எரிமலை அதிக செயல்பாட்டுடன் இருப்பதையும் வெடிக்கப் போவதையும் முன்கூட்டியே கண்டறிய அங்கு வளரும் மரங்களின் இலைகளில் ஏற்படும் மாற்றங்கள்  உதவுகின்றன. நாசா மற்றும் ஸ்மித்சோனியன் ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த மாற்றங்களை விண்வெளியில் இருந்து கண்டறியும் ஆய்வுகளை நடத்துகின்றனர்.hawaii volcanoபூமியின் மேலோட்டின் வழியாக எரிமலைக் குழம்பு (Magma) மேலெழும்பி வரும்போது கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற வாயுக்கள் மேற்பரப்பை அடைகின்றன. இந்த வாயுவை எடுத்துக் கொள்ளும் மரங்கள் பசுமை நிறைந்ததாக, செழுமையுள்ளதாக மாறுகின்றன.

இந்த மாற்றங்கள் லேன்சாட் 8 (Landsat 8 ), Airborne Validation Unified Experiment: Land to Ocean (AVUELO) போன்ற நாசாவின் செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறியப்படுகின்றன. உலகில் 10% பேர் எரிமலைகளால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வாழ்கின்றனர் அல்லது எரிமலை வெடிக்கும் இடத்திற்கு ஒரு சில மைல் தொலைவில் பணி புரிகின்றனர்.

இதனால் இவர்கள் வெடித்துச் சிதறும் பாறைகள், தூசுகள், சூடான நச்சு வாயுக்களால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. எரிமலைக்கு சற்று தொலைவில் இருக்கும் மக்களும் உடைமைகளும் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து நிகழும் மண் சரிவுகள், சாம்பல் பந்துகள், சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எரிமலை வெடிப்பைத் தடுக்க உதவும் வழிமுறை எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு, வெடிப்பிற்கு முந்தைய அறிகுறிகள் முக்கியமானவை. அமெரிக்கா எரிமலை வெடிப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் உலக நாடுகளில் ஒன்று என்று நாசாவின் லேண்ட் சாட் திட்டத்தின் பங்காளியான அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு கூறுகிறது.

வெடிப்பிற்கு முன் எரிமலைக் குழம்பு நிலத்தின் அடியில் இருந்து மேலெழும்பி வரும்போது கார்பன் டை ஆக்சைடு , சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.

சல்பர் கூட்டுப் பொருட்கள் சுற்றுவட்டப் பாதையில் இருந்து எளிதாக கண்டுபிடிக்கப்படக் கூடியவை. சல்பர் டை ஆக்சைடின் உமிழ்வுக்கு முன் உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடை விண்வெளியில் இருந்து அறிவது சுலபமானதே என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கார்பன் டை ஆக்சைடு உமிழ்வால் தாவரங்கள் அதிக அளவு பசுமையடைவது வெடிப்பை அறிய உதவும் ஒரு கருவி.

இதனுடன் நில அதிர்வுகள், தரை உயரத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை எரிமலைக்குள் நடப்பதைப் பற்றி ஒரு தெளிவான கருத்து உருவாக உதவுகிறது.

“எரிமலைகள் ஏராளமான கார்பன் டை ஆக்சைடை உமிழ்கின்றன. ஆனால் வளி மண்டலத்தில் ஏற்கனவே கார்பன் டை ஆக்சைடு உள்ளது. இதனால் எரிமலையில் இருந்து உமிழப்படும் வாயுவின் அளவை கணக்கிடுவது கடினமாக உள்ளது. பெரிய வெடிப்புகளில் இருந்து உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடை நாசா கார்பன் கண்காணிப்பு அமைப்பு 2 (NASA's Orbiting Carbon Observatory 2) போன்ற உணரிகள் மூலம் விண்வெளியில் இருந்து முன்கூட்டிய எச்சரிக்கை சமிஞ்ஞைகள் மூலம் கண்டுபிடிப்பது கடினம். இந்நிலையில் நடுத்தர அளவில் உமிழ்வு இருந்தால் விண்வெளிப் படங்களில் இருந்து அதை அறிய முடிவதில்லை” என்று கனடா மாண்ட்ரீல் மகில் (McGill) பல்கலைக்கழக எரிமலை விஞ்ஞானி ராபர்ட் பாஃப்க் (Robert Bogue) கூறுகிறார். இதனால் விஞ்ஞானிகள் எரிமலைகளில் மீது ஏறிச்சென்று கார்பன் டை ஆக்சைடை நேரடியாக கணக்கிட வேண்டியுள்ளது.

