2019 நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் மோடி எதிர்ப்பு அலையை உருவாக்கியவர்கள் தமிழக மக்கள்.

தி.மு.க கூட்டணி திருப்பூர், நாகபட்டிணம், மதுரை ஆகிய தொகுதிகளில் பணம் கொடுக்கவில்லை. ஆனால் அதிமுக கூட்டணி பணம் கொடுத்தது. பணத்தையும் வாங்கிக் கொண்டு நாங்கள் மோடிக்குப் போட மாட்டோம் என வெளிப்படையாகவே மக்கள் தெரிவித்தனர். முடிவுகளும் எதிர்பாராமல் வந்தது. அங்கெல்லாம் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

stalin and udhayanidhiதமிழகத்தின் வாழ்வாதாரங்களை அடியோடு பறிக்கிற ஹைட்ரோ கார்பன், உயர் மின் கோபுரங்கள், எண்ணெய்,எரிவாயுக் குழாய் திட்டங்கள், எட்டுவழிச்சாலை இது போன்ற திட்டங்களுக்கு எதிராக எந்த உறுதியான நிலைபாட்டையும் திமுக கூட்டணி மேற்கொள்ளவில்லை.

38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு டெல்லித் தலைநகரில் தமிழகத்தின் உரிமைக் குரலை வலுவாக எழுப்பாமல் மழுப்பி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு நடுநிலையாளர்களால் தெளிவாகவே முன்வைக்கப்பட்டு வந்தது.

அதே போல எழுவர் விடுதலையை சாதிக்கும் வரையிலான போராட்டத்தை திமுக அணி எடுக்காமல் ஒரு பார்வையாளனாகவே உள்ளது. அரசியல் சட்டக் கடமையை நிறைவேற்றாத ஆளுநருக்கு எதிராக போராடாமல் கள்ள மௌனம் காப்பது ஏன்?

NIA போன்ற கொடூரச் சட்டங்கள் வந்தபோது திமுக சந்தர்ப்பவாதமாக செயல்பட்டது.

பொது சமூகத்தில் திமுகவும் அதிமுகவைப் போன்ற ஒரு கட்சிதான், திமுக அதிகாரத்தில் இருந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்ற வலுவான கருத்து உள்ளது.

தற்போது நடைமுறைக்கு வந்து கொண்டுள்ள வர்ணாசிரம, கார்பரேட் கல்விக் கொள்கையை எதிர்த்து எந்த ஒரு போராட்டத்தையும் வலுவாக திமுக நடத்தவில்லை. பல கல்வி முதலாளிகள் திமுகவின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும்போது இயல்பாகவே மக்கள் நலனுக்கான கல்விக்கு எவ்வாறு திமுகவினால் குரல் கொடுக்க இயலும்?

மக்கள் பிரச்சனைகளை உணர்வுப் பூர்வமாக முன்னெடுத்துச் செல்லாதவரை பரந்துபட்ட மக்களின் ஆதரவை திமுக பெற முடியாது.

பல்வேறு தமிழ் அமைப்புகளும், உழவர் இயக்கங்களும், கல்வியாளர்களும், சூழலியல் செயல்பாட்டாளர்களும் முன் வைத்துப் போராடி வரும் தமிழகத்தின் அடிப்படையான பிரச்சனைகளில் திமுக அணி உறுதியோடு செயல்பட்டால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெற முடியும்.

எடப்பாடியை எடுபிடி என்பது மட்டும் அரசியல் அல்ல! தமிழக நலன் காக்க தம்மிடமுள்ள மாபெரும் சக்தியை திமுக பயன்படுத்தத் தயங்குவது ஏன் என்ற கேள்வி மக்களிடம் உள்ளது.

- கி.வே.பொன்னையன்

Pin It