mgrசட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடந்து தமிழக அரசியல் களத்தை இதுவரை இல்லாத பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கின்றது. காரணம் இந்தத் தேர்தலில் முதியவர் கமல் மற்றும் ரஜினி இருவரும் போட்டியிடுவதுதான்.

ஆனால் சூர்யா, விஜய், சிம்பு என இன்றைய இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைக்கான வழிகாட்டிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு உருப்படாமல் போய்கொண்டு இருக்கும் ஒரு காலத்தில் ரஜினியும், கமலும் சில அதிமுக காரர்களும் இன்னமும் எம்.ஜி.ஆரின் சாதனைகளைச் சொன்னால் ஓட்டுகிடைக்கும் என நம்பிக்கொண்டு தங்களை எம்.ஜி ஆரோடு அடையாளப்படுத்திக் கொண்டு எம்ஜிஆர் எனக்கு சொந்தம், உனக்கு சொந்தம் என போட்டி போட்டுக் கொண்டு இருப்பது அவர்கள் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது.

டிவியில் எம்.ஜி.ஆர் படம் போட்டாலே காண்டாகி சேனலை மாற்றும் இன்றைய இளைஞர்கள் எல்லாம் இன்னமும் இவர்களின் உருட்டுக்கு மயங்குவார்கள் என நம்பி பாவம் வீர ஆவேசமாக எம்ஜிஆரின் புகழை பரப்புரைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

இதன் மூலம் கொள்கையில்லாத பிற்போக்கு கட்சிகள் எம்.ஜி.ஆர் என்ற ஊதி பெரிதாக்கப்பட்ட போலிப் பிம்பத்தின் புனித நினைவுகளை அந்தச் சாமானிய மக்கள் மத்தியில் பதிய வைக்கவும், அதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி தனது ஆதரவை வலுப்படுத்திக் கொள்ளவும் முயன்று வருகின்றது.

எம்.ஜி.ஆரின் சமகாலத் தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இப்போதுள்ள தலைமுறையில் சிலர் கூட எம்.ஜி.ஆரை பாரிவள்ளல் அளவுக்கு தர்மச் சிந்தனை படைத்த நபர் என்றும், ஏழைகளின் வறுமைத் துயர் துடைப்பதற்கென்றே தன் வாழ்நாளை அர்பணித்துக் கொண்டவர் என்றும் இன்றும் கருதிக்கொண்டு இருப்பதை நம்மால் மறுக்க முடியாது.

இப்படி எம்.ஜி.ஆரைப் பற்றி மக்கள் மத்தியில் ஆணித்தரமாக உருவாக்கி பராமரிக்கப்படும் பிம்பம் உண்மையில் அவருக்குப் பொருத்தமானதுதானா? அதில் ஏதாவது குறைந்தபட்ச நியாயமாவது உள்ளதா? என நம்மில் எம்.ஜி.ஆரை புனிதராகக் கருதிக் கொண்டிருக்கும் பலர் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை.

அப்படி உட்படுத்தும் போது ஏன் தமிழக மக்கள் மனதளவில் எம்.ஜி.ஆரை தங்களில் ஒருவராக, தங்களை மீட்க வந்த மீட்பாராக கருதினார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

முதலில் எம்.ஜி ஆரின் தனி மனித ஒழுக்கம் எப்படி இருந்தது என்பதை பார்ப்போம். தன்னுடைய திரைப்படங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பார்ப்பனிய கருத்தியலை ஆணித்தரமாக வலியுறுத்தும் எம்.ஜி.ஆர் நிஜவாழ்க்கையில் அடுத்தவர் மனைவியை அபகரிக்கும் நபராகவே இருந்தார்.

எம்.ஜி.ஆர் - ஜானகியை திருமணம் செய்துகொள்ளும் போது ஜானகியின் கணவர் உயிரோடுதான் இருந்தார் அதே போல, எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதியும் உயிருடன்தான் இருந்தார். ஆனால் அடுத்தவர் மனைவியை அபகரிக்கும் எம்.ஜி.ஆர் தன்னுடைய திரைப்படங்களில் கற்பைப் பற்றி தமிழ்ச் சமூகத்திற்கு வகுப்பெடுத்ததுதான் மிகப்பெரிய கேலிக்கூத்தாகும்.

இன்று திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி மேடைகளில் மிக தரக்குறைவாக விமர்சனம் செய்யும் அதிமுகவினர் தனது கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் இந்த யோக்கியதையைப் பற்றி நினைத்துப் பார்ப்பது கூட கிடையாது.

அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் தன்னுடைய திரைப்படங்களில் எந்த விதவைப் பெண்களையும், ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்களையும் எப்போதுமே திருமணம் செய்து கொண்டதாக காட்சி வைத்ததே கிடையாது மாறாக பெரும்பாலான திரைப்படங்களில் அடங்காத பெண்களை அடக்கி அவர்களை தன்னை காதலிக்கும்படி செய்து, அவர்களுக்கு கணவனுக்கு அடங்கிய மனைவியாக எப்படி நடந்துகொள்வது என்ற ஆணாதிக்க கருத்தியலையே அவர் வற்புறுத்தினார்.

விவசாயிகளின் தோழனாக பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் வாகைக்குளத்தில் விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார். மீனவனின் நண்பனாக படகோட்டியில் நடித்த எம்.ஜி.ஆர் அப்பாவி மீனவர்களை சுட்டு வீழ்த்தினார், வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கொடுமையான நிலச்சுவான்தார்களை எதிர்த்துப் போராடிய மார்க்சிய - லெனினிய அமைப்பைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் 22 பேரை துடிக்க துடிக்க என்கவுன்டர் செய்தார், ஒரு வருடத்திற்கும் மேலாக முதல் தகவல் அறிக்கையே தராமல் 1.5 லட்சம் மக்களை சிறையில் அடைத்து சித்தரவதை செய்தார்.

எம்.ஜி.ஆர் தன்னுடைய வயதான தோற்றத்தையும், சொட்டை தலையையும் மறைக்க மிக மோசமான அடாவடித்தனத்தில் ஈடுபட்டார். கோயம்புத்தூரில் 1981-ல் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு மாணவர் தலைவர் அவருக்கு மாலையிட, அது அவரின் தொப்பியை சற்றே சாய்த்துவிட்டது. எம்.ஜி.ஆர் தன்னுடைய ஆத்திரத்தை மறைக்க முடியாமல், பொதுமக்களின் முன்னால் அந்த இளைஞரை மீண்டும், மீண்டும் அறைந்தார்.

கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தை விட்டு தொப்பி, கண்ணாடி இல்லாமல் சட்டை அணியாமல் வெளியே வந்த எம்.ஜி.ஆரை ஒரு புகைப்படக்காரர் அப்படியே புகைப் படமெடுத்தார் என்பதற்காக எம்.ஜி.ஆரின் பாதுகாவலர்கள் அவரை இழுத்து, கேமராவிலிருந்து நெகட்டிவை எடுத்து அதை வெயிலில் காட்டி நாசப்படுத்தினார்கள்.

இப்படியாக எம்.ஜி.ஆர் எப்பொழுதும் அணிந்திருக்கும் விக், விலங்கு முடிகளால் ஆன தொப்பி ஆகியவை பாரம்பரியக் காரணங்களாக அறியப்பட்ட ஆண்மையின்மை மற்றும் முதுமையின் அடையாளமான அவருடைய வழுக்கைத் தலையை மறைத்தன.

அவரின் கண்களைச் சுற்றி விழுந்த சுருக்கத்தை அவர் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி மறைத்தது. மக்கள் முன் எப்பொழுதும் அதிக ஒப்பனை அணிந்தவாறே அவர் தோன்றினார்.

இதை அப்படியே மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நாம் பொருத்திப் பார்க்கலாம். ஜெயலலிதாவின் வயது முதுமையால் சுருங்கிப் போன முகத்தையும் நரைத்துப்போன தலையையும் அவர் உயிருடன் இருந்த போதும் யாரும் பார்த்தது இல்லை, அவர் இறந்த பின்னரும் யாரும் பார்த்ததில்லை.

அந்த அளவிற்கு தன்னுடைய பிம்பத்தை கடைசி வரை காப்பாற்றியவர் ஜெயலலிதா. தங்களின் வயது முதுமையால் ஏற்பட்ட இயல்பான தோற்றத்தைக் கூட பொதுமக்கள் பார்த்து தங்களை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்று நினைத்த இவர்களைத்தான் பொதுமக்கள் தங்களின் ‘இதய தெய்வமாக’ கருதினார்கள், கருதிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதும் மிகவும் வருத்தத்திற்கு உரியது.

எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் ஏழை எளியமக்களின் பொற்காலமாக சித்தரிக்கும் மோசடிகள் இன்றளவிலும் நடைபெற்று வருவதை நம்மால் பார்க்க முடிகின்றது. திரைப்படங்களில் மது அருந்துவதை ஒழுக்கக்கேடாக கருதிய எம்.ஜி.ஆரின் ஆட்சியில்தான் மது ஆறாக தமிழ்நாட்டில் ஓடியது. மாநிலத்தின் மொத்த கலால் வரியில் மதுவின் மூலம் மட்டும் 13.9 சதவீதம் 1980-1985 காலகட்டத்தில் கிடைத்துள்ளது.

