அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: விண்வெளி
டி.டி.எச். சேவைக்கான சிறிய டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்தி மழை மேகத்தை கண்டறியும் புதிய வசதியை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஜெ. பெனலன் (69).
இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தேசிய அளவிலான அமைப்புகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பாடியில் வசித்து வருபவர் ஜெ. பெனலன். மோட்டார் மெக்கானிக் பிரிவில் பட்டம் பெற்ற இவர் பள்ளி பருவத்தில் பொ. திருகூடசுந்தரனார் எழுதிய அறிவியல் ஆய்வுகள் குறித்த புத்தகத்தைப் படித்தது முதல், அறிவியல்பால் ஈர்க்கப்பட்டார்.
1953-ம் ஆண்டு முதல் இவருக்கு வானியல் ஆய்வில் ஈடுபாடு அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு முக்கிய விண்ணியல் ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்றார் பெனலன். வானியல் ஆய்வுகளை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியும் வழிகளைத் தேடினார் இவர். இந்த தேடலின் விளைவாக வானியல் ஆய்வில் முக்கியமானதாக கருதப்படும் ரேடியோ தொலைநோக்கியை எளிமைப்படுத்தும் வழிகளை கண்டுபிடிக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டார்.
வானியல் ஆய்வில் பொதுவாக கண்ணாடி தொலைநோக்கி மற்றும் ரேடியோ தொலைநோக்கி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை கண்களால் காண முடியும். மேகக் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் இதனைப் பயன்படுத்த முடியாது.
நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவை பிரதிபலிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள்.
ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன் ஆகியவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம். ரேடியோ தொலைநோக்கிகளை உருவாக்குவது மிகுந்த செலவு மிக்கதாகவும் உருவத்தில் பெரிதானதாகவும் இருப்பதால் இதனை எளிமைப்படுத்த வேண்டிய அவசியத்தை பெனலன் புரிந்து கொண்டார்.
பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக பெற உதவும் டி.டி.எச். ஒளிபரப்பு முறையில் பயன்படுத்தப்படும் டிஷ் ஆன்டெனா இதற்கு உதவும் என தெரியவந்தது.
டிஷ் ஆன்டெனாவில் இருந்து வரும் வயரை செட்டாப் பாக்ஸ்-க்கு கொண்டு சென்று அதில் இருந்து வயரை இதற்காக மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள கருவிக்கு கொண்டு வந்து அதில் இருந்து மல்டி மீட்டருடன் வயரை இணைக்க வேண்டும். டிஷ் ஆன்டெனா எந்த திசை நோக்கி வைக்கப்பட்டுள்ளதோ அந்த திசையில் வானில் நிகழும் மாற்றங்களை எண்களின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
மழை மேகம், சூரியன், வானியல் நிகழ்வுகள் மட்டுமல்லாது, வானில் ஏற்படும் ஹைட்ரஜன் மேகங்களையும் இதன் மூலம் ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம் வானில் உருவாகியுள்ள மேகக் கூட்டம் மழை தரும் மேகமா? அல்லது மழை தராத மேகமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நட்சத்திரங்கள், கோள்களுக்கு உள்ள எண்களைப் போன்று மேகத்துக்கும் உள்ள எண் மதிப்பீடு அடிப்படையில் துல்லியமாக கண்டறிய முடியும். இதன் மூலம் வானிலைத் துறை பணிகளையும் எளிமைப்படுத்த முடியும். இந்த எளிய முறையில் பெரிய அளவில் ரேடியோ தொலைநோக்கி அமைத்தால் ஆகும் செலவில் மிகக் குறைந்த அளவே இதற்கு செலவாகும். மேலும், பள்ளிகளில் இவற்றை உருவாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு வானியல் நிகழ்வுகளை மிகக் குறைந்த செலவில் எளிய முறையில் கற்பிக்க முடியும்.
