கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
வரலாறு
- விவரங்கள்
- க.இரா.தமிழரசன்
- பிரிவு: தமிழ்நாடு
மொழிக்கு உரமாகிய மறவர்கள் - 7
"இந்தித் திணிப்பை இனியாவது நிறுத்துங்கள்" என அன்றைய முதலமைச்சர்.எம். பக்தவச்சலத்திற்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு, நஞ்சுண்டு உயிர் துறந்தார் கீரனூர் ந.முத்து.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, பாலைவனம் ஜமீனைச் சேர்ந்த சின்னச்சுனையக்காடு என்ற கிராமத்தில் 1943 இல் பிறந்தவர் முத்து. இவரது தந்தை பெயர் நடேசன். அண்ணன் பெயர் வேலு. முத்து 7ஆம் வகுப்புவரை படித்தவர். படிக்கும் போதே தமிழ் மொழியின் மீது பற்று கொண்டவராய் இருந்து வந்தார்.
1957ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தன் பள்ளி மாணவர்களோடு மொழி உணர்வு குறித்து பேசி வந்துள்ளார். அது மட்டுமல்ல- தன் ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள கோயில் மண்டபச் சுவர்கள், சத்திரங்களின் சுவர்கள், வீட்டுச் சுவர்கள் என்று தான் பார்க்கும் எல்லா இடங்களிலும், “இந்தி ஒழிக”, “தமிழ் வாழ்க” என்று எழுதி வைத்து தன்னுடைய இந்தி எதிர்ப்பையும் மொழி உணர்வையும் மாணவராக இருக்கும் போதே பதிவு செய்துள்ளார்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பைப் பாதியில் நிறுத்துவிட்டு தன் தந்தை நடராசனுக்கு உதவியாக அவரோடு இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். சில ஆண்டுகளில் விவசாயப் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு 1964 ஆம் ஆண்டு வாக்கில் புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்தில் உள்ள கீரனூருக்குச் சென்று அங்குள்ள ஒரு உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். கீரனூரில் உள்ள உணவு விடுதியில் பணியாற்றி வந்ததால் "கீரனூர்- முத்து" என எல்லோரும் அழைக்கத் தொடங்கினர்.
1965 இல் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் கீரனூர் முத்துவின் ஊரான திருச்சியிலும் பற்றிக் கொண்டது. திருச்சி நேசனல் கல்லூரி மாணவர் ஒருவருக்கு மதுரையில் இருந்து ஒரு தந்தி வந்தது, அந்தத் தந்தியில் " கண்ணீர் புகை வீசப்பட்டது, ஒருவர் மரணம் எங்களுக்கு உதவுங்கள்" என எழுதப்பட்டிருந்தது. எனவே, இதைக் கருத்தில் கொண்ட மாணவர்கள் திருச்சியிலும் இந்திக்கு எதிரான போராட்டத்தை வீரியமாக்கவும், மரணமடைந்தவருக்கு அஞ்சலி செலுத்துவது என்றும் முடிவு செய்தனர்.
சனவரி 26 ஆம் தேதி மாலையில் அருணாச்சலம் மன்றம் முன் நடைபெற்ற போராட்டத்தினால் திருச்சியில் கூட்டம் கூட அரசாங்கம் தடையாணை போட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி மறுநாள் 27ந் தேதியன்று காலை நேசனல் கல்லூரி, சமால் முகமது கல்லூரி மாணவர்கள் பாலக்கரை , பெரிய கடை தெரு வழியாக ஓர் அமைதி ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் நகர மன்றத் திடலை அடைந்ததும் அங்கே இரண்டு நிமிடம் மொழிப்போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதியாக இருந்துவிட்டு, இனிமேல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வீரியமாகத் தொடரும் என அறிவித்து விட்டு அங்கிருந்து மாணவர்கள் கலைந்தனர். இதன் விளைவாக நேசனல் கல்லூரி காலவரம்பின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தூய ஜோசப் கல்லூரி, சீதாலட்சுமி தூய சிலுவை பெண்கள் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். இதனையொட்டி திருச்சியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களின் சார்பாகவும் போராட்டம் தொடர்ந்தது, கண்ணில் பட்டி காங்கிரஸ் கொடிக் கம்பங்கள் வெட்டப்பட்டன. இந்தி பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டன, இங்கு சிறந்த இந்தி புத்தகங்கள் விற்கப்படும் என்ற ஒரு கடை பலகையை மாணவர்கள் பிடுங்கி எறிந்தனர். மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக திருச்சி நகரக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.
