கணுக்கள், நார்ப்படலம் போன்ற பண்புகள் சூழல் பாதுகாப்பிற்கு மூங்கில் மரங்களை உகந்தவையாக மாற்றுகின்றன. குன்றின் சரிவுகள், வயலோரங்கள், மலைகளில் குறைந்த பராமரிப்புடன் வேகமாக வளர்வதால் இந்த மரங்களை ஒரு விளைபயிராகவும் விவசாயிகள் வளர்க்கின்றனர். நல்ல விலை, மரத்திற்கு மாற்றாக பல வேலைகளுக்கும் பயன்படுத்தலாம் என்பதால் இது பரவலாக வளர்க்கப்படுகிறது.
2 செமீ மட்டுமே அளவுள்ள ராடியெல்லா ரமன்சே என்ற பிரேசிலியன் இனம் முதல் 50 மீ உயரம் வரை நம் நாட்டில் வளரும் டெண்ட்ரோகிளாமஸ் ஜைஜான்ண்டிஸ் என்ற பிரம்மாண்ட இனம் வரை இவை பல தரத்தில் உள்ளன. ஒற்றை மூங்கில், சீன மூங்கில், தோட்ட மூங்கில், அலங்கார மூங்கில் என்று பல வகைகள் உள்ளன. திருவனந்தபுரம் பாலோடு என்ற இடத்தில் ஜவஹர்லால் நேரு வெப்பமண்டலப் பயிர்களுக்கான பூங்காவில் (JNTBGRI) மூங்கில் பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன.தோட்டப் பயிர்களுக்கான ரகங்கள் திசு வளர்ப்பு முறையில் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இதற்காக இங்கு 20 ஏக்கர் பரப்பில் 63 இனங்கள், 45 கலப்பினங்கள் அடங்கிய 1200 மூங்கில் மரக்கூட்டங்களின் தோட்டம் (மூங்கில் சிப்பம்) உள்ளது. மூங்கில்கள் மண் இடிந்து விழுதல், மண் சரிவு, மண் அரிப்பு, நதிக்கரை பாதுகாப்பு, சூழல் மீட்பு (eco restoration), பாறைகள் உருண்டு விழுதல், வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களைத் தடுக்க உதவுகின்றன.
காற்று மண்டலத்தில் வெளியிடப்படும் கார்பனின் அளவைக் குறைக்க, இதன் மூலம் வாயு மாசின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
இவற்றிற்கு நீர்மாசுக்களை உறிஞ்சி எடுக்கும் ஆற்றல் உண்டு. நட்டது முதல் உயிருள்ளவரை வெட்ட வெட்ட கிளைகள் மீண்டும் மீண்டும் வளர்வதால் இவற்றை மறுஜென்மம் எடுக்கும் மரங்கள் என்று சொல்லலாம். இவை இனத்திற்கு ஏற்ப 20 முதல் 120 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஒரு வித்திலைத் தாவரங்களான இவை ஆயுள் முடியும்போது ஒன்றுசேர்ந்து பூக்களை மலரச் செய்கின்றன.
விதை உற்பத்தி செய்தபிறகு மண்ணுடன் மண்ணாக மறைந்து போகின்றன. குறைந்த நீர்த்தேவை, பராமரிப்பு, பன்மயத்தன்மை, குறைவான முதலீடு போன்றவற்றால் இவை தாய்த்தாவரங்களின் மரம் என்று அழைக்கப்படுகின்றன.
கைவினைப் பொருட்கள், ஆயுதங்கள், மருந்துகள், வீட்டு உபகரணங்கள், இருக்கைகள், வேளாண் கருவிகள், சமூகப் பயன்பாட்டிற்குரிய உபகரணங்கள், வீட்டு கட்டுமானங்கள் போன்றவற்றிற்கு நீடித்த மூலப் பொருளாக மூங்கில் பயன்படுகிறது. மூங்கில் வீடுகள் சூழலுக்கு நட்புடையவை, குறைந்த செலவிலானவை. மூங்கிலின் அரிசி, பூ மொட்டுகள் உணவாகப் பயன்படுகின்றன. இதன் தடி ஒரு எரிபொருள், நீர் சுத்திகரிப்பான்.
