அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
இணையதள அச்சுறுத்தல்களைத் தவிர்க்க, பாதுகாப்பான இணையதள இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க இரண்டு அடுக்கு கொண்ட கடவுச்சொல் (Password) அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது என்று கூறலாம். அதிலும் குறிப்பாக வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு இணையதளங்கள், மருத்துவ தகவல்கள்/காப்பீடுகள் என்று நமக்கென தனியாக பக்கங்கள்/கணக்குகளை பார்த்துக் கொள்ள இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை Two factor authentication என்று அழைப்போம். பொதுவாக நமக்கு இது தெரிந்தது தான் நம்முடைய முதல் கடவுச்சொல்லை கொடுத்த பிறகு, பயனரின் திறன்பேசிக்கு குறுஞ்செய்தியாக அல்லது மின்னஞ்சல் வாயிலாக நான்கு அல்லது ஆறு இலக்க எண்ணை அனுப்பி சரியான வாடிக்கையாளரை உறுதி செய்ய அந்த எண்ணை உடனடியாக உள்ளீடு செய்ய வேண்டும். கடவு எண்கள் சரியானது என்று தெரிந்ததும் நம்முடைய பக்கம் திறந்து விடும். இணையதளப் பயன்பாட்டை தரும் நிறுவனத்திற்கு உடனடியாகத் தெரிந்துவிடும், ஆம் இவர் நம்முடைய வாடிக்கையாளர் தான் என்று.
2FA முறையில் பழக்கப்பட்டவர்கள் எளிதாக இதனைச் செய்து விடுவார்கள். புதியவர்களுக்கு சிறிய தலைவலி பிடித்த வேலை தான். "Two factor authentication is better than nothing" என்ற ஒரு சொல்லாடல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குள் உண்டு.
ஒருவகையில் இது ஒரு பாதுகாப்பான முறை என்றே பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகிறார்கள். பல முன்னேறிய நாடுகளில் பரவலாக அனைத்து அன்றாடப் பயன்பாட்டிலும் மக்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கொடுத்து வருகிறார்கள்.
Cyber security பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இதன் பயன்பாடு வரும் நாட்களில் உயரக் கூடும்.
கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய நேரம் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தன. அலுவலகத்தில் இருந்தால் Firewall உள்ள இணைய தொடர்பில் வேலை செய்வதால் வெளி உலகில் இருந்து வரும் தாக்குதல் தடுக்கப்படும். பணியாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ள இணையதளம் (Internet provider) மூலம் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து கொள்ள VPN (Virtual Private Network) மூலம் தொடர்பு செய்து இணைந்து கொள்வார்கள். வேலை பாதுகாப்பான முறையில் நடந்து கொண்டிருந்தது. இந்த பாதுகாப்புக்குப் பின்னணியில் அதாவது அந் நிறுவனங்கள் cyber security க்காக பெரிய கட்டமைப்பில் virus, Malware, spyware போன்றவற்றைத் தடுக்க வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வழக்கம் போல ஒரு நாள் காலையில் மின் அஞ்சல் தளத்தை திறக்க முயன்றேன். முடியவில்லை. பல நிறுவனங்கள் மைக்ரோசாப்ட் அவுட்லுக் வைத்திருப்பார்கள். எங்கள் நிறுவனமும் அதை வைத்திருந்தது. "Password protected, Enter your two step verification. Send verification code?" என்று வந்தது. பிறகு உடனடியாக அதனைப் பெற்று உள்ளே நுழைந்தேன். Cyber security பற்றி பக்கம் பக்கமாக பாடம் எடுத்துக் கொண்டு இருந்தது எங்கள் நிறுவனம். எங்களுக்கு ஏற்கனவே தனியாக VPN இருக்கிறது. VPN தொடர்பு செய்தவுடன் எங்களுடைய நிறுவனப் பணியாளர்கள் எங்களது இணையதளத்திற்குச் செல்ல முடியும். இதுவும் தற்போது மாறி விட்டது என்று தகவல்கள் வந்தன. VPN - Connect செய்ய தனியாக verification code அனுப்பும் செயலியை ஒவ்வொரு பணியாளரும் தங்கள் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்து அதில் வரும் எண்ணை முப்பது நொடிக்குள் கடவுச்சொல் போல் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் கூறப்பட்டது. சிறப்பான பாதுகாப்பு. நிறுவனத்தைக் கடந்து வேறு எவரும் உள்ளே நுழைந்து விட முடியாது.
இவ்வாறான இணையதள பாதுகாப்பு முறைமைகளை பல நிறுவனங்கள், அரசு அமைப்புகள் கொண்டு வர இணைய அபகரிப்பாளர்கள் (Hacker) தான் காரணம். இவர்களது வாடிக்கையாளர்கள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஆகும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும் தப்பவில்லை. ஒன்றிய அரசின் இணையதளங்களை இணையதள திருட்டு அபகரிப்பாளர்கள் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டார்கள் என்று செய்தி படித்திருப்போம்.
ஹேக்கர்களின் கனவு உலகமான அமெரிக்காவில், ஒருமுறை பெட்ரோல், டீசலை பகிர்ந்து கொடுக்கும் Colonial pipeline நிறுவனத்தின் இணையக் கட்டமைப்பில் நுழைந்து தகவல் கட்டமைப்பை தங்கள் வசம் (Ransomware attack) செய்து ஒருவாரம் காலம் அமெரிக்காவை ஆட்டம் காண வைத்தார்கள் ஹேக்கர்கள். இந்த நிறுவனம் 4.4 மில்லியன் டாலர்கள் பிட்காயின் மூலம் ஹோக்கர்களுக்கு கொடுத்தது. அடுத்து யாரை குறி வைப்பார்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு ஒருமுறை இறைச்சிப் பொட்டலம் (Tyson meat factory) செய்யும் நிறுவனத்தை முடக்கி விட்டார்கள். இவ்வாறான தாக்குதல் நடத்திய மூல இடத்தை தேடிய அமெரிக்க உளவுத்துறை அதெல்லாம் ரஷ்யாவில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று அறிக்கை வெளியிட்டது. அதனை மீட்டெடுக்க பிட்காயினை மீட்டெடுக்கும் பணமாக கொடுத்தது அமெரிக்கா.
ஹேக்கர்கள் பெரும் நிறுவனங்களில் எப்படி நுழைய முடியும்? ஏதேனும் ஒரு பொறியை வைத்து உள்ளே நுழைந்து விடுவார்கள். அந்த பொறியில் சிக்குவது அலுவலக மின்னஞ்சல் பெரிய காரணம்.
கடந்த ஓராண்டாகவே பல நிறுவனங்கள் தங்களின் மின்னஞ்சல் முறைக்கு இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை பரவலாகக் கொண்டு வந்து விட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் தங்கள் நிறுவனங்களைத் தாண்டி வேறு இடங்களில் இருந்து மின்னஞ்சல் வந்தால் அதனை மேற்கோள் கொடி காட்டி நமக்கு எச்சரிக்கை விடுக்கும். தெரிந்த ஆட்களிடம் இருந்து வந்திருக்கிறது என்பதை உறுதி செய்து நாம் படிக்க வேண்டும்.
சரி, நாம் சமூக வலைத்தளங்களுக்கு வந்து விடுவோம். இன்றைய காலகட்டத்தில் அரசியல் மேடைகளுக்கும், அரசின் அறிவிப்புகளுக்கும், பிரபலங்களின் இருப்பிடத்தைக் காண்பதற்கும், செய்தி நிறுவனங்களின் செய்திப் பகிர்வுக்கும் முதன்மையான ஓரிடம் இருக்கிறது என்றால் அது சமூக வலைத்தளங்களில் தான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். மேலே குறிப்பிட்ட எல்லோரும் ஒரு நிறுவனம் சார்ந்து இயங்குபவர்கள். அதனால் அவர்களை எளிதாக சமூக வலைத்தள நிறுவனங்கள் சரிபார்ப்பு செய்துவிட முடியும். அவர்கள் பெயரில் வேறொருவர் போலி கணக்குகள் தொடங்க முடியாது. தொடங்கினாலும் அது போலி என்று தெரிந்துவிடும். பொதுமக்கள் எல்லோரும் இங்கு பயனாளர்களாக இருக்கும் தளத்தில் அனைவரையும் எப்படி நம்பத் தகுந்தவர்களாக சமூக வலைத்தள நிறுவனங்கள் பார்க்கும்?
