தேய்ந்தும் பிய்ந்தும்
அறுந்தும்போன செருப்புகள்
நீதிமன்ற வளாகத்தில்
ஆங்காங்கே கேட்பாரற்றுக்
கிடக்கின்றன!
பல ஆண்டுகளாக
நடந்து நடந்து
இதற்குமேல் என்னால்
முடியாதென நொந்து
முடங்கிப்போன பாதங்கள்!
வேகாத வெயிலிலும்
மழையிலும் கால் கடுக்க
நின்ற அப்பாதங்களைத்
தாங்கிய செருப்புகள்!
யாரையோ எதையோ
எதிர்பார்த்து - இன்றும்
அங்கேயே அனாதைகளாகக்
காத்துக் கிடக்கின்றன!
- கு.சிதம்பரம், சென்னை