விஞ்ஞானிகள் பழ ஈக்களில் ஆண் உயிரினங்கள் இல்லாமலேயே, கன்னி இனப்பெருக்க முறையில் (Parthenogenesis) புதிய உயிரினங்களை உருவாக்கிக் காட்டியுள்ளனர். மரபணு முறையில் கையாளப்பட்ட பெண் ஈக்கள், ஆண் துணையின்றித் தங்கள் வாரிசுகளை உருவாக்கியுள்ளன. ஆண் துணையில்லாமல் குழந்தை பிறப்புப் பற்றிய இந்த ஆய்வு பைபிள் கதை போலத் தோன்றினாலும், ஆண் உயிரினங்கள் இல்லாத சூழ்நிலையில், கன்னிப் பெண் பழ ஈக்கள் தூண்டப்பட்டுப் புதிய வாரிசுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விஞ்ஞானிகள், ஒரு குறிப்பிட்ட பழ ஈ இனத்தில் ஆண் ஈக்களின் இனப்பெருக்கச் செல்களின் (Sperm cells) துணையில்லாமல் பெண் ஈக்கள் மட்டுமே முட்டையைக் கருவுறச் செய்து குஞ்சுகளை உருவாக்கும் மரபணுவைக் கண்டுபிடித்தனர். வழக்கமாக ஆண்-பெண் பாலினப் பெருக்க முறையில் இனப்பெருக்கம் செய்யும் மற்றொரு ஈ இனத்தில், இந்த மரபணுவைச் செலுத்திப் புதிய தலைமுறையைக் கன்னி முறையில் உருவாக்கினர்.
பின்னர், அந்த மரபணுவை மீண்டும் மாற்றியமைத்து, முன்பு போலவே பாலினப் பெருக்க முறையிலேயே அந்த உயிரினத்தில் இனப்பெருக்கம் நடைபெறவும் செய்துள்ளனர்.
"கன்னி ஈ உருவாக்கிய கரு வளர்ந்து, உரிய பருவம் அடைந்து, மீண்டும் வெற்றிகரமாக இனப்பெருக்கத்தைத் தொடர்ந்தது பரவசமூட்டும் ஒரு கண்டுபிடிப்பு" என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளரும், இந்த ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆசிரியருமான டாக்டர் அலெக்சிஸ் ஸ்பெர்லிங் (Dr. Alexis Sperling) கூறுகிறார்.
'கரண்ட் பயாலஜி' (Current Biology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையில், கடந்த ஆறு ஆண்டுகளாக 2,20,00,000 (இரண்டு கோடியே இருபது லட்சம்) ஈக்களில் நடத்தப்பட்ட ஆய்வின் விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. 'டிரோசோபிலா மெர்கடோரம்' (Drosophila mercatorum) என்ற ஈ இனத்தின் கன்னி முறை இனப்பெருக்கத் திறன் (Parthenogenesis) பற்றி முதலில் ஆராயப்பட்டது.
இதன் மரபணு வரிசைப்படுத்தப்பட்டு, அதில் கன்னி இனப்பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கும் மரபணு அடையாளம் காணப்பட்டது. இதற்கு இணையான மரபணுவை, 'டிரோசோபிலா மெலனோகாஸ்டர்' (Drosophila melanogaster) என்ற மற்றொரு பழ ஈ இனத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்து அதனைச் செயல்பட வைத்தனர்.
கன்னி முறை இனப்பெருக்கத்திற்குப் பதிலாக, இவற்றில் பாலினப் பெருக்கம் நடக்கும்போது, மரபணு முறையில் மாற்றப்பட்ட பெண் ஈக்கள் ஆண் ஈக்களுடன் இணை சேர 40 நாட்கள் வரை காத்திருக்கின்றன. கன்னி முறை மூலம் பிறந்து, மரபணு முறையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய தலைமுறை பெண் ஈக்கள், பிற்காலத்தில் ஆண்களுடன் இணை சேர்ந்தோ அல்லது மீண்டும் கன்னி முறையிலோ புதிய வாரிசுகளை உருவாக்கின.
