அலுவலக பாரங்களுக்கிடையே
வீட்டின் மூலையொடுங்கிய
வேளை - சிரிப்பை
நுழைவுச்சீட்டாகக் காட்டி
பிரவேசிக்கிறான் - என் மகன்

இமைக்கும் நொடியின்
இருட்டில் - சட்டைப் பேனா
மூடியைப் பிடுங்கி
வாய்க்கு லாவகமாக்கி
ஊதி ஊதி
இசைஞனின் தோரணை காட்டி
மகிழ்கிறான்..

விவாதிக்கப்பட வேண்டிய
அறிக்கைக் காகிதங்களில்
துடுப்பில்லா படகு செய்து
மடிக்கணினியில் தோன்றும்
திரைக் கடலில் - கப்பலோட்ட
மாலுமியாய் புறப்பட்டு
நிற்கிறான்..

கைபேசிக்கு உயிரூட்டி
தொடுதிரைக் கோலமிட்டு
வலைத்தளத்தின் கதவு திறந்து
ஓவிய உயிரி -
டோராவின் நிழல் பிடித்து
சுயாதீனப் பயணியாய்
நடக்கிறான்..

பயணக் களைப்பின்
அமர்தலில் - சூடில்லை
என ஒதுக்கப்பட்ட காப்பியை
தேனுண்ணும் ரசனையோடு
ருசித்து உறுஞ்சிவிட்டு
இரட்டைக் கை டாட்டாக்களோடு
சிறகடித்துப் பறக்கிறான்..

டிஜிட்டல் பண வேட்டைக்கு -
தூர மின்னலின் வெளிச்சத்தை
நம்பிப் பயணிக்கும்
குடும்பத் தலைவர்களின்
காலடியை சுற்றும்
மின்மினி வெளிச்சம்
மழலைகளின் - இந்த
மின்னல் விளையாட்டு..

- த. கமல் யாழி

More articles by த.கமல் யாழி

Comments

16 comments

16
இறை காதலன் ஜியா
அருமையான கவிதை... ஒவ்வொரு வரிகளும் நெகிழ்வை ஏற்படுத்துகிறது... ன
சி.பேரின்பராஜன்
கவிஞர் கமல்யாழி கவிதை தோறும் கவிதை தோறும் மெருகேறிச்செல்கிறார். வாழ்த்துகள்
Rathika
குழந்தைகளுடன் இருக்கும் ஒவ்வொரு தருணமும் நெகிழ்வான தருணங்கள்.
அருமையான கவிதை வரிகள்
சாந்தி சரவணன்
அருமையான கவிதை தோழர். வாழ்த்துகள்.
Kalanithi
அருமை தோழர்...
ஜெ.சரவணன்
அரூமையான கவிதை வரிகள்
கவின்
மிகவும் அருமையான வரிகள். தேடிப் பிடித்து அடுக்கி வைக்கப்பட்ட சொற்கள். அருமை தோழர்.
நளினா தியாகு
சிறப்பு தோழர்.. அருமையாக உள்ளது.
மு.முத்துராமன்
மழலையின் துள்ளலை மனம் இறக்கி இரசித்து கனம் தோறும் சுவைத்து படைத்த கவிதை,
வாழ்த்துகள் தோழர்.
Sakthi bahadur
குழந்தையின் கொஞ்சல் உடன் கூடிய கவிதை...
என்னுடைய பேரன்கள் இருவரும் என் உடன் இருக்கும் காட்சியை எழுத்து நடையில் காட்டும் உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள் தோழர்....
வசந்தா
மிக அருமை
சா.டேனியல்
அன்பு இளவல் கமலக்கண்ணன் (கமல்யாழி) படைப்பு மிக அருமை...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ஜெ.சக்திபானு
அருமை தோழா் கவிதையின் கலைவளம்
அய்.தமிழ்மணி
அருமை தோழா.
இரா. ஜெயலக்ஷ்மி
அருமையான கவிதை தோழர். தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் கோர்வை....

தொடுதிரை கோலமிட்டு...
ஒவிய உயிரி டோரா..

அற்புதம் தோழர்.
தொடர்ந்து எழுதுங்கள் தோழர்.
ந.ஜெகதீசன்
மழலை செல்வங்களோடு இணைந்த சமகால நகர்வாழ் குடும்பத் தலைவர்களின் மகிழ்ச்சி குறித்த சிறப்பான கவிதை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.