சிவாஜி என்ற பெயரைக் கேட்டால் பெரும்பாலான நம் தமிழ் மக்களுக்கு நடிகர் சிவாஜி கணேசனை மட்டும் தான் தெரியும். கொஞ்சம் படித்தவர்கள் என்றால் “யாரோ அப்படி ஒரு மன்னன் இந்தியாவில் இருந்தான், நான் சமூக அறிவியல் பாடத்தில் படித்திருக்கின்றேன்” என்பார்கள். கொஞ்சம் அரசியல் அறிவு உள்ளவர்கள் என்றால் “சிவாஜி ஓர் இந்து மன்னன், அவன் முஸ்லீம் அரசர்களிடம் இருந்து இந்துக்களைக் காப்பாற்றியவன்” என்பார்கள். அதுவே ஆர்.எஸ்.எஸ், பாஜக என்ற பார்ப்பன கூட்டத்திடம் யானைப்பால் குடித்தவர்களாக இருந்தால் “சிவாஜி என்ற ஒரு மன்னன் இருந்தான், அவன் சாதாரண மன்னன் அல்ல, அவர் ஒரு இந்து பேரரசர், முஸ்லீம்களுக்கு எதிரானவர், இந்து மதத்தை பாதுகாத்தவர், பசுக்களையும், பிராமணர்களையும் போற்றி வணங்கியவர், அதனால்தான் அவரை சத்ரபதி சிவாஜி என்று அனைவரும் அழைத்தனர்” என்று சிவாஜியை பற்றி பெருமை பேசுவார்கள்.

govind pansareநம்மில் பெரும்பாலானவர்களுக்கு இது போன்ற கருத்துக்கள் இருந்தால் அதில் வியப்பில்லை. அப்படித்தான் இன்றுவரையிலும் நாம் நினைத்துக் கொண்டும், பேசிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கின்றோம். ஆனால் உண்மையில் சிவாஜி அதுபோன்று எல்லாம் இல்லை என்பதை கோவிந்த் பன்சாரே அவர்கள் தம்முடைய ‘சிவாஜி கோன் ஹோடா’ (யார் அந்த சிவாஜி?) என்ற நூலில் ஆணித்தரமாக மறுத்தார். வரலாற்றுப் புரட்டர்கள் திட்டமிட்டே சிவாஜியை தன்வசப்படுத்த முயல்வதற்கு எதிராக தன்னுடைய மார்க்கிய அறிவை பயன்படுத்தி பதிலடி கொடுத்தார். அதனால் அவர் இந்துமத வெறியர்களால் படுகொலையும் செய்யப்பட்டார்.