பல உயிரினங்களின் உணவாகவும், வாழிடமாகவும் உள்ளன. பெரிய பாண்டா, சிவப்பு பாண்டா, வௌவால்கள், மூங்கில் எலி போன்றவை சில எடுத்துக்காட்டுகள். 2009 முதல் செப்டம்பர் 18 உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது.
காடுகளில் வனவிலங்குகள் சாலைகளைக் கடக்கும்போது விரைந்து செல்லும் வாகனங்களின் மோதி உயிரிழப்பதைத் தடுக்க மூங்கில்கள் கொண்டு அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் பயன்படுகின்றன. இந்த பாலங்கள் கோவை அருகில் உள்ள ஆனைக்கட்டி, கேரளா, உத்ராகண் போன்ற இடங்களில் எண்ணற்ற வன உயிரினங்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
புல்லாங்குழல் தரும் மூங்கில்கள் உள்ளுக்குள் எதையும் மறைத்து வைத்துக் கொள்வதில்லை. உள்ளீடற்ற அப்பகுதி வெறும் சூன்யமே! வெட்ட வெட்ட வளர்ந்து பயன் தருகிறது. உயிருள்ளவரை மற்றவர்களுக்காக வாழ்கிறது. மரணத்திலும் பூ பூத்து மகிழ்ச்சிப் புன்னகையுடன் மறைகிறது. மூங்கில் போல வாழ்வோம். நம் வாழ்வையும் மகத்துவமாக்குவோம். அவற்றில் இருந்தும் சில இராகங்களை மீட்டெடுத்து நமக்குள் இசைப்போம். மனோகர இராகங்கள் அவற்றில் இருந்து உயரட்டும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உயிர்ப் பன்மயத் தன்மையை பாதுகாப்பதில் தேனீக்கள் மகத்தான பங்கு வகிக்கின்றன. உணவு, சூழல் பாதுகாப்பிற்கு இந்த சின்னஞ்சிறிய உயிரினங்கள் ஆற்றும் சேவை அற்புதமானது.
தேனீக்களுக்காக ஓர் உலக நாள்
நவீன தேனீ வளர்த்தலின் தந்தை என்று அழைக்கப்படும் ஆண்டன் ஜாக்சா மத்திய ஐரோப்பா ஸ்லோவேனியா நாட்டில் 1734 மே 20 அன்று பிறந்ததன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 20 உலக தேனீக்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மகரந்த சேர்க்கை மூலம் உணவுப் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் தேனீக்கள், பல சிறிய பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையில் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் அவை இந்த நாளைக் கொண்டாடுகிறது.
பூச்சிகள் குடும்பத்தைச் சேர்ந்த தேனீக்களை வளர்ப்பதற்கேற்ற சூழ்நிலை தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இவற்றிற்குத் தேவையான ஆற்றல் தேனில் இருந்தும், வளர்ச்சிக்கு அவசியமான புரதம் மகரந்தத் தூளில் இருந்தும் கிடைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வெவ்வேறு காலங்களில் பூக்கும் மரங்கள், குத்துச் செடிகள் தேனீக்களுக்கு தேன், மகரந்தத் தூளை சேகரிக்கும் மூல ஆதாரமாக விளங்குகின்றன.கேரளா, தமிழகத்தில் முக்கிய பயிரான தென்னை தேனீக்களுக்குத் தேவையான மகரந்தத்தை வழங்குகிறது. தேனீக்களின் வளர்ச்சிக் காலமான ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் தேனீக்களின் காலனிகளை தென்னந்தோப்புகளில் அமைத்து வளர்க்கலாம். இரப்பர், ஏலம் உள்ளிட்ட பல பயிர்கள் வளரும் தோட்டங்களில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் விளைச்சலையும் அதிகரிக்கலாம். இவற்றின் மகரந்த சேர்க்கை மூலம் விவசாயப் பயிர்களில் 20 முதல் 40% விளைச்சல் அதிகரிக்கிறது.
