கடந்த 17.11.2012 அன்று செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியிருந்தீர்கள், தலித் மக்களுக்கு எங்களைப் போல் நன்மை செய்தவர்கள் யாரும் இல்லை என்று. மிக்க சந்தோசம் அய்யா! உங்களின் கடந்த கால செயல்பாடுகளை எண்ணி மிக்க மகிழ்வடைகிறோம். தமிழ்நாட்டிலே இன்று நாங்கள் மாலை அணிவிக்கும் அம்பேத்கரின் சிலைகளில் அதிகமான  சிலைகளை நிறுவியவ‌ரும் தாங்கள் தான். அதை எங்களால் மறக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது. இரு சமூகங்களுக்கும் இடையே எத்தனையோ மோதல்கள் இருந்தபோதும் உங்கள் மீதுள்ள மரியாதை என்றும் எனக்குக் குறைந்ததில்லை.

தங்களின் மாமல்லபுரம் மாநாட்டிலே தங்களின் முன்னிலையில் தோழர் காடுவெட்டி குரு பேசிய வன்முறைப் பேச்சைக் கேட்டு வருத்தப்படுவதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை. அதை விடக் கொடுமையானது அதை நீங்கள் கண்டிக்காமல் கன்னத்தில் கையை வைத்து ரசித்தது.

உங்கள் சமூகத்தால் நாங்கள் எத்தனையோ இழப்புகளை சந்தித்திருந்தாலும் தமிழ்ப் பாதுகாப்புக்காகவும் சமூக நல்லிணக்க‌த்துக்காகவும் உங்களோடு சேர்ந்து களமாடினோம். எல்லா மனக்கசப்புகளையெல்லாம் புதைத்துவிட்டு உங்களோடு கை கோர்த்தோம். எதற்காக? ஈழ விடுதலைக்காகவும், 3 தமிழர் உயிரைக் காக்கவும், மேலும் தமிழ்த் தேசியத்தை மீட்டெடுக்கவும் தான்.

தருமபுரியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை நீங்கள் கண்டும் காணாததுமாக இருந்தது ஏன்? பாமகவிற்கும் இந்த வன்முறைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று 10 நாட்கள் கழித்து அறிக்கை விடுகிறீர்கள். வன்னியர் சங்கத்துக்கும் இந்த வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்குமாயின் 10 நாட்கள் கழித்து அறிக்கை விட வேண்டிய அவசியம் என்ன? அல்லது வன்முறையை நிகழ்த்திய வெறியாளர்களுக்கு நீங்கள் எந்தக் கண்டனமும் எழுப்பாதது ஏன்???

இன்று ஏதேதோ சொல்கிறீர்கள்.. காதல் திருமண‌ம் செய்வது சரியல்ல; அதனால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்; ஒருவேளை இந்தத் திருமணம் நடக்காமல் இருந்திருந்தால் இந்த வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று. இது எந்த விதத்தில் நியாயம் அய்யா? ஒரு சாதிமறுப்புத் திருமண‌த்திற்காக ஒரு சமூகத்தை அழிக்கலாமா? இது உங்களுக்கு எப்படி நியாயமாய்த் தெரிந்தது? உங்களிடம் எதை எதிர்பார்த்தோம்? ஒரே ஒரு கண்டனக்குரலும் தவிக்கும் என் சொந்தங்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தையும்தானே!

ஏன் ஒருவேளை உங்கள் சமூகத்தினரை திருப்திபடுத்துவதற்காக அமைதி காத்தீர்களா? இவற்றையெல்லாம் மறந்து விட்டு இன்று திருமா மீது பழி சுமத்துகிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்? சாதி ஒழிப்புக்காக போராடும் ஒரே தலைவன் தம்பி திருமாவளவன் தான். இதை நான் சொல்லவில்லை; நீங்கள் தான் சொன்னது. திருமா சாதி வெறியைத் தூண்டுவதாக சொல்கிறீர்கள். என்ன சான்று இருக்கிறது, திருமா சாதி வெறியைத் தூண்டியதற்கு? உங்கள் தலைமையில் காடுவெட்டி குரு சொன்னதைப் போல சொன்னாரா அல்லது தருமபுரி குடிசைகளை எரித்தது போல் வன்னிய வீடுகளை எரித்தாரா?

சாதி ஒழிப்பையும் தமிழ்த்தேசியத்தையும் தன் மூச்சுக்காற்றாய் சுவாசிப்பவர் திருமா. இதை தாங்கள் அறிந்ததே.

தயவு செய்து இந்த வன்முறையை சாதியப் பார்வையோடும் அரசியல் பார்வையோடும் பார்க்காதீர்கள். சமூக நல்லிண‌க்கத்தோடு பாருங்கள் அய்யா!

தமிழீழ விடுதலைப் புலிகளையும் அண்ணன் பிரபாகரனையும் ஆதரிக்கும் நீங்கள் அவர்களின் கட்டாய விதியான சாதிமறுப்புத் திருமண‌த்தை எதிர்ப்பதன் மர்மம் தான் என்ன?

உங்ளுக்கு சாதிமறுப்புத் திருமனத்தில் உடன்பாடு இல்லையா அல்லது காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது அய்யா!

உங்களின் இயக்கத் தோழர்கள் எல்லாம் இணையத்திலே சொல்கிறார்கள், 'நாங்கள் பெற்றோரின் சம்மதத்தோடு கூடிய சாதிமறுப்புத் திருமணத்தை ஆதரிப்போம்' என்று. இது உண்மையா என்பதை அறிக்கையிடுங்களேன் பார்ப்போம்!

இந்த இரு சமூகமும் எனக்கு இரு கண்கள்; எனக்கு சாதியப் பார்வை இல்லை என்றீர்களே, அப்படியிருக்க ஏன் இந்த இரு சமூகமும் ஏன் பெண் கொடுத்து பெண் எடுக்கக்கூடாது! இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் ஏன் தலைமை ஏற்கக் கூடாது?

இதோ இத்தனை இழப்புகளையும் மறந்து  சமூக நல்லிண‌க்கத்துக்காக உங்களோடு கை கோர்க்கிறோம், வாருங்களேன்.

அய்யா பாதிக்கப்பட்ட எம் சொந்தங்களுக்குத் தேவை நீதியும் ஆறுதல் வார்த்தைகளும் தான். மேலும் மேலும் உங்கள் வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்!

வாருங்களேன்... தலித்துகளும் வன்னியர்களும் உறவுகளாய் மாறி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

நீங்கள் சாதியவாதியா அல்லது சமூகவாதியா என்பதை நிரூபிக்க இதோ ஒரு வாய்ப்பு நீங்களே சொல்லுங்கள் உங்களின் நிலைபாட்டினை!

சாதி ஒழிப்பையும் தமிழ்த் தேசியத்தையும் மீட்டெடுக்க நாங்கள் தயார்!! நீங்கள் தயாரா? 

- கீழ்.கா.அன்புச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It