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், போன்ற பெரும் சமூக வலைத்தளங்கள் தங்கள் உட்கட்டமைப்பில் ஹேக்கர்கள் நுழையாமல் இருக்க பல அடுக்கு எதிர்ப்பு நிரல்கள் வைத்திருக்கும். இது அனைத்தும் பயனாளர்கள் பக்கத்திற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட, சரிபார்க்கப்பட்ட (verified account) பயனாளர்கள் இதிலிருந்து தப்பித்து விடலாம் என்றாலும் சில ஹேக்கர்கள் அதையும் தூக்கி விடுவார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுடைய டிவிட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி விட்டார்கள். ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் அந்தப் பக்கத்தை மீட்டெடுத்தது அரசு. ஹேக்கர்கள் தான் முடக்கி விட்டார்கள் என்று அவரே தெரிவித்து இருந்தார். நல்லவேளை அணில் இதில் எந்த இடையூறும் செய்யவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையைப் பயன்படுத்தி வந்தாரா என்று நமக்குத் தெரியாது.
அவர் மட்டுமா… விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் பக்கத்தையும் ஹேக்கர்கள் பதம் பார்த்து விட்டார்கள். இவருடைய டிவிட்டர் பக்கம் டிவிட்டரால் சரிபார்க்கப்படாத பக்கம். தனிநபர் தகவல்களை உடனடியாக திருடப்படும் வாய்ப்புகள் இதனால் மிக மிக அதிகம். என்னுடைய டிவிட்டர் பக்கம் களவாடப்படுள்ளது என்று அவரே ஃபேஸ்புக் மூலம் தெரிவித்தார். உடனடியாக அவரே அவருடைய பெயரில் மற்றொரு கணக்கைத் தொடங்கி இதில் என்னைப் பின் தொடருங்கள் என்றார். பிறகு இவரது கணக்கும் திரும்ப கிடைக்கப் பெற்றது.
பேஸ்புக் கணக்குகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை டிசம்பர் 2021ல் முதலில் அமெரிக்காவில் கொண்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே 2018ல் இதன் சோதனை ஓட்டம் தொடங்கி விட்டது. ஆனால் 2022ல் தான் இந்தியா போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பு பயனை அளிக்க முன்வந்தது பேஸ்புக். அதுவும் யாருடைய கணக்குகள்/பக்கங்கள் முடக்கப்படும் என்று தெரிந்து அவர்களை வகைப்படுத்தி அவர்களுக்காக செய்து கொடுத்தது. கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கணக்குகள் இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையில் இருப்பதாக தெரிவிக்கிறது பேஸ்புக்.
டிவிட்டர் நிறுவனமும் இதுபோன்ற இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை 2021ல் கொண்டு வந்தது. டிவிட்டரை ஈலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பு வரை 2.6% சுறுசுறுப்பான பயனாளர்கள் இதைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதே வேளையில் 76% பயனாளர்கள் குறுஞ்செய்தி வாயிலாக இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் இதை ஈலான் மஸ்க் நம்பவில்லை. அவர் அறிவு உயிர் நாடி ஆச்சே. தொலைபேசி இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்கள் போலியாக இப்படி குறுஞ்செய்தி அனுப்புகிறது என்றார்.
அவர் டிவிட்டரை வாங்கும் வேளையில் 5% போலி கணக்குகள் இருக்கிறது, இதனை நீக்கினால் மட்டுமே டிவிட்டரை வாங்குவேன், இல்லையெனில் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என்று மிரட்டினார். ஆனால் அந்த மிரட்டல், வேலைக்கு ஆகவில்லை. நீதிமன்றம் சென்றது அப்போதைய டிவிட்டர். பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்றார். ஆம், டிவிட்டரில் போலி Bot Account இதனை நீக்க அவர் படாத பாடு படுகிறார். அதற்காக ஒருமுறை அவரே தனது டிவிட்டர் பக்கத்தை தனிப்பட்ட முறையில் (private lock) பூட்டி வைத்தார்.
ஈலான் மஸ்க் அவர்களுக்கு இருக்கும் அறிவியல் அறிவோடு வணிக அறிவும் அதிகம். டிவிட்டரில் (Verified account) சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகள் பாகுபாடு பார்ப்பதாகக் கருதினார். அதென்ன பத்திரிக்கையாளர் வெளியிடும் செய்தி மட்டும் தான் உண்மையா. அவர்கள் பேசுவது எல்லாமே சரியா? பொது மக்களுக்கும் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகள் வழங்கப்பட வேண்டும் என்றார். இதைக் கேட்ட நமக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆமா அதுல பாகுபாடு இருக்கிறது என்று பலர் நினைத்தார்கள். "Free speech for everyone" என்று தொடங்கிய அவர் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகளுக்கு மாதா மாதம் சந்தா செலுத்த வேண்டும். ஏற்கனவே உங்கள் கணக்குகள் சரிபார்ப்பு செய்யப்பட்டது என்றால், நீங்களும் சந்தா சொலுத்துவது கட்டாயம் என்றார். இதைக் கேட்ட பல பத்திரிக்கையாளர்கள் கொதித்து எழுந்தார்கள். பிரபல டிவிட்டர் பத்திரிக்கையாளர் ராஜகுமாரி "ஒரு சல்லி பைசா தர மாட்டேன்" என்றார்.
டிவிட்டரில் ப்ளு டிக் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்கு என்றால், அது ஒரு தன்மானப் பிரச்சினை என்றே பலரும் கருதுகின்றனர். இதனை முதலீடாக நினைக்கிறது டிவிட்டர். அதன் ஒரு முன்னோட்டம் தான் இனிமேல் இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். யாரெல்லாம் பணம் செலுத்தி சரிபார்ப்பு செய்யப்பட்டது போல் மாற்றி இருக்கிறார்களோ, அவர்களுடைய கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். ஏற்கனவே நீங்கள் "டிவிட்டர் ப்ளு" இல்லாமல் இரண்டு அடுக்கு சரிபார்ப்பு கடவுச்சொல் முறையைப் பயன்படுத்தி வந்தால், இனி உங்களுக்கு வழங்கப்படாது என்று அறிவித்தது டிவிட்டர்.
டிவிட்டரின் அறிவிப்பைத் தொடர்ந்து பேஸ்புக் மெட்டா நிறுவனமும் கட்டணம் செலுத்தும் சந்தா முறையை அறிமுகம் செய்யவிருக்கிறது. சோதனை ஓட்டமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் "Meta Verified" என்ற பெயரில் தொடங்கும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டு சமூக வலைத்தளங்களிலும் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகள் வேண்டும் என்றால் மாதம் $11.99 (for website), $14.98 iOS Android app களுக்கும் என்று தெரிவித்து இருக்கிறது. எல்லையற்ற தேடல், பரந்து விரிந்த பார்வை பரிமாற்றம், குறிப்பாக வாடிக்கையாளர் நிலையத்தில் சந்தாதாரர்கள் நேரடியாகப் பேசலாம்.
நாம் கவனித்து இருப்போம் சமூக வலைத்தளங்களுக்கு வாடிக்கையாளர் நிலையம் கிடையாது. பயனாளர்களுடன் தொலைபேசி உரையாடல் நடத்தும் ஒரு கட்டமைப்பு எந்த சமூக வலைத்தளங்களிலும் கிடையாது. இனிமேல் கட்டணம் செலுத்தி பேஸ்புக் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்காக மாற்றினால் அது நடக்கும்!