இப்போது இதுபற்றி நாம் எதற்காகப் பேசுகின்றோம் என்றால் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருப்பதால்தான். நாட்டில் மக்கள் ஒவ்வொரு நாளையும் சித்தரவதையுடன் வாழ்வா சாவா என்று போராட்டத்துடன் கழித்துக் கொண்டு இருக்கும் போது, மக்களை அப்படி ஒரு நிலைக்குத் தள்ளிவிட்ட கொலைகாரக் கும்பல் அதுபற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்துவருகின்றது. தெற்கு மும்பையின் கடற்கரையில் சுமார் 3600 கோடி செலவில் சத்ரபதி சிவாஜிக்கு சிலை வைக்க மோடி அடிக்கல் நாட்டி இருக்கின்றார். இப்போது இவ்வளவு பொருட்செலவில் சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டிய என்ன அவசியம் வந்தது என்பதை புரிந்து கொள்வதில் இருந்துதான் காவிபயங்கரவாதிகளின் நோக்கத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். எப்போதெல்லாம் காவி பயங்கரவாதிகள் கீழ்த்தரமான பேர்வழிகள் என்று நாட்டு மக்கள் முன் அம்பலப்படுகின்றார்களோ அப்பொதெல்லம் இதுபோன்ற ஏதாவது வேலையைச் செய்து தங்களை இந்துக்களின் பாதுகாவலனாக காட்டிக்கொள்வது அவர்களது வழக்கமான உத்தி. அத்வானியின் ரதயாத்திரையாக இருக்கட்டும், பாபர்மசூதி இடிப்பாக இருக்கட்டும், குஜராத் கலவரமாக இருக்கட்டும் அனைத்துத் தருணங்களிலும் அவர்கள் இப்படித்தான் செயலாற்றி இருக்கின்றார்கள். இது போன்ற செயல்கள் ஒரு பக்கம் அவர்களுக்குத் தேர்தல் வெற்றிகளையும் இன்னொரு பக்கம் தனக்கான ஆதரவு தளத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்று அனுபவப்பூர்வமாக அவர்கள் உணர்ந்து இருக்கின்றார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத்தில் சிலை வைக்கப்படும் என்று அறிவித்தார். ஏறக்குறைய இதன் திட்ட மதிப்பீடு 3000 கோடிகளுக்கு மேல் ஆகும் என்று சொல்லப்படுகின்றது. இந்துமத வெறியர்களுக்கு மிகவும் பிடித்த பட்டேலுக்கு பிரமாண்டமான முறையில் சிலை வைப்பதன் மூலம் ஒரு இந்து சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் தாம் கொண்டு வரப்போவதாக ஒரு பிம்பத்தை அவர் இந்துக்களின் மனதில் ஏற்படுத்தினார். ஆனால் காலப்போக்கில் மோடி மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் இந்துக்கள் மத்தியில் களையத் துவங்கியது. அதுவும் மோடி 500 மற்றும்1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த நிகழ்வுக்குப் பின் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் மோடி ஒரு மிக மோசமான கொலைகாரனுக்கு உரிய பிம்பத்தை பெற்றிருக்கின்றார். ஆட்சியில் பாதியைக் கழித்துவிட்ட சூழ்நிலையில் நிலமை இன்னும் சகஜநிலையை எட்ட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்து சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் வரப்போவதால் அதைச் சமாளிக்க சிவாஜிக்கு சிலை அமைக்க மோடி அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது பெரிய பலனை எதையும் நிச்சயம் மோடிக்கு கொண்டுவராது என்பது மட்டும் உறுதி.

காரணம் “பட்டேல் ஓர் இந்துமத வெறியர், அவர் நம்முடைய வழிகாட்டி” என்று சங்பரிவாரங்கள் தங்களுடைய சாகாக்களிடம் சொல்லி உசுப்பேத்திவிடுவதைப் போன்று சிவாஜியை சொல்லி உசுப்பேத்த முடியாது. அதற்கான அடிப்படையையே கோவிந்த் பன்சாரே தகர்த்துவிட்டார் என்பதுதான் உண்மை. சிவாஜியைப் பற்றி ஆர்.எஸ்.எஸ் காலிகள் கட்டிவிட்டிருந்த கதைகளை எல்லாம் அவர் பொய் என்று நிரூபித்த புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் மகாராஷ்டிராவில் விற்றிருக்கின்றது. மகாராஷ்டிராவில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. எனவே முன்புபோல மக்கள் சிவாஜியை இந்துமத மீட்பாராக பார்ப்பதற்கு வழியில்லை என்பதுதான் உண்மை. ஆனால் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காலிகளுக்கு முக்கியமில்லை. ஏனென்றால் உண்மையில் அவர்கள் தங்களுக்கு நேர் எதிரான கருத்துடையவர்களையும் கூட வைத்து அரசியல் ஆதாயம் அடையும் திறன் பெற்றவர்கள். பார்ப்பனியத்துக்கு எதிரான புத்தரை உள்வாங்கி ஒன்றுமில்லாமல் செய்தார்கள் தற்போது அம்பேத்கரை உள்வாங்க கடுமையாக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள் அந்த வரிசையில் தற்போது சிவாஜியையும் சேர்திருக்கின்றார்கள்.

