பீகாரின் பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த 9.10.2013 தேதி அம் மாநிலத்தின் ஆர்வல் மாவட்டம் லட்மணப்பூர் பதே கிராமத்தில் நிகழ்ந்த படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த குற்றவாளிகளை போதிய ஆதாரமில்லை எனக்கூறி விடுதலை செய்தது. நிலப்பிரபுத்துவத்தின் ஆதிக்க கலாச்சாரம் ஊறிய பீகாரில் தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் தங்களின் கூலிக்காவும், சுயமரியாதைக்காகவும் குரல் கொடுப்பது, அதற்காக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை சகிக்க முடியாத செயலாக நிலப்பிரபுத்துவம் பார்க்கிறது.

பீகாரில் ஆதிக்க சாதியினர் மற்றும் நிலப்பிரபுக்களின் கூலிப்படையான ரன்வீர்சேனா என்ற அமைப்பு கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட மக்களை படுகொலை செய்து வந்தது. 1976 முதல் 2001 வரை 18க்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நிலபிரபுக்களின் கூலிப்படைகள் நிகழ்த்திய படுகொலைகள்.

லட்மணப்பூர் பதே படுகொலை 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இரவு நடந்தேறியது. சோனா ஆற்றின் கரையில் உள்ள அந்த கிராமத்திற்கு பட‌குகளில் வந்த ஆயுதம் தாங்கிய பண்ணையார்களின் கூலிப்படை உறங்கிக்கொண்டிருந்த கிராமத்தில் புகுந்து கதவுகளை உடைத்து கண்ணில் கண்ட எல்லோரையும் சுட்டுக்கொன்றது. 58 தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒரு வயதுக் குழந்தை உட்பட 16 குழந்தைகள், 27 பெண்கள்  அடங்குவர். அன்றைய குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் இதனை நாடு விடுதலை அடைந்த பின் நிகழ்ந்த அவமானகரமான சம்பவமாக குறிப்பிட்டார். இவ் வழக்கு விசாரணைக்காக ஜெகனாதாபாத்திலிருந்து பாட்னா செசன்ஸ் கோர்டுக்கு மாற்றப்பட்டது. 90 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 30க்கும் மேற்பட்ட சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறிய போதும் பலர் தைரியமாக குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியமளித்தனர். ஒரே குடும்பத்தில் ஒன்பது பேரை பலிகொடுத்தவர்கள் என பல பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியமளித்தனர். இறுதியில் பாட்னா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் 27.10.2010 தேதி 26 குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளியென முடிவு செய்து 16 பேருக்கு மரண‌ தண்டனையும், 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு பாட்னா உயர்நீதிமன்ற விசாரணைக்குப் பின் கடந்த 9.10.2013 தேதி, குற்றவாளிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மூன்று நாட்கள் காலதாமதமாக நீதிமன்றம் சென்றுள்ளதாகவும், குற்றவாளிகள் வந்த படகில் இருந்த இரத்தக்கறைகளை போலிசார் கைப்பற்றவில்லை எனவு சில காரணங்களைக் கூறி குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு நமது மத்திய தரவர்க்கத்தின் மனசாட்சியினை உலுக்கவில்லை. காட்சி ஊடகங்களில் பெரும் செய்தியாகவில்லை. இது பல செய்திகளில் ஒரு செய்தியாக நமது பெரும்பாலானோரின் கவனத்தைப் பெறாமலேயே போய்விட்டது.

நீதித்துறையின் செயல்பாடுகள் நமது நாட்டின் அரசியலைப்புச் சட்டம் மற்றும் பல்வேறு சட்டங்களின் வழிகாட்டுதலால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமான்கள் அனைவரும் சட்டம் மற்றும் சாட்சியம் இதனை வைத்தே வழக்குகளை தீர்மானித்து விடுவதில்லை. சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட சாதியம், அதன் தாக்கம் நீதித்துறையின் பல்வேறு தீர்ப்புகளில் எதிரொலித்தே வருகின்றது. இடஒதுக்கீடு வழக்குகளில் இது அப்பட்டமாக வெளிப்படுகின்றது. நீதிபதிகளுக்குள் உள்ள சாதிய ஆதிக்கத்தைப்பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ராமசாமி 1994 ஆண்டு அப்பன்பாலு இங்கேலா /எதிர்/ கர்நாடக அரசு(1) என்ற வழக்கில் விவரித்துள்ளார்.