உலகில் உள்ள சுமார் 1,350 எரிமலைகளில் பெரும்பாலானவை தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ளன. அல்லது சவாலான மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. அதனால் ஆய்வுகள் நடத்த தொழிலாளர்கள் அதிகமாகத் தேவை. செலவு அதிகம். சில சமயங்களில் ஆபத்தானது. வாயுக்களின் உமிழ்வில் காணப்படும் அதிகரிப்பு ஒரு எரிமலை வெடிக்கப் போகிறது என்பதைத் தெரிவிக்கிறது. தாவரவியலாளர்கள், காலநிலை ஆய்வாளர்களுடன் பாஃப்க் போன்ற விஞ்ஞானிகள் இணைந்து மரங்களில் நிகழும் மாற்றங்கள் மூலம் வெடிப்புகளை அறியும் வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். கார்பன் டை ஆக்சைடை நேரடியாக மதிப்பிடுவதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடிப்பதே இந்த ஆய்வுகளின் நோக்கம்.

“பகுப்பாய்வுகளை மேற்கொள்ள பல செயற்கைக்கோள்கள் உள்ளன” என்று கூறும் ஹூஸ்ட்டன் பல்கலைக்கழக எரிமலை விஞ்ஞானி நிகோல் கின் (Nicole Guinn) லேன்சாட் 8, நாசா டெரர் (Terra) செயற்கைக்கோள், ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) செண்டினல் 2 (Sentinel-2) மற்றும் பிற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் படங்களை ஒப்பீடு செய்து சிசிலி எட்னா (Etna) எரிமலையை சுற்றிலும் இருக்கும் மரங்களை ஆராய்ந்தார்.

இவரே மர இலைகளின் நிறங்களுக்கும் எரிமலைக் குழம்பினால் உமிழப்பட்ட கார்பன் டை ஆக்சைடிற்கும் இடையில் இருக்கும் தொடர்பை முதலில் கண்டுபிடித்துக் கூறினார். கார்பன் டை ஆக்சைடு உமிழ்வின் அளவை துல்லியமாக மதிப்பிட சாப்மேன் (Chapman) பல்கலைக்கழக எரிமலை விஞ்ஞானி ஜோஷ் பிஷர் (Josh Fisher) போன்ற ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

பனாமா மற்றும் கோஸ்ட்டரீகாவில் எரிமலைகளுக்கு அருகில் இருக்கும் மரங்களின் இலைகளில் ஏற்படும் மாற்றங்களை அறிய நாசா மற்றும் ஸ்மித்சோனியன் ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் ஓர் ஆய்வு விமானத்தில் நிறமாலைமானியைப் பொருத்தி ஆராய்ந்து வருகின்றனர். கோஸ்ட்டரிக்கா ரிங்கன் டெல வியஜ (Rincon de la Vieja) எரிமலையைச் சுற்றி இருக்கும் மர இலை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. கார்பன் டை ஆக்சைடின் அளவும் மதிப்பிடப்படுகிறது.

“இந்த ஆய்வுகள் சூழலியல் மற்றும் எரிமலையியல் இணைந்து மேற்கொள்ளப்படுபவை. மரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்ளும் அளவு குறித்தும் ஆராயப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் மரங்களின் இலைகளை செயற்கைக் கோள்கள் முழுமையாகப் படம் பிடிக்க முடிவதில்லை. வெவ்வேறு அளவு கார்பன் டை ஆக்சைடு உமிழ்விற்கு மரஙகள் வெவ்வேறாக பதில்வினை புரிகின்றன. மாறுபடும் வானிலை, காட்டுத் தீ சம்பவங்கள், தாவர நோய்கள் போன்றவற்றாலும் மரங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் மர இலைகளை மட்டும் முன்னறிவிப்புக்கு பயன்படுத்துவதில் வரையறைகள் உள்ளன” என்று பிஷர் கூறுகிறார்.

ஷ்வாண்ட்னர் பிலிப்பைன்ஸ் மெயொன் (Mayon) எரிமலைப் பகுதியில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு உமிழ்வுகளின் கண்காணிப்பை மேம்படுத்த உணரிகளைப் பயன்படுத்தினார்.

டிசம்பர் 2017ல் விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட புதிய முறையை பயன்படுத்தி வெடிப்பிற்கு முன் சுமார் 56,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினர். இதனால் ஜனவரி 23, 2018ல் வெடிப்பு தொடங்கியபோது பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மரங்களை செயற்கைக்கோள் படங்களின் மூலம் கண்காணிப்பதால் வருங்கால வெடிப்புகளை முன்கூட்டியே அறியலாம்.

எரிமலை சம்பவங்களை தடுப்பதற்கு இந்த தொழில்நுட்பம் ஒரு நிரந்தரத் தீர்வு ஆகாது என்றாலும் இப்புதிய முறை இந்தத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேற்கோள்: https://phys.org/news/2025-05-nasa-satellite-images-early-volcano.html

சிதம்பரம் இரவிச்சந்திரன்