தேனீக்கள் மூலம் மகரந்த சேர்க்கை நிகழ்ந்து அதில் இருந்து கிடைக்கும் பழங்கள், காய்கள் தரம் மிக்கவையாக உள்ளது. விதைகளின் எடையும் அதிகமாகக் காணப்படுகிறது. எண்ணெய்ப் பயிர்களில் இருந்து எண்ணெய் அதிகம் கிடைக்கிறது. சமீபத்தில் கேரள விவசாயப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் சிறுதேனீக்கள் கொண்டு நடத்தப்பட்ட மகரந்த சேர்க்கையில் வெள்ளரியின் விளைச்சல் 60% அதிகரித்துள்ளது. பொதுவாக வேளாண்மையில் இந்தியத் தேனீக்கள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
தேனீ என்னும் அமுதசுரபி
தேனீக்களில் இருந்து தேன், மெழுகு, மகரந்தத் தூள், நஞ்சு, ராயல் ஜெல்லி, புரோப்போலிஸ் போன்ற விலை மதிப்பிட முடியாத பொருட்கள் கிடைக்கின்றன. பூக்களில் இருந்து சேகரிக்கும் தேனை தேனீக்கள் தங்கள் வயிற்றுப் பகுதியில் சுரக்கும் திரவங்களைப் பயன்படுத்தி குளுக்கோஸ், பிரக்டோஸ் என்னும் எளிய சர்க்கரை மூலக்கூறுகளாக மாற்றுகின்றன. பிறகு தேனில் கலந்துள்ள நீரின் அளவைக் குறைத்து தேனீக்கள் தேனை அடைகளில் சேகரிக்கின்றன.
தனிச்சிறப்பு மிக்க ஓர் உணவான தேன் முன்கூட்டியே பாதியளவு செரிக்கப்பட்டதால், நம் உடலில் வேகமாக இரத்தத்துடன் கலக்கிறது. பல அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, சி, இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் தேனில் உள்ளது. இதனால் ஆயுர்வேதம், சித்தா போன்ற பல பாரம்பரிய மருத்துவ முறைகளில் தேன் ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுகிறது.
திரவ வடிவில் உள்ள தேன் (liquid honey/extracted honey), அடைத்தேன், ஜங்க் தேன், கிரீம் தேன் போன்ற பல்வேறு வடிவங்களில் தேன் கிடைக்கிறது. மனிதரின் தொடுதல் இல்லாமல், தானே வடிவமைத்து நீரின் அம்சத்தைக் கட்டுப்படுத்தி நொதிகள், அமிலங்கள், உயிர்ச்சத்துகள் போன்றவற்றை சரியான விகிதத்தில் கலந்து தேனீக்கள் உருவாக்கும் தேனடை/அடைத்தேன் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ளது.
தரமேன்மை உள்ள இது திரவ வடிவில் உள்ள தேனைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் தேன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மனியில் ஒருவர் சராசரி ஓர் ஆண்டில் 10 முதல் 15 கிலோ தேன் சாப்பிடுகிறார். இதில் வெறும் 8.4% மட்டுமே இந்தியாவில் உட்கொள்ளப்படுகிறது. தேனின் மகத்துவத்தை இந்தியர்கள் இன்னும் உணரவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
தேன் மெழுகு
14 நாட்கள் வயதுள்ள வேலைக்காரத் தேனீக்கள் அவற்றின் வயிற்றுப் பகுதியின் அடியில் உள்ள சுரப்பிகளில் இருந்து தேன்மெழுகை உற்பத்தி செய்கின்றன. ஒரு கிலோ மெழுகை உற்பத்தி செய்ய ஏறக்குறைய 6.5 முதல் 8.5 கிலோ தேன் ஒரு தேனீ காலனிக்குத் தேவைப்படுகிறது. தேன் மெழுகில் முதன்மையாக மோனோ எஸ்டர்கள் அடங்கியுள்ளன.
செயற்கைத் தேனடைகள், கியூசெல்கப் போன்றவற்றை உருவாக்க, தேன் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் டிரம்கள், பேரல்களின் உட்புறப் பூச்சிற்காக தேன் மெழுகு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உடற்செல்களை மென்மைப்படுத்த, புனரமைக்க உதவும் என்பதால் தேன் மெழுகு அழகு சாதனங்களில் ஒரு முக்கிய பொருளாகப் பயன்படுகிறது.
