அன்பார்ந்த உழைக்கும் மக்களே, புரட்சிகர, ஜனநாயக சக்திகளே,

இந்தியாவில் நக்சல்பாரி பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகரக் கட்சியான மாநில அமைப்புக் கமிட்டி (SOC), இ.பொ.க. (மா-லெ) வின் 10-வது பிளீனம் கடந்த 13.10.2020 ல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இப்பிளீனத்தில் கட்சியை வழிநடத்திச் செல்ல புதிய தலைமைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

9-வது பிளீனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மா.அ.க.வின் அரசியல் ஓட்டாண்டித் தனத்தாலும் அதிகாரத்துவப் போக்காலும் தலைமைக்குள் முரண்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சியால் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, அக்கூட்டத்தில் தலைமைக் குழுவினர் பதவி விலகினர். முரண்பாடுகளைத் தீர்த்து புதிய தலைமையைத் தேர்ந்தெடுக்க பிளீனம் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. இதனை செயல்படுத்த இடைக்காலக் கமிட்டியும் அமைக்கப்பட்டது.

இடைக்கால கமிட்டியானது, அணிகளின் பரிசீலனைக்காக அறிக்கைகள், ஆவணங்களை சுற்றுக்கு விட்டு தனது பணியைத் தொடங்கியது. இந்த ஆவணங்களை சுற்றுக்கு விட்டால், தான் அதிகாரத்துவம் எனும் அரசியல் நோயால் பீடிக்கப்பட்டிருப்பதும், மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் வழியில் இந்திய நிலைமைகளில் புதிய தாராளவாதக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள மாற்றங்களை பருண்மையாக ஆய்வு செய்து, கோட்பாட்டு ரீதியில் முடிவுகளை எடுத்து கட்சியின் திசை வழியைத் தீர்மானித்து வழிகாட்டவில்லை என்ற தனது தவறும் அம்பலமாகும் என தலைமை அச்சப்பட்டது. இதனால், தலைமைக்குழுவின் பெரும்பான்மை தரப்பு அமைப்பு முடிவுகளையும், அமைப்பு முறையையும் தூக்கி எறிந்து பிளீன வேலைகளை முடக்கவும், இடைக்காலக் கமிட்டியையே கலைக்கவும் முயற்சித்தது.

அணிகள், தலைமையின் அதிகாரத்துவப் போக்கை கண்டித்து அமைப்பு முறையில் ஊன்றி நின்றனர். பெரும்பான்மை அணிகளிடம் மதிப்பிழந்து அம்பலப்பட்ட தலைமையின் சீர்குலைவு வேலைகளை அணிகளின் ஆதரவுடன் எதிர்கொண்ட இடைக்கால கமிட்டியானது தனது கடமையில் ஊன்றி நின்றது.

இதனால் தனது பாரதூரமான தவறுகள், பரிசீலனைக்கு உள்ளாவதை விரும்பாத தலைமையின் பெரும்பான்மை தரப்பானது, அணிகளின் விமர்சனங்களுக்கு முகம் கொடுக்காமல் அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டது. 10 - வது பிளீனத்தை நடத்தி புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் கட்சியை உள்ளிருந்தே பிளவுபடுத்தி, சீர்குலைக்கும் முன்னாள் தலைமையின் சதித்தனம் முறியடிக்கப்பட்டது. இது மா.அ.க.வின் வராற்றில் முக்கிய நிகழ்வாகும்.

’’சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும், அரசாங்கம் எல்லா விசயங்களிலும் தலையிடக் கூடாது; அதன் மூலம்தான் உலகப் பொருளாதாரத்தை புதிய பாய்ச்சலில் கொண்டு செல்ல முடியும்” என உலக முதலாளித்துவம் பீற்றிக் கொண்ட புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியை, இன்று பளிச்சென்று காட்டிவிட்டது கொரானா.

’’பொதுசுகாதாரம், மருத்துவம், பொதுக்கல்வி, பொது விநியோகம் போன்றவைகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது அரசுகளின் கடமை இல்லை. அனைத்தையும் கார்ப்பரேட்டுகள் பார்த்துக் கொள்ளட்டும்’’ என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவால் மக்கள் சேவைகள் அனைத்தும் தனியார் கட்டுப்பாட்டிற்குச் சென்றன.

