இந்தியாவை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வரு வதற்கும், இந்துத்துவ சர்வாதி காரத்தை ‘ஜனநாயக’ வழிமுறைகள் வழியாக திணிப்பதற்குமான ஆபத்தான திட்டங்களை நடுவண் பா.ஜ.க. ஆட்சி மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இதற்கு எத்தனையோ சான்றுகளை அடுக்கடுக்காக காட்ட முடியும்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை நுழைத்து, தமிழகத்தின் தனித் துவத்தைப் பறித்து விட்டார்கள். பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கும் இது வரப் போகிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் தரும் சட்டத்தை இயற்றிய போது அதை நாமும் வரவேற்றோம். அதன் வழியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரு ஜாதியை இணைப்பது அல்லது நீக்குவது எனும் உரிமையை  மாநில அரசிடமிருந்து பறித்து விட்டார்கள். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில அரசு திருத்தங்களை செய்ய முடியாது.

காவிரி நீர் உரிமைக்காக நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், நடுவர் மன்றம் நிர்ணயித்த 192 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் திறந்துவிடக் கோரியும் தமிழர் களாகிய நாம் போராடி வருகிறோம். இனி நடுவர் மன்றத் தீர்ப்பே செல்லுபடியாகுமா என்ற கேள்விக் குறி எழுந்து நிற்கிறது. நடுவண் ஆட்சி ‘நதிநீர் தீர்ப்பாயம்’ ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித் திருக்கிறது. மாநிலங்களின் நதி நீர் உரிமைகள் பறிபோகும் ஆபத்துகள் எழுந்துள்ளன.

‘பசுவதைத் தடைச் சட்டம்’ ஒன்றை நடுவண் அரசே இயற்றி, அனைத்து மாநிலங்களிலும் பயன்படாத பசு மாட்டைக்கூட வெட்ட தடை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வற்புறுத்தி வருகிறார். இதற்கான சட்டம் இயற்றும் உரிமை மாநில ஆட்சி களுக்குத்தான் உண்டு. இதையும் பறித்து விடுவதற்கு சங் பரிவாரங்கள் வற்புறுத்துகின்றன.

மாநிலங்களவையில் பா.ஜ.க. வுக்கு போதுமான எண்ணிக்கை பலம் இல்லை என்பதால் மாநிலங் களவையையே புறக்கணிக்கும் செயல்பாடுகளை மோடி ஆட்சி தொடங்கியிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பு வாங்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் 40 திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த திருத்தங்களை மாநிலங்களவைக்கே கொண்டு செல்லவில்லை. நிதி தொடர்பான மசோதாக்களுக்கு நாடாளுமன்றத் தின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்ற சட்டம் தந்துள்ள வாய்ப்பை இப்படி குறுக்கு வழியில் முறை கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி.

இந்த திருத்தங்களில் ஒன்று - வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எல்லை மீறிய அதிகாரங்களாகும். நடுவண் ஆட்சி, அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்குப் பயன்படுத்தும் வலிமையான அதிகார அமைப்புகளில் ஒன்று வருமான வரித் துறை. புதிய திருத்தத்தின்படி, இனி வருமான வரித் துறை அதிகாரிகள், தேவையான ஆதாரங்கள், தடயங்கள் இல்லாமல், சந்தேகத்தின் அடிப்படை யிலேயே சோதனையிடவும், சொத்துகளை பறிமுதல் செய்யவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. சோதனையிடப்படுவதற்கான காரணங்களை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பார்ப்பன அதிகார மய்யமாக திகழும் வருமான வரித் துறையை ‘ஒரு இராணுவ சர்வாதிகாரி’போல செயல்படுவதற்கான அதிகார அமைப்பாக்கிவிட்டார்கள்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ‘சகாரா’, ‘ஆதித்யா பிர்லா’ குடும்பங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகளில் மோடிக்கு நன்கொடை தந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அந்த ஆதாரங்கள் வருமான வரித்துறையின் பதிவேடு களிலேயே இடம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டி நடவடிக்கைக் கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆதாரங்களோடு கடந்த அக்டோபரில் வழக்கு தொடர்ந்தார். மோடி மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகவே, வருமான வரித் துறை அதிகாரியாக இருந்த கே.பி. சவுத்திரி என்பவருக்கு, இலஞ்ச ஒழிப்புத் துறைத் தலைவர் என்ற உயர்ந்த பதவி பரிசாக அளிக்கப்பட்டதையும் பிரசாந்த் பூஷன் சுட்டிக் காட்டியிருந்தார். இத்தகைய ‘நேர்மை’யான வருமானவரித் துறை, இப்போது ‘சர்வ சக்தியுடன்’ தனது ‘தர்பாரை’ நடத்த மோடியின் அரண்மனைக் கதவுகள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.