நீர்க்காப்பு துணிகள் (water proof fabrics) தயாரிப்பு, தோல் பொருட்களின் பூர்த்தி செய்யும் தொழில் (finishing works), சூழலிற்கு நட்புடைய காலனித் தொழிலில் இது அதிகமாகப் பயன்படுகிறது. இது தவிர வண்ணப்பூச்சுகள், உதட்டுச் சாயங்கள், மெழுகு பொம்மைகள், இசைக்கருவிகள், குழந்தைகள் பயன்படுத்தும் வண்ண மெழுகு பென்சில்கள் (cryons) ஆகியவை தயாரிக்க தேன் மெழுகு பயன்படுகிறது. ஒரு கிலோ மெழுகு சந்தையில் இப்போது ரூ.450 முதல் 550 வரை விற்கிறது.
மகரந்தத்தூள்
மகரந்தத் தூள் தேனீக்களின் முக்கிய மாவு சத்து உணவு. மருத்துவ குணத்துடன் அதிக மதிப்பு கூட்டப்பட்ட பொருளான இது பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இதில் 25% மாவு சத்துடன் அமினோ அமிலங்கள், தாதுக்கள், நொதிகள், வைட்டமின் பி, சி, டி ஆகியவை உள்ளன.
வேலைக்காரத் தேனீக்கள் பூக்களில் இருந்து துகள்களை அவற்றின் பின்கால்களில் உள்ள போலன் கூடைகளில் (polen baskets) நிறைத்து சிறிய உருண்டைகளாக மாற்றி கூட்டிற்கு கொண்டு வருகின்றன.
ஒரு முறை ஒரு லோடு தூளைச் சேகரிக்க ஒரு தேனீ ஏறக்குறைய 50 முதல் 100 பூக்களில் சென்று அமர்கின்றது. இவ்வாறு தினம் 5 முதல் 50 முறை ஒரு தேனீ கூட்டை விட்டு வெளியில் செல்கிறது. கேரளப் பல்கலைக்கழகத்தில் செயற்கையாக மகரந்தத் தூளை சேகரிக்க புதியதொரு மகரந்தத் தூள் வலை (polen trap) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கேரளா வெள்ளாயினி விவசாயக் கல்லூரி துணைப் பேராசிரிய & அகில இந்திய தேனீக்கள் மூலமான மகரந்த சேர்க்கை ஆய்வுத் திட்டத்தின் (All India Project on Bee Polination) முதன்மை ஆய்வு விஞ்ஞானி (Chief investigator) டாக்டர் வி எஸ் அமிர்தா கூறுகிறார்.
இந்த வலை அக்கீல் என்ற விரிப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த உபகரணம் தேனீக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் கூட்டின் நுழைவாயிலில் கட்டப்படுகிறது. இதன் மூலம் செயல் திறனுடன் தூய்மையான தூளை சேகரிக்க முடியும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட தூளை நுண்ணுயிரிகளிடம் இருந்து பாதுகாக்க தூளில் உள்ள நீரின் சதவிகிதம் 5 முதல் 8% வரை இருக்குமாறு செய்யப்படுகிறது.
புரொப்போலிஸ் (propolyse)
எப்பிஸ் (Epis) வகையைச் சேர்ந்த இந்திய, இத்தாலியத் தேனீக்கள், சிறுதேனீ ஆகியவை இதனை சேகரிக்கின்றன. ஐரோப்பியத் தேனீக்களுடன் ஒப்பிடும்போது இந்தியத் தேனீக்கள் மிகக் குறைந்த அளவே புரோப்போலிசை சேகரிக்கின்றன. குளிர்காலங்களில் இந்தியத் தேனீக்கள் இந்த மதிப்புமிக்க பொருளை அதிகமாக சேகரிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. தேனீக்களின் கூட்டில் சட்டங்கள், இடைவெளிகளை அடைப்பதற்காக இதனை தேனீக்கள் பயன்படுத்துகின்றன.