இக்கொள்கையை தீவிரமாக அமல்படுத்தியதால் கொரோனா உலகப் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், சொந்த நாட்டு மக்கள் கொத்துக் கொத்தாக மடிவதைத் தடுக்க முடியாமல், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய அரசுகள் தோல்வியடைந்துள்ளன. கொரோனாவுக்கு முன்பிருந்தே சரியத் தொடங்கிய உலக முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பு, கொரோனாவுக்குப்பின் நொறுங்கி அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது.

2008 - இல் ஏற்பட்ட ஏகாதிபத்திய - முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியானது, சமூகக் கட்டமைப்பு நெருக்கடியாக மாறி, இன்று வரை தீர்க்க முடியாதபடி முட்டுச்சந்தில் நிற்கிறது. இக்கட்டமைப்பு நெருக்கடியால் வெடித்தெழும் போராட்டங்களை ஒடுக்கவும், நவீன வடிவங்களில் சுரண்டலை அதிகரிக்கவும்தான் ஏகாதிபத்திய முதலாளித்துவம் உலகெங்கும் வலதுசாரி ஆட்சிகளின் மூலம் பாசிசத்தைப் புகுத்தி வருகிறது.

மறுபுறம், ஏகாதிபத்திய முகாம்களின் பிராந்திய மேலாதிக்க நோக்கத்திற்கேற்ப புதிய கூட்டணிகள் உருவாகிறது. இதில் தெற்காசியப் பிராந்தியத்தில், அமெரிக்காவின் அடியாளாக மோடி தலைமையிலான அரசு சீனாவுடனான எல்லைத் தகராறில் இறங்கி, தேசிய வெறியைக் கிளறிவிடுகிறது.

இந்தியாவில் அம்பானி, அதானி, அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளால் இயற்கை வளங்கள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த கிராமப்புற, மலைவாழ் பழங்குடி மக்கள் சென்னை, மும்பை, சூரத் போன்ற தொழில் நகரங்களில் நவீன கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டனர்.

இப்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த மார்ச் மாதம் மோடி அரசால் திடீரென அமல்படுத்தப்பட்ட கொரோனா பெயரிலான ஊரடங்கால், வேலையிழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தேசிய நெடுஞ்சாலைகளில் அகதிகளாக சொந்த ஊருக்கு கால்நடையாக ரத்தம் சொட்டச் சொட்ட நடந்தே சென்ற அவலத்தை நாடே பார்த்தது. விவசாயமும், சிறுதொழிலும் கார்ப்ரேட்டுகளால் அழிக்கப்பட்டு வரும் நிலையில், சொந்த ஊர் திரும்பிய இம்மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் பரிதவிக்கிறார்கள்.

உழைக்கும் மக்கள் இருப்பதையும் இழந்துள்ள நிலையில் இன்று, கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பு மட்டும் 17% உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு வருகிறது. 8 மணி நேர வேலை என்ற ஏட்டளவிலான உரிமையும் பறிபோகிறது. 1990-களில் இருந்தே விவசாயத் துறையில் கார்ப்பரேட்டுகள் புகுத்தப்பட்டு விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர்.

இன்றோ, விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்ட வேளான் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மையும், ஏற்றத்தாழ்வும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவற்றை எதிர்க்கும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் ஊஃபா மற்றும் NIA கைதுகள் மூலம் அச்சுறுத்துகிறது பாசிச மோடி அரசு.

நாடெங்கும் உழைக்கும் மக்கள் மீது இந்து மதவெறி பாசிஸ்ட்டுகளின் குண்டர்படைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இசுலாமியர்களுக்கு எதிரான படுகொலைகளும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான ஆதிக்க சாதிவெறித் தாக்குதல்களும், பெண்கள், சிறுமிகள் மீதான வல்லுறவுக் குற்றங்களும் தொடர மோடி தலைமையிலான அரசே துணை நிற்கிறது.

உலகமே பார்க்க பாபர் மசூதியை இடித்த கும்பலின் தலைவர்களை உத்தமர்கள் என நீதிமன்றமே விடுவிக்கிறது. இந்துமத வெறியாட்டங்களின் கூடாரமாக உள்ள உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆட்சியை, ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலின் கனவான ’ராமராஜ்ஜியத்தின்’ புதிய சோதனைக்கூடமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஒட்டுமொத்த நாட்டையும் உ.பி. யாக மாற்ற கிராமப்புறங்களில் இந்து மதவெறி பாசிஸ்ட்டுகளால் வருணாசிரம, ஆதிக்க சாதி வெறியாட்டம் ஊக்குவிக்கப்படுகிறது.

