பெரியார் பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை கடந்த 5.2.2024 ஆம் நாளன்று அனைத்து பணியாளர்களுக்கும் விடுத்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் நடத்தை விதிகளின் 14 (1) (2) என்ற விதிகளைக் காட்டி, இதுவரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் முன்னனுமதி பெற்றோ, பெறாமலோ நூல்கள் வெளியிட்டிருந்தால் அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை, தலைப்பு, பதிப்பாளர் முகவரி, பெற்ற பணப் பலன்கள் என்றெல்லாம் பல விவரங்களை அந்த சுற்றறிக்கை கோருகிறது.

ஆனால் பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கும் விதிகள் தொலைக்காட்சி வானொலி விவாதங்களில் பங்கேற்பது குறித்தும்,  செய்தி ஏடுகளுக்கு, வார ஏடுகள் போன்ற பருவ வெளியீடுகளுக்கு எழுதுவது குறித்தும் உள்ள விதிகளைத்தான் அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அந்த விதிகளின்படி கூட இலக்கியம், கலை, அறிவியல், கல்வியியல் பண்பாட்டியல் போன்ற தலைப்புகளில் அந்த ஒளிபரப்பு அல்லது செய்தி ஏடுகளுக்கு எழுதுகிற கட்டுரைகள் இருக்குமாயின் அதற்கு முன் அனுமதி தேவையில்லை என்றும்  உட்பிரிவு (2) கூறுகிறது.

ஆனால், ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணைப்பேராசிரியரும் பெரியார் அண்ணா கலைஞர் ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறுப்பாகவும் விளங்கிக் கொண்டிருக்கிற முனைவர் இரா. சுப்பிரமணி அவர்கள் எழுதியிருந்த பெரியாரின் போர்க்களங்கள்,   மெக்காலே - பழமைவாத கல்வியின் பகைவன் என்ற நூல்கள் குறித்து விளக்கங்கள்  கேட்கப்பட்டு அதற்கான விளக்கங்களும் பெறப்பட்டு நிலுவையில் இருக்கிற இந்த சூழலில் மீண்டும் அவரை குறி வைத்து இதை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக நாம் கருதுகிறோம்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிப்புத் துறை என்று ஒன்று கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்திருந்தும் அதன் வழியாக இதுவரை  பெரியார் குறித்த 60 பக்க நூல் ஒன்று வெளியிட்டதைத் தவிர வேறு எதையும் செய்ததில்லை.

ஆனால் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெரியார் ஆய்வு மையத்தின் தலைவர் இதழியல் துறையின் பார்வையிலான பெரியார் குறித்த ஒரு நூலை எழுதுவதும், நவீன கல்விக்கு முன்னோடியாக கருதப்படுகிற மெக்காலே குறித்து அதாவது கல்வியியல் குறித்து எழுதியதும்  தவறானது என்பதைப் போல ஏற்கனவே விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சுட்டிக் காட்டப்படும் பல்கலைக்கழக விதிகள், வானொலி தொலைக்காட்சி விவாதங்கள்,  செய்தி வார ஏடுகளில்  எழுவது குறித்து உள்ள விதிகளைச் சுட்டிக்காட்டி துறை சார்ந்த நூல்கள் கல்வியியல் சார்ந்த, பண்பாட்டு புரட்சி சார்ந்த விதிவிலக்கு அளித்திருக்கும் துறைகளில் எழுதுவதற்கும் விளக்கம் கேட்பதும், அவர் மீதான நடவடிக்கை எடுக்கத் துடிப்பதும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரும் பதிவாளரும் கொண்டிருக்கிற மதவாத சிந்தனை போக்குக்கு எதிரானவை என்ற கருத்தில் இருப்பதால்தான் என்றுதான் யூகிக்க முடிகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பதிவாளரும் கொண்டிருக்கிற இந்துத்துவ மதவாத சிந்தனை போக்குக்கு எதிரான கருத்துகள் கொண்டவற்றை எழுதுவதை குற்றமாக்கத் துடிக்கும் கருத்துரிமைக்கு எதிரான பாசிச போக்குதான் வெளிப்படுகிறது.

மேலும் புத்தூடகங்கள் பல்வேறு பரிமாணங்களை எட்டி செல்லிடப்பேசி வழியாகவும்,செயலிகள் வழியாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் கற்றல்- கற்பித்தல் நிகழ்ந்து வரும் நிலையில் சமூக ஊடகங்களில் பங்கேற்க அனுமதி பெற வேண்டும் என்பது என்ன வகையான சிந்தனை வளர்ச்சி எனத் தெரியவில்லை. பல்கலைக்கழகங்கள் என்பவை சுதந்திரமான சிந்தனைகளையும், பன்முகத் திறன்களை மாணவர்களிடையேயும், பொது தளத்திலும் உருவாக்கும் அறிவின் மையமாகும். அங்கு எழுதுவதற்கும், பேசுவதற்கும் அனுமதி பெற வேண்டும் என விதிகள் இருப்பதாகக் கூறுவது கருத்துரிமை பேச்சுரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கையாகவே கருத வேண்டி உள்ளது.

எழுதுவதும், உரையாடுவதும் தான் ஆசிரியப் பணிக்கான அடிப்படை கடமைகளாகும். அதனைத் தடுக்க முனைவது ஆபத்தான போக்காகும்.

எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பு கடந்த 5.2.2024 அன்று வெளியிட்டிருக்கிற அந்த சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It