மற்றொரு முக்கிய திருத்தமும் வந்திருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகள் இனி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது என்பதே இந்த புதிய திருத்தம். தற்போதுள்ள சட்டத்தின்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது நிகர இலாபத்தில் 7.5. சதவீத அளவில் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க முடியும். அது மட்டுமின்றி வழங்கப்பட்ட தொகை, வழங்கிய கட்சிகளின் பெயர்களையும் அறிவித்தாக வேண்டும். இப்போது வரம்பு நீக்கப்பட்டதோடு வழங்கிய கட்சிகளின் பெயர்களையும் வெளியிடத் தேவை இல்லை என்கிறது புதிய திருத்தம். ஏற்கெனவே அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வந்துவிட்டன. கார்ப்பரேட் நிறுவனங்களோ பார்ப்பன அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி. தமிழ் நாட்டில் ஆர்.கே. நகர் தொகுதியில் கோடி கோடியாக பணம் புரண்டதற்கான காரணங்களில் ஒன்று, கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து பெற்ற இலஞ்சம். இந்த இலஞ்சத்துக்கு கதவு திறந்து விடும் பா.ஜ.க.வுக்கு அரசியல் ஊழல்களைப் பற்றிப் பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று கேட்கிறோம்.

மற்றொரு திருத்தம் - தீர்ப்பாயங்களை முடக்கியிருப்பதாகும். இந்தத் தீர்ப்பாயங்கள் நீதித் துறைக்குரிய அதிகாரங்களுடன் செயல்படக்கூடிய அமைப்புகள். அரசின் தலையீடுகளுக்கு இதில் இடமில்லை. நீதிமன்ற ஆணைப்படி உருவாக்கப்பட்ட தீர்ப்பாயங் களும் உண்டு. தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு நிர்வாக அமைப்பு களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உச்சநீதிமன்றம் 2014இல் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. ஆட்சியாளர்களையே சம்மன் செய்து விசாரிக்கும் உரிமை கொண்டவை. இப்போது தேவையில்லை என்று ஆட்சியாளர் விரும்புகிற தீர்ப்பாயங்களை கலைக்கவும், சில தீர்ப்பாயங்களின் தனித்துவமான உரிமைகளைப் பறித்து, வேறு சிலவற்றுடன் இணைக்கவும் சட்டத்தைத் திருத்தியிருக்கிறார்கள்.

வரி, அரசு வாங்கும் கடன், அரசு செலவினங்கள், கடன் பத்திரங்கள் போன்ற  அம்சங்கள் மட்டுமே நிதி மசோதாவின் கீழ் வரக்கூடியவை. மோடி ஆட்சி, வருமான வரித் துறை, கார்ப்பரேட் கம்பெனிகள் சட்டம், தீர்ப்பாயங்கள் போன்றவற்றையும் நிதி மசோதாவுடன் இணைத்து மாநிலங்களவை விவாதத்துக்கு உட்படுத்தாமல் 40 திருத்தங்களை செய்திருப்பது மிகப் பெரும் ஜனநாயகப் படுகொலை.

மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமின்றி, மாநிலங்களின் அவையையும் முடக்கி விட்டார்கள். ஒற்றை ஆட்சி ஒற்றை கலாச்சாரம் எனும் இந்துத்துவா ஆயுதத்தை மக்களுக்கு எதிராக கூர் தீட்டி வருகிறது மோடி ஆட்சி.

விழித்துக் கொண்டு போராடாது விட்டால், ‘இராமராஜ்யம்’ என்ற பார்ப்பன சர்வாதிகாரத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கான எதிர்ப்புக் களமாக தமிழ்நாடு மட்டுமே மிஞ்சியிருக்கிறது; மறந்துவிடக் கூடாது.

Pin It