திருச்சியில் பற்றிக் கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம், உணவு விடுதியில் பணியாற்றிய கீரனூர் முத்துவைத் தூண்டியது. இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்களின் ஈகத்தை கண்டு அவரும் உணர்வோடு மொழிப்போரில் கலந்து கொண்டார்.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தீக்குளித்தும், நஞ்சருந்தியும் இறந்த செய்திகளும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியும் துப்பாக்கி சூடும் முத்துவை வேதனையில் ஆழ்த்தியது. சின்னச்சாமி, சிவலிங்கம், அரங்கநாதன் எனத் தமிழுக்காக உயிரிழந்தவர்களின் ஈகம் குறித்து தான் சந்திப்பவர்களிடம் பேசியபடி இருந்துள்ளார்.
வெறும் போராட்டத்தால் மட்டும் தமிழ் மொழியைக் காக்க முடியாது என்று கருதிய கீரனூர் முத்து தமிழ்த்தாயின் உயிர் காக்க தானும் தன்னுயிரைக் கொடுப்பதென முடிவு செய்தார்.
"இந்தி திணிப்பை நிறுத்துங்கள்" என்று அன்றைய முதல்வர் பக்தவச்சலத்திற்கும், "தமிழைக் காக்கப் பாடுபடுங்கள்" என்று அண்ணாவுக்கும் கடிதங்களை எழுதி வைத்து விட்டு 1965 பிப்ரவரி மாதம் 4 ந்தேதி தன்னுடைய 22 ஆம் வயதில் நஞ்சுண்டு இறந்து போனார்.
1967இல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் முத்து இறந்து கிடந்த இடத்தில் சீரணி அரங்கம் ஒன்று கட்டப்பட்டு தியாகி முத்து சீரணி அரங்கு எனப் பெயர் சூட்டப்பட்டது.
- க.இரா.தமிழரசன்
- விவரங்கள்
- க.இரா.தமிழரசன்
- பிரிவு: தமிழ்நாடு
மொழிக்கு உரமாகிய மறவர்கள் - 6
தாய்மொழி காக்க இந்தி எதிர்ப்புப் போரில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான முதல் மாணவன் மு.இராசேந்திரன்.
காரைக்குடிக்கு அருகிலுள்ள கல்லல் என்ற ஊரில் ஜூலை 16, 1947இல் பிறந்தார் ராசேந்திரன். இவரது பெற்றோர் முத்துக்குமார், வள்ளிமயில். இராசேந்திரனோடு உடன் பிறந்தவர்கள் ஆறு பேர் சக்திவேல், மேனகா, தைலம்மாள், சகுந்தலா, சேகர், கீதா.
இவருக்கிருந்த தமிழ்ப்பற்றின் காரணமாக முதலில் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் விண்ணப்பம் செய்தார். அங்கு இடம் கிடைக்காததால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இராசேந்திரன் படிப்பில் மிகவும் திறமையானவர். தான் இறுதியாக எழுதிய கணிதத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும், மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய பக்தவச்சலம் அரசின் காவல் துறையைக் கண்டித்தும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சனவரி 26 அன்று பேரணி நடத்த முயன்றனர்.
பேரணியைத் தடுத்து நிறுத்திய காவல் துறை அதிகாரி, "அன்பார்ந்த மாணவ நண்பர்களே! நானும் உங்கள் மாதிரி மாணவனாக இருந்துதான் போலீஸ் அதிகாரி ஆகி இருக்கிறேன். ஆகவே உங்களை உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். தயவு செய்து ஊரடங்குச் சட்டத்தை மீற வேண்டாம். நீங்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்துங்கள். வீணான கலகம் வேண்டாம். அமைதியாகத் திரும்பிச் செல்லுங்கள்.” என்று கேட்டுக் கொள்கிறார். ஆனால், மாணவர்கள் போராடுவதில் உறுதியாக இருந்தனர்.
எனவே, சனவரி 26 குடியரசு நாள் என்பதால் பேரணி நடத்த வேண்டாம் என்று அனுமதி மறுத்த காவல் துறையினர் மறுநாள் அனுமதி தருவதாக உறுதியளித்தனர். மாணவர்களும் இதனை ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.
காவல் துறையினர் அனுமதி தருவதாகக் கூறிய சனவரி 27 அன்று மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சிதம்பரம் நகரை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டார்கள். இந்தி அரக்கி’ கொடும் பாவியும் இழுத்துச் செல்லப்பட்டது.
