நிலத்தில் வாழும் மரங்களின் திசுக்களிலும் நானோ பிளாஸ்டிக்குகள் கலந்துள்ளன என்று சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வுகள் கூறுகின்றன. மரங்களின் வேர்களும், வேர்தூவிகளும் நானோ பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சி வைத்திருப்பதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இதனால் மரங்களின் அடிப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுத்துகள்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கடல்கள், துருவப்பகுதிகள் முதல் எவரெஸ்ட் மலைச்சிகரம், வளிமண்டலத்தின் ட்ரோப்போஸ்பியர் வரை பூமியில் இன்று நுண் மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் பரவியுள்ளன.plastic bottle 640இப்போது மரங்களின் திசுக்களில் நானோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி தரும் செய்தி என்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆம்ஹெஸ்ட் (Amherst) ஸ்டாக்பிரிட்ஜ் (Stockbridge) விவசாயப் பள்ளி (UMASS) சூழல் விஞ்ஞானி பௌஷன் ஷிங் (Paoshan Xing) மற்றும் ஷாண்டாங் (Shandong) பல்கலைக்கழக ஆய்வுக்குழு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வேறுபட்ட சூழ்நிலையில் நானோ பிளாஸ்டிக்குகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி இன்னும் தெளிவான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. குறிப்பாய் இவை விவசாய நிலங்கள் மற்றும் மண் பரப்புகளில் செயல்படும் விதம் பற்றி அதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஷிங் தலைமையிலான சீன ஆய்வுக் குழுவினர் கருதுகின்றனர்.

இதுவரை தாவரங்கள் நானோ பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சி எடுப்பது பற்றிய ஆய்வுகள் எவையும் தீவிரமாக நடைபெறவில்லை.

நிலத்தில் இருக்கும் பொருட்களின் பண்புகளுக்கு ஏற்றவாறு பிளாஸ்டிக் துகள்கள் தாவரங்களில் காணப்படுகின்றன. இவ்வாறு தாவரங்கள் பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சுவது உணவு உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

பொதுவாக ஆய்வகங்களில் ஆய்விற்காகப் பயன்படுத்தப்படும் அரபிடாப்சிஸ் தல்யானா (Arabidopsis Thaliana) என்ற தாவரத்தில் நேர் மின்சுமை மற்றும் எதிர் மின்சுமை நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. கட்டுப்பாடற்ற வகையில் உலகளாவிய பிளாஸ்டிக்குகளின் பயன்பாடு, ஒவ்வொரு ஆண்டும் பூமியில் இவை கோடிக்கணக்கில் கழிவுகளாக உருவாகக் காரணமாகிறது.

ஆய்வகத்தில் நடத்தப்பட்ட தாவர பரிசோதனைகளில், தாவரங்கள் நானோ பிளாஸ்டிக்குகளை உறிஞ்சி அவற்றைச் தன் திசுக்கள் மற்றும் மூலக்கூறு நிலைகளில் சேகரிப்பது நவீன நுண்ணோக்கி மற்றும் மரபணு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என்று ஷிங் கூறுகிறார். நானோ துகள்களைத் தாவரங்கள் வேர் முதல் தளிர்கள் வரை உறிஞ்சுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கட்டுரை “இயற்கை - நானோ தொழில்நுட்பம்” (Nature Nanotechnology) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. நானோ பிளாஸ்டிக் துகள்கள் புரதம் அல்லது வைரைஸ் போல மிக நுண்ணியவை. வானிலை மற்றும் சிதைவு இத்துகள்களின் பண்புகளை மாற்றமடையச் செய்கிறது.

இதனால் இயற்கையில் காணப்படும் நுண் துகள்கள் (environmental particles) ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் தூய நிலை பாலிஸ்டைரீன் (pristine polystyrene) நானோ பிளாஸ்டிக் துகள்களில் இருந்து வேறுபட்டவை என்று ஷிங் கூறுகிறார். இதனால் ஆய்வகப் பரிசோதனைகளின்போது இவை நேர் அல்லது எதிர் மின்னேற்றம் செய்யப்படுகின்றன.

சீனாவில் ஷாண்டங் பல்கலைக்கழகத்தில் ஷையன் ஜெங் யுயென் (Xian-Zheng Yuan) மற்றும் ஷு ஷ்வாங் வெங் (Shu-Zhuang Wang) ஆகியோர் தலைமையில் பல விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆய்விற்காக அரபிடாப்சிஸ் தாவரங்கள் வேறுபட்ட மின்சுமைகள் உடைய, ஒளிர்தன்மை உடைய நானோ பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்பட்ட மண்ணில் வளர்க்கப்பட்டன. சோதனைகளுக்கு முன்னும் பின்னும் தாவரங்களின் எடை, உயரம், குளோரோபில் எனப்படும் பச்சையத்தின் அளவு மற்றும் வேர் வளர்ச்சி ஆகியவை ஆராயப்பட்டன.

