periyar 359தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறவும், தங்கள் உரிமையையும், சமத்துவத்தையும் பெற அவர்கள் போதிய கல்வியறிவு பெற்று உலக ஞானமறிந்து தங்கள் இழிவான நிலையைத் தாங்களே உணர வேண்டுமென்பதை நாம் பன்முறையும் கூறிவருகிறோம். அத்தகைய அவர்களது நிலையை அறிய அவர்கள் எல்லோரும் ஏனையோரைப் போலவே கல்வி கற்று அறிவு வளர்ச்சி பெற வேண்டுவது மிகமிக இன்றியமையாதாகும். அவ்விதமே அவர்கள் கல்வி கற்க முற்படினும் அவர்களுக்கு அதனால் ஏற்படும் கஷ்டங்களும், இன்னல்களும், எதிர்ப்புகளும் எண்ணிறந்தன. அத்தகைய பல இடையூறுகளில் பொருளின்மை தலைசிறந்ததெனலாம்.

தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்ற பேரவா பல பெற்றோர்க்கு இருந்த போதிலும் போதிய பணமின்மையால் அவர்களது புஸ்தக வகைக்கோ, அல்லது துணிமணிகளுக்கோ வேண்டியன கொடுத்துதவ முடியாமையால் பிள்ளைகளின் படிப்பில் கவலை செலுத்தாத பெற்றோர்கள் அனேகர் உண்டென்பதும் நமக்குத் தெரியும். அத்தகைய அவர்களது குறை நீக்கப்பட்டதிற்கொப்ப திருச்சி ஜில்லா லால்குடியில் உள்ள போர்டு ஸ்கூல் ஆதிதிராவிட மாணவர்களின் உபயோகத்திற்காக ரூபாய் 10,000 நன்கொடையளித்த ராவ்பகதூர் சபாரத்னம் செட்டியார் அவர்களது தயாள குணத்தைப் பற்றி சென்ற வாரம் ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டது நேயர்களறிந்ததே. பெருந்தணிகரான சபாரத்னமவர்கள் ஏழை ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவி செய்ய முன்போந்தது அவரது தயாள சிந்தையையும் தெள்ளிதில் விளக்குகின்றது. தொகையானது மாணவர்களது சாப்பாடு வசதிக்காக உபயோகிக்கப்படுமென்பது கேட்டு மகிழ்ந்தோம். மிகவும் தாராள சிந்தையுடன் பொருளீந்துதவிய திரு. சபாரத்னம் அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.03.1932)

Pin It