நகர்ப்புற மாணவர்கள், இளைஞர்களிடையே ஏகாதிபத்தியங்களின் சீரழிந்த, ஆபாச, நுகர்வுவெறிப் பண்பாடு பரப்பப்படுகிறது. மோடி அரசு, புராண பொய்ப்புரட்டுகளை பாடத்திட்டமாகப் புகுத்தி கல்வியை காவிமயமாக்குகிறது. ஏழை, கிராமப்புற உழைக்கும் வர்க்கத்தினரின் உயர்கல்வியும், மருத்துவக் கனவும் ‘நீட்` போன்ற மையப்படுத்தப்பட்ட தேர்வுகளால் பறிக்கப்படுகிறது.

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு உள்ளிட்ட திட்டங்களின் மூலம் மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. இந்து - இந்தி - இந்தியா எனும் இந்துராஷ்டிர ஆட்சிக் கனவுக்கான ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைப் பண்பாடு ஆகியவற்றை நிலைநாட்டவே மோடி அரசு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறது.

இந்து மதவெறி பார்ப்பன பாசிசத்தை எதிர்த்தும், இயற்கையையும், நாட்டையும் சூறையாடி வரும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின், உள்நாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் தாக்குதல்களை எதிர்த்தும் எமது அமைப்புகள் பல பத்தாண்டுகளாக தொடர்ந்து களத்தில் போராடி வருகிறது. இத்தகைய அரசியல் சூழலில் கட்சியை வலுப்படுத்தவும், வழிநடத்திச் செல்லவும் புதிய தலைமைக்குழு பொறுப்பேற்றுள்ளது.

மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடித்து, புரட்சிகர சக்திகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து, நாட்டையும், மக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் - காவி பாசிச தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிக்கும் வகையில் பொருத்தமான புதிய செயல் தந்திரத்தை வகுத்து முன் வைக்கவும், புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கவும் புதிய தலைமைக்குழு உறுதி ஏற்றுள்ளது.

தோழமையுடன்,
மாநில அமைப்புக் கமிட்டி (SOC),
இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ),
தமிழ்நாடு.

Comments

10 comments

10
நேர்மை
அடேங்கப்பா! பிளினம் அல்ல "காரியம்" !
உலக வரலாறில் எவ்வித அறிக்கைகளும் இல்லாமல், பரிசீலனை இல்லாமல் நடந்த கூட்டத்திற்கு பெயர் காங்கிரஸா?
விரைவில் உங்கள் சாயம் வெளுக்கும்!

உங்கள் கட்சி பெயர் மட்டும் தவறாக உள்ளது..
ம.அ.க (மருதையன் அமைப்பு கமிட்டி) என்று சரி செய்து கொள்ளவும்..
சின்ன பாக்கெட்
உங்க தலைமை இப்படி தப்பா செஞ்சது இப்பதான் தெரிஞ்சது போல பாவம் இவங்களுக்கு புரட்சி புரட்சி னு வேளையில் இருந்ததால concentration பண்ண முடியல போல. ஆனாலும் உங்க டக்கு ரொம்ப வேகம் யா

எல்லாம் விளங்கிடும் யா
Mani
தோழர்களுக்கு வாழ்த்துக்கள். பழைய மா.அ.க. வின் அதிகாரவர்க்க போக்கை எதிர்த்து புதிய தோழர்கள் போராடியிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Anandha jothi
கொஞ்சமாவது பொது அறிவு இருக்காய்யா உங்களுக்கு?
ஒரு பத்திரிகை செய்தி ஒழுங்கா கொடுக்கத் தெரியுதா?
நேத்து என்ன சொன்னோம், இன்னிக்கு என்ன சொல்றோம் அப்டின்னு சிந்திக்கல...
இவ்வளவு நாள் உங்களை எல்லாம் நம்புனதுக்கு எங்களை செருப்பால அடிச்சுக்கணும்...
சிறுபான்மை, கமிட்டியே இல்லன்னு எங்க கிட்ட சொல்லிட்டு, அவங்க தான் இப்ப பெரும்பான்மை தரப்புன்னு சொல்றீங்க.
அவங்க கூட யாரும் கிடையாது, 4-5 பேர் தான் இருக்காங்க அப்படின்னு சொல்லி நம்ப வச்சிட்டு, உங்க கூட வந்த பிறகு, அவங்க தான் பெரும்பான்மை அப்படின்னா என்ன நியாயம்?
தங்கராசு பிரச்சினை தான் காரணம்னு சொல்லிட்டு, திடீர்னு அரசியல், சித்தாந்தம் அது இதுன்னு சொல்றது தப்பு.
இவ்வளவு நாள் நீங்க கூட அங்க இருந்துடடு, இப்ப பொதுவாக ஓட்டாண்டி அப்படின்னா நாங்க நம்பனுமா?
நீங்க என்ன ஆய்வு செய்ய போறீங்க?
ஒன்னும் சரியா படல, அவ்வளவு தான்...
தன்ராஜ்
”9-வது பிளீனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மா.அ.க.வின் அரசியல் ஓட்டாண்டித் தனத்தாலும் அதிகாரத்துவப் போக்காலும் தலைமைக்குள் முரண்பாடு ஏற்பட்டது.” - என்று கூறியுள்ளீர்கள்.

