1921 செம்டம்பர் 16இல் முதல் வகுப்புவாரி ஆணை, நீதிக்கட்சியால் பிறப்பிக்கப்பட்டு, 2021 செப். 16 - நூற்றாண்டு நிறைவடைகிறது. அதன் சுருக்கமான வரலாறு:

1916ல் டாக்டர் சி. நடேசன், டி.எம். நாயர், தியாகராய செட்டி ஆகியோரால் உருவாக்கப் பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation, சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேசன்) கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் பிராமணரல்லா தோரின் பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ந்து பேசி வந்தது.

1916 நவம்பரில் வெளியிடப்பட்ட பார்ப்பனரல்லாதோர் கொள்கை அறிக்கை, இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டது. பெரும்பாலான வேலை வாய்ப்புகள் “பார்ப்பனர்”களுக்கே செல்வதாக இந்த அறிக்கை கூறியது. எல்லா சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் மாண்டெகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்தன. இதையடுத்து மாகாண சட்டமன்றங் களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட நீதிக் கட்சி, தனது அறிக்கையிலேயே, எல்லோருக்கு மான சம வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்டது.

இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக் கட்சி, 1920 டிசம்பர் 17ஆம் தேதி சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் பதவியேற்றது. அடுத்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சுப்பராயலு ரெட்டியார் உயிரிழந்து விட்டார். இதற்கடுத்ததாக, பனகல் அரசர் ராமராய நிங்கர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இதற்குப் பிறகு, நீதிக் கட்சியின் முக்கியமான திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் துவங்கின. இந்தத் தருணத்தில், மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவையில் பிராமணரல்லா தார் யார் என்பது குறித்து விவாதம் நடை பெற்றது. பெரும் விவாதத்திற்குப் பிறகு, “பார்ப்பனரல்லாதார் என்றால் முகமதியர், இந்திய கிறிஸ்தவர், பார்ப்பனரல்லாத இந்துக்கள், ஜைனர்கள், பார்சிகள், ஆங்கிலோ இந்தியர் ஆகிய மற்றுமுள்ளோர் என்று பொருள்” என சி. நடேசனார் விளக்கமளித்தார்.

இந்த விளக்கமே வகுப்புவாரி பிரதி நிதித்துவ அரசாணை வெளியாவதற்கு அடிப்படையாக அமைந்தது. பார்ப்பனரல்லாதார் என்றால், இந்துக்கள் அல்லாத மற்றவர்களும் அடங்குவர் என்பதையும் இந்தத் தீர்மானம் உறுதிப்படுத்தியது.

1921 ஆகஸ்ட் ஐந்தாம் தேதி சட்டப் பேரவை யில் பேசிய ஓ. தணிகாசலம் செட்டியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ஒரு அரசு அலுவலகத்தில் 100 ரூபாய் அளவுக்கு சம்பளம் வாங்கும் எல்லா அதிகாரிகள் மட்டத்திலும் 66 சதவீதம் அளவுக்கு பார்ப்பனரல்லாதார் இடம் பெறும்வரை, கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பார்ப்பன ரல்லாத வகுப்பினருக்கு பணிகளில் முன்னுரிமை தரவேண்டும். பார்ப்பனர்களை விட, அவர்கள் சற்று தகுதிக்குறைவாக இருந்தாலும் இதைச் செய்ய வேண்டும். 100 ரூபாய்க்கு கீழே ஊதியம் பெறுபவர்களில் 77 சதவீதம் பார்ப்பனரல்லாதவர்களாக இருக்கும் நிலை ஏற்பட வேண்டும். 7 ஆண்டுகளில் இதை எட்ட வேண்டும் என அந்தத் தீர்மானம் கூறியது.

இந்தத் தீர்மானத்தை நடேச முதலியார் வழிமொழிந்தார். “பிரதிநிதித்துவம் இல்லா விட்டால் வரி இல்லை” என்று முழங்கினார். அதே நாளில் மேலும் ஒரு தீர்மானத்தையும் தணிகாச்சலம் செட்டியார் கொண்டு வந்தார். அதன்படி, தலைமைச் செயலகத்தில் ஐ.சி.எஸ். பிரிவு அதிகாரிகளைத் தவிர, பிற பிரிவுகளுக்கு பார்ப்பனரல்லாதவர்களையே நியமிக்க வேண்டும் என அந்தத் தீர்மானம் கூறியது.

அவையிலிருந்த பி. சிவாராவ், எல்.ஏ. கோவிந்தராகவ ஐயர் போன்ற பார்ப்பன உறுப்பினர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். “உலகமே நம்மைப் பார்த்துச் சிரிக்கும்” என்று குறிப்பிட்டனர். ஆனால், ஆர்.கே. சண்முகம் செட்டியார் இதனை ஆதரித்தார். “இந்தத் தீர்மானத்தை நிறை வேற்றுவதன் மூலம் நாட்டிற்கே விடுதலை அளித்த மனிதர்களாக எதிர்கால சந்ததி நம்மைக் கருதும்” என்றார். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கம்யூனல் ஜி.ஓ. சொல்வதென்ன?