பீகாரில் தாழ்த்தப்பட்ட மக்கள் நக்சல் இயக்கங்களுடன் சேர்ந்து செய்த கொலைகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையினை பல வழக்குகளில் உறுதி செய்த நீதிமன்றம், தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் சிறு காரணங்களைக் காட்டி வழக்கினை தள்ளுபடி செய்து குற்றவாளிகளை விடுதலை செய்வது வாடிக்கையாகி விட்டது என்பதே தாழ்த்தப்பட்ட மக்களின் குற்றச்சாட்டு. ரன்வீர் சேனா செய்த படுகொலை வழக்குகளில் 2013 ஆண்டில் இதோடு மூன்றாவது முறையாக குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவுரங்காபாத் மாவட்டத்தில் 34 தாழ்த்தப்பட்ட மக்களை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யபப்ட்டனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 2013 மார்ச் மாதம், 1998ல் போஜ்பூர் மாவட்டம் நகரி கிராமத்தில் நடந்த படுகொலைக்கு காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் போஜ்பூர் மாவட்டம் பத்தானி தோலா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை படுகொலை செய்தவர்களையும் விடுவித்துவிட்டது. இறுதியாக லட்சுமணபூர் பதே குற்றவாளிகள் விடுதலையாகி உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சாதியினைச் சார்ந்தவர் ஆதிக்க சாதியினரை கொலைசெய்தால் தண்டனை உறுதி என்பதும், அதே கொலைக் குற்றவாளிகள் ஆதிக்க சாதியினாராக உள்ளபோது தொடர்ச்சியாக விடுவிக்கப்படுவதும் நீதிசார் நம்பிக்கைகளை வீணடித்து விடுகின்றது. அரசும் காவல்துறையும் உயர்சாதி ஆதிக்க மனப்பன்மையோடு செயல்பட்டு வருவதன் வெளிப்பாடே வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்வது, அதில் முறையாக விசாரணை மேற்கொள்ளாது அலட்சியம் காட்டுவது, வேண்டுமென்றே வழக்கு விசாரணையில் பெரும் ஓட்டைகளை விட்டுவிடுவது எல்லாம் தீண்டப்படாதவர் பாதிக்கப்படும் வழக்குகளில் காவல்துறையால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுபவை. இதற்கு அரசாங்கத்தின் எல்லா ஆதரவும் உண்டு.

லட்சுமணபூர் பதே கொலைகளில் ஈடுபட்ட ரன்வீர் சேனா கூலிப்படைக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது குறித்து பல்வேறு சனநாயக சக்திகள் குரல் எழுப்பினர். இதனால் இது குறித்து விசாரிப்பதற்காக ராப்ரிதேவி முதல்வராக இருந்தபோது நீதிபதி அமீர்தாஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந் நிலையில் 2005ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்த சமயம் நிதீஷ் குமார் பீகார் முதல்வராக பொறுப்பேற்றதும் நீதிபதி அமீர்தாஸ் விசாரணைக்குழு விசாரணையை கால நீட்டிப்பு செய்யாமல் அதனை மூடிவிட்டார். ரன்வீர்சேனாவின் அரசியல் பின்புலத்தை மக்கள் அறிவதை அன்றைய நிதீஷ்குமார் மற்றும் பா.ஜ.க. கூட்டனி விரும்பவில்லை.

குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் மற்றும் அரசியல் சமூக உரிமைகளை நமது அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது. ஆனால் ஏட்டில் உள்ள வாய்ப்புகள் ஏழைகளுக்கு எட்டாத தூரத்தில் உள்ளன‌. தீண்டாமையின் தேசத்தில் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியின் அறம் போன்ற சொல்லாடல்கள் பொதுவான மாயையும், போதையையும் ஏற்படுத்தியிருந்த போதும், நீதியையும், சனநாயகத்தையும் பெற ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மீதே நம்பிக்கை பந்தங்களை எரியவிட்டுக் கொண்டு நீண்டதூரம் பயணிக்க வேண்டி உள்ளது.

- ச.பாலமுருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It