காட்டு மரங்கள் வெட்டப்படுவதால் வண்ணத்துப்பூச்சிகள் தங்களின் நிறங்களை இழக்கின்றன. பரவலாக, விரிவான வேறுபட்ட வாழிடங்களில் வாழ்வதால், உயிர்ப் பன்மயத் தன்மையின் (biodiversity) நிலையை அறிய வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய ஆய்வு உதவுகிறது. செழுமையான சூழலில் பரிணாம ரீதியாகத் தோன்றிய மில்லியன் கணக்கான நிறங்கள், அவை காடுகளில் வாழ்வதற்கு உதவுகின்றன. இப்போது அவை செழுமையற்ற நிலப்பரப்புகளில் வாழ்வதற்கு ஏற்ப, தங்கள் நிறங்களைச் சத்தமில்லாமல் மாற்றிக் கொள்கின்றன.
நிறங்கள் அற்பமானவை இல்லை
இதனால் உலகம் நிறமற்றதாகிறது. வண்ணத்துப்பூச்சிகளின் பளிச்சிடும், பிரகாசமான இறக்கைகள் ஒரு காலத்தில் அவை ஆரோக்கியமாக வாழ்வதை எடுத்துக்காட்டின. நிறங்கள் இணையைக்கவரவும், எதிரிகளிடம் இருந்து தப்பவும் அவற்றிற்கு உதவின. ஆனால், மனிதர்கள் வளமான மழைக்காடுகளை ஒற்றைப்பயிர் வளர்ப்பு முறைக்கு (monoculture) மாற்றியதால், மற்ற உயிரினங்களின் நிறம் வெளுத்துப் போகிறது.
“சிறகுகளில் உள்ள அவற்றின் வண்ணங்கள் அற்பமானவை அல்ல; அவை பல மில்லியன் ஆண்டு காலமாக வடிவமைக்கப்பட்டவை” என்று வாழிட இழப்பால் இயற்கை உலகம் நிறமிழப்பது பற்றிப் பிரேசிலில் நடக்கும் ஆய்வுத் திட்டத்தின் அங்கமும், ஆய்வாளரும் புகைப்படக் கலைஞருமான ராபர்ட்டோ கார்சியா-ரோவா (Roberto García-Roa) கூறுகிறார். இயற்கைக் காடுகளை விட ஒற்றைப்பயிர்கள் வளர்க்கப்படும் தோட்டங்களில் வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகள் மங்கலாக உள்ளன.
வளமையான ஒரு மழைக்காடு, தகவல் தொடர்பு கொள்ள, இரை பிடிக்க, இனப்பெருக்கம் செய்யக் கண்கவரும் சிவப்பு, ஆழ்ந்த பசுமை அல்லது வெளிறிய பழுப்பு நிறங்களுடன் உள்ள வண்ணத்துப்பூச்சிகளுக்கு உயிர்ப் பன்மயத் தன்மையுடைய வாழிடத்தை அளிக்கிறது. ஆனால் மனிதர்கள் காடுகளை அழித்து யூகலிப்டஸ் போன்ற பயிர்களை வளர்ப்பதால் உயிரினங்களின் தேவைகள் மாற்றமடைகின்றன. ஒற்றைப்பயிர் வளர்ப்புத் தோட்டத்தின் சூழல் பின்புலம் செயலற்றதாக மாறுகிறது.
“ஒரு மழைக்காட்டிற்குள் செல்லும்போது நீங்கள் உயிரோட்டத்துடன் இருப்பதை உணர்வீர்கள். ஒவ்வொன்றும் வனமயமாக இருக்கும்; எதைப் பார்க்கப்போகிறோம் என்பது தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு யூகலிப்டஸ் காட்டிற்குச் சென்றால் அது விரக்தியளிப்பதாக இருக்கும். இயற்கையான ஒரு சூழல் மண்டலத்தில் நிகழ்வது எதுவும் அங்கு நடைபெறாது. அங்கே விலங்குகள் கிடையாது; ஒலிகள் இல்லாமல் அது மௌனமாக இருக்கும். வளர்ச்சியடைந்த ஒரு காடு ஈரப்பதத்துடன் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் ஒரு தோட்டம் வெப்பமாக, வறட்சியுடன், ஒளி வெள்ளத்துடன் காணப்படும்” என்று ராபர்ட்டோ கூறுகிறார். நிறமிழத்தல் பற்றிய விரிவான ஆய்வின் ஆரம்பகட்ட முடிவுகள் இவை. இந்த ஆய்வு, இயற்கை இழப்பு இயற்கை உலகின் நிறங்களை எவ்வாறு மாற்றமடையச் செய்கிறது என்பதை ஆராய்கிறது. வண்ணத்துப்பூச்சிகளே பூமியில் அதிக வண்ணங்களுடன் வாழும் உயிரினங்கள் என்பதால், சூழலைப் பற்றி அறிய அவற்றை ஆராய்வது மிகச் சிறந்தது.
