அச்சம் ஈன்ற மெச்சுபுகழ் இறைவன்
நிச்சய மில்லா வாழ்வில் நிலைத்தான்
புத்தர் முதலாய் விடுதலை தேடும்
உத்தமர் யாவரும் மறுத்தனர் இறைவனை
விடுதலைப் போரில் இணையும் வினைஞர்
சடுதியில் இறைவனை விடமறுத் தாலும்
உழைப்பவர் நலனில் உறுதியாய் இருப்பின்
பிழையிலை என்றே உரைப்பர் உயர்ந்தோர்
சாதி யில்லா மீதி உலகில்
சோதித்து அறிந்த உண்மை இதுவே
இறையை ஏற்பினும் மறுப்பினும் பார்ப்பனர்
திறமைக் குறைவிலும் உயர்வதைக் கைவிடார்
பிறப்பால் அமைந்த அநீதியை நீக்க
மறுத்துக் குழப்பும் யாவரும் பகையே
பார்ப்பனர் வீழாது புரட்சியை எடுப்பின்
வேரிலா மரம்போல் வீழ்ந்து போகும்
அண்ணலின் ஆய்ந்த முடிவு தன்னை
நுண்ணிதின் உணர்வது உழைப்பவர் கடனே
 
          (மிகுந்த புகழ் கொண்ட கடவுள் தத்துவத்தை மனிதர்களின் அச்ச உணர்வு ஈன்றெடுத்தது. (சுரண்டலினால் பாதிக்கப்பட்ட) மனித வாழ்வின் நிச்சயம் அற்ற தன்மையில் அது நிலை பெற்றது. (சுரண்டலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் நலன்களுக்காக) விடுதலைப் போரைத் தொடுத்த புத்தர் முதல் (ஸ்பார்டகஸ், வால்டர், ரூசோ, கார்ல் மார்க்ஸ், லெனின், பெரியார் முதலிய) மற்ற அனைத்து உத்தமத் தலைவர்களும் இறை மறுப்புக் கொள்கையையே கொண்டிருந்தனர். இறை நம்பிக்கையை உடனே விட முடியாத மனநிலையில் உள்ள உழைக்கும் மக்கள், (சுரண்டலுக்கு எதிரான) விடுதலைப் போரில் உறுதியாக இருந்தால், அவர்களை இணைத்துக் கொள்வதில் தவறில்லை என்று மிகப்பெரிய அறிஞர்கள் கூறியுள்ளனர். சாதிக் கொடுமைகள் இல்லாத (இந்தியாவைத் தவிர்த்த) உலகின் மற்ற பகுதிகளில் இவ்வணுகுமுறை சரியானது என்று சோதித்து அறியப்பட்டு உள்ளது.
 
         பார்ப்பனர்கள் கடவுள் தத்துவத்தை ஏற்றுக் கொண்டாலும் மறுத்தாலும், திறமை யில்லாவிடினும் உயர் நிலையை அடைவதை விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்வதே இல்லை. பிறப்பின் அடிப்படையில் நிகழும் இக்கொடுமைகளை நீக்க மனமின்றி குழப்பமான கருத்துகளைப் பரப்பிக் கொண்டு இருக்கும் பார்ப்பனர்களும் (அவர்களுடைய மூளை வெளுப்பிற்கு ஆட்பட்ட) மற்றவர்களும் (உழைக்கும் வர்க்கத்தினருக்குப்) பகையாளிகளே. பார்ப்பனர்கள் (ஆதிக்க நிலையில் இருந்து) விழாத நிலையில் புரட்சியை முன்னெடுத்தால் வோ¢ல்லதாத மரத்தைப் போல வீழ்ந்து விடும்.  அண்ணல் அம்பேத்கர் ஆய்ந்து சொன்ன இம்முடிவை உழைக்கும் மக்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.)
 
- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.