பல பில்லியன் டாலர்கள் வருமானமாக ஈட்டும் சமூக வலைத்தளங்களில் கூடுதலாக சந்தாதாரர்கள் முறையைக் கொண்டு வருகிறது. பேஸ்புக் கடந்த சில ஆண்டுகளில் $600 பில்லியன் டாலர்கள் பங்குச்சந்தையில் இழந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
OTT தளங்களில் தொடக்கக் கட்டணம் கூட பேஸ்புக் இனிமேல் வாங்க இருக்கும் கட்டணத்தை விட குறைவு. பதினான்கு டாலர்கள் செலுத்துவதால் நமக்கு என்ன கிடைக்கும் என்று தோன்றுகிறதா? புகழ்பெற்ற மனிதர்களுக்கு புகழ். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அதே வேடிக்கை. ஆனால் கூடுதல் பாதுகாப்பு.
அப்படியென்றால், இனிமேல் பேஸ்புக்கில் இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறைக்கும் இந்தக் கட்டணம் கட்டாயம் என்று விரைவில் அறிவிக்கும்.
இணையதள பாதுகாப்பு, கட்டணம் இல்லாமல் எளிதாக கிடைக்காது. முதலில் பயனாளர்களை பழக்கப்படுத்தி விட்டு, பின்னாட்களில் அதற்கு கட்டணம் என்ற கட்டமைப்பே கார்ப்பரேட் நிறுவனங்களின் செய்வினை விளையாட்டு.
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு, நம்மால் பரவலாக அறியப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சொல்லாடல் என்றே கூறலாம். இது மனிதர்களால் செய்ய முடியாது என்று பொருள் கிடையாது. மனிதர்களால் செய்யக் கூடியதை இயந்திர மொழி உதவியுடன் அதை மிகைப்படுத்தி நேர்த்தியுடன் நமக்காக செய்து கொடுப்பது. மனிதர்களின் அறிவை, சிந்தனையை, மொழியைப் பயன்படுத்தி அதனை இயந்திர மொழியுடன் வலிமையான மென்பொருளை, தகவல் சேமிப்பை உருவாக்கி, பிறகு அதனையே நம் தேவைக்கு ஏற்ப எளிதாகப் பயன்படுத்தும் அளவுக்கு கொடுப்பது.
முறையே இது மென்பொருள் இயங்கி செயல்படும் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளம், சமூக வலைத்தளங்கள், ரோபோக்கள் (எந்திரன்கள்), கணினி விளையாட்டுகள், அலெக்சா, சிரி போன்ற செவிவழித் தேடல்கள், சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்வது, தானியங்கி ஊர்திகள் (Autonomous Vehicle), மொழிபெயர்ப்பு செயலிகள், வரைபட செயலிகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதையும் தாண்டி நீங்கள் எதையாவது சிந்திக்கிறீர்களா? ஆம் நமக்காக தேர்வுகளையும் எழுதவிருக்கிறது. அதுமட்டுமா நீங்கள் எழுத்தாளராக அல்லது கவிஞராக வேண்டும் என்று நினைத்தால் அதையும் செய்ய ஆயத்தமாகி விட்டது, செயற்கை நுண்ணறிவு. இனிமேல் நீங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் கவிஞராக மாறலாம், மனுஷ்ய புத்திரன் போல் கவிதைகள் எழுதலாம். நீங்கள் அல்ல, உங்கள் பெயரில் கவிதைகள் எழுதிவிடும் செயற்கை நுண்ணறிவு. மகுடேஷ்வரன் போல தமிழ் பகுப்பாய்வு செய்யலாம், பத்திரிக்கையாளர்? அதையும் செய்யக் காத்திருக்கிறது. எதையாவது செய்தி போல எழுத நினைத்தால் நமக்காக செய்தியையும் எழுதிக் கொடுக்கும். சங்கித்தனத்திற்கு இடமில்லை, ஏனெனில் பொய் செய்திகளை அது எழுதிக் கொடுக்காது.
கடந்த 20 ஆண்டுகால தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் மாறாமல் இருப்பது தேடல் இயந்திரத்தின் தேடல் முறை என்றே சொல்லலாம். இணையதள தேடல் இயந்திரத்தில் நாம் தேடுவது ஏதோ ஒரு இணையதள தொடுதலை நமக்கு பரிந்துரை செய்யும். இதுவே தான் மாறாமல் இருக்கிறது. தற்போது தேடல் இயந்திரத்தில் செயற்கை நுண்ணறிவு என்ற போட்டி தொடங்கி விட்டது.
இணையதள தேடலில் 85% மேலாக கூகுள் நிறுவனத்திடம் இருக்கிறது. மீதமுள்ள பதினைந்து விழுக்காடு மட்டுமே பிற தேடல் நிறுவனத்தில் இருக்கிறது. தேடல் இயந்திரத்தில் அதிகப்படியான நிறுவனங்கள் கிடையாது. மொத்தமாக விரல் விட்டு எண்ணும் அளவுக்கு நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில் பிரபலமான நிறுவனங்கள் இவை:
Google, Microsoft edge and Bing, Duck duck go, Yahoo, Baidu, Ecosia, Wayback Machine, Wolfram Alpha, Safari, Yandex, Ask, Naver, Million Shot.
இணையதள தேடல் இயந்திரத்தின் அடுத்த முயற்சியாக முன்னணி பெரும் தகவல் தொழில்நுட்ப ஆளுமையான மைக்ரோசாப்ட் நிறுவனம் பிப்ரவரி 7, 2023 அன்று தனது Bing தேடு தளத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட செயற்கை ChatGPT மென்பொருள் நுண்ணறிவு பயன்பாட்டை வாசிங்டன் மாநிலத்தில் இருக்கும் தனது முதன்மை அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த புதிய தேடுதளம் நம்மோடு பேசுவது போன்ற "Chatbot Technology" வடிவமைப்பு கொண்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் OpenAI என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு புதிய தொடக்க நிறுவனத்துடன் ஓராண்டு காலமாக இணைந்து உருவாக்கிய புதிய நுண்ணறிவு தொழில்நுட்ப தேடு தளத்தை உருவாக்கியது. 2019ல் OpenAI புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து கூட்டாக இந்த முயற்சியை மேற்கொண்டது மைக்ரோசாப்ட்.
சரி, பொதுவாக நாம் எதையாவது தேட வேண்டும் என்றால் உடனே கூகுள் அண்ணாச்சியின் உதவியை நாடுவோம். கூகுள் தான் இணையதள தேடல் இயந்திரத்தின் முன்னோடி மற்றும் வலிமையான சந்தையைக் கொண்டது. நாம் தேடும் சொற்களுக்கு ஏற்ப அதனோடு ஒட்டிய இணையதளத்தை நமக்குக் காட்டும். இதை மாற்றி அமைக்கிறது ChatGPT செயற்கை நுண்ணறிவு கொண்ட மைக்ரோசாப்ட் பிங்க்.
எடுத்துக்காட்டாக நீங்கள் மும்பைக்குச் செல்ல வானூர்தி தேடினால் ChatGPT உங்களுக்கு டிக்கெட் itinerary உருவாக்கி அதை சரி பார்க்கச் சொல்லும். (சோழர்கள் வரலாற்று ஆய்வுகள் பற்றி கேட்க நினைத்தால் ஆய்வுகளைத் தேடி வேறு எங்கும் செல்லாமல் அதுவே கொடுத்து விடும்! சோழர்கள் பற்றிய கட்டுரை சுடச்சுட நீங்களே எழுதிவிட முடியும்! இல்லை உங்களுக்காக எழுதி கொடுத்து விடும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் வரக் கூடும்.) பதினைந்தாம் நூற்றாண்டில் புதிய உலகைக் கண்டறிந்த கொலம்பஸ் ஏன் அமெரிக்கா வந்தார்? (அமெரிக்க தொல்குடிகள் தான் கொலம்பஸைக் கண்டு பிடித்தார்கள் என்று ஒரு நகைப்பு கூட உண்டு) என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறது.