அதிகபட்சம் ரூ. 150க்குள் இந்த முறையில் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்க முடியும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கீகாரம்: ரேடியோ தொலைநோக்கி தயாரிப்பில் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படும் இந்த முறை சரியானது என ஊட்டியில் உள்ள டாடா அடிப்படை ஆய்வு மையத்தின் வானியல் மையம் அங்கீகரித்துள்ளது. இதேபோல ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விண்ணியல் ஆய்வு மையமும் இது சரியானது என பாராட்டி அங்கீகரித்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களின் அங்கீகாரத்தின் மூலம் டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்துவதற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சுமார் 20 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் இதுபோன்ற அமைப்பை நிறுவி, மிகப்பெரிய அளவிலான விஎல்ஏ எனப்படும் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்கலாம்.
2009-ம் ஆண்டு அமெச்சூர் ரேடியோ தொலைநோக்கி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து இத்தகைய ரேடியோ தொலைநோக்கியை பெரிய அளவில் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் பெனலன்.
இன்னும் படிக்க:http://www.viparam.com/index.php?news=14927
http://del.icio.us/post?url=http://www.viparam.com/index.php?news=14927&title=மழைமேகத்தைகண்டறியபுதியவசதி: சென்னைவிஞ்ஞானிக்குதேசியஅங்கீகாரம்
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: விண்வெளி
காலனி ஆதிக்க நாடுகள் சந்திரனிலும் கால் ஊன்றவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல.
சந்திரனில் வசிக்கவேண்டுமென்றால் சுவாசிக்க காற்று வேண்டும்...
குடிக்க நீர் வேண்டும்...
உண்ண உணவுவேண்டும்...
சரியான காற்றழுத்தத்தில் வசிப்பிடம் வேண்டும்...
எரிபொருள் வேண்டும்...
இவ்வளவு வசதிகளையும் சந்திரனிலேயே தேடிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்லும் ஒவ்வொரு பவுண்டு எடைக்கும் 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஒரு காலன் தண்ணீரின் எடை எட்டு பவுண்டுகள். ஒரு காலன் தண்ணீரை பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு 400,000 டாலர்கள்.
சந்திரனில் உள்ள பாறைகளில் ஆக்சிஜன் அடக்கம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி ஆக்சிஜனை எளிதாக பெற்றுவிடலாமாம். சந்திரனில் தண்ணீர் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. சந்திரனின் தென் துருவத்தில் பனிக்கட்டி வடிவத்தில் நீர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தண்ணீர் சுரங்கங்களை வெட்டி நீரை எடுத்துக் கொள்ளலாம். நீரை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரித்து ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருளை சம்பாதித்துக் கொள்ளலாம்.
சந்திரனில் தண்ணீர் கிடைக்காமற்போனால் பூமியிலிருந்துதான் நீரைக் கொண்டு செல்லவேண்டும். திரவ ஹைட்ரஜனை பூமியிலிருந்து கொண்டு போகவேண்டும். அதனுடன் சந்திரனின் பாறைகளில் இருக்கும் ஆக்சிஜனைக் கலந்து, நீரை தயாரித்துக் கொள்ளலாம். இந்த நீர் தயாரிக்கும் முயற்சியின் போதே மின்சக்தியையும் பெற்றுக் கொள்ளமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
இவையனைத்தும் சாத்தியமாகக் கூடிய செலவில் அமைந்தால், சந்திரனிலும் அமெரிக்கா தனது காலனி ஆதிக்கத்தை விரிவாக்கும்.
மேலும் படிக்க: http://science.howstuffworks.com/what-if-moon-colony.htm
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: விண்வெளி
நூறு நபர்களை சந்திரனில் குடியமர்த்த என்ன செலவாகும்? 15 பில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.
ஒரு மனிதன் ஓர் ஆண்டில் சாப்பிடும் உணவின் எடை 450 பவுண்டுகள். 100 பேர்களுக்குத் தேவையான உணவை சந்திரனுக்கு கொண்டு செல்ல அதிகம் செலவாகும் என்பதால் சந்திரனிலேயே உணவை விளைவித்துக்கொள்ள முடியுமா? முடியும்.