அப்படி தலைமைக்குள் ஏற்பட்ட அரசியல் முரண்பாடு தான் என்ன? அதை மறைத்து வைப்பதற்கு அது என்ன மூடு மந்திரமா?

பழையவர்களின் நிலைப்பாட்டில் எவையெவற்றில் நீங்கள் முரண்பட்டு புது நிலைப்பாடு எடுத்துள்ளீர்கள் அல்லது எடுக்கவுள்ளீர்கள் ?

தலைமையில் அதிகாரத்துவப் போக்கு தோன்றியதற்கான அடிப்படை ஊற்றுகண் எது? உங்கள் பங்கு என்ன? அதை இன்று தான் கண்டுபிடித்தீர்களா?
முன்னரே கண்டு போராடினீர்களா அல்லது கண்டும் காணாமல் இருந்தீர்களா?

இப்படி எதைப் பற்றியும் எந்த விளக்கமுமின்றி இருப்பதால் சின்னப்புள்ளத்தனமாகவும் கப்பித்தனமாகவும் இருக்கிறது இந்த அறிக்கை. :)
தன்ராஜ்
//9-வது பிளீனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மா.அ.க.வின் அரசியல் ஓட்டாண்டித் தனத்தாலும் அதிகாரத்துவப் போக்காலும் தலைமைக்குள் முரண்பாடு ஏற்பட்டது.//

8-வது பிளீனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு 8 ஆண்டுகள் வரை பதவியிலிருந்த மா.அ.க சரியான அரசியல் நிலைப்பாடு வச்சிருந்தாங்கன்னு சொல்ல வர்ரீங்களா?

//மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் வழியில் இந்திய நிலைமைகளில் புதிய தாராளவாத கொள்கை புகுத்தப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள மாற்றங்களை பருண்மையாக ஆய்வு செய்து, கோட்பாட்டு ரீதியில் முடிவுகளை எடுத்து கட்சியின் திசை வழியை தீர்மானித்து வழிகாட்டவில்லை என்ற தனது தவறும் அம்பலமாகும் என தலைமை அச்சப்பட்டது//

ஏதே, நீங்க புதுசா கண்டுபிடிச்ச மாதிரி சொல்றீங்க. ஏற்கனவே 9-பிளீனம் நடந்ததே இந்தப் பிரச்சினைக்காக தானே..

ஆய்வை முடிக்காமல் ‘இனியும் தலைமைக் குழுவாக நீடிக்கும் அருகதையை இழந்துட்டோம்’-ன்னு அவங்களே சொல்லிதானே 9-வது பிளீனத்தை நடத்தினார்கள்.. அதில் பெரும்பான்மையின் சுயவிமரிசனத்தை சிலர் ஏற்காத போது ‘இன்னும் என்ன, எங்க நெஞ்சை பிளந்து காமிக்கனுமா?’ என்று கேட்டார்களே.. அவர்களில் பெரும்பான்மையினர் தானே மீண்டும் பதவிக்கு வந்தார்கள்?

இப்போது நீங்கள். :)

இரு தரப்புமே பழைய போர்த் தந்திர தவறுகள், செயல் தந்திர தவறுகளுக்கு வெளிப்படையாக எதையும் முன்வைக்கவில்லை.