உங்களுக்கு மோனாலிசா போன்ற வரையப்பட்ட புகைப்படம் தேவைப்பட்டால் உங்களுக்காக வரைந்து கொடுக்கிறது. ஏற்கனவே இருக்கும் புகைப்படங்களைத் தரவில்லை, மாறாக புதிதாக வரைந்து கொடுக்கும்.
ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல மனுஷ்ய புத்திரன் போல் கவிதைகள் வேண்டும் என்றால் சில நூறு கவிதைகள் அதுவே எழுதிக் கொடுக்கும், கட்டுரைகள் எழுதும். முறையே இது புத்தகங்கள், காணொளிக் காட்சிகள் அடிப்படையில் பயனாளிகளுக்கு எழுத்து வடிவமைப்பில் பதில் அளிப்பது போன்று தான் உருவாக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ பகுதியில் ஆய்வு நிறுவனமாக தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு OpenAI நிறுவனம் 2020ல் GPT-3 என ஒன்றை அறிமுகம் செய்தது. இது பயனாளிகளுக்கு கட்டணம் இல்லாமல் கிடைக்கப் பெற்றது. பின்னர் இதிலிருந்து மேலும் மேம்படுத்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கியது தான் ChatGPT.
பொதுவாகவே அறிவியல் தொழில்நுட்பம் நமது வேலைகளை எளிதாக மாற்றுவது தான் அடிப்படை. அப்படியென்றால் மாணவர்கள் இதை பயன்படுத்த மாட்டார்களா? பயன்படுத்தினார்கள். யாரென்றால் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வீட்டுப் பாடங்கள் செய்வதற்கும், ஆய்வுகள் செய்து கொடுப்பதற்கும் இதை ஓராண்டு காலமாக பெரிய அளவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குத் தெரியாமல் போகுமா? எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எந்த அளவிற்கு ஆங்கிலச் சொற்கள் தெரியும் என்பது அவர்களது ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவரால் முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள் போல எப்படி எழுத முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் எழ இதன் பின்னணியில் செயற்கை நுண்ணறிவு அண்ணாச்சி இருப்பது தெரிந்திருக்கிறது. விடுவார்களா பல பள்ளிகள் கல்லூரிகளின் முதல்வர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது என்று கூட்டறிக்கை வெளியிட்டார்கள். "Do not use ChatGPT are any other automated writing tools for school papers. This is cheating and will not be tolerated. If you are caught using ChatGPT are any other automated writing tools for school papers that will be a serious consequences."
ஆனால் இதை மாணவர்கள் பயன்படுத்தவே கூடாது என்று பள்ளி நிர்வாகமும் கல்லூரி நிர்வாகமும் தெரிவிக்கவில்லை. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்; தெரியாததை தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதையே காப்பி செய்து தன்னுடைய படைப்பாக வெளியிடக்கூடாது. இது மாணவர்களின் கற்பிக்கும் திறனை மழுங்கடிக்கும், புதிய சிந்தனைகளை உருவாக்கவில்லை என்று தெரிவித்திருந்தது நியூயார்க் நகர கல்விக் கூட்டமைப்பு.
ChatGPT செயற்கை நுண்ணறிவு எப்படி இது போல் எழுத முடிகிறது? 90களில் இது தொடங்கப்பட்டபோது வணிகம் சாராத அதாவது லாப நோக்கமற்ற நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. பரவலாக உள்ள அனைத்து புத்தகங்களையும் என்சைக்ளோபீடியா தகவல்களையும் துல்லியமாக சேமித்து வைத்து, அதனை பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப பதில் வழங்கும் படியாக மேம்படுத்தப்பட்டது. பின் நாட்களில் இதன் தேவை அதிகரிக்கவே மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் பணம் முதலீடு செய்ததால் இதன் வலிமை இன்னும் கூடியது. யாரோ ஒருவர் நமக்காக நம் வேலையை எளிதாக செய்து முடிக்கிறார் என்றால், நாம் அதை பயன்படுத்துவோம் தானே? இதையே வணிக நோக்கில் உற்று நோக்கினால் என்னவாகும்? இதைத்தான் மைக்ரோசாப்ட் செய்து வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி ChatGPT மென்பொருள் அமைப்பிடம் எழுந்தபோது. அவர்கள் இதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை என்று பதில் அளித்தார்கள். "We don't want chat GPT to misleading purposes in school or anywhere else. So we are already developing mitigation to help anyone identify text generated by that system" - OpenAI கூறியது.
அண்மையில் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து வைத்த மைக்ரோசாப்டின் முதன்மை அலுவலர் சத்யா நாடல்லா என்ன கூறினார் என்றால் "மென்பொருட்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் நாம் அதை மறுவடிவமைப்பு செய்யவிருக்கிறோம். செயற்கை நுண்ணறிவினை மனிதர்கள் விருப்பப்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்க வேண்டும். இதை ஆய்வகத்தில் செய்யப் போவதில்லை. வெளி உலகில் சென்று செய்ய வேண்டும்"
மைக்ரோசாப்ட் தற்போது இதனை கணினி வடிவமைப்பாக மட்டுமே வெளியிட்டுள்ளது, அதுவும் மைக்ரோசாப்ட் பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டும். திறன் பேசியில் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் திறன்பேசி செயலிகள் மூலம் இதன் பயன்பாடு வெளிவரும் என்று அறிவித்திருக்கிறது மைக்ரோசாப்ட்.
இத்தகைய செயற்கை நுண்ணறிவின் புதிய வடிவமைப்பில் காப்புரிமை சிக்கல் எழாமல் இல்லை. புகைப்படங்கள், புத்தகங்கள் என்று உரிமை பெறாமலேயே பயன்படுத்திய வழக்கு இருந்திருக்கிறது.
வழக்கமான தேடுதளத்திற்கும் புதிய ChatGPT மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தேடு தளத்திற்கும் வேறுபாடு என்ன என்று நானே பிங் தேடல் இயந்திரத்தில் "மனுஷ்ய புத்திரன் கவிதைகள்" என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கேட்டேன். தற்போது உலகளவில் ஆளுமைகள் பற்றி தொகுப்பு இல்லை என்று கூறியது. ஆனாலும் என்னிடம் சில கவிதைகள் உங்களுக்காக இருக்கிறது என்று திரையில் காட்டியது பிங்.
"கடலில் தேவை கலைஞர் சிலை
சூரியன் உதித்தது காலை
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை
அதி காலை மணி 5:30"
ஆஹா… இதை நானும் எனது நண்பர்களுக்கு நான் எழுதியது என்று அனுப்ப போகிறேன்.
மைக்ரோசாப்டின் இந்த புதிய முயற்சி கூகுள் அண்ணாச்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இறுதியாக கூகுள் நிறுவனம் தனது கூகுள் தேடலில் செயற்கை நுண்ணறிவை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. அதன் பெயர் பிராட்.
- பாண்டி
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
எதிர்வரும் பிப்ரவரி 6 ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் என்னும் சிறிய கிராமத்தில் தினேஷ் மற்றும் ஜனக நந்தினி என்ற இருவரும் திருமணம் செய்யவிருக்கிறார்கள். இதற்கும் கட்டுரை தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?
காலையில் அவர்களின் திருமணம் முடிந்த பிறகு, மாலை மெட்டாவெர்ஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அது என்ன மெட்டாவெர்ஸ்?!
மெட்டாவெர்ஸில் அவர்களின் திருமண விருந்தினர்கள் மெய்நிகர் (virtual) நிலையில் கலந்து கொள்ளலாம். இது அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்வின் காணொளிக் காட்சியை இணையத்தில் கண்டு ரசிப்பதை போன்றதல்ல.