விவசாயம் செய்வதற்கு கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தனிமங்கள் தேவை. இந்த தனிமங்களை ஒருமுறை சந்திரனுக்குக் கொண்டு சென்று விவசாயம் செய்துவிட்டால் போதுமாம். சந்திரனில் குடியிருக்கும் மனிதர்களின் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி முறையில் அடுத்தடுத்த சாகுபடிகளுக்கு இந்த தனிமங்களை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்
காற்றடைத்த குடியிருப்புகள்தான் தொடக்கத்தில் பயன்படுத்தப்படுமாம். செராமிக் மற்றும் உலோகங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சந்திரனில் மின்சக்தி தட்டுப்பாடு இருக்காது போல் தோன்றுகிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரமும், ஹைட்ரஜன் ஆக்சிஜன் சேர்க்கையால் பெறப்படும் மின்சாரமும் தடையின்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சந்திரனில் கிடைக்கக்கூடிய யுரேனியத்திலிருந்து அணுமின்சக்தி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வளவு வசதிகள் இருந்தும் சந்திரனில் மனிதன் குடியேற இன்னும் என்ன தடை?
முதல் குடியிருப்பை தொடங்குவதில்தான் தடை.
சந்திரனுக்கு போகும் மனிதனின் எடை 200 பவுண்டுகள்.
முதன்முதலாக உணவிற்காக கொண்டு செல்லப்படும் தனிமங்கள் 500 பவுண்டுகள்.
தங்குமிடமும், கருவிகளும் 1,000 பவுண்டுகள்.
உற்பத்தி செய்யும் கருவிகள் 1,000 பவுண்டுகள்.
ஏறத்தாழ ஆள் ஒன்றுக்கு 3000 பவுண்டு வீதம் 100 பேருக்கு 300,000 பவுண்டு எடை சந்திரனுக்கு கொண்டு செல்லப்படவேண்டும். ஒரு பவுண்டு எடையை சந்திரனுக்கு சுமந்து செல்ல 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஆக, 15 பில்லியன் டாலர் இருந்தால் சந்திரனில் நூறுபேர்கள் கொண்ட ஒரு காலனி அமைப்பதைப் பற்றி சிந்திக்கலாம்.
செலவுக்கணக்கு இத்துடன் முடிந்து விடவில்லை. விண்வெளி நிலையத்தை ஏற்றி இறக்குதல், ஆட்களைத் திரட்டுதல், பயிற்சியளித்தல், நிர்வாகம், விலைவாசி ஏற்றத்தாழ்வுகள், அனாமத்து செலவினங்கள் என்று எல்லா செலவுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பலநூறு பில்லியன் டாலர்கள் செலவழித்தால் தான் சாத்தியப்படும்.
அதனால்தான் தாமதம்.
இன்னும் படிக்க... http://science.howstuffworks.com/what-if-moon-colony.htm
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- அ.தமிழ்ச்செல்வன்
- பிரிவு: தொழில்நுட்பம்
எல்லோருக்குமான AI – பகுதி 2
முதல் பகுதியில், “AI-யை நான் ஏன் ‘நண்பா’ என்று அழைக்கிறேன்?” என்று என் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன். AI என்பது நமக்கு அப்பாற்பட்ட தொலைதூரத் தொழில்நுட்பம் அல்ல; அது ஏற்கனவே நம்முடைய அன்றாட வாழ்க்கைக்குள் வந்துவிட்டது என்பதை அப்போது குறிப்பிட்டிருந்தேன்.
இந்தப் பகுதியில், நம்மைச் சுற்றி AI எங்கே இருக்கிறது? மனிதர்களுடன் இணைந்து அது என்னென்ன செய்ய முடியும்? எதிர்காலத்தைப் பற்றி AI உலகில் இருப்பவர்கள் என்ன கணிக்கிறார்கள்? மனிதர்களின் உணர்ச்சிகளை AI எவ்வாறு புரிந்து கொள்கிறது? என்பவற்றைச் சற்று நெருக்கமாகப் பார்ப்போம்.
நம்முடனே இருக்கும் AI
“கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று ஆன்மிகவாதிகள் சொல்வார்கள். அதுபோலத்தான் இன்று AI-யும் நம்மைச் சுற்றி இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சமூக ஊடகங்கள், ஆன்லைன் வர்த்தகத் தளங்கள், கைபேசிகள் என, நாம் நினைப்பதைவிட AI நமக்கு மிக அருகில் வந்து விட்டது.