சிவாஜி எப்போதும் ஒரு இந்துமத வெறியராக இருந்தது இல்லை, இன்னும் சொல்லப்போனால் அவர் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஆதரவான மன்னனாகவே இருந்துள்ளார். தவறு செய்தவன் பார்ப்பனனாக இருந்தாலும் கடுமையாக தண்டித்துள்ளார். அவர் 'பசு, பிராமணப் பாதுகாவலர்' என்று தன்னை சொல்லிக்கொண்டதாக ஆர்.எஸ்.எஸ் அம்பிக்கூட்டம் சொல்வதெல்லம் சுத்தப் பொய். மேலும் சிவாஜி ஒரு சூத்திர வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அரசராக முடி சூட்டிக்கொண்டதை ஏற்காமல் பார்ப்பன கேடிகள் கலகம் செய்தனர். எனவே அவர் தோசத்தைக் கழிக்க காசியில் இருந்து காகபட்டர் என்ற பார்ப்பனனை வரவழைத்துத் தோசம் கழித்தார். தன்னுடைய மனைவியையே இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொள்ள கட்டாயப் படுத்தப்பட்டார். அதற்காக விலை உயர்ந்த பரிசுகளை பார்ப்பனர்களுக்கு வழங்கினார். இப்படியாக பார்ப்பன இந்துமதம் ஒரு சிவாஜி என்ற பேரரசனையே ஆட்டிவைத்தது. அவனை சூத்திரன் என்றும், பேரரசனாக முடிசூட்டிக் கொள்ளத் தகுதி அற்றவன் என்றும் கேவலப்படுத்தியது. இது எல்லாம் வரலாற்று உண்மைகள். ஆனால் இதை எல்லாம் மூடிமறைத்துவிட்டு இன்று பார்ப்பனக் கூட்டம் சிவாஜியை உள்வாங்கத் துடிக்கின்றது. காரணம் சிவாஜிக்கு சாமானிய மக்களிடம் அன்றில் இருந்து இன்றுவரை அழியாமல் இருந்துவரும் செல்வாக்கு. இந்த செல்வாக்கு ஒரு இந்துமத வெறியன் என்று அடிப்படையில் இருந்து உருவானதல்ல; அது சிவாஜி என்ற மன்னன் தன் குடிமக்களுக்கு செய்த நன்மையினால் உருவானது.

பார்ப்பனக் கூட்டத்தை மட்டுமே தன்னை சுற்றிலும் வைத்துக்கொண்டு அவன் ஆட்சி செய்யவில்லை. அவனது ஆட்சியில் சூத்திரர்கள் முக்கிய பதவிகளை வகித்தனர். தீண்டத்தக்காதவர்களையும், மஹர்களையும் தனது கோட்டைகளின் தளபதியாக்கினார். விவசாயிகளை கனிவோடு நடத்தினார். விவசாயிகளுக்கு நிலவுடமையாளர்களால் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தார். எனவே மக்கள் சிவாஜியை தங்களின் ஒருவராகப் பார்த்தார்கள். அவரைப்பற்றி பல கதைகளைப் புனைந்தார்கள். இன்றுவரையிலும் சிவாஜி மீதான மதிப்பு அந்த எளிய மக்களிடம் நீடித்துவருவதற்கு இதுதான் காரணம். சிவாஜிக்கு உள்ள இந்தச் செல்வாக்குதான் ஆர்.எஸ்.எஸ் காலிகளை சிவாஜியை நோக்கி ஈர்க்கின்றது. அவரை அபகரிக்கத் திட்டமிட வைக்கின்றது. எனவே இதில் நம்முடை பணி என்னவென்றால் காவிபயங்கரவாதிகளின் இந்த அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவதுதான். அதற்கான கருத்தியல் பேராயுதமாக கோவிந்த் பன்சாரேவின் புத்தகம் நமக்குப் பயன்படும். சிவாஜி மீது காவி பயங்கரவாதிகள் கட்டிவிட்ட தவறான கருத்துக்களை கோவிந்து பன்சாரேவின் உதவியுடன் நாம் மாற்றிக்கொண்டு சிவாஜியை அபகரிக்கத் துடிக்கும் காவிக்கூட்டத்தின் முயற்சியை நாம் முறியடிக்க வேண்டும். அது காலத்தின் தேவையும் கூட. அதுதான் மோடி வகையறாக்களுக்கு நாம் கொடுக்கும் சவுக்கடியாகவும், தோழர் கோவிந்த் பன்சாரேவுக்கு நாம் செய்யும் மரியாதையாகவும் இருக்கும்.