அவர்கள் இணையத்தில் நுழைந்து, ஹாரிபாட்டரின் (Harry Potter) ஹாக்வார்ட்ஸ் கோட்டைக்கு (Hogwarts castle) வந்து விடுவார்கள். வீடியோ கேம் போல அவர்கள் மணமக்களின் அலங்காரத்தோடு கூடிய அவதார் (Avatar) பயன்படுத்திக் கொள்வார்கள். அங்கு சாப்பாட்டு மேசையில் காத்திருப்பார்கள். உங்களுக்கு அழைப்பு இருந்தால் நீங்களும் இணையத்தில் நுழைந்து ஒரு அவதாரை தேர்ந்தெடுத்து அவர்களோடும் மற்ற விருந்தினர்களோடும் அளவளாவலாம். ஆனால் உணவு மட்டும் கிடைக்காது. திருமணப் பரிசாக அன்பளிப்பு வவுச்சர்கள் மூலமாகவோ, Gpay மூலமாகவோ வழங்கலாம். கிரிப்டோவாக (crypto) கூட வழங்கலாம் என்று அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இதில் ஒரு விசேடம் என்னவென்றால் காலம்சென்ற மணமகளின் தந்தையாரின் அவதாரை உருவாக்கி அதில் நடமாட விடுகிறார்கள். மணமகன் ஏற்கனவே பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்து வந்ததால் அவருக்கு இது எளிதாகத் தெரிகிறது.
உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் திருமண வரவேற்பை தங்களது நண்பர்கள் பார்ப்பதற்கு வசதியாக இப்படி ஏற்பாடு செய்ததாகக் கூறுகிறார். மேலும் தற்போதைய பெருந்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டிரேசி (Traci) என்பவரும் டேவ் காக்னான் (Dave Gagnon) என்பவரும் இதேபோல மெட்டாவெர்ஸ் திருமணம் முடித்தது பெரிய செய்தியாக இருந்தது.
இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா? இதுதான் இனி சமூக ஊடகங்களின் ஒரு வடிவமாக இருக்கப் போகிறது. தொழில்நுட்பம் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
அண்மையில் ஃபேஸ்புக்கின் மார்க் ஸூக்கர்பெர்க் இதைத் தெளிவாக எடுத்து வைத்திருக்கிறார். இதற்காகவே தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா (Meta) என்று மாற்றியிருக்கிறார். மைக்ரோசாப்ட் கூட மெஷ் (Mesh) என்னுமொரு மெய்நிகர் அனுபவத்திற்கான ஒரு தளத்தினை உருவாக்கி வருகிறது. கூகுளும் ஆப்பிளும் கூட தனித்தனியே இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கின்றன.
இந்த மெட்டாவெர்ஸ் சமூக நிகழ்வுகள் மட்டுமல்லாது கல்வி, மருத்துவம், வணிகம், பொழுதுபோக்கு என்று அனைத்துத் துறைகளிலும் பயன் அளிக்கப் போவதாக இருக்கிறது.
மார்க் ஸூக்கர்பெர்க் மற்றும் சத்ய நாடெல்லா போன்ற தலைமை செயல் அதிகாரிகளின் பேச்சுக்களில் இருந்து மெட்டாவெர்ஸ் என்பது இணையத்தின் எதிர்கால வடிவம் என்று தெரிகிறது. இப்போது மெட்டாவெர்ஸை பற்றிப் பேசுவது என்பது எழுபதுகளில் இணையத்தை பற்றிப் பேசுவது போலாகும். அப்போது, இணையம் இப்படித்தான் இருக்கும் என்று ஒருவராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனது நண்பர் ஒருவர் அப்போது இணையம் என்பது ஒரு பெரிய நூலகமாக இருக்கும் என்று சொன்னார். ஆனால் இணையம் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. எவ்வளவோ சேவைகளை அது வழங்குகிறது என்பது பின்னாளில் உறுதியாகிப் போன ஒன்று.
மெட்டாவெர்ஸ் என்பது தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வரும் பல்வேறு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பினால் விளைவது. அதிகரிக்கப்பட்ட யதார்த்தம் (Augmented Reality), மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality), பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பம், சமூக ஊடகம் ஆகியவை இந்த மெட்டாவெர்ஸை முன்னோக்கி செலுத்துகின்றன.
சுருக்கமாகச் சொன்னால் மெட்டாவெர்ஸ் என்பது பல விதமான மக்கள், தங்களுக்குள்ளும், டிஜிட்டல் பொருள்களோடும், தங்களுடைய மெய்நிகர் மாதிரிகள்(virtual models), அதாவது அவதார்களை வைத்து உறவாடும், எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிற மெய்நிகர் சூழல்களின் (virtual environment), ஒரு வலைப்பின்னல் (network) எனலாம்.
மெட்டாவெர்ஸ் என்னும் இந்த சொல், அறிவியல் புனைவுக் கதைகள் எழுதும் 'நீல் ஸ்டீபன்சன்' என்பவரது 1992 இல் வெளியான "ஸ்நோ கிராஷ்" (Snow Crash) என்ற நாவலில் பயன்படுத்தப்பட்டது. அதில் வரும் கதாபாத்திரம் இதேபோல அவதார்களைப் பயன்படுத்தி சமூகத்தில் ஊடாடுகிறது; கடைகளில் பொருட்களை வாங்குகிறது; எதிரிகளை அழித்து ஒழிக்கிறது.
"மனித அனுபவத்தை விட உயர்ந்த" என்று பொருள்படும் மெட்டா (meta) என்ற சொல்லும் யுனிவர்ஸில் (universe) வரும் வெர்ஸ் என்ற சொல்லும் இணைந்து உருவான ஒரு இரட்டைப்பதமே மெட்டாவெர்ஸ்.
மெட்டாவெர்ஸூக்கு மூன்று அடிப்படையான அம்சங்கள் தேவை. ஒன்று, இருத்தல் (presence). அதாவது ஒரு மெய்நிகர் வெளியில் (virtual space) மெய் நிகராக உலாவும் மற்றவர்களுடன் (virtual others) இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவது. இதற்குப் பெரிதும் உதவுவது தலையில் பொருத்திக் கொள்ளும் காட்சிக் கருவிகள் (head mounted displays).
இரண்டாவது, பரஸ்பர செயல்படும் தன்மை (inter operability). அதாவது ஒரு மெய்நிகர் நிலையிலிருந்து, மற்றொன்றிற்கு தனது மெய்நிகர் பொருட்களுடன், (அதாவது அவதார்கள், டிஜிட்டல் பொருட்கள்) எளிதில் செல்வதும் திரும்ப வருவதுமான ஒரு சூழல்.
மூன்றாவது, தரப்படுத்துதல். (Standardization). இதுவே பல்வேறு தளங்களும் சேவைகளும ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும் பரஸ்பர தன்மைக்கு உதவி செய்வதாக அமையும். இதற்கு கை கொடுப்பதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம்.
மெட்டாவெர்ஸ் இணையத்தின் எதிர்கால வடிவம் என்று சொன்னாலும், மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன. இப்போது நாம் பயன்படுத்தும் இணையம் Web 2.0. எதிர்காலத்தில் வர இருப்பது Web 3.0. இப்போதுள்ள இணையத்தில் உள்ளடக்கங்கள் நம்மைப் போன்ற பயனர்களால் உருவாக்கப்படுகின்றன. ஆனால் நிறுவனங்கள் அதைக் கட்டுப்படுத்தவும், பணமாக்கிக் கொள்ளவும் அவற்றுக்கு வசதிகள் இருக்கின்றன. ஆனால் இனி வரும் இணையத்தில் (Web 3.0) உள்ளடக்கமும் நம்மால் உருவாக்கப்படும். அதைக் கட்டுப்படுத்துவதும், பணமாக்கிக் கொள்வதும் கூட பயனர்களால் முடியும். இதற்கும் முழுவதும் உதவுவது பிளாக்செயின் தொழில்நுட்பம் தான்.