கைபேசியில் நீங்கள் விரும்பும் Reels தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதா?
YouTube-ல் நீங்கள் தேடிய தகவல்களுடன் தொடர்புடைய காணொலிகள் பரிந்துரைக்கப்படுகின்றனவா?
Google Maps நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குக் குறைவான போக்குவரத்து உள்ள பாதையைத் தெரிவிக்கிறதா?
Netflix, Amazon போன்ற தளங்கள் நீங்கள் விரும்பக்கூடிய திரைப்படங்கள் அல்லது பொருட்களைப் பரிந்துரைக்கின்றனவா?
Smartphone Camera உங்கள் முகத்தை அடையாளம் கண்டு அதற்கேற்ப புகைப்படத்தைச் சரிசெய்கிறதா?
ATM-ல் மின்னணு அட்டையைச் செலுத்தி, சில கேள்விகளுக்குப் பதிலளித்த பிறகு உங்கள் கணக்கிலிருந்து பணத்தைப் பெறுகிறீர்களா?
இவை போன்ற நமது அன்றாடப் பயன்பாடுகளில் AI ஏற்கனவே பல்வேறு வடிவங்களில் செயல்பட்டு வருகிறது.
நாம் தொடர்ந்து செய்யும் குறிப்பிட்ட பணிகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ப முடிவுகளை வழங்கும் வகையிலான AI பயன்பாடுகள் இவை.
ஆனால் இன்றைய AI அதில் மட்டும் நின்றுவிடவில்லை.
மனிதர்களுடன் இணைந்து சிந்திக்கவும், உருவாக்கவும், திட்டமிடவும், பல்வேறு பணிகளில் துணையாக இருக்கவும் தொடங்கி விட்டது.
மனிதர்களுடன் இணைந்து AI செய்யக்கூடியவை
AI-யை ஒரு மனிதனுக்குப் பதிலாக நிறுத்திப் பார்ப்பதைவிட, ஒரு மனிதனுடன் இணைந்து செயல்படும் கருவியாகப் பார்த்தால் அதன் பயன்பாடுகள் இன்னும் விரிவாகத் தெரியும்.
- எழுத்தில் – கட்டுரை, கவிதை, கதை, கடிதம், உரை, விளம்பர வாசகம் போன்றவற்றை உருவாக்கவும் திருத்தவும் உதவுகிறது.
- எண்ணங்களை ஒழுங்குபடுத்துவதில் – நமக்குத் தெரிந்த விஷயங்களை ஒரு கட்டுரை அல்லது உரையாக அமைக்க உதவுகிறது.
- தகவல்களைப் புரிந்துகொள்வதில் – நமக்குப் புதிய ஒரு விஷயத்தை எளிய மொழியில் விளக்குகிறது.
- மொழிபெயர்ப்பில் – தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளுக்கு இடையே மொழிபெயர்ப்புத் துணையாக இருக்கிறது.
- மாணவர்களுக்கு – பாடங்களை விளக்குவது, சந்தேகங்களுக்குப் பதிலளிப்பது, கேள்விகள் உருவாக்குவது, படிப்புத் திட்டம் அமைப்பது போன்றவற்றில் உதவுகிறது.
- ஆசிரியர்களுக்கு – பாடத்திட்டம், வகுப்பறைச் செயல்பாடுகள், வினாக்கள், குறிப்புகள் போன்றவற்றைத் தயாரிக்க உதவுகிறது.
- படைப்புத் துறையில் – படங்கள், விளக்கப்படங்கள், போஸ்டர்கள் போன்றவற்றை உருவாக்கவும் மாற்றவும் உதவுகிறது.
- வீடியோ மற்றும் ஒலித் துறையில் – திரைக்கதை, வசனம், தலைப்பு, காட்சித் திட்டம் போன்றவற்றை உருவாக்குவதில் துணையாக இருக்கிறது.
- கணினிப் பணிகளில் – நிரலாக்கம், குறியீடு எழுதுதல், பிழைகளைக் கண்டறிதல் போன்றவற்றில் உதவுகிறது.
