இந்திய ராணுவம், இலங்கை ராணுவத்துக்கு புத்துயிரூட்டி, தமிழின அழிப்பைத் தூண்டி விடுவதாக விடுதலைப்புலிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய அரசு வரலாற்றுத் தவறை செய்யக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல் முறையாக இந்தியாவின் போக்கை விமர்சனம் செய்து, விடுதலைபுலிகள் இந்த அறிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. அறிக்கை விவரம்:

ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பு செயலுக்குத் தலைமையேற்று நிற்கும் சிறீலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்று உயர் அரச கௌவரவத்தை வழங்கிய இந்திய அரசின் செயல் ஈழத் தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிங்கள அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறி தமிழர் தாயகத்தில் போரை விரிவாக்கியுள்ள இக்கால சூழலில், தமிழின அழிப்பிற்கு தலைமையேற்று வழிநடத்தும் சிங்களத்தின் இராணுவத் தளபதிக்கு இத்தகைய அரசு கௌரவத்தை வழங்கியுள்ள இந்திய அரசின் செயலை புலிகள் இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

சிறிலங்கா அரசின் இராணுவ வழித் தீர்வுக்கு ஒருபுறமும், கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்களுக்கு மறுபுறமுமாக, உலகளாவிய ரீதியில் சிங்கள அரசு கண்டனங்களுக்கும், எச்சரிக்கைகளுக்கும் அதிகளவில் உள்ளாகி வருகின்றது. ஆயினும் இக்கண்டனங்களையும், எச்சரிக்கைகளையும் புறம் தள்ளிவிட்டு அதிகளவிலான ஆட்கடத்தல்கள், படு கொலைகள், இனரீதியான கைதுகள் என்பனவற்றை சிங்களப் படைகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன.

இந்த உண்மையை மூடி மறைப்பதில் அக்கறை காட்டும் சிங்கள அரசு, தொடரும் போரிற்கான பழியைத் தமிழரின் சுதந்திர இயக்கமான புலிகள் இயக்கத்தின் மீது சுமத்தி, தனது இன அழிப்புப் போருக்கு உலகின் உதவியைக் கோரி நிற்கின்றது. சிங்கள அரசின் இந்த கபட நோக்கத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொண்டு தமிழின அழிப்பிற்குத் துணைப் போகக் கூடிய உதவிகளை நிறுத்தியுள்ளன.

இந்த உண்மை இந்திய அரசிற்கும் நன்கு தெரியும். ஆயினும் தமிழர் பிரச்னைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காண வேண்டும் எனக் கூறிக் கொண்டு, அதற்கு மாறாக இராணுவ ரீதியாக சிறீலங்கா அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் செயற்பாடுகள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும்.

இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறானது, ஈழத் தமிழர்களைத் தொடர்ந்தும் இன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு பாரிய இன அழிவு அபாயத்துக்குள் அவர்களைத் தள்ளிவிடும் என்பதை இந்திய அரசிற்கு சுட்டிக்காட்ட புலிகள் இயக்கம் விரும்புகின்றது. இந்திய அரசு புரியும் இந்த தமிழின விரோதச் செயலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு அதற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என ஈழத் தமிழ் மக்கள் சார்பில் புலிகள் இயக்கம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.

நாம் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகவுமில்லை. போரைத் தொடங்கவும் இல்லை. எமது மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடுத்துள்ள இன அழிப்புப் போருக்கு எதிராக ஒரு தற்காப்புப் போரையே நடாத்தி வருகின்றோம்.

நாம் இன்னமும் நோர்வேயின் தலைமையிலான அமைதி வழி முயற்சிகளிலிருந்து விலகவில்லை. நோர்வே அரசின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க புலிகள் இயக்கம் தயாராகவே இருக்கின்றது.

இந்த நிலையில் அரசியல் - இராணுவ - பொருளாதார ரீதியாக தொய்ந்து போயுள்ள சிறீலங்கா அரசிற்கு முண்டு கொடுக்கும் இந்திய அரசின் செயலானது ஈழத் தமிழ் மக்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. “புலிகளுடனான போரில் சிங்களப் படைகள் இராணுவ ரீதியில் தொய்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை” என்ற இந்தியப் படையதிகாரிகளின் கூற்று சிங்களத்தின் போர் இயந்திரத்திற்கு முண்டு கொடுக்க முயலும் இந்திய அரசின் செயற்பாட்டையே வெளிப்படுத்துகின்றது.

இந்திய அரசின் இத்தகைய செயல்பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப் படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழிப்பிற்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும், இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pin It