periyar 450உலகமெல்லாம் சமூக சீர்திருத்தமும், அபேதவாதமும், சமதர்மமும், சமசொத்துரிமையுமான துறைகளில் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது நமது நாட்டில் வருணாச்சிரம தர்ம மகாநாடுகள் நடந்து கொண்டி ருக்கிறது.

உலகமெல்லாம் சந்திர மண்டலத்துக்கு போய் வரவும், ஆகாயத்தில் பறக்கவும், மணிக்கு 100, 200, 300 மைல் வேகம் போகவும், பேசும் யந்திரங்களை உண்டாக்கவும், மழையை வருவிக்கவும், ஆணைப் பெண்ணாக்கவும் பெண்ணை ஆணாக்கவும், செத்தவனைப் பிழைக்க வைக்கவும், ஐயாயிரம் பத்தாயிரம் மையிலுக்கப்பால் நடப்பதையும் பேசுவதையும் காணவும் கேட்கவும் செய்யவும் மற்றும் இதுபோன்ற அற்புதங்களிலும், ஆராய்ச்சிகளிலும் புத்தி செலுத்திக் கொண்டிருக்கும்போது நமது நாட்டில் “இந்தக் குளத்தில் ‘பறையன்’ தண்ணீர் மொள்ளலாமா? இந்தக் கோவிலுக்குள் நாடார் போகலாமா? இந்தப் பள்ளிக்கூடத்தில் நாயக்கர் படிக்கலாமா?” என்கின்ற விவாதமும் “சூரியனுக்கு 8 குதிரையா 16 குதிரையா? தீபாவளி புரட்டாசி மாதத்திலா அற்பிசி மாதத்திலா? சாமிக்கு நெற்றியில் நாமம் வடகலையா தென்கலையா? விபூதியை குழைத்துப் பூசுவதா அப்படியே அடித்துக் கொள்வதா? சீதையை ராவணன் தலை மயிரைப் பிடித்து தூக்கிக் கொண்டு போனானா? தரையோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு போனானா? சுவாமிக்கு தாசி வேண்டுமா வேண்டாமா? பெண்களை 12 வயதில் படுக்கை வீடு கூட்டலாமா 16 - வயதில் கூட்டலாமா ? எந்த புராணம் நிஜமான புராணம் எந்த புராணம் பொய்யான புராணம்? எந்தப் பாட்டு பழைய பாட்டு, எந்தப் பாட்டு இடைச் செருகல்? சமணர்களை கழுவேற்றினதற்கு அகச்சான்று புறச்சான்று இருக்கின்றதா?” என்கின்ற ஆராய்ச்சியே மிகவும் முக்கியமான ஆராய்ச்சியாகக் கருதப்படுவதோடு இன்னமும் முடிவு பெற்றதாகவும் தெரியவில்லை.

( குடி அரசு - கட்டுரை - 06.01.1929)

Pin It