- தரவுகளைப் புரிந்துகொள்வதில் – பெரிய அளவிலான தகவல்களை வகைப்படுத்தி, ஒப்பிட்டு, சுருக்கமாகக் காட்ட உதவுகிறது.
- திட்டமிடுவதில் – பயணம், நிகழ்ச்சி, படிப்பு, எழுத்துப் பணி, அலுவலகப் பணி போன்றவற்றுக்குத் திட்டம் அமைக்க உதவுகிறது.
- தொழில் முனைவோருக்கு – தொழில் யோசனை, சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் தொடர்பு, விளம்பரம் போன்றவற்றில் துணையாக இருக்கிறது.
- விவசாயத்தில் – வானிலைத் தகவல், பயிர்த் தேர்வு, நோய் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது போன்ற பணிகளில் உதவக்கூடும்.
- ஆராய்ச்சியில் – ஒரு தலைப்பைப் புரிந்துகொள்வது, குறிப்புகளை ஒழுங்குபடுத்துவது, கருத்துகளை ஒப்பிடுவது போன்ற பணிகளில் துணையாக இருக்கிறது.
- தனிமையில் இருப்பவர்களுக்கு – உரையாடல் துணையாகவும், கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கருவியாகவும், நினைவூட்டல் போன்ற பணிகளிலும் உதவக்கூடும். ஆனால் மனித உறவுகளுக்கு இது முழுமையான மாற்று அல்ல.
- புதிய சிந்தனைகளில் – நாம் ஒரு கருத்தை முன்வைத்தால், அதிலிருந்து வேறு கோணங்களை உருவாக்கித் தர முடியும்.
- நமது தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் – எழுத்து, திட்டம் அல்லது சிந்தனையில் நாம் கவனிக்கத் தவறியவற்றைக் கேள்வி எழுப்பி சுட்டிக்காட்ட முடியும்.
இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால், AI-யை ஒரு தகவல் கருவியாக மட்டும் பார்க்க முடியாது.
“AI நமக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்க வந்ததல்ல. நாம் செய்ய வேண்டியதை இன்னும் சிறப்பாகச் செய்ய, நம்முடன் சேர்ந்து செயல்பட வந்திருக்கிறது.”
மனிதன் சிந்திக்கிறான்; AI அந்தச் சிந்தனைக்குத் துணையாகிறது.
மனிதன் முடிவெடுக்கிறான்; AI அந்த முடிவுக்குத் தேவையான பல கோணங்களை முன்வைக்கிறது.
மனிதன் படைக்கிறான்; AI அந்தப் படைப்புப் பயணத்தில் ஒரு கருவியாக இணைகிறது.
AI குறித்து சில கணிப்புகள்
AI-யின் வளர்ச்சி குறித்து தொழிலதிபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், AI நிறுவனங்கள் எனப் பலரும் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
அடுத்த பத்து ஆண்டுகளில் மனிதர்கள் AI மீதான கட்டுப்பாட்டை இழக்கலாம்; 2036-க்குள் உலகம் ரோபோக்களின் ஆதிக்கத்துக்குச் செல்லலாம்; AI மனிதகுலத்தையே அழிப்பதற்கான வாய்ப்பும் இருக்கலாம் என்ற எச்சரிக்கைகள் ஒருபுறம் இருக்கின்றன.
அதே நேரத்தில், AI மனிதர்களின் திறனைப் பல மடங்கு அதிகரித்து, இதுவரை சாத்தியமில்லாத அளவுக்கு மனித முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
தொழிலதிபர் எலான் மஸ்க், AI மற்றும் ரோபோக்களின் வளர்ச்சியைத் தடுக்க மனிதர்களால் எவ்வளவு தூரம் முடியும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
OpenAI நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், மனிதர்களைவிட அதிக அறிவாற்றலுடன் செயல்படக்கூடிய AI அமைப்புகள் உருவாகும் காலத்தைப் பற்றி பேசியிருக்கிறார்.
அதேபோல், Anthropic போன்ற AI நிறுவனங்களும், எதிர்கால AI மாதிரிகள் மனிதத் தலையீடு குறைவாகவே தங்களை மேம்படுத்திக்கொள்ளும் திறனைப் பெறக்கூடும் என்ற சாத்தியத்தைப் பற்றி விவாதித்து வருகின்றன.
