கீற்றில் தேட...

பெரும்பசி கொண்ட பூனை
வீட்டைச் சுற்றி
அரற்றுவதைப் போல
ஊரைச் சுற்றிவளைத்து
அரற்றுகிறது குளிர்க்காற்று.
பெருவேட்டையாடிட
மிச்சமிருக்கும் மரங்களில்
உயர்மின் கம்பங்களில்
காத்திருக்கும் கூகையென
மழை இரவு
உயிர்களுக்குப் பேரச்சம் கூட்டி
சில்வண்டுகளாய் பேரோசை எழுப்புகிறது.
பனி வாடைக்காற்று தீண்டி
தாவரங்களில் மஞ்சள் முழுநிலாப் பூ
மகரந்தத் துகளாய் ஒளிர்கிறது.
உன் மூக்குத்திப் பூவில் தேனருந்தி
உன் மீதான மிகு காதலைப்
பாடிவரும் மின்மினிகள்
என்னையும்
சிறு மின்மினிப் பூச்சியாய் ஆக்குகின்றன.
நீயற்ற ஈர இரவை
எதைக் கொண்டும்
போர்த்த முடியவில்லை

- சதீஷ் குமரன்