இந்த கலால் வரியில் 80 சதவீதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக பயன்படுத்தும் நாட்டுச்சரக்குகளான பட்டைச்சாராயம் மற்றும் கள் மூலமே கிடைத்துள்ளது. 1981-82 இல் 110 கோடியாக இருந்த வருமானம் 1984-85 காலகட்டத்தில் 202 கோடியாக உயர்ந்துள்ளது.

அது மட்டும் அல்லாமல் விவசாயத் துறை, தொழிற்துறை என்று எதுவுமே வளர்ச்சியடையவில்லை. வேளாண்துறைக்கு ஒதுக்கப்பட்ட மானியம் கூட பணக்கார விவசாயிகள், பம்ப்செட் உரிமையாளர்களையுமே சென்று சேர்ந்தது, அவர்களும் கூட அதிமுகவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். 1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத்தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் ஒதுக்கிய நிதியில் 17.04 லட்சம் நிதியை செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியை தேவையில்லை என்றும் திருப்பி செலுத்தி தான் திரைப்படத்தில் மட்டுமே அடிமைகளை மீட்டெடுக்கும் மீட்பான் என்பதை எம்.ஜி.ஆர் நிரூபித்தார்.

இப்படிப்பட்ட எம்.ஜி.ஆரைத்தான் அதிமுக தவிர கமல் ரஜினி என எல்லோருமே போற்றி புகழ்ந்து வருகின்றார்கள். எம்.ஜி.ஆர் தன்னைச் சுற்றி திட்டமிட்டு கட்டமைத்த பிம்பம் அவர் இருந்த போதும் அவருக்கு ஓட்டுகள் பெற்றுத்தர பயன்பட்டது, அவர் இறந்த பின்பும் அவர் உருவாக்கிய கட்சிக்கு ஓட்டுக்களை பெற்றுத் தந்து கொண்டு இருக்கின்றது.

ஆளும் வர்க்கம் பட்டாளி மக்களின் எதிர்ப்பில் இருந்து தங்களையும் தங்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கும் பெரும் முதலாளிகளையும் காப்பாற்ற செய்யும் சில சில்லரை சலுகையைத்தான் எம்.ஜி.ஆரும் செய்தார். சத்துணவு திட்டம் விரிவாக்கம் போன்றவை அப்படிப்பட்டதுதான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளும் திராணியற்ற அரசியல் அறிவற்ற மக்கள் எம்.ஜி.ஆர் திரையில் செய்தது போலவே தன்னுடைய சொத்துக்களை எல்லாம் ஏழைகளுக்கு தந்து ஏழைகளுக்காகவே வாழ்ந்த தர்ம பிரபுவாகவே அவரை எண்ணினர்.

மக்களின் இந்த முட்டாள் தனம் தான் அவரை கடவுளைப் போன்று வணங்க வைத்தது. அவருக்கு கோயில் எல்லாம் கட்ட வைத்தது. ஏற்கெனவே அவர்களிடம் இருந்த மனிதரை கடவுளாக வணங்கும் பழக்கும் எம்.ஜி.ஆர் போன்ற போலிகளை, ஏழைகளை நம்ப வைத்து கழுத்தறுக்கும் மோசடிப் பேர்வழிகளை கடவுளாக வணங்க அவர்களை இட்டுச்சென்றது.

ஆனால் காலம் மாறிவிட்டது. அது கோமாளிகளையும், பாசிஸ்ட்டுகளையும் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசி இருக்கின்றது. இன்றைய இளைய தலைமுறை எம்ஜிஆர் என்றில்லை பழையதை நினைத்து பார்த்து சீர்தூக்கி ஓட்டுப் போடும் அளவுக்கு பக்குவப்பட்டதல்ல.

அது பெரும்பாலும் லும்பன் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்ட விட்டேத்தியாக இருக்கின்றது. அதனிடம் கொள்கை பேசி நம்மால் ஓட்டுக்கேட்க முடியாது. அதனை புரிந்துக் கொண்டுதான் ரஜினி கமல் போன்றவர்கள் கொள்கை தவிர்த்த அரசியலை முன்னெடுக்க முயன்று வருகின்றார்கள். ஆனால் கொள்கையே பார்க்காதவர்கள் எம்ஜிஆர் போன்ற அதரபழசான கோமாளி கேரக்டர்களை எல்லா விரும்புவார்கள் என அவர்கள் நினைப்பதுதான் நகை முரண்.

இருந்தாலும் எம்ஜிஆர் ஒரு டுபாக்கூர் என்பதை சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளதால் சொல்கின்றோம். மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது, காலாவதி ஆகிப்போன ஒரு கருமத்தை அவர்களின் தலையில் கட்டவரும் இந்தக் கழிசடைகள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்பதைத்தான்.

- செ.கார்கி

Pin It