ஏழு வாரங்களுக்குப் பிறகு நானோ பிளாஸ்டிக்குகள் கலந்த மண்ணில் வளர்ந்த தாவரங்களின் தாவரத்தன்மையின் நிறை (plant’s biomass) மற்றும் தாவரங்களின் உயரம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. நானோ துகள்கள் தாவர நிறையைப் பாதிக்கிறது. அவற்றின் உயரம் குறைவதுடன் வேர்கள் குட்டையாகின்றன. தாவரத்தின் நிறை குறையும்போது அது அதன் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது. இதனால் தாவரங்களில் அடங்கியிருக்கும் ஊட்டச்சத்துகள் பெருமளவில் குறையும்.

நேர்மின் சுமையுடைய பிளாஸ்டிக் துகள்கள் அதிக தீங்கு தருபவை. இதனால் இவற்றைத் தாவரங்கள் அதிகமாக உறிஞ்சி எடுத்துக்கொள்ளவில்லை. அவை ஏன் இவ்வாறு செய்கின்றன என்பது பற்றித் தெரியவில்லை என்று ஷிங் கூறுகிறார். நேர் மின்சுமை துகள்கள் நீர், ஊட்டச்சத்துகள் மற்றும் வேருடன் அதிக வினைபுரியும் தன்மையுடையவை.

மேலும் இத்துகள்கள் வேறுபட்ட மரபணு வெளிப்பாடுகள் (gene expressions) ஏற்படத் தூண்டுதலாக அமைகின்றன. செல்லில் உள்ள ஒரு மரபணுவில் இருந்து புரதம் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும்போது அதனுள் நிகழும் தகவல் பரிமாற்றமே மரபணு வெளிப்பாடு எனப்படுகிறது. இது குறித்து பெருமளவில் பயிரிடப்படும் பயிர்களில் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் கருதுகின்றனர்.

வயல்வெளிச் சூழலில் இது எந்த அளவிற்கு உணவு விளைச்சல் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் என்பது இப்போது தெரியவில்லை. சிறிய கன்றுகளிலும் நானோ துகள்களால் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராயப்பட்டது. 10 நாட்களுக்குப் பிறகு செய்யப்பட்ட ஆய்வில், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவற்றைக் காட்டிலும் இந்த கன்றுகளின் வளர்ச்சி நானோ துகள்களால் தடுக்கப்பட்டது தெரியவந்தது.

வேர் பாதிப்பை ஆராய விஞ்ஞானிகள் 'ஆர்.என்.ஏ மரபணு வரிசை டிரான்ஸ்க்ரிப்டாமிக் பகுப்பாய்வுக் கருவியை' (RNA-seq transcriptomic analyser) பயன்படுத்தினர். இதன் மூலம் வேர், தளிர்களில் இருக்கும் மூலக்கூறுகளின் நிலையை அறியலாம். முடிவுகள் 'பாலிமரைஸ் தொடர்வினை பரிசோதனை' (Quantitative PCR) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இத்தாவரம் 200 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுள்ள பிளாஸ்டிக் துகள்களையும் உறிஞ்சுவது கண்டறியப்பட்டது.

நிலவாழ் யானை, புலி, ஆடு, மாடு போன்றவற்றின் உணவுப் பாதையில் நுழைந்த பிளாஸ்டிக்குகள் அவற்றின் உயிரைப் பறிக்கின்றன. கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை உயிரினங்களின் உயிருக்கே உலை வைக்கின்றன. சமீபத்தில் மனித ரத்தத்திலும் நுண் பிளாஸ்டிக்குகள் நுழைந்த செய்தி வெளிவந்தது. பிளாஸ்டிக் துகள்கள் கலந்த மண், காற்று, நீர் மூலமே மனிதன் பாதிக்கப்படுகிறான் என்று கருதியிருந்த சமயத்தில் இது பேரதிர்ச்சி தரும் செய்தி.

இப்படியே போனால் தூய நீரையும் சத்துக்களையும் பயன்படுத்தி வளர்ந்து பலன் தர வேண்டிய தாவரங்கள், நாம் விவேகமில்லாமல் வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகள் சிதைந்து உண்டாகும் நுண் நானோ துகள்களை உறிஞ்சி, அவை கலந்த காய்கனிகளையே தரும். இந்நிலை தொடர்ந்தால் விரைவில் மனிதன் பிளாஸ்டிக் துகள்கள் கலந்த உணவையே சாப்பிடும் நிலைக்கு ஆளாவான் என்பது நிச்சயம்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.