மரங்களின் தோல் பகுதி, நுனிக் கிளைகளில் உள்ள அரக்கு போன்ற பொருளாக மாற்றி தேனீக்கள் இதைத் தயாரிக்கின்றன. இது தேனீக்களால் தேன் கூடுகளில் பாதுகாத்து வைக்கப்படுகிறது. இதில் 50% ரெசின், 30% மெழுகு உள்ளது. புராதன காலத்தில் எகிப்தில் இறந்தவர் உடல்களைப் பாதுகாக்க இது பயன்படுத்தப்பட்டது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கும் திறனுள்ள புரோப்போலிஸ் பல தரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
இது தவிர தோலில் தடவும் கிரீம், சுவிங்கம், பற்பசை போன்றவற்றில் இது முக்கிய பொருள். பிளாஸ்டிக் வலையைப் பயன்படுத்தி ஒரு தேன் கூட்டில் இருந்து ஏறக்குறைய 300 கி புரோப்போலிசை ஓர் ஆண்டில் தயாரிக்கமுடியும். 28 கி புரோப்போலிஸின் இன்றைய விலை ரூ.500. வெளிநாடுகளில் குழாய் மாத்திரை, மாத்திரை, டிங்க்ச்சர், எண்ணெய் (oil extract) என்று பல வடிவங்களில் புரோப்போலிஸ் விற்பனை செய்யப்படுகிறது.
ராயல் ஜெல்லி
6 முதல் 12 நாட்கள் வயதான ஒரு வேலைக்காரத் தேனீயின் ஹைப்போபிரிஞ்ஜில் சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் திரவத்தை மேண்டிகுலர் சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் திரவத்துடன் துல்லியமான அளவில் கலந்து தேனீ ராயல் ஜெல்லியைத் தயாரிக்கிறது. இது இளம் மஞ்சள் கலந்த வெள்ளை நிற அடர் திரவம்.
முட்டையில் இருந்து பொரிந்து வெளிவரும் வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ ஆகியவற்றின் புழுக்கள் முதல் மூன்று வாரம், ராணித் தேனீயின் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இதனை உணவாக உட்கொள்கின்றன. இதில் ஏறக்குறைய 67% நீர், 12 முதல் 15% புரதம் உள்ளது. விலைமதிப்பு மிக்க சத்துக்கள் நிறைந்த ராயல் ஜெல்லி மனிதர்களில் இளமை, கவர்ச்சியான தோற்றத்தை நிலைநிறுத்துவதற்கு உதவுகிறது. இது இரத்த கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கப் பயன்படுகிறது.
ஏராளமான அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி செய்ய இது உதவுகிறது. சரியாகப் பராமரிக்கப்படும் ஒரு தேன் கூட்டில் இருந்து ஐந்து, ஆறு மாதங்களில் 500 கி வரை இதனை சேகரிக்கலாம். இதற்காக செயற்கையாக ராணித் தேனீயை உருவாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. 3 முதல் 4 நாள் வயதுள்ள ராணித் தேனீ அறையில் இருந்து சேகரிக்கப்படும் புழுக்களிடம் இருந்தே அதிக அளவில் ராயல் ஜெல்லி கிடைக்கிறது. ஒரு ராணித் தேனீயின் அறையில் இருந்து 200 முதல் 300 கி வரை ராயல் ஜெல்லி கிடைக்கிறது.
நன்கு மூடப்பட்ட குப்பிகளில் சேகரித்து இதை குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து பாதுகாக்கலாம். இன்று இதன் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது சீனா. ஒரு அவுன்ஸ்/28 கி ராயல் ஜெல்லியின் சர்வதேச சந்தை விலை ரூ.4000. திரவ வடிவிலும், குழாய் மாத்திரை வடிவிலும் இது சந்தைப்படுத்தப்படுகிறது.
நஞ்சு (Epi toxin)
எதிரிகளிடம் இருந்து தேனீக்களுக்கு இயற்கை வழங்கிய ஒரு தற்காப்புப் பொருளே தேனீயின் நஞ்சு. வேலைக்காரத் தேனீயின் வயிற்றில் உள்ள தனித்தன்மை கொண்ட சுரப்பியில் இருந்து இது உற்பத்தி செய்யப்படுகிறது. நஞ்சுப்பையில் இது சேகரிக்கப்படுகிறது. தேனீ கொட்டும்போது அதன் கொடுக்கு வழியாக இது வெளியே செலுத்தப்படுகிறது. இரண்டு நாள் வயதான வேலைக்காரத் தேனீயில் இருந்து அதிக நஞ்சு கிடைக்கிறது.