மாணவர்கள் அணி அண்ணாமலை நகரிலிருந்து சிதம்பரத்திற்குச் செல்லும் வடக்குச் சாலை வழியாக தொடர்வண்டி இருப்புப் பாதையை அடைகிறது. அங்கு வழியை அடைத்துக்கொண்டு நிறைய காவலர்கள் கையில் தடியுடன் நிற்கிறார்கள். சிலர் கையில் துப்பாக்கிகளும் இருக்கின்றன. காவல் துறையினரின் துப்பாக்கிகளுக்கு முன்னால் வெறுங்கையுடன் மாணவர்களின் முழக்கம் விண்ணை முட்டுகின்றன.
அனுமதி தருவதாகக் கூறிய காவல் துறையினர் மாணவர்களின் பேரணியை தடுத்து நிறுத்தினார்கள். அதனால், கோபம் கொண்ட மாணவர்கள் அவர்களது தடுப்புகளைத் தாண்டிக்கொண்டு " தமிழ் வாழ்க, இந்தி ஒழிக, இந்தியைத் திணிக்கும் அரசாங்கம் ஒழிக, காங்கிரஸ் ஒழிக" என முழக்கம் போட்டுக் கொண்டே முன்னேறிப் போக முயன்றார்கள். அந்தப் போராட்டத்தில் ராசேந்திரன் முதல் வரிசையில் நின்று ஆவேசமாக முழக்கமிட்டுக் கொண்டு சென்றார்.
அதற்காகவே காத்துக் கொண்டிருந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். கூட்டத்தைக் கலைப்பதற்காக மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுவீசினர். இதனால் ஆத்திரம் கொண்ட மாணவர்கள் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கற்களை எடுத்து காவல் துறையினர் மீது வீசத் தொடங்கிவிட்டார்கள்.
கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைய மறுத்த மாணவர்கள் மீது வெறி கொண்ட காவல்படையோ மாணவர்களை விரட்டி விரட்டி கொலைவெறித்தாக்குதல் நடத்தியது. மாணவர்கள் வேறுவழி இல்லாமல் ஓடத் தொடங்கினார்கள். அதற்குப் பின்பும் ஆத்திரம் அடங்காத காவல் துறை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில், இராசேந்திரன், நெடுமாறன் உள்பட மேலும் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். பல மாணவர்கள் காயத்தோடு தப்பி ஓடினர்.
தோளில் குண்டடிபட்ட நெடுமாறன் இரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். இராசேந்திரன் நெற்றியில் துப்பாக்கி குண்டு துளைத்ததால் அதே இடத்திலேயே விழுந்தார். தற்போது இராசேந்திரன் சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து தோராயமாக 100 அடி தூரத்தில் ஆசிரியர்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தின் கீழேதான் குண்டடிபட்டு ராசேந்திரன் விழுந்து கிடந்தார்.
அப்போது அவர் உடலில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு சில மாணவர்கள் காப்பாற்றுவதற்காக ஒரு கம்பில் வெள்ளைத் துணியைச் சுற்றி உயர்த்தியபடி முன்னே ஓடி வந்தனர். அப்போது காவலர்கள் மாணவர்களை நோக்கி, அருகே வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டவே, வந்தவர்களும் ஒதுங்கி நிற்க வேண்டியதாயிற்று. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இராசேந்திரனை மருத்துவமனைக்குத் தூக்கி சென்று உயிரை காப்பாற்றிவிடக்கூடாது என காவல் துறை கல்நெஞ்சத்தோடு தடுத்தது. இதன் விளைவாக மாணவன் இராசேந்திரன் துடிதுடித்துச் செத்தார். மொழிப்போர் களத்தில் குண்டடிபட்டு இராசேந்திரனின் உடல் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.இராசேந்திரன் தந்தையாரும் ஒரு காவலர் தான். நிகழ்ச்சி நடந்த அன்று சிவகாசி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புப் பணிக்குச் சென்றிருக்கிறார். 1969 இல் இராசேந்திரனின் ஈகத்தை பறைசாற்றும் விதமாக அவரது திருவுருவச் சிலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வாயிலில் அன்றைய முதல்வர் கலைஞர். மு.கருணாநிதியால் நிறுவப்பட்டது.