மெட்டாவெர்ஸ்ஸை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் ஒரு எஞ்சினாக இந்த எதிர்கால இணையம் Web 3.0 இருக்கும் என்று கூறுகிறார்கள்.
மெட்டாவெர்ஸ், கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் கிராமம் வரை வந்து விட்டது. நாமும் அதற்கு தயாராகத்தான் வேண்டும்.
- இரா.ஆறுமுகம்
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
உலக வெப்பமயமாதல் நிகழ்வு அறிவியலாளர்கலையும், சமூக ஆர்வலர்களையும் அரசுகளையும், உலக அமைப்புகளையும் ஒருசேர அதை மட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளை எடுப்பதற்கு நிர்பந்தம் வகிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகின்றது.
பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையிலான குழு (Intergovernmental Panel on Climate Change), அக்டோபர் 2018 இல் வெளியிட்ட உலக வெப்பமயமாதல் பற்றிய சிறப்பு அறிக்கையில், உலக வெப்பமயமாதல், உலகம் தொழில்மயமாவதற்கு முன்பிருந்த அளவுகளை விட 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு உயர்ந்திருக்கின்றது என கணிக்கிறது.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி (Paris Agreement) தேசங்கள் அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Commitments) என்று சொல்லப்படும் மிகக் கடுமையான சவால் நிறைந்த நடவடிக்கைகள் எடுத்தும் கூட 2030 க்கு பிறகு உலக வெப்பமயமாதல் நிகழ்வு 1.5 டிகிரி சென்டிகிரேடு அதிகமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பமயமாதலை 1.5 டிகிரி சென்டிகிரேடுக்குள் கட்டுப்படுத்துவதற்கு, 2050ஆம் வருட வாக்கில், எந்த கார்பன்–டை-ஆக்சைடு வெளியீட்டையும் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் இருக்கிறோம். அதேபோல கார்பன்-டை-ஆக்சைடு தவிர்த்த மற்ற பசுமை வாயுக்களின் வெளியீட்டையும், குறிப்பாக மீத்தேனையும் கட்டுப்படுத்த மிகவும் போராட வேண்டியது இருக்கும்.
உலக வெப்பமயமாதலின் உயர்வு இரண்டு டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும்போது இருப்பதைவிட 1.5 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும்போது வரும் ஆபத்துகள் மனிதனுக்கும் இயற்கைக்கும் குறைவாகவே இருக்கும் என்பதால் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, இந்தியா தனது பசுமை வாயுக்கள் வெளியீட்டு அளவினை, 2005 அளவுகளில் இருந்ததைவிட 2030 ஆம் ஆண்டு வாக்கில், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கில் 33 லிருந்து 35 சதவீதம் குறைப்பதன் மூலம் கட்டுப்படுத்த கடப்பாடு கொண்டுள்ளது.
இது 2030 ஆம் ஆண்டு வாக்கில் புதை படிவம் சாராத எரிசக்தி மூலங்களை பயன்படுத்தி நிறுவப்படும் மின்சக்தி திறன்களை 40% அதிகரிப்பதன் மூலமாகவும், மேலதிகமாக காடுகள் மற்றும் மரங்களின் பரவலால் 2.5 இலிருந்து 3 பில்லியன் வரையிலான கார்பன் டை ஆக்ஸைடு அளவிற்கான (GtCO2e) கார்பன் மூழ்கிகளை (carbon sinks) கூடுதலாக உருவாக்குவதன் மூலமும் மட்டுமே அடைய முடியும்.
இதன் தொடர்ச்சியாக, இந்திய அரசு 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் மெகாவாட் சூரிய மின்சார திறன் சக்தியை நிறுவ இலக்கு ஏற்படுத்தியுள்ளது. அதில் 40% மேற்கூரை மற்றும் சிறிய அளவிலான சூரிய ஒளி மின்சக்தி சாதனங்களும் அடங்கும்.
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை (Ministry of New and Renewable Energy), தமிழ்நாட்டிற்கு 2022 ஆம் ஆண்டு சூரிய மின்சக்தியின் இலக்காக 9 ஆயிரம் மெகாவாட் திறனை முன்வைப்பு செய்திருக்கிறது. தமிழக அரசும் தனது சூரிய ஒளி சக்திக்கான கொள்கையினை (Solar Energy Policy) 2012 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டிருக்கிறது.
தனிநபர்களின் பங்களிப்பாக நாமும் உலக வெப்பமயமாதலை மட்டுப்படுத்தும் நிகழ்வுப் போக்கில் சிறிய அளவுகளில் நமது இல்லங்களிலோ, வணிக நிறுவனங்களிலோ மேற்கூரை சூரிய மின்நிலையங்கள் (Solar Rooftop Power Plant) அமைத்து அதில் கலந்து கொள்வது மிகவும் எளிதான விடயமே.
மேற்கூரை சூரிய மின் நிலையம்
சூரிய மின் நிலையங்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பெருமளவில் அதாவது அதன் மின்திறன் கணக்கில், மெகா வாட்டுகள் அளவில், பரந்த நிலப்பரப்பில் நிறுவப்படுவது. பெரும்பாலும் இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், அவற்றை நிறுவிய நிறுவனங்களின் சொந்த உபயோகத்திற்கோ, அல்லது மின்சார நிறுவனங்களுக்கு விற்பதற்கோ பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது, சிறிய மின்சக்தி திறன் அளவில் வீடுகள், விடுதிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் மேற்கூரையின்மீது நிறுவப்பட்டு சொந்த உபயோகத்திற்கு பயன்படுபவை. இதில், மின் நிறுவனத்தின் மின் இணைப்போடு பொருத்தப்பட்டு இயக்குவது; மாறாக மின் இணைப்போடு பொருந்தியில்லாமல் தனிப்பட்ட முறையில் இயக்குவது என இரண்டு வகைகள் உண்டு. மின் இணைப்போடு பொருத்தமின்றி இயக்குவதில் பல சிரமங்கள் உள்ளன. முதலில் அதற்கு மின்கலம் வேண்டும்.
மின்கலத்தை பராமரிப்பதற்கு உண்டான செலவுகளும் ஒரு பிரச்சனை. அது தவிர ஒருவேளை நாம் பயன்படுத்தும் தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகும் போது, மின்கலமும் கொள்ளளவு நிறைந்துவிட்ட போது, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் வீணாகத்தான் போகும். இது தவிர, மின்சாரம் மின் கலன்களில் சேமித்து வைத்து மறுபடி உபயோகப்படுத்துவதன் காரணமாக 15 லிருந்து 20 சதவீதம் வரை எரிசக்தி விரயமாக வாய்ப்பிருக்கிறது.
சூரிய மின்சாரத்தில் இயங்கும் மின் சாதனங்களையும், மின்சார நிறுவன மின்சாரத்தில் இயங்கும் மின் சாதனங்களையும் தனித்தனியாக பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே இந்த மின் இணைப்போடு பொருத்தமின்றி இயக்கும் முறை பிரபலமடையவில்லை. மேலும் அரசினால் ஊக்கப்படுத்தப்படுவதும் இல்லை.
மேற்கூரை சூரிய மின் அமைப்பிற்கு மிகவும் அவசியமானது பேனல்கள் (solar panel) அமைக்க திறந்த மாடியில் நல்ல சூரிய ஒளி விழும் தேவையான இடம். ஒரு கிலோ வாட் மின்சக்தி திறன் கொண்ட சூரிய மின் அமைப்பிற்கு 8 முதல் 10 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் தேவை.
முதலமைச்சர் மேற்கூரை சூரிய மின் திட்டம்
தமிழக அரசு, முதலமைச்சர் மேற்கூரை சூரிய மின் திட்டம் என்ற பெயரில் ஒரு சூரிய ஒளி மின் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரு கிலோ வாட் திறன்சக்தி கொண்ட சூரிய மின் அமைப்பிற்கு 20 ஆயிரம் ரூபாயை மானியமாக தருகிறது. இது மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அளிக்கும் 30 சதவீத மானியத்திற்கும் கூடுதலாக கிடைக்கும்.