செயல் தந்திரம் என்பது வெறும் முழக்கம் மட்டுமா? செயல் தந்திரம் மட்டும் மக்கள் செல்வாக்கைப் பெற்றால் போதுமா? போர்த்தந்திரம் மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டாமா? மக்கள் திரள் மட்டும் மக்கள் செல்வாக்கைப் பெற்றால் போதுமா? கட்சி மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டாமா? இப்படி என்னற்ற கேள்விகளுக்கும் விமரிசனங்களுக்கும் பதிலில்லை. கேள்வி கேட்பவருக்கு இரு தரப்பிடமிருந்தும் ஓடுகாலி, சீர்குலைவுவாதி, குட்டி முதலாளித்துவவாதி இப்படி எதாவது பட்டம் மட்டும் கிடைக்கும்.

இரண்டு தரப்புமே மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்ற முறையில் பரிசீலனையோ சுயவிமர்சனமோ செய்ததாகத் தெரியவில்லை. கட்சி ’இரகசியக் கட்சி’ங்கிறதால மக்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை, மக்களிடம் வெளிப்படையாக கடந்த கால தவறுகளை முன்வைக்கவும் தேவையில்லை என்ற முடிவோடு இருக்கிறீர்கள்.

””கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்.”” – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. மார்க்ஸ் எங்கெல்ஸ்.

மார்க்சிய விரோத இயங்கியல் விரோத சிந்தனைமுறை புரையோடிப் போயிருப்பதே அனைத்திற்கும் அடிப்படை.

பி.குறிப்பு: இதைச் சொன்னால் “இரகசியக் கட்சி தேவையில்லைன்னு சொல்றீயா” என்று நான் சொல்லாததை சொன்னதாக கேனைத்தனமாக கதைக்காதீர்கள்.
தன்ராஜ்
//மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் வழியில் இந்திய நிலைமைகளில் புதிய தாராளவாத கொள்கை புகுத்தப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள மாற்றங்களை பருண்மையாக ஆய்வு செய்து, கோட்பாட்டு ரீதியில் முடிவுகளை எடுத்து கட்சியின் திசை வழியை தீர்மானித்து வழிகாட்டவில்லை என்ற தனது தவறும் அம்பலமாகும் என தலைமை அச்சப்பட்டது//

ஏதே, நீங்க புதுசா கண்டுபிடிச்ச மாதிரி சொல்றீங்க. ஏற்கனவே 9-பிளீனம் நடந்ததே இந்தப் பிரச்சினைக்காக தானே..

//9-வது பிளீனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மா.அ.க.வின் அரசியல் ஓட்டாண்டித் தனத்தாலும் அதிகாரத்துவப் போக்காலும் தலைமைக்குள் முரண்பாடு ஏற்பட்டது.//

8-வது பிளீனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு 8 ஆண்டுகள் வரை பதவியிலிருந்த மா.அ.க சரியான அரசியல் நிலைப்பாடு வச்சிருந்தாங்கன்னு சொல்ல வர்ரீங்களா?

ஆய்வை முடிக்காமல் ‘இனியும் தலைமைக் குழுவாக நீடிக்கும் அருகதையை இழந்துட்டோம்’-ன்னு அவங்களே சொல்லிதானே 9-வது பிளீனத்தை நடத்தினார்கள்.. அதில் பெரும்பான்மையின் சுயவிமரிசனத்தை சிலர் ஏற்காத போது ‘இன்னும் என்ன, எங்க நெஞ்சை பிளந்து காமிக்கனுமா?’ என்று கேட்டார்களே.. அவர்களில் பெரும்பான்மையினர் தானே மீண்டும் பதவிக்கு வந்தார்கள்?

இப்போது நீங்கள்.

இரு தரப்புமே பழைய போர்த் தந்திர தவறுகள், செயல் தந்திர தவறுகளுக்கு வெளிப்படையாக எதையும் முன்வைக்கவில்லை.

செயல் தந்திரம் என்பது வெறும் முழக்கம் மட்டுமா? செயல் தந்திரம் மட்டும் மக்கள் செல்வாக்கைப் பெற்றால் போதுமா? போர்த்தந்திரம் மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டாமா? மக்கள் திரள் மட்டும் மக்கள் செல்வாக்கைப் பெற்றால் போதுமா? கட்சி மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டாமா? இப்படி என்னற்ற கேள்விகளுக்கும் விமரிசனங்களுக்கும் பதிலில்லை. கேள்வி கேட்பவருக்கு இரு தரப்பிடமிருந்தும் ஓடுகாலி, சீர்குலைவுவாதி, குட்டி முதலாளித்துவவாதி இப்படி எதாவது பட்டம் மட்டும் கிடைக்கும்.

