சற்றே பெரு வெப்பமிடை
காதலைக் கொட்டித் தீர்த்த
பெருமழையின் அன்பைத் துளிர்த்து
பதிலுக்கு பச்சையம்
காட்டிச் சிரிக்கிறது
கார்காலக் கொழுந்துகள்.
மழைமேகமிடையே
கண்ணாமூச்சியாடும்
கார்த்திகை இளம்பரிதியின் ஊடுருவல்
அடர் மரங்களில் நுழைந்து
பொன்பச்சை நிறமாகித்
தூவலிடுகிறது தரையில்.
அதிகாலைக் குயில்களின்
பயிற்சியிடையே கீச்சீடும் கருஞ்சிட்டுகள்
குளிர்ப்பகலின் இசைக் குறிப்புகள்.
அடை மழையிலும்
பழுத்து உதிர்த்திடும்
மரங்களின் கிளைகளில்
பனிவெயில் மொட்டுகள்.
புங்கன் மர உச்சியில்
பிங்க் நிற தளிரில்
மீட்டும் மென்காற்று
ஏறுபொழுதை மசக்கைக் கூட்டிட
சட்டென விறையும்
பனங்கடையின் பாடலில் திடுக்கிட்டு
நாலைந்துப் பூக்களை
உதிர்த்திடும் மந்தாரை மரம்
உன் பார்வையை நினைவூட்டுதடி
- சதீஷ் குமரன்