கலைஞர் அறிக்கை
விண்ணோடும் மண்ணோடும் உடுக்கள் தன்னோடும் பிறந்த தமிழுக்கு ஒரு ஊறு என்றால் பொங்கும் தமிழகத்தின் உணர்ச்சி உருவமாய் - உத்வேக மிகுந்த மாணவர் சமுதாயத்தின் எழுச்சி உருவமாய் விளங்கி சாவில் புகுந்து சாகாத சரித்திர ஏட்டின் பொன்வரியாய் விளங்கிய 'மாணவச் செல்வம் ராசேந்திரன்,
மலையென உயர்ந்த தமிழின் உறுதிக்கு அவன் சிலை ஒரு சின்னமாய் விளங்கும். ஆதிக்க வலை கிழிக்கும் வாளாய் அவன் சிலை விளங்கும். அவன் நினைவோ- தமிழின் புகழ் ஒளிவிடுமட்டும் நிலைக்கும்.
அன்புள்ள
மு.கருணாநிதி
முதலமைச்சர்.
- க.இரா.தமிழரசன்
- விவரங்கள்
- க.இரா.தமிழரசன்
- பிரிவு: தமிழ்நாடு
மொழிக்கு உரமாகிய ஈகியர்கள் - 4
1965ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் நாள் இந்திய அரசின் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வரப்போவதையொட்டி சனவரி 25 முதலே இந்திய அரசமைப்பின் 17 வது பகுதியை மதுரை, சென்னை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் எரித்தனர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அறிஞர் அண்ணா எதிர்வரும் குடியரசு நாளைத் துக்கநாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். அன்றைய தினம் தமிழர் ஒவ்வொருவர் வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றப்படும் என்றும், மாலையில் துக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக மாணவர்களும் தொடர் போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர்.
25 சனவரி அன்று காலை மதுரை மாணவர்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திலகர் திடலை நோக்கி "இந்தி ஒழிக", "தமிழ் வாழ்க என்ற முழக்கங்கள் இட்டவாறு சென்று கொண்டிருந்தனர். வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரசு மாவட்ட அலுவலகம் அருகே ஊர்வலம் வந்தபோது மாணவர்களின் போராட்டத்தில் புகுந்து காங்கிரசார் வன்முறையை ஏவினர். கத்திகளுடன் மாணவர்களைத் தாக்கினர். இதனால், கொதித்தெழுந்த மாணவர்கள் காங்கிரசு அலுவலகத்தின் முன்னர் குடியரசு தின கொண்டாட்டங்களுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களை அறிந்த தமிழுணர்வு கொண்ட சிவலிங்கத்திற்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.
இதன் விளைவாக, 1965 ஜனவரி 26-ம்தேதி விடியும் போதே இந்தி எதிர்ப்புக்களம் இந்தியாவை உலுக்கிப் போட்டது. ஆம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கோடம்பாக்கம் சிவலிங்கம் என்ற இளைஞர் இந்தி ஒழிக என்று கூறிக் கொண்டே தன்னுடலுக்கு தீயிட்டு தமிழ் மொழிக்காக ஈகியானார்.
சென்னை கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தில் 1941 இல் பிறந்தவர் சிவலிங்கம். சிவலிங்கத்தின் இளம் வயதிலேயே பெற்றோர் இறந்துவிட்டதால் அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். சென்னை மாநகராட்சி ஊழியராக 75 உரூபா ஊதியத்தில் பணியாற்றி வந்தார். சிவலிங்கம் தமிழ் மொழியின் மீது தனது சிறு வயது முதலே தீராக் காதல் கொண்டவர். 1938 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போரில் முதல் வீராங்கனையாக கலந்து கொண்ட டாக்டர் தருமாம்பாள் பெயரில் அமைக்கப்பட்ட மன்றத்தில் தன்னுடைய சிறு வயதிலேயே உறுப்பினராக இருந்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டராகவும் நுங்கம்பாக்கம் பகுதி பொருளாளராகவும் இருந்துள்ளார். மொழிப்பற்றும் இந்தி எதிர்ப்பு உணர்வும் இளம் வயதிலேயே ஊறிப் போயிருந்த காரணத்தால் 1965 இல் நடைபெற்ற இந்தி திணிப்பதற்கு எதிரான போரில் தானும் பங்கெடுப்பதென முடிவு செய்தார்.
24.1.1965 இரவு தன் தங்கையிடம் ”நாளைக் காலை நீ எங்கும் போகக் கூடாது வெளியே ஒரே கலவரமாக உள்ளது. நான் அதிகாலையிலேயே தொடர் வண்டி நிலையத்தில் கறுப்பு கொடியேற்றிவிட்டு வந்து விடுகிறேன் என்னை பற்றிப் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியுள்ளார் சிவலிங்கம்.