இரண்டு தரப்புமே மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்ற முறையில் பரிசீலனையோ சுயவிமர்சனமோ செய்ததாகத் தெரியவில்லை. கட்சி ’இரகசியக் கட்சி’ங்கிறதால மக்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை, மக்களிடம் வெளிப்படையாக கடந்த கால தவறுகளை முன்வைக்கவும் தேவையில்லை என்ற முடிவோடு இருக்கிறீர்கள்.

””கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்.”” – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

மார்க்சிய விரோத இயங்கியல் விரோத சிந்தனைமுறை புரையோடிப் போயிருப்பதே அனைத்திற்கும் அடிப்படை.

பி.குறிப்பு: இதைச் சொன்னால் “இரகசியக் கட்சி தேவையில்லைன்னு சொல்றீயா” என்று நான் சொல்லாததை சொன்னதாக கேனைத்தனமாக கதைக்காதீர்கள்.
மார்க்சியமே வெல்லும்
விலகியவர்கள், விலக்கப்பட்டவர்கள் 'மருதையனிஸ்டுகள்' என்பதற்கு இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா?

https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.keetru.com%2Findex.php%2F2014-03-08-04-35-27%2F2014-03-08-12-18-14%2F41081-10-6&h=AT1PPscOPavMujp3KZzNRyGHnHYCyBv59hRhGTMYt5-lV8W9alp9dd5pYc43r6SW0YpOx0z5VdlBYl7bGpE5ADfCSHPFWR4ejcy4cc5TeXg_4xQKlmels8ILaG8A75dOxB0BGd8PXm3TPwEdDzA&s=1
மணியரசன்
"தலைமைக்குழுவின் பெரும்பான்மை தரப்பு அமைப்பு முடிவுகளையும், அமைப்பு முறையையும் தூக்கி எறிந்து பிளீன வேலைகளை முடக்கவும், இடைக்காலக் கமிட்டியையே கலைக்கவும் முயற்சித்தது".

அப்படினா நீங்க பெரும்பான்மை இல்லையா..?

அரசியல் அறிக்கை இல்லாத கூட்டமா?

போன பட்டாசுகள்
Dharmar Raju
முன்பு மக்கள் அதிகாரத்தின் திருச்சி மாநாட்டுக்கு பிரச்சார பனியன் தேவை என்று பல பகுதிகளிலிருந்தும் தோழர்கள் தொடர்பு கொண்டு கேட்டதால் தயாரித்து கொடுக்க நினைத்தேன்.

எதற்கும் மையப் பொறுப்பாளரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு தயாரிக்கலாம் என்று Printing Art Work யை மின்னஞ்சலில், வாட்ஸ் ஆப்பில் அனுப்பினேன்.அதற்கு அவரிடமிருந்து *அமைப்பில் இல்லாதவர்கள் அமைப்பின் Logo வை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்* என்று பதில் வந்தது.

தற்போது பேஸ்புக்கில் நவம்பர் 7 ரஷ்ய புரட்சியின் 103 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் என்ற பெயரில் அமைப்பின் பெயர்களைக் கொண்டு , அமைப்பின் பாடல்களை மைக் செட்டில் போட்டு குத்தாட்டம் ஆடிக் கொண்டுள்ளதை காண நேர்ந்தது.

கீற்றில் ஒரு பத்திரிக்கை செய்தியும் உண்டு பிளீனியம் நடத்தி SOC க்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுத்துவிட்டதாக...!

எனக்கு பதில் அனுப்பிய பொறுப்பாளர் இப்போது எந்த SOC என்று தெரியவில்லை.OLD SOC யா? New SOC யா? அவர் பொதுவெளியில் விவாதிக்கவும் மாட்டார்.

இனி மக்கள் அதிகாரம், புமாஇமு, மகஇக, புஜதொமு, விவிமு, பெவிமு அமைப்புகளிலிருந்து வெளியேறிய ,வெளியேற்றப்பட்ட தோழர்களும் அந்தப்பெயரைப் பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள்.இந்தப்பெயரை யாரும் தங்களுக்குச் சொந்தம் என்று பதிவு செய்யவில்லை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.