நிறம் என்பது அழகு மட்டுமல்ல
இவை வாழிடப் பரப்புகளில் பல வண்ணங்களைக் காட்டுகின்றன; சூழல் மாற்றங்களுக்கு விரைவாக எதிர்வினை புரிகின்றன. அதனால் இவற்றைக் கண்காணிப்பது சுலபமானது. நிறம் என்பது வெறும் அழகுணர்ச்சி தருவது மட்டுமல்ல; விரிவான சூழல் மண்டலத்தில் முக்கியப் பரிணாம செயல்பாடுகளையும் அவை பெற்றுள்ளன. ஒருகாலத்தில் சூழல் மண்டலங்களுக்கு ஆதரவாக இருந்த வண்ணங்கள், மனிதர்கள் ஏற்படுத்திய மாசுகளால் இப்போது நிசப்தமாகிவிட்டன. பவளப்பாறைகள் நிறமிழக்கின்றன; கடல்கள் பச்சையாகின்றன. மக்கள் அடர்த்தியாக வாழும், மாசுபட்ட இடங்களில் வானவில் கண்ணுக்குப் புலப்படாமல் போகிறது.
ஆய்வுக்குழுவினர் வண்ணத்துப்பூச்சிகளை வலைகளில் பிடித்து, கவனமாக ஆய்வகத்திற்குச் சுவாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பூச்சியியல் உறைகளில் (entomological envelopes) பாதுகாப்பாக எடுத்துச் செல்கின்றனர். “யூகலிப்டஸ் தோட்டங்களில் வண்ணத்துப்பூச்சிகள் பழுப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இயற்கையின் தட்டு, இயற்கைத் தேர்வின் (natural selection) அழுத்தங்களால் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, இருபதாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சியால் பாதிக்கப்பட்ட 'பிஸ்டன் பெட்டுலேரியா' (Biston betularia) என்ற அறிவியல் பெயருடைய நடுத்தர அளவுள்ள மிளகு அந்துப்பூச்சி (peppered moth) ஆகும். இதன் இறக்கைகளில் மிளகு தூவியது போன்ற கருப்புப் புள்ளிகள் காணப்படுகின்றன. இந்த உயிரினம் மரப்பட்டைகளில் உள்ள லைகன்களுடன் (lichen) இணைந்து மறைந்து வாழ்கிறது. விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமியின் ஒளி மங்கலாகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மனிதக் குறுக்கீடுகள் வருங்காலத்தில் தொடர்ந்தால் பேரழிவு ஏற்படும்; இது கவலைக்குரியது” என்று ரியோ கிராண்ட் டு சல் மத்திய பல்கலைக்கழக (Federal University of Rio Grande do Sul) ஆய்வாளர் ரிகார்டோ ஸ்பானியோல் (Ricardo Spaniol) கூறுகிறார்.
இதுவரை யூகலிப்டஸ் தோட்டங்களில் 21 வண்ணத்துப்பூச்சி இனங்களும், மற்ற இடங்களில் 31 வண்ணத்துப்பூச்சி இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரியோ டி ஜெனிரோவிற்கு வடக்கில் உள்ள பிரேசில் எஸ்பிரிட்டோ சான்டோ (Espírito Santo) மாநிலத்தில் உள்ள காடுகள் மற்றும் தோட்டங்களில் இந்த ஆய்வு நடந்தது. “யூகலிப்டஸ் தோட்டங்களில் வாழும் வண்ணத்துப்பூச்சி சமூகங்களில் பெரும்பாலானவை பழுப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இந்தத் தோட்டங்களில் ஒருவித வெறுமை நிலவுகிறது” என்று கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானியும், ஆய்வின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவருமான மேடர் இக்லேசியஸ்-கராஸ்கோ (Maider Iglesias-Carrasco) கூறுகிறார்.
காணாமல் போகும் வண்ணத்துப்பூச்சிகள்
விஞ்ஞானிகள் அமேசான் மழைக்காடுகளில் வண்ணத்துப்பூச்சிகள் நிறம் மாறுவதை 2019இல் முதன்முதலாகக் கண்டுபிடித்தனர். ஸ்பானியோல் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர், வாழும் சூழலுக்கேற்ப வண்ணத்துப்பூச்சிகள் மாறுவதையும், அவற்றின் நிறங்கள் உடனடியாக மாறியதையும் கண்டறிந்தனர்.