தனிப்பட்ட வீடுகளுக்கு அல்லது தனிப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனிப்பட்ட ஒருவருக்கு சூரிய ஒளி மின் அமைப்பின் திறன் அளவு ஒரு கிலோ வாட் அளவிலும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் சேர்ந்து 10 கிலோவாட் அல்லது அதன் மடங்குகளிலும் இதை நிறுவிக் கொள்ளலாம். தனிப்பட்ட வீடுகளில் நிறுவும் போது 1 கிலோ வாட்டிற்கு அதிக அளவிலான மின்திறனிலும் நிறுவிக் கொள்ளலாம்.
ஆனால் ஒரு கிலோவாட்டுக்கு மட்டும்தான் மானியம் உண்டு. மின்சார நிறுவனத்தின் மின் இணைப்புடன் செயல்படும் சூரிய மின்சார அமைப்புகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
நிறுவுதலுக்கான வழிமுறைகள்
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமையிடம் (Tamil Nadu Energy Development Agency - TEDA) விண்ணப்பித்து அனுமதி பெற்று நிறுவ வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 1, 2, 5 அல்லது 10 கிலோ வாட் மின்சக்திக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு ஒரு வீட்டிற்கு அல்லது ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு, ஒரு கிலோவாட் அளவிற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இணைய தளத்தின் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். (இணைய தள முகவரி: http://www.teda.in/CIS) ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது இணையதளத்தில் உள்ள படிவத்தை நிரப்பி, பின்னர் அதில் சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தினை பிரிண்ட் செய்து, கையொப்பமிட்டு, தமிழ்நாடு எரிசக்தி முகமையின் சென்னை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபாலில் விண்ணப்பிக்க, குறிப்பிட்ட இணைய தளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். இரண்டு முறைகளிலும் விண்ணப்பிப்பதற்கு பதிவுக் கட்டணம் கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்யப்படும். ஒரு குறிப்பிட்ட நாளில், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு பிறகுதான் ஆஃப்லைனில் உள்ள விண்ணப்பம் எடுத்துக் கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள், முன்னுரிமை மற்றும் அவற்றின் சரித்தன்மையினை உறுதி செய்த பின்னர், பதிவு செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். இப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட விவரம் மின்னஞ்சல் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் அந்த வார இறுதியில் அனுப்பப்படும்.
பதிவுபெற்ற விண்ணப்பங்களின் பதிவு எண்கள் அதனுடைய ஒப்புதல் விவரங்களுடன் இணையதளத்திலும் வெளியிடப்படும். இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையினையும், மற்ற படிவங்களையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமையின் பதிவு செய்யப்பட்ட நிறுவனர்கள் மூலமாக மட்டுமே நாம் சூரிய ஒளி மின்சார அமைப்பினை வாங்கி நிறுவ முடியும். இந்த நிறுவனங்களின் பட்டியல் தமிழ்நாடு எரிசக்தி துறை மேம்பாட்டு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும்.
நமது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன் அந்த நிறுவனங்களுடன் நாம் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலவரப்படி இதில் 22 நிறுவனங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
அதோடு அவர்களின் சூரிய மின் நிலையத்தினை அமைத்துத் தருவதற்கான விலை, கிலோ வாட்டுக்கு எவ்வளவு என்ற விவரங்களும், மற்ற தொடர்பு விவரங்களும் அதில் தரப்பட்டிருக்கும். பட்டியலின்படி தற்போதைய விலை ஒரு கிலோ வாட்டிற்கு 60,000 ரூபாயிலிருந்து 70,000 ருபாய் வரை இருக்கின்றது.
மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் தவிர்த்த நிகர விலைக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டியதிருக்கும். நிறுவனர்கள் நமக்கு இந்த சூரிய மின்சார அடுக்குகளை நிறுவிய பின் அவர்கள் நேரடியாக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அந்த மானியத்தை பெற்றுக் கொள்வார்கள்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) அனுமதிகள்
அடுத்ததாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் இருந்து நீங்கள் அமைக்கப்போகும் சூரிய மின் அமைப்பினை அவர்களது மின் இணைப்போடு இணைப்பதற்கும், நெட் மீட்டர் இணைப்பு பெறுவதற்காகவும் அனுமதி பெற வேண்டியிருக்கும்.
முதலாவதாக, உங்கள் பகுதியில் உள்ள TANGEDCO செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒரு விண்ணப்பம் அளிக்க வேண்டியிருக்கும். பதிவுக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டியிருக்கும். உயரழுத்த மின் இணைப்பு வேண்டுவதாக இருந்தால் உங்கள் பகுதி TANGEDCO மேற்பார்வை பொறியாளரிடம் பதிவு செய்ய வேண்டியதிருக்கும்.
இரண்டாவதாக, TANGEDCO உங்களது சூரிய மேற்கூரை மின் அமைப்பினை அதன் விநியோக வலைப்பின்னலில் (Distribution Network) இணைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளை ஆய்வு செய்வது; இதற்கு முக்கியமாக பார்க்கப்படுவது நீங்கள் பொருத்தப் போகும் மேற்கூரை சூரிய மின் அமைப்பின் மின்சக்தி திறனின் அளவு, உங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் மின்மாற்றியின் சக்தியில், 30 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
அதுமட்டுமன்றி, நீங்கள் உங்கள் வீட்டிற்கு வாங்கியிருக்கும் மின் இணைப்பிற்கான அனுமதிக்கப்பட்ட மின்சக்தியை விடவும் அதிகமாகவும் இருக்கக் கூடாது. அப்படி ஒருவேளை அதிகமாக இருக்க நேர்ந்தால் முதலில் உங்களுக்கான மின்சக்தி அளவினை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். பின்னரே சூரிய மின் அமைப்பின் இணைப்பிற்கும், நெட் மீட்டர் இணைப்பிற்குமான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
TANGEDCO உங்களது சூரிய ஒளி மின் நிலைய அமைப்பினை தனது விநியோக வலைப்பின்னலில் இணைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியப்பாடு இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஒரு அறிவிப்பு கடிதம் தரும். நீங்கள் விண்ணப்பித்த தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் இந்த கடிதம் அனுப்பப்படும்.
மூன்றாவதாக, சூரிய ஒளி மின் நிலைய அமைப்பினை நிறுவுவதும், அது தயார் நிலையில் உள்ளது என TANGEDCO விற்கு அறிவிப்பதும்; இப்போது நீங்கள் சூரிய ஒளி மின் அமைப்பினை நீங்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களிடமிருந்து வாங்கி நிறுவிக் கொள்ளலாம்.
உங்களுக்கு தொழில்நுட்ப சாத்தியப்பாடு அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டதிலிருந்து ஆறு மாதத்திற்குள் இதை நிறுவ வேண்டும். தேவைப்படுமேயானால், அதை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இந்த நிறுவுதல் பணி முடிந்தவுடன், TANGEDCO செயற்பொறியாளரிடம், உங்களது சூரிய மின் அமைப்பு தயார் நிலையில் உள்ளது என்ற கடிதத்தினை கொடுக்க வேண்டும்.
நான்காவதாக, பாதுகாப்பு ஆய்வு; நீங்கள் தயார்நிலை கடிதத்தை கொடுத்த பத்து நாட்களுக்குள் உங்களது சூரிய மின் அமைப்பின் பாதுகாப்பினை சோதனையிடுவார்கள். 10 கிலோ வாட்டுக்கும் குறைந்த மின்சக்தி திறனானால் TANGEDCO இந்த ஆய்வினை மேற்கொள்ளும்.