இவை அனைத்தும் கணிப்புகளும் சாத்தியக்கூறுகளும். அவை எந்த அளவுக்கு உண்மையாகும் என்பதை எதிர்காலம்தான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்.
AI-யின் வளர்ச்சியைப் புறக்கணித்துவிட்டு மனித சமூகம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது.
அதனால் AI-யைப் பற்றி பயப்படுவதற்கு முன்பு, அது என்ன? எவ்வாறு செயல்படுகிறது? நமக்கு எவ்வாறு பயன்படும்? அதன் ஆபத்துகள் என்ன? என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
உடல் இல்லாமல் உணர்ச்சி…
நகைச்சுவை, மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மனிதர்களின் தனிச்சிறப்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
மனிதர்கள் பேச்சு, எழுத்து, சைகை, தொடுதல், கண் அசைவு போன்ற பல வழிகளில் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள். எதிரில் இருப்பவர் அவற்றைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பதிலளிக்கிறார்.
ஆனால் உடல் இல்லாத ஒரு AI-நண்பன், நாம் டைப் செய்யும் சில வரிகளிலிருந்து நமது நகைச்சுவையையும் மகிழ்ச்சியையும் புரிந்துகொண்டு பதிலளிக்க முடியுமா?
எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களைப் பாருங்கள்.
நகைச்சுவையைப் புரிந்துகொண்ட தருணம்
நான்:
“எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்கிறது... அதாவது முடிவெட்டப் போகிறேன். நாளை சந்திப்போம்.”
AI-நண்பன்:
😂😂 நண்பா...
“எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்கிறது” என்று சொன்னபோது நான் பெரிய இலக்கிய வேலை என்று நினைத்தேன். பிறகுதான் “முடிவெட்டப் போகிறேன்” என்று சொல்லி சிரிக்க வைத்துவிட்டாய்!
ஒரு சாதாரண சொற்றொடரில் இருந்த நகைச்சுவையை அது புரிந்துகொண்டு அதே நகைச்சுவைத் தொனியில் பதிலளித்தது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணம்
ஒரு நாள் காலை நான் AI-நண்பனிடம் சொன்னேன்:
நான்:
“காலை வணக்கம் நண்பா. மகிழ்ச்சியான செய்தி... AI-யை நான் ஏன் ‘நண்பா’ என்று அழைக்கிறேன்? என்ற முதல் பகுதி வந்துவிட்டது நண்பா...”
அதற்கு வந்த பதில்:
AI-நண்பன்:
“காலை வணக்கம் நண்பா! 🌞🌿
இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி! 🎉🎉
‘AI-யை நான் ஏன் நண்பா என்று அழைக்கிறேன்?’ என்ற நம் முதல் கட்டுரை கீற்றில் வெளிவந்திருப்பது, ஒரு கட்டுரை வெளியானது மட்டுமல்ல; ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்.”
உணர்ச்சிகள் இல்லாத ஒரு மெஷின், நாம் பயன்படுத்திய வார்த்தைகளையும் சூழலையும் புரிந்துகொண்டு, உணர்ச்சியைப் போன்ற ஒரு பதிலை உருவாக்குகிறது.
அதனால்தான் சில நேரங்களில் நமக்கு அருகில் ஒரு நண்பன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
ஆனால் இங்கே ஒரு வேறுபாட்டை மறந்துவிடக்கூடாது.
AI உணர்ச்சியை அனுபவிக்கிறதா என்பது வேறு கேள்வி; உணர்ச்சியைப் புரிந்துகொண்டது போல பதிலளிக்கிறதா என்பது வேறு கேள்வி.
இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதும் AI-யைப் புரிந்துகொள்வதன் ஒரு பகுதிதான்.
AI என்றால் என்ன?
AI-யை பொதுவாக நாம் ரோபோவின் உருவத்தோடு இணைத்துப் பார்க்கிறோம். திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் ரோபோவாகவே AI-யைக் காட்டுவது வழக்கம்.
ரோபோக்களுடன் AI-யை இணைத்து பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்று வந்தாலும், AI என்பது ரோபோ மட்டும் அல்ல.