“உள்ளூர் தாவரங்களின் இழப்பு, இரைபிடி உயிரினங்களின் அதிகரிப்பு போன்றவற்றால் வன அழிவிற்குப் பிறகு அதிக நிறமுள்ள வண்ணத்துப்பூச்சிகள் காடுகளில் இருந்து முதலில் காணாமல் போயின. இதனால் நிறமிழத்தல் தூண்டப்படுகிறது” என்று ஸ்பானியோல் கூறுகிறார். சூரிய ஒளி குறைவாக உள்ள இடங்களில் இறக்கைகளில் புலப்படும் நிறங்கள், கட்புல நிறமாலை வடிகட்டி (visible-spectrum filter) மற்றும் புற ஊதா-நிறமாலை வடிகட்டி (ultraviolet-spectrum filter) கருவிகளைக் கொண்டு புரிந்துகொள்ளப்படுகின்றன.
உயிர்ப் பன்மயத் தன்மையில் ஏற்படும் வாழிட இழப்பின் பாதிப்பை இந்த ஆய்வு கூறுகிறது. காடுகள் தங்களின் நிறங்களை இழப்பது அச்சம் தருவது. சூழல் மாற்றங்களுக்கு உயிரினங்கள் எதிர்வினை புரிகின்றன. நிறங்களின் பன்மயத்தன்மை குறையும்போது சூழல் செயல்முறைகளின் சிதைவு உணரப்படுகிறது. வண்ணத்துப்பூச்சிகள் விரிவான உயிர்ப் பன்மயத் தன்மையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஏற்படும் மாற்றம் சிக்கலான சூழல் இழப்பைப் பிரதிபலிக்கிறது. இது மற்ற உயிரினங்களையும் பெரிதும் பாதிக்கிறது.
பிரேசிலில் உள்ள சாண்டா லூசியா உயிரியல் சரணாலயம் (Santa Lúcia biological reserve) போன்ற பலதரப்பட்ட நுண் வாழிடங்களால் சூழப்பட்ட இடங்கள், வண்ணத்துப்பூச்சிகள் பல்வேறு சந்ததிகளை உருவாக்க உதவுகின்றன. அமேசான் மழைக்காடுகள் முதல் கலிபோர்னியா, ஸ்பெயின் வரை உள்ள பகுதிகளில் ஒற்றைப்பயிர் வளர்ப்பு முறை அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக மரக்கூழ், மரம் மற்றும் கழிப்பறை காகிதம் (toilet paper) போன்றவற்றை உற்பத்தி செய்ய உதவும் யூகலிப்டஸ் மரங்கள், 22 மில்லியன் ஹெக்டேர் (54 மில்லியன் ஏக்கர்) பரப்பளவில் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டுள்ளன. இவ்வகைத் தோட்டங்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரி பாதிப்பை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. “காபி மற்றும் வாழைத் தோட்டங்கள் எப்பொழுதும் பசுமையாகக் காட்சி தருபவை. இதனால் மக்கள் பசுமையை இயற்கையுடன் தொடர்புபடுத்திக் காண்கின்றனர். ஆனால் அவை இயற்கையானவை அல்ல” என்று ராபர்ட்டோ கூறுகிறார்.
மீட்பிற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன
“உள்ளூர் வாழிடங்களைப் பாதுகாக்க, மேலும் காடுகள் அழிவதைத் தடுக்க எதுவும் செய்யப்படவில்லையென்றால், ஒரு சிலவற்றைத் தவிர சூழலின் சிறப்புமிக்க உயிரினங்களான பல வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் காணாமல் போய்விடும். நிறங்கள் இல்லாமல் போவது இயற்கையின் அழகிற்கு மட்டும் ஏற்படும் இழப்பில்லை. மாறாக, சூழலில் வண்ணங்களைச் சமிஞ்ஞைகளாகப் (signals) பயன்படுத்தித் தகவல் தொடர்பு கொள்ளும் வண்ணத்துப்பூச்சிகள் போன்ற உயிரினங்களின் இழப்பையும் இது குறிக்கிறது. இந்தப்பாதிப்பு தவிர்க்க முடியாதது” என்று ஸ்பானியோல் கூறுகிறார்.
என்றாலும், கடந்த முப்பது ஆண்டுகளாக மேய்ச்சலுக்காக அழிக்கப்பட்ட அமேசான் பகுதிகளை மீட்கும் முயற்சிகளை ஆய்வுக்குழுவினர் மேற்கொண்டபோது, அங்குப் பல நிறங்களுடைய வண்ணத்துப்பூச்சிகள் மீண்டும் வர ஆரம்பித்தன. மீட்பிற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சாண்டா லூசியா உயிரியல் சரணாலயத்தில் உதிர்ந்த ஒரு இலையின் தோற்றம், ஒரு வண்ணத்துப்பூச்சியின் உடைந்துபோன இறகை நினைவுபடுத்துவதாக இருந்தது. ஒருவேளை காணாமல் போய்க்கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு அமேசான் மழைக்காடு அமைதியாக அஞ்சலி செலுத்துகிறதோ!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்