அசாம் மாநிலத்தில் ரூ. 1600 கோடி செலவு செய்து 19 இலட்சம் மக்கள் இந்தியக் குடிமக்கள் இல்லை என்று கண்டறிந்துள்ளது, பா.ஜ.க. ஆட்சி. அவர்களுக்கு தடுப்புக் காவல் முகாம்கள் என்ற பெயரில் நிரந்தர சிறைச் சாலைகளைக் கட்டுகிறார்கள். இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலத்தில் குடியுரிமை பெறத் தகுதி இல்லாதவர்கள் பட்டியல்களைத் தயாரித்து மாநிலம் முழுதும் தடுப்புக் காவல் முகாம்களை கட்டப் போவதாக உள்துறை அமைச்சர் அமீத்ஷா அறிவித்ததைத் தொடர்ந்து நாடே இப்போது கொந்தளித்து நிற்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என்ற மூன்று நாடுகளை இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்து அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுபவர்களுக்கு மதத்தின் அடிப்படையில் ‘குடியுரிமை’ வழங்கப்படும் என்று கூறுகிறது (இந்து, பார்சி, கிறிஸ்தவர், சீக்கியர், பவுத்தர், சமணர் என்ற பிரிவினருக்கு மட்டும்). இஸ்லாமியர்களாக இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று மதத்தின் அடிப்படையிலேயே குடியுரிமையை மறுக்கிறது. அது மட்டுமன்றி இந்த மூன்று நாடுகளில் கடவுள் மத நம்பிக்கையில்லாத நாத்திகர்கள் துன்புறுத்தப்பட்டு அவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கும் குடியுரிமையை மறுக்கிறது இந்தச் சட்டம். சிங்கள பவுத்த கொடுங்கோல் ஆட்சியின் இராணுவக் கொடுமைக்கு அஞ்சி கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கும் ‘குடியுரிமை’ வழங்க இந்த சட்டத்திருத்தம் மறுக்கிறது.

இந்த நிலையில் இந்த சட்டத்திருத்தத்தின் வழியாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், இஸ்லாமியர்கள் ‘நாட்டில் வாழத் தகுதியற்ற இரண்டாம் தர குடிமக்கள்’ என்ற பொதுக் கருத்தையே பார்ப்பனிய - பா.ஜ.க. ஆட்சி, பொதுப் புத்தியில் உருவாக்கி ‘தேச விரோதி’களைப்போல சித்தரிக்க முயல்கிறது.

வரலாற்றை மீள் ஆய்வு செய்தால் இந்த நாட்டுக்குள் நுழைந்தவர்கள் ஆரியர்களும், அந்த இனவழி வந்த பார்ப்பனர்களும்தான். அவர்கள் பூர்வீகக் குடிகளான சிந்து சமவெளி திராவிடர்களின் நாகரிகத்தை அழித்து தங்களை மேலாதிக்கவாதிகளாக நிலைநாட்டி மக்களை சுரண்டிக் கொழுத்தனர். இதை ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

வரலாற்றில் வந்தேறிகளான ஆரிய வம்சத்தைச் சார்ந்த பார்ப்பனர்கள் இன்று வரை தங்கள் வேத புரோகித பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டு சமுதாயத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டே வாழ்கிறார்கள். வந்தேறிகளான இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கையை முன் வைப்பதற்கான வரலாற்று நியாயங்கள் இருந்தாலும்கூட ‘நாடு-சட்டம்-குடிமைச் சமூகம்’ என்று உருவானதற்குப் பிறகு சமூக ஒருமைப்பாடு, மாந்த நேய சமூக நாகரிகம், பொதுமைப் பண்பாடு காரணமாக அந்த முழக்கத்தை பொதுச் சமூகம் முன்னெடுக்கவில்லை. ஆனால், அத்தகைய விழுமியங்களைப் பற்றியோ, அரசியல் சட்டத்தின் நோக்கங்களைப் பற்றியோ சமூக ஒற்றுமை பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாத பார்ப்பனர்கள். மீண்டும் ஆரிய தேசத்தை உருவாக்க மதவெறுப்பு எனும் பாசிச பார்ப்பனியத்தை அதிகாரத்தின் வழியாக திணிக்க முயல்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, இவர்களின் சமூகச் சுரண்டல்களை வேதகாலத்திலிருந்து கேள்விக்கு உட்படுத்திய புத்தர்கள், சார்வாகர்கள், சித்தர்கள் என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியாக வந்த, புலே, அம்பேத்கர், பெரியார் போன்ற மத, ஜாதி, கடவுள் மறுப்பு சிந்தனையாளர்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக்கத் துடிக்கிறார்கள். பெரியார் பேசிய நாத்திகம், வேத பார்ப்பனியம் சுமத்திய அடிமை விலங்கை ஒடிக்கும் விடுதலைக்கான மக்கள் முழக்கம், இந்த வரலாற்று உண்மையை பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு விளக்க வேண்டும். வந்தேறிகள் - சொந்த நாட்டு மக்களின் குடியுரிமையைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை என்பதை உரத்து முழங்க வேண்டும். பார்ப்பனியத்துக்கு பலிகடாவான மதப் பிரிவினர்களும் சமூக மாற்றத்தை விரும்பும் முற்போக்காளர்கள் அனைவரும் இந்த ஆபத்துகளை வரலாற்று வெளிச்சத்தில் முறியடிக்க முன் வரவேண்டும்.

Pin It