இதன் தொடர்ச்சியாகவே, Communal GO என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை பனகல் அரசர் தலைமையிலான அரசால் செப்டம்பர் 16, 1921இல் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன:

“பார்ப்பனரல்லாதவர்கள் அரசு அலுவலகங் களில் பெற்றுள்ள இடங்களை அதிகரிக்க, பல் வேறு ஜாதியினருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கும் இடங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக வருவாய்த் துறையில் பிறப்பிக்கப்பட்ட நிலை ஆணை 128 (2)ல் தெரிவிக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை அரசின் எல்லாத் துறைகளுக்கும், எல்லா மட்டங் களுக்கும் செயல்படுத்த வேண்டும். எல்லாத் துறைகளின் தலைவர்களும், பணி நியமனம் செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரிகளும் எதிர்காலத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது இந்த வழிமுறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்புகளை அளிக்கும்போது, 12 இடங்களாக அவற்றைத் தொகுத்து வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும். அதன்படி, 12 இடங்களில் 2 இடங்கள் பார்ப்பனர்களுக்கும் ஐந்து இடங்கள் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் இரண்டு இடங்கள் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு இடங்கள் கிறிஸ்தவர், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ - இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும். ஒரு இடம் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்குத் தரவேண்டும்.

சதவீதப்படி பார்த்தால், பிராமணர் அல்லாதவர்களுக்கு 44%, பிராமணர்களுக்கு 16%, முஸ்லிம்களுக்கு 16%, ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு 16%, பட்டியல் இனத்தவர்களுக்கு 8% என இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த ஆணை ஒழுங்காக செயல்படுத்தப் படுவதைக் கண்காணிக்க சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு, 1922 ஆகஸ்ட் 15ஆம் தேதி கல்வி நிலையங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அளிக்கும் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், 1928 டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட மூன்றாவது கம்யூனல் ஜி.ஓ. மூலம்தான், இந்த இட ஒதுக்கீடுகள் அமலுக்கு வந்தன.

முன்னாள் முதல்வர் அண்ணா, இந்த அரசாணை குறித்துக் குறிப்பிடும்போது, “தென்னாட்டைப் பொறுத்தவரை கம்யூனல் ஜி.ஓ. திராவிட சமுதாயத்தின், ஏன் - பார்ப்பனர் உள்பட மனித சமுதாயத்தின் சுதந்திர சாசனம் ஆகும். கம்யூனல் ஜி.ஓ. ஒரு மானுட சுதந்திர சாசனம்” என்று குறிப்பிட்டார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்:

“நூறு ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 16ஆம் நாளான இன்று வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சமுதாய சீர்திருத்த மருத்துவர் களான நடேசனார், டி.எம்.நாயர், கடலூர் ஏ.சுப்பராயலு, பனகல் அரசர், அமைச்சர் எஸ்.முத்தையா, பி.டி.இராஜன் ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன். இவர்கள் உள்ளிட்ட பெருமக்கள் அன்று தொடங்கி வைத்த சமூக நீதிப் புரட்சிதான் தமிழ்ச் சமுதாயத்தின் இலட்சக்கணக்கானவர்கள் இல்லங்களில் விளக்கேற்றக் காரணமாக அமைந்தது. இந்த உத்தரவை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற தரவரிசைப் பட்டியலைப் போட்டுக் கொடுத்தார் அன்றைய அமைச்சர் எஸ்.முத்தையா. அதனால் தான், 'இனிப் பிறக்கும் பிள்ளை களுக்கு முத்தையா என்று பெயர் சூட்டுங்கள்' என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

இந்த சமூகநீதி அரசாணையானது தமிழ்நாடு எல்லையைக் கடந்து இந்தியா முழுவதும் இன்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இத்தகைய அகில இந்தியப் புரட்சிக்குக் காரணமான அனைவரையும் இந்த நேரத்தில் வணங்குகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக அரசானது, இத்தகைய சமூகநீதிப் பயணத்தின் அடுத்தகட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்ய இருக்கிறது.

சமூகநீதி அளவுகோலானது சட்டப் படி இருக்கிறது. ஆனால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம்.

கல்வி, வேலை வாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகிய வற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும்; வழி காட்டும்; செயல்படுத்தும். சரியாக நடைமுறைப்படுத்த படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும். இதற்கான விதி முறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில் அரசு அதிகாரிகள், கல்வி யாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள்.

சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளில் சமூகநீதிக் கண்காணிப்புக்குழுவை அமைப்பதில் பெருமை அடைகிறேன்.

எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும் இந்த வையம்!” - என்று குறிப்பிட்டார்.

- விடுதலை இராசேந்திரன்

***

அரசாங்க அகராதியில், தகுதி, திறமை, தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும்

பரீட்சையில் பாஸ் செய்த பின்பு, தகுதி, திறமை, தரம் எதற்காகப் பார்க்கப்படுகிறது. அது எதற்காக வேண்டும்? அதன் அர்த்தம் என்ன? அதன் பலன் என்ன? மந்திரி சபையில் பெரிய பதவியில், அதிகாரத்தில் தரமுள்ளவர் களால், திறமையுள்ளவர்களால் ஏற்பட்ட நன்மை, பெருமை என்ன? தகுதி, திறமை, தரம்அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன? அதிகாரம், உத்தி யோகங்களிலும், வகுப்பு, உள் வகுப்பு, உட் பிரிவு, சாதி வகுப்புரிமை வேண்டும்.

கண்டிப்பாக அரசாங்க அகராதியில், தகுதி, திறமை, தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும்.

விடுதலை - 18.07.1972

Pin It