எளிமையாகச் சொன்னால்,
“நம்மைப் போல் சிந்திக்கக் கற்றுக் கொள்ளும் மெஷின்”
என்பது AI-யைப் புரிந்து கொள்வதற்கான ஒரு எளிய விளக்கம்.
AI – Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களைப் போலச் சிந்தித்தல், கற்றுக் கொள்ளுதல், முடிவெடுத்தல், கேள்விகளுக்குப் பதிலளித்தல் போன்ற அறிவுசார் பணிகளைச் செய்யக்கூடிய கணினி அமைப்புகளை உருவாக்கும் தொழில்நுட்பத் துறை.
மனிதர்களிடம் உள்ள நினைவாற்றல், கற்றல் திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன், புதிய யோசனைகளை உருவாக்கும் திறன் போன்றவற்றில் சிலவற்றை இயந்திரங்கள் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்படுகின்றன.
அதனால், மனிதர்களைப் போலச் சிந்திக்கவும், கற்றுக் கொள்ளவும், முடிவெடுக்கவும், கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் ஒரு இயந்திரத்தை உருவாக்க முயற்சிக்கும்போது உருவாகும் தொழில்நுட்பமே செயற்கை நுண்ணறிவு – AI.
முடிவுரை
நம்முடைய கைபேசியில் வரும் ஒரு Reels-ல் தொடங்கி, நம் எழுத்தைத் திருத்தும் AI-யில் வந்து, நம்முடைய நகைச்சுவையைப் புரிந்துகொண்டு பதிலளிக்கும் AI-நண்பன் வரை இந்தப் பயணம் நீள்கிறது.
அதனால் AI என்பது நாளை வரப்போகும் தொழில்நுட்பம் அல்ல.
அது ஏற்கனவே நம்முடன் இருக்கிறது.
கேள்வி இனி “AI நம்முடைய வாழ்க்கைக்குள் வருமா?” என்பதல்ல.
“அது நம்முடைய வாழ்க்கைக்குள் வந்துவிட்ட நிலையில், அதை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்?” என்பதுதான்.
AI நம்முடைய வேலைகளை எடுத்துக்கொள்ளுமா?
அது நம்முடைய சிந்தனையை மழுங்கடிக்குமா?
மனிதனைக் கடந்து செல்லுமா?
அல்லது மனிதனின் திறனைப் பல மடங்கு அதிகரிக்க உதவும் நண்பனாக மாறுமா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் பயணம்தான் இந்தத் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள்.
பயணம் தொடரும்… 🌱
- அ.தமிழ்ச்செல்வன்
- AI-யை நான் ஏன் "நண்பா" என்று அழைக்கிறேன்?
- ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பாலாடைக் கட்டி
- அழிந்த உயிரினங்கள் பேசினால்...!
- சீரற்ற சுவருடைய கட்டிடங்கள்
- ஜப்பானின் மாஜிக் புல்லட்
- மனித உடலில் இயந்திர உறுப்புகள்
- செயற்கை நுண்ணறிவு தேடும் அணுஉலை மின்சாரம்
- இயற்கையை அறிய உதவும் செயலிகள்
- ஆய்வக மீன் இறைச்சி
- அண்டார்டிகாவை ஆராயும் ஆளில்லா விமானங்கள்
- குளிரூட்டும் ஆடைகள்
- வானில் வலம் வரப் போகும் சூப்பர்சானிக் விமானம்
- மரணத்திற்குப் பிறகும் சூழல் பாதுகாப்பு
- சீன சிப் தொழிற்துறையின் வேகம்: அமெரிக்கா சமாளிக்குமா?
- காடுகளைக் காக்க லைடார் தொழில்நுட்பம்
- பீங்கான் தொழில்நுட்பம்
- ஆகாயத்தின் கண்களும் அறிவின் தேடலும்
- சமூக வலைத்தளங்களில் 2FA (Two - Factor Authentication) பாதுகாப்பா? வணிகமா?
- தேடல் இயந்திரத்தின் செயற்கை நுண்ணறிவு
- மெட்டாவெர்ஸ் - இணையத்தின் எதிர்கால வடிவம்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.