உணவை வடிகட்டி உண்ணும் திமிங்கலங்கள் தினமும் மில்லியன் கணக்கான நுண் பிளாஸ்டிக் துகள்களை உண்பதாகப் புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இக்கண்டுபிடிப்பு பூமியில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் உயிரினங்களாக அவற்றை மாற்றியுள்ளது. நீலத்திமிங்கலங்கள் நாளொன்றிற்கு 10 மில்லியன் துண்டுகளை உண்கின்றன. இதன்படி கணக்கிட்டால் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இவை 1 பில்லியன் துண்டுகளை உணவுடன் விழுங்குகின்றன.
இவ்வாறு இவை உண்ணும் பிளாஸ்டிக் துண்டுகளின் எடை 230 கிலோகிராம் முதல் 4 டன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அதிக மாசு உள்ள மற்றும் எதிர்காலத்தில் அதிக கழிவுகள் உண்டாகக்கூடிய இடங்களில் இவை ஒரு நாளைக்கு 150 கிலோ வரை பிளாஸ்டிக்கை உண்ணும் என்று கணிக்கப்படுகிறது.
கலிபோர்னியா கடற்கரைப் பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றாலும், உலகின் மற்ற பகுதிகள் இதைவிட மோசமாக மாசுபட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நீல, ஃபின் (Fin) மற்றும் கூன்முதுகு (Humpback whale) ஆகிய பாலீன் (Baleen) வகை திமிங்கலங்கள் வடிகட்டி மூலமே உணவு உண்பவை. இறால் போன்ற சிறிய வகை ஒட்டுமீன்கள் (krill) மற்றும் மீன்களின் மூலமே இவை நீரில் கலந்துள்ளதைக் காட்டிலும் பெருமளவிலான நுண் பிளாஸ்டிக் கழிவுகளை உண்கின்றன.
கிரில் எனப்படும் ஒட்டுமீன்களின் அளவிலேயே நுண் பிளாஸ்டிக் துகள்களும் இருக்கின்றன. இந்த வகை உயிரினங்களின் பிளாஸ்டிக் கழிவு நுகர்வு பற்றி நடத்தப்பட்ட முதல் ஆய்வு இதுவே. இந்த உயிரினங்கள் வடிகட்டியில் தங்கும் நுண் துகள்களை உணவு என்று விழுங்குகின்றன. இத்துகள்கள் மற்றும் நச்சு ரசாயனங்கள் இவற்றின் உடலில் கொழுப்பு இருக்கும் ப்ளப்பர் (blubber) பகுதியில் சேருகின்றன என்று முந்தைய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நிம்மதியில்லாமல் வாழும் கடல் அரசர்கள்
இத்தகைய பிளாஸ்டிக் நுகர்வினால் இவற்றிற்கு ஏற்படும் பாதிப்பு பற்றி இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. கடலில் வாழும் பாலூட்டிகளில் மிகப்பெரிய விலங்குகளான இவை வேட்டை, ஒலி மாசு, கப்பல்கள் இடித்து உயிரிழப்பது போன்ற மனிதக் குறுக்கீடுகளிலிருந்து மீண்டு கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இவை கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கையில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பது உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கலிபோர்னியாப் பல்கலைக்கழக ஃபுல்லர்டன் (Fullerton) ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் தலைமை ஆசிரியர் டாக்டர் ஷைரல் கஹேன்-ரப்போர் (Dr. Shirel Kahane-Rapport) கூறுகிறார்.
கலிபோர்னியா கடற்பகுதியைக் காட்டிலும் வட கடல், மத்திய தரைக்கடல் மற்றும் தென்கிழக்காசிய கடல்கள் அதிகமாக மாசடைந்துள்ளன. இப்பகுதிகளில் வாழும் திமிங்கலங்கள் அமெரிக்காவின் மேற்குக் கரை கடற்பகுதியில் இருப்பதைக் காட்டிலும் அதிகம் பாதிக்கப்படும் என்று ஸ்டான்ஃபோர்டு (Stanford) பல்கலைக்கழக ஆய்வாளரும், ஆய்வுக்குழு உறுப்பினருமான டாக்டர் மேத்யூ சேவோகா (Dr. Matthew Savoca) கூறுகிறார்.
திமிங்கலங்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் இது ஒரு கெட்ட செய்தியே. மனிதகுலமும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உண்ணும் காட் (Cod) அல்லது சால்மன் (Salmon) அல்லது மற்ற வகை மீன்களையே அவைகளும் உண்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் பெரும் எண்ணிக்கையில் சூழலில் கொட்டப்பட்டு அவை பூமியை மாசடையச் செய்கின்றன. எவரெஸ்ட் சிகரம் முதல் ஆழ்கடல் வரை 1,500 வன உயிரினங்கள் பிளாஸ்டிக்கை உண்கின்றன.
மனிதர்கள் இந்த நுண் துண்டுகளை உணவு, நீர் மற்றும் காற்றின் மூலம் உட்கொள்கின்றனர். நுண் பிளாஸ்டிக்கள் மனித இரத்தம், நுரையீரல், தாய்ப்பாலில் கலந்திருக்கின்றன என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நீல, ஃபின் மற்றும் கூன்முதுகு வகைகளைச் சேர்ந்த 191 திமிங்கலங்களில் கருவிகள் (tags) பொருத்தப்பட்டு அவற்றின் 36,000 முக்குதல்கள் ஆராயப்பட்டன. வான்வழி ஆளில்லா விமானங்கள் மூலம் அவற்றின் வாயை அடையும் நீரின் அளவு கண்டறியப்பட்டது. நீரியல் கருவிகள் மூலம் நீரில் இரையின் அடர்த்தி கணக்கிடப்பட்டது. இரையில் இருந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் நீர் ஆய்வு (water column) மற்றும் முந்தைய ஆய்வு விவரங்கள் மூலம் மதிப்பிடப்பட்டன.
பாலீன் வகை திமிங்கலங்கள் நுண் பிளாஸ்டிக் துகள்கள் அதிகம் காணப்படும் ஆழ்கடலின் 50-250 மீட்டர் பகுதியிலேயே பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்திருக்கும் தங்கள் உணவைப் பெரும்பாலும் உண்கின்றன. நீலத் திமிங்கலத்தை விடச் சிறிய கூன்முதுகு திமிங்கலங்கள் அன்றாடம் கிரில்களை உண்ணும்போது 4 மில்லியன் நுண் துகள்களையும், ஆன்சோவிஸ் (Anchovies) போன்ற மீன்களை உண்ணும்போது நாள்தோறும் 200,000 துகள்களையும் உட்கொள்கின்றன.
இந்த மதிப்பீடுகள் ஒவ்வொரு விநாடியும் மாறக் கூடியவை என்பதால் இந்தக் கணக்குகள் துல்லியமானவை இல்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கரையில் யானை முதல் கடலில் திமிங்கலம் வரை மனிதன் உருவாக்கிய பிளாஸ்டிக் என்னும் மாசு அவனை மட்டுமல்லாமல் உயிருள்ள எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறது என்பதையே இந்த ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்