- செ.கார்கி

Comments

1 comment

1
குமாரசாமி
எனது ஊர் சமூகரெங்கபுரம்.வள்ளியூருக்கு கிழக்கே உள்ளது.1956 இல் எங்களுக்கு சொல்லப்பட்ட கதை நேரு லண்டனில் படித்தார் அந்த கல்லூரிக்கு நான்கு வாசலகள். அந்த 4வாலகளிலும் அவருடையகார் இருக்கும் அதனால் அவர் எந்தவாசல்வழியாகவும் வெளிவரலாம். ஆனால் அவருடன் படித்த இளவரசருக்கு ஒரு கார்தான் அதனால் இளவரசர் கார் உள்ள வாசலுக்குத்தான் செல்ல வேண்டும் மேலும் நேருவின் உடைகள் பாரிசுக்கு போய் சலவை செய்யப்பட்டு வரும் அதைத்தான் அவர் உடுத்துவார். இந்தக் கதைகளுடன் சொல்லப்பட சிவாஜி கதை, ஒரு முறை அவர் குதிரையில் தப்பித்து செல்லும் போது திடீர் என்று குதிரைகளைப்பார்த்த குழந்தைகள் பயதிதில் அழுதுவிடுவார்கள். உடனே அவர் குதிரையில் இருந்து கிழே இறங்கி அக்குழந்தைகளின் அழுகையை சமாதானப்படுத்து விட்டு சென்றார் . அந்த அளவிற்கு அவரது நேசம் இருந்தது. இந்த கதையை 80கள் வாக்கில் என் வயதை ஒத்தவர் களிடம் கேட்ட பொது சிலர் அதை நினைவு கூர்ந்தார்கள். அவர்களது பிரச்சாரம் அந்த அளவிற்கு ஆழமாகவும் பரவலாகவும் இருந்தது.அண்ணா அன்று காகப்பட்டராக வேடமிட்டு மேற்படி முடி சூட்டு விழாவை நாடகமாக போட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளார். அந்தப்பிரச்சாரத்தில் தங்கத்தால் ஒரு பசுவை- பெரிய பசு- அதன் சாண வாயில் வழியாக அதன் வயிற்றுக்குள் போய் அப்படியே அதன் வாய் வழியாக வெளியே வர வேண்டும் அந்த அளவிற்கு அந்த பசு பெரியதாக இருக்கும்.அப்படி வந்தால் அவர் மறுபிறவியை அடைந்து விடுவார் அந்த தங்கப்பசுவை உடைத்து எல்லாப்பிரமணர்களுக்கும் தானமாக கொடுக்கும் போது அவர் சத்திரியராக மாறி விடுவார் என்று சொல்லி அந்தப் பிரச்சார நாடகம் முடியும். இது போன்ற தொடர் பிரச்சாரங்கள் நின்று போனதால்தான 89இல் கோவையில் செயற்கை மதக்கலவரம் நடந்தது. ஒருகாலத்தில்தான் பெரியாரின மண் இவ்வளவு காலம் தூங்கிவிட்டு இன்றும் இது பெரியார் பூமி என்று சொன்னால் ... அதனால் தான் மீண்டும் ஒரு மதக்கலவரம் கோவையில் வரப்பாரத்தது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.