துணையில்லாமல் தவிக்கும் பெண் உயிரினங்கள்
இணை சேரப் போதுமான ஆண் உயிரினங்கள் இல்லாமல் தவிக்கும் பெண் உயிரினங்கள், தங்கள் இனத்தை நிலைநிறுத்திக் கொள்ள இந்த முறை பெரிதும் பயன்படும். ஆனால், இம்முறையில் பிறக்கும் உயிரினங்களுக்குச் சூழல் அழுத்தங்களைச் சமாளித்து வாழும் திறன் குறைவாகவே இருக்கும். பூச்சிக் கட்டுப்பாட்டிற்காகத் தொடர்ந்து இதே முறையில் அவை இனப்பெருக்கம் செய்யப்பட்டால், நாளடைவில் அவற்றின் இயற்கையான பாலினப் பெருக்க முறை மறைந்து, அந்த இனமே அழிந்துபோகும் ஆபத்தும் உள்ளது.
மேலும், இம்முறையில் பெண் உயிரினங்கள் பெண் உயிரினங்களையே உருவாக்கும் என்பதால், வேளாண்மையில் இது மிகப்பெரிய பிரச்னையாக மாறும். இதனால் பெண் பூச்சிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகப் பெருகும். பழ ஈக்களில் கன்னி முறை பிறப்பை ஏற்படுத்தப் புதிய வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்றாலும், இதே முறையைப் பாலூட்டிகளில் (Mammals) பயன்படுத்த முடியாது.
கன்னி முறைப் பிறப்பு பல்லி, தேனீக்கள் போன்ற சில வகை உயிரினங்களில் இயற்கையாகக் காணப்படுகிறது என்றாலும், பாலூட்டிகளின் இனப்பெருக்கத்திற்குத் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவழிக் கூட்டு மரபணுக்களும் தேவை. ஆனால், கன்னி முறை இனப்பெருக்கம் நடக்கும் எளிய உயிரினங்களில் தந்தை வழி மரபணுக்கள் இல்லாமலேயே இனப்பெருக்கம் சாத்தியமாகிறது.
பாலூட்டிகள் முற்றிலும் வேறுபட்ட உடலியல் செயல்பாட்டைக் கொண்டவை. பூச்சிகள் போன்ற எளிய உயிரினங்கள், ஆய்வுகளுக்காக நீண்ட காலமாக விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இவற்றின் மரபணு வரிசை விஞ்ஞானிகளால் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவே இந்த ஆய்வின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
"வாழ்க்கையின் அழகைப் புரிந்துகொள்ளவும், பல்வேறு உயிரினங்களில் காணப்படும் வெவ்வேறு இனப்பெருக்க முறைகளைப் பற்றி அறியவும் இந்த ஆய்வு உதவுகிறது. ஆனால், இம்முறை மனிதர்களில் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தப்பட முடியாதது" என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானி டாக்டர் ஹன்னா மாட் (Dr. Hannah Maude) கூறுகிறார்.
நம் உயிர்ப் பன்முகத்தன்மையே நம்மைப் பாதுகாக்கிறது. ஒவ்வொரு மனிதரிடமும் காணப்படும் இரண்டு டி.என்.ஏ (DNA) நகல்கள், தீங்கு விளைவிக்கும் டி.என்.ஏ மாறுபாடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
தாய் மற்றும் தந்தை வழி டி.என்.ஏ-க்களால் திறம்படச் செயல்படும் வகையில் அச்சிடப்பட்டு, பொதிந்து வைக்கப்பட்டுள்ள மரபணுப் பகுதிகளே நமது இனப்பெருக்கத்திற்கு அத்தியாவசியமானவை என்று டாக்டர் ஹன்னா விளக்குகிறார். விலங்குகளின் உலகில் நடைபெறும் இனப்பெருக்க நுட்பங்கள் குறித்து மேலும் பல புதிய தகவல்களை அறிய இந்த ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்