இந்த நஞ்சைப் பயன்படுத்தி அளிக்கப்படும் சிகிச்சை தேனீ நஞ்சு சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. பல தரப்பட்ட பெப்டைடுகள் (Peptides) அடங்கிய இதில் மெலிட்டின் என்ற வேதிப்பொருள் அதிகமாகக் காணப்படுகிறது. மூட்டு வலி (tomotraid arthritis) குறைபாட்டிற்கு இந்த நஞ்சு ஒரு நல்ல மருந்து. செப்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட சட்டங்களில் (Copper frames) 12 வோல்ட் மின்சாரத்தை செலுத்தி தேனீக்களை தூண்டி இந்த நஞ்சு சேகரிக்கப்படுகிறது.
இந்தக் கருவியின் பெயர் நஞ்சு சேகரிப்பு பேடகம் (P venum clucter). இந்த முறையில் ஒரு இந்தியத் தேன் கூட்டில் இருந்து ஏறக்குறைய 30 நிமிடத்தில் 25 கி வரை நஞ்சை சேகரிக்க முடியும். இது ஒரு கண்ணடிப் பாத்திரத்தில் வைக்கப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. ஒரு கிராம் தேனீ நஞ்சின் விலை 50 முதல் 60 டாலர். தேனீ நஞ்சு உற்பத்தியில் சீனா உலகில் முதலிடத்தில் உள்ளது.
கொரோனாவைக் கண்டறிய உதவும் தேனீக்கள்!
மகத்தான தேனீக்களின் நற்பண்புகளுக்கு சிகரம் வைத்தாற்போல சமீபத்தில் ஒரு வியப்பூட்டும் செய்தி வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ்கள் உள்ள மாதிரிகளை அடையாளம் காண தேனீக்களுக்கு பயிற்சி வழங்கி ஆய்வுகள் நடைபெற்றன. இது வெற்றி கண்டுள்ளது. வாண்டல்பால் என்ற டச்சு விஞ்ஞானியின் தலைமையில் இந்த ஆய்வுகள் நடந்தன.
எண்ணில் அடங்காத நன்மைகளை வாரி வழங்கும் இந்த அருமை உயிரினங்களின் வாழ்வை துயரமயமாக்காமல் பாதுகாக்க வேண்டியது மனித குலத்தின் பொறுப்பு. தித்திக்கும் தேனைத் தரும் இந்த உயிரினங்களின் வாழ்க்கையை சூழலிற்கு விரோதமான செயல்களால் நாம் கசப்பு மிக்கதாக மாற்றி விடக்கூடாது. தேன் எடுக்க மலர்கள் இல்லாமல், உண்ண உணவு கிடைக்காமல், வாழிடம் பறிக்கப்பட்டு பட்டினி கிடந்து இவை அழிந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலை நீடித்தால் நாளை நமக்கும் இதே கதி ஏற்படும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- ஆண்டீஸ் மலையில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு
- அண்டார்க்டிகாவில் அழியும் எம்பரெர் பெங்குயின்கள்
- சூழல் காக்க உதவும் நீர்நாய்கள்
- தப்பிப் பிழைத்தன திமிங்கலங்கள்!
- வாழ வழியில்லாமல் தெருவில் அலையும் வனவிலங்குகள்
- புலி உள்ள காடே வளமான காடு
- 'காவலன்' புலி
- இலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்
- தேனீ எனும் தோழன்!
- பத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்
- வெளவால்கள் பலவிதமான வைரஸ்களுக்கு ஓம்புயிரிகளாக இருந்தும் அவை நோய்வாய்ப்படுவதில்லை - ஏன்?
- வேடந்தாங்கல் எல்லைக் குறைப்பு - நமக்கு நாமே வைக்கும் கொள்ளி
- ஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்
- மாறிவிட்ட யானையின் வலசைத் தடங்கள்!
- புவி வெப்பமடைதலால் அழிந்து வரும் பம்பிள் தேனீக்கள்
- அழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்
- காட்டுத் தீ பரவுவதைத் தவிர்க்க கால்நடைகளைப் பயன்படுத்தும் கலிபோர்னியா
- பாம்புக்கு நடுங்க வேண்டுமா?
- புயலையும் தாங்கி நிற்கும் பனை மரம்
- அரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்...