தன்னை எரித்துக் கொள்வதென திட்டமிட்ட சிவலிங்கம் அருகே சென்று பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். பெட்ரோல் டின்களுடன் சிவலிங்கம் செல்வதைப் பார்த்தவர்கள் "இந்த பெட்ரோல் டின் எதற்கு?" என்று கேள்வி எழுப்பியதற்கு, "ஆபீசுக்கு வாங்கிப் போகிறேன்" என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
25ந்தேதி மாணவர்களின் போராட்டத்தால் தமிழகம் பற்றி எரிந்த நிலையில் 25ந் தேதி இரவு சிவலிங்கம் தம் நண்பர்களுடன் இந்தி மொழியின் ஆதிக்கம் குறித்து கோபமாகப் பேசியுள்ளார் “நாளைக்கு இந்தி ஆட்சி மொழி ஆகப்போகிறது. இது துக்க நாள். நாளை நான் கறுப்புச்சின்னம் அணியப் போகிறேன்” என்று அவர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
25.01.1965 அன்று இரவும், வழக்கம்போல், வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார். அதிகாலை 4 மணிக்கு அவர் அண்ணன் காளிமுத்து எழுந்து பார்த்தார். வழக்கமாக வீட்டின் திண்ணையில் படுத்துறங்கும் தம்பி சிவலிங்கத்தைக் காணாததால் அவரது அண்ணனுக்கு எதுவும் புரியவில்லை. வெளியே எங்கேயும் போய்விட்டானோ என்ற எண்ணத்தில் இருந்தவரை வீட்டுக்கு எதிரே உள்ள மைதானத்தில் தீப்பிழம்பாய் ஒரு உருவம் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் தூக்கிவாரிப் போட்டது. நெருப்பு எரியும் இடத்தை நோக்கி ஓடிப் போய் பார்த்தார் அவரது அண்ணன். அதற்குள் அங்கு உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தார் சிவலிங்கம். அவர் எரிந்து கிடந்த அவரது உடலுக்கு அருகே 2 பெட்ரோல் டின்கள் இருந்தன. அதற்கு அருகிலேயே, இந்தி ஆட்சிமொழி ஆவதைக் கண்டித்துத் தீக்குளித்துச் சாகிறேன்" என்றும் “உயிர் தமிழுக்கு; உடல் தீயிக்கு” என்றும் எழுதப்பட்ட காகிதங்கள் கிடந்தன.
சிவலிங்கத்தின் எழுத்தைத் தெரிந்து கொண்ட அண்ணன், கருகிக் கிடந்த உடலைக் கட்டிப்பிடித்துக் கதறினார். இருபத்து நான்கு வயது சிவலிங்கம் 26.11.1965 அன்று விடியற்காலையில் 4.00 மணிக்கு வீட்டைவிட்டு சென்று தீக்குளித்து மாண்டார்.
சின்னச்சாமியைப்போல ஒரு பத்துத்தமிழனாவது உயிர் நீத்தால்தான் நமது தமிழுக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கம் ஒழியும்." என்று அடிக்கடி பேசிவந்த கோடம்பாக்கம் சிவலிங்கம், கீழப்பழுவூர் சின்னச்சாமி வழியில் தானும் தீக்குளித்து மொழிப்போரில் இரண்டாவதாகத் தமிழக்குத் தன்னையே கொடையாகக் கொடுத்தார்.
(சிவலிங்கம் 1939 ஆம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவனூர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு பெரிய ஆதரவற்ற குடும்பத்தில் பிறந்தார் என்று மற்றொரு செய்தி தி.மு.க இதழில் குறிப்பிடுகிறது. அவர் தேவனூரில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார் என்றும் பின்னர் பக்கத்து கிராமமான சட்டன்பட்டியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் தினமும் இரண்டு மைல் நடந்து சென்று கல்வி கற்றார் என்றும் அவரது தமிழ் ஆசிரியர், திராவிடக் கவிஞரான பொன்னி வளவன், அவருக்குத் தமிழ் மீதான அன்பை வளர்த்தார். தனது கல்வியைத் தொடர முடியாமல், சிவலிங்கம் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரனைப் பின்தொடர்ந்து சென்னைக்குச் சென்றார், அங்கு அவர் கட்டுமானத் தளங்களில் கூலி வேலை செய்தார். தி.மு.க.வில் ஈடுபட்டார் (இலட்சியப்பாதை, 28 மார்ச் 1993, 20-21). ) என்ற கருத்தும் உள்ளது)
- க.இரா.தமிழரசன்