10 கிலோ வாட்டுக்கு அதிகமான மின்சக்தி திறனாக இருந்தால் உங்கள் பகுதியின் மின் ஆய்வாளர் இந்த பணியினை மேற்கொள்வார். ஆய்வு முடிந்த தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
ஐந்தாவதாக, மின் இணைப்பில் மீட்டர் பொருத்துவதும், சூரிய மின் அமைப்பினை செயல்படுத்துவதும்; TANGEDCO உங்களது தற்போதைய மின் இணைப்பின் மீட்டரை மாற்றியமைத்து ஒரு இருபுறமும் செல்லும் (Bi-directional, அதாவது மின் நிறுவனத்திடமிருந்து உங்கள் வீட்டிற்கும், மற்றும் உங்கள் சூரிய மின் அமைப்பிலிருந்து மின் நிறுவனத்திற்கும்), மின்சாரத்தை அளக்கும் மீட்டரை பொருத்துவார்கள்.
இந்த மீட்டர் மாற்றுவதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். அல்லது நாமே கூட இந்த மீட்டரை வாங்கிக்கொடுத்து பொருத்தித் தரச் சொல்லலாம். இதற்காக TANGEDCO அனுமதிக்கப்பட்ட மீட்டர் வகைகளையும் அவர்களது இணையதளத்தில் பட்டியலிட்டு இருப்பார்கள்.
பின்வரும் பாதுகாப்பு அம்சங்கள் ஒரு மின் இணைப்புடன் இணைக்கப்பட்ட சூரிய மின் அமைப்பில் இருக்க வேண்டும். சூரிய மின்சாரத்தினை நமது மின் இணைப்போடு இணைக்கும் கருவியான சோலார் இன்வெர்டரில், ஆன்டி-ஐலான்டிங் (Anti-islanding) பாதுகாப்பு இருக்க வேண்டும்.
நமது வீட்டுக்கு வரும் மின் இணைப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின் கம்பிகளில் வேலை செய்யும் மின் பணியாளர்களை, நமது சூரிய மின் அமைப்பிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தாக்கி விடக் கூடாது என்பதற்காக இந்த பாதுகாப்பு.
இதில் அறிந்து கொள்ள வேண்டியது, மின் நிறுவனத்தால் வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தப்படும் போது சூரிய மின் உற்பத்தியும் நிறுத்தப்படும் என்பதுதான். இது தவிர, மற்ற மின் உபகரணங்கள் போல இதற்கும் தரை இணைப்பு (earthing) கொடுக்கப்பட வேண்டும்.
சூரிய மின் அமைப்பிலிருந்து வரும் ஒரு திசை மின்சாரத்தை, மாறுதிசை மின்சாரமாக மாற்றும் சோலர் இன்வெர்டரின் (solar inverter) இரண்டு புறங்களிலும் மின் பாதுகாப்பு உபகரணங்கள் (surge protection devices), அவை கட்டாயமாகவில்லையென்றாலும், இணைக்கப்படலாம். நமது வீட்டு மின் இணைப்பின் முக்கிய விசை (main switch) அருகிலும், மீட்டர் அருகிலும் 10 செமீ க்கு 7 செமீ அளவில் Solar PV System என்ற அறிவிப்பு ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும்.
என்ன பலன் கிடைக்கும்
ஒவ்வொரு கிலோவாட் மின் திறனுள்ள சூரிய ஒளி மீன் அமைப்பும் வருடத்திற்கு 1500 யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்க முடியும். மின் உற்பத்தியானது சூரிய சக்தியின் அளவினையும், அந்த சூரிய மின் அமைப்பு பேனல்கள் நிறுவப்பட்டிருக்கும் கோணத்தையும், காலச் சூழ்நிலையையும், மின் நிறுவனத்தின் மின் இணைப்பு தொடர்ந்து கிடைப்பதைப் பொறுத்தும், சூரிய மின் அமைப்பு பேனல்களின் சுத்தத்தை பொருத்தும் மாறுபட வாய்ப்பு உள்ளது. தினமும் ஏறக்குறைய 6 இலிருந்து 8 யூனிட்டுகள் வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
வீடுகளுக்கு தற்போதைய கட்டணக் காலம் இருமாதங்களாய் இருப்பதால், நெட் மீட்டரில் பதிவான TANGEDCO விலிருந்து நாம் எடுத்துக் கொண்ட மின்சாரமும், TANGEDCO விற்கு நாம் செலுத்திய மின்சாரமும் தனித்தனியாக கணக்கிடப்படும். நாம் எடுத்துக் கொண்ட மின்சாரத்திற்கு ஏற்கெனவே உள்ள மின்கட்டண அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். நமது சூரியமின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு நாம் உபயோகித்தது போக TANGEDCO விற்கு செலுத்தப்பட்ட மின் அளவிற்கு தமிழ்நாடு மின்சார ஆணையம் நிர்ணயித்த விலைப்படி கணக்கிடப்பட்டு பில்லில் சரி செய்யப்படும்.
தற்போது அப்படி நிர்ணயம் செய்யப்பட்ட விலையானது யூனிட்டிற்கு ரூபாய் 2.28 ஆக இருக்கிறது. அப்படி சரிசெய்யப்பட்டதற்கும் அதிமாக நாம் செலுத்திய மின்சார அளவு இருந்தால், அந்த வித்தியாசம் அடுத்த மின் கட்டண கால நுகர்வோடு சரி செய்ய எடுத்துச் செல்லப்படும். இப்படியாக 12 மாதங்களுக்கு (ஏப்ரல் மாதத்திலிருந்து அடுத்த மார்ச் மாதம் வரை) சரி செய்வதற்காக, அதிகம் செலுத்திய மின் அளவு எடுத்துச் செல்லப்படும். ஆனால் நாம் இந்த 12 மாத காலத்தில் நுகர்வு செய்த மின்சாரத்தின் அளவில் 90 சதவீதம் வரை மட்டுமே சரிசெய்யப்படும்.
இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு வீட்டில், 1 கிலோ வாட் திறனுள்ள சூரிய மின் அமைப்பு நிறுவுவதாகக் கொள்வோம். அது தினமும் 5 யூனிட்டுகள் உற்பத்தி செய்வதாகக் கொண்டால், இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட்டுகள் மின்சாரத்தினை உற்பத்தி செய்திருக்கும்.
இந்த 300 யூனிட்டுகளுக்கு மின்நிறுவனம் விதிக்கும் ரூ.4.60 கட்டணத்திலிருந்து சேமிப்பை பெற முடியும். இதன் ஒரு ஆண்டு பலன் ரூ.8,260/- எனக் கொண்டால், 7 வருடங்களில் சூரிய மின் அமைப்பு நிறுவிய செலவினத்தை மீட்டுக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நாமும் உலக வெப்பமயமாதலை மட்டுப்படுத்தும் நிகழ்வில் பங்களிக்கிறோம் என்ற மன திருப்தியைப் பெறலாம்.
- இரா.ஆறுமுகம்
- மரபணு மாற்றம் (CRISPR-Cas9) தொழில்நுட்பம் - 2020 வேதியியல் நோபல் பரிசு
- போயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன?
- பிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி
- புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்
- ஏன் லினக்ஸ்-க்கு மாற வேண்டும்?
- Facial Recognition தொழில்நுட்பமும் அதன் சர்ச்சைகளும்
- ஆன்லைன் தேர்வுகளை கண்காணிக்கும் Proctoring எனும் செயற்கை நுண்ணறிவு
- 'ZoomBombing' எனும் இணையதள வெறித்தனம்
- தகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்
- எதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers
- அறிவியல் பிரச்சாரம் செய்வோம்...!
- இது யாரு பண்டிகூட்டா? - டிஜிட்டல் பெருச்சாளி
- நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்
- நுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி
- சூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்
- நீர்த்திவலையின் இயல்பை விளக்கும் புதிய அறிவியல் விதி
- கிலோகிராமின் வரையறை மாறுகிறது
- பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்: எச்சரிக்கை தேவை
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்
- பால் அருந்தாத வெர்கீஸ் குரியன் வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.