கால்களின் முடிவுறாத பயணத்தின்
சுமை
வாழ்வினை வரைகிறது
உழைப்பின் எழுத்துகளாய்
கொட்டிக்கிடக்கும் கற்களைக் கொண்டு
பிழைப்பை அடுக்குவது வலி
உயர உயர எழும்
உழைப்பின் பயன்நிழலில்
ஒதுங்குத லாகா நிலையிலும்
நலிவில்லை உழைப்பிற்கு
நிலவின் குளிரும்
பூக்களின் மென்மையும்
போலியானவை
சும்மாடு கோலும்
கிழிந்த முந்தானையின் முன்
தேய்ந்த எலும்பும்
சுண்டிய ரத்தமும்
தூசி நிறைந்த நுரையீரல்களும்
வாழ்வின் அந்திமத்தின் படிகள்
பாரங்களற்று இருக்கும்
இடம் நோக்கி ஏகும் தருணம்
வறுமையின் கோடுகளே
வழியாகி வழிகிறது
கால்களிலிருந்து
- யாழன் ஆதி