காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், காந்தி கொள்கைகளில் இருந்து முழுவதுமாக விலகி, காவிக் கொள்கையில் கரைந்து விட்டார் போல் தெரிகிறது. பாஜகவின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்புச் செயலாளராக மோடிக்கு வாக்காலத்து வாங்கி மேடைகளில் மட்டுமின்றி எழுத்துக்களிலும் மோடியாயணம் பாடி வருகிறார்.

கடந்த 2 ம் தேதி மதுரையில் நடைபெற்ற காந்திய மக்கள் இயக்க 4 - ஆம் ஆண்டு துவக்க விழாவில் தமிழருவி மணியன் பேசிய பேச்சுகளுக்கு கிடைத்த எதிர்வினையைத் தொடர்ந்து தற்போது தனது எழுத்தை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று வார இதழ் ஒன்றில் பில்டப் செய்துள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்றதற்குத் துணைபோன காங்கிரஸ் அரசு கருவறுக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் மாற்று அரசியல் வேண்டும் என்கிறேன். இடதுசாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ ஆகியவற்றுடன் ஒரு வருடமாகப் பேசி வந்தேன். திருப்பூரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் இரண்டு இடதுசாரிக் கட்சிகளையும் வைகோவையும் இணைத்து மாற்று அணியாக அறிவிக்க எவ்வளவோ பாடுபட்டேன். சிபிஎம் கட்சியினர் எப்போதுமே வித்தியாசமானவர்கள். மண்ணில் நடக்காமல், விண்ணில் நடக்கக் கனவு காண்பவர்கள். தனி ஈழத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை; அதனால் வைகோவுடன் இணைய முடியாது என்றார்கள். இந்த நிலையில் மாற்று அரசியல் அணியை, நான் எப்படி முடிவு செய்வது? அந்த சிந்தனை முற்றுப் பெற்றது. மாற்று யோசனை செய்தேன். பாஜக இன்று பத்து சதவிகித வாக்கு வங்கியுடன் வளர்ந்துள்ளது. அதேபோல வாக்கு வங்கியுள்ள தேமுதிக, மதிமுக ஆகியவை சேர்ந்தால் தமிழகத்தில் சுலபமாக வெற்றி பெறலாம். காங்கிரஸை இவர்களால்தான் வீழ்த்த முடியும் என்று நினைத்தேன்." என்று தமிழருவி கூறியுள்ளார்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. காந்திய மக்கள் இயக்கத்திற்கு கூட கொள்கை என்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் நிலைப்பாட்டில் தமிழருவிக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். அது அவர் விருப்பம்.

பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போன்ற கனவுடன் மண்ணில் கால் பாவாமல், விண்ணில் மிதந்து வரும் தமிழருவி மணியன், இலங்கைத் தமிழர்களுக்காக பிறப்பெடுத்தவர் போல பேசுகிறார். அவர் விழுந்து விழுந்து சேவகம் செய்யும் பாஜக, ரத்தவெறி பிடித்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுத்ததை வசதியாக மறந்து விட்டுப் பேசிக்கொண்டே போகிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடந்த புத்தர் விழாவிற்கு வந்த இலங்கை ஜனாதிபதி இராஜபக்சேவை வரவேற்று ராஜஉபச்சாரம் செய்த சிவராஜ் சிங் சௌகான் எந்த கட்சியின் முதல்வர்? காங்கிரசின் கருவறுக்கத் துடிக்கும் தமிழருவி, இராஜபக்சேவிற்கு கறிவிருந்து வைத்த சிவராஜ் சிங் சௌகானுக்கு கறுப்புக்கொடி, வேண்டாம் கண்டனக்கொடியாவது எழுத்தில் ஏற்றினாரா? அப்படிப்பட்ட பாஜகவிற்குத் தான் தமிழருவி பல்லக்குத் தூக்குகிறார். இதில் கொடுமை என்னவென்றால், சாஞ்சிக்கு இராஜபக்சே வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தமிழக வீதிகளில் வலம் வருவதற்கு தமிழருவி மணியனுக்கு தைரியம் வருகிறது என்றால் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள் என்ற நினைப்புத்தான் காரணம்.

தமிழருவி மணியன் பேச்சாளர் மட்டுமல்ல: நல்ல படிப்பாளி. எப்போதும் உலக நாடுகளின் தலைவர்களைப் பற்றி பேசிவிட்டுத்தான் உள்ளூருக்குள் போவார். அப்படிப்பட்டவர் என்ன சொல்லியுள்ளார்? “இந்தப் பாவத்தை வாழ்நாளில் இன்னொரு முறை நான் செய்யமாட்டேன் என்று முஸ்லிம் சமுதாயத்திடம் மோடி மன்னிப்பை வேண்டுவது தான் நியாயம். பல்வேறுபட்ட சமயங்களைக் கொண்ட இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் அமர அப்போதுதான் மோடிக்கு முழுத்தகுதி வாய்க்கும்" என்று மோடிக்கு யோசனைகளை அள்ளி வீசியுள்ளார். உச்சநீதிமன்றம் சொன்னதையே கேட்காத மோடி, தமிழருவி சொன்னவுடன், தாவிக்குதித்து வந்து மன்னிப்பு கேட்டிடுவாரா?

நரேந்திர மோடி ஆட்சி நடைபெறும் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் 1044 அப்பாவி முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 2548 பேர் காயமடைந்தனர். 223 பேர் காணாமல் போனார்கள். 919 பெண்கள் கணவர்களை இழந்து விதவையானார்கள். 606 குழந்தைகள் தாய், தந்தையற்ற அனாதைகளாக்கப்பட்டனர். இது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விபரம் தான். ஆனால், உண்மையான இழப்புகள் ஏராளம் என்பதே முஸ்லிம் மக்களின் கருத்தாக உள்ளது. இத்தனை கொடுமைக்கும் காரணமான மோடி மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா? இலங்கைப் படுகொலைகளுக்காக இராஜபக்சே மன்னிப்பு கேட்டால் தமிழருவி மணியன் பாவமன்னிப்பு அளித்து விடுவாரா?

“குஜராத்தில், கடந்த 2002- ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, நான் செய்ததெல்லாம், சரியானது தான்" என்று கூறிய மோடி, “நாம் காரின், பின் சீட்டில் பயணிக்கும்போது, ஒரு நாய்க்குட்டி, காரில் விழுந்து அடிபட்டால், நமக்கு வருத்தம் ஏற்படுமா, இல்லையா... வருத்தம் இருக்கத் தானே செய்யும்! அதேபோன்ற வருத்தம் எனக்கும் இருந்தது" என்று குஜராத் படுகொலையின் போது தனது மனநிலையை தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இந்த செய்தியை அனைத்து பத்திரிகைகளும் கொட்டை எழுத்தில் பிரசுரித்ததை தேர்ந்த படிப்பாளியான தமிழருவி மணியன் படிக்கவில்லையா? இரத்தம் குடிக்கும் பூனைகள், ருத்ராட்சம் அணிந்து வந்தாலும் அதன் இதழோரத்தில் வழிந்தோடும் குருதியின் வாசனை தேசமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். வாக்குமூலம் அளிப்பதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு இறுதி அத்தியாயத்தை தமிழருவி எழுதி வருகிறார்.

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It